பல சமயங்கள் ஒரு சேரச் செழித்திருந்த தமிழ் மண்

          நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்  25                                                    

பல்வேறு சமய, தத்துவச் சிந்தனைகள் செழித்திருந்த தமிழ் மண்

வைதீகம், ஆசீவகம், பௌத்தம், சாங்கியம், பூதவாதம் எனப் பல நெறிகளும், செழித்திருந்த காலம் மட்டுமல்ல, அவற்றுக்கிடையே ஆரோக்கியமான விவாதமும் நடந்து கொண்டிருந்த காலம் அது. சேரமன்னன் செங்குட்டுவன் வடக்கே படையுடன் சென்று, கங்கையைக் கடந்து, கனக விசயர் முதலான வடபுல மன்னர்களை வென்று, அவர்தம் தலைகளில், இமய மலையிலிருந்து பெயர்த்தெடுத்த கற்களைச் சுமக்கச்  செய்து கொண்டு வந்தான் எனவும், அவற்றைக் கொண்டே  கண்ணகிக்குக் கோவில் கட்டினான் என்றும் நம்பிக்கைகள் உருவான காலத்தில் எழுந்த காவியம் மணிமேகலை. இக்காதையின் இறுதி வரிகள் இதற்குச் சான்றாக அமைகின்றன.

செங்குட்டுவனை, ” பூக்காத வஞ்சியில் பூத்த வஞ்சி  மலர்களைச்சூடிய விரர்கள் வலம் வரும் சேர நாட்டுச் செங்கோல் வேந்தன்” எனக் கூறும் சாத்தனார், அந்த வீரர்கள் தாம் செல்லும் நாட்டை எல்லாம் சேரநாடாக ஆக்கும் வல்லமை பெற்றவர்கள் என்கிறார். திருமுடியில் வாகை சூடிய அச்சேரனின் வஞ்சியில் எடுக்கப்பட்ட கண்ணகிப் படிமத்தை வணங்கி ஆசிபெற்ற மணிமேகலை, முன் அத்தியாயத்தில் கண்ணகி அவளுக்குச் சொன்னபடியே  ஆணுருவில் வஞ்சி மாநகருக்குள்  நுழைகிறாள். பௌத்தம் முன்னிறுத்தும் நான்கு பேருண்மைகளையும் புரிந்தேற்கும் வண்னம் இத்தருணத்தில் அவளுக்குத் “திருந்திய நல் ஏதுக்கள் முதிர்ந்திருந்தன” என நிறைவுறுகிறது  முந்திய காதை.

புத்தர் உறைத்துச் சென்ற நான்கு பேருண்மைகள் என்பன என்ன?

(i) வாழ்வின் அடிப்படையாக ‘துக்கம்’ தான் உள்ளது (ii) ‘ஆசை’ யும் பற்றுமே எல்லா துக்கங்களுக்கும் அடிப்படை (iii) தன்னை மையமாகக் கொண்ட நோக்கு, ஆசை அதன் விளைவான துக்கம் எல்லாம் நீக்கப்படக் கூடியவையே. (iv) மனம், வாக்கு, காயம் ஆகியவற்றின் அடிப்படியிலான எண்வழிப்பாதை (அஷ்டாங்க மார்க்கம்) மூலம் ‘சரியான வாழ்வை’ வாழும் யாரும் துக்கத்தை வெல்ல முடியும் – என்கிற இப்பேருண்மைகளை உணர்ந்தேற்கும் நிலையை மணிமேகலை எனும் கணிகைக் குலத்தில் பிறந்த ஒரு இளம்பெண் வந்தடைதலையும், அதனூடாக அவள் பெறும் அனுபவங்களையும் சொல்வதுதான் மணிமேகலைக் காவியம் என்பதை நாமும் உணர்ந்து கொள்கிறோம்.

இனி நாம் காணப்போகும் மணிமேகலையின் இறுதி நான்கு அத்தியாயங்களும் அன்று இந்தியத் துணைக்கண்டத்திலும் தமிழகத்திலும் முகிழ்த்திருந்த முக்கிய பல சமயங்களின் கருத்தாக்கங்களையும், அவற்றில் பௌத்த சிந்தனைகள் எவ்வாறு மேம்பட்டு நிற்கின்றன என நிறுவுபவையாகவும் அமைகின்றன.

இப்போது நாம் காணப் போகும் “சமயக் கணக்கர்- தம் திறம் கேட்ட காதை’ யில் மணிமேகலை ஆணுருக்கொண்டு புறச்சமயக் கணக்கர் பலரையும் கண்டு அவர்தம் மதக் கோட்பாடுகள் அனைத்தையும் பொறுமையுடன் கேட்டுக் கொள்கிறாள். யாருடனும் வாதிடுவதில்லை. இறுதியாகச் சந்திக்கும் பூதவாதிக்கு மட்டும் மறுமொழி சொல்வாள். இதனூடாக இந்தியத் துணைக்கண்டத்தில் அன்று செழித்திருந்த பல்வேறு மத நெறிகளின் அடிப்படைகளையும் நாம் அறிந்து கொள்ள முடியும்.

‘சமயக் கணக்கர்’ என்பதில் உள்ள ‘கணக்கு’ எனும் சொல் ‘தத்துவம்’ அல்லது ‘மெய்யியல்’ எனும் பொருளில் இங்கு பயன்படுத்தப்படுகிறது. கணக்கர் என்பதை ‘தத்துவ விற்பன்னர்’ அல்லது ‘சமயவாதி’ அல்லது ‘சமய நெறியை ஆய்ந்துரைப்போர்’ எனப் பொருள் கொள்ளலாம். ‘அளவை’ என்பது தர்க்கம் (logic).

அ. அளவை வாதி

மணிமேகலை முதலில் சந்திப்பது வைதிக நெறியைச் சேர்ந்த ‘அளவை வாதி’ யை. வைதிக வாதி என்பது வேதங்களை ஏற்றவர், அதனடியாக அணுகுபவர் எனப் பொருள்படும். அவனிடம் ‘நின் கடைப்பிடி இயம்பு’ எனக் கூறி அவன் கடைபிடிக்கும் தத்துவத்தைக் கூறுமாறு மணிமேகலை கேட்டவுடன் அவன் தொடங்குவான்.

வேத வியாசன், கிருத கோடி, சைமினி (ஜைமினி) முனிவன் ஆகியோர் முறையே பத்து, எட்டு, ஆறு என்கிற எண்ணிக்கைகளில் தமது அளவைகளை அவரவர்களுக்கு ஏற்ற வகையில் எடுத்துரைத்துள்ளனர். இவர்களில் சைமினி ‘.மீமாம்சை’யை எழுதியவர்.

அடுத்து பிரமாணம் என்பது எந்த அடிப்படை அல்லது ஆதாரம், அல்லது கொள்கையினடியாக ஒன்றை ஏற்றல் என்பது. அப்படியான பத்து பிரமாணங்களை அவன் பட்டியலிடுவான். அவை:

1.கண்ணால் கண்ட காட்சி,

  1. கருதுதல் (சிந்தனையில் மதிப்பிடல் அல்லது அனுமானத்திலிருந்து அனுமேயத்தை உய்த்தறிதல்),
  2. உவமம் (ஒப்புமையின் அடிப்படையில் முடிவுக்கு வருதல்),
  3. ஆகமம் (நூற் பிரமாணம் அல்லது நூலறிவு),
  4. அருத்தா பத்தி (ஆயர் குடியிருப்பு என்றால் அது கங்கையின் அருகில் இருக்கும் என ஒன்றிலிருந்து இன்னொன்றை அறிதல்),
  5. இயல்பு (ஒன்றின் தன்மை அறிந்து முடிவு கோடல். யானை மேல் இருப்பவன் கீழே கிடக்கும் ஏதொன்றையும் எடுத்துத் தருமாறு கேட்கும்போது அங்குசத்தை எடுத்துத் தருதல்),
  6. ஐதீகம் ( உலகுரை அல்லது வழி வழி வந்த கருத்து அல்லது நம்பிக்கை,)

8, அபாவம் (இன்மை – அதாவது குதிரைக்கு கொம்பு இல்லை என உணர்ந்தறிதல். ஒன்றைச் சொல்லும்போதே அது உறுதியாக அப்படியல்ல என முடிவுக்கு வருதல்),

  1. மீட்சி ஒழிவறிவு (இராமன் வென்றான் எனில் இராவணன் தோற்றான் எனப் பொருள் கோடல்),
  2. எய்தியுண்டாம் நெறி (சம்பவத்தால் அறிதல், அதாவது ஒரு பொருளுக்கு அருகிலுள்ள இரும்பு சுழல்வதைக் கண்டு அதைக் காந்தம் என அறிதல்)

அத்தொடு நிறுத்தவில்லை அந்த வைதிகவாதை. அடுத்து ‘பிரமாண ஆபாசங்கள்’ என என எட்டு அளவைக் குற்றங்களைப் பட்டியலிடுவான். அவை:

  1. சுட்டுணர்வு : ஏதொன்றின் தோற்ற உண்மையை மட்டும் கண்டு பிறவற்றை ஆராயாது ஏற்றல் (நிருவிகற்ப காட்சி).
  2. திரியக்கோடல் : காணும் ஒன்றைத் திரித்துணர்தல். எதிரொளிக்கிறது என்பதாலேயே இப்பியை சிப்பி எனக் கொள்ளுதல் (விபரீதக் காட்சி)
  3. ஐயம் : எதையும் உறுதிப்படுத்தாமல் ஐயமுற்று நிற்பது.
  4. தேராது தெளிதல் : ஆராயமற் முடிவெடுத்தல். ‘தேரான் தெளிவும், தெளிந்தார்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்’ – குறள்.
  5. கண்டுணராமை : கண்ணால் கண்டும் உணராமை. புலியைக் கண்டும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள முயலாமல் நிற்றல்.
  6. இல்வழக்கு : முயற் கொம்பு என்பதுபோல இல்லாத ஒன்றை வெறும் சொற்பொருளிலிருந்து கற்பித்துக் கொள்ளல்.
  7. உணர்ந்ததை உணர்தல்: குளிருக்கு நெருப்பருகே அமர்தல் ஆறுதல் அளிக்கும் என அறிந்தும் அதனை மீண்டும் சோதித்து அறிய முனைதல்.
  8. நினைப்பு : ஒருவர் சொல்வதை காரண ஆய்வின்றி அப்படியே ஏற்றுக் கொள்ளுதல்.

ஆ. சைவவாதி

அடுத்து  ஈசன் (சிவன்) ஒருவனையே இறைவன் எனக் கொள்ளும் ஒரு சைவனைச் சந்தித்து அவன் வணங்கும் தெய்வம் குறித்து  உசாவுகிறாள் மணிமேகலை.

ஞாயிறு திங்கள், இயமானன் (‘நான்மறையோனுமகத்து இயமான்பட’- மாணிக்கவாசகர்) மற்றும் மண், நீர், தீ, காற்று, வான் எனும் ஐம்பூதங்கள் என எட்டினையும் தன் உடம்பாகவும் தான் உயிராகவும் கொண்டுத் தனக்கு ஒப்பாரும், மிக்காரும் இல்லாமல் யாவற்ரையும் படைத்துத் திருவிளையாடல் புரிபவனே எம் இறைவன் எனப் பதிலுறுக்கிறான் அவன்.

இ. பிரமவாதி

இந்தப் பேருலகெல்லாம் பிரமதேவன் இட்ட முட்டை என முடித்துக்கொள்கிறான் இவன். பிரமவாதம் என்பது வைதிக அறுவகை நெறிக்குள் அடங்காது. புராணங்களில் மட்டுமே காணப்படுவது. இங்கு கூறப்படும் கருத்து மனுதருமத்தில் (1-9) காணப்படுவது.

ஈ. வைணவ வாதி

நீலவண்ணக் கடவுளின் புராணத்தை ஓதும் வைணவன் ‘நாராயணனே காப்பு’ என முடித்துக்கொண்டான்.

உ. வேத வாதி

‘கற்பமே’ (வேதங்களின் ஆறங்கங்கள்). கைகள், சந்தமே (ஒலி நயம்) கால்கள், எண்களே கண்கள் (எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்), தெளிவான விளக்கம் அளிக்கும் நிருத்தமே (பாவம் / அபிநயம்) செவியாகவும், சிக்கையே (சிட்சை) மூக்காகவும், இவற்றோடு சொல் இலக்கணமே முகமாகவும் கொண்டு எந்தச் சார்பும் இன்றித் தான்தோன்றியாக வெளிப்பட்ட வேத புருடர்க்கு ஆதியும் இல்லை அந்தமும் இல்லை. அவ்வேத வாக்குகளே எம் சமய நெறியாகும் என விளக்கினான் வேதவாதி.

‘மெய்த் திறம் (மெய்யான திறன்) அல்லது உலக வழக்கு எனக் கூறப்படும் எதிலும் இவ் வைதிகர் கூறுவன பொருந்தாது என எண்ணியவாறு தம் காலத்திய இன்னொரு முக்கிய சமயப் பிரிவான மற்கலியின் ஆசீவக நெறியறிந்த ஒரு முதியோனை அணுகினாள் மணிமேகலை.

ஊ. ஆசீவக வாதி

ஆசீவகர் கொள்கையச் சற்று விரிவாகவே பேசுகிறார் சாத்தனார். எல்லை இல்லாத பொருள்களில் எங்கும் எப்போதும் அகலாது பின்னிக் கிடந்து புலப்படுபவனும், எல்லையில்லாத அறிவினை உடையவனுமாகிய அவனே எங்கள் இறைவன். அவன் (மற்கலி) உரைத்த நூற்பொருட்கள் ஐந்து வகையாம். அவை திடம் தரும் உயிர், மற்றும் நிலம், நீர், தீ, காற்று எனும்  நால்வகை அணுவகைகள். அவ்வணுக்கள் நுண்மையானவை ஆனாலும் அவை தம்மை உற்றும், கண்டும் உணர்ந்திடுமாறு ஒன்றோடொன்று கூடுதலும் பிரிதலும் செய்யும். மலை, மரம், உடம்பு எனத் திரளவும் செய்யும். வெவ்வேறாகிப் பிரியவும் செய்யும். அவ்வாறு திரளவும், பிரியவும் செய்யும் வகையினை ஆராய்ந்தறிவதே உயிர் எனப்படும். ஆசீவகத்தின் அணுக் கொள்கையின்படி உயிரும் ஒரு அணுவே. அது உற்றும் கண்டும் உணர்ந்திடும் வகையில் கூடவும் செய்யும் பிரியவும் செய்யும். “ஒன்றாய், வேறாய், உடனாய்” எனும் ஆசீவகத்தின் ஒருமைவாதக் கோட்பாடு இங்கே குறிக்கப்படுகிறது. ஆசீவக நெறியை மறுக்கும் நீலகேசியிலும் (659 – 729) ஆசிவகத்தின் அணுக் கொள்கை இவ்வாறு விளக்கப்படுவதைக் காணலாம்.

ஆசீவகவாதி தொடர்கிறான்: நில அணுக்கள் வன்மையானதாக அமையும். நீரணுவானது வீழ்ந்தும், குளிர்ச்சியும் சுவையும் உடையதாகவும் இருக்கும்.. ‘இழின்’ எனும் ஒலியோடு வீழ்ந்து நிலத்தின் ஆழத்தே உறிந்து கொள்ளப்படும். தீ அணுவோ எரிவதும் மேல்நோக்கி எழுவதுமான பண்புகளைக் கொண்டிருக்கும்.. காற்றணுவோ குறுக்கிட்டு (விலங்கி) அசையும் பண்பு கொண்டிருக்கும்..

நிலம், நீர், தீ, காற்று எனும் இந்நான்கும் ஆதியில்லாத அநாதியான பரமாணுக்கள். பிரிதல், பின் கூடுதல் எம்கிற வேறு இயல்புகளை எய்தும் விகாரமுடையவை. ஆனால் இதனால் இவை கேடுற்றுச் சிதைந்தழிவதும் இல்லை. புதிதாய் ஓரணு தோன்றி இன்னொன்றுக்குள் புகுவதும் இல்லை. அநாதியான நீரணுக்கள் நிலவணுக்களாகத் திரிவதும் இல்லை. ஓரணு ஈரணுக்களாய்ப் பிரிவதும் இல்லை. தவிரவும் நெல் அவலாய் பரந்துபடுவதுபோல போல இவை விரிவதும் இல்லை. உலாவுவதும், தாழ்வதும், உயர்வதும் உண்டு. நில அணுக்களால் அமைந்த மலை, பின் சிதைந்து மணலாகிப் பிறவற்றோடு கூடலாம். பலவாகக் கூடியிருப்பன பின் பிரிந்துத் பின் பழைய அணுத்தன்மை உடையதாக மாறவும் கூடும். மரமாய்ச் செறிந்துள்ள அணுக்கள் திண்மையாய்ச் செறிந்து வேறேதேனும் ஆகலாம். மூங்கிலும் மர அணுக்கள் ஆனபோதிலும் அவை மூங்கிலாய் உருப்பெறும்போது உள்ளே துளைகொண்ட  தன்மையதாகவும் ஆகலாம். வித்தாகி மீண்டும் முளைக்கவும் ஆகலாம். தேயாத முழுநிலவைப்போல வட்டமான செழித்த நிலப்பரப்பாகவும் ஆகலாம்..

இந்த அணுக்கள் நிலம் நீர் முதலான பஞ்சபூதங்களாய் உருப்பெரும்போது இந்த நால்வகை அணுக்களும் அவையவைக்கு உரிய அளவிலேயே இருக்க வேண்டும். அவற்றில் எதுவும் குறையவோ கூடவோ கூடாது.. ஒன்று, முக்கால், அரை, கால், பங்கு என அவை வேறுபடும். எடுத்துக்காட்டாக நிலமாகிய பூதம் உருப்பெறும்போது அதில் நில அணு ஒன்று அமைந்தால் நீரணு முக்கால், நெருப்பு அரை, காற்று கால் எனும் அளவுகளில் பங்கு பெரும். இவற்றில் எது மிகுந்துள்ளதோ அதனால் அது பெயர் பெறும்.. இப்படியான வீதத்தில் அணுக்கள் செறிந்து அமையும் போதுதான் அவை நிலம் அல்லது நீர் என்பது போலப் பண்பு கொண்டிருக்கும். அதாவது நிலமாய் உறுதி பெறுதல் அல்லது நீராய் பள்ளம் நோக்கி ஓடுதல், நெருப்பாய்ச் சுடுதல், காற்றாய் வீசுதல் முதலான தொழில்களை அடைந்திடும்.

தெய்வ, ஞானக் கண்களை உடையோர் ஒவ்வோர் அணுவையும் கண்டறிவர். ஏனையோர் பூதமாய்த் திரண்டு நிற்பவற்றின் உண்மைகளை அறியார். கரும் பிறப்பு,, கருநீலப் பிறப்பு, பசும் பிறப்பு, செம் பிறப்பு, பொன்பிறப்பு, வெண் பிறப்பு என மக்கள் இவ் அறுவகைப் பிறப்பிலும் பிறந்து இறுதியாக அதி வெண்மையான பிறப்பில் பிறந்து வீடுபேறடைவர். தாம் துன்பமுற்று அழிந்து படுவதை விரும்பாதோர் வீடுபேற்றிற்கு உரியதான அதிவெண்பிறப்பில் பிறப்பதற்கு உரியோர் ஆவர். இதுவே ‘செம்போக்கு’ எனும் நன்னெறியாகும். இந்நெறியில் தவருற்றுத் துன்புற்றால் அதுவே ‘மண்டல’ நெறி என அறிதல் வேண்டும்.

ஆசீவகத்தின் பார்வையில் வீடுபேற்றுக்கான வழி இப்படியாக அறுவகைப் பிறப்புகளிலும் பிறந்து படிப்படியாக உயர வேண்டும் என்றாகிறது. இவ்வாறு பல்வகைப் பிறப்புகளுக்கும் நிறங்கூறுவது என்பது சீவக சிந்தாமணி முதலான சமணக் காப்பியங்களிலும் காணப்படுவதை வேங்கடசாமி நாட்டார் சுட்டிக் காட்டுகிறார். பெரியாழ்வாரும் வீடுபேற்றுக்குரியவர்களை ‘வெள்ளுயுர்’ எனக் குறிப்பிடுவதையும் சுட்டிக் காட்டுகிறார்.

இறுதியாக அந்த ஆசீவகன், “நற்பேறுகளைப் பெறுதலும், பெற்றவற்றை இழத்தலும், இடையூறுகள் நேர்தலும், பொருந்தும் இடத்தை அடைதலும், இன்பத்தையும் துன்பத்தையும் அடைதலும், பொருந்திய இடத்திலிருந்து நீங்கலும், பிறத்தலும், சாதலும் கரு உயிர்த்தபோதே உயிருடன் கலந்து விடும். இந்த இன்பமும், துன்பமும் ஆகிய இவையும் அணுவெனப்படும்.. முன்னுள்ள ஊழே பின் நல்லது கெட்டதற்குக் காரணமாகிறது. இதுதான் மற்கலி கோசகர் தன் நூலில் உரைத்துள்ளவையாம்” எனத்தன் ஆசிவக நெறியை மணிமேகலைக்கு உரைத்தான்.

கிட்டத்தட்ட இந்த அத்தியாயம் மணிமேகலைக் காப்பியத்தின் மொழியாக்கமாகவே அமைந்துள்ளது. சாத்தனாரின் காலத்தில் தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த வளமான தத்துவ விவாதங்கள் குறித்த சில அடிப்படைகளைப் புரிந்து கொள்ள இது உதவும். சாங்கியம், பூதவாதம் முதலான மேலும் சில முக்கிய போக்குகளையும் அவற்றின் மீதான கருத்துக்களையும் தொடர்வோம்.

(அடுத்து நிகண்ட வாதம் சாங்கியம், வைசேடிகம், பூதவாதம் ஆகிய நெறியாளர்களின் கருத்துக்களைச் சுருக்கமாகப் பார்ப்போம்.)

 

 

 

 

 

 

இந்தியா – பாக் மோதல் எங்கு கொண்டு விடும்?

(மார்ச் 2019  ‘மக்கள் களம்’ இதழில் வெளி வந்தது)

சென்ற மாதம் ‘ஜெய்ஷ் –ஏ –முகமட்’ (JeM) எனக் கூறப்படும் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த அடில் அஹமட் தர் எனும் 22 வயது இளைஞனின் தற்கொலைத் தாக்குதலால் (2019  பிப்ரவரி 14) குறைந்த பட்சம் 40 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதிலிருந்து பத்தொன்பது நாட்கள் கழித்து இக்கட்டுரையை ‘டைப்’ செய்து கொண்டுள்ளேன். இடையில் நிறைய நடந்துவிட்டன. ஆசியாவின் அணுவல்லமை மிக்க இந்த இரு நாடுகளுக்கும் இடையே ஒரு யுத்தம் தொடங்கி மிகப் பெரிய அழிவுகளுக்கு இட்டுச் செல்லுமோ என்கிற அச்சம் இப்போது சற்றே குறைந்துள்ளது. இந்நிலை உருவானதில்,  நமக்குப் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், பாக் அதிபரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான இம்ரான் கான் காரணமாகியுள்ளதை உலகமே பாராட்டுகிறது.

பிப்ரவரி 14 அன்று காஷ்மீரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நூற்றுக் கணக்கான இந்திய இராணுவ வீரர்கள் இடம்பெயர்ந்து கொண்டிருந்த பொழுது இளைஞன் ஒருவன் ஒரு தற்கொலைத் தாக்குதலை நடத்திவிடுவான் என யாரும் நினைக்கவில்லை. மோடி அரசு பதவி ஏற்றபின் (2014) காஷ்மீரப் பள்ளத்தாக்கில் வேகமாக அமைதி குலைந்தது.எனினும், இதற்கும் முந்தைய பல ஆண்டுகால முஜாஹிதீன் பயங்கரவாதத்திற்கும் 2014 க்குப் பிந்திய அமைதியின்மைக்கும் ஒரு வேறுபாடு உண்டு.2014 க்கும்முன் பள்ளத்தாக்கிலும் இந்தியாவின் வேறு சில பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில்காஷ்மீர மகளைக் காட்டிலும் அதிக அளவில் அந்நிய மண்ணில் பயிற்சி அளிக்கப்பட்ட முஜாகிதீன்களே அதிகமானதும், முக்கியமானதுமான பங்கு வகித்தனர்.

2014க்குப் பிந்திய இந்த எழுச்சியில் பள்ளத்தாக்கைச் சேர்ந்த உள்ளூர் காஷ்மிர் முஸ்லிம் இளைஞர்களே முக்கியமாக இருந்தனர்.வீதிகளில் கூடி கற்களை வீசி, பெல்லட் குண்டுகளுக்குத் தம் கண்களைப் பறி கொடுத்த நூற்றுக்கணக்கானோரிடம் பெரிய ஆயுதங்களும் இருந்ததில்லை.அவர்கள் பயிற்சிபெற்ற முஜாஹிதீன்களும் இல்லை. புர்வான் வானி  ஆசிரியக் குடும்பம் ஒன்றில் பிறந்த ஒரு இளைஞன், அவனது அண்ணன் ஆசையாக வாங்கியிருந்த ஒரு மோட்டார் சைகிளை ஓட்டிப் பார்த்துக் கொண்டிருந்தபோது அவனை ஒரு இந்தியவீரன் பிடித்துச் சென்று, கடும் சித்திரவதைகளுக்குப் பின் அவன் கொல்லப்படுகிறான். இது அங்கு அன்றாட நிகழ்வாகிப்போன ஒன்று.சுமார் ஆறு குடிமக்களுக்கு ஒரு படை வீரன் என உலகிலேயே அதிக அளவில் படைகள் நிறுத்தப்பட்டுள்ள மிகச் சில பகுதிகளில் காஷ்மீரப் பள்ளத்தாக்கு ஒன்று.இந்தியாவின் எந்தச் சட்டங்களும் நெருங்க இயலாத அளவிற்கு அபரிமிதமான அதிகாரங்களுடன் கூடிய படைவீரர்கள் அவர்கள், அவர்கள் செய்யாத கொடுமைகள் இல்லை. அண்ணன் இவ்வாறு இந்தியப் படை வீரர்களால்  கொல்லப்பட்டதை அறியும் புர்ஹான் வானி ஒரு முஜாகிதீன் ஆகிறான். அந்த 22 வயது இளைஞனை இந்திய இராணுவம் பிடித்துக் கைது செய்ய வாய்ப்பொன்று கிடைத்தபோது அவனைக் கைது செய்து விசாரிக்காமல் சுட்டுக் கொன்றபோது (2016) பள்ளத் தாக்கே கிளர்ந்து எழுந்தது. அவனது மரண ஊர்வலத்தில் இலட்சக் கணக்கில் மக்கள் திரண்டனர்.

அதற்குப் பின் அங்கு முந்திய சில ஆண்டுகளில் இருந்த அமைதி குலைந்தது. ஆனால் இந்த அமைதிக் குலைவுக்குக் காரணம் பயங்கரவாதிகளோ இல்லை அந்நிய மண்ணில் பயிற்சி பெற்றவர்களோ இல்லை, உள்ளூர் மக்கள், மாணவர்கள், இளைஞர்கள்தான, கைகளில் வெறும் கற்களைத் தவிர வேறெந்த ஆயுதங்களும் இல்லாமல் வீதிகளில் நின்றனர், இராணுவத்தினர் மீது கற்களை வீசினர். இராணுவம் ‘பெல்லட்’ குண்டுகளால் ஆயிரக் கணக்கானோரின் கண்களைக் குருடாக்கிய கதையை உலகறியும்.இப்படியான ஒரு பின்னணியில்தான் புர்ஹான் சுட்டுக் கொல்லப்பட்டு மூன்றாண்டுகள் கூட முடிவடையும் முன் இன்றைய போர்ச்சூழல் உருவாகியுள்ளது.

நாற்பதுக்கும் குறையாத இந்தியப் ம்படைவீரர்கள் கொல்லப்பட்ட நிகழ்வோடு இன்றைய அமைதியின்மையும் போர்ச்சூழலும் உருவாகியுள்ளது.

113059-yzpstdrwyp-1550154353

இந்தத் தாக்குதலில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை:

1இன்று இந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமான இந்தத் தற்கொலைப் போரளியும் உள்ளூர் காஷ்மீரிதான்.அவன் ஜெய்ஷ் ஏ முகமது அமைப்பில் பயிற்றுவிக்கப்பட்டவன் ஆனாலும் அவன் பாகிஸ்தானியோ இல்லை வெளியிலிருந்து வந்தவனோ அல்ல, அவன் ஒரு உள்ளூர் காஷ்மீரி.அப்படிப் பொது மக்களிலிருந்து கோபத்துடன் கைகளில் கற்களை மட்டும் ஏந்தி வந்து கண்களைக் குருடாக்கிக் கொண்டஇளைஞர்கள் இப்போது ஒரு தலைமுறைக்குப் பின் மீண்டும் பயிற்சியளிக்கப்பட்ட முஜாஹிதீன்களாகக் பயங்கரமான வெடிமருந்துகளுடன் தன்னை அழித்துக் கொண்டு கூடவே படைவீரர்களுக்குப் பேரழிவு ஏற்படுத்த்ம் தற்கொலைப் போராளி ஆகிறான். இது கடந்த ஐந்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்.மீண்டும் நிலைமை பழைய நிலைக்குத் திரும்புகிறது.காஷ்மீர இளைஞர்கள் இன்று முழுமையாக அந்நியமாகிப் போயுள்ளனர் என்பதையே இது காட்டுகிறது.இதும ்கட்ந்த ஐந்தாண்டுகளில் ஏற்பட்ட நிலை..

அவன் தங்கள் அமைப்பைச் சேர்ந்தவன் என்றும், அந்தப் பயங்கரவாதத்திற்குத் தாமே பொறுப்பேற்பதாகவும் ஜெய்ஷ்ஏ முஹமது அமைப்பு வெளிப்படையாக அறிவித்துள்ளது..

நாம் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.காஷ்மீர மக்கள் தமக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின் அடிப்படையில் இந்தியத் துணைக் கண்டத்துடன் இணைந்தவர்கள்.அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப் படாத நிலையில் பல காலம் ஆயுதங்கள் எடுக்காமல் போராடி இறுதியில் ஆயுதப் போராட்டத்துத் தள்ளப்படுகின்றனர்.

நீண்ட கால ஆயுதப் போராட்டம், பயங்கரவாதத் தாக்குதல்கள் என்றெல்லாம் இருந்து பின் அவர்கள் சற்றே ஓய்ந்திருந்து 2008 வாக்கில் அமைதி வழியில் அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்து பேரணி ஒன்றிற்காகத்  திரண்ட போது மன்மோகன் சிங் அரசு அதை ஒடுக்கியது.

எனினும் 2014 வரை அங்கு பெரிய அளவில் வன்முறைகள், பயங்கரவாதத் தாக்குதல்கள் இல்லை.அதாவது நிலைமை சரியாகிவிட்டது என்பதில்லை.ஏதோ ஒரு வகையில் காஷ்மீரிகளுடன் ஒரு பேச்சுவார்த்தை சாத்தியமாக இருந்தது.

மோடி அரசு பதவி ஏற்றபின் நிலமை மீண்டும் மோசமானது.ஆனால் அப்போதும் கூட காஷ்மீர மக்கள் முற்றிலும் அந்நியமாகிவிடவில்லை.

இன்று நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. இன்றையப் பயங்கரவாதத் தாக்குதலை நடத்தியவன் வெளியிலிருந்து வந்த பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவ்பன் அல்ல, ஜெய்ஷ் அமைப்பு ஒரு உள்ளூர் இளைஞனை இதற்குப் பயன்படுத்தியுள்ளது என்பது சிந்திக்கத் தக்கது. மீண்டும் காஷ்மீர் மக்களின் இந்திய எதிர்ப்புப் போராட்டம் இந்த ஐந்தாண்டுகளில் ஜெய்ஷ் போன்ற அமைப்புகள் உள் நுழையக் கூடிய போராட்டமாக மாறியுள்ளது.மக்கள் முற்றிலும் அந்நியமாகியுள்ல நிலையை இன்று ஜெய்ஷ் முதலான அமைப்புகள் பயன்படுத்திக் கொள்கின்றன.

எந்தப் பேச்சு வார்த்தைக்கும் தயாராக இல்லை எனும் நிலைபாட்டை எடுத்துக் கொண்டு, இருக்கும் நிலையில் எந்த மாற்ரத்தையும் ஏற்படுத்த மோடியோ இல்லை ராஜ்நாத் சிங்கோ தயாராக இல்லத சூழலில் மீண்டும் அங்கே பயங்கரவாதம் தலைஎடுத்துள்ளது.

பிரச்சினை இங்கே இருக்கிறது.

பாகிஸ்தானுடனான ஒரு யுத்தம் இதற்குத் தீர்வாகி விடுமா?

1971 க்குப் பின் மீண்டும் இன்றுதான் இந்திய விமானப் படை எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தான் மீதுஒரு தாக்குதலை நடத்தியுள்ளது.அதைக் கண்டு எல்லோரும் நடுங்கினோம்.நாம் மட்டுமல்ல உலகே நடுங்கியது.இரண்டும் அணு ஆயுதங்களைக் கையில் கொண்ட நாடுகள்.என்கிற அச்சம் எல்லோருக்கும் உள்ளது.இது ஒரு சமநிலையை எற்படுத்தி அது போரைத் தடுக்க உதவுமா?

ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும், இந்தியா பாக்கைக் காட்டிலும் 8.5 மடங்கு பொருளாதார பலமும், இரண்டு மடங்கு படைபலமும் உள்ள நாடு.அதன் தாக்குதல் வலிமை பாக்கைவிட மிக அதிகம்,இந்நிலையில் போரில் சமநிலை இல்லாதபோது தன்னிடமுள்ள அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்தும் ஆசை அதற்கு வரலாம்.முதல் ஆசை யாருக்கு வந்தால் என்ன, அழிவது இருவருந்தான்.

ஆனால் இப்படியான போர்ச்சூழல் உருவாகும் என புல்வாமா தாக்குதல் நடக்கும் வரை யாரும்  எதிர் பார்க்கவில்லை. தேர்தல் நேரத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுகும் இடையில் ஒரு போர்உருவாகலாம் என ஒரு மாதம் முன்பே அமெரிக்க உளவுத்துறை எச்சரித்தது உண்மைதான்.ட்ரம்பும் கூட அப்படி இருவாரங்களுக்கு முன் ஒருமுறை கூறியது செய்தியானது. இருந்தாலும் அப்படி எல்லாம் போர்ச் சூழல் உருவாகாது என்கிற நம்பிக்கைக்குக் காரணம் கடந்த சில ஆண்டுகளாக பாக்கில் இம்மாதிரியான பயங்கரவாத அமைப்புகளின் நடமாட்டம் குறைக்கப்பட்டுள்ளதுதான், இந்தியாவைக் காட்டிலும் பாக்கை அதிகமாக ஆதரித்து வந்த அமெரிக்கா இப்போது சிலகாலமாக வெளிப்படையாக பாக்கைக் கண்டிக்கத் தொடங்கி இருந்தது. அமெரிக்காவுக்கு எதிரான பலமான சக்தியாக இருந்த ருஷ்யா இப்போது பலமிழந்து போயிருந்ததாலும், மோடியின் இந்தியா மிகத் தீவிரமாக அமெர்ரிக்க – இஸ்ரேல் அணியில் இணைந்து நின்றதாலும் இப்போது அமெரிக்கா துணிச்சலாக பாக்கின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. பாகிஸ்தான் தஞ்சமடைய இபோது சீனாவைத் தவிர வேறு கதி இல்லை என்கிற நிலையில் ட்ரம்ப் பயங்கரவாதக் குழுக்களை ஒழிக்க வேண்டும் என நிபந்தனை விதித்து பாக்கிற்கான ஆயுத உதவிகளையும் நிறுத்தினார்..ஜனவரி 2018ல் அமெரிக்கா 1.3 பில்லியன் டாலர் இராணுவ உதவியை நிறுத்திய போது பாக்கின் பொருளாதாரமே அட்டம் கண்டது.இதன் விளைவாக பாக்கும் லக்‌ஷர் ஏ தொய்பா, ஜெய்ஷ் ஏ முகமது முதலான அமைப்புகளுக்கான ஆதரவுகளை நிறுத்தியிருந்தது. அவ்வமைப்புகளும் தம் பயிற்சி முகாம்களைக் கலைத்துச் சிதறி இருந்தன, அதனால்தான் இன்றைய பிரச்சினைகளுக்குச் சில நாட்கள் முன் (பிப்ரவரி 2019) நடைபெற்ற ம்யூனிச் பாதுகாப்பு அமைப்புச் சந்திப்பில் (Munich Security Forum) இந்தியா – பாக் உரசல் குறித்து எந்த விவாதமும் நடை பெறவில்லை.

இந்தப் பின்னணியில்தான் பிப்ரவரி 14ல் புல்வாமா தாக்குதல் நடந்தது.நரேந்திர மோடியைப் பற்றி அறிந்தவர்கள் எல்லோருக்கும் அச்சம்தான்.போர்ச்சூழல் உருவாகும் என எதிர்பார்க்காதவர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.நரேந்திர மோடியும் பாஜகவினரும் தேசிய உணர்வை மிகத் தீவிரமாக விசிறத் தொடங்கினர்.கம்யூனிஸ்டுகள் உட்பட யாரும் தேசத் துரோகியாக விரும்பாமல் யார் அதிக தேச பக்தர் என நிறுவிக் கொள்வதில் மும்முரமாயினர்.

பிப்ரவரி 26 நள்ளிரவில் இந்தியாவின் மிர்ரேஜ் 2000 விமானங்கள் பன்னிரண்டு பாக் எல்லைக்குள் நுழைந்து அதன் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் உள்ள பாலகோட் பகுதியில் இருக்கும் ஜெய்ஷே அமைப்பின் பயங்கரவாத முகாம் ஒன்றில் குண்டுகளை வீசி அதிலிருந்த சுமார் 250லிருந்து 300 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்தியத் தரப்பில் பெரிய அளவில் செய்திகள் பரப்பப் பட்டன. இது இந்தியாவின் இரண்டாவது “துல்லியத் தாக்குதல்“ (surgical strike) எனக் கூறப்பட்டது. தாக்குதலுக்குச் சில மணி நேரத்தில் தொலைக்காட்சியில் தோன்றிய இந்திய பாதுகாப்புத் துறைச் செயலர் விஜய் கோகலே இது ஒரு “இராணுவ நடைமுறையிலான தாக்குதல் அல்ல முன்கூட்டிய பாதுகாப்புத் தாக்குதல்” – எனும் பொருள் பட “preemptive nonmilitary strike” என்றும், “இது பாகிஸ்தான் மீதான தாக்குதல் அல்ல. பயங்கரவாதத்தின் மீதான தாக்குதல்” என்றும் கூறினார். பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர் பங்கிற்கு, “இது இராணுவ நடவடிக்கை அல்ல. ஒரு சிவிலியன் கூட பாதிக்கப்படவில்லை” – என்றார்.

பாக் இராணுவம் தன் பங்கிற்கு, “இந்தியாவுக்கு ஒரு மிகப்பெரிய ஆச்சரியம் காத்திருக்கிறது” என முழங்கியது.அதாவது தாங்கள் பதில் தாக்குதல் தொடுப்போம் என எச்சரித்தது.

சரி நிச்சயம் போர்தான் என அஞ்சினோம்.1971க்குப் பின் பல்வேறு சந்ந்தர்ப்பங்களில் மிகத்தீவிரமாகப் பிரச்சினைகள் வந்த போதெல்லாம் கூட இப்படி இரண்டு நாடுகளுமே எல்லை தாண்டித் தாக்குதலை நடத்தியதில்லை.இனி என்ன ஆகுமோ என்கிற அச்சம் நம் எல்லோரையும் சூழ்ந்தது.

இந்த நேரத்தில் மிகவும் பொறுமையாகப் பிரச்சினையைக் கையாண்டது பாக் பிரதமர் இம்ரான் கான் தான்.இரு நாடுகளும் மிகப் பெரிய அழிவாயுதங்களைச் சுமந்துள்ள நாடுகள்.நமக்குள் இப்படியான மோதல் எங்கு கொண்டுபோய் விடும்.பொறுமையாகப் பிரச்சினையை அணுகுவோம் என்றும் அப்படியான பெரிய அளவிலான பயங்கரவாத முகாம்கள் தன் நாட்டில் இல்லை என்றும் அவர் கூறினார். இன்னொரு பக்கம் பயங்கரவாத முகாம் ஒன்றைத் தாக்கி 300 பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுவது பொய் எனவும், அழிக்கப்பட்டது ஆள் இல்லாத மரங்கள் சூழ்ந்த ஒரு பகுதிதான் எனவும் சில புகைப்[பட ஆதாரங்களுடன் பாக் தரப்பில் செய்திகள் பரப்பப் பட்டன.l_440199_043358_updates

இந்த நேரத்தில் சில வெளி நாட்டுப் பத்திரிக்கைகள் களத்தில் இறங்கின. Huff Post இணைய இதழ் இந்தியா குண்டு வீசிய இடங்களில் வாழ்ந்த ஒரு சிலரைய நேர்கண்டு எழுதிய கட்டுரைச் செய்தி உலகம் முழுதும் பரவியது. ‘அல்ஜசீரா’ போன்ற ஊடகங்களும் அதே போன்ற செய்திகளை வெளியிட்டன.குண்டு வீசப்பட்ட இடத்தில் வாழும் நூரான் ஷேக் என்பவர் 250 பேர்கள் கொல்லப்பட்டார்கள் என்றால் எங்கே அவர்களின் உடல்கள் எனக் கேட்டுச் சிரிப்பதைப் படத்துடன் ஹஃப் போஸ்ட் வெளியிட்டது. பெரிய முகாம் இருந்தது உண்மை.ஆனால் இப்போது அப்படி எல்லாம் இல்லை எனவும் அவர் கூறியிருந்தார்.

இதற்கிடையில் இந்தியாவின் இந்தத் தாக்க்குதல் நடந்த அடுத்த நாள் (பிப் 27) எல்லை தாண்டித் தமது எல்லைக்குள் நுழைந்த இரண்டு இந்திய விமானப்படை விமானங்களைத் தான் சுட்டு வீ௳த்தியதாக பாக் அறிவித்தது. வீழ்த்தப்பட்ட ஒரு விமானத்தில் இருந்த விமான ஓட்டி அபிநந்தன் வர்த்தமானன் என்பவர் பாக் இராணுவத்தால் உயிருடன் பிடிக்கப்பட்டார்.இந்தப் பிரச்சினையிலும் இம்ரான் கான் உலகோர் வியக்கும்படி நடந்து கொண்டார். அபிநந்தனுக்கு நல்ல சிகிச்சை அளித்து பாதுகாப்புடன் இந்தியாவிடம் ஒப்படைத்தார்,

iaf-pilot-in-pakistani-custody-will-be-governed-under-geneva-convention-2019-02-27

பாலகோட் தாக்குதலில் ஜெய்ஷே பயங்கரவாத முகாமை அழித்து 300 பயங்கரவாதிகளைக் கொன்ற செய்தி பொய் என்பது எல்லாத் தரப்பிலிருந்தும் நிறுவப்பட்ட பின் மார்ச் 04 அன்றுமத்திய தகவல்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.அலுவாலியா அரசுத் தரப்பில் அப்படி எல்லாம் சொல்லவே இல்லை எனவும் ஊடகங்கள்தான் அப்படிச் செய்தியைப் பரப்பிவிட்டன என்றும் கூறி எல்லோரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார். மார்ச் 4 அன்று கோவையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த விமானப்படைத் தளபதி பி.எஸ்.தனோவா அவர்கள், “எங்களின் நோக்கம் இலக்கைத் தாக்குவதுதானே ஒழிய எத்தனை பேர் இறந்தனர் என்றெல்லாம் சொல்ல முடியாது. அரசுதான் விளக்கம் அளிக்க வேண்டும்” எனச் சொல்லியுள்ளார்.இந்தச் செய்தியை வெளியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் கூடவே மார்ச் 3 அன்று இந்தத் தாக்குதலில் 250 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அமித் ஷாஅளந்துள்ளதைச் சுட்டிக் காட்டியுள்ளது குறிப்பிடத் தக்கது.

பாக் ஒன்றும் பயங்கரவாதிகளுக்குப் புகல் அளிக்காத நாடு அல்ல, அங்கு ஜெய்ஷே முகாம்கள் இருந்ததெல்லாம் உண்மைதான்.அதேபோல பாக் இராணுவம் அரசின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படக்கூடிய நிலைமைகள் இருந்ததும் உண்மைதான்.ஆனால் நிலைமைகள் எப்போதும் ஒரே சீராக இருப்பதில்லை.ஒரு நேரத்தில் தமிழகம் முழுவதும் ஈழப் போராட்ட ஆயுதக் குழுக்கள் எல்லாம் இங்கே ஆயுதப் பயிற்சி முகாம்களை அரசாதரவுடன் நடத்தியதை அறிவோம்.ராஜீவ் கொலைக்குப் பின்னர் அவை கலைத்து ஒடுக்கப்பட்டதையும் அறிவோம்.இன்று பாக்கிலும் ஓரளவு நிலைமை மாறியுள்ளது.பெரிய பயங்கரவாத முகாம்கள் எல்லாம் இருப்பதாகத் தெரியவில்லை.இராணுவமும் முன்னைப்போல இப்போது அரசை மீறிய அதிகாரமுள்ள அமைப்பாக இருக்கும் நிலையில் இல்லை.இந்தியா பாகிஸ்தான் இரண்டுமே அணு வல்லமை உடைய நாடுகள் மட்டுமல்ல. வறுமை நிறைந்த நாடுகள், அவை தமக்குள் போரிட்டுக் கொள்வதைப்போல மூடத் தனம் ஏதும் இருக்க இயலாது.balacot

ஒன்றைச் சொல்லி முடிப்பது அவசியம். 1947 தொடங்கி இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான பிரச்சினைகள் அனைத்தையும் ஆராய்ந்தால் அவற்றுக்குப் பின் காஷ்மீர்ப் பிரச்சினை இருப்பது விளங்கும், காஷ்மீர்ப் பிரச்சினையைத் தீர்க்காமல் வேறு எத்தனை நடவடிக்கைகளையும் அடக்குமுறைகளையும் மேற்கொண்டாலும் அங்கே அமைதியை நிலைநாட்ட முடியாது. காஷ்மீர்ப் பிரச்சினை பேச்சு வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது எனும் நிலையை மேற்கொண்டிருக்கும் வரை இப்பிரச்சினைக்குத் தீர்வில்லை.

மேலும் இரு குறிப்புகள்

  1. நாடுகளுக்கிடையேயான கடைபிடிக்கப்படும் சில அவசியமான ஒழுங்குகளில் (Westphalian Order) ஒன்று எக்காரணம் கொண்டும் இன்னொரு நாட்டின் எல்லைக்கோட்டித் தாண்டிப் பிரவேசிக்கவோ தாக்கவோ கூடாது என்பது. 1971 க்குப் பின் நிலைமைகள் எவ்வளவு மோசமான போதும் இந்தியாவும் பாக்கும் அதைக் கடைபிடித்து வந்துள்ளன. எல்லை தாண்டித் தாக்குதல் செய்வதென்பது போர் தொடங்கிவிட்டதான ஓர் அறிவிப்பிற்குச் சமம். கிரீமியாவை ருஷ்யா இணைத்துக் கொண்டதை அவ்வாறே பன்னாட்டுச் சமூகம் எதிர் கொண்டுள்ளது. 2016 அமெரிக்கத் தேர்தலில் ருஷ்யாவின் தலையீடும் இவ்வாறே கருதப்படுகிறது. எனினும் இதன் பொருட்டு அமெரிக்கா ரஷ்யாவிற்குள் இதுவரை எல்லைதாண்டியத் தாக்குதல் நடத்தியதில்லை. இந்தியா 1971 க்குப் பின் இதுவரை இதுவரை இப்படியான செயற்பாடுகளில் இறங்காதது பன்னாட்டளவில் அதன் மீதான மதிப்பு குறையாமல் இருப்பத்ற்கு ஒரு காரணம்..
  1. புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலை ஒட்டி இந்தியா மேற்கொண்ட சில கண்டிக்கத் தக்க நடவடிகைகளில் ஒன்று ஹுரியத் தலைவர்கள் உட்பட சுமார் 170 பேர்களுக்கு வழங்கி வந்த பாதுபாப்பை இந்திய அரசு ரத்து செய்தது. இதில் உயிராபத்து உள்ள பல காஷ்மீர அரசியல் கட்சித் தலைவர்களும் அடக்கம். இந்தியா முழுவதும் குறிப்பாக வட மாநிலங்களில் காஷ்மீர மாணவர்கள், வணிகர்கள், ஊழியர்கள் முதலானோர் கடுமையாகத் தாக்கப்பட்டனர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்கப் பரிவாரத்தினர் இதில் முக்கிய பங்கு வகித்தனர். “இயல்பான தேசபக்தியின் எதிர் விளைவு என இதை அவர்கள் நியாயப்படுத்தவும் செய்தனர். டெராடூனில் ஒரு கல்வி நிறுவனம் அடுத்த ஆண்டுமுதல் காஷ்மீர மாணவர்களுக்குத் தம் நிறுவனத்தில் இடமளிப்பதில்லை என பா.ஜ.க மாணவர் அணிக்கு எழுதிக் கொடுத்துள்ள செய்தியும் பத்திரிகைகளில் வந்துள்ளது. இவ்வாறு இந்தியாவின் பலபகுதிகளிலும் நடந்த தாக்குதலைக் கண்டித்து காஷ்மீரில் ஒரு நாள் கடை அடைப்பும் மேற்கொள்ளப்பட்டது.

 

தொலைதூர இந்தியாக்களை இணைக்கும் பாலமாக பௌத்தமும் மணிமேகலையும்

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 23           

கிறிஸ்து அப்தத்தின் தொடக்க நூற்றாண்டுகளில் வணிகத் தொடர்புகளின் ஊடாக பர்மா (Myanmar), தாய்லந்து, கம்போடியா, லாவோஸ், வியட்நாம், மலாய் தீபகற்பம் ஆகியவற்றில் பவுத்தம் பரவியது. பொதுவில் தென்கிழக்காசிய பவுத்தத்தைத் தேரவாதம் எனச் சொல்வது வழக்கம். எனினும் பாலி மொழியில் புனித நூற்கள் எழுதப்பட்ட தென்கிழக்காசிய தேரவாதத்திற்கும் மத்திய மற்றும் கிழக்கு ஆசியாவில் பயிலப்படும் சமஸ்கிருதமயப்பட்ட வடக்கத்திய மகாயனம் மற்றும் தந்திராயனத்திற்கும் வேறுபாடுகள் உண்டு.  தாய்லாந்து மற்றும்பர்மிய பவுத்தர்கள் பொதுவில் தம்முடைய பவுத்தத்தை கி.மு 3ம் நூற்றாண்டில் அசோகரது காலத்திய துறவிகளான சோனா மற்றும் உத்தரா ஆகியோரால் தம்முடைய தங்கத் தீபகற்பத்திற்கு (ஸ்வர்ணபூமி)  கொண்டுவரப்பட்ட ஒன்றாகக் கருதுவதே வழக்கம். அந்த வகையில் தம்முடையதைத் தேரவாத மரபு சார்ந்தது எனச் சொல்வர்.

“தொலைதூர இந்தியா” (Farther India) என அழைக்கப்படும் இந்தப் பகுதியில் பிலிப்பைன்ஸ் தவிர்த்த தென் கிழக்காசியத் தீவான இந்தோனேசியா, மலாய் தீபகற்பம், இந்தோசீன தீபகற்பம் உள்ளிட்ட கங்கைக்கு அப்பாலான இந்தியப் பகுதிகள் ஆகியன அடங்கும். முற்றிலும் வங்க அடையாளங்களுடன் கூடிய அஸ்சாமும் இந்தியத் தாக்கத்திற்கு ஆட்படாத வடக்கு வியட்நாமும் இந்தத் ‘தொலைதூர இந்தியா’வுக்குள் வராது (G.Coeds, Indianized States of South Asia (Ed by Wlter F Vella, Australian National University Press, Canberra, 1975). இந்திய மதங்களான இந்துமதம், பௌத்தம் ஆகிய இரண்டின் தாக்கங்களும் இந்தத் தொலைதுர இந்திய உருவாக்கத்தில் உண்டெனினும் பவுத்தத் தாக்கம் கூடுதல்.  5

தொடக்கத்தில் அது தங்கபூமி. பின் அது மசாலாப் பொருட்கள் (spices), கற்பூரம், சந்தனம் முதலான வாசனை மரங்களுக்குப் பெயர் பெற்ற நிலப்பகுதி, பின் ரப்பர், டின், எண்ணை என வணிகத் தொடர்புகள் இன்னும் தொடர்கின்றன. வணிகத்திற்கு அப்பால் பண்பாட்டு ரீதியான தாக்கம் ஏராளம்.  அதன் மொழி வழக்கில் கலந்துபோன சமஸ்கிருதக் கூறுகள், எழுத்துருக்கள், இந்திய ஆட்சி மற்றும் நிர்வாகக் கூறுகளின் தாக்கம் என நிறையக் கண முடியும். இஸ்லாமாக மாறிய பகுதிகளிலும்கூட இந்தத் தொடர்ச்சியை நாம் இன்னும் காண முடிகிறது. சிற்பம், கட்டிடக் கலை ஆகியவற்றில் பவுத்தத்தாக்கம் ஏராளம். 2016 ல் தாய் இளவரசர் Maha Vajiralongkorn மன்னராக முடிசூட்டிக் கொண்டபோது தமிழில் பாசுரங்கள் ஓதப்பட்ட செய்தி அப்போதைய நாளிதழ் ஒன்றில் வெளி வந்தது (Times Of India, Nov 08, 2016). ‘மணிமேகலை’ எனும் கடற் தெய்வம் தமிழகத்திற்கு மட்டுமின்றி இந்தத் தொலைதூர இந்தியாவுக்கும் பொதுவாக உள்ளது குறித்து நாம் இந்தத் தொடரில் வேறு சில சந்தர்ப்பங்களிலும் பேசியுள்ளோம். பல தமிழ்ச் சொற்களும் கிட்டத்தட்ட அதே ஒலிப்புடன் அங்கு பயிலப்படுகின்றன. எடுத்துக்காட்டாகச் சில: தங்கம் (தொங்கம்) குரு (க்ரு). அப்பா (பா), புத்ரன் (புத்ரு). மாலை (மாலெ).

இதில் மிகவும் வேடிக்கை என்னவெனில் இந்தியர்களும், தமிழர்களும் கிழக்கு நாடுகளுக்குத் தாம் அளித்த இந்தக் கொடையைச் சமீப காலம் வரை மறந்திருந்ததுதான். ஃப்ரெஞ்ச் மற்றும் டட்ச் மொழிகளை அறிந்து பாரிஸ் மற்றும் லெய்டன் பல்கலைக் கழகங்களில் பணி செய்த சில பேராசிரியர்கள்தான் முதன் முதலில் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது (Sylvain Levi,  Pour L’Histoir du Ramayana, JA, January, February, 1918, Page 80 ff).

துறைமுக நகரமான நாகப்பட்டிணத்தில் இருந்த பௌத்த நிறுவனங்களுக்கும் ஜாவா மற்றும் சுமத்ராவிலிருந்த சைலேந்திர மன்னர்களுக்கும் முதலாம் ராஜராஜன் காலந் தொடங்கி நெருக்கமான தொடர்பு இருந்துள்ளதை அவனது அகன்ற லெய்டன் செப்பேடு பதிவு செய்கிறது. ஸ்ரீவிஜயத்தின் சைலேந்திர குடும்பத்தைச் சேர்ந்த மாறவிஜயோத்துங்க வர்மனால் நாகப்பட்டிணத்தில் கட்டப்பட்ட அழகிய சூடாமணி விகாரை குறித்த பதிவு அதில் உள்ளது (K.V.Subramaniya Aiyer, The Larger Leiden Plates, Epigraphia Indica 22/6, (1934), 241, 42). புத்தர் மற்றும் எதிர்கால மைத்ரேய புத்தர்களின் முன்னூறுக்கும் மேற்பட்ட சிற்பங்கள் நாகையில் கிடைத்துள்ளன. சைலேந்திரா என்பது மலையின் இந்திரன் எனப் பொருள்படும் சொல். நாகையில் சீனர்கள் கட்டிய ‘பகோடா’ ஒன்றும் இருநூற்றாண்டுகளுக்கு முன்புவரை இருந்துள்ளதும் நினைவுகூரத் தக்கது. ஜாவாவின் மையமாக உள்ள பாராபுதூரில் உள்ள எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பவுத்தச் சின்னத்தில் உள்ள இந்தியத் தாக்கங்கள் குறித்து விரிவான பதிவுகள் உண்டு. இந்த வரலாற்றுப் பின்னணியில் தென்னிந்தியாவையும் (அதாவது தமிழகத்தையும்) தென் கிழக்கு ஆசியாவையும் இணைக்கும் ஒரு இலக்கிய ஊடகமாக மணிமேகலை இருந்தது என்பார் ஆனே மோனியஸ் (Anne E Monius, Imagining a Place for Buddhism, Navayana, 2009, Page 110). ஒரு இலக்கிய மொழியாக அமைந்து தென் இந்தியா எனும் மைய நிலத்தை (Main Land) சாவகம் எனுன் விளிம்புடன் (periphery) ஒரு ஒற்றை மத நம்பிக்கையுடன் கூடிய குமுக அலகாகவும் பவுத்த உலகாகவும் இணைக்கும் பணியை தமிழ் நிறைவேற்றுகிறது என்பார் மோனியஸ்.

மணிமேகலைக் காப்பியம் இவ்வாறு ஒரு ஒற்றை  இலக்கிய பிரபஞ்சத்துக்குள் சாவகத்தையும் தமிழகத்தையும் இணைக்கும் பணியை ஐந்து அல்லது ஆறாம் நூற்றாண்டிலேயே ஒரு தொலைப் பார்வையுடன் செய்தபோதும், அது எதார்த்தமாக நிகழ்வதற்கு இன்னும் ஏழெட்டு நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று. ஆனாலும் ஜாவாவை (சாவகத்தை) தனது முக்கிய களங்களில் ஒன்றாகச் சாத்தனார் தேர்வு செய்ய நேர்ந்தது எங்ஙனம்? தென்கிழக்காசியப் பகுதிகளிலேயே சாத்தனாரின் காலத்தில் அதிக இலக்கிய வளம் மிக்க பகுதியாக ஜாவாதான் விளங்கியது என்பதை மோனியஸ் சுட்டிக் காட்டுவார். தவிரவும் ஸ்ரீவிஜயத்தின் ஜாவா- சுமத்ரா அரசுப்பகுதிதான் சமஸ்கிருதக் கல்வியிலும் அப்போது சிறந்து விளங்கியிருந்தது. “நாகராக்ருதாகம” எனும் ஒரு காவியத்தை ‘காஞ்சிபுரி’ யைச் சேர்ந்த ஸ்ரீபுத்தாதித்யா என்றொரு கவி பதினான்காம் நூற்றாண்டில் இயற்றியுள்ளது குறித்து இந்தத் தொடரில் நான் முன்னொருமுறை குறிப்பிட்டுள்ளது நினைவிருக்கலாம்.

மகாஜனக மற்றும் சங்க ஜாதகங்களில் கடற் கடவுளாக இருந்து எதிர்கால புத்தர் ஒருவரைக் காப்பாற்றிய தெய்வமாகவும், கடல் விபத்துகளில் காப்பாற்றும் தன் கடமையைச் சிலகாலம் தவறி இருந்த தெய்வமாகவும், பத்தினி (கண்ணகி) மற்றும் கோவலனுடன் நெருக்கமாக உறவு கொண்டவராகவும் ஜாதகங்களிலும் நாடுப்பாடல்களிலும் மணிமேகலை ஏராளமாக இடம் பெறுவதும் குறிப்பிடத் தக்கது.3

இனி நாம் நாகபுரத்தை அடைந்த மணிமேகலையைத் தொடர்வோம்.

நாகபுரத்தின் அப்போதைய மன்னனான புண்ணியராசன்தான் முற்பிறவியில் ஆபுத்திரனாக அவதரித்திருந்தவன். தருமசாவகன் தனது மன்னனைப் புகழ்ந்து உரைத்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் அவன் தன் உரிமைச் சுற்றத்துடன் அங்கு வந்தான். தருமசாவகனைக் கண்டு வணங்கினான். அறம், மறம், நிலையாமை, நித்தியம், துக்கம், உடலை விட்டுப் பிரிந்த உயிரின் நிலை, பேதமை முதலான பத்துவகைச் சார்பின் தோற்றம், சார்பை அறுத்து உய்தி பெறும் வழி முதலானவற்ரை அவன் அரசனுக்கு எடுத்துரைத்தான். அரசனும் அவற்றை அமைதியாய் ஏற்றுக் கொண்டான்.

பின் அருகிருந்த மணிமேகலையை நோக்கினான் மன்னன். இணையற்ற அழகுடையவளாக இருந்தும் அவளது கண்ணசைவுகள் காமனுக்குத் துணை சேர்க்காததைச் சுட்டிக்காட்டித் தன் அழகிய கைகளில் பாத்திரத்துடன் நிற்கும் இவாள் யார் என வினவினான். அப்போது அரசனுடன் வந்திருந்த கஞ்சுகன், தான் கிள்ளிவளவனைச் சந்திக்க புகார் சென்றபோது அறவண அடிகளீடம் இவள் பிறப்பை அறிந்து வந்து அரசனுக்குரைத்ததை நினைவூட்டினான்.

மணிமேகலை பேசலுற்றாள். “என் கையில் இப்போதுள்ள இப்பாத்திரம் முன்னொரு பிறவியில் உன்கையில் இருந்த ஒன்றுதான். நீ இப்போது உன்னிடம் செர்ந்துள்ள பெருஞ்செல்வத்தில் மயங்கி நிற்கிறாய். எனவே நீ அதையெல்லாம் இப்போது அறியாய். அந்தப் பிறவியை அறியாத போதும், பசு ஒன்றின் வயிற்றில் பிறநதுள்ள இப்பிறப்பினையும் நீ அறியாமற் போனதென்ன? மணிபல்லவம் சென்று அங்கு பீடிகையை வலம்வந்து வணங்கினாலன்றி பற்றுக்களுடன் உன்னைப் பிணிக்கும் பிறவியின் தன்மையை நீ அறியாய். ஆதலின் நீ அங்கு வருவாய் அரசே!” – என மணம் மிக்க மாலையை அணிந்து நின்றிருந்த அரசனிடம் கூறி அவ்விடம் விட்டகல ஆயத்தமானாள்.

வானத்தில் எழுந்த மணிமேகலை கதிரவன் மேற்திசையில் வீழும் முன் வானிலிருந்து இறங்கிப் பூக்களின் நறு மணத்துடனும், சுருண்டெழும் அலைகளுடனும் விளங்கும் மணிபல்லவத் தீவை அடைந்து வலம் வந்தாள். பிறவிப் பிணியை அறுக்கும் மாதவனது பாதபீடிகையின் தரிசனம் கண்டவுடன் அதைத் தொழுது வலம் வந்தாள். தன் பழம் பிறப்பையும் உணர்ந்தாள்.

மணிமேகலை அவ்வாறு தொழுதிருந்த அதே நேரத்தில் அம் மலர்வனத்தை விட்டகன்ற மன்னன் புண்ணியராசன் தன் நகரடைந்தான். அங்கே அவனது வளர்ப்புத்தாயான அமரசுந்தரி அவனது இப்பிறவி வரலாற்றை உணர்த்தினாள். தந்தை முனிவனாகவும் தாய் பசுவாகவும் கொண்டு பிறந்த அவனது பிறப்பும், மாமுனிவன் அருளினால், எல்லா மானுடப் பிறவியும் போலன்றி குடல் மாலையால் சூழப்படாமல் தான் ஆங்கொரு பொன் முட்டையுள் அடங்கிப் பசு வயிற்றினுள் இருந்து, மக்கட்பேறு இல்லாத மன்னன் பூமிசந்திரனால் கொண்டுவரப் பெற்றதையும் அவ்வளர்ப்புத் தாயின் வாயால் கேட்ட ஆபுத்திரன் மிகுதியான துயரடைந்தான்.

சென்ற பிறவியில் தன் தாய் செய்த செயலையும், இப்பிறவியில் தானடைந்துள்ள நிலையையும் ஒரு கணம் நினைவுகூர்ந்தான் மன்னன். ஒரு பக்கம் மன்னர்கள் அவன் செவ்விக்காகக் காத்துக் கிடக்கின்றனர். அரசானாக இருந்து மேலோர்களைப் பேணியும், நாடகம் கண்டும், பாடல்களையும் இன்னிசையையும் கேட்டுக் கொண்டும், தேவியர்தம் ஊடல்களை அனுபவித்துக் கொண்டும், தான் பணிந்து அவற்றை முடிவுக்குக் கொணர்ந்தும், அவர்தம் அழகிய மார்பகங்களில் குங்குமச் சாந்தால் எழுதியும், மலர்களை அவர்களின் சுருண்ட குழலில் சூட்டியும், நறுமுகைகளின் உள்ளே பொதிந்து கிடக்கும்  அமுது போன்றதாகிய அவர்களின் சிவந்த வாயூறலை உண்டும், அவர்தம் மதிமுகத்தில் அலையும் கருங்கண்களின் செம் முனைகள் கலங்குமாறு மன்மதன் மலரம்புகளைத் தூவ, காமக் கள்ளையுண்டு மகிழ்ந்திருக்கும் தன் போக வாழ்வை இகழ்ந்து, “பற்றறுத்துத் துறத்தலே நன்று” என வாய்விட்டு அரற்றினான்.

“தெளிந்த உணர்வுடைய நாதமுனி என் செவியிலிட்ட அறநெறி வித்து இன்று மணிமேகலையைக் காரணமாகக் கொண்டு பழுதற விளைந்தது” என்று பலவாறும் புலம்பினான் புண்ணியராசன்.

“ஆகா, மனம் வேறாயினான் மன்னன்” என உணர்ந்த அமைச்சன் சனமித்திரன் அவனைத் தொழுது வணங்கி, “என் சொற் கேட்பீர் ! நின் தந்தை உம்மை அடைவதற்கு முன்பாக உம் நாடு மழைவளமற்று, பெற்றதாய் தன் குழந்தைக்கு  இரங்காமல், கிடைக்கும் உணவைத் தானே உண்ணும் நிலைக்குச் சரிந்திருந்தது. வெங் கோடை நாளொன்றில் சூல் கொண்ட கருந்திரள் மேகம் ஒன்று எழுந்ததுபோல நீ தோன்றினாய். அன்று முதல் இன்றுவரை வானம் பொய்க்கவில்லை; நிலவளம் குன்றவில்லை; ஊனுயிர்கள் உறுபசி அறியா நிலை எய்தின. இந்நிலையில் நீ எல்லாவற்றையும் விட்டகன்றால் இந்நாடு முழுதுமே தாயற்ற குழந்தை எனும் நிலையை எய்தும்.2

“துயர்நிலை பெற்ற இவ்வுலகை அத்துயர் நீக்கிக் காத்தலன்றி, நீ மட்டும் உயர்நிலை உலகம் ஒன்றை விரும்பிச் செல்வாயாயின் உயிர்கள் அனைத்தும் இறுதி எய்தும்; தன்னுயிரை முதன்மையாகக் கருதாத புத்ததேவன் உரைத்த நெறியும் இதுவல்லவே”- என்று அறம் உரைத்தான் அமைச்சன்.

அமைச்சன் உரைத்த அறவுரை கேட்ட மன்னன், “மணிபல்லவத்தை வலம் கொள்ள எழுந்த என் வேட்கை அத்தனை எளிதாகத் தணியாது. அதனால் அரசையும், மக்களையும் ஒருமாத காலம்வரை காத்துவருதல் நின் கடன்” – எனக் கூறியவாறு எழுந்து மரக்கலம் செய்யும் கம்மியரை “வருக” என அழைத்துத் தன் மரக்கலத்தே ஏறினான். அம்மரக்கலமும் இடை நிற்காது சென்று மணிபல்லவத்தை அடைந்தது. அங்கே மணிமேகலை காத்திருந்தாள். இருவரும் தீவை வலம் வந்தனர். முற்பிறவியை உணர்விக்கும் பீடிகையை மணிமேகலை அவனுக்குக் காட்டினள். ஒரு தூய கண்னாடிபோல அவன் முற்பிறவியை பீடிகை அவனுக்கு உணர்த்தியது.

“என் பிறப்பறிந்தேன். என் இடர் தீர்ந்தேன். தென்தமிழ் மதுரையின் அழகிய கலைப் பாவையே! இரந்துண்ணும் வாழ்க்கைக்கு விதிக்கப்பட்ட என்னிடத்தே, வந்தோர்க்கு அருந்துவதற்குரிய உணவேதும் காணாது வருந்துவோனாகிய என் கையிலே, ‘நாடே வறுமையுற்ற போதிலும் இந்த ஓடு மட்டும் வருமையுறாது. எழுந்து இதனை ஏற்றுக் கொள்!’ – எனக் கூறி அமுதசுரபியைத் தந்து என் பிறவி அறுத்த பாவையே! உணர்வில் தோன்றி, மெய்ப்பொருள் உணர்த்தி அருளும் அணிதிகழ் அவிரொளி மடந்தையே! தேவராயினும், பிரமராயினும், அவர்களின் நாவால் எழும் குற்றத்தைக் கழுவித் தூய்மையாக்கும் நின் திருவடிகளைப் பிறவிகள் தோறும் போற்றுதலன்றி மறந்தும் வாழேன் இனி நான்!” – எனச் சிந்தாதேவியைப் போற்றி நின்றான் முற்பிறவியில் ஆபுத்திரனாக வழ்ந்து இப்பிறவியில் புண்ணியராசனாய்ப் பிறப்பெடுத்தவன்.

(அடுத்து மணிமேகலை வஞ்சி சென்று கண்ணகியின் அறிவுரை பெறுதல்)

“அறிவு உண்டாக”- என ஆங்கவன் வாழ்த்தினன்

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 22 , தீராநதி, நவம்பர் 2018                         

மணிமேகலையின் கதை அமைப்பு சற்றுச் சிக்கலானது. ஆங்காங்கு பவுத்த அறங்களைக் காப்பியத்தின் கதைப் போக்கில் பொருத்தமாய்ப் பதிக்க வேண்டியது இப்படிக் கதை அமைப்பு சிக்கலாவதில் ஒரு பங்கு வகிக்கிறது. சோழ அரசன் கிள்ளிவளவன் நாக நாட்டு இளவரசி பீலிவளையுடன் கொண்ட காதற் கதையை சித்திராபதி சொல்வதன் நோக்கம் மணிமேகலையை சிறையிலிருந்து மீட்டு அழைத்துச் செல்வதே. கடலை ஆளும் மணிமேகலா தெய்வத்தின் வலிமையைச் சொல்வதற்கு அவள் இங்கே இந்த வரலாற்றைச் சொல்கிறாள். அப்போது பூம்புகார் அழியவில்லை. ஆனால் தீவகச் சாந்தி செய்யாவிட்டால் மணிமேகலா தெய்வம் கோபம் கொள்ளும். நகரம்  கடல் வயிறு புக நேரும் என்றொரு சாபம் இருக்கிறது. அதன் விளைவாக மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் அத் தெய்வத்தின் பெயர் தாங்கிய தன் பேத்தியைச் சிறையில் இட்டுத் துயரில் ஆழ்த்தினால் அதை அத் தெய்வம் பொறுக்காது என வெளிப்படையாகவே சொல்லி விடுகிறாள் சித்திராபதி.

அரசி அதற்குத் தக்க பதிலைச் சொல்லிவரும் நேரத்தில்தான் அறவணரும் மாதவியும் மணிமேகலையை மீட்க அங்கு வருகின்றனர். அடிகளைக் கண்டதும் அரசியும் அவள் ஆயச் சுற்றமும், சித்திராபதி உள்ளிட்ட அனைவரும் எழுந்து நிற்கின்றனர். வீழ்ந்து வணங்கிய அரசியை அறவணர், “அறிவு உண்டாக” என வாழ்த்துகிறார்.

“பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு” வாழ்க என்றெல்லாம் அம் மாதவர் வாழ்த்தவில்லை. அறிவு உண்டாக என மட்டுமே அவர் வாழ்த்துகிறார். பவுத்தம் துறவை மட்டும் போதிக்கும் மதமல்ல, திறன் சாரந்த வாழ்வு என்பதையும் அது வலியுறுத்துகிறது, அறன் சார்ந்த வாழ்வே திறன் சார்ந்த வாழ்வாகவும் இருக்க முடியும் என்பதையும் அது முன்வைக்கிறது.  புத்தரின் இறுதி நேரத்தில் அவரோடு இருக்க வாய்த்த அடியார்கள் அவரிடம் இறுதியாய் எங்களுக்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என வினவும்போது அவர், “புதிதாய் என்ன சொல்லப் போகிறேன். உனக்கு நீயே விளக்கு” என்றுதான் கூறுகிறார். தனது போதனைகளே உங்கள் வழிகாட்டி எனக் கூட அவர் சொல்லவில்லை. தனது போதனைகளையும் கூட அவரைப் பின்பற்றுபவர்கள் சிந்திப்பதற்கான ஒரு பொருள் என்றே அவர் முன்வைத்தார். ‘உபய கவுசல்ய’ என்பது ஒரு பவுத்தக் கருத்தாக்கம். அதாவது சூழலுக்குத் தகுந்த உபாயம். அவ்வப்போது எதிர் கொள்ளும் சூழலுக்குத் தக அவர்கள் தங்கள் அறிவின் துணை கொண்டு அறத்தின் வழி நின்று உபாயங்களைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். மற்றபடி இறைவனை வேண்டியோ, புனித நீராடியோ, நல்ல நேரம் பார்த்தோ, விரதம் இருந்தோ, புனித யாத்திரை சென்றோ வாழ்வில் வெற்றி பெற இயலாது. அப்படி வாழ்வது அறம் சார்ந்த வாழ்வாகாது.

புத்தர் காட்டும் எண்வழிப் பாதை ‘சம்மா திட்டி’ எனத் தொடங்கும். அதாவது சரியான பார்வை. தொடர்ந்து சரியான நோக்கம், சரியான நடத்தை சரியான பேச்சு, சரியான வாழ்முறை, சரியான முனைப்பு, சரியான ஓர்மை, சரியான தியானம் என முடியும். இதிலிருந்து என்ன புரிந்து கொள்கிறோம்? எது சரியான பாதை என பவுத்தம் சொல்லவில்லை. பின் நாம் அதை எப்படித் தேர்வு செய்வது? எது குறித்தும் நமக்கு சரியான பார்வை என்பது அவ்வப்போது எதிர்கொள்ளும் சூழலுக்குத் தக அறவழியில் அறிவைப் பயன்படுத்திக் காண்பதே. இதுவே புத்தர் அருளிய வழிகாட்டல். ‘சரியான’ என்பதை right எனப் பொருள் கொள்வதைக் காட்டிலும் correct, perfect  எனப் பொருள் கொள்ள வேண்டும். பவுத்தம் ஒரு மதமல்ல. புத்த பகவன் ஒரு தத்துவவாதியோ, சடங்குகள் மற்றும் கோட்பாடுகளுடன் ஒரு மதத்தை உருவாக்கியவரோ  இல்லை என்றெல்லாம் சொல்வதன் பொருள் இதுவே.

அப்படியாயின் ‘இறுதி உண்மை’ என எதுவும் இல்லையா? பௌத்தம் அதைத்தான் ‘நிர்வாண நிலை’ என்கிறது. இவ்வுலக வாழ்வை வெறும் மாயை என அது மறுக்கவில்லை. மாறிக்கொண்டே இருக்கும் இவ்வுலகின் விதிகளையும், அவை குறித்த உண்மைகளையும் அது ஏற்றுக் கொள்கிறது.. மற்ற அனைத்து மதங்களும் விஞ்ஞான முடிவுகளை ஏற்காத நிலையில் பவுத்தம் அனைத்து அறிவியல் கண்டுபிடிப்புகளையும் ஏற்றுக் கொண்டது. கிரகங்களின் நிலையை வைத்து எதிர்காலத்தைச் சொல்ல இயலும் என்கிற கருத்தை புத்தர் அளவிற்கு வன்மையாகக் கண்டித்தவர் யாருமில்லை.  இந்த phenomenal world ன் விதிகளாகவும் உண்மைகளாகவும் அறிவியல் கோட்பாடுகளை அவர் அங்கீகரித்தார்.
ஆனால் இவை ஒப்பீட்டளவிலானவை. நமது அறிதல், அளவுகோல்கள், கருத்துக்கள் ஆகியவற்றின் அடிப்படையிலானவையே இந்த அறிவியல் உண்மைகள்.. அந்த அளவிற்கு அவை உண்மையானவை. அதே நேரத்தில் அந்த வகையில் அவை ஒப்பீட்டளவிலானவையும் கூட. பொருள்களை உங்களின் கருத்துக்கள், முன் முடிவுகளின் அடிப்படையில் அணுகி நீங்கள் அடையும் முடிவுகள் அவை. அதையும் கூட அறிவியல் பிற்காலத்தில் ஏற்றுக் கொண்டது. எல்லாம் சார்பானவையே; எதுவும் முற்றுண்மையானவை அல்ல என்பதுதானே ஐன்ஸ்டினின் கோட்பாடு.
ஆனால் எதையும் அதன் இயல்பில் அறிந்து கொள்வதற்கு (nominal truth) எல்லாவற்றையும் முற்றுண்மையானது  என அணுகும் பார்வை தடையாகிறது.  nominal truth ஐ அறிந்துகொள்ள வழி என்ன? எந்த முன்முடிவுகளும், நம்பிக்கைகளும், அறிதலும் அற்ற நிலை அடைவதுதான். அதைத்தான் புத்த பகவன் ‘நிர்வாண நிலை’ என்றார். அதுவே ஒளிபெற்ற நிலை. intuition, ப்ரக்ஞை, “பன்னா”.

எல்லா அறிதல்களிலிருந்தும் விடுதலை என்பதன் பொருள் இதுவே. அப்படித் துறக்க வேண்டியவற்றுள் புத்தர் தன்னுடைய சிந்தனைகளையும் கூட உள்ளடக்கினார். இப்படிக் கோட்பாடுகளையும் வழிமுறைகளையும் எப்போதும் சுமந்து திரிபவர்களை அவர் நதியைக் கடக்கத் தயாரித்த மரத் தெப்பத்தை நதியைக் கடந்தபின்னும் தலையில் சுமந்து வரும் மூடத் தனத்துடன் ஒப்பிட்டார் (மஜ்ஜிம நிகாயம், அலகத்தூபம சுத்தம்). மரணப்படுக்கையிலும் அவர்  சொன்னாரே: “உனக்கு நீயே விளக்கு..”

அறிவைப் போற்றிய பவுத்தம் கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளித்தது. இந்தியாவில் உருவான நாளந்தா, தட்சசீலம், விக்ரம சீலம், வல்லபி, புஷ்பகிரி, சோமபுரி மகாவிகாரை முதலான பல்கlலைக் கழகங்கள் யாவும் பவுத்தம் உருவாக்கியவை என்பது நினைவுக்குரியது. இன்றைய ‘பல்கலைக்கழகங்களுக்கு’ ஒரு தொன்ம மாதிரிகளாக அவை இருந்தன. வைதீக குருகுலக் கல்வி முறையிலிருந்து அது பலவகைகளில் வேறுபட்டது. ஒற்றை ஆசிரியரிடம் அவரது இருப்பிடம் சென்று, பணிவிடைகள் மேற்கொண்டு அவர் அறிந்தவற்றை மட்டுமே கற்றுக் கொள்ளும் குருகுல முறை கடுமையான வருண நெறிகளுக்கு ஆட்பட்டிருந்ததை நாம் ஏகலைவன் வரலாற்றிலிருந்து அறிகிறோம். பவுத்த பல்கலைக் கழகங்களில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்வேறு கலைகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் ஓரிடத்தில் குவிந்து, பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் மாணவர்களுக்குப் பலவற்றையும் கற்றுத் தரும் முறை அது. வருண வேறுபாடுகளுக்கு அங்கு இடமில்லை.

விஹாரைகளில் கற்றுக் கொடுக்கப்பட்டவை என்றால் பௌத்த மதக் கல்வியாக மட்டும்தானே இருக்கமுடியும் என்கிற ஐயம் தோன்றலாம். பிக்குகளாக வருபவர்களுக்கு மட்டும்தான் மதக் கல்வி மட்டும் பயிற்றுவிக்கப்பட்டது. மற்றவர்களுக்கு மதம் சாராத secular கல்வி அங்கே கற்றுத் தரப்பட்டது.

பிராமணக் கல்வி முறைக்கும், சிரமணக் கல்வி முறைக்கும் இன்னொரு வேறுபாடும் உண்டு. பிராமணம் போலச் சிரமணம் புறச் சடங்குகளுக்கும், இதர புற வினைகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பதில்லை. அகப் பயிற்சிக்கே அது முதன்மை அளித்தது. நல்வாழ்வு, திறன் சார்ந்த வாழ்வு, அறம் சார்ந்த வாழ்வு ஆகியவற்றையே பௌத்தம் கல்வியின் நோக்கங்களாகக் கொண்டிருந்தது. அற வாழ்வு, ஆழ்நிலைஉள்நோக்குச் சிந்தனை (contemplation), ஞானம் (wisdom) ஆகியன கல்வியின் உள்ளடக்கங்களாக இருந்தன. ஆன்மீகப் பயிற்சி என்பதாகச் சுருங்காமல்  உடல், ஒழுக்கம், அறிவு, சிந்தனை ஆகிய முழுமையான ஆளுமை வளர்ச்சியை அது நோக்கமாகக் கொண்டிருந்தது. அவற்றோடு பவுத்தக் கல்வி முற்றுப் பெறுவது  இல்லை. உரிய தொழிற் பயிற்சிகளுக்கும் அதில் இடமிருந்தன.

அறவணர் அரசியை ‘அறிவுண்டாக’ என வாழ்த்தியதன் உட்பொருள் இதுவே.

அடிகளுக்கு ஆசனம் காட்டி, திருவடி விளக்கிச் சிறப்புச் செய்தபின், “என் நல்வினைப்பயனே உம்மை இங்கு அழைத்து வந்தது. உங்கள் சொல்வலிமை குன்றவில்லை என்ற போதிலும் உடல் தளர்ந்துள்ளது. மூத்த இவ்வுடல் பல்லாண்டு வாழ்க” என வாழ்த்தினாள் அரசி. “தேவி ! கேட்பாயாக” -எனத் தன் அறவுரையைத் தொடங்கினார் அடிகள்.

“தவநெறி மேவிய உடல் கொண்டவனாயினும் நான் கீழிறங்கும் மாலைச் சூரியன் போன்றவனே. பிறந்தார், மூத்தார், பிணி நோயுற்றார், இறந்தார் என்பது இயல்புதானே ! பேதமை தொடங்கி வினைப்பயன் ஈறாக வகுக்கப்பட்ட பன்னிரண்டு இயல்புகளையும் பிறந்தோர் அறிந்தால் பெரும் பேறு பெற்றவர்கள் ஆவர். அறியார் ஆயின் ஆழ் நரகை அடைவர்” -எனக் கூறி அவற்றை விளக்குவார்.

“பேதமை என்பது கண்ணால் கண்டு ஆராய்ந்து ஒன்றை நம்பாது சொல்லப்பட்டவற்றை அப்படியே நம்புதல்; மூவுலகங்களிலும் சேதனப் பிரபஞ்சம் எனப்படும் உயிர்களின் இவ்வுலகம் மிகப் பெரிது. ஒருவர் தான் செய்த வினைப்பயனுக்கு ஏற்ப இவ்வுயிர்களில் ஏதொன்றின் கருவில் உதித்து, அவ் வினைப்பயனுக்கு ஏற்றவாறு இன்ப துன்பங்களை அனுபவிப்பர். கொலை, களவு, காமம், தீய ஆசைகள் ஆகியன உடலால் மேற்கொள்ளப்படும் குற்றங்கள்; பொய், கோள், கடுஞ்சொல், பயனற்ற சொல் ஆகிய நான்கும் சொல்லால் இழைக்கப்படும் குற்றங்கள்; தீய விருப்பு (வெஃகல்), கோபம், மயக்கம் முதலியன உள்ளத்தால் நிகழும் குற்றங்கள்; நல்லறிவுடையோர் இக் குற்றங்களில் மனம் செலுத்த மாட்டார்கள். அப்படிச் செய்வார்கள் என்றால் அவர்கள் விலங்கு, பேய், நரகர் முதலான பிறப்புகளை எடுத்து உழல்வார்கள்.

“இப்பத்து வகைக் குற்றங்களிலிருந்தும் நீங்கி, பஞ்சசீலம் தாங்கி, தானம் செய்து வாழ்வாராயின் வானவர், மக்கள்,  பிரமர் என்போராய் நல்வினைப் பயனை அனுபவிப்பார்கள்.

“அரசமா தேவியே ! உடனிருக்கும் மங்கையரே ! குற்றமற்ற நல் அறத்தினைப் போற்றுவீர் ! மறுபிறப்புணர்ந்த மணிமேகலையே ! நீ பிற சமய அறங்களை எல்லாம் கற்று வந்த பின் உன் பால் வந்து, இவ் அற நெறிகள் எல்லாவற்றையும், அவற்றின் கூறுகளையும் முற்படக் கூறுவேன்” – எனக் கூறி எழுந்தார்.

தொடர்ந்து மணிமேகலையும் எழுந்தாள். அறவணரின் நல்ல மொழிகளை மறவாது போற்றிச் சிறப்புறுங்கள் என வாழ்த்தினாள். பிறகு, “நான் இனி இங்கிருந்தேனாயின் இளவரசனின் மரணத்திற்குக் காரணமானவள் எனப் பழிப்பர். ஆதலால் நான் இப்போது ஆபுத்திரன் நாட்டை அடைந்து, அதன் பின் மணிபல்லவம் சென்று தொழுது, வஞ்சி மாநகருக்குச் சென்று  மா பத்தினியான கண்ணகிக்காகக் குறைவற்ற நல்லறத்தினை எங்கும் செய்து கொண்டிருப்பேன். என மனதுக்கு இனியவர்களே ! எனக்கு ஏதும் துன்பம் நேருமென்று யாரும் கலங்க வேண்டாம்” என்று அனைவரையும் வணங்கி நின்றாள்.

இங்கு நமக்கொரு கேள்வி எழுகிறது. கண்ணகி அன்று பத்தினித் தெய்வமாக போற்றப்பட்டவள். ஆலயம் எடுத்து வணங்கப்பட்டவள். அவளுக்காக இந்த இளம் பெண் அறம் செய்யப் போகிறேன் எனச் சொல்வதன் பொருள் என்ன? கண்ணகி தனக்கிழைக்கப்பட்ட கொடுமைக்கு வெகுண்டு மதுரை மாநகரையே எரித்து அழித்ததை மணிமேகலையின் பவுத்த மனம் ஏற்கவில்லை எனக் கொண்டு, அதற்குப் பகரமாய் தனது அறச்செயல்களின் பலன்களைக் காணிக்கையாக்குகிறாள் எனப் பொருள் கொள்வதற்கும் இதன் மூலம் வாய்ப்பு ஏற்படுகிறது.

மணிமேகலை அங்கிருந்து புறப்படுகிறாள். காப்பியத்தின் இறுதிக் கட்டத்திற்குள் நாமும் அடியெடுத்து வைக்கிறோம். அந்த மாலைப் பொழுதில் அவளது சம்பாபதி ஆலயம், உலகவறவி , ஒளி சிந்தும் கந்திற்பாவை எல்லாவற்றையும் வணங்கி வலம் வந்தாள். வானில் பறந்து சென்று புண்ணியராசன் ஆளும் சாவகம் அடைந்து நகர் புறத்தே உள்ள ஒரு பூஞ்சோலையுள் இறங்கினாள். இளைப்பாறலுக்குப் பின் அங்கு உறையும் மாதவனான தரும சாவகனைச் சென்று வணங்கினாள். இந்நகரின் பெயர் யாது, ஆளும் மன்னனின் பெயர் என்ன என வினவினாள்.

நாகபுரம் எனப் பதில் வந்தது. பூமிசந்திரனின் மகன் புண்ணியராசன் இந்நாட்டு மன்னன். இவன் பிறந்தது தொடங்கி இங்கே மழை பொய்ப்பதில்லை; மண்ணும் மரங்களும் வளங்களை அள்ளித் தருகின்றன. எவ்வுயிர்க்கும் நோய் நொடிகள் இல்லை என அந்த மாதவன் பதிலுரைத்தான்.

புகார், மணிபல்லவம், சாவகம், வஞ்சி, காஞ்சி என மணிமேகலையின் பிரபஞ்சம் விரிவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தொடர்ந்து நாம் பார்த்து வருவது போல மணிமேகலை விரிக்கும் பவுத்த பிரபஞ்சம் இவ்வாறு தமிழகம், ஈழம், சாவகம் என்பதாக அமைகிறது. புத்தபிரான் அவதரித்த லும்பினி, அவர் ஒளி பெற்ற புத்த கயா ஆகியனகூட ஓரிடத்திலும் சுட்டப்படவில்லை என்பதையும் கவனத்தில் கொள்வோம். சாவகம் என்பது இன்றைய ஜாவா தீவைக் குறிக்கிறது. உலகின் மிகப் பெரிய தீவுகளில் ஒன்றான இது இன்று இந்தோனேசியாவில் அமைந்துள்ளதை அறிவோம்.. இந்தோனேசியாவின் தலைநகரான ஜாகர்த்தா இங்குதான் உள்ளது. இன்று இந்தோனேசியா ஒரு முஸ்லிம் நாடு. கி.மு 800 களில் அங்கு பவுத்த அரசு இருந்தது. முன்னதாக அங்கு இந்து மன்னர்களின் ஆட்சி நடைபெற்றது. சாவகத்தை ஆளும் புண்ணியராசன் இந்திரனின் வழி வந்தோன் என சாத்தனார் பதிவு செய்வதும் கவனிக்கத் தக்கது.

 

(துறவை நோக்கிய மணிமேகலையின் இறுதி நகர்வு தொடங்குகிறது)