தேசம் என்கிற கற்பிதத்தின் வன்முறை : அது இன்று வங்கதேச இந்துக்கள் மீது

“தேசம் ஒரு கற்பிதம். அது இயற்கையான ஒன்றல்ல: அரசியல் ரீதியாக மேற்கொள்ளப்படும் கட்டமைப்பு” என்கிற கருத்தை நான் முதல் முதலாகத் தமிழுக்குக் கொண்டு வந்தபோது, அப்பா எத்தனை எதிர்ப்புகள்! இன்னும் அந்த எதிர்ப்புகளின் மத்தியில்தான் வாழ்ந்து கொண்டுள்ளேன்.. எனினும் அதற்குப் பிந்திய கால் நூற்றாண்டு கால அனுபவத்தில் என்னுடைய இந்தக் கருத்தில் எள்ளளவும் மாற்றம் செய்துகொள்வதற்கு எனக்கு எந்தத் தேவையும் ஏற்பட்டுவிடவில்லை.

எத்தகைய அரசியல் முன்னெடுக்கப்படுகிறதோ அந்த நோக்கிலிருந்து தேசத்தின் அடிப்படை அடையாளம் கட்டமைக்கப்படுகிறது. அது மொழி, இனம், மதம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் எதுவும் இயற்கையானதல்ல என்பதுதான். Yes, it is constructed, not natural. அது மாத்திரமல்ல, அந்த அடிப்படையில் தேசம் வரையறுக்கப்படும்போது, அந்த வரையறையால் அனைத்து மக்களாலும் கையடக்கப்படுவதில்லை. It is not a remainder less grasp. ஏதேனும் ஒரு பிரிவினர் அவ் வரையறையின் “மிச்சங்களாக” எஞ்சியே விடுகின்றனர். கட்டமைக்கப்படும் தேசம் அவர்களின் மீதான வன்முறையாகி விடுகிறது.

பாகிஸ்தான் என்றொரு தேசம் சென்ற நூற்றாண்டின் இடைப்பகுதியில் இவ்வாறு கட்டமைக்கப்பட்டபோது இப்படியான அடையாளமாக “மதம்” அதன் அடிப்படையாகியது. ஆனாலும் இந்த அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட பாகிஸ்தானை “இஸ்லாம்” என்கிற மதத் அடையாளத்தால் இறுக்கிப் பிடித்து நிறுத்திவிட இயலவில்லை. வங்க தேச மக்கள் அதைத் தன் மீதான வன்முறையாகவே உணர்ந்தனர்.

விளைவு, 1973ல் பாகிஸ்தானாகவும் வங்க தேசமாகவும் உடைந்தது.

எனினும் இஸ்லாமை தேசத்தின் அடையாளமாகக் கற்பிதம் செய்த இஸ்லாமியவாதிகளால் இதை ஏற்க இயலவில்லை. முஜிபுர் ரஹ்மானின் தலைமையில் எழுந்த விடுதலைப் போரில் ஜமாத் ஏ இஸ்லாமி பாகிஸ்தானின் படையுடன் இணைந்து செயல்பட்டது. வங்க விடுதலையை ஆதரித்த அறிஜீவிகள் கொல்லப்படுவதற்கும் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுவதற்கும் அது துணை போகியது. இவர்கள் மீது போர்க்குற்ற விசாரணைனை இப்போது நடைபெறுகிறது. போர்க் குற்றங்கள் புரிந்த ஜமாத் ஏ இஸ்லாமிகளுக்கு ஆயுள் தண்டனை போதாது என இன்ற வங்க தேச முஸ்லிம் இளைஞர்கள் போராடுகின்றனர் (ஷபாகா இயக்கம்).

முன்னதாக, வங்க மொழியினராக இருந்தபோதிலும் மேற்கு வங்கத்தினரும் கிழக்கு வங்கத்தினரும் மதத்தால் வேறுபட்டதை அடையாளமாகக் கொண்டு வங்க தேசத்தை பிரிட்டிஷ் அரசு கிழக்கு, மேற்கு என இரண்டாகப் பிரித்தது (1905). மே. வங்கத்தில் வாழ்ந்த 25 சதம் முஸ்லிம்களும், கிழக்கு வங்கத்தில் இருந்த 8.5 சதம் இந்துக்களும் சிருபான்மை ஆயினர்.

தேசங்கள் என்பன ஒரு மிகச் சமீபத்திய கற்பனை. மூதாதையரின் நாடு என்கிற உணர்வு அதனிலும் பழையது. வாழ்வோடும், வாழ்நிலை உத்தரவாதங்களில் ஒன்றான நிலத்தோடும் இரத்த உறவு கொண்டது அது. ஆனால் ஜமாத் ஏ இஸ்லாமியைப் பொருத்த மட்டில் ஒரு சராசரி கிழக்கு பாகிஸ்தானி அல்லது வங்கதேசத்தவரின் (normative citizen) அடையாளம் என்பது oru “முஸ்லிம் வங்க மொழி ஆண்” அல்லது “வங்க மொழி முஸ்லிம் ஆண்” என்பதுதான். அங்கிருந்த 8.5 சத இந்துக்களும் அவர்களைப் பொருத்தமட்டில் வங்கதேசிகளல்ல இந்தியாவில் உள்ள இந்துத்துவவாதிகள் எப்படி ஒரு சராசரி இந்திய அடையாளத்தை “இந்து ஆண்” என்கிற வடிவில் வரையறுத்து உணர்கின்றனரோ அப்படி.

இன்று ஷேக் ஹசீனா அரசு தன் பலவீனங்கள், ஊழல்கள் ஆகியவற்றிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள போர்க் குற்ற விசாரணை என்பதையும் அதற்கான மக்கள் ஆதரவையும் பயன்படுத்திக் கொள்கிறது. பொருளாதார ரீதியிலும், இயக்கக் காட்டுப்பாடு என்கிற அடிப்படையிலும் மிக வலுவான ஜமாத் ஏ இஸ்லாமி இயக்கம் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிரான போராட்டங்களை (எ.கா ஹெஃபாஜெட் இயக்கம்) முன்னெடுக்கிறது.

இன்னொரு பக்கம் ஜமாத் ஏ இஸ்லாமியின் எதிர்வினை 2001 லும், பின்னர் இன்றைய அரசியல் சூழலிலும் வங்கதேச இந்துச்சிறுபான்மையினர் மீது திரும்பியுள்ளது ஏனெனில் இவர்கள் “சராசரி வங்க தேச அடையாளத்தை”ச் சுமந்தவர்களல்ல. பெரிய அளவில் அவர்கள் தாக்கப்பட்டும், அவர்கள் சொத்துக்கள் அழிக்கப்பட்டும், பெண்கள் வான்முறைக்குள்ளாகப்பட்டும் உள்ளனர்

ஒன்றைச் சொல்ல வேண்டும் இந்துச் சிறுபான்மையினர் மீதான் இவ்வன்முறைக்குக் காரணமாக வெறும் ஜமாத் ஏ இச்லாமி மற்றும் அதன் கூட்டணிக் கட்சியாகிய கலிடா சியாவின் வங்க தேசியக் கட்சியை மட்டும் சொல்லி நிறுத்தி விட இயலாது. ஓரளவு மதச்சார்பற்ற அடையாளத்திற்குரிய ஹஸீனாவின் அவாமி லீகிற்குள்ளும் கூட இந்துக்களை அந்நாட்டிற்கு உரியவர்களாகப் பார்க்காத நிலை ஏற்படுள்ளது.