மோடி நேருவை வெறுப்பதில் என்ன வியப்பு?

சர்தார் படேலையும் நேருவையும் ஒப்பிட்டு மோடி பேசிய பேச்சில், இரண்டு அம்சங்கள் உள்ளன.

முதலாவது: “நேருவைப் பிரதமராக்கி இருக்கக் கூடாது. படேல் இன்னும் சிறந்த பிரதமராக இருந்திருக்க முடியும்” என்பது.

நேருவின் மீது இந்துத்துவவாதிகள் கடும் காழ்ப்பைக் கக்குவது புதிதல்ல.. ஜனவரி 29, 2004ல் ஆர்.எஸ்.எஸ் தலைவர் சுதர்சன், “காந்தி இரண்டு தவறுகளைச் செய்தார். ஒன்று பாகிஸ்தான் பிரிவினைக்குத் துணை போனது. மற்றது நேருவைப் பிரதமராக்கியது” என்றது நினைவுக்கு வருகிறது.

இந்தியாவை ஒரு இந்து ராஷ்டிரமாக ஆக்காமல், பலரும் சேர்ந்து வாழும் மதச் சார்பற்ற பன்மைச் சமூகமாகக் கட்டமைத்ததில் காந்தி நேரு இருவருக்கும் மிக முக்கியமான பங்கு இருந்ததுதான் அவர்கள் மீது இத்தனை வெறுப்பு. இது காந்தியின் கொலை வரைக்கும் சென்றது.

படேல், நேரு ஆகிய இருவர் மீதும் காந்திக்கு அன்பு இருந்த போதிலும் அவர் நேருவையே பிரதமர் பதவிக்குத் தேர்வு செய்தது குறித்து ஜூடித் பிரவுன் போன்ற வரலாற்றாசிரியர்கள் இரு காரணங்களைச் சொல்வர். ஒன்று நேரு படேலைக் காட்டிலும் பன்னாட்டளவில் அறியப்பட்டவர் மட்டுமல்ல புகழ் பெற்றவருங் கூட. அடுத்து நேரு பலதரப்பட்ட அரசியல் சமூகங்களுடனும் உரையாடும் தகுதி பெற்றவர் என்பது. அதாவது பலதரப்பினரையும் கூடுதலாக உள்ளடக்கும் தன்மை பெற்றவர் நேரு. உலக அளவில் புகழ் பெற்ற, பெரிய குடும்பத்தில் பிறந்த நேரு, தன் திருமண அழைப்பிதழை ஆங்கிலத்திலோ, இந்தியிலோ அச்சிடாமல் சிறுபான்மையினரின் உருது மொழியில் மட்டுமே அச்சிட்டது அவரது இந்த உள்ளடக்கும் தன்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

இந்தியா சுதந்திரமடைந்த ஆறு மாதத்திற்குள் காந்தி இறந்து போகிறார். பின்னாளில் ‘ஜனசங்” ஆக வடிவெடுத்த இன்றைய பா.ஜ.கவின் முக்கிய தலைவர்கள் பலரும் அன்று காங்கிரசிலும் அரசிலும் பங்கேற்றிருந்தனர். அன்றைய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், லால் பகதூர் சாஸ்திரி, நந்தா, சியாமா பிரசாத் முகர்ஜி, வல்லப பந்த் முதலானோர் வலது சாரிச் சார்புடையவர்கள். ஜூடித் பிரவுனின் மொழியில் சொல்வதானால் பல தரப்பட்ட சமூகங்களையும் உள்ளடக்கி உரையாடலை நிகழ்த்துவதில் நேருவுக்கு இணையானவர்கள் அல்ல. சுருங்கச் சொல்வதானால் அமைச்சரவையிலும் கட்சியிலும் காந்தியின் மறைவுக்குப் பின் நேரு ஒரு சிறுபான்மையாக இருந்தார்.

அம்பேத்கருக்கு வாக்களித்தபடி இந்து திருமணச் சட்டம் உட்படப் பலவற்றை அவரால் நிறைவேற்ற இயலாமல் இருந்தது. பாபர் மசூதிக்குள் ராமர் சிலைகள் வைக்கப்பட்டபோது அது பின்னாளில் மிகப் பெரிய ஆபத்தாக உருப் பெறப் போவது குறித்து நண்பர் ஒருவருக்கு நேரு எழுதிய கடிதம் மனதை உருக்கும். “பந்த்ஜி (உ.பி.முதல்வர்) நினைத்தால் அந்தச் சிலைகளை அங்கிருந்து அகற்றிவிட இயலும். செய்ய மாட்டேன் என்கிறாரே…” என்கிற தொனியில் அக் கடிதம் எழுதப்பட்டிருக்கும்.

எனினும் எல்லோரையும் அனுசரித்து, தனது கொள்கையை விடாமல் இந்த நாட்டை மதச் சார்பற்ற திசையில் கொண்டு சென்றது நேருவின் முதல் மகத்தான சாதனை. இந்து திருமணச் சட்ட வரைவில் கையொப்பமிட இயலாது எனச் சொன்ன ராஜேந்திரப் பிரசாத்தின் கருத்தை மீறி அச்சட்டத்தைப் பிரித்துத் தனித் தனியாக தன் காலத்திலேயே நிறைவேற்றவும் செய்தார்.

நேரு உயிருடன் இருந்தவரை ஒவ்வொரு மூன்று மாதத்திற்கும் ஒரு முறை ஒவ்வொரு மாநில முதலமைச்சரும் தத்தம் மாநிலத்தில் எவ்வளவு உயர் பதவிகளை நிரப்பியுள்ளனர், அதில் எவ்வளவு பேர் முஸ்லிம்கள் எனத் தெரிவிப்பதைக் கட்டாயமாக்கி இருந்தார். ம.பி முதல்வர் சுக்லா, முஸ்லிம்களில் சிலர் தவறான போக்கைக் கையாளுகின்றனர் என எழுதியபோது, அப்படி இருந்தால் அதற்குப் பெரும்பான்மைச் சமூகத்தவரான நமக்குத்தான் அதிகப் பொறுப்புள்ளது, சிறுபான்மைச் சமூகத்தின் நம்பிக்கையைப் பெரும்பான்மைச் சமூகம் பெற வேண்டும் எனப் பதில் எழுதினார்.

ஒரு திறந்த பன்மைச் சமூகம் என்பதற்கு அப்பால் இங்கு ஜனநாயக விழுமியங்கள் வேர் கொள்வதிலும் நேருவின் பங்கு முக்கியமானது. மொழி வாரி மாநிலம் அமைத்தது, இந்தி பேசாத மக்கள் விரும்பும்வரை இங்கு ஆங்கிலம் நீடிக்கும் என உறுதி மொழி அளித்தது, இருநூறாண்டு கால காலனிய ஆட்சியில் சீரழிந்திருந்த தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவது முதலான அம்சங்களிலும் நேருவின் தொலை நோக்குப் பார்வைகள் குறிப்பிடத்தக்கதாக இருந்தன. அரசுத் திட்டமிடலின் கீழ் இயங்கும் தொழிற் துறையின் மூலமாகத்தான் அடித்தள மக்கள் பயன்பெறுவர் என்கிற வகையில் அவர் சோவியத் ரஷ்யாவின் திட்டமிட்ட பொருளாதாரக் கொள்கைகளை நமது சூழலுக்குத் தக வடிவமைத்தார்.

கார்பொரேட்களின் வேட்பாளரான மோடி போன்றோரால் திட்டமிட்ட பொருளாதாரத்தையும் மொழிவாரி மாநிலங்களையும் நடைமுறைப் படுத்திய நேருவை எப்படி ஏற்றுக் கொள்ள இயலும்?

“குறித்துக் கொள்ளுங்கள் இந்தியாவிற்கு ஆபத்து கம்யூனிஸ்டுளால் வரப் போவதில்லை. வலது சாரி இந்து வகுப்புவாதத்தால்தான் அது வரப் போகிறது….. பெரும்பான்மை மதவாதம் சிறுபான்மை மதவாதத்தைக் காட்டுலும் ஆபத்தானது..” என்றெல்லாம் சொன்ன நேருவை மோடிகள் எதிர்ப்பதில் என்ன வியப்பு?

மோடிபேச்சின் இரண்டாவது அம்சம் படேலை ஒரு இந்துத்துவவாதியாகச் சுவீகரித்துக் கொள்வது.

படேலை நேரு அளவிற்கு பன்மைத் தன்மையைப் போற்றுபவராக ஏற்க இயலாதபோதும் அவரை இந்துத்துவச் சிமிழுக்குள் அடைத்துவிட முடியாது.

ஆர்.எஸ்.எஸ் மீது படேலுக்கு ஒரு அனுதாபம் இருந்தபோதும், அவ்வமைப்பை நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும் என்கிற நேருவின் கருத்தை அவர் ஏற்காத போதும், இந்துத்துவ சக்திகளின் வழிமுறைகளை அவர் கடுமையாகக் கண்டித்தார். குறிப்பாக காந்தி கொலையை அவரால் சகித்துக் கொள்ள இயலவில்லை. இது தொடர்பாக இந்துத்துவவாதிகள் படேலிடம் இரக்கத்தை எதிர்பார்த்தபோது அவரது பதில்கள் இப்படி அமைந்தன:

“(இந்துத்துவவாதிகளின்) பேச்சுக்கள் முழுமையும் வகுப்புவாத விஷம் தோய்ந்தவையாக உள்ளன. இந்துக்களை உற்சாகப் படுத்துவதற்காகவும் அமைப்பாக்குவதற்காகவும் இப்படி விஷத்தைப் பரப்ப வேண்டியதில்லை. இதன் இறுதி விளைவாக மகாத்மா காந்தியின் விலை மதிப்பற்ற உயிரை இந்த நாடு இழக்க வேண்டியதாயிற்று….. காந்திஜியின் மரணத்தை ஆர்.எஸ்.எஸ் காரர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடியுள்ளனர்….” – இவை படேல் ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வாக்கருக்கு எழுதிய கடித வாசகங்கள் (செப் 11, 1948).

“காந்தி கொலையில் ஆர்.எஸ்.எஸ், இந்து மகா சபை ஆகியவற்றின் பங்கு குறித்து………எங்களுக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி இந்த இரு அமைப்புகளின் குறிப்பாக ஆர்.எஸ்.எஸ்சின் செயல்பாடுகள் உருவாக்கியிருந்த சூழலே இந்த அதிர்ச்சியளிக்கும் கொலைக்குக் காரணமாக இருந்துள்ளது…” – இவை படேல் இந்து மகா சபைத் தலைவர்களில் ஒருவரானா ஷியாமா பிரசாத் முகர்ஜிக்கு எழுதிய கடித வாசகங்கள் (ஜூலை 18, 1948).

டெல்லி தேசிய ஆவணக் காப்பகத்தில் உள்ள சர்தார் படேல் தொடர்பான நுண்படத் தொகுப்பின் மூன்றாம் சுருளில் ஆர்,எஸ்,எஸ் குறித்து அன்று காங்கிரஸ் கட்சி சுற்றுக்கு விட்ட அறிக்கை உள்ளது. அதில், ”பாசிசத்திற்குக் காரணமாகக் கூடிய இரகசிய வன்முறையை ஆர்.எஸ்.எஸ் கைக்கொண்டுள்ளது” என இவர்களைப் பாசிஸ்டுகளாக வரையறுத்திருப்பது குறிப்பிடத் தக்கது.

தன்னைச் சின்ன சர்தார் என அழைத்துக் கொள்ளும் மோடிக்கு, படேலின் இறுதிச் சடங்கில் நேரு கலந்துகொண்ட செய்தி தெரியாதது போலவே இவையும் தெரியாது போலும்.

குஜராத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்ட கதை அல்லது நரேந்திர மோடியின் இந்து ராஷ்டிரம்

அகமதாபாத்திலிருந்து செயல்படும் ‘நவ்சர்ஜன்’ எனும் தொண்டு நிறுவனம், ‘நீதிக்கும் மனித உரிமைகளுக்குமான ராபர்ட் எஃப் கென்னடி மையம்’ உடன் இணைந்து “தீண்டாமையைப் புரிந்துகொள்ளல்” என்றொரு ஆய்வை குஜராத்தில் மேற்கொண்டது. சுமார் 1600 கிராமங்களை முறைப்படி ஆய்வு செய்து அது அளித்த அறிக்கை ஏராளமான தரவுகள் மற்றும் பகுப்பாய்வுகளுடன் 2009ல் வெளி வந்தது.

இந்த அறிக்கை அளிக்கும் முடிவைச் சுருக்கமாக இப்படிச் சொல்லலாம் : இன்னும் குஜராத் கிராமங்களில் 98 சதம் தலித்கள் தீண்டாமைக் கொடுமையை அநுபவிக்கின்றனர் என்பதுதான். ஆலய நுழைவு மறுக்கப்படுதல், பள்ளிகளில் தலித் குழந்தைகள் மீது தீண்டாமை கடைபிடிக்கப்படுதல், தேநீர்க் கடைகளில் இரட்டை கிளாஸ் முறை முதலியன நடைமுறையில் உள்ளதை விரிவான ஆதாரங்களுடன் நவ்சர்ஜன் வெளியிட்டிருந்தது.

இது குறித்து உள்ளூர் மற்றும் தேசிய நாளிதழ்கள் விரிவாக செய்திகள் வெளியிட்டிருந்தன. ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் தொடர்ந்து மூன்று நாட்கள் வந்த செய்தித் தலைப்புகள் வருமாறு:

1. “குஜராத்தில் தலித்கள் கோவில்களுக்குள் நுழைய முடியாது,” – டிசம்பர் 7, 2009
2. “அதிரும் குஜராத்?” (Vibrant Gujarat) : 98 சத தலித்கள் மத்தியில் இரட்டை கிளாஸ் முறை” – டிசம்பர் 8, 2009. 3. “தலித் குழந்தைகள் மதிய உணவுத் திட்டத்தில் படுகிறஅவமானங்கள்” -டிச 9, 2009. டைம்ஸ் ஆப் இந்தியா அப்படி ஒன்றும் பா.ஜ.க எதிர்ப்பு நாளிதழல்ல என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத்தி மொழியிலும் இவ் அறிக்கை வெளியிடப்பட்டது. ‘அதிரும் குஜராத்’ தின் லட்சணம் இதுதானா என்கிற கேள்வியும் பரவலாக எழும்பியது.

ஒரு பொறுப்புள்ள அரசு என்ன செய்திருக்க வேண்டும்? இந்த அறிக்கையை அப்படியே ஏற்காவிட்டாலும் ஒரு குழுவை அமைத்து மேலும் ஆய்வு செய்து இந்தக் குறைபாடுகளை ஏற்றுத் தீர்க்க முயற்சித்திருக்க வேண்டும்.

ஆனால் மோடி என்ன செய்தார் தெரியுமா?

அப்படியான நிலை இல்லை என ஒரு முடிவைச் சொல்லுமாறு அவர் ஒரு குழுவை அமைத்தார். ‘சுற்றுச் சூழல் திட்டமிடல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக் கழக மையம்’ (CEPT) எனும் நிறுவனத்தின் பேரா. ஆர்.பார்த்தசாரதி என்பவரின் தலைமையில் அப்பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியர் குழுவை நியமித்து, “சம வாய்ப்புகளில் சாதி வேறுபாட்டின் தாக்கம் : குஜராத் குறித்த ஓர் ஆய்வு” என்கிற பெயரில் ஒரு அறிக்கையை அளிக்கச் செய்தது.

இந்த ஆய்வு எத்தனை அபத்தமானது என்பதை டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் மூத்த பத்திரிக்கையாளர் ராஜீவ் ஷா தனது ‘True lies’ எனும் ப்ளாக்கில் அம்பலப் படுத்தியுள்ளார்.

“குஜராத்தில் சாதி வேறுபாடு எதார்த்ததில் இல்லை. அது பார்க்கிறவர்களின் பார்வையில்தான் உள்ளது” -(caste discrimination is a matter of perceptions) என்பதுதான் இந்த அறிக்கை சுருக்கமாகச் சொல்லும் செய்தி.

1589 கிராமங்களை ஆய்வு செய்து நவ்சர்ஜன் அளித்த 300 பக்க அறிக்கையை “முறையாக அரிசீலனை செய்வதற்குப் பதிலாக. குஜராத்தில் நிலவும் கொடிய தீண்டாமையை நியாயப்படுத்தும் செயலையே” மோடியின் பார்த்தசாரதி அறிக்கை செய்துள்ளது என்கிறார் ராஜிவ் ஷா. வெறும் ஐந்து கிராமங்களுக்கு மட்டுமே சென்று, அங்கு மேற்கொள்ளும் அரசு நலத் திட்டங்களைக் கூறி தீண்டாமைக் கொடுமை எல்லாம் இங்கில்லை என அறிவித்தது இந்த அறிக்கை.

“தலித்கள் மட்டும் (கிராமத் திருவிழாக்களின்போது அவர்களே பாத்திரங்களைக் கொண்டு வந்து சோற்றை வாங்கிச் செல்லச் சொல்வதும், அவர்களைக் கடைசியாகச் சாப்பிடச் சொல்வதையும் ஏன் தீண்டாமை எனப் பார்க்க வேண்டும். சாதி இந்துக்களுடன் சண்டை வேண்டாம் என்பதற்காக தலித் பெரியவர்களே இளைஞர்களிடம் நவராத்திரி முதலான கிராமத் திருவிழாக்களுக்குப் போக வேண்டாம் எனச் சொல்கிறபோது அவர்கள் திருவிழாக்களில் பங்கேற்கக் கூடாது எனச் சொல்வதில் அர்த்தமென்ன? அதை இளைஞர்களும் கேட்டுக் கொள்கிறார்கள். அப்படியும் போகிற தலித் இளைஞர்கள் அந்தத் திருவிழாவில் பங்கேற்காதபோதும் பார்க்க அனுமதிக்கப்படுகிறார்களே” – என்கிற ரீதியில் தீண்டாமை ஒதுக்கல்களை நியாயப்படுத்தி குஜராத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்டதாக அறிவித்து, “பார்க்கிற பார்வையில்தான் தீண்டாமை இருக்கிறது. தீண்டாமை என்று இதையெல்லாம் சொன்னால் அப்புறம் எல்லாம் தீண்டாமைதான்” என்கிற ரீதியில் முடித்துக் கொண்டது பார்த்தசாரதி அறிக்கை.

பார்த்தசாரதி அறிக்கை தவிர அப்போதைய சமூகநீதித் துறை அமைச்சர் ஃபகிர்பாய் வகேலா தலைமையில் ஒரு அரசியல் சட்டக் ககுழுவையும் அமைத்து மோடி அரசு தனக்குத் தானே க்ளீன் சிட்’டும் கொடுத்துக் கொண்டது. தங்கள் கிராமத்தில் தீண்டாமை இல்லை என தலித்களிடம் வாக்குமூலம் அளிக்கச் சொல்லி எழுதி வாங்குமாறு அரசு அதிகாரிகள் பணிக்கப்பட்டனர். அந்தக் காகிதங்களை விரித்துக் காட்டி, “பாருங்கள் குஜராத் அதிருது… தீண்டாமையை நாங்க ஒழிச்சிட்டோம்” எனப் புன்னகைக்கிறார் நர மோடி.

குஜராத் அரசின் இந்த அணுகல்முறையை புகழ் பெற்ற சமூகவியல் அறிஞர் கன்ஷியாம் ஷா கண்டித்துள்ளது குறிப்பிடத் தக்கது.

குஜராத்தில் தீண்டாமை ஒழிக்கப்பட்ட புராணம் இதுதான்.

தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இதுதான் நிலைமை என்ற போதிலும் குஜராத் குறித்த இந்தச் செய்திகளில் நாம் சிலவற்றைக் கவனம் கொள்ள வேண்டியுள்ளது. அவை:

1. 98 சத தலித்கள் தீண்டாமைக் கொடுமைக்கு ஆளாகிறார்கள் என்பது மிக அதிகம். இங்குள்ள சில அமைப்புகள் ஏதோ திராவிடக் கட்சிகளின் ஆட்சியில்தான் இந்த நிலை என்பதாகப் பேசி வருவது எத்தனை அபத்தம் என்பதற்கு இது ஒரு சான்று

2. தலித்களின் நிலை இவ்வாறு இருப்பதற்கு ஏதோ குஜராத் அரசின் செயல்பாட்டுக்.குறைவு அல்லது திறமையின்மை மட்டும் காரணமல்ல. குஜராத் அரசின், குறிப்பாக நரேந்திர மோடியின் சாதி மற்றும் தீண்டாமை குறித்த வருணாசிரம அணுகல் முறையும் இதன் அடிப்படையாக உள்ளது என்பதற்கு ஒரு சான்று வருமாறு:

குஜராத் மாநில ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மத்தியில் பல்வேறு சந்தர்ப்பங்களில் நரேந்திர மோடி ஆற்றிய உரைகளைத் தொகுத்து 2007ல் ஒரு நூலாக வெளியிடப்பட்டது குஜராத் அரசு.. நூற் தலைப்பு : ‘கர்ம் யோக்’, அதாவது கர்ம யோகம். ‘குஜராத் மாநில பெட்ரோலிய கார்ப்பொரேஷன்’ எனும் பொதுத்துறை நிறுவனம் இந்நூலின் 5000 பிரதிகளை அச்சிடும் செலவை ஏற்றுக் கொண்டது.

அந்த நூலில் கண்டுள்ள அவரது பேச்சுக்களில் ‘சாம்பிளுக்கு’ ஒன்று :

தலையில் மலம் சுமந்து அகற்றும் சஃபாய் கர்ம்தார் (துப்புரவுத் தொழிலாளர்) குறித்து மோடி இப்படிச் சொல்கிறார்:

“அவர்கள் வயிற்றுப் பிழைப்பிற்காக இந்தத் தொழிலைச் செய்கிறார்கள் என நான் நினைக்கவில்லை. அப்படி இருந்தால் தலைமுறை தலைமுறையாக அவர்கள் இந்த மாதிரித் தொழிலைச் செய்து வருவார்களா? ஏதோ ஒரு காலகட்டத்தில், அவர்களின் இந்தப் பணி (1) ஒட்டு மொத்தச் சமூகம் மற்றும் இறைவனின் மகிழ்ச்சிக்காகாகச் செய்யப்படுகிறது என்பதையும் (2) கடவுளால் அவர்களுக்கு அருளப்பட்ட இந்தப் பணியை அவர்கள் செய்தே ஆக வேண்டும் என்பதையும் (3) இந்தத் துப்புரவுப் பணி ஒரு ஆன்மீக அனுபவமாகக் காலம் காலமாகத் தொடரப்பட வேண்டும் என்பதையும் ஒரு புத்தொளி அனுபவமாக அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். தலைமுறை தலைமுறையாக அவர்கள் இந்த அனுபவத்தை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். இவர்களின் முன்னோர்கள் வேறு வேலைகளுக்கு வாய்ப்பில்லாமல் இந்தப் பணியைத் தேர்வு செய்தார்கள் என நம்ப இயலவில்லை” (கர்ம்யோக், பக். 48,49).

தமிழகம் உட்பட நாடெங்கிலும் இதற்குக் கடுமையாக எதிர்ப்புகள் எழுந்தவுடன் சுதாரித்துக் கொண்ட நரேந்திர மோட, அந்த 5000 நூற்பிரதிகளையும் வெளியில் விடாமல் அமுக்கிக் கொண்டார்.

ஆனால் மோடி தன் இந்தக் கொடூரமான ஆபாசக் கருத்துக்களை எந்நாளும் அமுக்கிக் கொண்டதில்லை என்பது இரண்டாண்டுகளுக்குப் பின் அவர் 9000 சஃபாய் கரம்சாரிகள் கூடியிருந்த ஒரு மாநாட்டில் பேசும்போது வெளிப்பட்டது. “மலம் அள்ளும் இந்தத் தொழில் பூசை செய்யும் தொழிலுக்குச் சமம்” என அம்மாநாட்டில் நர மோடி பேசினார்.

“பூஜை புனஸ்காரங்களுக்கு முன் கோவில் குருக்கள்கள் ஆலயத்தைத் தூய்மை செய்கின்றனர். நீங்களும் ஆலயப் பூசாரிப் பார்ப்பனர்களும் ஒரே தொழிலைத்தான் செய்கின்றீர்கள்..”

எப்படி இருக்கிறது கதை?

குஜராத் முழுவதும் இந்துத்துவ அமைப்புகள் “நீங்கள் இந்து ராஷ்டிரத்தின் (இந்தப்) பகுதிக்குள் நுழைகிறீர்கள்” என ஆயிரக் கணக்கில் சட்ட விரோதமான பலகைகளை நட்டுள்ளனர். இந்த இந்து ராஷ்டிரத்தின் இன்றைய நிலையைப் பார்க்கும்போது அன்று அண்ணல் அம்பேத்கர் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது, அண்னல் சொன்னார்:

“இந்து ராஷ்டிரம் என்பது நடைமுறைக்கு வந்தால் அது இந்த நாட்டுக்குப் பெருங் கொடுமையாக (greatest menace) அமையும். இந்துக்கள் என்ன சொன்ன போதிலும், இந்துயிசம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றிற்குக் கேடாக அமையும் (Hinduism is a danger to independence, equality and brotherhood) என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அது இவ்வாறு ஜனநாயகத்தின் எதிரியாக உள்ளது. இந்து ராஷ்டிரம் எதார்த்தமாவதைத் தடுக்க நாம் எல்லா முயற்சிகளிலும் இறங்க வேண்டும்” (பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை, பக்.358).

கொலைகார ஐ.பி.எஸ் வன்சாராவின் பதவி விலகலும் ஆணைப் பொறுப்பும்

போலி என்கவுன்டர் கொலைகளுக்காக வழக்குகளை எதிர்கொண்டு சிறைகளில் கிடக்கும் சுமார் 32 குஜராத் போலீஸ் உயரதிகாரிகளின் தலைவனும் ஷொராபுதீன் ஷேக், துளசிராம் பிரஜாபதி, இர்ஷத் ஜெஹான் முதலானவர்களின் போலி என்கவுன்டர் கொலைகளை நிகழ்த்தியவனுமான டி.ஐ.ஜி வன்சாரா, விரக்தியின் உச்சத்தில் தன் பதவியை ராஜினாமா செய்துள்ளது இன்று பத்திரிக்கைகளில் தலைப்புச் செய்தியாகி உள்ளது.

இந்த விரக்தி நிலையை எட்டுவதற்கு முன் பல தந்திரங்களைப் பயன்படுத்தித் தப்ப முயன்றவன் வன்சாரா, இது குறித்து நான் அவ்வபோது எழுதியுள்ளேன். காவல் நீடிப்பு மற்றும் விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு அழைத்து வரும்போது தன் சாதிக்காரர்களைத் திரட்டி நீதிமன்ற வாசலில் நிறுத்தி, “வருது வருது யாரு பாரு, குஜராத்தின் சிங்கம் வருது” என முழக்கமிட்டுத் தன் கைதை அரசியலாக்குவது ஒரு தந்திரம். மற்றது தேசத் துரோகிகளால் இந்தத் தேசத்திற்கு வந்த ஆபத்தைப் போக்கிய வீர தீர தேசபக்தனாகத் தன்னை முன்னிறுத்தி வீர வசனங்களை நீதிமன்றங்களிலும், பத்திரிக்கையாளர்கள் முன்னும் கக்குவது. தெரியாமலா சொன்னார் தந்தை பெரியார், ஒருமுறை இரு முறை அல்ல. திருப்பித் திருப்பித் திருப்பிச் சொன்னாரே, “அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் தேசபக்தி” என்று. வன்சாரா, மோடி வகையறாக்கள் எல்லாம் தங்களைத் தேசபக்தர்கள் எனச் சொல்லும் போதுதான் பெரியார் சொன்ன இன்னொரு வாசகத்தின் கருத்தும் புரிகிறது. அது: “நான் தேசபக்தன் அல்லன், நான் தேசத் துரோகி என அழைக்கப்படுவதில் பெருமை கொள்பவன்”

நிற்க. வன்சாரா தன் ராஜினாமாக் கடிதத்தில் கூறியுள்ள கீழ்க்கண்ட வாசகங்கள் முக்கியமானவை:

“போலி என்கவுன்டர் எனக் குற்றம் சாட்டப்பட்டு பல்வேறு என்கவுன்டர் கொலைகளுக்காக என்னையும் என் அதிகாரிகளையும் குஜராத் சி.ஐ.டியும், மத்திய சி.பி.ஐயும் கைது செய்துள்ளன. இக் குற்றச்சாட்டு உண்மையானால், துளசிராம், ஷொராபுதீன், சாதிக் ஜமால், இஷ்ரத் ஜெஹான் ஆகிய நான்கு என்கவுன்டர் வழக்குகளை விசாரிக்கும் சி.பி.ஐ புலனாய்வு அதிகாரிகள், (இதற்கான) கொள்கை வகுத்தவர்களையும் கைது செய்ய வேண்டும். களத்தில் நின்று செயல்பட்ட அதிகாரிகளாகிய நாங்கள் அரசின் பிரக்ஞை பூர்வமான கொள்கைகளை வெறுமனே நிறைவேற்றியவர்கள் மட்டுமே. அதுவே (அதாவது அரசே) நெருக்கமாக நின்று எங்களின் (இந்த) நடவடிக்கைகளை உற்சாகமூட்டி, மேற்பார்வையிட்டு வழி நடத்தியது. இந்த தர்க்கத்தின்படி, இந்த அரசு (அதாவது மோடி அரசு) இன்று இருக்க வேண்டிய இடம் காந்தி நகர் அல்ல. மாறாக அது இருக்க வேண்டிய இடம் நவி மும்பையின் டலோஜா மத்திய சிறை அல்லது அகமதாபாத்திலுள்ள சபர்மதி மத்திய சிறைதான் என நான் உறுதியாகக் கருதுகிறேன்..”

கடுமையான வாசகங்கள்தான். விரக்தியின் உச்சம் வன்சாராவை உண்மைகளைக் கக்க வைத்துள்ளது. பத்தொனபது வயதுக் கல்லூரி மாணவியைக் கடத்திச் சென்று சட்ட விரோதக் காவலில் வைத்து அவளோடு இன்னும் மூவரையும் ஒரு காரில் அமர்த்திச் சுட்டுக் கொன்று கைகளில் ஆயுதங்களைத் திணித்துப் படம் எடுத்துப் பத்திரிக்கைகளுக்கு அளித்த கும்பலின் தலைவனுக்குக் கடைசியாக ஞானம் கிட்டியுள்ளது எனச் சொல்லலாமா?

தெரியவில்லை. அது பிரச்சினை இல்லை. தாங்கள் குற்றவாளி என்றால் அமித் ஷா, மோடி ஆகியோரும் குற்றவாளிகள்தன் எனச் சொல்ல வேண்டிய தருணம் வான்சாராவுக்கு வந்துவிட்டது என்பது வெளிப்படை. “இந்த அரசின் வழிகாட்டலில்தான் இவ்வளவும் செய்தோம்” எனச் சொல்வதற்கு வேறென்ன பொருள்?

அது கிடக்கட்டும். இத்தகைய நிலைமை இனி யாருக்கும் வரக்கூடும் என்பதை நம் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டுகள் மட்டுமல்ல, எல்லாக் காவல்துறையினரும் உணர வேண்டும்.

இந்த நாட்டு ஜனநாயகத்திலும், நீதி வழங்கு முறையிலும் ஆயிரம் குறைபாடுகள் இருப்பது உண்மைதான், ஆனால் நூறில் ஒன்றிலாவது இப்படி ஆகும் அளவிற்கு இந்த நாட்டில் இன்னும் ஜனநாயகம் ஒட்டிக் கொண்டுள்ளது என்பது குறித்து இவர்கள் எச்சரிக்கை கொள்ள வேண்டும்.

இந்த நாட்டு மனித உரிமை அமைப்புகள் ரொம்ப ரொம்பப் பலவீனமானவைதான். பெரிய மக்கள் ஆதரவு அற்றவைதான். பொதுப் புத்தி அவர்களுக்கு எதிராக உள்ளது என்பதும் உண்மைதான். ஆனால் அர்ப்பணிப்பு மிக்க மனித உரிமைப் போராளிகள், பல்வேறு இன்னல்களுக்கும் இடையில் தொடர்ச்சியாக நடத்தும் போராட்டங்கள் முற்றிலும் பயனற்றவையாகி விடாது என்பதை இவர்கள் மனதில் பதித்துக் கொள்ள வேண்டும்.

இந்த நாட்டு மக்கள் தம் இரத்த சொந்தங்கள் அரச வன்முறைகளால் சித்திரவதைகளுக்கும் வன்கொலைகளுக்கும் உள்ளாக்கப்படுவதைக் காலப்போக்கில் மறந்து தத்தம் வாழ்வையாவது காப்பாற்றிக் கொள்வோம் என்கிற நிலையில் வாழ்ந்து மடிபவர்களாக இருக்கலாம்தான். ஆனால் பல்வேறு சிரமங்கள், செலவினங்கள், மிரட்டல்கள் ஆகியவற்றுக்கும் மத்தியில் நீதிக்காகக் கடைசி வரை போராடுகிறவர்களும் இங்கு இருக்கவே செய்கிறார்கள் என்பதை இவர்கள் நெஞ்சில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

மோடி ஒன்றும் வன்சாரா கும்பல் கொலையாளிகள் என்பதால் அவர்களைக் கைவிட்டு விட்டதாகக் குழந்தைகள் கூட நம்பமாட்டார்கள். அவர் இந்தக் கொலையாளிகளைக் காப்பாற்ற மனதார நினைத்தும், அவர்களுக்காக இரத்தக் கண்னீர் சிந்தியும், அதைத் தவிர வேறெதையும் செய்ய இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் என்பதையும், இந்த நிலை யாருக்கும் வரலாம் என்பதையும் என்கவுன்டர் கொலையாளிகள் மனங்கொள்ள வேண்டும்.

இறுதியில் ஒன்றை நினைவுபடுத்திக் கொள்வோம். கடந்த பத்தாண்டுகளாக நிலுவையில் இருக்கும் ஒன்று “மதக் கலவரத் தடுப்புச் சட்ட வரைவு”. இரு முறை முன்வைக்கப்பட்டு, விமர்சனங்களின் அடிப்படையில் திருத்தப்பட்டு, இந்துத்துவ அமைப்புகளின் கடும் எதிர்ப்பாலும், மென்மை இந்துத்துவக் கட்சியான காங்கிரசின் நேர்மை இன்மையாலும் முடக்கி வைக்கப்பட்டுள்ளது இந்த வரைவு. இதில் இன்னும் கூடச் சில குறைபாடுகள் இருந்தபோதும் முதன்முதலாக ஓரு முன்மாதிரியான பாராட்டுக்குரிய அம்சத்தை உள்ளடக்கியுள்ளது இந்த வரைவு.

அதுதான் command responsibility எனப்படும் ஆணைப் பொறுப்பு. மதக் கலவரங்கள் முதலானவற்றில் இரு கொடுமைகள் வழக்கமாகச் சாத்தியமாகின்றன. ஒன்று மேலிடத்து வாய்மொழி ஆணை எனச் சொல்லி வன்முறைகளைத் தடுக்காமல் உயரதிகாரிகள் தம் பொறுப்பிலிருந்து நழுவுவது. மற்றது அரசின் கொள்கை நடவடிக்கைளின் வழிகாட்டலில் அதிகாரிகள் வன்கொலை உட்படக் குற்றங்களைப் புரிவது. இரண்டிற்கும் கண்முன் எடுத்துக்காட்டாக இதோ மோடியின் குஜராத் நம்முன்.

ஒரு வன்முறை நிகழும்போது மேலிருந்து ஆணை வந்ததெனச் சொல்லி ஒரு அதிகாரி வாளாவிருக்க இயலாது. அதேபோல அந்த வன்முறைக்கு எதிரான நடவடிக்கைக்குக் களத்தில் உள்ள அதிகாரி மட்டுமல்ல அந்தத் துறை அமைச்சர் வரை, ஏன் குஜராத் 2002 போன்ற நிகழ்வுகளில் முதலமைச்சர் வரை ஆணைப் பொறுப்பு உண்டு.

இந்த அளவிற்கு மதக் கலவரத் தடுப்புச் சட்டம் ஆணைப் பொறுப்பை விரிவாக்கவில்லை ஆயினும், கொள்கை அளவில் அது ஏற்றுக்கொள்ளப்பட்டு சட்ட வரைவுக்குள் கொண்டும் வரப்பட்டுள்ளது.

அதுபோலவே இர்ஷத் ஜெஹான் போன்ற “அரசின் கொள்கை வழிகாட்டலில்” நடை பெறும் போலி என்கவுன்டர் கொலைகள் போன்றவற்றிலும் களத்தில் உள்ள அதிகாரிகளோடு, அமைச்சர், முதலமைச்சர் உள்ளிட்ட அரசின் கொள்கை வகுப்பாளர்களும் ஆணைப் பொறுப்பேற்க வேண்டும். அதே நேரத்தில் அரசின் கொள்கை வழிகாட்டலில் நாங்கள் கொலை செய்தோம் என ஒரு என்கவுன்டர் கொலையாளி தப்பித்துக் கொள்ளலாகாது. அவருக்கும் சட்டப்படிச் செயல்பட வேண்டிய ஆணைப் பொறுப்பு உள்ளது.

காவல்துறைச் சீர்திருத்தம் (Police Reform) என்பது பலமுறை பல்வேறு ஆணையங்களால் சுட்டிக் காட்டப்பட்டும் அது இங்கு இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை. ஆணைப் பொறுப்பை உள்ளடக்கியக் காவல்துறைச் சீர்திருத்தமும், மதக் கலவரத் தடுப்புச் சட்ட நிறைவேற்றமும் இன்றைய உடனடித் தேவை.

என்கவுன்டர் கொலைகளைத் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய மேலும் சில உடனடிச் சீர்திருத்தங்கள்:

1.காவல்துறை மற்றும் ஆயுதப்படைகள் மீதான என்கவுன்டர் கொலைக் குற்றச்சாட்டுகளை விசாரித்து விரைவாக நீதி வழங்கும் ஒரு தனி அமைப்பு (special agency) உருவாக்கப்படவேண்டும்.

2.குஜராத் என்கவுன்டர் கொலை விசாரணைகளைப் பொருத்தமட்டில் அது இன்று IB, CBI, மாநில CID ஆகிய உளவு மற்றும் புலனாய்வு நிறுவனங்களுக்கிடையிலான மோதலாகவும் வெளிப்பட்டுள்ளது. உலகிலுள்ள ஜனநாயக நாடுகள் அனைத்திலும் உளவு நிறுவனங்கள் அனைத்தும் நாடாளுமன்ற / சட்டமன்ற மேற்பார்வைகளுக்கு (Over View) உட்பட்டே செயல்படுகின்றன. அரசியல் சட்ட அடிப்படையிலான ஒரு ஜனநாயகக் குடியரசு என்கிற வகையில் இந்திய உளவு நிறுவனங்களும் நாடாளுமன்ற / சட்டமன்ற மேற்பார்வைக்குட்பட்டதாக மாற்றப்பட வேண்டும்.

2.ஜனநாயக அமைப்பில் உளவு நிறுவனங்களும் (intelligence agencies), புலனாய்வு நிறுவனங்களும் (investigative agencies) தனித்தனியாக இயங்க வேண்டும். உளவு நிறுவனங்கள் பல நேரங்களில் சட்டத்திற்கு அப்பாற்பட்ட நெறிமுறைககளைக் கையாள்கின்றன (Clandestine organisations). இவை சேகரிக்கும் உளவுகளுக்கு (intelligence) சாட்சிய மதிப்பு (evidential value) கிடையாது. புலனாய்வு நிறுவனமே புலனாய்ந்து, வழக்கைப் பதிவு செய்து, நீதிமன்றத்தில், உரிய சாட்சியங்களின் அடிப்படையில் குற்றத்தை நிறுவ வேண்டும். இந்தியாவில் மட்டுமே இந்த இரண்டும் இணைக்கப்பட்டு, அதாவது உளவு நிறுவனமே, புலனாய்வு நிறுவனமாகவும் செயல்படும் நிலை உள்ளது. இது பல மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாகிறது. எ.கா: தமிழ்நாட்டில் செயல்படும் ‘கியூ’ பிரிவு போலீஸ். இந்த போலீசுக்கு சீருடை, பெயர் தாங்கிய காவல் நிலையம், தொலை பேசி எண் எதுவும் கிடையாது, தற்போது இந்திய அளவில் உருவாக்கப்பட உள்ள ‘தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையம்” (NCTC) என்பதும் இப்படியான ஒன்றுதான். இது முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.

4. பாட்லா ஹவுஸ் (டெல்லி) என்கவுன்டர் கொலைகளைச் சுதந்திரமாக விசாரித்து அறிக்கை அளிக்குமாறு டெல்லி உயர்நீதி மன்றம், தேசிய மனித உரிமை ஆணையத்திற்கு (NHRC) உத்தரவிட்டபோது, அது என்கவுன்டர் செய்த காவல் துறையின் அறிக்கையை அப்படியே விழுங்கிக் கக்கியது. காவல்துறைக்கு clean chit கொடுத்தது. தேசிய மனித உரிமை ஆணைய அமைப்பு விதிகளின்படி தலைவரைத் தவிர்த்து ஒரு உறுப்பினர் முன்னாள் மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாகவும், மற்றொருவர் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் இருக்க வேண்டும். மேலும் இரு உறுப்பினர்கள் மனித உரிமைகள் தொடர்பான விரிந்த அறிவும் ஞானமும் உடையவர்களாக இருக்க வேண்டும். இது நாள்வரை இவ்விரு உறுப்பினர்களும் CBI, NIA முதலான புலனாய்வு நிறுவனங்களின் முன்னாள் தலைவர்களிலிருந்தே நியமிக்கப்பட்டனர். இந்தியாவின் மிகப் பெரிய மனித உரிமை மீறல் நிறுவனங்களாக உள்ள காவல்துறைகள் சார்ந்த அதிகாரிகளுக்கு மனித உரிமை ஆணையத்தில் இடமிருக்கக் கூடாது. மாறாக இவ்விரு உறுப்பினர்களும் தகுதிமிக்க மனித உரிமைப் போராளிகளிலிருந்து நியமிக்கப்பட வேண்டும்.

ஆனால் இவை எல்லாவற்றையும்விட நமக்குப் பாதுகாப்பு நமது விழிப்புணர்வு மட்டுமே.

இளம் பெண்ணைத் தொடர்ந்த மோடி

நரேந்திர மோடி தன் மனைவியை விலக்கி வைத்திருப்பது, அல்லது ஒரு இளம் பெண்ணுடன் நெருக்கமாக இருக்க முயல்வது முதலான அவரது தனிப்பட்ட வாழ்வைப் பற்றிப் பேசுவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. ஒவ்வொருவருக்கும் ஒரு அந்தரங்கம் உண்டு. அதில் மற்றவர்கள் பிரவேசிக்கத் தேவையில்லை என்பது உண்மையே, ஆனால், ஒருவர் இன்னொரு இளம் பெண்னின் அந்தரங்கத்தில், அவரறியாமல் சட்ட விரோதமாகத் தலையிடுவது என்பதை யாரும் கண்டிக்காமலிருக்க இயலாது. அதுவும் அந்த நபர் ஒரு மாநில முதலமைச்சராகவும், பிரதமர் பதவிக்கான வேட்பாளராகவும் இருந்து, தனது அதிகாரத்தின் கீழ் உள்ள அரசு எந்திரத்தை இதற்காகப் பயன்படுத்தியுள்ளதை அறியும்போது ஜனநாயக ஆளுகையில் நம்பிக்கை உடைய யாரும் அதைப் பார்த்துக் கொண்டிருக்க இயலாது. அந்த வகையில் மோடியும், அவருக்கு ஆக மிக நெருக்கமாகவும் அவரது உள்துறை துணை அமைச்சராகவும் இருந்த அமித் ஷாவும் 2009ல் ஒரு இளம் பெண்ணைப் பின் தொடர்ந்து (Stalking) அவர் யார் யாரைச் சந்திக்கிறார், யாருடன் என்ன பேசுகிறார், ஹோட்டலில் யாருடன் தங்கி இருந்தார், விமானத்தில் யாருடன் சென்றார் என்றெல்லாம் அந்தப் பெண் தங்கியிருந்த அறை முதல் ஷாப்பிங் போன மால், ஏறிப்போன விமானம் வரை பின் தொடர்ந்த செய்தி முக்கியமாகிறது.

அதைச் சொல்வதற்கு முன்,

நிகழ்வு 1: ‘ஓபன்’ வார இதழ் பத்திரிக்கையாளர் ஹைமா தேஷ்பாண்டே மோடியின் மனைவியைத் தேடிச் சென்ற கதை:

சுமார் ஆறு மாதங்களுக்கு முன் குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள ராஜோசோனா கிராமத்திற்குச் சென்றார் ஹைமா. அங்குள்ள அரசுப் பள்ளி ஒன்றில் ஒன்றாம் வகுப்புப் பள்ளி ஆசிரியையாகப் பணிபுரியும் ஒரு 57 வயதுப் பெண்ணை நேர்காண்பது அவரது பயணத்தின் நோக்கம். பள்ளி நேரம் போக டாய்லெட், குளியலறை எந்த வசதியுமில்லாத ஒரு பத்தடிக்குப் பத்தடி ‘வீட்டில்’ வசிக்கும் அப் பெண்ணின் பெயர் யசோதாபென் சிமன்லால் மோடி. குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியின் தள்ளி வைக்கப்பட்ட மனைவி.

அன்று காலை அந்த அரசுப் பள்ளிக்குத் தன்னைக் காண வந்த ஹைமாவைப் பார்த்து எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளப் பொங்கும் ஆர்வத்துடனும், இதழ் விரிந்த புன்னகையுடனும் ஓடிவந்த யசோதாவின் தோற்றத்தை இப்படி விவரிக்கிறார் ஹைமா. “சற்றுப் பொருந்தாத ஜாக்கெட், எளிய பிரின்டட் புடவை, சற்றே வளைந்த முதுகு, சுருக்கங்கள் விழுந்த முகம், வேலை செய்து கரடு தட்டிப்போன கரங்கள், அழுக்கேறியுள்ள வெடிப்புகள் நிறைந்த பாதங்களில் ரப்பர் செருப்புகள்…”

சுமார் 39 ஆண்டுகளுக்கு முன் வெறும் ஏழாம் வகுப்பு படித்திருந்த 18 வயது யசோதாவிற்கும், அப்போது அரசியல் ஏணியில் இவ்வளவு உயரம் ஏறியிராத நரேந்திர மோடிக்கும் அக்னி சாட்சியாகப் பெரியோர்களின் ஆசியுடன் திருமணம் நடந்துள்ளது. எவ்வளவு நாட்கள் சேர்ந்திருந்தார்களோ தெரியவில்லை. அரசியலில் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்த மோடிக்கு இந்தப் படிக்காத கிராமத்துப் பெண்ணைப் பிடிக்கவில்லைளொரு சில நாட்களிலேயே தந்தை வீட்டுக்கு அனுப்பப்பட்ட யசோதா அதன்பின் விட்ட படிப்பைத் தொடர்ந்து, ஆரம்பப் பள்ளி ஆசிரியைப் பயிற்சியையும் முடித்து, ஒரு சில அரசுப் பள்ளிகளில் பணியாற்றி, 92ம் ஆண்டு முதல் ராஜோசோனா வில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறார். அநேகமாக சென்ற மாதத்தோடு அவர் ஓய்வும் பெற்றிருப்பார்.

அது முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கிராமம். மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல பெயர். பள்ளியில் பயிலும் முஸ்லிம் சிறார்களின் முன்னேற்றத்தில் அவர் காட்டும் அக்கறையை அனைவரும் பாராட்டுகின்றனர். ஒரு வேளை கணவரின் பாவங்களுக்கான பிராயச்சித்தமாக இருக்குமோ?

யசோதாவின் ஒரே ஆசை, எதிர்பார்ப்பு எல்லாம் என்றாவது ஒரு நாள் அகமதாபாத்திலுள்ள முதலமைச்சர் அலுவலகம் அல்லது வீட்டிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வரும் என்பதுதான். பாவம் யசோதா, மோடியின் தொலை பேசி வேறொரு பெண்ணைப் பின் தொடரக் கட்டளை இட்டுக் கொண்டிருப்பதை அறியார்.

“என் கதையச் சொல்கிறேன்” என ஓடி வந்த யசோதாவை பள்ளித் தலைமை ஆசிரியர் பிரவீண்குமார் வியாசின் இரும்புக் குரல் தடுத்து நிறுத்தியது. “பள்ளி நேரத்தில் பேசக் கூடாது. வகுப்புக்குப் போ” என அவர் ஆணையிட்டார்.

“இடைவேளையின் போது கொஞ்ச நேரம் பேசுறேன்” என யசோதா கெஞ்சியதற்கு வியாஸ் மசியவில்லை. பத்திரிக்கையாளர்கள் யாருடனும் யசோதா பேசக் கூடாது என்பது மேலிடத்து ஆணை.

பரிதாபமாகத் திரும்பிச் சென்ற யசோதா சற்று நேரத்தில் ஓடி வந்தார். “மன்னியுங்கள், என் கணவருக்கு எதிராக நான் எதுவும் சொல்லமாட்டேன். அவர் பெரிய அதிகாரத்தில் உள்ளவர். என் பிழைப்புக்கு ஒரே ஆதாரம் இந்த வேலைதான். இதுக்கும் எதுவும் ஆபத்து வந்துவிடக் கூடாது” எனச் சொல்லித் திரும்பிப் பாராது நடந்தார்.

இடையில் பிரவீண்குமார் யார் யாருடனோ தொலை பேசினார். பின் யசோதாவின் வகுப்பறைக்கு ஓடினார். ஹைமா மீண்டும் யசோதாவைச் சந்தித்துப் பேச முயற்சித்தபோது அவர் வீறிட்டார். நான் உங்களோடு பேச விரும்பவில்லை எனச் சொல்லி நகர்ந்தபோது ஒரு கணம் நின்று அப்புறம் பேசலாம் எனச் சைகை செய்தவாறே அகன்றார்.

சற்று நேரத்தில் ஏகப்பட்ட வாகனங்கள் பள்ளியை நோக்கி வந்தன. வண்டிகளைப் பள்ளி வளாகத்திற்குள் நிறுத்திவிட்டுடு இறங்கியவர்கள் தலைமை ஆசிரியரின் அறையை நோட்டம் விட்டவாறு சிறிது நேரம் நின்று விட்டுக் கலைந்தனர்.

மாலையில் பள்ளி விட்டதுதான் தாமதம். தலையைக் குனிந்தவாறே ஓடி வந்த யசோதா அங்கு நின்றிருந்த ஆட்டோ ஒன்றில் ஏறி 20 கி.மீ தூரத்தில் இருந்த தன் சகோதரனின் வீட்டிற்கு ஓடினார்.

சற்று நேரத்தில் ஒரு இளைஞன் அங்கு வந்தான். திகைத்து நின்ற ஹைமாவிடம் தன் பெயர் பிரகாஷ் என்றும் ‘ராம் சேது’ என்கிற அரசு இதழ் ஒன்றின் நிருபர் எனவும் அறிமுகப்படுத்திக் கொண்டு, அவரை விரைவாக அந்த கிராமத்தை விட்டு வெளியேறுமாறு எச்சரித்துவிட்டுச் சென்றான்.

கிராமத்து மக்கள் சொன்னவற்றில் ஒன்று: யசோதாவின் ஒரே பொழுது போக்கு ஜோசியம் பார்ப்பது. எல்லா ஆரூடக்காரர்களிடமும் அவர் கேட்கும் கேள்வி அகமதாபாத்திலிருந்து அழைப்பு வருமா என்பதுதான். ஜோசியர்கள் “நிச்சயம் வரும்” என்று நம்பிக்கை ஊட்டிக் கொண்டே இருக்கின்றனராம்.

நிகழ்வு 2 : 2009 சாகேப் ஒலிநாடாக்கள் கட்டவிழ்க்கும் அரசதிகாரம் ஒரு இளம் பெண்ணைத் தொடர்ந்த கதை :

இஸ்ரத் ஜெஹான் போலி மோதல் கொலையில் கைது செய்யப்பட்டுச் சிறையில் இருந்த ஐ.பி.எஸ் அதிகாரிகள் நால்வரில் ஒருவரான ஜி.எல்.சிங்கால் தற்போது மத்திய புலனாய்வு நிறுவனமான சி.பி.ஐயிடம் ஒரு 4 ஜி.பி அளவுள்ள பென் டிரைவில் 2009ம் ஆண்டில் தனக்கும் அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் இடையில் நடந்த இரு நூறுக்கும் மேற்பட்ட தொலைபேசி உரையாடல்களின் பதிவுகளைச் சமர்ப்பித்துள்ளார். இது தொடர்பாகப் பிற அதிகாரிகளிடன் பேசியவற்றையும் சேர்த்தால் மொத்தம் 267 உரையாடல்கள். இதன் விவரங்களைப் புலனாய்வு இதழாளர்களான குலைல் டாட் காமின் அசிஷ் கேதனும் கோப்ராபோஸ்ட் டாட் காமின் ராஜா சவுத்ரியும் இப்போது வெளியிட்டுள்ளனர்.

இந்த ஒலி நாடாக்கள் முழுவதிலும் அமித் ஷா, தனது ‘சாகேப்’பிற்காக ஒரு இளம் பெண்ணைச் சட்ட விரோதமாக எங்கு சென்றாலும் பின் தொடர்ந்து, அவர் யாரைச் சந்திக்கிறார், யாருடன் ஓட்டலில் தங்குகிறார், விமானத்தில் யாருடன் பயணம் செய்கிறார் என்பன போன்ற அனைத்து அந்தரங்க விவரங்களையும் காவல்துறை அதிகாரம் மற்றும் நவீன உளவுத் தொழில்நுட்பம் அனைத்தையும் பயன்படுத்திச் சேகரித்து உடனுக்குடன் தன்னிடம் தெரிவிக்குமாறு உயர் போலீஸ் அதிகாரியான சிங்காலை வற்புறுத்துவது பதிவாகியுள்ளது. சட்ட விரோதமான இந்தச் செயல்பாடு எந்தவிதமான அதிகாரபூர்வமான ஆணையும் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டுள்ளது சிறப்புக் காவல்படைக் கண்காணிப்பாளர் சிங்காலும் அவ்வாறே பணிந்து செயல்பட்டுள்ளார், குறிப்பாக அந்தப் பெண்ணுடன் இருக்கும் ஆண்கள் யார் என்பதும், அதிலும் குறிப்பாக ஒட்டலில் தங்கும்போது அப் பெண்ணுடன் எந்த ஆண் இருந்தார் என அறியத் துடிப்பதும் யாருக்காக இந்த உளவும் பின்தொடர்தல்களும் நடத்தப்பட்டதோ அந்த சாகேப் எந்த அளவு பாலியல் வக்கிரம் பிடித்த நபராக இருக்கவேண்டும் என்பதை யூகிக்க வைக்கிறது.

‘சாகேப்’ இதைத் தெரிந்து கொள்ள அவசரம் காட்டுவதைத் தெளிவுபடுத்தும் இந்த உரையாடல்கள், தனக்கு மிகவும் விசுவாசமான அமித்ஷாவையும்கூட அவர் முழுமையாக நம்பி விடாமல் வேறொரு பின்தொடர் அமைப்பின் மூலமாகவும் அந்தப் பெண்ணின் அந்தரங்கத் தகவல்களைச் சேகரித்துக் கொண்டிருப்பதையும் வெளிப்படுத்திவிடுகின்றன. ஈந்த ஒலிப் பதிவுகளில் ஒன்றில் ஆகஸ்ட் 9, 2009 அன்று அமித் ஷா மிகுந்த பரபரப்போடு சிங்காலைக் கூப்பிடுகிறார், “இப்பதான் நான் சாகேப்போட பேசினேன். அவங்க இன்னைக்கு இரண்டு தடவை வெளியே போன விஷயம் அவருக்கு யார் மூலமோ தெரிஞ்சிருக்கு. நம்ம ஆளுங்க சரியா வேல செய்யலேன்னு நினைக்கிறேன். இன்னும் அவங்க அங்கதான் இருக்காங்க. அவங்க ஷாப்பிங் போயிருக்காங்க, அவளைப் பாக்க வந்த அந்தப் பயலோடா போயிருக்காங்க” என அமித் ஷா பதறுகிறார்.

இன்னொரு சந்தர்ப்பத்தில் அமித் ஷா அந்தப் பெண்னுடன் திரியும் அந்தப் பயலை, “நம்ம வன்சாராவை விட அதிக காலம் ஜெயில்ல இருக்க மாதிரி பண்ணனும்” எனச் சிங்காலிடம் கருவுகிறார். வன்சாரா, இஷ்ரத் ஜெஹான் படுகொலையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் இன்னொரு ஐ.பி.எஸ் அதிகாரி.

குஜராத்தின் உயர் மட்ட அதிகாரத்தில் இருந்த அமித் ஷாவால் ‘சாகேப்’ என மிக்க மரியாதையுடன் அழைக்கப்பட்ட நபர் வேறு யாருமல்ல குஜராத்தில் அமித் ஷாவைக் காட்டிலும் அதிகாரமிக்கவராக இருந்த அந்த ஒரே நபர்தான் என்பதும் உரையாடலினூடாக ஊகிக்கக் கூடியதாக அமைந்துள்ளது.

யார் அந்த இளம் பெண்?

அஷிஷ் கேதனும் ராஜா சவுத்ரியும் அந்தப் பெண்ணின் பெயர் தெரிய வேண்டாம் என அவர்களது பதிவில் அவருக்கு ‘மாதுரி’ என்றொரு புனைபெயரைச் சூட்டினர். ஆனால் இன்று அப்பெண்ணின் முழுப் பெயரும் விவரங்களும் வெளிவந்துவிட்டன. அந்தப் பெண்ணின் தந்தையே அவர் பெயர் வெளிவருவதற்குக் காரணமாகிவிட்டார். இணையத் தளங்களில் அவர் பெயர் வெளிப்படையாகப் பதிவாகியுள்ளது. எனினும் நாம் அவரின் கண்ணியம் கருதி இக்கட்டுரை முழுவதும் மாதுரி என்ற பெயரையே பயன்படுத்துவோம். அவர் பெங்களூரைச் சேர்ந்த ஒரு லேன்ட்ஸ்கேப் ஆர்கிடெக்ட். 2003 – 06 காலகட்டத்தில் கட்ச் மாவட்டத்தில் ஒரு மலைப் பூங்கா அமைக்கப் பொறுப்பேற்றவர். 2005ல் அந்தப் பூங்காவைத் திறந்து வைக்க மோடி வந்தபோது அவருக்கு அறிமுகமாகிறார் மாதுரி. உரையாடல்களில் அந்தப் பெண்ணின் பெயர் உச்சரிக்கப்படுவதால் யார் இவ்வாறு பிந்தொடரப்பட்டார் என்பது உறுதியாகத் தெரிகிறது.

உரையாடல்களில் சிலவற்றை வாசித்தால் எல்லாம் விளங்கும், அதற்கு முன்…

நிகழ்வு 3 : மாதுரி மோடிக்கு நெருக்கமானதும் ஒரு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி பலியானதுமான கதை :

சிங்காலை ஏவி அந்தப் பெண் மட்டும் பின் தொடரப்படவில்லை. இன்னொரு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியும் அதே நேரத்தில் பின் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுள்ளார். அவர் பின்னர் பவநகர் முனிசிபல் கமிஷனராக இருந்த பிரதீப் ஷர்மா. மாதுரி மோடிக்கு அறிமுகமான காலத்தில் அவர் கட்ச் மாவட்ட ஆட்சியர். பின் அவர் ஊழல் குற்றச்சாட்டுகள் சாட்டப்பட்டு தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுச் சிறையிலும் அடைக்கப்பட்டார்.

பணி நீக்கம் செய்யப்பட்ட பிரதீப் ஷர்மா கடந்த மே 2011ல் உச்ச நீதிமன்றம் முன் சமர்ப்பித்த மனுவில் கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அந்த மனுவை அவர் சமர்ப்பித்தபோது மாதுரியும் தானும் ஒரே நேரத்தில் பின்தொடர்ந்து கண்காணிக்கப்பட்டதும், அது தொடர்பான உரையாடல்கள் பின்னால் வெளிப்படப் போவதும் அவருக்குத் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. ஷர்மா தன் மனுவில் சொல்வது:

“2003 – 06 காலகட்டத்தில் கட்ச் மாவட்ட ஆட்சியர் என்கிற வகையில் நான் (மனுதாரர் என மனுவில் குறிப்பிடப்படுகிறது) பூஜ் நகரத்தை அழகுபடுத்துவது மற்றும் கட்ச் மாவட்டத்தை மேம்படுத்துவது தொடர்பாகப் பல திட்டங்களைச் செயல்படுத்தி வந்தேன். 2005ல் மலைத் தோட்டம் ஒன்றை அமைப்பதற்காக ஒரு இடத்தைத் தேர்வு செய்து அதற்கென கலை விற்பனராக பெங்களூரைச் சேர்ந்த மாதுரி (மனுவில் உள்ள பெயர் மாற்றப்பட்டுள்ளது. எந்தப் பெண் பின் தொடரப்பட்டாரோ அந்தப் பெண்னின் பெயர்தான் அது. எனினும் நாம் புனை பெயரையே பயன்படுத்துவோம்) தேர்வு செய்யப்பட்டார். பூங்கா அமைக்கும் பணி முடிந்து 2005ல் அதைத் திறந்து வைப்பதற்காக ஶ்ரீ நரேந்திரமோடி அங்கு வந்தபோது மாதுரி அவருக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அதற்குப்பின் மாதுரி தான் பெங்களூர் திரும்ப இருப்பதைக் கூறியதோடு தனக்கும் முதலமைச்சருக்கும் இடையில் உள்ள பரஸ்பர தொடர்புகளையும் என்னிடம் பகிர்ந்து கொண்டார். ஒரு முறை அரசு விழா ஒன்றில் மாதுரியும் ஶ்ரீ மோடியும் மிக நெருக்கமாக இருந்ததைப் பார்க்கவும் அவர்கள் உரையாடலைக் கேட்கவும் நேர்ந்தபோது அவர்களுக்கிடையே இருந்த நெருக்கமான உறவு குறித்த உண்மை எனக்கு உறுதியாயிற்று. தொடர்ந்து மாதுரி என்னிடம், தான் ஶ்ரீ மோடியச் சந்திக்கச் செல்லும்போது அவர் எவ்வாறு, மூத்த அதிகாரிகளுடன் நடைபெற்றுக்கொண்டிருக்கும் கூட்டங்களைக் கூட இடையில் நிறுத்திவிட்டு வெளிவந்துத் தன்னுடன் அந்தரங்கமாகப் பேசுவார் என்பதையும் கூறினார்.”

தான் பழிவாங்கப்பட்டதற்குக் காரணம் மோடிக்கும் மாதுரிக்கும் இருந்த அந்தரங்க உறவைத் தான் அறிய நேர்ந்ததே எனக் கூறும் பிரதீப் ஷர்மா, அவரறிந்த அந்த அந்தரங்கங்கள் சிலவற்றையும் தொடர்ந்து மனுவில் பதிவு செய்கிறார். மார்ச் 2006 இரண்டாம் வாரத்தில் ஒரு நாள் மாலை 5 மணி அளவில் தான் அகமதாபாத் வந்து இறங்கியுள்ளதாகவும் பூஜுக்கு வர இருப்பதாகவும் தெரிவித்த மாதுரி, அடுத்த இரண்டு நாள்வரை தன்னுடன் எவ்விதத் தொடர்பும் இல்லாதிருந்ததாகக் குறிப்பிடுகிறார் பிரதீப். பின் தொடர்பு கொண்டபோது கடந்த இரு நாட்களும் தான் ஶ்ரீ மோடியுடன் இருந்ததாகவும், அது ஹோலிப் பண்டிகை நாளானதால் பலரும் அவரைப் பார்க்க வந்தனர் எனவும், அவ்வப்போது வெளியே சென்று அவர்களைச் சந்த்தித்து மோடி திரும்பி வந்ததாகவும் மாதுரி தன்னிடம் கூறியதாகவும் பிரதீப் பதிவு செய்கிறார். நடுவில் சற்று உடல் நலமில்லாமல் போன மாதுரி மருத்துவர் யாரையாவது அழைக்க இயலுமா எனக் கேட்டபோது நாம் இருக்கும் நிலையில் அது சாத்தியமில்லை என மோடி மறுத்ததாகவும் தெரிகிறது.

9909923400 என்கிற எண்ணிலிருந்து மோடி மாதுரிக்கு அனுப்பிய குறுஞ்செய்தி ஒன்று குறித்தும் பிரதீப் தன் மனுவில் கூறியுள்ளார். தொடர்ந்து பிரதீப் சொல்வதை சுருக்கம் கருதி மட்டுமின்றி அப் பெண்ணின் கண்ணியம் கருதியும் தவிர்க்கிறேன்.

பின்னிகழ்வுகள் :

1.விஷயம் இப்படி அம்பலப்பட்டவுடன் ‘மாதுரி’யின் தந்தை பிரான்லால் சோனி அனுப்பிய கடிதம் ஒன்று பா.ஜ.க தரப்பில் சுற்றுக்கு விடப்பட்டது. அது எந்த வகையிலும் மோடியைக் காப்பாற்றவில்லை. மாறாக அமித் ஷா தன் உரையாடல்களில் குறிப்பிடும் ‘சாகேப்’ மோடிதான் என்பதை அது உறுதி செய்தது. பிரான்லாலின் கடித வாசகங்களில் சில:

“அவள் (மாதுரி) அடிக்கடி அகால நேரங்களில் பயணம் செய்ய நேரிட்டது. ஒரு தந்தை என்கிற முறையில் நான் அதற்காகக் கவலைப் பட்டேன். இதனால் எங்கள் குடும்பத்துடன் நீண்ட நாள் உறவில் உள்ள குஜராத் முதல்வர் ஶ்ரீ நரேந்திர மோடியிடம் அவளைக் கவனித்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொண்டேன்.”

அதாவது தாங்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலேயே மோடி மாதுரியின் ஒவ்வொரு நடமாட்டத்தையும் இவ்வாறு கண்காணித்தாராம்.

ஆனால் உரையாடல்களைக் கவனித்தால் வெறும் பாதுகாப்புக் கருதி மட்டும் மாதுரி கண்காணிக்கப் படவில்லை என்பதோடு, அவர் அறியாமலேயே அவர் கண்காணிக்கப்பட்டுள்ளார் என்பதும் உறுதிப்படுகிறது.

தவிரவும், இதை உண்மை என்றே கருதினாலும் கூட, தனது குடும்ப நண்பரின் வேண்டுகோளுக்காக ஒரு முதலமைச்சர் எவ்வாறு அரசு எந்திரத்தை இவ்வாறு பயன்படுத்த இயலும்?

2. பிரான்லால் இரண்டு நாள் முன்னதாக (நவம்பர் 19) இன்னொரு கடிதத்தை வெளியிட்டுள்ளார், அதில் தனது மகள் அறிந்தே அவர் கண்காணிக்கப்பட்டார் என்றுள்ளது. இது முழுப் பூசணியைச் சோற்றில் மறைக்கும் வேலை என்பதைப் பதிவு செய்யப்பட்ட உரையாடல்கள் உறுதி செய்கின்றன.

3. இந்தியாவின் மிக முக்கியமான பெண்கள் இயக்கங்களும் முற்போக்கு இயக்கங்களும் இணந்து நவம்பர் 18 அன்று டெல்லியில் இது குறித்த மத்திய புலனாய்வுத் துறை விசாரணை வேண்டுமென ஆர்பாட்டம் நடத்தின.

ஆக, பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பிலிருந்தே அந்தப் பெண்ணின் அடையாளம் வெளிப்படுத்தப்பட்டுவிட்டது, அவர் பின் தொடரப்பட்டதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டது. நரேந்திர மோடிதான் இதற்கான ஆணையை இட்டார் என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டது. பா.ஜ.க இக்கடிதங்களை வெளியிட்டதிலிருந்து அக்கட்சியும் இவற்றை ஏற்றுக் கொள்வது தெரிகிறது.

காவற் படைக் கண்காணிப்பாளர் ஜி.எஸ்.சிங்கால் ஐ.பி.எஸ் மற்றும் மூத்த அதிகாரி பிரதீப் ஷர்மா ஐ.ஏ.எஸ் ஆகியோரின் வாக்கு மூலங்கள் மற்றும் சிங்கால் புலனாய்வுத்துறையின் முன் சமர்ப்பித்துள்ள ஒலிப்பதிவுகள் ஆகியன அப்பெண்ணுக்கும் ‘சாகேப்’புக்குமான உறவு ஒப்புதல் அடிப்படையில் இருந்தபோதிலும் அந்தப் பெண்ணுக்கு வேறு ஆடவருடன் தொடர்புள்ளதா என அறிய அவர் அறியாமலேயே அரசு எந்திரத்தின் மூலம் அவர் கண்காணிக்கப்பட்டதையும், பின்தொடரப்படந்தையும் உறுதி செய்கின்றன.

ஒரு ஜனநாயக அரசில் தனிநபரே ஆக உயர்ந்த அதிகாரம் படைத்தவராகக் கருதப்படுகிறார், அரசின் அதிகாரம் அவரிடமிருந்தே பெறப்படுகிறது. எக்காரணம் கொண்டும் ஒரு அரசுக்குத் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவரது அந்தரங்கத்தைப் பின்தொடர உரிமை இல்லை. பெண்களை இவ்வாறு பின்தொடர்வது (Stalking) டெல்லி பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு கடுங் குற்றமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் பின்தொடர்வு பற்றிய ஒரு நடுநிலையான புலன் விசாரணை இன்று உடனடித் தேவையாகிறது

இணைப்பு : பதிவு செய்யப்பட்டுள்ள 267 உரையாடல்களில் ஓரிரண்டு மட்டும். (ஆங்கிலத்தில் உள்ள உரையாடல் தமிழுக்குத் தக்கவாறு பொருள் மாறாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது)

1.அமித் ஷா : சிங்கால், நான் அமித் பேசுறேன்.. கவனமா வாட்ச் பண்ணுங்க.

ஜி.எஸ்.சிங்கால்: சார், ஹோடல் பார்கிங் ஏரியாவில் ஒருத்தன், வெளியில் ஒருத்தன்,, அப்புறம் இன்னொருத்தனையும் வாட்ச் பண்ண போட்டிருக்கேன்..

அமித்: இன்னும் உள்ளதான் இருக்காங்களா.. ?

சிங்கால் : இது வரைக்கும் வெளியில வரல.. அதுனால உள்ளதான் இருக்கணும்…

அமித் : இன்னிக்கு லன்ச்சுக்கு அவங்க ஒரு ஓட்டலுக்குப் போறாங்க…

சிங்கால் : சரி.. சரி..

அமித் : அப்படீன்னு சாகேப்புக்கு ஒரு போன் வந்திருக்கு…

சிங்கால் : ஓகே.. ஒகே…

அமித் : அவ ஒருத்தனோட போவா கவனிங்க..

சிங்கால் : சார்..

அமித் : அவளைப் பார்க்க வருவானே அவன்தான்..

சிங்கால் : ஓகே.. ஒகே…

அமித் : விஷயம் என்னன்னா சாகேபுக்கு எல்லாத் தகவலும் வந்துட்டு இருக்கு. நாம எதாவது கவனிக்க விட்டுட்டோம்னா தெரிஞ்சு போயிடும்.

சிங்கால் :ஆமா.. ஆமா..

அமித் : அதனால நீ தயவு செய்து…

சிங்கால் : சார், நானே நேர்ல போயி எல்லா ஏற்பாட்டையும் கவனிச்சுகிறேன்..

அமித் : ஆமா, நீயே அங்கே ஒருதடவை போய் பாக்கிறதுதான் நல்லது..

சிங்கால்: சார், நான் இங்க பக்கத்துலதான் இருக்கேன். பத்து நிமிசத்துல அங்கே போய்டுவேன்.

2. அமித் : சிங்கால், ஏதாவது புதுத் தகவல்…?

சிங்கால் : சார், அவ ஓட்டல விட்டு வெளியே வந்துட்டா. பிரகலாத் நகரை நோக்கிப் போயிட்டு இருக்கா..

அமித் : பவநகர் எஸ்.பி யோட உனக்கு எப்படி உறவு..

சிங்கால் : ஒ! நல்ல உறவுதான் சார்..

அமித் : கமிஷனர் அவ வீட்டில இருக்கானா இல்ல இங்க வந்துட்டு இருக்கானான்னு செக் பண்ணு.

சிங்கால் : ஒகே சார்..

அமித் : முனிசிபல் கமிஷனரை (பிரதீப் ஷர்மாவை) சொன்னேன்..

அமித் : ஓகே சார்..

3. சிங்கால் ; சார், நமஸ்தே சார்…

அமித்: ராத்திரி என்ன நடந்துது?

சிங்கால்: சார், அவ நேத்து ராத்திரி 12.30., ஒரு மணி வரைக்கும் அவனோட கார்லதான் இருந்தா. அவ ஓட்டலுக்கு வர்ரப்ப ஒரு மணி. பவநகர்ல இருந்து தகவல் வர ராத்திரி ரொம்ப லேட் ஆயிட்டு. உங்களைத் தொல்லை பண்ண விரும்பல. அவர் பவநகர்லதான் இருந்தார்.

அமித் : அவன் மேலையும் ஒரு கண்ணை வச்சுக்குங்க..

சிங்கால் : எட்டு மணியில இருந்து என் ஆட்கள் அந்த வேலையிலதான் இருக்காங்க. நம்ம தெரிஞ்சுக்கிறணும்கிறதுக்காக லொகேஷன சொல்லச் சொல்லி இருக்கேன்.

அமித் : அவ ஓட்டல் லோகல் நம்பரை எடு..

சிங்கால்: சரி சார். இன்னிக்கு 11 மணி வரைக்கும்தான் அவ ஓட்டல் ரிசர்வேஷன் இருக்கு.. 11 மணி..

அமித் : புரியுது.. புரியுது..

4. அமித் : சிங்கால்..

சிங்கால் : எஸ் சார்..

அமித் : மும்பை ஃப்ளைட்ல யாரையாவது அனுப்ப முடியுமா?

சிங்கால் : ம்ம்ம்..

அமித்: ஏதோ நடக்குதுன்னு சாகேபுக்கு உறுதியா. தகவல் வந்திருக்கு. நாம யாராவது ஒருத்தரை அந்த ஃப்ளைட்ல அனுப்புறது நல்லது..

சிங்கால் : சரி, சார்.. நல்லது சார்.. நான் யாரையாவது அனுப்பிடறேன் சார்..

அமித் : கொஞ்சம் பணத்தைக் கொடுத்து அவனை (அதே) ஃப்ளைட்ல ஏத்தி விடு. அப்புறம் அவ ஏர்போர்ட்ல (பப்ளிக் பூத்ல இருந்து) எஸ்.டி.டி., பி..சி.ஒ போன் கால் எதுவும் பேசுனா அந்த நம்பரைக் கண்டுபிடி..

சிங்கால் : சரி சார்.. ரைட் சார்…

இப்போது சொல்லுங்கள். இதெல்லாம் அந்தப் பெண்ணின் பாதுகாப்பிற்காக, அவள் சம்மதத்துடன், அவள் அறிந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளா?

ஒரே நேரத்தில் அந்தப் பெண் மட்டுமின்றி பவநகர் முனிசிபல் கமிஷனர் பிரதீப் ஷர்மாவையும் உளவு பார்த்ததையும், அவர்கள் இருவருக்கும் இடையிலும், அதேபோல அந்தப் பெண்ணுக்கும் இன்னொரு இளைஞனுக்கும் இடையில் இருந்த அல்லது இருந்ததாக சாகேப்பினால் சந்தேகிக்கப்பட்டுந்தான் இந்தப் பின்தொடரல்கள் நடைபெற்றுள்ளமைக்கு வேறென்ன சான்றுகள் வேண்டும்?

அமித் ஷா மூலமாக மட்டுமின்றி தானும் தனியே அந்தப் பெண்ணைக் கண்காணித்த சாகேபின் வக்கிரத்தை என்ன சொல்வது?

குஜராத் போலீசைப் பற்றியும் மோடியின் நிர்வாகத் திறமை பற்றியும் என்ன சொல்வது.. சீச் சீ, நாயும் பிழைக்கும் இந்தப் பிழைப்பு என்றா?