வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும் தமிழகத்தில் அதன் பயன்பாடும்

[தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்து முருகப்பன், ஜெசி ஆகியோர் ஆய்வு செய்து எழுதியுள்ள நூலுக்கு நான் எழுதிய முன்னுரை]

தமிழகத்தின் பல்வேறு மட்டங்களில் தீண்டாமை அடிப்படையில் வன்கொடுமைகள் நடப்பவை என அரசால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட கிராமங்களின் எண்ணிக்கை 542.. அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையே இவ்வளவு எனில் உண்மை நிலை இன்னும் பலமடங்காக இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.பதிவான வழக்குகள் மற்றும் செய்திகளின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை கணக்கிடப்பட்டிருக்க வேண்டும். நடக்கும் வன்கொடுமைகளைக் குறித்துப் புகாரளிக்கவோ அல்லது ஏதேனும் எதிர்ப்புக்காட்டி அதைச் செய்தியாக்கவோ இயலாத நிலையுள்ள கிராமங்கள் இன்னும் ஏரா:ளமாக உள்ளன என்பதை இதுபோன்ற பிரச்சினைகளில் அக்கறை உள்ளோர் அறிவர். இரு வாரங்களுக்கு முன் கூட பண்ருட்டி அருகிலுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு பள்ளி ஆசிரியரிடமிருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தங்கள் கிராமத்தில் நடைமுறையில் உள்ள தீண்டாமை ஒதுக்கல்களை அவர் விரிவாகச் சொன்னார். ஏதாவது செய்ய வேண்டும் என்றார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் இந்தக் கொடுமைகளைப் பட்டியலிட்டு ஏதாவது போராட்டம் நடத்துங்களேன் என்றேன். அதெல்லாம் இங்கு செய்து பார்த்தும் பலனில்லை, மேற்கொண்டு எதுவும் செய்வதற்குச் சாத்தியமில்லாமல்தான் உங்களிடம் சொல்கிறேன் என்றார் அவர்.

வன்கொடுமைச் சட்டம் நடைமுறைக்கு வந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும், தலித் இயக்கங்களும் தீண்டாமைப் பிரச்சினைகளைக் கையில் எடுக்கிற பிற இயக்கங்களும் தீவிரமாகச் செயல்படத் தொடங்கி, இத்தகைய வன்முறைகள் கேள்விக்குள்ளாக்கப்படக் கூடிய சூழல் உருவான பின்னும் நிலைமை இப்படித்தான் உள்ளது. ‘தீண்டாமை ஒழிப்பு முன்னணி’யால் கவனப்படுத்தப்படாதவரை உத்தபுரத்தில் இப்படி ஒரு தீண்டாமைச் சுவர் இருந்தது யாருக்குத் தெரியும். இன்னும்கூட இந்த கிராமங்களில் எல்லாம் அந்தப் பிரச்சினைகள் முற்றாகத் தீர்ந்தபாடில்லை.

தமிழகத்தில் இச்சட்டங்களின் (1955 மற்றும் 1988ம் ஆண்டுச் சட்டங்கள்) அடிப்படையில் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படும் வீதம் குறைவாக உள்ளதாக மத்திய அரசின் சமூக நீதித்துறை அமைச்சர் முகுல் வாஸ்னிக் கூறியுள்ளது (New Indian Express, July 3, 2012) குறிப்பிடத் தக்கது. முறையாகக் குற்றங்களைப் பதிவு செய்யாமை, சரியான நேரத்தில் புலனாய்வு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமை, நியமிக்கப்படும் சிறப்பு வழக்குரைஞர்களின் செயல்பாட்டைத் தொடர்ந்து பரிசீலனை செய்யாமை முதலானவற்றை இதன் காரணங்களாகச் சுட்டிக்காட்டி, இவை நீக்கப்பட வேண்டும் என அவர் கூறியுள்ளார். இச்சட்டத்துன் கீழ் வேண்டுமென்றே உரிய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளைத் தண்டிக்க வழி இருந்தும் கடந்த 22 ஆண்டுகளில் ஒரு காவல் துறை அதிகாரியும் கூட இதற்காகத் தமிழகத்தில் தண்டிக்கப்பட்டதில்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். காவல்துறை அதிகாரிகளுக்காகத் தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்துகிற தேர்வுகளில் இச்சட்டம் குறித்த அறிவைக் கோரும் தேர்வு ஒன்று உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் அவர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

2008 – 2010 ஆண்டுகளில் வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட்டவர்களின் வீதம் தேசிய அளவில் 31 சதமாக இருக்க, தமிழகத்தில் அது வெறும் 17.4 சதமாக உள்ளது என மத்திய உள்துறை அமைச்சகமும் உயர் நீதிமன்றத்திற்கு அளித்த அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது (The Hinde, Dec, 15, 2013).

நிலைமை இப்படியிருக்க இங்கு வன்கொடுமைத் தடுபுச் சட்டத்திற்கு எதிராக ஆதிக்க சாதிக் கூட்டணிகள் உருவாக்கப்படுகின்றன. இச்சட்டத்தைப் பயன்படுத்திப் பொய் வழக்குகள் போடப்பட்டுவதாக பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதிக் கட்சியுடன் ஒரு முறையும், பா.ஜ.கவுடன் ஒருமுறையும் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி ஆட்சி அமைத்ததை நாம் அறிவோம். இருமுறையும் இந்த இரு கட்சிகளும் சில மாதங்களில் பகுஜன் சமாஜ் கட்சித் தலைமையில் இயங்கிய ஆட்சிகளைக் கவிழ்த்தன. வன்கொடுமைத் தடைச் சட்டத்தை முதல்வர் மாயாவதி கறாராகப் பயன்படுத்தியமைக்கு எதிராகவே இந்த இரு ஆட்சிக் கவிழ்ப்புகளும் நடைபெற்றன என்பது நினைவு கூரத்தக்கது. சாதி, மத, இன அடிப்படைகளில் இத்தகைய வன்கொடுமைகள் நடைபெறக்கூடிய நாடுகளில் இதுபோன்ற சிறப்புச் சட்டங்களை இயற்ற வேண்டிய தேவையும், இட ஒதுக்கீடு முதலான வழிகளில் அக் கொடுமைகளால் பாதிக்கப்படுவோரை ஆற்ற்றல்படுத்த வேண்டிய அவசியங்களும் எழுகின்றன. ஏதோ இந்தியாவில் மட்டுமே இப்படி ஒரு சட்டம் செயல்படுவது போல இங்குள்ள ஆதிக்க சாதிகள் சொல்வது அப்பட்டமான பொய்.

ஆஸ்திரேலியா, கனடா, ஃப்ரான்ஸ், ஐரோப்பிய யூனியன், ஹாங்காங், ஜெர்மனி, ரஷ்யா, பிரிட்டன் எனப் பல நாடுகளில் இத்தகைய “புறக்கணிப்புகளுக்கு எதிரான சட்டங்கள்” (Anti – Discrimination Acts) செயல்படுகின்றன. ‘ஒதுக்கல்களுக்கு எதிரான சட்டம், 1991’ (ஆஸ்திரேலியா), Law Agains Racism, 2010 ((பொலிவியா), Race Relations Amendment Act, 2000 ((பிரிட்டன்) முதலியன சில எடுத்துக்காட்டுகள். நிலைமை இப்படி இருக்க தமிழக ஆதிக்க சாதி அமைப்புகள் இச்சட்டம் குறித்த தவறானதும், பொய்யானதுமான பல செய்திகளைப் பரப்பி எப்படியாவது இதை முடிவுக்குக் கொண்டு வருவதில் மும்முரமாய் உள்ளனர்.

நமது அரசியல் சட்டத்தின் 17ம் பிரிவுப்படி தீண்டாமை “ஒழிக்கப்பட்டு” விட்டது. தீண்டாமை ஒரு குற்றம். எனினும் நமது வழமையான குற்றவியல் சட்டங்களில், நடைமுறையில் உள்ள பல தீண்டாமைச் செயல்கள் குற்றப்பட்டியலின் கீழ் வரா. அப்படியே வந்தாலும் அதற்குரிய கடுமையுடன் அவை முன்வைக்கப் படாமல் மிகச் சாதாரணக் குற்றங்களாகவும், குறைந்த தண்டனைக்குரியவையாகவுமே அவை அணுகப்பட்டிருக்கும். 1948ம் ஆண்டின் உல்களாவிய மனித உரிமைப் பிரகடனம் வெளியிடப்பட்டபின் உருவான நமது அரசியல் சட்டத்தில் அடிப்படை உரிமைகள் ஓரளவு நன்றாகவே வரையறுக்கப் பட்டுள்ளன. ஆனால் அவற்றை நடைமுறைப் படுத்துவதற்கான குற்றவியல் மற்றும் சிவில் உரிமைச் சட்டங்கள் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட வடிவிலேயே தொடர்கின்றன. அரசியல் சட்டத்திற்குத் தக அவை ஒத்திசையச் (tune) செய்யப்படவில்லை.

எனவே தீண்டாமை ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கும் நமது அரசியல் சட்டத்தின் 17ம் பிரிவு உண்மையிலேயே அமுலாக்கப்பட வேண்டுமானால் அதற்குத் தக குற்றவியல் சட்டங்களில் உரிய மாற்றங்கள் செய்தாக வேண்டும். குறைந்த பட்சம் இரு மாற்றங்கள் இதற்குத் தேவையாகின்றன. அவை.:

குற்றவியல் சட்டங்களில் காணப்படாத புதிய குற்றங்களை வரையறுப்பது. (சமூக விலக்கு செய்தல், சொத்துக்களை அனுபவிக்க இயலாது தடுத்தால், எதிர் வழக்குகளைத் தொடுத்து அச்சுறுத்துதல் முதலியன சில எடுத்துக்காட்டுகள்).
இந்தக் குற்றங்களுக்கு தண்டனைகளையும், சில குற்றங்களுக்கான குறைந்தபட்சத் தண்டனைகளாகக் குற்றவியல் சட்டங்கள் விதித்துள்ளதையும் அதிகரிப்பது. (குற்றம் செய்தவர் அரசு ஊழியராயின் அதுபோன்ற குற்றங்களுக்குச் சாதாரணமாக வழங்கபடும் குறைந்த பட்சத் தண்டனையைக் கூட்டுவது, குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு முன் ஜாமீனை மறுப்பது, அவரது சொத்துக்களை முடக்குவது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அத்தகையோரின் ஆயுத உரிமங்களை ரத்து செய்வது முதலியன சில எடுத்துக்காட்டுகள்).
இந்த அடிப்படையில்தான் 1955ல் ‘சிவில் உரிமைச் சட்டமும்’, பின் அதன் போதாமைகளை அனுபவபூர்வமாக உணர்ந்து, 1989ல் ‘வன்கொடுமைத் தடுப்புச் சட்டமும்’, 1995ல் அதற்கான விதிகளும் உருவாக்கப்பட்டன. இந்த வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மேலேயுள்ள இவ்விரு கூறுகளையும் தவிர மேலும் மூன்று முக்கிய வரவேற்கத் தக்க கூறுகளைக் கொண்டதாக அமைந்தது. அவை:

குற்றம் செய்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் என இரு சாரரும் எந்தச் சமூகப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் என்பது இந்தச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுப்பதற்கான அவசிய நிபந்தனைகள் ஆக்கப்பட்டன. ஒரு சனநாயக அரசியல் அமைப்பில் இது சாத்தியமில்லை. குற்றவியற் சட்டங்கள் எல்லோருக்கும் பொதுவானதாகத்தான் இருக்க இயலும். குற்றம் இழைத்தவர் தலித் அல்லாதவராக இருக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர் தலித்தாக இருக்க வேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகளை உருவாக்க இயலாது. ஆனால் இன்று இச்சட்டத்தில் அப்படியான ஒரு நிபந்தனை உருவாக்கப் பட்டது ஒரு மிக முக்கியமான மாற்றம். சாதிக்கொரு தண்டனை என்கிற மனு நீதி கோலோச்சிய நாட்டில் அந்நிலை முதன்முதலாக இப்படித் தலை கீழாக்கப்பட்டது என்பது ஒரு புரட்சி எனலாம்.
பாதிக்கப்பட்ட தலித் மற்றும் பழங்குடியினருக்குப் பாதுகாப்பு, இழப்பீடு மற்றும் மறுவாழ்வு அமைத்தல் ஆகியவை இச்சட்டத்தில் விரிவாக உள்ளடக்கப் பட்டுள்ளன. பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவரது வாரிசுகள், சாட்சிகள் ஆகியோருக்கு உரிய பாதுகாப்பு அளித்தல், பயணப்படி முதலியவற்றை அளித்தல், பாதிப்புகளுக்குத் தகுந்தாற்போல உடனடியாக இழப்பீடுகளை வழங்குதல் முதலியன இதில் அடங்கும்.
இவற்றைச் சரியாக நடைமுறைப்படுத்த உரிய கருவிகளை உருவாக்குவதற்கும் இச்சட்டம் வழி வகுக்கிறது.. இந்த வழக்குகளை விரைவாக நடத்தித் தண்டனைகளை வழங்க ஏதுவாகச் சிறப்பு நீதிமன்றங்களை அமைத்தல், வழக்கை நடத்தச் சிறப்பு வழக்குரைஞர்களை நியமித்தல்,. வன்கொடுமை நடக்கக் கூடிய பகுதிகளை அடையளம் கண்டு கண்காணிக்கவும், ஆய்வு நடத்தவும், விழிப்புணர்வை உருவாக்கவும் உரிய ‘செல்’களை அமைத்தல் முதலியன இதில் அடங்கும்.
இப்படியான வழிமுறைகளெல்லாம் இருந்தபின்னும் ஏன் உரிய பலன்களை இந்தச் சட்டத்தின் மூலம் தலித் மற்றும் பழங்குடியினர் பெரிய பயன் ஏதும் பெற இயலவில்லை? தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் ஏன் குறையவில்லை?

இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது இந்த ஆய்வு நூல். இச்சட்டத்தின் பயன்பாடு தமிழகத்தில் எந்த நிலையில் உள்ளது என்பதை இது ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறது. கடலூர், விழுப்புரம், ஈரோடு கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய ஆறு மாவட்டங்களில் 2007ம் ஆண்டு முதல் 2012வரை நடை பெற்ற தலித் மக்களின் மீதான் வன்கொடுமைகளை இது விரிவான ஆய்வுக்கு உட்படுத்துகிறது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தரவுகள், நேரடியான கள ஆய்வு ஆகியவற்றைப் பயன்படுத்தி இவ் வன்கொடுமைகள் எவ்வாறு காவல்துறை மற்றும் நீதிமன்றங்களால் கையாளப்பட்டன என்பதை விரிவான ஆதாரங்களுடன் தொகுத்து ஆய்வு செய்கின்றனர் இதன் ஆசிரியர்களான முருகப்பனும் ஜெசியும். வன்கொடுமை மேற்கொள்ளப்படுவது தொடங்கி புகார் பதிவு செய்யப்படுவது, வழக்கு விசாரிக்கப்படுவது, சட்டத்தில் கண்டுள்ளவாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படுவது, நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்படுவது, நீதிமன்றம் இவ்வழக்குகளைக் கையாள்வது என ஒவ்வொரு நிலையையும் ஆய்வு செய்து, ஒவ்வொரு மட்டத்திலும் பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு எவ்வாறு நீதி மறுக்கப்படுகிறது, வன்கொடுமைகளை மேற்கொண்டவர்கள் எவ்வாறு காப்பாற்றப்படுகின்றனர் என்பவற்றைத் துல்லியமாக நிறுவுகின்றனர்.

மதுரையிலுள்ள டாக்டர் அம்பேத்கர் பண்பாட்டு மையம் 2007ம் ஆண்டு இதே போல ஒரு ஆய்வு நுலை வெளியிட்டது. திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஆறு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட இவ் ஆய்வு முடிவுகளை எம்.ஏ.பிரிட்டோ தொகுத்திருந்தார். 1996 லிருந்து 2001 வரை நடைபெற்ற கொடுமைகள் அந்நூலில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்தன. இந்த நூலின் முடிவுகளைத் தற்போது நண்பர்கள் முருக்கப்பனும் ஜெசியும் கண்டடைந்துள்ள முடிவுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போதுதான் இச்சட்டம் பயன்படுத்தப்படுவதில் எத்தகைய முன்னேற்றமும் தமிழகத்தில் ஏற்படவில்லை என்பது விளங்குகிறது. காவல்துறை, நீதிமன்றம் ஆகியவற்றிற்கு, மொத்தத்தில் அரசிற்கு இச்சட்டத்தைச் சரியாகப் பயன்படுத்துவதற்கான அரசியல் விருப்புறுதி இல்லை என்பதையே இது காட்டுகிறது.

இந்திய அளவில் நீதிம்ன்றங்கள் எவ்வாறு இச்சட்டத்திற்குத் தவறான விளக்கங்களை அளித்து குர்றவாளிகளைக் காப்பாற்றுகிறது என்பதை ராஜேஷ் சுக்லா ஆய்வு செய்துள்ளார் (Economic and Political Weekly, Oct 21, 2006). அதைச்சுருக்கித் தமிழாக்கி 2008ல் ‘சஞ்சாரம்’ எனும் இதழில் வெளியிட்டேன். எனது ‘நெருக்கடி நிலை உலகம்’ நூலிலும் (எதிர் வெளியீடு, 2008) அது உள்ளது.

இவ்வாறு குற்றம் செய்கிற ஆதிக்க சாதியினருக்குச் சாதகமாக இச்சட்டத்தைப் பயன்படுத்துவதற்கு ஏதுவாக உள்ள இச் சட்ட வாசகங்கள் சிலவற்றையும், ஒட்டுமொத்தமாகச் சில பிரிவுகளஈயும் எவ்வாறு மாற்றியமைக்கப்பட வேண்டும் என இது தொடர்பாக அக்கறையுள்ளோர் மத்தியில் தற்போது தேசிய அளவில் கருத்தொருமிப்பு உருவாகியுள்ளது. இது குறித்தும் சென்ற ஆண்டு ‘மக்கள் களம்’ என்னும் தலித் மாத இதழில் விரிவாக எழுதியுள்ளேன். எனது இணையத் தளத்திலும் அது உள்ளது.

முருகப்பனும் ஜெசியும் தொகுத்துள்ள இந்நூலின் முதற் பகுதி மிக விரிவாக தமிழகத்தில் பல ஆண்டுகளாக தலித் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் வன்கொடுமைகளின் வரலாற்றையும், அவற்றின் பன்முகத் தன்மைகளையும் சரளமான நிரடலற்ற மொழியில் சொல்லியுள்ளது மொத்தத்தில் தமிழக தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள் குறித்த ஒரு முழுமையான கையேடாக இது அமைந்துள்ளது.. இவ்வகையில் நூலாசிரியர்களையும் இவ் ஆய்வை மேற்கொண்ட ‘இளைஞர்களுக்கான சமூக விழிபுணர்வு மையம், தமிழ்நாடு’ (SASY) மற்றும் ‘நீதிக்கான தேசிய தலித் இயக்கம், புது டெல்லி’ (NDMJ) ஆகிய அமைப்புகளையும்கும் இவ் வன்கொடுமைகளை ஒழிப்பதில் அக்கறையுள்ள நாம் எல்லோரும் பாராட்டக்க் கடமைப்பட்டுள்ளோம்.

இறுதியாக ஒன்று. அங்கொன்றும், இங்கொன்றுமாக இச்சட்டத்தின் அடிப்படையில் தொடுக்கப்படும் ஓரிரு பொய் வழக்குகளைப் பெரிதுபடுத்தி இச்சட்டத்தின் ஒட்டுமொத்தப் பயன்பாட்டையே கொச்சைப்படுத்துடுகின்றன ஆதிக்க சாதி அமைப்புக்கள். இதன் மூலம் இச்சட்டம் உண்மையில் முறையாகப் பயன்படுத்தப்படாமல் வன்கொடுமை செய்யும் சாதியினர் காப்பாற்றப்படுவதற்கே வழி வகுக்கப்படுகிறது என்கிற உண்மை மக்களின் பொதுப்புத்தியிலிருந்து மறைக்கப்படுகிறது. ஆதிக்க சாதியினர் நேரடியாகவும், தமது ஆதரவாளர்கள் மூலமாகவும் செயல்படுத்துகிற சமூக வலைத்தளங்கள் இதில் முன்னிற்கின்றன. இந்நிலை கவலைக்குரியது. இப்படியான சந்தர்ப்பங்களில் அவ்வாறு பொய் வழக்குத் தொடுப்போரை வெளிப்படையாகக் கண்டித்து அவ்வழக்குகளைத் திரும்பப்பெற தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளை ஒழிப்பதில் அக்கரையுள்ளோர் முன்னுரிமை அளிக்க வேண்டும். அவ்வாறின்றி நாம் மௌனம் சாதிப்போமேயானால் அது ஆதிக்க சாதியினரின் பொய்ப் பிரச்சாரத்திற்கே வலு சேர்க்கும்.

அ.மார்க்ஸ்,

14-03- 2014,

குடந்தை

காந்தியும் இந்து மதமும்

‘காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்’ என்கிற எனது நூல் வெளிவந்தபோது எங்கு சென்றாலும் என்னை நோக்கி வீசப்பட்ட கேள்வி ஒன்றுதான். கருத்து மாறுபடுவர்கள் மட்டுமின்றி, பொதுவில் என்னுடன் உடன்படுபவர்களும் கூட, “அதெப்படிங்க, காந்தி வருணாசிரமத்தையும் சாதிமுறையையும் ஏற்றுக்கொண்டவர் தானே. அவரைச் சனாதன எதிர்ப்பாளர் என்பதுபோல நீங்கள் முன்வைப்பதை எப்படி ஏற்க முடியும்?” என்று குடைந்தெடுத்தனர்.

இதற்குப் பதில் சொல்லி தமிழ்ச் சமூகத்தைத் திருப்திப்படுத்துவது அத்தனை எளிதன்று. எதார்த்தங்களை அவற்றின் சிக்கலோடு புரிந்து கொள்ள முயலாமல் எதையும் மிகை எளிமைப்படுத்தி, “இப்படி அல்லது அப்படி” எனத் தட்டையாகப் புரிந்து கொள்ளும் பண்பு வலுப் பெற்றுள்ள இன்றைய சூழலில் காந்தியைப் பற்றி அப்படித்தான் ஒரு எதிர்மறையான பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. புத்த பகவன் சொன்ன ‘யானையைப் பார்த்த குருடர்களின் கதை’ அன்றைக்கு மட்டுமின்றி இன்றைக்கும் பொருத்தமானதுதான்.

அவர்களுக்கு நான் பதில் சொல்வதற்குப் பதிலாக வேறு சில கேள்விகளை எழுப்புவது வழக்கம். அப்படியானால் ஏன் கோட்சே குழுவினர், சாவர்க்கர் உட்பட காந்தியைக் கொல்வதில் முனைப்புக்காட்டிக் கடைசியில் தம் முயற்சியில் வெல்லவும் செய்தனர்? வாக்களித்தபடி பாகிஸ்தானுக்கு 50 கோடிகளைக் கொடுப்பதற்கு காந்தி அழுத்தம் கொடுத்ததற்காகத்தான் தான் அவரைக் கொன்றதாக கோட்சே நீதிமன்றத்தில் சொன்னது உண்மையானால், நாட்டுப் பிரிவினை என்கிற பேச்சு எழும்பும் முன்னரே இதே குழுவினரும் இவர்களை ஒத்தவர்களும் அவரைக் குறைந்த பட்சம் ஐந்து முறை கொல்ல முயற்சித்தது ஏன்? காந்திக்கு எதிராக அவரை “வர்ண சம்ஹாரம்” செய்ய வந்தவர் என வரையறுத்து சென்னையிலிருந்து “ஆர்ய தர்மம்” என்றொரு இதழ் மறைந்த மூத்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சுவாமிகளின் நிதி உதவியுடன் வெளியிடப்பட்டதன் பொருள் என்ன?

காந்தியைப் புரிந்துகொள்ள இந்தக் கேள்விகள் முக்கியமானவை. எப்படிப் பார்த்தாலும் இந்தக் கேள்விகளுக்கு நாம் இரு பதில்களைத்தான் சொல்ல முடியும். ஒன்று சுதந்திர இந்தியா இந்து ராஷ்டிரமாக உருப் பெறுவதற்கு ஒரு வலுவான தடையாக அவர் இருந்தார் என்பது. காந்தி பல்வேறு சாதி, மதம், மொழி பேசும் மக்களின் தேசமாக இந்தியாவைக் கற்பிதம் செய்தார், சாவர்க்கரும் மற்றவர்களும் இந்தியாவை இந்துக்களின் தேசமாகக் கற்பிதம் செய்ய முயன்று காந்தியின் மக்கள் செல்வாக்கின் முன் படு தோல்வி அடந்தனர், காந்தியின் தேசியம் பன்மைத்துவம் சார்ந்தது. அது ஒரு உள்ளடக்கும் தேசியம் (inclusive nationalism). அவரை எதிர்த்தவர்களின் தேசியம் இந்துக்கள் தவிர மற்றவர்களை விலக்கும் தேசியம் (exclusive nationalism).

மற்றது அவர் இந்து மதம் குறித்து முன்வைத்த வாசிப்புகள் முற்றிலும் சனாதனத்திற்கு எதிராக இருந்தன. குறிப்பாக இந்து மதத்தில் தீண்டாமை கிடையாது என அவர் முன்வைத்த வலுவான கருத்துக்களைச் சனாதனிகளால் ஏற்கவே இயலவில்லை. காந்தி ஆலயப்பிரவேச இயக்கத்தை முன்னெடுத்தபோது, அவரது தமிழக வருகையை எதிர்த்து “காந்தீ, திரும்பிப் போ” எனச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. துண்டறிக்கைகள் வெளியிடப்பட்டன. சிதம்பரம் உள்ளிட்ட கோவில்கள் மூடப்பட்டன. காந்தியை இழிவுபடுத்தி, “ தீண்டாதார் ஆலயப் பிரவேச நிக்ரஹம்” என்றொரு நூல் தமிழகத்தில் வெளியிடப்பட்டது. என்னுடைய முன்னுரையுடன் அந்நூல் மறு வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

காந்தி தீண்டத்தகாதவர்கள் பிரச்சினையில் கொண்டிருந்த கருத்துக்களில் நமக்கும் சில மாறுபாடுகள் உண்டு. ஆனாலும் பெரியார் உள்ளிட்ட சாதி ஒழிப்புப் போராளிகள் இந்தத் திசையில் பேசியவற்றையும், செய்தவற்றையும்கூடச் சகித்துக் கொண்டவர்கள் காந்தி அதைச் செய்த்தபோது கொதித்தெழுந்தனர். ஏன்? சாதி ஒழிப்புப் போராளிகள் பாதிக்கப்பட்ட மக்களிடம் சென்று அவர்களை எழுச்சி கொள்ளச் செய்தனர். காந்தியோ பாதிக்கப்பட்டவர்களோடு நில்லாமல் யார் பாதிப்பிற்குக் காரணமாக இருந்தார்களோ அவர்களிடமும் பேசினார். அவர்களையும் களத்தில் இறக்கினார். சென்ற நூற்றாண்டில் ஆசியாவில் மேற்கொள்ளப்பட்ட மிகப் பெரிய மக்கள் இயக்கங்களிலொன்றாக காந்தியின் தலைமையிலான ஆலயப் பிரவேச இயக்கம் அமைந்தது என இன்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.

காந்தி தீண்டாமைக்குக் காரணமானவர்களை நோக்கிப் பேசியதாலேயே அவரின் மொழி இதர சாதி ஒழிப்புப் போராளிகளின் மொழியிலிருந்து வேறுபட்டிருந்தது என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவரது மொழி தோற்றத்தில் மென்மையாக இருந்த போதிலும் இந்து மதத்தின் அடிப்படைகளை அசைப்பதாகவும் இருந்ததைப் புரிந்து கொண்டதால்தான் அவரைச் சனாதனிகள் ‘வர்ண சம்ஹாரம்’ செய்ய வந்தவராகப் பகைத்தனர்.

காந்தியின் இந்து மத வாசிப்பு மரபு வழி வாசிப்பிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக இருந்தது. இந்து மதத்தில் தீண்டாமை இல்லை என்று மட்டும் அவர் சொல்லவில்லை, ஆலய வழிபாடுகள், மதச் சடங்குகள், நேர்த்திக் கடன்கள் ஆகியவற்றையும் விலக்கி வாழ்ந்தவர் அவர். ஆலயங்களை விபச்சார விடுதிகள் என்கிற அளவிற்கு அவர் ஒப்பிட்டுப் பேசியபோதும் இந்தியத் துணைக் கண்டத்தில் ஏற்படும் இயற்கைச் சீரழிவுகள் தீண்டாமையை இந்துச் சமூகம் கடை பிடிப்பதன் விளைவுதான் என்று சொன்னபோதும் இங்கு ஏற்பட்ட சர்ச்சைகளும் கண்டனங்களும் நினைவுகூரத் தக்கன. வருணாசிரமம் குறித்த அவரது தொடக்க காலக் கருத்துக்களும் கூட இறுதியில் பெரிய அளவில் மாறின.

இராமனை அவர் ஒரு இலட்சிய மானுடனாகவும், இராம ராஜ்யம் என்பதை ஒரு இலட்சிய அரசாகவும் மட்டுமே அவர் முன்வைத்தார். இராமாயணத்தை ஒரு வரலாற்றுக் காவியமாகவோ, இராமனை ஒரு வரலாற்று நாயகனாகவோ முன்வைப்பதை அவர் மற்றுத்தார். வேறு சொற்களில் சொல்வதானால் காந்தியின் தர்க்கத்தில் இராமன் அயோத்தியில் பிறந்தான் என்பதற்கும் சேதுப் பாலத்தை அவன் அமைத்தான் என்பதற்கும் இடமில்லை.

காந்தி தன் அரசியலுக்கு வரலாற்றை என்றும் துணை கொண்டதில்லை. அதேபோல டால்ஸ்டாய், தோரோ ஆகியவர்களின் சிந்தனை வழி வந்த அவரிடம் “தேசபக்தி” என்கிற சொல்லாடலும் இருந்ததில்லை. காந்தி உயிருடன் இருந்த காலத்தில் அவருக்கு எதிராக சர் சங்கரன் நாயர் எழுதிய நூலின் தலைப்பு “காந்தியும் அராஜகமும்” (Gandhi and Anarchy).

திலகர், அரவிந்தர் முதலான காந்திக்கு முந்திய தேசியப் போராட்ட வீரர்கள் எல்லோரும் பகவத் கீதையை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிரான தனி நபர்க் கொலை உள்ளிட்ட போர்த் தொழிலை முன்வைக்கும் புனித நூலாக வாசித்துக் கொண்டிருந்த நேரத்தில் காந்தி அதை ஒரு சமாதானத்தின் சாத்தியங்களையும், அஹிம்சைப் பாதையையும் வற்புறுத்தும் நூலாக வாசித்து உரை எழுதினார். இது குறித்து ஒரு நவீன காந்தியியல் ஆய்வாளர், “வாசிப்புச் சுதந்திரம் என்கிற நவீன கோட்பாட்டை அதன் உச்சபட்ச வடிவத்தில் கையாண்டவர் காந்திதான்” எனக் கூறுகிறார்.

காந்தியின் இந்து மதம் குறித்த வாசிப்பில் நாம் காணும் சிக்கல்கள் கூட அவை எந்தப் புனித நம்பிக்கைகளின் (believes) அடிப்படையிலிருந்தும் உருவாகவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. மாறாக அவை உடல் மற்றும் உளத் தூய்மை குறித்த அவரது கட்டுப்பெட்டித் தனமான கருத்துக்களிலிருந்தே முகிழ்த்துள்ளன. எடுத்துக்காட்டாக சேரன்மாதேவிக் குருகுலப் பிரச்சினையில் கூட பார்ப்பனர்களையும் பார்ப்பனர் அல்லாதவர்களையும் தனித்தனியே அமரவைத்துப் பந்தி பரிமாறியதைத் தவறு எனக் கூறியவராயினும் காந்தி ‘சம பந்தி போஜனம்’ என்பதை ஒரு உயரிய கொள்கையாக ஏற்கவில்லை. தீண்டாமை ஒழிக்கப்பாட்டு எல்லாவற்றிலும் சமத்துவம் கடைபிடிக்கப்பட்ட அவரது தென் ஆப்ரிக்க டால்ஸ்டாய் மற்றும் போனிக்ஸ் பண்ணைகளின் விதிமுறைகளில் சமபந்தி போஜனம் ஒரு உயரிய கொள்கையாக ஏற்கப்படவில்லை,

ஆனால் இந்த அணுகல்முறை சாதி, வருண அல்லது தீண்டாமை அடிப்படையில் முன்வைக்கப்படவில்லை. ஒன்றாக அமர்ந்து உண்ணுவது என்பதே அசிங்கம் என அவர் காருதினார். தனது மனைவி பிள்ளைகளுடன் கூட ஒன்றாக உண்ணுவதை அவர் வெறுத்தார். “சாப்பிடுவது என்பது கழிப்பதைப் போலவே ஒரு மோசமான விஷயம். கழிப்பதிலாவது ஒரு வெளியேற்றும் சுகம் நமக்கு உள்ளது” என்பது அவரது கூற்று. அதே நேரத்தில் அவரது தென் ஆப்ரிக்க வீட்டில் ஒரு தலித் கிறிஸ்தவ ஊழியரின் அறையிலிருந்த கழிவு நீர்ப் பானையை கஸ்தூரிபாய் ஏணி வழியாகச் சுமந்து வந்து சுத்தம் செய்யத் தானும் தயங்கி, காந்தியையும் செய்யக் கூடாதென எதிர்த்தபோது அவர் மனைவியை எவ்வளவு மூர்க்கமாக எதிர்த்தார் என்பதைச் ‘சத்திய சோதனை’யில் காணலாம். அவரது சமபந்தி போஜன வெறுப்பு சாதி அடிப்படையில் உருவானது அல்ல.

இந்து மதம் பிறவி அடிப்படையிலானது, ஒருவர் இந்துவாகப் பிறக்க மட்டுமே முடியும் என்பதை அதன் குறைபாடுகளில் ஒன்றாக முற்போக்காளர்கள் விமர்சிப்பது வழக்கம். ஆனால் காந்தியோ அதுவே இந்து மதத்தின் சகிப்புத் தன்மைக்கு எடுத்துக்காட்டு என்றார். அதாவது மதம் மாற்றுவது என்பது பிற மதங்களின் இருப்பைச் சகிக்காததின் விளைவு என்பது அவர் கருத்து. கடைசிவரை மதமாற்றம் என்பதை அவர் ஏற்கவே இல்லை. ஆனால் சட்டம் இயற்றி மதமாற்றத்தைத் தடுப்பது என்கிற நிலை வந்தபோது அம்முயற்சியைக் கடுமையாக எதிர்த்தார். அதென்ன?

அதுதான் காந்தி.

காந்தியும் காஞ்சியும் – [இந்து நாளிதழுக்கு மறுப்பு]

இந்து நாளிதழுடன் “ஆனந்த சுதந்திரம்” என்றொரு ‘விளம்பரதாரர் சிறப்பு இணைப்பு’ வழங்கப்பட்டுள்ளது. “காஞ்சி மகானும் காந்தி மகானும்’ என்பது கட்டுரைத் தலைப்பு. கா.சு வேலாயுதன் என்றொரு நபர் எழுதியுள்ளார்.

“இந்தியாவின் ஆன்ம சக்திகளான இரு பெரும் மகான்களிடையே நடந்த சந்திப்பு அது. ஒருவர் சுதேசி உணர்வும் சுதந்திரமும் தழைக்கத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர். இன்னொருவர் சனாதன தர்மத்தையும் சுதர்மத்தையும் காப்பாற்ற வாழ்வையே தவமாக்கியவர்” – என்று தொடங்குகிறது கட்டுரை.

தென்னாட்டுச் சுற்றுப் பயணத்தில் இருந்த காந்தி பாலக்காட்டுக்கு அருகிலுள்ள நெல்லிச்சேரி என்னுமிடத்தில் சங்கராச்சாரி தங்கி இருந்ததை அறிந்து அவரைச் சந்ந்திக்க விருப்பம் தெரிவித்தாராம். ‘பெரியவரும்’ அவரை வரச் சொன்னாராம். ஒரு மணி நேரம் பேசினார்களாம். என்ன பேசினார்கள் என்று யாருக்கும் தெரியாதாம். ஆனால் அந்த சந்திப்பை இருவருமே மிக முக்கியமானதாகக் கருதினார்களாம். சுமார் 20 ஆண்டுகள் கழித்து சங்கராச்சாரி அனுப்பிய ஒரு செய்தியில் காந்தி அவரிடம் சுவாமி சிரத்தானந்தர் கொலை செய்யப்பட்டது குறித்து மனம் நொய்ந்து பேசினதாகவும், இன்னும் இதுபோன்ற படு கொலைகள் நடக்கும் என்பது குறித்து அச்சம் தெரிவித்ததாகவும் கூறியுள்ளாராம்..

இருபதாண்டுகள் குறித்து இப்படி உரிய ஆதாரங்கள் ஏதுமின்றி சங்கராச்சாரி கூறியுள்ளது இந்தச் சந்திப்பு குறித்த உண்மைகளை அறிந்தவர்களுக்கு வியப்பளிக்கிறது. அடுத்த இரு பத்தாண்டுகளில் கொல்லப்பட்டது காந்திதானே ஒழிய, இந்து சாமியார்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. நிற்க.

இப்போது கொலைக் குற்றம் சாட்டப்பட்டுக் குற்றவாளிக் கூண்டில் நிற்கும் ஜெயேந்திர சங்கராச்சாரியை விட ரொம்பவும் யோக்கியமான சங்கராச்சாரி எனவும், நிறையக் கற்றுத் தேர்ந்தவர் என்றும் “மகா பெரியவாள்” சந்திரசேகரேந்திரன் குறித்து நமது ஊடகங்கள் ‘இமேஜ் பில்ட் அப்’ பண்ணுவது வழக்கம். ‘தெய்வத்தின் குரல்’ எனும் அவரது உரைத் தொகுப்பு தமிழகத்தில் பல்லாயிரக் கணக்கான பிரதிகள் விற்பனையாகியுள்ளன.

காந்தியைப் பொருத்த மட்டில் அவர் எந்தச் சாமியார் பின்னாலும் போனவர் இல்லை. எந்த மடங்களையும் அவர் புனிதமாகக் கருதித் தரிசனைக்குச் சென்று வந்தவரில்லை. ஏன் எந்தக் கோவில்கள். புனித ஷேத்திரங்கள் ஆகியவற்றுக்கும் போய் வருவதையோ. யாகங்கள் வேள்விகள் புரிவதையோ, எடைக்கு எடை துலாபாரம் வழங்குவதையோ போன்ற அசட்டுத்தனகள் செய்வதை வழக்கமாகக் கொண்டவர் இல்லை.

அவர் நடத்திய பிரார்த்தனைக் கூட்டங்கள் சர்வ சமய ஒன்றுகூடல்களாகவே இருந்தன. இந்துக்கள், முஸ்லிம்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் எனப் பல சமயத்தாரும் ஒன்று கூடி, எல்லோரது கடவுளரையும், எல்லோரும் போற்றிப் புகழ்ந்தவையாகத்தான் அந்தப் பிரார்த்தனைக் கூட்டங்கள் அமைந்தன.

ஏற்றுக் கொண்டதில்லை. ராமன் அயோத்தியில் பிறந்தான் என்கிற நம்பிக்கை எதையும் அவர் முன்வைத்ததில்லை. ராமாயணத்தை வரலாறாக அவர் ஏற்றுக் கொண்டதில்லை. அவரைப் பொருத்த மட்டில் ராமன் என்பவன் ஒரு ‘லட்சிய மானுடன்’, ‘ராம ராஜ்யம்’ என்பது ஒரு லட்சிய அரசு அவ்வளவே.

சரி, இப்போது காந்தி, சங்கராச்சாரியைச் சந்தித்த கதைக்கு வருவோம். சந்திப்பு நடந்தது உண்மை. எத்தகைய பின்னணியில் அந்தச் சந்திப்பு நடந்தது எனக் காண்போம்.

இந்தியாவெங்கும் தீண்டமை ஒழிப்பு குறித்து காந்தி பேசத் தொடங்கியிருந்த காலம் அது. பின்னாளில் அது அரிஜன ஆலயப் பிரவேசமாக உருமாறியது. பெருந்திரளில் ஆதிக்க சாதியினரும் தலித்களும் இணைந்து ஆலையப் பிரவேசங்கள் நடந்தன. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் காங்கிரஸ் தலைவர் வைத்தியனாத அய்யரின் தலைமையில் இதுகாறும் ஆலய நுழைவு மறுக்கப்பட்டவர்கள் ஆலயத்தில் நுழைந்த வரலாற்றையும் அதற்குச் சனாதன சமுக்கங்களிலிருந்து பெரிய அளவு எதிர்ப்பு வந்த வரலாற்றையும் நாம் அறிவோம்.

இன்னொரு பக்கம், பால்ய மணத்திற்கு எதிராக ஹர விலாஸ சாரதரும், தேவதாசி முறைக்கு எதிராக முத்து லட்சுமி ரெட்டியும் மசோதாக்கள் கொண்டு வந்ததும் சனாதனிகளின் மூக்குகளிலும் கண்களிலும் கரும் புகையை வரவழைத்திருந்தன. போதாக் குறைக்கு காந்தி இவற்றை ஆதரித்தார். சத்தியமூர்த்தி போன்ற தனது கட்சிக்காரர்களுக்கும், சட்ட மன்றத்தில் அவர்கள் வைத்த நிலைபாட்டிற்கும் எதிராக காந்தி தமிழ்நாட்டில் முத்து லட்சுமி நடத்திய கூட்டமொன்றில் (1927, செப்டம்பர் 9) கலந்து கொண்டதுடன், அந்தப் பயணம் முழுவதும் தேவதாசி ஒழிப்பை அவர் ஆதரித்துப் பேசினார்.

அடுத்த முறை காந்தி தமிழகம் வந்தபோது தமிழகம் முழுவதும் சனாதனிகள் அவருக்கு எதிர்ப்புக் காட்டினர், சுவரொட்டிகள், துண்டறிக்கைகள் வெளியிடப்பட்டன. ஆலயக் கதவுகள் மூடப்பட்டன. “தீண்டாதார் ஆலயப் பிரவேச நிக்ரகம்” என்கிற நூல் காந்தியைத் தரக்குறைவாக ஏசி வெளியிடப்பட்டது. இந்நூலின் முழு வடிவம், துண்டறிக்கை வாசகங்கள் முதலியவற்றிற்கு எனது “காந்தியும் தமிழ்ச் சனாதனிகளும்” நூலைக் (எதிர் வெளியீடு, பொள்லாச்சி, 2007) காண்க.

இந்த இடைப்பட்ட காலத்தில்தான் காந்தி – சங்கராச்சாரி சந்திப்பு நடந்தது. இந்து நாளிதழ் சொல்வது போல காந்தி ஒன்றும் சங்கராச்சாரியை விரும்பிச் சந்திக்கவில்லை. சங்கராச்சாரியைச் சந்திப்பதற்கு அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. இது குறித்து நான் முன் குறிப்பிட்டநூலில் எழுதியிருக்கும் வாசகங்கள்:

“மகாமேதை, ஒழுக்கசீலர், நேர்மையாளர் என்றெல்லாம் கூறப்படும் (லேட்) ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஶ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி என்கிற சங்கராச்சாரியை காந்தி 1927 அக்டோபர் 15 அன்று பாலக்காட்டுக்கு அருகில் உள்ள நல்லிச்சேரி சரஸ்வதி கோவிலில் சந்திக்க நேர்ந்தது. அப்படியான ஒரு சந்திப்பைப் பார்ப்பனர்கள் திட்டமிட்டு ஏற்பாடு செய்திருந்தனர். சங்கராச்சாரி (இந்தி தெரிந்திருந்தும்) சமஸ்கிருதத்தில் பேச, காந்தி (சமஸ்கிருதம் தெரிந்திருந்தும்) இந்தியில் பேசினார். கடவுள் நம்பிக்கையை வற்புறுத்தி இயங்கும் காந்தியைப் பாராட்டிய சங்கராச்சாரி, ‘எனினும் ஹரிஜன ஆலயப் பிரவேச விஷயத்தில் சாத்திரங்களளையும், பழைய பழக்க வழங்களையும் நம்பியிருப்பவர்கள் நம் நாட்டில் பெரும்பாலோர் இருக்கிறார்களென்றும், அவர்களுடைய மனம் நோகும்படி செய்யும் எந்த மாறுதலும் இம்சைக்கு ஒப்பாகுமென்ற்றே தாம் முடிவுக்கு வரவேண்டியிருக்கிறதென்றும் கூறினார். இதைச் சொல்வதற்காகவே அச் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை நம்மால் விளங்கிக்கொள்ள முடிகிறது.

“தனது கருத்துக்களை வெளிப்படையாகச் சொல்ல என்றைக்கும் தயங்காதா காந்தி, சுமார் ஒரு மணி நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்தார். சங்கராச்சாரியாரின் கருத்துக்களை மனதில் கொண்டு, முடிந்தவரை அவற்றை நிறைவேற்ற முயற்சிப்பதாகச் சொல்லி விடைபெற்றார். தொடர்ந்து காந்தியின் செயற்பாடுகளைக் கவனிக்கும் யாருக்கும் சந்திரசேகரரின் மேற்படி கருத்துக்களை காந்தி மயிரளவும் மதிக்கவில்லை என்பது விளங்கும்.”

காந்தியைத் தான் தங்கியிருந்த குடிசைப் பகுதியில் ஒரு மாட்டுத் தொழுவத்திற்கு அருகில் சந்தித்ததாகவும், காந்தி அமர சங்கராச்சாரி தன் பீடத்தையே தரத் தயாராக இருந்ததாகவும் இந்துக் கட்டுரை கதை அளக்கிறது. சங்கராச்சாரி தங்கியிருந்தது நல்லிச்சேரி சரஸ்வதி கோவில். காந்தி பிரப்பால் தாழ்ந்த வருணத்தைச் சேர்ந்தவர் (வைசியர்) என்பதால் மாட்டுத் தொழுவத்திற்கு அருகில் அவரை அமர வைத்துப் பேசியதே உண்மை.

மகா ஒழுக்கசீலரான” சந்திரசேகரேந்திரரின் காஞ்சிபீடம் அத்தோடு நிற்கவில்லை. வேறுபல முயற்சிகளையும் செய்தது. அவற்றில் ஒன்று, அன்றைய புதிய தொழில்நுட்பமான அச்சுத் தொழில்நுட்பத்தை வர்ணாசிரமத்தைக் காப்பாற்றும் ஆயுதமாகப் பயன்படுத்துவது. இந்த நோக்கத்துடன் காஞ்சி பீடத்தின், அதாவது மகா ஒழுக்க சீலரான சந்திரசேகரரின் ஆசியுடனும், நிதி உதவியுடனும் ‘ஆரியதர்மம்’ என்றொரு இதழ் தொடங்கப்பட்டது. 1927 டிசம்பரில் நடைபெறவுள்ள காஙகிரஸ் மாநாட்டுக்கு இணையாக வர்ணாசிரம மாநாட்டைக் கூட்டவும் முடிவு செய்யப்பட்டது.

1927 ஐப்பசி மாதம் 25ந்தேதிய ‘ஆர்யதர்மம்’ இதழில், “ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தைப் பற்றியவரை யான் நன்கறிவேன், இச் சென்னையில் ஒரு கிளை மடம் ஸ்தாபித்து,,,,புனிதமான ‘ஆர்யதர்மம்’ என்கிற இப்பத்திரிக்கையையும் நடத்துகிறது” என ஆசிரிய உரையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வாசகங்களின்படி வருணாசிரமத்தைக் காப்பாற்ற உருவெடுத்த ‘ஆர்யதர்மம்’ என்கிற அந்த இதழ் சந்திரசேகர சங்கராச்சாரியின் நிதி உதவியுடன் தொடங்கப்பட்டது என்பது விளங்குகிறது.

வருணாசிரம ஆதரவு மஹாநாடெல்லாம் இன்று தேவையா, அப்படி மாநாடு நடத்துவதெல்லாம் நமது மரபா எனச் சிலர் கேட்டபோது,

“பண்டைக் காலத்தில் யக்ஞம், உத்ஸவம், விவாஹம் முதலியவைகள் அப்போது மஹாநாட்டின் வேலையை முடித்துவைத்தது. காலத்திற்கேற்றவாறு, அதுவும் காந்தி தென்னாடு வந்த பிறகு அத்யாவசியமாக இதைக் கூட்டியே ஆகவேண்டுமென்று பலரும் நினைக்கின்றனர்.”

என்ப் புலம்புவதிலிருந்து சந்திரசேகர சங்கராச்சாரி, காந்திக்கு எதிராகவே நிதி உதவி செய்து இந்த ‘ஆரதர்மம்’ என்கிற வருணாசிரம ஆதரவு இதழை நடத்தினார் என்பது விளங்குகிறது. காந்தியின் தென்னாட்டு வருகை வருணாசிரமத்திற்கு எதிராக இருந்ததாகக் கருதி அவர்கள் அசுர்றதும் புரிகிறது.

காந்தியை வருணசங்காரம் செய்ய வந்தவராக இந்த இதழ் முன்னிறுத்தியது. இது குறித்த விவரங்களை அறிய எனது நூலையும், தஞ்சை சரஸ்வதி மகாலில் உள்ள ‘ஆர்யதர்மம்’ இதழ்களையும் வாசிக்க வேண்டுகிறேன்.

இந்த இதழின் புத்தகம்11, ஸஞ்சிகை 30ல் வெளிவந்துள்ள, ஒரு கூற்று:

“தீண்டாதவர்கள் நிரபராதிகள். நம்மைப்போலவே மனிதர்களே. அப்படியிருக்க ஏன் தள்ள வேண்டும் என்கிறார் (காந்தி). ஆகா தீண்டத்தகாதவர்களும் நம்மைப் போலவே மனிதர்கள்தானாம். இதைச் சங்கராச்சாரியார் தெரிந்துகொள்லவில்லை. இந்த அதி சூஷ்மத்தைக் கந்திதான் தெரிந்துகொண்டார். அதனால்தான் அவர்களை எட்டிப் போவென்று சொல்லலாகாதாம். சங்கராசாரியாரவர்கள் இவ்வொன்றையும் தெரிந்து கொள்ளாததால்தான் விலகிப் போவென்றார் போலும்”

காந்தியை அவர்கள் எந்த அம்சத்தில் சங்கராச்சாரியிடமிருந்து வேறுபடுத்தினர் என்பது இக்கூற்றிலிருந்து நமக்கு விளங்குகிறது.

இத்தனைக்குப் பிறகும் காந்தி ஆலயப் பிரவேசத்தை வெற்றிகரமாக நடத்தினார். சனாதனிகள் வெறிகொண்டனர். அடுத்தமுறை காந்தி தமிழகம் வந்தபோது கடுமையான எதிர்ப்புகள் வந்தன. அப்போது காந்திக்கு எதிராக வெளியிடப்பட்ட சுவரொட்டி வாசகங்கள் பலவற்றையும் எனது நூலில் காணலம். ஒன்று மட்டும் இங்கே:

“வராதே காந்தீ! ஓடிப்போ காந்தீ!! பேசாதே காந்தீ!!!

வேதத்தை அறியாமலே கொண்ட வெறியை வேதத்தை / விளக்கியே தீர்க்க வரும் வேதப் பிரானொத்த ஜகத்குரு / சங்கராச்சாரியைக் காண விரும்பாத காந்தீ, ஓடிப்போ! / இங்கிலீஷ் படித்த கர்வமும் பட்டினி கிடக்கும் கெட்ட பிடிவாதமும் தவிர வேறொரு சரக்குமில்லாத காந்தி ஓடிப்போ! / ராஜ துரோஹியாகவே வாழ் நாளை வீண்படுத்திய பழக்கத்தினால் தர்மத்தை மதியாமல் தெய்வத் துரோஹியாய்த் தலைப்பட்ட காந்தி ஓடிப்போ!”

மேற்படி துண்டறிக்கையை வெளியிட்டவர் திருவரங்கம் பெரியகோவில் பத்திராதிபரான பார்த்தசாரதி அய்யங்கார், தேதி 09.02.1954.

இது 1934ல் வெளியிடப்பட்டது, 1930களில் காந்தியின் முன்னெடுப்பில் ஆலயப் பிரவேசங்கள் முன்னெடுக்கப்பட்டன. எனினும் 1920களின் பிற்பகுதியிலிருந்தே காந்தி தீண்டாமைக்கு எதிராகப் பேசவும் செயல்படவும் தொடங்கினார். இதற்கு இடைப்பட்ட காலத்தில்தான் காந்தி – சந்திரசேகர சங்கராச்சாரி ஆகியோரின் சந்திப்பு நடைபெற்றது.

திருவரங்கக் கோவில் பத்திராதிபர் பார்த்தசாரதி அய்யங்கார் வெளியிட்ட துண்டறிக்கையிலிருந்த, “சங்கராச்சாரியைக் காண விரும்பாத காந்தீ, ஓடிப்போ!” என்கிற வாசகத்திலிருந்தது, காந்தி சங்கராச்சாரியைச் சந்திக்க ஆர்வம் காட்டவில்லை என்பதும் உறுதியாகிறது.

உண்மைகள் இப்படியிருக்க சங்கராச்சாரியைச் சந்திக்க காந்தி ஆர்வம் கொண்டார் என்பதும், அதை அறிந்த சங்கராச்சாரி பெரியமனது பண்ணி அதற்கு இசைந்தார் என்றும் இந்து நாளிதழ் கட்டுரை வெளியிடுவதன் பொருளென்ன?

காந்திக்கு எதிராகப் பண உதவி செய்து, இப்படியான ஒரு பத்திரிக்கையை நடத்திய நபர் சந்திரசேகரேந்திர சங்கராச்சாரி. அவரைக் காந்தி சந்திக்க விருப்பு தெரிவித்துச் சென்று சந்தித்தார் என்பது எத்தனை அபத்தம்.

காந்தியை இறுதியில் கொன்று தீர்த்தவர்கள் பார்ப்பனர்கள் என்பதையும் நாம் மறந்துவிடலாகாது. கோட்சே துப்பாக்கிக் குண்டால் சுட்டுத் தீர்த்த செயலைத்தான் சந்திரசேகர சங்கராச்சரியின் ஆர்யதர்மமும் தன் எழுத்துக்களால் செய்தது.

இல்லையா?

காந்தி விரிவாகத் தன் இயக்கங்களைப் பதிவு செய்தவர். அவரது பதிவுகள் 90க்கும் மேற்பட்டப் பெருந் தொகுப்புகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன. சங்கராச்சாரியுடனான இச் சந்திப்பிற்குக் காந்தி தனது பதிவுகளில் பெரிய முக்கியத்துவம் அளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘இந்து’ ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள இந்த இணைப்பு, இந்து நிர்வாகம் வெளிட உள்ள தமிழ் நாளிதழின் முன்னோடி என்றே கருத வேண்டியுள்ளது. சில நாட்களுக்கு முன் இந்து நாளிதழில் தமிழ் முஸ்லிம் இயக்கங்களுக்கு எதிராக வெளிவந்த ஆர்.வெங்கடாசலபதி எடுத்துள்ள பேட்டியும், இந்தக் கட்டுரையும், வர உள்ள தமிழ் ‘இந்து’ நாளிதழ் எத்தகைய போக்குடன் அமையும் என்பதற்குக் கட்டியம் கூறுகின்றன எனக் கொள்ளலாமா?

ஆங்கில இந்து நாளிதழின் சிரப்புக்களில் ஒன்று அது கடைபிடித்து வரும் மதச் சார்பின்மை. தமிழ் இந்து நாளிதழ் அந்தப் பண்பைக் கைவிடப் போகிறதா?

அறிவுருவாக்கத்தில் வல்லுனர்களும் சாதாரணர்களும்

நேற்றைய The Hindu நாளிதழில் வந்துள்ள, மேற்குத் தொடர்ச்சி மலைகளின் சுற்றுச்சூழல்கள் குறித்த வல்லுனர் குழுவின் தலைவர் மாதவ் காட்கில் அவர்களின் கட்டுரை ஒரு முக்கிய கருத்தை முன்வைக்கிறது.

நம் எல்லோருக்கும் இக்கட்டான சந்தர்ப்பங்களில் கை கொடுக்கும் அறிவுக் களஞ்சியமான விக்கிபீடியாவை முன் வைத்து காட்கில் அறிவுருவாக்கத்தில் சாதரணர்களின் பங்கைப் பற்றிப் பேசுகிறார்.

வல்லுனர்களோ இல்லையோ யாரும் விக்கிபீடியாவில் எந்த ஒன்று குறித்தும் அறிமுகத்தையும் தகவல் திரட்டுகளையும் முன் வைக்கலாம். பொதுவாக ஏற்றுக் கொள்ளபடுகிற ஆதாரங்களின் அடிப்படையில் அந்த அறிவுப் பதிவு அமைந்திருந்தால் சரி. மக்களுக்கு, குறிப்பாக வல்லுனர்களுக்கு இப்படியானவற்றில் காணப்படும் தவறுகளைச் சுட்டிக்காட்டித் திருத்துவதில் ஒரு ஆர்வமும் மகிழ்ச்சியும் உண்டு. எனவே மிக எளிய முறையில் கூடியவரை சரியான தகவல்களையும், மேலதிக விவரங்களுக்கான மூலங்களையும் இணையத்தைப் பாவிக்கும் யாரும் செலவில்லாமல் எளிதில் பெற்றுக் கொள்ளும் சாதனமாக விக்கிபீடியா ஒரு மிகப் பெரிய சாதனையைச் சாதித்துள்ளது என்கிறார் காட்கில்.

இதில் மிகவும் திருப்தி அளிக்கக் கூடிய அம்சம் என்னவெனில், விக்கிபீடியாவில் உள்ள கட்டுரைகள் மற்றும் தரவுகளின் உண்மைத் தன்மையைப் (accuracy) பொருத்தமட்டில் வணிக ரீதியில் விற்கப்படுகிற எந்த ஒரு கலைக் களஞ்சியத்தின் தரத்துடனும் ஒப்பிடத் தக்கவையாகவே அவை உள்ளன என்பதுதான். ஆனால் அதே நேரத்தில் கட்டுரைகளின் எண்ணிக்கையைப் பொருத்தமட்டில் எந்த ஒரு வணிக ரீதியான கலைக் களஞ்சியத்தைக் காட்டிலும் பல ஆயிரம் மடங்கு அதிகக் கட்டுரைகளைக் கொண்டதாக விக்கிபீடியா அமைந்துள்ளது. அப்படியும் அதன் தரம் குறைந்து விடவில்லை என்பதுதான்.

சுனாமி தாக்கிய சில மணி நேரத்தில் அது குறித்த ஏராளமான தகவல்களைப் படங்களுடன் தான் பார்க்க நேர்ந்ததையும் காட்கில் சுட்டிக் காட்டுகிறார்.

விக்கிபீடியா அனுபவத்திலிருந்தும் தன் சொந்த அனுபவங்களிலிருந்தும், உலக அளவில் சில நாடுகளில் கடைபிடிக்கப்படும் நடைமுறைகளிலிருந்தும் காட்கில் சொல்ல வரும் செய்தி முக்கியமானது.

சாதாரண மக்களின் ஊடாக இப்படி உருவாகும் அறிவு குறித்து அவர் பயன்படுத்தும் சில அரிய கருத்தாக்கங்கள்: “படைப்புத் திறன்மிக்க சாதாரணர்கள்” (creative commons), “அறிவுப் பொதுச் சொத்து” (common wealth of knowledge), “குடிமக்கள் அறிவியல்” (citizen science) முதலியன (இன்னும் நல்ல மொழியாக்கங்களையும் முயற்சிக்கலாம்).

சாதாரண மக்கள் இணைந்து செயல்படுவது ஒரு மிகச்சிறந்த பொது நல வளமாக இருக்கும். வருந்தத்தக்க விடயம் என்னவெனில், வல்லுனர்களுக்கு (அறிவுருவாக்கத்தில்) ஏகபோகப் பங்கை அளிப்பது பொது நலனைத் தவறாகப் பயன்படுத்துவதற்கு இட்டுச் செல்வதுதான். (Common people, acting collaboratively, are a wonderful source of public good. Regretfully, experts, when assigned a monopolistic role, can abuse public interest.)

அரசு நிறுவனங்கள் பல வல்லுனர்களை நம்பி ஏமாந்ததையும், தனியார் நிறுவன வல்லுனர்கள் பலர் சொந்த லாபங்களுக்காகத் தம் அறிவைத் தவறாகப் பயன்படுத்துவதையும் அடுத்து காட்கில் சுட்டிக் காட்டுகிறார்.

இவை ஏதோ அறிவுத்துறை அயோக்யத்தனம் மட்டுமல்ல, பல நேரங்களில் துறை சார் வல்லுனர்களைக் காட்டிலும் சாதாரணர்களின் அறிவு சரியாக இருப்பதைத் தன் சொந்த அனுபவ அடிப்படையிலிருந்து, எடுத்துக்காட்டு ஒன்றின் அடிப்படையில் விளக்கும் காட்கில், இறுதியாக இத்தகைய குடிமக்கள் அறிவியல் நடைமுறையில் பயன்படுத்தப்படும் பல எடுத்துக்காட்டுகளையும் சொல்லித் தன் கட்டுரையை முடிக்கிறார். முழுமையாகப்படித்துப் பாருங்கள்.

ஒரு கேள்வி: அறிவு உற்பத்தியையும், உடலுழைப்பையும் தனித் தனியே நிறுத்தி வேலைப் பிரிவினையை உருவாக்கிய இந்தியச் சமூகம் இதன் மூலம் எத்தனை இழப்புகளுக்குக் காரணமாகி இருக்கும்?

சரி, ஒரு நகைச்சுவை ; (நீங்கள் அறிந்ததுதான். சும்மா சிரிப்ப்புக்காக மட்டும் இங்கே): கணித ஆசிரியர் ஒருவர் வகுப்பில் இப்படி ஒரு கணக்கைப் போட்டு விடை கேட்டார். “ஒரு ஆட்டுத் தொட்டிக்குள் 30 ஆடுகளை வைத்து அடைத்துவிட்டு வீட்டுக்குப் போகிறார் ஆடுகளை வளர்ப்பவர். அதில் இரண்டு ஆடுகள் இரவில் ஏறிக் குதித்து வெளியே ஓடிவிடுகின்றன. காலையில் வந்து பார்க்கும்போது தொட்டிக்குள் எத்தனை ஆடுகள் இருக்கும்?”

பதில் சொல்லுமாறு ஒரு மாணவியை எழுப்பினார் ஆசிரியர். அவள் சொன்னாள் :”ஒரு ஆடுகூட இருக்காது”

ஆசிரியர் சலித்துக் கொண்டு மீண்டும் கணக்கைச் சொன்னார்: ” இங்கப் பாரும்மா, 30 ஆடு தொட்டிக்குள்ள இருக்கு. அதில 2 ஆடு குதிச்சு ஓடிப்போனா மிச்சம் எத்தனை இருக்கும்?”

மறுபடியும் அந்தப் பெண் “ஒன்றும் இருக்காது” என்று சொன்னதும் ஆசிரியர் பிரம்பை ஓங்கினார்.

அந்த மாணவி சொன்னாள்; ‘சார், உங்களுக்குக் கணக்குத்தான் தெரியும். ஆனா ஆடுகளைப் பத்தி எனக்குத்தான் தெரியும்”

ஒரு பின் குறிப்பு: சில வாரங்களுக்கு முன் நண்பர் எம்.டி.எம்மின் பக்கத்தில் நடந்த ஒரு விவாதத்தில் ஒரு கருத்தைத் தெரிவித்திருந்தேன். என்ன, நீங்கள் ஒரு ‘ஸ்காலரை’ப்போல பிரச்சினையை அணுகாமல் ஒரு சாதாரண ஃபேஸ் புக்கரைப் போலப் பேசுகிறீர்களே என ஒரு நண்பர் மற்றவரைக் கேட்டிருந்தார். அது தொடர்பாக அப்போது நான் எழுதியிருந்த ஒரு பதிவிலிருந்து: “இதுகாறும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்த பெரிய ஊடகக்காரர்களின் தயவை எதிர்பார்த்து, வாய்ப்பிழந்திருந்த பலரும் தங்கள் கருத்துக்களை சொல்லும் ஒரு ஜனநாயக ஊடகமாக இது (முக நூல்) உருவாகியுள்ளது. பல இளைஞர்கள் தங்களிடம் பொதிந்துள்ள படைப்புத் திறனை வெளிப்படுத்துவதைப் பார்க்கும்போதெல்லாம், இவர்களுக்கு இந்த ஊடகம் கைவரப் பெற்றிருக்காவிட்டால் ஒரு வேளை இவர்கள் அறியப்படாமலேயே போயிருப்பார்களோ என நான் நினைப்பதுண்டு. ஜனநாயகப்பாடு நடக்கும்போது சில நீர்த்துப் போகல்களும் இருக்கத்தான் செய்யும். எனினும் நான்கு wise menகூடி உருவாகும் ஒரு கருத்தைக் காட்டிலும் பத்துப்பேர், அவர்களில் பலர் சாதாரணர்கள் ஆயினும் கூடும்போது உருவாகும் பொதுக் கருத்து மக்களுக்குப் பயனுடையதாக இருக்கும் என நான் நம்புகிறேன். உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை. பைத்தியக்காரனின் உளறலையும், unconscious லிருந்து முகிழ்க்கும் பிம்பங்களையும் கூட நாம் எப்படிப் புறக்கணிப்பது?

ஆனால் இத்தகைய ஜனநாயகப்பாட்டை இதுகாறும் தங்களின் ஒதுக்கப்பட்ட புலமாகக் கருதி ஆட்சி செலுத்தி வந்தவர்கள் மிகவும் ஆபத்தாகக் கருதிக் கடும் எதிர்வினையாற்றி வந்ததற்கு குறைந்த பட்சம் இரு எடுத்துக்காட்டுகளை என்னால் சொல்ல இயலும்

1. “இப்பல்லாம் இந்த judiciary ரொம்ப கெட்டுப் போயிடுத்து. இந்த வக்கீல்களெல்லாம் ஸ்ட்ரைக், போராட்டம்னு என்னமாக் கூத்தடிக்கிறா..”- பெரிய அளவில் இன்று அடித்தளச் சமூகத்திச் சேர்ந்தவர்கள் வழக்குரைஞர்களாக இடம் பெறுகின்றனர். மேல்தட்டினரின் கோட்டையாக் இருந்த ஒன்று இன்று ஜனநாயகமயமாயிருக்கிறது. அவர்கள் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை, இதுகாறும் பலரது கவனத்தில் படாதிருந்தவற்றை கவனப்படுத்துகின்றனர், இதில் சில தவறுகள் நிகழலாம். சுப்பிரமணிய சுவாமி மீது நீதிமன்ற வளாகத்திற்குள் முட்டை வீசியதை எல்லாம் , அவர்கள் என் நண்பர்களாக இருந்தபோதும் கண்டித்துள்ளேன். தேவையற்ற வேலைநிறுத்தங்களால் மகக்ள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதெல்லாம் உண்மை. ஆனாலும் ஜுடிசியரி முன்னைக் காட்டிலும் மக்களுக்குப் பயன்படும் வகையில் ஜனநாயகபட்டிருக்கிறது என்பதுதான் என் கருத்து.

2. முன்னெல்லாம் இலக்கிய விசாரம் என்பது சமூகத்தின் மேல் தட்டினருக்கானதாக இருந்தது. குறிப்பாக இலக்கிய ரசனை, மதிப்பீடுகள், திற்னாய்வு முதலியன.பலகலைக் கழகங்கள் இதை ஜனநாயகப் படுத்தின. அடித்தள மக்கள் பலர் M.A, P.hd பட்டங்கள் பெற்று இலக்கியத் துறையை நிரப்பினர். இவர்களது வெளிப்பாடுகளை, குறிப்பாகப் பலகலைக் கழக இலக்கியத் துறைப் பேராசிரியர்களில் தலையீடுகளை சுந்தரராமசாமி போன்றோர் எவ்வளவு கேவலப் படுத்தினர் என்பதை விளககத் தேவையில்லை. கிட்டதட்ட ஆபாசம் எனச் சொல்லத் தக்க அளவிற்கு அவரது சொற் பிரயோகங்கள் இருந்தன. ஆனால் இப்படி இலக்கியப் புலம் ஜனநாயகப் படுத்தப்பட்ட பின்னர்தான் தமிழுக்குப் பல புதியன வந்து சேர்ந்தன என்பதை நாம் மறந்து விட இயலாது.” ஆனால் இதற்குப் பதிலாக விற்பனர்களிடமிருந்து வந்த பதில்கள் எனக்குச் சலிப்பைத் தந்ததால் நான் இத்தோடு அந்த விவாதத்திலிருந்து விலகிக் கொண்டேன்.

இம்ரானின் அனுபவங்கள் எவருக்கும் வரவேண்டாம்

இரண்டு நாட்களாக இரயில் பயணம். என்னதான் குளிர் பெட்டியானாலும் நம் இயக்கம் குறுக்கப்படுவது எல்லாவற்றையும் முடக்கி விடுகிறது. ஒரு கட்டுரை டைப் செய்து அனுப்பினேன். அதற்கு மேல் ஒன்றும் செய்ய இயலவில்லை.

இன்று முழுவதும் டெல்லியில் UAPA சட்டத்திற்கு எதிரான மாநாடு. மாலைக் கருத்தரங்கில் சுமார் 5000 பேர் கலந்துகொண்டனர். ஏகப்பட்ட தலைவர்கள் இந்தக் கொடூர சட்டத்திற்கு எதிராகக் கண்டன உரையாற்றினர்.

காலையில் இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒரு உரையாடல் நடைபெற்றது. நானும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த வழக்குரைஞர் ஷப்னாவும் ஒரு பேனலில் இருந்தோம். மூன்று மணி நேரத்தில் நால்வரின் சோக அனுபவங்களுக்குக் காது கொடுக்க முடிந்தது.

ஒவ்வொன்றும் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய நெஞ்சை உருக்கும் அனுபவங்கள்தான். நேரமில்லை. ஒன்றை மட்டும் இங்கே பதிகிறேன்.

சென்ற வாரம் ஹைதராபாத் சென்றபோது சந்தித்த அந்தப் பையனை, அல்லது அழகிய தோற்றத்துக்குரிய இளைஞனை மீண்டும் பார்த்தபோது ஒரு கணம் துணுக்குற்றேன், ஆவலுற்றேன். ஓடிச்சென்று அவன் கைகளைப் பற்றிக் கொண்டேன்.

அவனை நான் சென்ற வாரம் ஹைதராபாத்தில் பார்த்தேன். இதே UAPA சட்டத்திற்கெதிரான கூட்டத்திற்கு வந்திருந்தவர்களில் அவனும் ஒருவன். அவன், இவன் எனக் குறிப்பிடுவதை மரியாதைக் குறைவாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அன்பின் மிகுதியும் அப்படி விளிப்பதில்தானே முடியும்.

யாரோ சொன்னார்கள். ஹைதராபாத் மக்கா மசூதி வழக்கில் பொய்யாய்க் குற்றம் சாட்டப்பட்டுக் கடுஞ் சித்திரவதைகளையும், பல மாதச்சிறையையும் அனுபவித்து, இறுதியில் குற்றமற்றவன் என விடுதலை செய்யப்பட்டவன், பெயர் இம்ரான் என்றார்கள். அப்போதும் அவன் கைகளைப் பற்றிக்கொண்டு மவுனமாக இருக்கத்தான் முடிந்தது.

கொஞ்சம் பேச வேண்டும் என்றேன். அவனுக்கு ஏதோ அவசரம். நான் தங்கியுள்ள அறைக்கு மாலை வருகிறேன் எனச் சொன்னான்.அவன் சரியாகத்தான் வந்தான், நான்தான் அப்போது அறையில் இல்லை. அன்று விரிவாகப் பேசமுடியவில்லையே ஏமாற்றமடைந்திருந்த எனக்கு இன்று அவனைப் பார்த்தபோது இரட்டிப்பு மகிழ்ச்சி.

எனது பேனலின் முன் முதலாவதாக வந்து தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டவர் ராஜஸ்தான் மாநிலத்தவர். ஐந்து பிள்ளைகள். ஒரு பள்ளி நடத்துகிறார்.ஆயுதங்களுடன் பஜ்ரங்தள் ஊர்வலம் ஒன்று நடந்தபோது அதை எதிர்த்துள்ளார். கைது, சித்திரவது, UAPA சட்டம் என நீண்ட நாள் சிறைவாசத்திற்குப் பின் விடுதலையானவர். பெயர் முகம்மது ஹனீஃப்.

அவர் சென்றவுடன் நான் இம்ரானை அழைத்தேன்.

பெயர்: சையத் இம்ரான் கான். வயது 30 (இப்போது). கல்வி: பி.டெக் (கம்ப்யூட்டர் சயின்ஸ்). வேலை : ICICCI வங்கி.

அப்பா ஒரு மத்திய அரசு ஊழியர் (அப்போது). ஒரு தம்பி, ஒரு தங்கை. ஊர் : செகந்தராபாத்தில் போன்பள்ளி.

சுவாமி அசீமானந்தாவின் இப்போதைய வாக்குமூலம், 2007 மக்கா மசூதி குண்டு வெடிப்பு இந்துத்துவவாதிகளின் சதி என்பதை இன்று உறுதிப்படுத்தியுள்ளது. அன்று முஸ்லிம் தீவிரவாதிகள், லக்‌ஷர் ஏ தொய்பா, பாகிஸ்தானில் பயிற்சி, இந்திய முஜாஹிதீன் என்கிற அளவில் பேசப்பட்டது. ஊடகங்கள் அப்படியே செய்திகள் பரப்பின.

மக்கா மசூதி குண்டு வெடிப்பிற்கு எட்டு நாளைக்குப் பின் சுமார் 200 பேர் கொண்ட ஒரு போலீஸ் படை இம்ரானின் வீட்டைச் சுற்றிக் கொண்டது. நாலைந்து போலீஸ் வான்கள், கொஞ்சம் ஊடகக்காரர்கள் சகிதம் அந்தப் படையெடுப்பு நடந்துள்ளது..

என்ன காரணம் என அவனிடமோ இல்லை பெற்றோர்களிடமோ சொல்லாமல், சும்மா ஒரு விசாரணை, போலீஸ் ஸ்டேஷன் வரை வந்துவிட்டுப் போ என அவன் அழைக்கப்பட்டுள்ளான். வானில் ஏறுமுன் கறுப்புத் துணியால் ஆக்கப்பட்ட ஒரு பையால் தன் முகம் மூடப்பட்டபோதுதான் இம்ரானால் அதிர்ச்சியைத் தாங்கமுடியவில்லை.

பிள்ளையை அத்தனை காமரா வெளிச்சங்களுக்கும் முன்னால் இப்படி முகத்தைக் கறுப்புத் துணியால் மூடி போலீஸ் வானில் ஏற்றியதைப் பார்த்திருந்த அவனது பெற்றோர்களுக்கும் உடன்பிறந்தார்களுக்கும் எப்படி இருந்திருக்கும் என ஒரு கணம் நினைத்துப் பார்த்தேன்.

கருப்புத் துணி விரித்த இருளின் ஊடாக எங்கோ இழுத்துச் சென்று ஒரு பண்ணை வீட்டில் அடுத்த பத்து நாட்கள் சட்ட விரோதக் காவல். தினசரி அடி. மின்சார ஷாக்குகள்..

தினம் இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்க அநுமதி. அசந்து தூக்கம் கண்களைச் சுழற்றினால் இமைகளில் க்ளிப் போட்டுக் கண்களை மூட விடாது செய்து தூக்கத்தை விரட்டுதல்…

இம்ரானிடம் அவனுக்கு விளங்காத பல கேள்விகள், அவனுக்குத் தெரிந்திராத பெயர்களைச் சொல்லி விவரங்கள் கேட்டுத்தான் இத்தனைச் சித்திரவதைகளும்.

“லக்‌ஷர் ஏ தொய்பாவுடன் உனக்கு எத்தனை நாளாகத் தொடர்பு?”

“பயிற்சிக்காகப் பாகிஸ்தானிற்கு நீ என்னென்ன தேதிகளில் சென்றிருந்தாய்…”

“தெரியாதா? அடேய் என்ன சொல்கிறாய்..? நீ இப்படிக் கேட்டால் சொல்வாயா/”

“சொல்லமாட்டாயா? சொல்லமாட்டாயா? இப்ப சொல்லுடா, சொல்லுடா, சொல்லுடா,,,”

###

இரண்டுமுறை இம்ரானுக்கு நார்கோ அனாலிசிஸ் செய்துள்ளனர். இன்று அந்த “உண்மை அறியும் சோதனை”, நிரந்தர மூளை ஊனத்தை ஏற்படுத்திவிடும் எனத் தடை செய்யப்பட்டுள்ளது.

அவனுக்கு நார்கோ சோதனை செய்த டாக்டர் மாலினி போலீசிடம் லஞ்சம் பெற்றுப் பொய் சர்டிஃபிகேட்டுகள் கொடுத்ததற்காகக் குற்றம் சாட்டப்பட்டவர்.

லேடி போயிங் ஹாஸ்பிடலுக்கு நார்கோ சோதனைக்காக அழைச்சிட்டுப் போய் உடகார வச்சிருந்தாங்க. அப்போ T9 டி.வியில என் படத்தைக் காட்டி என்னமோ சொல்லிட்டு இருந்தாங்க. நான் பதட்டமாயி அங்கே இருந்த நர்ஸ்கிட்ட என்ன சொல்றாங்கன்னு கேட்டேன். ‘அது, நீ ஒரு பயங்கரவாதி, நார்கோ டெஸ்ட்ல எல்லாத்தையும் நீ ஒத்துக்கிட்டன்னு சொல்றாங்க’…”

“என்ன இம்ரான், டெஸ்ட் பண்றத்துக்கு முன்னாடியே அப்படி நியூஸ் வெளியிட்டாங்களா என்ன..?”

‘’ஆமா சார்…”

###

மொத்தம் 17 மாதங்கள், 24 நாட்கள் சிறை வாசம். இதில் 10 நாட்கள் சட்டவிரோதப் போலீஸ் காவல்; 15 நாட்கள் சட்டபூர்வக் காவல்.

“சட்டவிரோதமாக் காவலில் வச்சிருந்ததை நீங்க நீதிமன்றத்தில் சொல்லவில்லையா இம்ரான்?”

“இல்லை. கோர்ட்டுக்குக் கொண்டுபோன அன்னைக்குத்தான் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தபோது கைது செஞ்சதா சொன்னா உடனே விட்டர்றதா சொன்னாங்க. விட்டிடுவாங்கன்னு சொன்னதால நானும் அப்படியே சொன்னேன்.”

நீதிமன்றக் காவலில் இருந்தபோதும் கூட, முதல் ஆறு மாதம் தனி செல்லில்தான் வைத்திருந்திருக்கின்றனர், ஆறு மாதத்திற்குப் பின் வழக்கு விசாரணை கர்நாடகப் போலீசிடமிருந்து சி.பி.அய்க்கு மாற்றப்பட்ட பிறகு சிறைக்குள் தனிக் கொட்டடி என்கிற நிலை தளர்த்தப்பட்டுள்ளது.

###

ஹைதராபாத்தில் ஒரு அற்புதமான மனித நேய வழக்குரைஞர். பெயர் முஸாபருல்லாஹ். இப்படியான பொய் வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு மிக்க தைரியமாகவும், இலவசமாகவும் வழக்காடும் மனிதருள் மாணிக்கம். அவர்தான் இம்ரானுக்காகவும், அவன் மீது தொடுக்கப்பட்ட UAPA மற்றும் இ.த.ச 120 ஏ, 144, 143, வெடிமருந்துச் சட்டம், பண மாற்றீடுக் குற்றச்சாட்டு முதலான எல்லா வழக்குகளிலும் சட்ட உதவி செய்துள்ளார்,

வழக்குரைஞர் முஸாபருல்லாவைப் பற்றிச் சொல்லும்போது இம்ரானின் குரல் கம்மியது.

###

சி.பி.ஐ இறுதியாக இம்ரானை அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுதலை செய்து Clean chit கொடுத்தது, ஆந்திர போலீஸ் அவன் மீது வீண்வழக்குப் போட்டதாக அறிக்கை அளித்தது.

பதினேழு மாதங்கள் 24 நாட்களுக்குப் பின் அவன் வீட்டுக்கு வந்தான்; அவனது வாழ்க்கையில் 17 மாதங்களும் 24 நாட்களும் மட்டுமல்ல, அவனது ICCI வங்கி வேலை…. இன்னும் என்னென்னவற்றையறவன் இழந்தான்.

அவன் தந்தை வி.ஆர்.எஸ் கொடுத்து அரசு வேலையிலிருந்து விலகினார். அவனது தங்கைக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பயங்கரவாதியின் குடும்பம்…..

“எனக்கும் கூடத்தான் ஒரு நல்ல வாழ்க்கைத்துணை கிடைக்க மாட்டேன் என்கிறது..”

###

மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பதுபோல. சி.பி.ஐ. க்ளீன் சிட் கொடுத்தபின்னும் கூட மோடியின் குஜராத் போலீஸ் ஏதோ விசாரணை என இம்ரானை அழைத்துச்செல்ல முயன்றுள்ளது. பதறிப்போன இம்ரான் ஹைதராபாத் போலீஸ் கமிஷனரிடம் ஓடியுள்ளான். கவலைப்படாதே உன்னை குஜராத் போலீஸ் கைது செய்யவோ, அழைத்துச்செல்லவோ அனுமதிக்க மாட்டோம் எனச் சொல்லி அனுப்பியுள்ளார்.

இப்போது நிலைமை எப்படி இம்ரான் எனக் கேட்டேன்’

“இப்போதும் கூட அப்பப்ப போலீஸ், உளவுத் துறை வந்து ஏதாவது விசாரிச்சிட்டுத்தான் இருக்கிறாங்க..”

“இப்ப என்ன வேலைல இருக்கீங்க?”

சிரித்தான் இம்ரான்.

“ஒரு இன்டிபென்டன்ட் ரிசர்ச்சரா ஒரு கார்பொரேட் நிறுவனத்தில வேல செஞ்சிட்டிருந்தேன், சில நாட்கள் முன்னாடி என்னோட படத்தோட கூகிள்ல யாரோ இதை எல்லாம் போட்டிருந்தாங்க. இப்ப அந்த நிறுவனம் என்ன வேலய விட்டு நிறுத்திட்டு..”

எங்கள் பேனலுக்கு முன் வருபவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச வருமானால் நான் கேள்விகளைக் கேட்பது எனவும், உருது அல்லது இந்தியில் மட்டுமே பேசக்கூடியவர்களானால் வழக்குரைஞர் ஷப்னம் கேட்பது எனவும் எங்களுக்குள் ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தோம். இம்ரான் மிக அழகான ஆங்கிலத்தில் என்னிடம் பேசிக் கொண்டிருந்தான், அவன் விடை பெற்றபோது அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்த ஷப்னத்தின் கண்கள் கலங்கி இருந்தன. குரல் கம்மியியிருந்தது.