மணிமேகலை : துறவுக்குரிய ஏதுக்கள் முகிழத் தொடங்குகின்றன

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 9 

(தீராநதி, அக் 2017)

ஒரு மகா காப்பியத்திற்குரிய அத்தனை அணிகலன்களும், அழகுகளும் அமைய படைக்கப்பட்டுள்ள மணிமேகலை இன்னொரு பக்கம் அது எவ்வாறு முழுமையாக ஒரு பவுத்த மரபில் ஆக்கப்பட்ட படைப்பாக அமைகிறது என்பதைப் பார்த்துக் கொண்டுள்ளோம். மணிமேகலையின் கதை அமைப்பு மிகவும் சிக்கலானது. கோவலன் – மாதவி ஆகியோரின் ஒரே மகளான மணிமேகலை எவ்வாறு ஒரு பவுத்தத் துறவியாக மலர்கிறாள் என்பதை மையக் கருவாகக் கொண்ட கதை அமைப்பு, அத்தோடு ஒரு பதினாறு உட் கதைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது. கதைகளின் ஊடாக வாழ்வின் உண்மைகளையும், தத்துவங்களையும் விளக்கும் ஒரு மரபு இங்கு உண்டு. புத்தஜாதகக் கதைகள், பஞ்ச தந்திரக் கதைகள் முதலியன சில எடுத்துக்காட்டுகள். மகாபாரதத்திலும் நாம் இதைக் காண இயலும். மணிமேகலைக் காப்பியத்தில் இடம்பெறும் இந்தப் பதினாறு உட்கதைகளும் காப்பியத்தின் மையக் கதை ஓட்டத்திற்குக் குறைவு ஏற்படுத்தாமல் பவுத்த அறங்களை விளக்கும் பாங்கு இங்கே குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.

பவுத்தம் அது தோன்றிய காலத்திலிருந்து வைதீகத் தத்துவங்களையும் கோட்பாடுகளையும் எதிர் கொண்டு இயங்க வேண்டியதாக இருந்தது. புத்தருக்குச் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் தமிழ் மண்ணில் மணிமேகலை உருவானபோது இந்திய அளவில் இந்த விவாதங்கள் தீவிரமாக நடந்து கொண்டிருந்தன. வைதீகத்திற்கு ஒரு வலுவான மாற்றாக எல்லா அம்சங்களிலும் பவுத்தம் தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருந்த காலம் அது. காஞ்சிபுரம் அந்த வகையில் ஒரு முக்கியமான மையமாக அமைந்தது. பவுத்தம் வைதீகத்தை எதிர்கொண்டு மட்டுமல்ல தனக்குள்ளும் பல விவாதங்களை நிகழ்த்திக் கொண்டும், வளர்ந்து கொண்டும் இருந்த காலம் அது. இந்தப் பின்னணியில் அமைந்த மணிமேகலை சிக்கலான பவுத்த தத்துவக் கோட்பாடுகளையும் தன் கதை ஓட்டத்தின் ஊடாகவே, காப்பிய நெறிக்கும் அழகுக்கும் சிறிதும் பங்கம் ஏற்படாமல் சொல்லிச் செல்லும் திறன் வியக்கத் தக்க ஒன்று.

மையக் கதை, பவுத்த சீலங்களை விளக்கும் பதினாறு உட்கதைகள், பவுத்தத்தின் சில தத்துவக் கோட்பாடுகள் என இந்த முன்றும் இணைந்து பொருந்தி அமையப்பட்ட ஒரு அழகிய ஆபரணமாக மணிமேகலை தமிழ் இலக்கிய மரபில் தனிச் சிறப்புடன் விளங்குகிறது. இந்த மூன்று கூறுகளும் காப்பிய அழகைச் சிதைக்காமல் முரணின்றிப் பின்னப்பட்டுள்ளதுதான் மணிமேகலைக் காப்பியத்தின் தனிச் சிறப்பு.

இந்தியத் தத்துவ மரபில் ஏதேனும் ஒரு பொதுவான கூறு உண்டெனில் அது ‘கர்ம’க் கோட்பாடுதான். பல்வேறு நுணுக்கமான வேறுபாடுகளுடன் இந்தியத் தத்துவங்கள் அனைத்தும் கர்ம வினைகளுக்கு ஏற்ப மீண்டும் மீண்டும் பிறந்து இந்தப் பிறவிப் பெருங்கடலை நீந்திக் கடப்பதை வலியுறுத்துகின்றன. பிராமண மரபிற்கு எதிராக அமைந்த பவுத்தம், சமணம், ஆஜீவகம் முதலான சிரமண மரபுகளைப் பொருத்த மட்டில் துறவு என்பது இந்தப் போக்கில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. மணிமேகலைக் காப்பியத்தின் இன்னொரு பெயர் ‘மணிமேகலை துறவு’ என்பது நினைவிற்குரியது. கணிகையர் குலத்தில் பிறந்த ஒரு இளம் பெண், பிறவியால் தொழிலும், வாழ்வும் நிர்ணயிக்கப்படும் ஒரு சமூக அமைப்பில் எவ்வாறு அந்தச் சமூக நியதியை வெல்வதோடு, எதிர்கொள்ளும் எல்லாத் தடைகளையும் கடந்து இறுதி உய்வின் ஒரு முக்கிய படியாகிய துறவு நிலையைச் சென்றடைகிறாள் என்பதைச் சொல்வதுதான் மனிமேகலைக் காப்பியத்தின் அடிப்[படை அமைப்பு.

பிறவிப் பெருங்கடலை அறுக்கும் இறுதி உய்விற்குரிய துறவு நிலை எய்துவதற்கு உரிய பொருத்தமான “காரணி”கள் அத் தகுதிக்குரியோரின் வாழ்வில் அவரவரின் வாழ்வுக்கேற்றவாறு தோன்றி, மலர்ந்து, முதிர்ச்சி அடையும் என்கிறது பவுத்தம். இந்த துறவுக்குரிய ‘காரணி’ என்பதற்கான பவுத்த தத்துவக் கருத்தாக்கம் சமஸ்கிருதம் மற்றும் பாலியில் ‘ஹேது’ எனப்படும். சாத்தனார் இதைத் தமிழ் மரபிற்கேற்ப ‘ஏது’ எனக் குறிப்பார். மணிமேகலைத் துறவுக்குரிய இந்த ஏதுக்கள் தோன்றி மலர்வது குறித்து ஒன்பது குறிப்புக்கள் மணிமேகலைக் காப்பியத்துள் அமைந்துள்ளன. காப்பியக் கதைப் போக்கின் ஊடாக இந்த ஏதுக்கள் எதிர்கொண்டு (எதிர்தல்), மணிமேகலையின் வாழ்வின் ஊடாக அவை நிகழ்ந்து (நிகழ்தல்), படிப்படியாக அவை முற்றிக் (முற்றுதல்) கனிவதைச் சொல்வதுதான் மணிமேகலைக் காப்பியம். துறவுக்குரிய இந்த நற்காரணிகள் மணிமேகலையின் வாழ்வில் எதிர்கொண்டு, மலர்ந்து  முற்றுவது எனும் வளர்ச்சிப் போக்கு காப்பியத்தின் கதை, பவுத்த சீலங்களை விளக்கும் உட்கதைகள், பவுத்த அடிப்படைத் தத்துவக் கோட்பாடு ஆகிய மூன்றையும் பிசிறின்றி இணைக்கிறது.

வைதீகம் கருமங்களை (அதாவது செயல்களை) “பாவம் X புண்ணியம்” எனப் பகுக்கும். பவுத்தம் கருமங்களை நல்ல நோக்கமுடையவை, கெட்ட நோக்கம் உடையவை என அவற்றின் நோக்கங்களின் அடிப்படையில் வேறுபடுத்திக் காட்டும். நல்ல நோக்கங்களுடன் அமைவன ‘குசல கம்மங்கள்’; ‘கம்மம்’ என்பது ‘கர்மம்’ எனும் வடமொழிச் சொல்லின் பாலி மொழி வடிவம். தீய நோக்கங்களுடன் அமைவன ‘அகுசல கம்மங்கள்’. குசல கம்மங்கள் என்பன கர்ம விளைவுகளிலிருந்து உங்களை விடுவித்து பிறவியற்ற இறுதி விடுதலையை நோக்கி நகர்த்தும். அப்படியான நல் நோக்கத்துடன் கூடிய செயல்களுக்குக் காரணியாக அமையும் நிகழ்வுகள் “குசலமூலம்” எனப்படும். இத்தகைய மூலம் அல்லது காரணி அல்லது நிகழ்வு என்பதே இங்கு ‘ஏது’ எனப்படுகிறது. இத்தகைய நிகழ்வுகளும் செயல்களும் பேரானந்தத்தை விளைவிப்பவை என்கிறது பவுத்தம்.

மீண்டும் மீண்டும் பிறத்தலுக்குக் காரணமான கர்மிய விளைவுகளை ஏற்படுத்தும் கம்மங்கள் அகுசல கம்மங்கள் எனப்படும். 1.ஆசை (லோபம்), 2.வெறுப்பு அல்லது பகை (தோஷம்), 3.மருள் அல்லது ஐயம் அல்லது தெளிவற்ற நிலை (மோகம்)’ ஆகியவற்றுக்குக் காரணமானவையே அகுசல கம்மங்கள். (பார்க்க: அ.மார்க்ஸ், புத்தம் சரணம், கருப்புப் பிரதிகள், பக். 74, 84). ஆசையின்மை (அலோபம்), வெறுப்பின்மை (அதோஷம்), ஐயமின்மை (அமோகம்) ஆகியவற்றுடன் செயலூக்கமுள்ள ஒரு வாழ்வை எதிர்கொள்வதே இறுதி விடுதலைக்கான வழி. அப்படியான விருப்பபூர்வமான செயலுக்கு (செய்கை அல்லது பாலி மொழியில் ‘சேதனா’) இட்டுச் செல்லும் ஏதுக்களை (காரணமாகும் நிகழ்வுகளை) நோக்கி இட்டுச் செல்பவர்களாக பவுத்த பிக்குவான அறவண அடிகள், மணிமேகலா தெய்வம் முதலானவர்கள் சாத்தனாரின் படைப்பில் பாத்திரங்களாக இடம் பெறுகின்றனர்.

என்ன செய்கிறோம் என்பதைக் காட்டிலும் என்ன நோக்கத்துடன் நமது செய்கைகள் உந்தப்படுகின்றன என்பதற்கும் ஐயமின்மை என்பதனூடாக ஆழ்ந்த புரிதல், அதற்குக் காரணமாகும் கல்வி ஆகியவற்றிற்கும் பவுத்தம் அளிக்கும் கூடுதல் முக்கியம் இங்கே கவனத்துக்குரியது.

புகார் நகரில் பிரும்மாண்டமான ஏற்பாடுகளுடன் கூடிய இந்திரவிழா அறிவிப்போடு காப்பியம் மொட்டவிழ்வதைக் கண்டோம். தீவகச் சாந்தியுடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. விழா எனில் ஆடலும் பாடலும் அதனின்றும் பிரிக்க இயலாதவை. இது உலகெங்கிலும் ஒரு பொது இயல்பு. இந்தியத் துணைக் கண்டத்தைப் பொருத்த மட்டில் அனைத்தும் குலமரபாகப் பிரித்து ஒதுக்கப்பட்ட பின்னணியில் கணிகையர் குலத்தில் தோன்றிய அன்றைய புகழ்பெற்ற ஆடல் நாயகியான மாதவியின் நடனத்தை ஊர் மக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். மாதவி மட்டுமல்ல அவளது அழகிய இளமகள் மணிமேகலையின் ஆட்டமும் இம்முறை விருந்தாக அமையும் என்கிற மக்களின் எதிர்பார்ப்புகள் பொய்க்கின்றன. மணிமேகலையோடு மாதவியும் வாராததைக் கண்டு மக்களைக் காட்டிலும் மாதவியின் தாய் சித்திராபதி தணியாத் துன்பம் அடைந்தாள் என்கிறார் சாத்தனார். செவ்வரியோடிய நீண்ட கண்களை உடைய தன் மகளின் உற்ற தோழியாகிய வயந்தமாலையை (வசந்தமாலை) அழைத்து மாதவியின் ஆட்டம் இல்லாமற் போனமைக்காக ஊர்தூற்றும் செய்தியை அவளிடம் சொல்லிவரப் பணிக்கிறாள்.

ஆடிய சாயல் அழகு மிக்க மாதவி வாடிய உடலுடனும் மகளுடனும் இருந்த மலர் மண்டபத்துக்குச் சென்று வயந்தமாலை இந்த ஊரலரை எடுத்துரைக்கிறாள். வேத்தியல் பொதுவியல் என்று இரு திறத்தையும் சார்ந்த கூத்தும் பாட்டும், தூக்கும் துணிவும் என்கிற ஆடற் கலையின் அனைத்து நுணுக்கங்களையும் கற்றுத் துறைபோகிய பொற்றொடி எனப் பதினைந்து அழகான வரிகளில் மாதவியின் கல்விச் சிறப்பை இங்கு விதந்து முன்வைப்பார் சாத்தனார். குலத்தொழிலில் இத்தகைய வல்லுனளான நீ இப்படி தவக்கோலம் பூண்டு அமர்ந்துள்ளது வெட்கக் கேடு என முடிப்பாள் வயந்தமாலை. ஆம். நமது மரபில் கணிகையாய்ப் பிறந்தோர் அதற்குரிய வாழ்க்கை வாழ்வது வெட்கக்கேடான செயல்லல்ல. யாராயினும் அவர்கள் பிறவித் தொழிலைச் செய்யாதிருத்தலே நாணுடைத்து.

பவுத்தம் மேலோங்கி வளர்ந்து வந்த அந்தக் காலகட்டத்தில், துறவு நிலையும், துறவியரும் பெரிதும் மதிக்கப்பட்ட அக்காலத்தில் கணிகையர் இருவரைத் துறவுக்குரியோராய்ப் படைத்தது மட்டுமின்றி அதிலொருவளை பிறவிப் பெருங்கடகைக் கடக்கும் ஒளிபெற்றவளாய்ப் படைத்திருப்பதுதான் இந்தப் பவுத்தக் காப்பியத்தின் தனித்துவம். இரட்டைக் காப்பியங்களாகத் தமிழ் போற்றும் சிலம்பும் மணியும் இப்படியான எளிய மக்களையும், குற்றம் குறைகளுடையோரையும் காப்பியநாயகர்களாகக் கொள்வதை நாம் கவனத்தில் கொள்ளல் தகும். பவுத்தம் அங்குலிமாலன் போன்ற கொலைக்கஞ்சாத கள்வனுக்கும் புனித நிலை சாத்தியம் எனக் கொண்டாடும் ஒரு மதம்..

“காதற் கணவன் மறைந்தால் அவனது உடலோடு தீப்பாய வேண்டும் அல்லது கைம்மை நோன்பு பூண்டு காலம் கழிக்க வேண்டும். நான் கணவனை இழந்தவள்; கணவனுக்கு நேர்ந்த அநீதியைப் பொறாது தன் முலை திருகி எறிந்து மதுரையை அழலுக்கு இரையாக்கிய மாபெரும் பத்தினியின் மகள் மணிமேகலை. அவள் இந்தத் திருந்தாச் ‘செய்கை’ தீத்தொழிற் படாள் எனப் போய்ச் சொல்” என வயந்தமாலையைத் திருப்பி அனுப்பும் மாதவி, தான் மாதவராம் அறவண அடிகளின் உறைவிடம் சென்று அவரது வழிகாட்டலில் பவுத்த சீலங்கள் ஐந்தையும் ஏற்றுக் கொண்டுள்ளதையும் கூறுவாள்.

தான் ஒருவேளை பத்தினி என்கிற பிறப்பிற்குரியவளாக இல்லாதிருக்கலாம்; ஆனால் தந்தையின் பத்தினி என்கிற வகையில் கண்ணகி மணிமேகலையின் தாயாகிறாள். எனில் அவளும் எப்படி இத் தீத்தொழிற்குரியவள் ஆவாள் என்றொரு நியாயத்தையும் மாதவி முன்வைக்கிறாள்.

ஆனால் மறச்செயல்கள் அனைத்தையும் நீத்தவரும் மாசறு கேள்வி ஞானத்திற் சிறந்தவருமான அறவண அடிகளார் இந்தப் பிறவி நியாயங்களை எல்லாம் யோசித்தார் இல்லை. மாசறு மாதவன் தாள் பணிந்து ஐவகைச் சீலங்களையும் ஏற்போர் யார்க்கும் உய்வுண்டு என அவர்களை ஏற்றுக் கொண்டார். ஆடற்கலைக்கு அது பேரிழப்பாக இருக்கலாம். ஆனால் அவர்கள் தேர்ந்த பாதை சிறைக்கோட்டங்களை அறக்கோட்டங்கள் ஆக்கப் போகிறது. எத்தனையோ பேர்களின் பசித்துயர் களையப் போகிறது. பிறவியின் பெயரால் அவர்கள் அந்த வாய்ப்புகளை இழந்திருப்பின் அது அவர்களுக்கு மட்டுமா இழப்பு?

மாதவி சொன்னதைக் கேட்டு வயந்தமாலை வந்த வழியே திருப்பிச் சென்றபோது அந்த வனத்தில் மாதவி, மணிமேகலை அவள் தோழி சுதமதி ஆகிய  மூவரும் அம் மண்டபத்தில் அமர்ந்து பூசைக்குரிய மாலையைத் தொடுத்துக் கொண்டிருந்தனர்.

இந்தக் கணத்தில்தான் மணிமேகலையின் துறவுக்குரிய அந்த முதல் ஏது நிகழ்ந்தது.

தன் தாய்க்கும் வயந்தமாலைக்கும் இடையில் நடந்த அந்த உரையாடலைச் செவிமடுத்திருந்த மணிமேகலையின் கண்களிலிருந்து கசிந்த நீர்த் துளிகள் அந்தப் பூக்களில் சிந்தி பூசைக்குரிய அவற்றின் புனிதம் அழிந்தது. அதுவே அந்த முதல் ஏது நிகழக் காரணமாகவும் அமைந்தது. தனது முற்பிறவிகள் சார்ந்த கர்மிய வினைப்பயன்களை அந்தச் சிறுபெண் எதிர்கொள்ளத் தொடங்கினால். அவற்றை அவள் எவ்வாறு எதிர்கொள்கிறாள் என்பதைப் பொறுத்து அவளின் எதிர்காலம் அமையப் போகிறது.

“வயந்த மாலைக்கு மாதவி உரைத்த

உயங்குநோய் வருத்தத்து உரைமுன் தோன்றி

மாமலர் நாற்றம்போன் மணி மேகலைக்கு

ஏது நிகழ்ச்சி எதிர்ந்துள தாகலின்…”

என்பார் சாத்தனார். தந்தை மற்றும் இன்னொரு தாயான கண்ணகி ஆகியோரின் சோக முடிவுகள், பெற்ற அன்னை தவக்கோலம் பூண்டது, தன்னையும் அவள் அவ்வழியே திருப்பத் துணிவுகொண்டது முதலான  செய்திகள் மணிமேகலை துறவு மேற்கொள்வதற்கான ஏதுவாக அமைந்தது.

மகளின் கண்ணீரைத் துடைத்த மாதவி, பூசைக்குரிய புது மாலை தொடுக்க மீண்டும் உவவனம் சென்று பூக்கொய்துவரக் கோரினாள். தனியே செல்ல வேண்டாம் நானும் போகிறேன் என சுதமதியும் உடன்சென்றாள். ஊர்வழியே நடைபயின்று சென்றுகொண்டிருந்த அவர்களைப் பலரும் கண்ணுறுகின்றனர்.

அப்போது மதம் கொண்ட யானை ஒன்றை யாவரும் வியக்க அடக்கித் தேரில் வருகிறான இளவரசன் உதயகுமாரன். மணிமேகலை மலர்கொய்ய உவவனம் பக்கல் சென்றிருப்பதை அறிந்து அவளைத் தேரில் ஏற்றிக் கொணர்வேன் எனக் கூறி அவளிருக்கும் இடம் நோக்கி தேரைப் பாய்ச்சுகிறான். தேரொலி கேட்டு மருண்ட மணிமேகலை, அவன் தன் மீது மோகம் கொண்டிருப்பதை முன்னரே அறிந்தவள். அஞ்சி பளிக்கறையினுள் புகுந்த அவளை மணிமேகலா தெய்வம் தோன்றிக் காப்பாற்றி, மணிபல்லவத் தீவில் கொண்டு வைக்கிறது. அங்கே அவள் முற்பிறப்பு உணர்த்தப்படுகிறாள். புத்தபீடிகையை வணங்கும் பேறு பெறுகிறாள். கோமுகிப் பொய்கை அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியை அவளுக்கு அளிக்கிறது. ஆகா, எத்தனை வேகமாக நிகழ்ச்சிகள் நகர்கின்றன. அந்தச் சிறுபெண்தான் அடுத்தடுத்து என்னென்ன மாதிரியான அனுபவங்களை எல்லாம் எதிர் கொள்ள நேர்கிறது.

(அடுத்த இதழில் ஏதுக்கள் மலர்ந்து, முதிர்ந்து மணிமேகலை துறவேற்றல்)

ஒரு இளம்பெண் துறவை நோக்கிச் செல்லுகையில்

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் 7  (தீராநதி, ஜூலை 2017)

ஒரு மகா காவியத்திற்குரிய பிரும்மாண்டங்களுடனும், அழகுகளுடனும், அலங்கார மரபுகளுடனும் மணிமேகலை ஒரு தமிழ்க் காவியமாக மொட்டவிழ்கிறது. வணிகப் பெருக்கத்தாலும், இயற்கை வளத்தாலும் ஓங்கிச் செழித்திருந்த புகார் நகரில் நூற் பொருள் மெய்மைகளையும், வீடு பேறு ஈறான நான்கு உண்மைகளையும் அவற்றின் இயல்பு மாறாமல் காட்டத் தக்கவர்களாகிய சமயக் கணக்கர்களும், தம் துறை சார் அறிவிற் சிறந்த காலக் கணிதர்களும், மனித உருவில் நகரின் வந்துறைகின்ற கடவுளர்களும், ஐம்பெருங்குழு, எண்பேராயம் முதலான அரச அதிகாரத்தினரும். வளம் கொழிக்கும் நகரில் வணிக நிமித்தமாகவும் பிற காரணங்களுக்காகவும் வந்து நிறைந்துள்ள பல மொழி பேசும் பன்னாட்டவரும் அரசவையில் வந்து குழுமி இருபத்தெட்டு நாட்கள் தொடர்ந்து நடக்கக் கூடிய இந்திரவிழா குறித்துத் திட்டமிடக் கூடியுள்ள காட்சியுடன் தொடங்குகிறது மணிமேகலைக் காப்பியம். விழாச் செய்தியை ஊர்மக்களுக்கு அறிவிக்க முதுகுடிப் பிறந்த வள்ளுவன் அழைக்கப்படுகிறான். ஊர்க் கோவிலில் நெய்தடவிப் போற்றிப் பாதுகாக்கப்படுவதும் இடி முழக்கத்தை எழுப்ப வல்லதுமான முரசம் கச்சை யானையின் பிடர்த்தலையில் ஏற்றப்பட்டு  விழா பற்றி ஊர் மக்களுக்கு அறைதல் தொடங்குகிறது. இந்திரனும் இதர தேவ கணங்களும் வந்துறையும் இந்நாட்களில் தோரண வீதியும், ஆலய வாயில்களும் பூரண கும்பங்களாலும், பொற் பாலிகைகளாலும், பாவை விளக்குகளாலும் அலங்கரிக்கப்படட்டும்; முற்றிய குலைகளுடன் கூடிய கமுகும், வாழையும், வஞ்சியும் கரும்பும் ஊர் தோறும் நடப்படட்டும், வீதிகளில் உள்ள தூண்களில் முத்து மாலைகள் பொலியட்டும்… என்றெல்லாம் விழாவில் பங்கேற்க ஊர் மக்களுக்கு அழைப்பு விடும் காட்சியோடு காப்பியம் விரிகிறது. “பசியும் பிணியும், பகையும் நீங்கி, வசியும் (மழையும்) வளனும் சுரக்க..” என ஊர் மக்கள் வாழ்த்தப்படுகின்றனர்.

இந்திர விழாவுக்கு மட்டுமல்ல, “பசிப் பிணி அகற்றல்” எனும் அற நோக்கிற்கும் இப்படித் தொடக்க அத்தியாயத்திலேயே கால்கோள் இடப்படுகிறது.

இந்த பிருமாண்டமான பின்னணி அடுத்த அத்தியாயங்களிலேயே பின்னுக்குத் தள்ளப்பட்டு நேரடியாக காப்பிய நாயகியின் கதை முன்னுக்கு வருகிறது. காப்பிய நாயகியான மணிமேகலை நூல் இறுதி நிலை எட்டுவதற்குச் சற்று முன் வரை ஒரு காவிய நாயகிக்குரிய இலக்கணங்களுடனேயே அறிமுகப்படுத்தப்படுகிறாள். ‘மணிமேகலை துறவு’ என்பது இந்நூற் பெயர்களில் ஒன்று என்பதை முன் அத்தியாயத்திலேயே குறிப்பிட்டேன். ஒரு இளபெண்ணுக்குரிய அனைத்து ஆசைகளையும், வேட்கைகளையும் படிப்படியாகத் துறக்கும் வரலாற்றைச் சொல்வதன் ஊடாக பௌத்த நெறிகளை விளக்குவதே நூலின் நோக்கமாயினும் அதன் பொருட்டு சாத்தனார் காவிய நெறிகளை முற்றாக விட்டுக் கொடுத்துவிடுவதும் இல்லை. காவிய நெறிகளால் அமங்கலம் எனக் கருத்தப்படும் வகையில் மணிமேகலையை அவர் இறுதி அத்தியாயங்களுக்கு முன்னதாகக் காட்சிப் படுத்துவதில்லை.

ஒருவகையில் சிலப்பதிகாரத்தின் தொடர்ச்சிதான் மணிமேகலை என்ற போதிலும், இது “ஒருவகையில்” மட்டுமே என்பதைச் சாத்தனார் தொடர்ந்து அடையாளப்படுத்திக் கொண்டே உள்ளார். பல வகைகளில் சிலம்புக்கும் மேகலைக்கும் வேறுபாடுகள் உண்டு என்பதை முன் அத்தியாயத்திலேயே பார்த்தோம். சிலப்பதிகாரத்தில் கோவலன் அநீதியாகக் கொலை செய்யப்பட்டு, மதுரை எரிக்கப்பட்ட செய்தி அறிந்த உடனேயே மாதவி தானும் மகளும் இனித் துறவுக்கோலம் கொள்வதென முடிவு செய்ததோடன்றி மணிமேகலையையும் அவ்வாறே சிகையை மழித்துத் துறவுக் கோலத்திற்கு ஆட்படுத்துவாள்.

“மணிமேகலையை வான் துயர் உருக்கும்

கணிகையர் கோலம் காணாதொழிகெனக்

கோதைத் தாமம் குழலொடு களைந்து

போதித்தானம் புரிந்தறங் கொள்ளவும்…” (சிலம்பு 27 : 105-108)

 

எனவும், பிறிதோரிடத்தில்,

“வருகவென் மடமகள் மணிமேகலை என்று

…………………………

கோதைத் தாமம் குழலொடு களைந்து

போதித்தானம் புரிந்தறம் படுத்தனள் “ (சிலம்பு 30 : 24 – 27),

எனவும் பிறிதோரிடத்தில்,

“திருவிழை கோலம் நீங்கினளாதலின்” (சிலம்பு 30 : 36)

 

எனவும் தந்தை இறந்த செய்தி அறிந்த உடனேயே தலைமுடி முதலான மங்கல அடையாளங்கள் நீக்கப்பட்டவளாக மணிமேகலையைச் சித்திரிப்பார் இளங்கோ அடிகள். ஆனால் மணிமேகலையை முன்வைத்து பவுத்த அறங்களை விளக்க  ஒரு காவியம் இயற்ற வந்த சாத்தனாரோ காப்பிய இறுதி வரை மணிமேகலையை, மக்கள் மங்கலமாகக் கருதும் அடையாளங்களுடனேயே படைப்பார்.

“மதுமலர்க் குழலாள் மணிமேகலைதான்” (மணி  5 : 89 -3)

‘மதுமலர்க் குழலி” (மணி 21 ; 4)

என்றெல்லாம் தேன் சுமந்த மலர்களைச் சூடிய தலையலங்கார முடையவளாகவே அவளை முன்னிறுத்துவார். தவிரவும் இறுதிவரை மணிமேகலையின் உடல் அழகைக் காவிய பாணியில் சற்றே கவர்ச்சிகரமாக வருணிக்கவும் அவர் தவறுவதில்லை. எடுத்துக்காட்டாகச் சில:

“பைத்தற அல்குற் பாவைதன் கிளவியின்” (மணி 28 ; 220 –படம் எடுத்த பாம்பைப் போன்ற  அல்குல் உடையாள் எனும் பொருளில்)

“பொன்திகழ் மேனிப் பூங்கொடி” (மணி 21 : 36)

“சேயரி நெடுங்கண்” (மணி 21 : 270)

இப்படி இன்னும் எடுத்துக்காட்ட இயலும். இப்படி சாத்தனார் மணிமேகலையின் அழகை காவிய பாணியில் வருணிப்பது மட்டுமல்ல, ஒரு இளம் பெண்ணின் மன ஓட்டங்களையும், அவள் வயதுக்குரிய சலனங்களையும் மிக நுணுக்கமாக அவர் சித்திரிக்கவும் தயங்குவதில்லை. இரண்டு காட்சிகள் மட்டும் இங்கே.

சோழ இளவரசன் உதயகுமாரன் மணிமேகலை மீது காதல் கொண்டு அவளைப் பின் தொடர்கிறான். பருவ வயதினளான அவள் சற்றே சலனத்துக்குள்ளாகிறாள். இது இப்பிறவித் தொடர்பு மட்டுமல்ல, முற்பிறவியிலும் அவள் கணவனாக அவளோடு வாழ்ந்தவன் அவன்.  கோவலன் படுகொலை செய்யப்பட்டதென்பது அவள் மிகச்சிறிய வயதில் எதிர்கொண்ட மிகப் பெரிய இழப்பு. அதை ஒட்டி அவள் தாய் மாதவி இவளைத் துறவுப் பாதையை நோக்கித் திருப்பும் முயற்சிக்கிறாள். இத்தனைக்கும் மத்தியில் அவளது பருவ உணர்வுகள் அவளைப் படுத்தும் பாட்டையும் சாத்தனார் காப்பிய அழகுடன் சுட்டிக்காட்டத் தவறுவதில்லை.

“புதுவோன் பின்னைப் போனது நெஞ்சம்

இதுவோ அன்னாய் காமத்து இயற்கை

இதுவே ஆயின் கெடுகதன் திறம் என.” (5 : 89 – 91)

 

எனச் சிணுங்கும் அந்த இளநங்கை அடுத்தடுத்துச் சம்பவிக்கும் நிகழ்வுகளின் ஊடாக இந்தத் திசை நழுவல்களிலிருந்து மீண்டு அவளது துறவுப் பாதையில் மேற்செல்கிறாள் என்ற போதிலும் இளம் வயதின் உடலியற்கையின் விளைவான உணர்வுத் தூண்டல்களிலிருந்து அவள் முற்றாக விடுதலை பெறவில்லை என்பது உதயகுமாரன் தன் மீது வைத்த ஆசையின் பொருட்டுக் கொலை செய்யப்பட்டான் என அவள் அறிந்தபோது மீண்டும் வெளிப்பட்டு விடுகிறது.

“(முற்பிறவியில்) விடம் தீண்டி நீ இறந்தபோது நெருப்பில் வீழ்ந்து நானும் உனைத் தொடர்ந்தேன். (இப்பிறவியில்) உவவனத்திடையே உன்னை முதலில் கண்டபோது உன்னிடத்தே சென்ற என் உள்ளத்தை மீட்டெடுக்க இயலாதவள் ஆயினேன். மணிமேகலா தெய்வம் என்னை மணிபல்லவத் தீவிற்குக் கொண்டு சென்று பிறவிப் பிணியை நீக்கும் மாதவராம் புத்த தேவனின் பாதபீடிகையில் என்னச் சரணாக்கினாள். நான் காயசண்டிகை உருவில் மறைந்திருப்பதை அறியாத அவள் கணவன் என்னை நாடி வந்த உன் மீது தவறாக ஆத்திரம் கொண்டான். உன் தீவினையும் சேர்ந்து உன் அழிவுக்குக் காரணமானது.. அய்யோ…” என அழுது புலம்பி (மணி 21 : 11 – 25)., எழுந்து அவனது உடல் கிடத்தப்பட்டிருந்த இடம் நோக்கி அவள் நகர முற்பட்ட தருணத்தில்,

“செல்லல் செல்லல்! சேயரி நெடுங்கண்!” (மணி 21 : 27) என அவளை மீண்டும் தெய்வம் தடுத்தாட் கொண்டது.

துறவுப் பாதையை நோக்கிய அவளது பயணத்தில் உரிய “ஏது”க்கள்  (ஹேது –  மூல நிபந்தனை) அவளைத் தொடர்ந்து எதிர்கொள்கின்றன. பவுத்தம் கூறும் இந்த “ஏது”க்கள் குறித்துப் பின்னர் விரிவாகப் பார்ப்போம். அந்த ஏதுக்கள் உரிய வகையில் முதிரும் தருணத்தில் அவள் துறவுநிலைக்கான முதிர்ச்சியை அடைகிறாள் என்பது பவுத்த நம்பிக்கை. சாத்தனார் அவ்வாறு மணிமேகலையின் வாழ்வில் ஏதுக்கள் முதிர்ந்து வருவதை பவுத்த நெறி நின்று சொல்லும் பாங்கைப் பார்க்கும் முன் எப்படியான பிரதி வியூகங்கள் (textual strategies) மூலம் காவிய நகர்வின் ஊடாக இந்த மாற்றத்தை சாத்தனார் சாத்தியமாக்குகிறார் எனப் பார்ப்போம்.

மணிமேகலையின் கட்டுமானம் மிகச் சிக்கலான ஒன்று.  30 அத்தியாயங்களில் அமைந்துள்ள 4758 வரிகளில் ஆன இந்நூலில் 16 கிளைக் கதைகள் பதிக்கப்பட்டுள்ளன. பவ்லா ரிச்மான் போன்றோர் இக் கிளைக்கதைகள் குறித்து மிக விரிவாக ஆய்ந்துள்ளனர். இந்திய மரபில் சில அடிப்படையான சமூக நீதிகளாகக் கருதப்பட்டவற்றைப் பரப்புவதற்கும் பயிற்றுவிப்பதற்கும் கதைகள் மிக முக்கிய கருவிகளாகப் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. புத்தர்களின் முற் பிறவிகளைச் சொல்வதாகக் கருதப்படும் புத்த ஜாதகக் கதைகள்  (கி.மு 4ம் நூ ஆகக் கொள்ளலாம்), பஞ்சதந்திரக் கதைகள் (கி.மு 3ம் நூ என்பர்) ஆகியன சில எடுத்துக்காட்டுகள். பெருங்காப்பியங்கள் கூட இப்படியான உட் கதைகள் பதிக்கப்பட்ட மணியாரங்களாகத்தான் இங்கு அமைந்துள்ளன. மகாபாரதம் இதற்கொரு எடுத்துக்காட்டு. மணிமேகலையில் பதிக்கப்பட்டுள்ள இந்த 16 கதைகளையும் ஆராய்ந்தோர் ஒன்றைக் குறிப்பிடுவர். இவை ஒவ்வொன்றும் மணிமேகலையின் ஊடாக முன்வைக்கப்படும் பவுத்தத்தின் ஒரு குறிப்பிட்ட கோட்பாட்டை விளக்கும் நோக்கில் அமைந்துள்ளன என்பதுதான் அது. மொத்தத்தில் மையக் கதை எதை நோக்கி இயங்குகிறதோ அதற்கு வலு சேர்க்கும் முகமாக இந்தக் கிளைக் கதைகள் செயல்படுகின்றன. மணிமேகலையைப் பொருத்தமட்டில் நாம் இன்னொன்றையும் கவனத்தில் இருத்த வேண்டும். ஒரு இளம் பெண்ணின் துறவை நோக்கிய இயக்கத்தைச் சொல்வதாக அது அமைந்த போதும் கூடவே அது ஒர் தத்துவ விவாத நூலாகவும் அமைந்துள்ளது. அதன் இறுதி அத்தியாயங்கள் இந்தத் தத்துவ விளக்கங்களாகவும் விவாதங்களாகவுமே முற்றுப் பெறுகின்றன. இப்படியான ஒரு தத்துவ விவாதத்தைக் காவியமாக்குதல் என்கிற ஒரு அதிசயத்தைச் சாதித்ததாகவும் மணிமேகலை அமைகிறது.

கதைப்போக்கு, உரையாடல்கள், பதிக்கப்பட்ட உட்கதைகள் என காப்பியத்தின்  ஒவ்வொரு அங்கத்தின் ஊடாகவும் நிலவும் பொதுக் கருத்தியலுக்கு எதிரான மாற்றுக் கருத்துக்கள் தொடர்ந்து முன் வைக்கப்படுகின்றன. அதன் மூலம் வைதீகச் சிந்தனைகளுக்கு மாற்றாக பவுத்தம் முன்வைத்த மாற்றுச் சிந்தனைகள் மீது கவனம் ஈர்க்கப்படுகின்றன.

எடுத்துக்காட்டாக ஒன்று. உதயகுமாரன் மணிமேகலை மீது மோகம் கொண்டு அவளை அடையத் தீவிரமாகிறான். மணிமேகலா தெய்வம் அவளை மீட்டு மணிபல்லவத் தீவில் கொண்டு வைத்துத் திரும்பி வந்து உதயகுமாரனுக்கு அறிவுரைக்கிறது.;

“மன்னவன் மகனே! ‘கோ’ (அரசன்) நிலை தவறினால் ‘கோள்’களும் நிலை தவறும். கோள்கள் நிலை தவறினால் மழை பொய்க்கும். மழை பொய்த்தால் மன்னுயிர் (மனிதர்கள்) அழியும். மன்னுயிர் அழிந்தால் மன்னுயிர் எல்லாம் தன்னுயிர் எனக் கருத வேண்டிய மண்ணாள் வேந்தனின் தகைமை அழியும்” (மணி 7 : 7 -12) என்கிறது மனிமேகலா தெய்வம்.

மேற்கண்ட கூற்றில் கடைசியாகச் சொல்லப்படும் “மன்னுயிர் எல்லாம் மண்ணாள் வேந்தன் தன்னுயிர்” என்பது மணிமேகலைக்கு முந்திய சங்கம் தொட்டு நிலவி வந்த “மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” எனும் மோசுகீரனாரின் புறப்பாடலுக்கு (புறம் 186) முற்றிலும் நேர் எதிரானது. “மன்னனே உயிர், மக்கள் வெறும் உடல்தான். மன்னன் நன்றாக இருந்தால்தான் மக்கள் நன்றாக இருக்க முடியும்” என்பது மோசுகீரனாரால் முன்வைக்கப்படும் பழைய கருத்து. இதற்கு மாறாக சாத்தனார் முன்வைக்கும் மாற்றுக் கருத்து, “மக்கள்தான் உயிர். மக்கள் நன்றாக இருந்தால்தான் மன்னன் நன்றாக இருக்க முடியும்” என்பது.

இப்படி நிறையச் சொல்ல இயலும். உதயகுமாரனிடமிருந்து மணிமேகலையைக் காப்பாற்றி மணிபல்லவத் தீவில் விட்டு மணிமேகலா தெய்வம் நீங்கியபின் மணிமேகலை கண்விழிப்பாள். புதிய இடத்தை அவள் வியப்புடன் நோக்கிக் கொண்டிருக்கும்போது அங்கு தோன்றும் தீவதிலகை, “இலங்குதொடி நல்லாய் யார் நீ” என்பாள் (மணி 11: 8). அதற்கு மணிமேகலை,“எப்பிறப் பகத்துள், ‘யார் நீ’ என்றது? (மணி 11.9) எனத் திருப்பிக் கேட்பாள். வெறுமனே “யார்நீ?’ எனின் என்ன பொருள் கொள்ள முடியும். கர்ம வினைக்கேற்ப பிறவிகள் தொ.டர்கின்றன. இப்படி ஒவ்வொரு பிறவியில் ஒவ்வொருவராகப் பிறப்பெடுத்துள்ளபோது எந்தப் பிறவியைக் கருத்திற்கொண்டு நான் இதற்குப் பதில் அளிக்க இயலும் என்பது இதன் பொருள்.

எல்லாம் மாறிக்கொண்டும் இயங்கிக் கொண்டும் இருக்கின்றன. எதுவும் நிரந்தரம் இல்லை. எல்லாம் இயங்கிக் கொண்டு மட்டுமல்ல அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்தும் உள்ளன என்பன பவுத்த அடிப்படைகளில் ஒன்று மனிமேகலைப் பிரதி இதைத் தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டே இருக்கிறது. மாதவி, சுதமதி ஆகியோரின் முற்கதையைக் கூறிய அறவணர் இறுதியாக,

“ஆடும் கூத்தியல் அணியே போல

வேற்று ஓர் அணியோடு வந்தீரே”

என்பார். நாடகத்தில் ஆடைமாற்றி வரும் கூத்தியர் போல தொடர்ந்த பிறவிச் சுழலில் ஓர் இடைக் கண்ணியே இந்த வாழ்க்கை என்பது பொருள். வெவ்வேறு காட்சிகளில் வெவ்வேறு ஆடைகளில் தோன்றும் நடிகர்கள் போல நாமும் வெவ்வேறு பிறவிகளில் வெவ்வேறாக உணர்கிறோம்.

இப்படிப் பவுத்த அடிப்படைகள் ஆங்காங்கு நுணுக்கமாக வெளிப்படுக் கொண்டே இருந்தாலும் மணிமேகலைக் காப்பியத்தின் மிக அடிப்படையான கரிசனம் பசிப்பிணி அகற்றுவது, எல்லோராலும் கைவிடப்பட்டோருக்கு ஆதரவாக அமைவது என்பதே. எல்லாவற்றையும் துறந்து சங்கத்தில் ஐக்கியமாகும்போதும் கூட மணிமேகலை அவளுக்கு அருளப்பெற்ற அமுதசுரபியை கோமுகி எனப்படும் நீர்த்தேக்கத்தில் அமைக்கப்பட்ட புத்தபீடிகையின் மீது அமர்த்தி பசித்து வருவோர் என்றென்றும் பசியாற வழி செய்த பின்னரே அகல்கிறாள். பதினெட்டு மொழி பேசும் மக்களும் அங்கு குவிந்தனர். மனிதர்கள் மட்டுமன்று எல்லா உயிரினங்களும் குவிந்தன.

காணார், கேளார், கால்முடமானோர், கைவிடப்பட்டோர், பேசார், பிணித்தோர், நோன்பிகள், நோயுற்றோர் ஆகியோரோடு “மடிநல் கூர்ந்த மக்கள்” யாவரும் அங்கு என்றென்றும் பசியாறலாம்.

அதுசரி, யார் இந்த ‘மடிநல் கூர்ந்த மக்கள்”?

(அடுத்த இதழில் ஒரு பெண்ணின் துறவும் பவுத்த கருணையும்)

 

சிறைக்கோட்டமும் அறக்கோட்டமும் : பவுத்தம் சொல்வதென்ன?

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள் – 2,

தீராநதி, பிப்ரவரி 2017

சென்ற வாரம் கடலூரில் மனித உரிமை அமைப்புகள் சார்பாக ஒரு கண்டனக் கூட்டம் நடைபெற்றது. கடலூர் மத்திய சிறையில் கடந்த எட்டு மாதங்களில் நான்கு கைதிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இன்னும் மூவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மருத்துவமனையில் உயிர் பிழைத்துள்ளனர். இது குறித்த விசாரணை வேண்டும். மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் சிறைக்குச் சென்று கைதிகளிடம் பேசி உண்மை நிலையைக் கண்டறிய அனுமதி வேண்டும் என்பன முக்கிய கோரிக்கைளாக அந்தக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டன.

இந்தியச் சிறைகளில் தற்கொலைகள், கொலைகள், உரிய சிகிச்சை இல்லாமல் நிகழும் மரணங்கள் ஏராளம். 2001 – 2010 காலகட்டத்தில் மட்டும் போலீஸ் மற்றும் சிறைக் காவல்களில் 14,231 பேர் செத்துள்ளனர் என்கின்றன தேசிய மனித உரிமை ஆணையம்  (NHRC) வெளியிட்டுள்ள புள்ளி விவரங்கள். அதாவது தினம் நான்கு சாவுகள். தேசிய குற்ற ஆவண நிறுவனம் (National Crime Records Bureau) வெளியிட்டுள்ள அறிக்கை 2011 ல் மட்டும் 1,332 கைதிகள் இந்தியச் சிறைகளில் செத்துள்ளனர் எனவும் இதில் 93.4 சத மரணங்கள் “இயற்கையானவை” எனவும் கூறுகின்றது. 68 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எட்டு பேர் பிற கைதிகளால் கொலை செய்யப்பட்டுள்ளனர். மொத்ததில் 12 மரணங்கள் இயற்கை மரணங்கள் இல்லாதவையாம். இயற்கை மரணங்கள் என அரசு சொல்பவையே ஆய்வுக்குரியவை. தமிழகச் சிறைகளில் உரிய வைத்திய வசதி இல்லாமல் பல ஆண்டுகள் இருந்து இறந்த கைதிகளை அறிவேன். தவிரவும் இந்தப் புள்ளி விவரங்கள் பலவும் பிரச்சினைக்குரியவை. ஒரே ஆண்டு குறித்த மனித உரிமை ஆணையத்தின் புள்ளி விவரமும் தேசிய குற்ற ஆவண நிறுவனப் புள்ளிவிவரமும் வேறுபடுவது இதை உறுதியாக்கும். தவிரவும் இந்த மரணங்களில் பலவும் சிறையில் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகளின் விளைவு என்கிறது ஆசிய மனித உரிமை மையம் (Asian Centre for Human Rights) அதே 2011 ல் வெளியிட்டுள்ள அறிக்கை.

இந்த மரணங்களுக்கு இன்னும் பலவிதக் காரணங்கள் உள்ளன. டெல்லி திகார் சிறையில் நிர்பயா கொலை வழக்கில் கைதாகியிருந்த ராம்சிங் (33) சில ஆண்டுகள் முன் தற்கொலை செய்துகொண்ட போது அவரது பெற்றோர்கள் இது கொலை எனக் குற்றம் சாட்டினர். ஓரினப் புணர்ச்சி தொல்லையும் அவருக்கு இருந்ததாகக் கூறினர். பெங்களூரு பரப்பன அக்ரகாரச் சிறையில் பெண் கைதிகள் அங்குள்ள பணக்கார ஆண்கைதிகளுக்கு கட்டாயமாக விபச்சாரத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர் என்கிற குற்றச்சாட்டு சில ஆண்டுகள் முன் விசாரணைக்கு வந்தது. மும்பை சிறைச்சாலை ஒன்றில் பெண் கைதிகளைக் கண்காணிக்க வைக்கப்பட்டுள்ள CCTV க்களை நீக்க வேண்டும் என அவர்கள் போராடினர். அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் சிறைக் காவலர்களால் பாலியல் வக்கிரத்துடன் கண்காணிக்கப்படுகின்றன என்பது குற்றச்சாட்டு. சட்டிஸ்கரில் மாஓயிஸ்ட் ஆதரவாளர் எனக் கைது செய்யப்பட்ட ஹிட்மே கவாசி எனும் பழங்குடிப் பெண் சிறையில் செய்யப்பட்ட சித்திரவதைக் கொடுமைகளை இன்று சக கைதியாக இருந்த சோனி சோரி வெளிப்படுத்தியுள்ளார். கர்ப்பமாக இருந்தபோது கைது செய்யப்பட்ட அவர் பிரசவ நேரத்திலும் கூட விலங்கிடப்பட்டிருந்தாராம்.

இப்படி நிறையச் சொல்லலாம். ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். தமிழகச் சிறைகள் இந்தப் பிரச்சினையில் ரொம்ப  மோசம். 2000 -2015 க்குள் மட்டும் 1155 பேர் இறந்துள்ளனர். அதாவது நான்கு நாட்களுக்கு ஒருவர் தமிழகச் சிறைகளில் செத்துப் போகிறார்.

நிறையச் சொல்லலால். சுருக்கம் கருதி இரண்டு விடயங்களோடு நிறுத்திக் கொள்கிறேன். நமது சிறையின் கொள்ளளவைவிட இரு மடங்கு மக்கள் உள்ளே அடைக்கப்படுகின்றனர். இதில் கிட்டத்தட்ட பாதிப்பேர் குற்றம் உறுதி செய்யப்படாத விசாரணைக் கைதிகள். பல நேரங்களில் இவர்களின் எண்ணிக்கை தண்டனைக் கைதிகளை விடவும் அதிகம். சிறைக் கைதிகளின் ‘இயற்கை மரணங்களில்’ இப்படியாக அதிக அளவில் கைதிகள் அடைக்கப்படுவதால் ஏற்படும் ஆக்சிஜன் பற்றாக்குறையும் கூட ஒரு காரணம்.

அதேபோல சிறைக்குள் கடைபிடிக்கப்படும் ஏற்றத் தாழ்வுகளும் கொடுமையானவை. சிறை மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் தலித்கள், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்தான். இவர்களுக்கு சிறை விதிகளின்படி அளிக்கப்படும் ‘பரோல்’ முதலிய உரிமைகளுக் கூட முழுமையாக அளிக்கப்படுவதில்லை. சுருக்கம் கருதி விவரங்களைத் தவிர்க்கிறேன்.

#   #    #

ஐரோப்பாவை மையமாக வைத்து 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தண்டனை நடவடிக்கையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் மற்றும் நவீன சிறைச்சாலை உருவாக்கங்கள் குறித்து மிஷேல் ஃபூக்கோ முன்வைத்த ஆய்வுகள் நவீன சிந்தனை உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகிப்பவை. மத்திய காலத்திலும் அதற்கு முற்பட்ட காலங்களிலும் ‘நவீன சிறைச்சாலைகள்’ கிடையாது. அப்போதெல்லாம் பெருங் கூட்டமாகத் திரட்டப்பட்ட மக்கள் முன் கடுஞ்சித்திரவதைகளினூடாக குற்றவாளிகள் கொல்லப்படுவது ஒரு சடங்கு நிகழ்வாக அரங்கேற்றப்பட்டது. நிற்க மட்டுமே முடிந்த கூண்டுகளில் அடைத்து வைத்துக் கொல்லப்படுதல், உயிருடன் தோலை உரித்துத் தொங்கவிடப்படுதல், உறுப்புகள் துண்டிக்கப்படுதல் இப்படி எல்லாம் தண்டனைகள் அரங்க நிகழ்ச்சிகள் போலக் காட்சிப்படுத்தப்பட்ட நிலை 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மாற்றம் அடைந்தது. நவீன சிறைச்சாலைகள் உருவாயின.

இதனூடாக தண்டனை வடிவில் மாற்றங்கள் நடந்தனவே ஒழிய தண்டனைகளின் ஊடாக சமூகம் ஒழுங்கமைக்கப்படுதல் என்பது இன்னும் நுணுக்கமாகத் தொடர்ந்தது. தண்டிக்கப்பட்டவர்களின் உடல் மீதான வன்முறைகள் காட்சிப்படுத்தப்படுவது நின்றாலும் ஒழுங்கமைக்கப்பட்ட சமூகத்தின் நடுவே அதன் ஒரு பகுதியாக நிறுவப்பட்ட சிறைச்சாலைகளின் ஊடாக சமூகம் ஒழுங்கமைக்கப்படுவது நிற்பதில்லை. சிறைப்பட்டவரின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படுவதன் மூலம் அவன் புழங்கு வெளியும், அவன் புழங்கு காலமும் மிகத் துல்லியமாக ஒழுங்கமைக்கப்படுகின்றன. சமகால நவீன நிறுவனங்களான தொழிற்சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள், இராணுவ தளங்கள் அனைத்தும் இவ்வாறே அமைக்கப்பட்டுள்ளன.

இந்தப் புதிய ஒழுங்கமைப்பு நிறுவனங்களின் மூலம் இன்னும் இறுக்கமாக சமூகம் கண்காணிக்கப்பட்டு ஒழுங்கமைக்கப்படுகிறது. சிறைச்சாலைகளின் நோக்கம் குற்றங்களைக் குறைப்பதோ, குற்றவாளிகளைத் திருத்துவதோ, குற்றச் சமூகம் ஒன்று உருவாவதைத் தடுப்பதோ அல்ல. மாறாக குற்றச் சமூகம் ஒன்று இருப்பது அரசுக்குத் தேவையாக இருக்கிறது. குற்றச் சமூகம் ஒன்று இருப்பதே அரசின் இந்தக் கண்காணிப்புகளையும், இராணுவம் மற்றும் போலீஸ் மூலம் சமூகம் கட்டுக்குள் வைக்கப்படுவதையும் நியாயப்படுத்துகிறது என்பவற்றையெல்லாம் ஃபூக்கோ நிறுவியது சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியில் ‘குற்றவியல்’ மற்றும் ‘கண்காணிக்கப்படும் சமூகம்’ தொடர்பான புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. ‘ஆதார் அட்டை’ நம் உடல் மற்றும் வாழ்வின் பிரிக்க இயலாத ஒரு அங்கம் ஆக்கப்படும் இன்றைய சூழலில் இந்தக் கண்காணிப்பு அதன் உச்சத்தைத் தொட்டுள்ளது.

இதை நாம் சரியாகப் புரிந்து கொண்டோமானால் சிறைச்சாலைகள் தொடர்பாக இப்போது எழுகின்ற இரு கேள்விகள் பொருளற்றதாகி விடுவதை உணரலாம். அவை: 1. தண்டனை வழங்குதல் மூலம் குற்றங்கள் குறையும் என்பது ஏன் நிகழவில்லை? 2. தண்டனை வழங்குதல் மூலம் குற்றவாளிகள் திருந்துவார்கள் என்பதும் ஏன் உண்மையாகவில்லை? இந்த இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதில்தான். தண்டனை வழங்குதல் மற்றும் சிறைச்சாலைகளின் நோக்கம் குற்றங்களைக் குறைப்பதோ இல்லை குற்றவாளிகளைத் திருத்துவதோ அல்ல என்பதுதான். ஒரு வகையில் அரசுகள் மற்றும் அதிகாரத்தின் இருப்பிற்குக் குற்றங்களும் தேவைப்படுகின்றன. குற்றவாளிகளும் தேவைப்படுகின்றனர். எனவேதான் சிறைச்சாலைச் சீர்திருத்தங்கள் குறித்த மனிதாபிமானிகள், சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரால் முன்வைக்கப்படும் கருத்துக்கள் இன்று அரசுகளால் மூர்க்கமாக மறுக்கப்படுகின்றன. அப்படி அரசுகள் மறுப்பதற்கு மக்களின் முழு ஆதரவு இருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நிர்பயாவின் கொலையில் கைதான ராம்சிங்கிற்குச் சிறையில் கொடுமைகள் நிகழ்ந்தன என நாம் சொல்லத் துணிவோமானால் பெரும்பான்மை மக்களின் கடும் எதிர்ப்பைத்தான் நாம் எதிர்கொள்ள நேரிடும். எத்தனை கொடூரமான கொலையைச் செய்தவன் அவன்? அவனுக்கா மனித உரிமை வேண்டும் என்கிறாய்?

#   #   #

எனினும் மனிதன் என்கிற வகையில் அவனுக்கும் உரிமைகள் வேண்டும் என்கின்றவர்கள் சிறைச்சாலைகளில் உடனடியாகச் செய்ய வேண்டியன எனச் சில சீர்திருத்தங்கள் குறித்துப் பேசிக் கொண்டுதான் உள்ளனர். இவர்களில் சில இரக்கமுள்ள அதிகாரிகளும் உண்டு.

சர் கோட்ஃப்ரே லூஷிங்டன் 1885 -1895 காலகட்டத்தில் இங்கிலாந்தின் நிரந்தர உள்துறைச் செயலராக இருந்தவர். தண்டனை அமைப்பு குறித்த அரசு குழு ஒன்றின் முன் சாட்சியமளித்தபோது அவர் சொன்னது:

“ஒரு கைதி திருந்துவதற்குச் சிறைச்சாலைகளில் உள்ள கீழ்க்கண்ட நிலைகள் பொருத்தமாக இல்லை என நான் கருதுகிறேன். அவன் சிறையில் கழிக்கும் காலம் முழுவதும் அவனது சுயமரியாதை நசுக்கி அழிக்கப்படுகிறது; அவனிடம் எஞ்சியுள்ள அற உள்ளுணர்வுகள் வாடிச் சோர்கின்றன; இரக்கத்தை வெளிப்படுத்தவோ, அனுபவிக்கவோ உள்ள எல்லா வாய்ப்புகளும் அடைக்கப்படுகின்றன; குற்றவாளிகள் தவிர வேறு யாருடனும் அவன் தொடர்பு கொள்ள வாய்ப்புகள் அறவே மறுக்கப்படுகின்றன…….. ஒரு மனிதனைத் திருத்துவது அல்லது சமூகத்திற்கு அவனை திருப்பிக் கையளிப்பது என்பது நான் இப்போது சொன்ன அனைத்திற்கும் எதிர்த் திசையில் அமைகின்றது என்றே நான் நம்புகிறேன்; ஆனால் உண்மையில், இவை வெறும் கருத்துக்கள்தான். ஒரு சிறைச்சாலையில் இதெல்லாம் சாத்தியமில்லை. திருந்துவதற்குச் சாத்தியமில்லாதவை என நான் மேலே குறிப்பிட்ட அனைத்து அம்சங்களும் சிறை வாழ்விலிருந்து பிரிக்க இயலாத எதார்த்தங்களாக உள்ளன…”

லூஷிங்டன் என்ன இருந்தாலும் ஒரு அதிகாரி. அவரது அறத் தன்னிலைக்கும் அதிகார இருப்பிற்கும் உள்ள முரணை அவரே உணர்ந்து கொள்வதுதான் அவரது மேன்மை எனலாம். சிறைக் கைதிகள் இன்றைய சிறைச்சாலைகளின் ஊடாகக் கழிக்கும் தண்டனை வாழ்வின் மூலம் திருந்துவதற்கான வாய்ப்பே இல்லை என்பதைச் சரியாகவே அடையாளம் காணும் அவர் இந்தச் சிறை அமைப்பில் அது சாத்தியம் இல்லை எனப் பெருமூச்சு விடுகிறார். அதிகாரி. அவரால் வேறென்ன செய்ய முடியும்?

ஆனால் நம் தமிழிலக்கியத்தில் வேறெங்கும் காணக் கிடைக்காத ஒரு அற்புதம் நிகழ்கிறது. முற்றிலும் நாயகனே இல்லாத, ஒரு நாயகியை மட்டுமே தலைவியாய்க் கொண்டு இயங்கும் மகா காவியமான மணிமேகலையில் காவிய நாயகியான அன்னை மணிமேகலை முற்றிலும் புதுமையாய் ஒரு தீர்வைச் சொல்லுகிறாள். அவள் அதிகாரி அல்லள். குடும்பச் சிறையில் அகப்பட்ட ஒரு சாதாரண மானுடப் பெண்ணும் அல்லள். அவள் புத்த நெறியை ஏற்ற ஒரு துறவி. எனவே அவளால் அதைச் சொல்ல முடிகிறது.

அவளுக்கு புத்தபிரான் அருளால் யாருக்கும் வாய்க்காத ஒரு பெரும்பெறு வாய்க்கிறது. அள்ள அள்ளக் குறையாத அமுத சுரபி ஒன்று அவளுக்கு அளிக்கப்படுகிறது. அதன் மூலம் மானுடரின் மிகப் பெரிய பிணியாகிய பசிப்பிணையை அகற்றும் பெரும்பேறுக்கு உரியவளாகிறாள் அந்த இளம் பிராயத்தில் அன்னை மணிமேகலை. சிங்கள மொழியில் ‘பசி’க்கு இணையான சொல் ‘படகினி’. அதன் பொருள் “வயிற்றிலே தீ”. அந்தத் தீயை அணைப்பதைத் தவிர பெரும்பேறு வேறு என்னவாக இருக்க இயலும்?

அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபியின் ஊடாக வீதிதோறும் அலைந்து பசித்தோர்க்கு அவள் உணவளித்து வரும் அந்தச் செய்தி சோழ மன்னருக்குத்ன் தெரிவிக்கப்படுகிறது. அழைத்து வரச் சொல்கிறார். மன்னனுக்கும் மாதவி மகளுக்கும் இப்படி அமைகிறது உரையாடல்:

“மிக்க தவமுடையாய் ! நீ யார்? கையிலேந்திய பாத்திரம் எங்கே கிடைத்தது?”

“அரசே ! நெடுங்காலம் வாழ்வாயாக; யான் விஞ்சை மகள். இந்நகரில் வேற்று வடிவங் கொண்டு திரிந்தேன்; இது பிச்சைப் பாத்திரம்; இதனை அம்பலத்தேயுள்ள தெய்வமொன்று எனக்கு அருளியது; இது தெய்வத் தனமையோடு கூடியது. யானைப் பசியென்னும் தீராப்பசியைத் தீர்த்தொழித்தது; பசியால் மெலிந்தவர்களுக்கு  மிருதசஞ்சீவினியாக உள்ளது.”

“மிக்க தவமுடையாய் ! நான் செய்ய வேண்டியது என்ன?”

‘சிறைச்சாலையை அறச்சாலையாகச் செய்ய வேண்டும்”

அன்னையின் வாக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டது. சிறைச்சாலை அழிக்கப்பட்டது. அது அறவோர்கள் தங்கும், அறச் செயல்களுக்கான இல்லமாக ஆக்கப்பட்டது.

(தொடரும்)

 

 

 

.