மனித உரிமைப் போராளியின் அடிப்படைத் தேவை நம்பகத்தன்மை

தமிழக NCHRO கிளை வெளியிட்டுள்ள அறிக்கைகளின் தொகுப்பிற்கு எழுதப்பட்ட முன்னுரை

இந்திய அளவில் மனித உரிமை மீறல்களை வெளிக் கொணர்வது தவிர, தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் நின்று நீதி கிடைக்கப் போராடுவது, நிவாரணப் பணிகளை மேற்கொள்வது ஆகியவற்றில் முன்னணியில் நின்று செயல்படும் அமைப்புகளில் ஒன்று தேசிய மனித உரிமை அமைப்புகளுக்கான கூட்டமைப்பு. (National Confederation of Human Rights Organisations- NCHRO). கேரளத்தில் மனித உரிமைப் பணிகளில் முன்னோடியாக இருந்து செயல்பட்ட மறைந்த போராளி முகுந்தன் சி.மேனன் அவர்களால் கேரள மாநிலத்திற்குள் ‘மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு’ என்கிற பெயரில் இயங்கிக் கொண்டிருந்த இந்த அமைப்பு இப்போது தேசிய அளவில் விரிவாக்கப்பட்டுச் செயல்பட்டுக் கொண்டுவருகிறது. கேரளம் மட்டுமின்றி தற்போது தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரம், கர்நாடகம் முதலான மாநிலங்களில் வலுவான அமைப்புகளைக் கொண்டுள்ளது. மகாராஷ்டிரம், டெல்லி முதலிய மாநிலங்களிலும் கிளைகள் உள்ளன. டெல்லியில் தலைமை அலுவலகம் உள்ளது. வரும் பிப்ரவரி 20 அன்று கோவா மாநிலத்தில் அமைப்பு தொடங்கப்படுகிறது.

இந்திய அளவில் சிறப்பாக மனித உரிமைக் களத்தில் செயல்பட்டு வரும் முன்னோடிகளில் ஒருவருக்கு ஆண்டு தோறும் முகுந்தன் சி மேனன் பெயரில் சிறந்த மனித உரிமைப் போராளி எனும் விருதையும் NCHRO அளித்து வருகிறது. இந்த ஆண்டு அவ் விருதைப் பெறுபவர் பேரா. ராம் புனியானி அவர்கள். இரண்டாண்டுகளுக்கு முன்பு அவ்விருது தமிழகத்தைச் சேர்ந்த அணு உலை எதிர்ப்புப் போராளி .உதயகுமாருக்கு அளிக்கப்பட்டது.

‘சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA)’ மூலம் இந்தியா முழுமையும் போராடும் இயக்கங்கங்கள் மற்றும் தனி நபர்கள் மீது கடும் தாக்குதல் தொடுக்கப்படுவதையும் ஏராளமானோர் கைது செய்யப்படுவதையும் எதிர்த்துத் தொடர்ந்து இந்தத் தேசிய மனித உரிமை அமைப்புகளின் கூட்டமைப்பு போராடி வருகிறது. ஆண்டுதோறும் சித்திரவதை எதிர்ப்பு நாளில் (ஜனவரி 26) சாத்தியமான பகுதிகள் எல்லாவற்றிலும் சுவரொட்டிப் பிரச்சாரம், அறைக் கூட்டங்கள் முதலானவற்றின் ஊடாக பரப்புரைகளையும் மேற்கொண்டு வருகிறது. நாடெங்கிலும் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை உடனுக்குடன் கண்டிப்பதோடு டாக்டர் பினாயக் சென், கோபாட் காந்தி, சாய்பாபா, ஜிதேன் யும்நாம்,, எம்.என்.ராவுண்னி போன்ற மனித உரிமைப் பொராளிகள் மற்றும் இயக்கவாதிகள் கைது செய்யப்பட்டபோது கண்டித்தும், அவர்கள் விடுதலை செய்யப்படுவதற்காகத் தொடர்ந்து பிரச்சாரமும் செய்து வருகிறது.

இவை தவிர பெரிய அளவு மனித உரிமை மீறல்கள், பொய்க் கைதுகள், போலி என்கவுன்டர்கள், காவல் நிலையக் கொலைகள் நடக்கும்போது உடனடியாக தேசிய அளவிலும், மாநிலங்கள் அளவிலும் உண்மை அறியும் குழுக்களை அமைத்து உண்மைகளை வெளிக் கொணர்கிறது. அசாம், புனே (மகாராஷ்டிரம்), முசாஃபர்நகர் (உ.பி), மாராட் (கேரளம்), அலேர் (தெலங்கானா) முதலான பகுதிகளில் நடைபெற்ற மனித உரிமை மீறல்களை தேசிய அளவிலான குழுக்களை அமைத்து வெளிக் கொணர்ந்ததில் NCHRO வின் பங்கு முக்கியமானது. இது தவிர மாநில அளவிலும் பல்வேறு சகோதர அமைப்புகளுடன் சேர்ந்து இத்தகைய பணிகளைச் செய்து வருவதற்கு எடுத்துக்காட்டுகளாக செஷாசலம் காட்டில் 20 தமிழர்கள் போலி மோதலில் கொல்லப்பட்ட நிகழ்வு, வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டையில் கழிவு நீர்த் தொட்டி வெடித்து ஒன்பது வட மாநிலத் தொழிலாளிகள் உட்பட பத்து பேர்கள் கொல்லப்பட்டது, திருநாள்கொண்ட சேரியில் தலித் பிணங்கள் பொது வீதியில் தூக்கிச் செல்லப்படுவது மறுக்கப்பட்ட பிரச்சினை முதலானவற்றில் NCHRO வின் பங்களிப்புகளைச் சொல்லலாம்.

உண்மைகளை அறிந்து  வெளிக்கொணர்வது என்பதோடு நில்லாமல் தொடர்ந்து அப்பகுதிகளுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் வாக்குமூலங்களைப் பெற்று, வழக்குகள் பதிவு செய்து தொடர் பணிகளைச் செய்வதில் NCHRO வின் வழக்குரைஞர் குழுவின் பங்கு மிகவும் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டிய ஒன்று. அசாம் மற்றும் முசாபர் நகர் மத வன்முறைகளை ஒட்டி இவ்வழக்குரைஞர்களின் குழு கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் அங்கு தங்கி இப்பணியைச் செய்தனர்.  இப்போது முசாஃபர் நகர் வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக 50 வழக்குகளை NCHRO நடத்திக்கொண்டு இருக்கிறது. இவற்றில் இப்போது ஐந்து வழக்குகள் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் உள்ளன. அதேபோல அசாம் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்கள சார்பாக NCHRO ‘வெளிநாட்டார் தீர்ப்பாயத்தில்’ நடத்திக் கொண்டுள்ள வழக்குகளின் எண்ணிக்கை 88. சுமார் 45 பேர்களுக்கு அவர்கள் உள்நாட்டவர்கள்தான் என்பதை NCHRO வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் உறுதி செய்துள்ளனர். மத்தியப்பிரதேசத்தில் யாசின் என்கிற 12 வயதுச் சிறுமி காவல் நிலையத்தில் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு, அக்ரம் ஷா என்பவர் காவல் நிலையத்தில் அடித்து முடமாக்கப்பட்ட வழக்கு ஆகியவற்றையும் NCHRO தான் நடத்திக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு இழப்பீடுகளையும் பெற்றுத் தந்துள்ளது.

தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி பட்டணம் காவல்நிலையத்தில் சையத் அலி என்கிற அப்பாவி முஸ்லிம் இளைஞர் காவல்துறை துணை ஆய்வாளரால் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் NCHRO உண்மைகளை வெளிக்கொணர்ந்ததன் விளைவாக அந்த ஆய்வாளர் இன்று சிறையில் உள்ளார். அதேபோல கடையநல்லூரைச் சேர்ந்த மசூத் எனும் முஸ்லிம் இளைஞர் காவல்துறையால கொல்லப்பட்ட வழக்கில் மூன்று காவல் கண்காணிப்பாளர் உட்பட 12 காவல்துறை அதிகாரிகள் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் இருவர் இறந்துள்ளனர். ஒரு உயர் அதிகாரி  தன்னை வழக்கிலிருந்து நீக்குமாறு செய்த முறையீட்டை நீதிமன்றம ரத்து செய்துள்ளது. மசூதின் மனைவி ஹஸனம்மாளுக்கு 8.56 இலட்சம் இழப்பீட்டையும் NCHRO தான் பெற்றுத் தந்துள்ளது.

பானைச் சோற்றுப் பதமாகச் சில வழக்குகளை மட்டுயமே இங்கு குறிப்பிட்டுள்ளேன். இந்த அளவிற்குத் தொடர்ந்து வழக்குகளி நடத்திக் கொண்டுள்ள மனித உரிமை அமைப்பு எதுவும் இந்தியாவில் இல்லை எனலாம். தமிழகத்திப் பொருத்தமட்டில் முகமது யூசுஃப், அப்துல்காதர், ஷாஜகான் முதலான அர்ப்பணிப்பு மிக்க இளம் வழக்குரைஞர்கள், ப.பா.மோகன், லஜபதி ராய், ஜின்னா முதலான புகழ்பெற்ற மூத்த வழக்குரைஞர்களும் NCHRO வில் பொறுப்புக்களை ஏற்று செயல்படுவது குறிப்பிடத் தக்கது.

NCHRO வின் பணிகளையும், முக்கிய அறிக்கைகளையும் http://www.nchro.org/ எனும் இணைய தளத்தில் நீங்கள் காணலாம்.

2.

தமிழக எல்லைக்குள் நடந்த ஒரு எட்டு மனித உரிமை மீறல்களில்  NCHRO  அமைப்பு உண்மை அறியும் குழுக்களை அமைத்து வெளியிட்ட  அறிக்கைகளை நண்பர்கள் இங்கே தொகுத்துள்ளனர். இவை அனைத்தும் 2013 – 15 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டவை. இதில் நான்கு குழுக்களில் நான் பங்கு பெற்றுள்ளேன். இந்த நூலில் உள்ள அறிக்கைகளில் இரண்டு காவல் நிலையச் சாவுகள் தொடர்பானவை. ஒன்று போலி என்கவுன்டர் பற்றியது. ஒன்று இரு வெவ்வேறு மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு இடையே நடைபெறும் மோதல் ஒன்று பற்றியது. மற்றவை முஸ்லிம்களுக்கு எதிராக காவல்துறையினர் நடத்திய தாக்குதல் மற்றும் பொய்க் கைதுகள் தொடர்பானவை. ஆக, தற்போது நடை பெறும் பெரும்பாலான மனித உரிமை மீறல்களில் மாதிரிக்கு ஒன்று இதில் உள்ளது.

பெரும்பாலான மனித உரிமை மீறல்கள் காவல்துறை அத்துமீறல்கள் என்கிற வடிவிலேயே உள்ளன என்பதற்கு இந்தத் தொகுப்பு மேலும் ஒரு சான்றாக அமைகிறது. காவல்துறை எது செய்தாலும், அது எத்தனை மனித உரிமை மீறல்களை மேற்கொண்டாலும் அதற்காக நடவடிக்கை எடுத்தால் காவல்துறையின் உறுதி குலையும் என்கிற ஒரு மிக மோசமான அணுகல் முறையை அரசுகள் மேற்கொண்டிருக்கும் வரை இந்த நிலை தொடரவே செய்யும்.

இந்த முன்னுரையை எழுத்திக் கொண்டிருக்கும்போது சற்று முன் தொலை பேசியில் ஒரு செய்தி. இந்த தொகுப்பில் உள்ள கான்சாபுரம் கிட்டப்பா என்கவுன்டர் கொலை குறித்த அறிக்கையில் நாங்கள் கேட்டுள்ளபடி அந்த போலி என்கவுன்டரில் பங்கு பெற்ற 12 காவல்துறையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய மாவட்ட விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள செய்திதான் அது. போலி என்கவுன்டர் வழக்குகளைக் கையாள்வது குறித்து நீதிமன்றங்கள், மனித உரிமை ஆணையம் முதலியன எத்தனையோ நெறிமுறைகளை வழங்கி இருந்த போதும் அவை அரசுகளால் கடைபிடிக்கப்படுவதில்லை.ஈதன் விளைவாக காவல்துறை எந்த அச்சமோ, நீதி, நேர்மை, அடிப்படை மனித இரக்கம் ஏதுமின்றி இப்படி ‘மோதல்’ என்கிற பெயரில் படுகொலைகளைச் செய்கிறது. தங்களுக்கு தண்டனை விலக்கு (immunity) உண்டு என்கிற திமிர் ஒவ்வொரு காவலர்களிடமும் உள்ளவரை இது தொடரவே செய்யும்.

இந்தக் கிட்டப்பா கொலை வழக்கைப் பொறுத்த மட்டில் அவர் மீது ஏகப்பட்ட வழ்க்குகள் உள்ளன என்பது உண்மைதான். ஆனால் அதற்காகக் காவல்துறையினர் அவரைச் சுட்டுக் கொன்றுவிட இயலாது. அப்படிக் கொன்றால் நாம் அதை அனுமதிக்கவும் முடியாது. ஆனாலும் கொன்றார்கள். கொலையின் பின்னணி இதுதான். திருநெல்வேலி மாவட்டத்தில் கொலைகள் , கலவரங்கள் மிகுதியாகி விட்டன எனப் பத்திரிகைகள் எழுதின. எனவே காவல்துறை தாங்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக மக்கள் முன் காட்டியாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பிணையில் வெளி வந்து, மாமியார் வீட்டில் இருந்து கொண்டு, திருந்தி வாழும் முடிவுடன் விவசாய வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த கிட்டப்பாவைப் பொய் சொலி அழைத்துச் சென்று, முஸ்லிம் ஒருவர் கட்டிக் கொண்டிருந்த வீட்டுக்குள் வைத்து அவரைக் கதறக் கதறச் சுட்டுக் கொன்றார்கள் (ஜூலை 13, 2015). மிக மிக மிக ஏழைக் குடும்பம். நாங்கள் விசாரிக்கச் சென்ற போது கிட்டப்பாவின் இரண்டு வயதுக் குழந்தை அப்போதுதான் மொட்டை அடிக்கப்பட்டு, என்னவென்று தெரியாமலேயே தந்தைக்குச் சிரார்த்தம் செய்து கொண்டிருந்தான்.

போலி என்கவுன்டர்கள் என்றால் சில சடங்குகள் அடுத்தடுத்து முறையாகக் கடைபிடிக்கப்படும். ஒரு இரண்டு மூன்று போலீஸ்காரர்களை அரசு மருத்துவமனையில் சேர்த்திருப்பார்கள். அவர்கள் ஒரு நான்கைந்து நாட்கள் அங்கு தங்கி விடுமுறையை சுகித்துக் கொண்டிருப்பார்கள். இங்கும் அப்படித்தான் நடந்தது. மருத்துவமனையில் இருந்த ஸ்டாஃப் நர்ஸ், அவர்களுக்கு ஒன்றும் இல்லை எனவும், மேலதிகாரிகளின் ஆணையினால்தான் அவர்களை டிஸ்சார்ஜ் செய்யாமல் வைத்திருப்பதாகவும் சொன்னார். இது போல எத்தனை நாடகங்களை நாங்கள் பார்த்துள்ளோம். மனைவி மக்களுடன் வார்டில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்த காவல்துறையினர் நாங்கள் யார் எனத் தெரிந்தவுடன் கழற்றி வைத்திருந்த ‘பேன்டேஜ்’ களை அவசர அவசரமாக எடுத்து மாட்டிக் கொண்ட காட்சியை ராயப்பேட்டை அரசு மருத்துவ மனையில் பார்த்துள்ளோம். அட்மிட் ஆகியுள்ள போலீஸ்காரர்கள் எங்கே எனக் கேட்டபோது அங்கிருந்த ஸ்டாஃப் நர்ஸ், மென்று விழுங்கிக் கொண்டு, அவங்க வீட்டுக்குப் போயிருக்காங்க , வந்திடுவாங்க எனப் பதிலளித்ததை இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கண்டுள்ளோம்.

ஆக மக்களின் உயிர்கள் மயிருக்குச் சமம் என்று காவல்துறை கருதுகிறது என்றால் அதற்கு ஆதாரமாகவும் பக்க பலமாகவும் இருப்பது அரசுதான்.

காவல் நிலையச் சாவுகளும் இப்படித்தான் நேர்கின்றன. கைது செய்வது, காவலில் வைத்து விசாரிப்பது முதலானவற்றிற்கும் உரிய நெறிமுறைகள் உள்ளன. அவை எங்கும் கடைபிடிக்கப்படுவதே இல்லை. கைது செய்து பல நாட்கள் வைத்து சித்திரவதை செய்து பின்னர்தான் நீதிமன்றத்திற்கே கொண்டு செல்லப்படுகிறார்கள். பெரும்பாலும் திருட்டு வழக்குகளிள் கைது செய்யப்படுபவர்களும், தீவிரவாதிகள் எனக் கைது செய்யப்படுகிறவர்களுந்தான் இப்படிக் கொல்லப்படுகின்றனர். திருடிய பொருளை எங்கே வைத்திருக்கிறாய் எனக் கேட்டு அடிப்பது, சித்திரவதை செய்வது என்பன கொலைகளில் முடிகின்றன. உண்மையிலேயே திருடி இராதவன் என்ன செய்வான்? இந்தத் தொகுப்பில் மிக அழகாகவும் எளிமையாகவும் எழுதப்பட்டுள்ள ஒரு அறிக்கை கானாத்தூர் ஹுமாயூன் என்பவர் காவல் நிலையத்தில் கொடூரமாகக் கொல்லப்பட்ட கதையைச் சொல்கிறது. வேலை செய்யப் போன இஅடத்தில் ஒரு கம்மலைத் திருடினார் எனும் குற்றச்சாட்டில் கொண்டுபோகப்பட்டவர் அவர். எஸ்.பி பட்டினம் காவல் நிலையச் சாவில் கொல்லப்பட்ட சையது முகமது வின் கொலைக்கு அந்தக் கொலையைச் செய்த காவல் துணை ஆய்வாளர் காளிதாசின் வக்கிர புத்தி காரணமாக இருந்துள்ளது. அந்தக் காளிதாஸ் சங்கப் பரிவார அமைப்புகளுடன் தொடர்பு கொண்டிருந்தவர் என ஒரு தகவல் உண்டு. கொல்லப்பட்டவரோ ஒரு முஸ்லிம்.

இப்படிக் கொல்லப்படுபவர்கள், சித்திரவதை செய்யப்படுகிறவர்கள் என்ன குற்றச்சாட்டுகளுக்காகக் கொண்டு செல்லப்பட்டனர் என்பது ஒரு பக்கம், இன்னொரு பக்கம் அவர்கள் யாராக இருக்கிறார்கள் என்பதுதான்  அவர்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக அமைகிறது. இப்படிக் கொல்லப்படுபவர்கள் பெரும்பாலும் தலித்கள், முஸ்லிம்கள், மிகப் பிற்படுத்தப்பட்டோர், ஏழை எளியவர்கள், பழங்குடி மக்கள் இப்படியாகவே இருப்பதை நாம் வேறு எப்படிப் புரிந்துகொள்வது? காவல் நிலையங்களுக்கு வெளியே இன்று கட்டமைக்கப்படும் வெறுப்பு அரசியல் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

இயக்கவாதிகள் உளவுத் துறையுடன் வைத்துள்ள உறவுகளும் பெரும்பாலும் இயக்கவாதிகளுக்கு பாதிப்பில்தான் முடிகின்றன என்பதையும் இயக்கங்களில் உள்ளவர்கள் உணர வேண்டும். இப்படியான உறவுகள் முஸ்லிம் இயக்கங்கள் மத்தியில் அதிகம் உள்ளது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினைக்காக என்ன விதமான போராட்டம் நடத்துவது, என்ன தேதியில் நடத்துவது என்பதையெல்லாம் உளவுத் துறையுடன் கலந்தாலோசித்து முடிவு செய்யும் பழக்கம் இந்த இயக்கங்களில் உண்டு. அது அவர்களுக்குத்தான் ஏதோ ஒரு கட்டத்தில் ஆபத்தாக முடியும் என்பதற்கு பாபுலர் ஃப்ரன்ட் ஊர்வலத்தின் மீது இராமநாதபுரத்தில் நடந்த கொடுந் தாக்குதல் ஒரு எடுத்துக்காட்டு.

ஊர்வலம் செல்லும் பாதை என எழுத்து மூலம் கொடுப்பது ஒன்று. ஆனால் வாய் மொழியாக உளவுத்துறை சொல்வது வேறொன்று. கேட்ட பாதையைக் கொடுக்க முடியாது என எழுத்து மூலம் சொல்லிவிட்டு, வாய்மொழியாக, “பாய், நீங்க கேட்ட பாதை வழியாவே போகலாம் கவலைப்படாதீங்க..” எனச் சொல்வது. எல்லாம் நல்லபடியாகவே நடந்தால் ஓகே. ஆனால் பிரச்சினை என வந்தால் வாக்குறுதி அளித்த உளவுத் துறை அதிகாரி செல் போனை நிறுத்திவிட்டு எங்காவது தூங்கப் போய் விடுவார். நம்பிய ஊர்வலத்தினர் இங்கே தடியடி படவேண்டியதுதான். அப்படித்தான் இராமநாதபுரம் ஊர்வலத்தில் நடந்தது. அதுவும் என்கவுன்டர் கொலைகளைச் செய்தே பதவி உயர்வு பெற்ற வெள்ளத்துரை போன்றோரிடம் தடியைக் கொடுத்தால் வேறென்ன நடக்கும்?

ஆனால் இந்த பாபுலர் ஃப்ரன்ட்டின் சுதந்திர தின ஊர்வலத்தின் மீது தமிழக அரசுகள் மேற்கொள்ளும் அடக்குமுறையை விட ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கும் செயல் வேறென்ன இருக்க இயலும்? சுதந்திர தினத்தன்று அந்த அமைப்பினர் சீருடை அணிந்து தேசியக் கொடிக்கு வணக்கம் செலுத்துகின்றனர். முறையாக அனுமதி பெற்று நடக்கும் அந்த அணி வகுப்பு அல்லது ஊர்வலங்களுக்கு அனுமதி மறுப்பது அல்லது ஏதேனும் பிரச்சினைகளை உருவாக்குவது என்பதை காவல்துறை வழக்கமாகக் கொண்டுள்ளது. ஒரு பக்கம் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் வெளிப்படையாக ஆயுதப் பயிற்சி எடுக்கின்றன; மத வெறுப்பை விதைத்து திரிசூலங்களை விநியோகிக்கின்றவர்கள் தேசியக் கொடி மற்றும் நமது அரசியல் சட்டம் ஆகியவற்றை மதிப்பதுமில்லை. அவற்றிற்கு தாராளமாக அனுமதியும் பாதுகாப்புகளும் வழங்கும் நமது மத்திய மாநில அரசுகள் பாபுலர் ஃப்ரன்ட் அமைப்பு நடத்தும் சுதந்திர தின அணிவகுப்பைத் தடை செய்வதை எப்படிப் புரிந்து கொள்வது? நாம் நமது அரசியல் சட்டம் வழங்கியுள்ள மதச் சார்பின்மையை இழந்து கொண்டுள்ளோம் என்பது தவிர இதற்கு வேறென்ன பொருள்?

இராமநாதபுரத்தில் பாபுலர் ஃப்ரன்ட் அமைப்பிற்கு அவர்கள் கேட்ட பாதையில் அனுமதி வழங்காதபோதும், உளவுத்துறை அதிகாரிகள் கடைசி வரை அவர்களிடம் நீங்கள் கேட்ட வழியிலேயே அணிவகுப்பை நடத்தலாம் எனச் சொல்லியுள்ளனர். ஆனால் அணிவகுப்பு தொடங்கும்போது அந்த வழியில் போகக்கூடாது என அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுவரை அவர்களுக்கு அனுமதி உண்டு எனச் சொல்லி வந்த அந்த உளவுத்துறை அதிகாரி செல்போனை நிறுத்திவிட்டுப் போயே போய் விட்டார். விளைவு ஊர்வலத்தின் மீது கடுமையான தாக்குதல். போலி என்கவுன்டர் ‘புகழ்’ வெள்ளத்துரை வேறு இப்போது அங்கு உயர் அதிகாரி. கேட்கவா வேண்டும்.

உளவுத்துறை அதிகாரிகளில் நல்லவர்கள் என்ன கெட்டவர்கள் என்ன, அவர்கள் உளவுத் துறை அதிகாரிகள். அவ்வளவுதான். அவர்கள் அதிகாரத்தில் உள்ளவர்களின் விசுவாசிகள்.ஈந்த விசுவாசிகளின் வழிகாட்டல்களை ஏற்பது குறித்த எச்சரிக்கை இயக்கங்களுக்குத் தேவை என்பதுதான் இராமநாதபுரம் அனுபவம் நமக்குக் கற்றுத் தந்துள்ள அனுபவம்.

காவல்துறை அத்துமீறல்கள் என்பன பல வழிகளில் முஸ்லிம் மக்களைப் பாதிக்கிறது. ஏதேனும் ஒரு வன்முறை அல்லது தாக்குதலுடன் தொடர்புபடுத்தி உண்மையில் அந்தச் சம்பவத்தில் பங்கு பெறாதவர்களை எல்லாம் கைது செய்வது, உடனடியாக நீதிமன்றத்தில் நிறுத்தாமல் பலநாட்கள் சட்ட விரோதக் காவலில் வைத்துச் சித்திரவதை செய்வது, பொய்வழக்குப் போடுவது என்னும் நிலை தொடர்கிறது. கைது செய்யப்படுகிறவர்கள் எல்லோரும் அப்பாவிகள் என நாங்கள் சொல்லவில்லை. ஆனால் அப்பாவிகள் பலரும் கைது செய்யப்படுகிறார்கள். அவர்கள் பின்னர் விடுதலை செய்யப்பட்டாலும் அவர்களது படிப்பு, வேலை வாய்ப்பு, திருமணச் சாத்தியங்கள் மொத்தத்தில் அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. இப்படி அப்பாவிகளைக் கைது செய்து ஒரு சமூகத்தின் மத்தியில் இந்த நாட்டில் நமக்கு நீதி கிடைகாது என்கிற அவநம்பிக்கையை ஏற்படுத்துவது இந்த நாட்டுக்கு நல்லதல்ல.

இன்னொரு பக்கம் திருநெல்வேலியில் உள்ள மேலப்பாளையம், மதுரையில் உள்ள நெல்பேட்டை முதலான ஏழை எளிய முஸ்லிம்கள் வாழும் பகுதிகளை ஏதோ பயங்கரவாதிகளின் உற்பத்திசாலை என்பதைப்போல காவல்துறை அணுகுவதும் விளம்பரப்படுத்துவதும் மிக மிக வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. நெல்பேட்டையில் பாரம்பரியம் மிக்க அந்த மசூதிக்குள் தொழுபவர்களைப் படம் பிடிக்க ‘சிசிடிவி’ களைப் பொருத்தினார்கள். NCHRO வழக்குரைஞர்களின் எதிர்ப்புகளுக்குப் பின் மசூதிக்குள் பொருத்தப்பட்டிருந்த காமராக்கள் மட்டும் எடுக்கப்பட்டன. இது போன்ற பகுதிகளில் வாழும் இளைஞர்களைப் பிடித்துச் சென்று அவர்களின் செல்போன்களைப் பயன்படுத்து அதில் உள்ள தொடர்பு எண்கள் அனைத்திற்கும் போன் செய்து எல்லோரையும் வரவழைத்து அவர்களின் கைரேகைகளைப் பதிவு செய்வது, கிரிமினல்களைப்போல அவர்களைப் படம் எடுப்பது என profile களை உருவாக்குகின்றனர். நெல்பேட்டையில் மட்டும் 500 க்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் இவ்வாறு profile செய்யப்பட்டுள்ளனர் என்றார் ஒருவர். அனாதரவாக உள்ளவர்களை மிரட்டி அவர்களைக் காவல்துறை உளவாளிகளாக (informers) இருக்கக் கட்டாயப்படுத்துவது என இப்பகுதிகளில் பல்வேறு வடிவங்களில் அத்துமீறல்களும் சட்ட விரோதமாக குடிமக்களின் அந்தரங்கங்களில் தலையிடல்களும் நடக்கின்றன. நெல்பேட்டையில் கணவனை இழந்து, சொந்தத் தொழில் செய்து தன் மூன்று குழந்தைகளைக் காப்பாற்றி வரும் ஒரு பெண்ணை NCHRO குழு சந்தித்தது. தன்னை ஒரு informer ஆக இருக்க மதுரை காவல்துறை எத்தனை கொடூரமாக மிரட்டிக் கொண்டிருக்கிறது என்பதை அவர் சொல்லிக் கேட்டபோது அதிர்ச்சி அடைந்தோம்.

இப்படி ஒரு சமூகத்தையும், ஒரு குறிப்பிட்ட சமூகம் வாழும் சில பகுதிகளையும் “சந்தேகத்திற்குரிய சமூகங்களாகவும்”. “சந்தேகத்திற்குரிய  பகுதிகளாகவும்” கட்டமைப்பது அடிப்படை மனித நெறிகளுக்கு அப்பாற்பட்டது என்பது மட்டுமல்ல சட்ட விரோதமானதும், தேச ஒற்றுமையை அழிப்பதும் கூட.

இதை எல்லாம் தட்டிக் கேட்கும் அளவிற்கு அரசியல் கட்சிகள் எதுவும் தார்மீக பலம் உள்ளவையாக இப்போது இல்லை. இன்னொரு பக்கம் அரசு ஆதரவுடன் வளர்ந்து வரும் வெறுப்பு அரசியல் இரையைப் பிடிக்க வரும் ஒரு பாம்பு போலத் ட்ய்ஹிறந்த வாயுடன் கொஞ்சம் கொஞ்சமாக நெளிந்து நெளிந்து இங்கே வந்து கொண்டுள்ளது. கிழக்குக் கடற்கரையோரங்களிலும், சிறுபான்மையர் செறிந்து வாழும் பிற பகுதிகளிலும் இந்த நிலையை யாரும் காண இயலும்.

3

உண்மை அறியும் குழு ஒன்றை அமைத்து அறிக்கை ஒன்றை எழுதி வெளியிடுவது என்பது அத்தனை எளிதான காரியமில்லை. அது ஒரு கவனம் மிக்க கடினமான பணி மட்டுமல்ல. மிகவும் அறம் சார்ந்த பணியும் கூட. இரு தரப்பு நியாயங்களையும் கேட்டு தீர்ப்பு எழுதும் ஒரு நீதிபதியின் பணியை விட இது கடுமையானது. ஒரு நீதிபதிக்கு முன் எல்லாத் தரவுகளும் ஆய்வுக்கு வைக்கப்பட்டிருக்கும், வழக்குரைஞர்களின் வாதமும் அவருக்கு உதவிகரமாக இருக்கும். தவிரவும் நீதிபதிக்கு அபரிமிதமான அதிகாரமும் கையில்  உண்டு. அவர் கேட்கும் தரவுகளை அரசு தந்தாக வேண்டும். ஆனால் ஒரு உண்மை அறியும் குழுவோ இவை எதுவும் இல்லாமல் வெறும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் நீண்ட வரலாறு உடைய ஒரு பிரச்சினையை ஆராய்ந்து உண்மைகளைச் சொல்லியாக வேண்டும்.

சில நேரங்கலில் ‘போஸ்ட்மார்டம் ரிபோர்ட்’ போன்ற தகவல்கள் கூட நாம் போகிற நேரத்தில் நமக்குக் கிடைக்காமல் இருக்கும். அல்லது தர இயலாது, வேண்டுமானால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வாங்கிக் கொள்ளுங்கள் என அதிகாரிகள் தட்டிக் கழிக்கக் கூடும். இத்தனைக்கும் மத்தியில்தான் நாம் அறிக்கையை எழுதியாக வேண்டும்.

இத்தகைய தருணங்களில் எல்லா உண்மைகளையும் நம்மால் சொல்லிவிட இயலாது. சொல்லவும் தேவை இல்லை. எந்த விடயங்களில் ஐயம் உள்ளதோ, எந்த விடயங்களில் உண்மைகள் உள்ளதாக நாம் நமக்குக் கிடைத்த வாக்குமூலங்களின் ஊடாகவும் சாட்சியங்களின் ஊடாகவும் அறிகிறோமோ அவற்றை கவனப்படுத்தி அவை புலனாய்வு செய்யப்பட வேண்டும் எனச் சொன்னால் அதுவே பெரிய விடயம். ஒரு நம்பகத்தன்மை மிக்க மனித உரிமை ஆர்வலர்களின் குழு இவ்வாறு ஐயங்களை முன் வைக்கிறது என்பது வெளியுலகிற்குத் தெரிய வைப்பதே நமக்குக் கிடைக்கிற முதல் கட்ட வெற்றியாக இருக்கும்.

“நம்பகத்தன்மை” என்று சொன்னேன். ஒரு உண்மை அறியும் குழுவின் மிகப் பெரிய பலம் மட்டுமல்ல, ஒரே பலமும் அதுதான். இவர்கள் உண்மையைச் சொல்லுவார்கள், தாங்கள் கொண்டுள்ள கருத்து நிலையின் அடிப்படையில் பொய்யான தகவல்களையோ, மிகைப்படுத்திய தகவல்களையோ சொல்லமாட்டார்கள் என்கிற நம்பிக்கையைச் சம்பாதிப்பது ஒரு மனித உரிமைப் போராளிக்கு மிக மிக முக்கியமான ஒன்று.

இதன் பொருள் நாம் “நடுநிலையாளர்களாக” இருக்க வேண்டும் என்பதல்ல. “நடுநிலையாளர்கள்” மட்டுந்தான் உண்மையைச் சொல்ல முடியும் என்பதும் அல்ல.

நாம் எப்படி நடுநிலையாளர்களாக இருக்க இயலும்? காவல்துறை தன்னிடமுள்ள அபரிமிதமான அதிகாரத்தை வைத்து ஒரு எளிய மனிதனைச் சட்ட விரோதமாகக் காவலில் வைத்துச் சித்திரவதை செய்து கொல்லும்போதும், ஒரு ஆதிக்க சாதிக் கும்பல் தலித் ஒருவரை எரித்துக் கொல்லும்போதும், ஒரு பெரும்பான்மைப் பிரிவு இன்னொரு சிறுபான்மையின் உரிமைகளையும் உயிரையும் பறிக்கும் போதும் எப்படி நாம் நடுநிலையாளர்களாக இருக்க முடியும்? நாம் பாதிக்கப்பட்டவர்களோடுதான் நிற்க இயலும்.

ஆனால் நாம் ஒன்றை மறந்து விடக் கூடாது. நடுநிலையாளர்கள் மட்டுந்தான் உண்மையைச் சொல்ல முடியும் என்பதல்ல.  சார்புடையவர்களும் உண்மையைச் சொல்ல இயலும். நாம் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சார்புடையவர்கள். உண்மையைப் பேசுவது நமக்கு இன்னும் எளிது. பாதிக்கப்பட்டவர்களின் பாதிப்புகளை உள்ளதை உள்ளபடிச் சொன்னாலே நமக்குப் போதும். அதுதான் நமக்குப் பலம். அந்தான் நம்மைக் காப்பாற்றும். “உண்மை வெல்லும்” என்பது வேறெதற்குச் சரியோ இல்லையோ ஒரு உண்மை அறியும் குழுவுக்கு அது வேத வாக்கியம்.

உண்மை அறியும் குழுவில் செல்பவர்க்கு இது ஒரு சவாலான பணி. பாதிப்பை ஏற்படுத்தியவர்கள் மட்டுமல்ல. பாதிப்புக்கு ஆளானவர்களும் கூடச் சொல்வது எல்லாம் உண்மை என நாம் அப்படியே ஏற்க வேண்டியதில்லை. அவற்றில் மிகைப்படுத்தப்படுவதற்கான சாத்தியங்கள் நிறையவே உண்டு. பொதுவாகவே மிகைப்படுத்தும் பண்பு மக்களுக்கு உண்டு சற்றுப் பெரிய ஒரு பாம்பைப் பார்த்து விட்டு வந்தால், “தொடைப் பெரிசு ஒரு பாம்பைப் பார்த்தேன்” என்பார்கள். சில நேரங்களில் வேண்டுமென்றே உண்மைகளை மறைப்பதும் உண்டு. அதே போல அதிகாரிகள் அல்லது ஆதிக்க நிலையில் உள்ளோர் சொல்கிறார்கள் என்பதற்காக எல்லாவற்றையும் முற்றாக நாம் மறுத்துவிட வேண்டியதும் இல்லை. உண்மை வெல்லும் என்பதுபோல “எல்லாவற்றையும் சந்தேகி” என்பதும் நமக்கு ஒரு வழிகாட்டு நெறிதான். ஆனால் சந்தேகத்தின் ஊடாக அங்கே தெரியும் உண்மையின் கீற்றுகளை நாம் முற்றாகப் புறந்தள்ளவும் வேண்டியதில்லை.

நாம் மனித உரிமை மீறல்களைக் கண்டு உணர்ச்சி வயப்படக் கூடியவர்கள். அந்த உணர்ச்சிவயம்தான் நம்மை இந்தப் பணிக்கு இட்டுச் சென்றுள்ளது. இந்த உணர்ச்சி வயத்தை நாம் நம் அறிக்கையில் வெளிப்படுத்தாமலும் இருக்க முடியாது. வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டியதும் இல்லை. ஒரு மிகப் பெரிய மனிதத் துயரம் நம் கண்முன் விரிந்து கிடக்கும்போது நாம் எப்படி உணர்ச்சிவயப்படாமல் இருக்க இயலும்? நாம் எப்படி அதிலிருந்து விலகி நின்று எதையும் பேச இயலும்? நாம் அந்தத் துயரத்தோடும் துயரர்களோடும் நம்மை அடையாளப்படுத்திக் கொண்டுதான் எழுத முடியும். நாம் பாதிக்கப்பட்டவர்களோடு நம்மை அடையாளப்படுத்திக் கொள்வதா இல்லை, உண்மைகளைக் கண்டறிவதற்காகவும் சொல்வதற்காகவும் நம்மை அவர்களிடமிருந்து தூரப்படுத்திக் கொள்வதா என்பதல்ல பிரச்சினை. எப்படி இந்த இரண்டு நிலைகளையும் ஒரு புள்ளியில் குவிப்பது என்பதுதான் ஒரு மனித உரிமை எழுத்தாளனின் முன் உள்ள சவால். மிகவும் புறவயமாக விலகி நின்று எழுதும்போது அது வரட்டுத்தனமாக மட்டுமல்ல அது அடிப்படை மனித நேய நெறிகளுக்கு எதிரானதாகவும் அமையும்; அதே நேரத்தில் வெறும் உணர்ச்சிக்கு முக்கியத்துவம் அளித்து எழுதும்போது அது உண்மையற்றும் திரிக்கப்பட்டதாகவும் போய்விடக் கூடும்.

அதேபோல கோரிக்கைகளை வைக்கும்போது அவை உச்சபட்சமாக இருக்கும் அதே நேரத்தில் அவை காரிய சாத்தியமானதாகவும், நடைமுறையில் உள்ள எல்லைகளுக்கு உட்பட்டதாகவும் அந்த எல்லைகளைக் கடக்க முயல்வதாகவும் அமைதல் அவசியம்.

இந் நூலிலுள்ள அறிக்கைகள் அனைத்தும் இந்த வகையில் எழுதப்பட்டவை என நான் உரிமை கோரவில்லை. ஆனால் அதே நேரத்தில் இந்த லட்சியங்களுக்கு மிகவும் நெருக்கமாக முன்னேறிச் செல்வதுதான் எங்கள் நோக்கம். எந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினரது மனித உரிமை மீறல்களையும் பேசுவது என நாங்கள் எங்களை குறுக்கிக் கொள்ளவில்லை. எங்கள் அறிக்கைகளில் பலவும் தலித்கள் மற்றும் முஸ்லிம்களின் பாதிப்புகளைப் பேசுவதாக அமைவதென்பது இன்றைய சமூக எதார்த்தத்தின் பிரதிபலிப்புத்தான். அவர்களே அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். அதற்காக் நாங்கள் கான்சாபுரம் கிட்டப்பாக்களின் பிரச்சினைகளை விட்டுவிடுவதுமில்லை.

இப்போதெல்லாம் ஊடகங்களில் பெரிதும் பேசப்படும் பிரச்சினைகளுக்கு மட்டும் ஏராளமான மனித உரிமை அறிக்கைகள் வெளிவருவது, அப்படிப் ‘பிரபலமாகாத’ பிரச்சினைகள் கண்டு கொள்ளப்படாமல் இருப்பது என்கிற ஒரு நிலை ஏற்பட்டு வருவதையும் கவனிக்கலாம். நாங்கள் இந்த அம்சத்திலும் எச்சரிக்கையாக இருக்க முயல்கிறோம்.

மனித உரிமைப் பணி என்பது அவ்வளவு புகழுக்குரிய பணி அல்ல. நிறைய உழைப்பையும் செலவையும் கோரும் பணி. நிறைய எதிர்ப்புகளைச் சம்பாதிக்கக் கூடிய பணியும் கூட. இந்தப் பணியில் ஈடுபாட்டுடன் தங்களை ஆட்படுத்திக் கொள்ளும் தோழர்களுக்கு என் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் சொல்லிக் கொள்கிறேன். பலநேரங்களில் சில நல்ல அதிகாரிகள் எங்கள் முயற்சிகளுக்கு ஒத்துழைத்துள்ளார்கள். அதேபோல எங்கள் அறிக்கைகளை ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டுள்ளன. நீதிமன்றங்கள், மனித உரிமை ஆணையங்கள் முதலியனவும் எங்களின் அறிக்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளன. எல்லோருக்கும் நன்றிகள்.

அ.மார்க்ஸ்,

பிப் 09, 2016

தலைவர், மனித உரிமை அமைப்புகLiன் தேசியக் கூட்டமைப்பு (NCHRO)

சென்னை

 

வெள்ளம் கற்றுத் தந்த பாடங்கள்

சென்ற மாதம் தமிழகத்தைத் தாக்கி அழிவை ஏற்படுத்திய பெருவெள்ளம் இன்று வடிந்திருந்த போதும். இயல்பு வாழ்க்கை ஓரளவு திரும்பியிருந்த போதும், முழு பாதிப்புகளில் இருந்தும் மீண்டு வருவதற்கு இன்னும் ஓராண்டுக்கும் மேலாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. தவிரவும் நவீன தொழில் நகரமாக உருப்பெறும் சென்னையைப் பொருத்த மட்டில் இப்போது ஏற்பட்டுள்ள அழிவு முதலீட்டு வாய்ப்புகளையும் தொழில் வளர்ச்சிகளையும் பெரிய அளவில் பாதிக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அளித்துள்ள அறிக்கையில் இந்த மழை வெள்ள அபாயத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 289. கணக்கில் வராமல் ‘காணாமல்’ போனவர்களையும் சேர்த்தால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும். சென்னை வெள்ளத்தைப் பொருத்தமட்டில் நடுத்தர மக்களும் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருந்த போதிலும் மொத்தத்தில் எல்லா மாவட்டங்களையும் சேர்த்துக் கணக்கிட்டால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருப்போர் வழக்கம்போல அடித்தள மக்கள்தான்.

தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால் இந்த வெள்ள அழிவு குறித்த பார்வைகள் பலவற்றிலும் அவரவர் அரசியல் நோக்கங்கள் வெளிப்பட்டதை யாரும் எளிதில் கண்டு கொள்ள இயலும். இவற்றுக்கு அப்பால் நீர் மேலாண்மை குறித்தும், சுற்றுச் சூழல் பாதிப்புகள் குறித்தும் கரிசனம் கொண்டவர்கள் பலரும் ஆழம் மிக்க நடுநிலையான கருத்துக்களைச் சொல்லியுள்ளனர். இவை நம் கவனத்துக்குரியன. 

குறுகிய அரசியல் பார்வைகள் மிகவும் ஆபத்தானவை

சென்னை மற்றும் கடலூர் வெள்ள  அழிவு குறித்து முன்வைக்கப்படும் மூன்று பார்வைகளை இப்படித் தொகுத்துக் கொள்ளலாம்.

  1. 114 ஆண்டுகளுக்குப் பின் இந்தப் பெருமழை இ்ன்று பெய்துள்ளது. பாரிசில் நடைபெற்ற பருவ மாற்றங்கள் குறித்த உலகளாவிய மாநாட்டிற்குச் செல்லும் முன் மத்திய சுற்றுச் சூழல் அமைச்சர் ஜவடேகர் புவி வெப்பமாதலே இந்தப் பெரு வெள்ள அழிவுக்குக் காரணம் எனவும், இத்தகைய வெப்ப நிலை உயர்வுக்கு மேலை நாடுகளே காரணம் எனவும் குற்றம் சாட்டினார். (எனினும் பாரிஸ் மாநாட்டில் இந்திய அரசு எந்தப் பெரிய எதிர்ப்பும் இன்றி ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டது.)
  1. நீராதாரங்கள், நீர்ப்போக்கு வழிகள் முதலியன குறி்த்த அரசுகளின் அறிவின்மை இன்றைய அழிவில் முக்கிய பங்கு வகிக்கிறது.. நீர்மேலாண்மைத் துறையில் வல்லுனரான டாக்டர் ஜனகராஜன் குறிப்பிடுவது போல இது குறித்த அடிப்படைப் புரிதல்களுடன் அரசுகள் செயல்பட்டதே இல்லை. பெரிய அளவில் ஏரிகள் நீர்ப்போக்கு வழிகள் ஆகியவற்றில் ரியல் எஸ்டேட் வியாபாரிகள் தலையிட்டு லாபம் சம்பாதிப்பதில் இதுவரை ஆண்ட அரசுகள் அனைத்தும் பெருந் தவறுகள் செய்துள்ளன. சென்னை விமான நிலைய விரிவாக்கம், மதுரை உயர்நீதிமன்ற வளாகம்முதலான அரசு திட்டங்கள் தொடங்கி கல்வி வியாபாரிகளின் பல்கலைக்கழக உருவாக்கங்கள் வரை இந்தத் தவறுகள் நடந்துள்ளன. இந்தக் கொடுமை அரசுகளின் முழு ஒத்துழைப்புகளுடன் நடந்துள்ளது. நீர்நிலைகள் பராமரிப்பு, முறையாகத் தூர் வாருதல், கரைகளை உயர்த்துதல் முதலியவற்றை இதுவரை ஆண்ட அரசுகள் தொடர்ந்து புறக்கணித்து வந்துள்ளன.

3.இன்றைய வெள்ள ஆபத்து இந்தப் பின்னணியில் உருவானது என்பதை மனதில் கொண்டு இன்றைய இந்த ஆபத்தை எதிர்கொண்டதில் ஜெயா அரசு செய்துள்ள கடுந் தவறுகளை நாம் விமர்சிக்க வேண்டும். போதிய முன்னெச்சரிக்கைகள் இருந்தும் அரசு உரிய நடவடிக்கைகளை உரிய நேரத்தில் எடுக்கத் தவறியுள்ளது. வீராணம் ஏரி, நெய்வேலி அனல்மின் நிலையச் சுரங்க நீர், செம்பரம்பாக்கம் எரி முதலியவற்றை முன்னெச்சரிக்கையின்றித் திறந்து விட்ட கொடுமைபெரிய அளவில் அழிவுகளுக்குக் காரணமாகியுள்ளன.. அதிகாரங்கள் பெரிய அளவில் மையப்படுத்தப்பட்டிருந்தது இ்தில் முக்கிய பங்கு வகித்துள்ளது. நிவாரணப் பணி,மறு குடியமர்த்தும் பணி என அனைத்திலும் ஜெயா அரசு தோல்வியுற்றுள்ளது. இன்று நடந்துள்ள உயிர்ப்பலிகள் அனைத்திற்கும் இந்த அரசே பொறுப்பு.

இந்த மூன்று அம்சங்களையும் அவை அவைக்கு உரிய முக்கியத்துவங்களுடன் அணுகுதலும் பரிசீலிப்பதும் அவசியம்.

புவி வெப்பமடைவதைப் பொருத்த மட்டில் அதைக் கட்டுப்படுத்துவது என்பது நம் கையில் மட்டும் இல்லை.

அடுத்து இன்றைய ஆபத்தை எதிர்கொள்வதில் ஜெயா அரசின் தவறுகள் கடுமையாக விமர்சிக்கப்படுவது அவசியம். ஒரளவு ஊடகங்கள் இதைச் செய்துள்ளன.

ஆனால் இது மட்டுமே போதும் எனச்சொல்வது அப்பட்டமான அரசியல்மட்டுமல்ல உண்மையான காரணங்களையும் நிரந்தரமான தீர்வுகள் குறித்த பிரக்ஞையையும், கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களையும் திசை திருப்பும் முயற்சிகளாக ஆகிவிடும். இன்றைய தவறுகளை மட்டுமே முன்னிறுத்தி இப்படிக் காலம் காலமாகச் செய்து வரும் தவறுகளைப் பேச மறுப்பது இந்த மூலாதாரமான தவறுகள் தொடர்வதற்கே இட்டுச் செல்லும். மீண்டும் இத்தகைய ஆபத்துகளை மக்கள் எதிர்கொள்வதற்கே இது இட்டுச் செல்லும்.

எதிர்காலத்தில் நீர்ப்போகு வழிகளில் தடை ஏற்படும் எந்தத் திட்டங்களையும் அனுமதிக்காததோடு ஏற்கனவே இவ்வாறு நீர்வழியை அடைத்து இருவாக்கப்பட்டிருக்கும் கட்டுமானங்களை நீக்குவ்தற்கும் நாம் முன்னுரிமை அளித்தல் அவசியம்.

நாங்கள் கண்ட காட்சிகளும் பெற்ற அனுபவங்களும்

நான், புதுவை சுகுமாரன், கடலூர் பாபு, திண்டிவனம் முருகப்பன் ஆகியோர் அடங்கிய எங்கள் குழு தனித்தனியாகவும் குழுவாகவும் பலமுறை கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் சென்று வந்தது. சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாலகிருஷ்ணன், நிவாரணப் பணிகளுக்காகப் பொறுப்பு அளிக்கப்பட்டிருந்த அரசு அதிகாரி காகன்சிங் பேடி மற்றும் எண்ணற்ற பல பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசினோம். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் பலமுறை சென்றோம். எல்லாத் தரப்பு மக்களையும் நாங்கள் சந்தித்தபோதும் அதிக அளவில் அருந்ததியர்கள் இருளர்கள், இதர தலித்கள் வசித்த பகுதிகளுக்குச் சென்றோம்.

பண்ருட்டி காடாம்புலியூருக்கு அருகில் உள்ல பெரியகாட்டுப்பாளையத்தில் ஒரே வீட்டைச் சேர்ந்த ஏழு அருந்ததியர்கள் வெள்ளத்தில் மரித்திருந்தனர். அப்பால் விசூர் என்னுமிடத்தில் இரண்டு வன்னியர்கள் வெள்ளத்தில் இறந்திருந்தனர். பெரிய காட்டுப்பாளையத்திற்கு நாங்கள் சென்ற போது இந்த மாதிரி ஆபத்தான பகுதிகளில் எல்லாம் அரசே முன்னின்று தொகுப்பு வீடுகளைக் கட்டிக் கொடுக்க எப்படி மனந்துணிந்தது என எங்களுக்கு விளங்கவில்லை. நீர்வழிப் புறம்போக்கில் 23 ஆண்டுகளுக்கு முன் எம்.ஜி ஆர் காலத்தில் கட்டிக் கொடுக்கப்பட்ட தொகுப்பு வீடுகள் இவை.. சுமார் 110 வீடுகள் . இதில் 86 அருந்ததியர்கள் வீடு. மீதி ஆதி திராவிடர்கள் வீடு. கூலி வேலை, செருப்புத் தைத்தல், முந்திரிக்கொட்டை பொறுக்குதல், உடைத்தல், (3 கிலோ உடைத்தால் 30 ரூ), ஆடு மேய்த்தல் இவைதான் இம்மக்களின் தொழில்கள்.

இரண்டு ஓடைகள் இங்கு ஓடுகின்றன. மேலே ஒரு பாலமும் உண்டு. இந்த ஓடைக்கரையில் மட்டுமல்ல, இரண்டு ஓடைகளுக்கு இடையிலும் தொகுப்பு வீடுகள்.  ஓடைக்கரையில் மட்டுமின்றி  இரண்டு ஓடைகளுக்கிடையிலும் எப்படி இதைக் கட்டிக் கொடுக்க அதிகாரவர்க்கத்திற்கும் அரசுக்கும் மனம் துணிந்தது என விளங்கவில்லை.

பட்டா இல்லாத நிலம். இது ஓடைக்கரைப் புறம்போக்கு. நத்தம் புறம்போக்கு என்றாலும் கூட பட்டா வழங்க முடியும். ஆனாலும் அரசும் ரெவின்யூ அதிகார வர்க்கமும் இதைச் செய்திருக்கிறது…

இப்படியான குடியிருப்புகளில் ஒரு நிகழ்வை நீங்கள் அவதானிக்கலாம். சென்னை நகரத்திற்குள் உள்ள குடிசைப் பகுதிகளிலும் இதை நான் பார்த்துள்ளேன் முதலில் அங்கு 100 குடிசைகள் இருந்திருக்கலாம். பல்வேறு காரணங்களால் காலப்போக்கில் அந்தக் குடிசைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகும்.

அப்படி உருவான ஒரு குடும்பத்திலிருந்த எட்டு பேர்கள்தான்  வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். அமிர்தம் என்கிற 70 வயது மூதாட்டியும் அவர் மகன்களில் ஒருவரும் ஒரு மருமகனும்தான் இன்று மிஞ்சியுள்ளனர். இரண்டு ஓடைகளுக்கு இடையில் இருந்த இரண்டு கான்க்ரீட் தொகுப்பு வீடுகளின் உச்சியில் ஏறி நின்றுதான் மற்றவர்கள் அன்று தப்பியுள்ளனர்.

வீடு, வீடுவீடுதான் சார் எங்களுக்கு இப்ப வேணும்…”

பெரிய காட்டுப் பாளையம் மக்கள் ஒரு வகையில் புண்ணியம் செய்தவர்கள். அவர்களில் எட்டுப்பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது பரபரப்புச் செய்தி ஆகிவிட்டதால் இன்று அவர்களுக்கு மட்டும் ஒரு தற்காலிகத் தகரக் கொட்டகையை அமைத்துள்ளனர். வன்னியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நடுக்காட்டுப் பாளையத்தில், அவர்களின் கோவில் நிலத்தில் இந்தத் தற்காலிகக் குடியிருப்பு அமைந்துள்ளது.

48 அறைகள். ஒவ்வொரு அறையிலும் நான்கு குடும்பங்கள் வரை அடைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அறையிலும் ஒரு மின் விளக்கும் ஒரு ‘அம்மா’ டேபிள் ஃபேனும் உண்டு. ஒரு குடும்பத்தில் சராசரியாக நால்வர் என்றால் சுமார் 800 பேர் அங்கு முடக்கப்பட்டுள்ளனர்.

நமது திறந்த வெளி மலம் கழிப்புப் பண்பாட்டுக்கு நன்றி சொல்ல வேண்டும்.அங்கு நான்கே நான்கு கழிப்பறைகள், நான்கு குளியலறைகள்தான். ஆண்களுக்கு இரண்டு; பெண்களுக்கு இரண்டு..

‘எக்யூடாக்’, ‘கிராம விடியல்’, ‘சிசிஎஃப்டி’, ‘லோக் மான்னாஜர்’ என சுய உதவிக் குழுக்களுக்கான மைக்ரோ ஃபைனான்ஸ் அமைப்புகளில் இம்மக்கள் வாங்கிய கடன்களைக் கட்ட வேறு அவர்கள் நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள்… ஒரு கடனுக்கு மாதம் 500 ரூ கட்ட வேண்டுமாம்; இன்னொன்று மாதம் 1110 ரூபாயும், இன்னொன்றுக்கு 900 ரூபாயும் கட்ட வேண்டுமாம். இன்னுஞ் சிலர் செருப்புத் தைக்க வாங்கிய கடன் செலுத்த வேண்டுமாம்.  ஐசிஐசிஐ பல்லவன் வங்கி நெருக்குகிறதாம்.

அரசு மீண்டும் அவர்களுக்கு வீடுகட்ட ஒதுக்கும் இடம் இதேபோல ஒரு ஓடைக்கரையாம். தற்போது அவர்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளி முதலானவற்றிலிருந்து அதிகத் தொலைவான இடமாகவும் அது உள்ளது. சிறப்பு அதிகாரி காகன் சிங் பேடியிடம் நாங்கள் பேசியபோது வீடு கட்டிக் கொடுக்க அருகே உள்ள ஒரு மேடான இடத்தைத் தேர்ந்தெடுத்திருப்பதாகவும், கடன் வசூலை உடனடியாத தடுப்பதாகவும் அவர் உறுதி அளித்தார்.

வீடிழந்த மக்களுக்கு உடனடியாக வீடுகளைக் கட்டிக் கொடுப்பது அவசியம். “வீடு, வீடு… வீடுதான் சார் எங்களுக்கு இப்ப வேணும்..” என மக்கள் புலம்புவது வேதனையாக இருந்தது.

 

நிவாரணப் பணிகள்

வெள்ளத் தடுப்பு, நிவாரணம் ஆகியவற்றில் ஜெயா அரசு தோற்றுள்ளது என்பதில் ஐயமில்லை. நமது அரசு எந்திரத்திலேயே கோளாறு உள்ளது. இத்தகைய பேரிடர்களை எதிர்கொள்வதில் உரிய முன்னெச்சரிக்கை, விஞ்ஞானபூர்வமான அணுகல்முறை எதுவும் அரசிடம் இல்லை.

ஏராளமானோர் வியக்கத்தக்க வகையில் உதவிக் கரம் நீட்டியுள்ளனர். இவற்றை ஒழுங்குபடுத்தி ஒரு Nodal Agency மூலம் வினியோகித்தால் மட்டுமே தேவையானவர்களுக்கு தேவையான அளவுக்கு உதவிகள் போய்ச் சேரும் இல்லாவிட்டால் அருகாமையில் உள்ளவர்களுக்கு திரும்பத் திரும்ப உதவிகள் மலிவதும், பிற பகுதியினர்க்கு ஒன்றுமே போகாது இருப்பதும் என்கிற நிலை ஏற்படும். அரசு இதைச் செய்யத் தவறியபோது சமூக வலைத் தளங்கள் இந்தத் தேவையை ஓரளவு நிறைவேற்றின. சமூக வலைத் தளங்கள் மிக மிகச் சிறப்பாகச் செயல்பட்ட போதும் அவர்களிடமும் ஒருங்கிணைப்பு கிடையாது, அனுபவமும் கிடையாது என்பதையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.

இப்படி ஒரு மைய அமைப்பு இருந்து எந்தப் பகுதிகளுகு உடனடியாக உதவி தேவை என்பதை ஒழுங்குபடுத்தாததன் விளைவாக தொலைவில் இருந்த மக்களுக்கு உதவிப் பொருட்கள் சரியாகச் சென்றடையவில்லை. சாலைகளுக்கு அருகில் இருந்தவர்கள் வாகனங்களை நிறுத்தி பொருட்களை அவ்ர்களே பிரித்துக் கொண்டனர். இதனால் தலித்கள், இருளர்கள் முதலான அடித்தள மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நிவாரணங்கள் ஒழுங்காகச் செல்லவில்லை. பெரிய காட்டுப்பாளையத்தில் பாதிக்கப்பட்டு தற்காலிகக் குடியிருப்பில் வதியும் மக்களுக்கு வந்த உணவுப் பொருட்களை இடையில் உள்ள வன்னியர்கள் தடுத்து நிறுத்திப் பகிர்ந்து கொண்டதை நாங்கள் பார்த்தோம்.

இந்த விநியோகங்களில் அரசு தலையிட்டபின் நடந்தது ஆளும் கட்சிக்குச் சாதகமாக இருந்தது. தங்களிடம் வந்து சேர்ந்தவற்றையும் வந்துகொண்டிருப்பவற்றையும் கவுன்சிலர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள் மூலம் அரசு வினியோகித்தது. அரசு எந்திரத்தை நேரடியாகப் பயன்படுத்தி இந்த வினியோகத்தைச் செய்யாமல் கவுன்சிலர்கள் மற்றும் பஞ்சாயத்துத் தலைவர்கள் மூலம் இதைச் செய்தது என்பது  தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் மூலம் வினியோகிக்க வேண்டும் என்கிற ஜனநாயக உணர்வினால் அல்ல. கவுன்சிலர்கள், பஞ்சாயத்துத் தலைவர்கள் பெரும்பாலும் அதிமுகவினர் என்பதால் ஜெயா அரசு இதைச் செய்தது.

விளைவை நாம் பார்த்தோம். அடிமைகளாக வளர்க்கப்பட்டுள்ள அதிமுகவினர் கட்சி ஆதாய நோக்குடன் இதைச் செய்தனர். தங்கள் பகுதி அதிமுக கவுன்சிலர் ஒருவர் பொது வினியோகத்தைச் செய்தபோது தங்களுக்கு வாக்களிக்கச் சத்தியம் வாங்கிக்கொண்டு கொடுத்தார் என ஒருவர் கூறினார்.

ஆனால் இதற்காக முழுக்க முழுக்க அரசு எந்திரத்திடமே நிவாரண விநியோகப் பொறுப்பை அளித்துவிட இயலாது. மக்கள் பிரதிநிதிகளைப் புறக்கணிக்க முடியாது. அதே நேரத்தில் அது ஆளுங்கட்சியின் அத்துமீறலாகவும் அமைந்துவிடக் கூடாது.

எதிர்க்கட்சியும் இணைந்த ஒரு குழுவை அமைக்கலாம். தேர்தலில் இரண்டாம் நிலை பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தவரையும் குழு உறுப்பினர் ஆக்கலாம். பகுதியில் உள்ள எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் மக்கள் சேவகர்களையும் இணைக்கலாம். இம்மாதிரியான தருணங்களில் இத்தகைய குழுக்கள் உருவாக்குவது குறித்து அரசு நிரந்தரமான ஒரு கொள்கையை உருவாக்க வேண்டும்.

மாநில அளவில் வெள்ளப் பாதுகாப்புப் படை ஒன்றின் தேவை

சென்னையில் அடுக்குமாடிக் கட்டிடங்களில் வசித்தவர்களுக்கும் கூடப் பாதுகாப்பு இல்லாமற் போனது. இராணுவம் களத்தில் இறக்கப்பட்டபோதும் பெரிய அளவில் சேவை அமைப்புகள் படகுகளை வாடகைக்கு அமர்த்தித்தான் பலரை மீட்க முடிந்தது. தேசிய அளவில் பேரிடர் எதிர்கொள்ளல் படை (NMRF) மற்றும் பேரிடர் எதிர்கொள்ளல் அமைப்பு (NDMA) முதலியன உருவாக்கப்பட்டுள்ளபோதும் அவையும் சரியான நேரத்தில் உரிய பாதுகாப்பை அளிக்க இயலவில்லை. மாநில அளவில் இப்படியான பேரிடர் எதிர்கொள்ளல் அமைப்புகள் உடனடியாக உருவாக்கப்படுதல் அவசியம். இத்தகைய வெள்ள ஆபத்துகள் இத்தோடு முடிந்துவிடப் போவதில்லை என்பதை வல்லுனர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். எனவே நிரந்தரமான பாதுகாப்பு ஏற்பாடுகளை நாம் உள்ளூர் அளவிலும் அமைக்க வேண்டும்.

பொதுவாக ஒன்றை நாம் மனதிற்கொள்வது அவசியம். இதுபோன்ற பேரிடர்களை எதிர்கொள்வது என்பதை தன்னார்வக் குழுகள்,  சேவை அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து அரசு மேற்கொள்ள வேண்டும். இந்த வெள்ள ஆபத்தை எதிர்கொண்டதில் அரசைக் காட்டிலும் பல்வேறு தன்னார்வ அமைப்புகள், முஸ்லிம் அமைப்புகள் முதலியவற்றின் பங்கு முக்கியமாக இருந்ததை அனைவரும் சுட்டிக் காட்டியுள்ளனர். இவர்களை ஒருங்கிணைப்பது மட்டுமல்லாமல் அரசு இவர்களுடன் சேர்ந்து செயல்படும் வழிவகைகளை யோசிக்க வேண்டும்.

இத்தனை அழிவுகளுக்கும் அப்பால், மழை வெள்ள அழிவுகளின் காரணங்கள் குறித்து உருவாகியுள்ள பிரக்ஞையும், இந்த மழை வெள்ளத்தை எதிர் கொண்டதில் சாதி, மதம், இனம் என வேறுபாடுகள் இன்றி மக்கள் அசாத்தியமான ஒற்றுமை காட்டி மானுடத்தின மீதான் நம்பிக்கையை உறுதிப்படுத்தியதும் இந்த வெள்ள அழிவினூடே உருவான இரு வரவேற்கத்தக்க அம்சங்கள் எனலாம்.

கலை விமர்சகர் தேனுகா – சில நினைவுகள்

(சென்ற அக் 24 அன்று கலை விமர்சகர் எனத் தடம் பதித்த நண்பர் தேனுகா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளைக் குடந்தை நண்பர்கள் நினைவு கூர்ந்தனர். நிகழ்வில் நான் பேசியது.)
நண்பர் தேனுகா குறித்து இங்கு எல்லோரும் அவர் எவ்வாறு இங்குள்ள கோவில்கள், சிற்பங்கள் இவை குறித்தெல்லாம் ஆழமான அறிதலைக் கொண்டிருந்தார், எப்படி அவைகளையெல்லாம் நேசித்தார், சிற்பம், ஓவியம், இசை ஆகிய நுண்கலைகளை ரசிப்பதற்கும் அவற்றை உலகறியச் செய்வதற்கும் ஒரு வாழ்நாளை அர்ப்பணித்தார் என்பதை எல்லாம் விரிவாகச் சொன்னார்கள்.
ஒரு இசைக் குடும்பத்தில் பிறந்து ஓராயிரம் ஆண்டுகளாக சிற்பக் கலை வளர்த்து வரும் சுவாமிமலையில் வளர்ந்த நண்பர் தேனுகாவை ‘முதன் முதலில் தமிழில் உருவான நுண் கலை விமர்சகன்’ என தஞ்சைப் பிரகாஷும், தேனுகாவின் “டாக்ஸிடெர்மிஸ்டுகளின் தேவை’ எனும் முதல் கட்டுரையைப் பார்த்துவிட்டு கிட்டத்தட்ட இதே தொனியில் க.நா.சுவும் ஏற்கனவே பாராட்டியுள்ளனர். கும்பகோணத்தில் வாழ்ந்த எழுத்தாளர்கள் பலரும் இதே போல அவரைப் பற்றிச் சிறப்பித்துக் கூறியுள்ளனர்.
நுண்கலை தொடர்பான பல முக்கிய விருதுகளும் அவருக்கும் அவரது நூல்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.
எல்லாச் சிறப்புகளுக்கும் தகுதியானவர் தேனுகா என்பதில் யாருக்கும் ஐயமில்லை.
ஆனால் தேனுகாவின் பெருமைகள் அவர் நமது பாரம்பரிய நுண்கலைகளைப் போற்றியவர் என்பதோடு முடிந்துவிடுவதில்லை. மிகவும் சமகாலத்தவராகவும் அவர் விளங்கினார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்திய சோழர்காலச் சிற்பங்களைப் பாராட்டியதோடும், அவற்றின் நுண்மைகளை விளக்கியதோடும் அவர் நின்றுவிடவில்லை. வித்யா சங்கர் ஸ்தபதி போன்று நம்மோடு வாழ்ந்து வரும் இன்றைய சிற்பிகள், இன்றைய ஓவியர்கள் ஆகியவர்கள் குறித்தும் அவர் வியந்தார் அவர்களின் சிற்ப, ஓவிய மொழிகளை விளக்க முயன்றார்.
அத்தோடும் அவர் நிற்கவில்லை. மேற்குலகில் மிக நவீனமாகவும், பின் நவீனமாகவும் தோற்றமெடுத்த ஓவியக் கோட்பாடுகள், புதிய இசங்கள், வான்கோ போன்ற ஓவியர்கள், காம்யூ போன்ற எழுத்தாளர்கள் எல்லோரையும் வியந்தார் அறிமுகம் செய்தார்.
இவற்றினூடாக தேனுகாவின் முக்கிய பங்களிப்புகளாகக் கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடலாம்.
1. தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் வெறும் பழமையோடு ஓய்ந்துவிடவில்லை. அவை இன்றும் தொடர்கின்றன. எப்படித் தமிழ் மொழியின் தொடர்ச்சி பேணப்படுகிறதோ அவ்வாறே தமிழ்க் கலைகளிலும் தொடர்ச்சி பேணப்படுகிறது. அவை அழிந்துவிடவில்லை என்பதன் மீது அவர் நம் கவனத்தை ஈர்த்தார்.
2. கலைகளை, குறிப்பாக நுண்கலைகளை பழமைX புதுமை; மேற்குX கிழக்கு என்றெல்லாம் பெரிதாக வேறுபடுத்திப் பார்க்கத் தேவை இல்லை. அவற்றுக்கிடையே ஒரு தொடர்ச்சி (continuity) இருக்கிறது; தொடர்ச்சி மட்டுமல்ல ஒரு ஒத்திசைவும் (harmony) உள்ளது என்பதையும் அவர் தொட்டுக்காட்டினார். கலைகளுக்கிடையேயேயான இந்தத் தொடர்ச்சி மற்றும் ஒத்திசைவு என்பதற்கு அழுத்தம் கொடுத்தது அவரது இன்னொரு முக்கிய பங்களிப்பு.
3.கலைகளின் தொடர்ச்சி என்பதன் பொருளென்ன? காலங் காலமாக இருந்து வருகிற, அல்லது, ஒரு புவிப்பகுதியின் மரபுவழிப்பட்ட இலக்கண விதிகளை அப்படியே பின்பற்றி அவற்றிற்கு உண்மையாக இருப்பதா? இசையின் லயம், தாளம், அல்லது சிற்பக் கலையின் ஆகம இலக்கணங்கள் ஆகியவை மீறவே இயலாதவையா? அப்படி இல்லை என்கிற உண்மையையையும் தேனுகா தன் எழுத்துக்களின் ஊடாக நிறுவுகிறார்.
இவற்றை  எல்லாம் அவர் தன் முனைப்போடு இப்படியெல்லாம் கோட்பாடுகளை உருவாக்கிக் கொண்டு அதன் வழி நின்று முன் வைக்கவில்லை. தன்னியல்பாக அவரது எழுத்துக்களின் ஊடாக இவை வெளிப்படுகின்றன. வித்யாசங்கர் ஸ்தபதியின் சிற்ப மொழியைப் பற்றி எழுத வரும்போதாகட்டும் ராஜரத்தினம் பிள்ளையின் ‘தர்பாரி’ல் இன்னொரு இராகக் கலப்பு ஏற்படுவது குறித்தாகட்டும் தேனுகா இந்த இலக்கண மீறல்களைச் சுட்டிக் காட்டுவதோடு அவைதான் அவர்களின் சிறப்புகள் என்பதையும் சொல்லிவிடுகிறார்.
அவரது முதல் கட்டுரையான டாக்ஸிடெர்மிஸ்டுகளின் தேவை என்பதும் கூட இந்தப் பிரச்சினையை விவாதிப்பதுதான். எப்படி இயற்கையில் சில உயிர்வகைகள் அழிந்து போகின்றன, அத்தகைய உயிர்வகைகள் எப்படி இருந்தன எனப் பிந்திய தலைமுறைகளுக்குக் காட்டுவதற்கு அவற்றின் இறுதி உயிர் வடிவங்களைப் பதப் படுத்தி வைப்பவர்கள்தான் டாக்ஸிடெர்மிஸ்டுகள். தமிழ்க் கவிதை முதலான இலக்கிய வடிவங்களில் ஏற்படும் மாற்றங்களைக் கண்டு பதைப்பவர்களைத்தான் தேனுகா இப்படிக் கூறுகிறார்.
கலை இலக்கியங்களின் வளர்ச்சி என்பன இலக்கணங்களை மீறுவதுதானே. இல்லாவிட்டால் தமிழில் இத்தனை இலக்கணங்கள் ஏன்? தொல்காப்பியம் ஒன்று போதாதா? பின் ஏன் நன்னூல், அணி இலக்கனங்கள், வீர சோழியம், பாட்டியல் நூல்கள் எல்லாம்?
#######
தேனுகா அதிகம் கலை இலக்கியங்களுக்கு அப்பால் எழுதியதில்லை. அப்படி எழுதிய சிலவற்றுள் காந்தி பற்றிய நான்கு கட்டுரைகள் இங்கு சொல்லப்பட வேண்டியவை. அரசியல் குறித்தெல்லாம் அதிகம் பேசாதவராயினும் காந்தியின் இன்றைய தேவையை அவர் உணர்கிறார்.
காந்தியை அவர் புரிந்துகொள்வது மற்றும் அறிமுகப்படுத்துவதுமான அவர் பாணி மிகவும் தனித்துவமானது. காந்தியின் வாழ்வு குறித்து கிட்டதட்ட ஆயிரம் நூல்கள் உள்ளன என்பர், அவர் உயிருடன் இருந்த காலத்திலிருந்தே, ஏன் தென் ஆப்ரிகாவில் இருந்த காலத்திலிருந்தே அவருக்கு வாழ்க்கை வராலாறுகள் எழுதப்படத் தொடங்கின.
காந்தியைப் பற்றி எழுத முனையும் யாரும் இந்த நூல்களின் தாக்கத்திலிருந்து விடுபடுவது சிரமம். ரோமன் ரோலந்த் முதல் லூயி ஃபிஷர் தொடங்கி எத்தனை பேர்கள் அவரது வரலாற்றை எழுதியுள்ளனர். ஐன்ஸ்டினில் இருந்து பியர்ல் எஸ் பக் வரை எவ்வளவோ பேர் அவரைக் கொண்டாடியுள்ளனர்.
ஆனால் இந்தப் பாதிப்புகள் ஏதும் என்றி முற்றிலும் சுயமாக, ‘ஒரிஜினலாக’ அமைகிறது தேனுகாவின் கட்டுரை. காந்தி குறித்து ஆகா ஓகோ என்றெல்லாம் அவர் ஏதும் சொல்லவில்லை. காந்தியின் வாழ்விலிருந்து ஒரு நான்கைந்து சம்பவங்களைத் தேர்வு செய்து நம் முன் வைப்பதோடு தேனுகாவின் பணி முடிந்துவிடுகிறது. அதன் ஊடாக காந்தி குறித்த ஒரு அழகான தோர்றம் வாசிப்பவருக்கு உருவாகிவிடுகிறது.
தேர்வு செய்த சில காட்சிகளைப் பார்ப்போம். முதலில் சத்திய சோதனையில் காந்தி தன் மூத்தோர்கள் பற்றிச் சொல்வது. காந்தியின் தாத்தா உக்கம்சந்த் போர்பந்தர் சமஸ்தானத்திலிருந்து நாடுகடத்தப்படுகிறார். பின் அவர் மீதான அந்தத் தடை நீக்கப்படுகிறது. அதற்காக அவர் முறையாக நன்றி ஏதும் தெரிவிக்கவில்லை. இடது கையால் வணக்கம் வைக்கிறார். கேட்டதற்கு என் வலது கை ஏற்கனவே போர்பந்தருக்கு அர்ப்பணமாகிவிட்டது என்கிறார். தாய் புத்லிபாயோ ஒரு இறுக்கமான மரபு வழிப்பட்ட இந்துப் பெண். அனைத்து இந்து நம்பிக்கைகளையும் முறையாகப் பின்பற்றுபவர். அப்பா கரம்சந்த் அனைத்து மத நம்பிக்கைகளை உடையவர்களுடனும் சமமாகப் பழகுபவர். அவர்களை மதிப்பவர். அவர்களது கருத்துகளைப் பொறுமையோடு கேட்டு உவப்பவர்.
இரண்டாவது காட்சி காந்தி தென் ஆப்ரிக்கவிலிருந்து வந்த தொடக்கத்தில் (1916) நடந்தது. காசியில் ஒரு இந்துக்கல்லூரியை அன்னிபெசன்ட் தொடங்குகிறார். தொடக்க நிகழ்ச்சிக்குப் பலரும் அழைக்கப்படுகின்றனர். சமஸ்தான மகாராஜா ஒருவர் தலைமை தாங்குகிறார். காந்தி குஜராத்திகளில் குறிப்பாக அவரது கத்தியவார் பகுதி மக்களின் மரபுடையில் அங்கு தோன்றுகிறார். தலையில் டர்பன் சகிதம் காந்தியின் படம் ஒன்று நினைவில் உள்ளதுதானே. தான் ஆங்கிலத்தில் பேச நேர்வதற்கு வருத்தம் தெரிவித்துவிட்டு இந்திய மக்களின் அன்றைய பரிதாபத்திற்குரிய நிலையை விரிவாகச் சொல்கிறார் காந்தி. இது குறித்து நாம் பிரக்ஞையற்று இருப்பது, மன்னர்களும் பெருந்தனக்காரர்களும் கவலையற்று அந்நிய ஆட்சியை அண்டிப் பிழைப்பது முதலானவற்றைச் சாடுகிறார். தலைமை ஏற்ற மகாராஜா எழுந்து போய்விடுகிறார். அன்னிபெசன்ட் காந்தியின் பேச்சை நிறுத்தச் சொல்கிறார். பாதுகாப்புக் கருதி பிரிட்டிஷ் போலீஸ் அன்றிரவு அவரை காசியில் தங்க வேண்டாம் எனச் சொல்கிறது,.
பிடிவாதக்காரரான காந்தி அன்று இரவு அங்கு தங்கிச் செல்கிறார்.
மூன்றாவது காட்சி; காந்தியின் தலைமையிலான அஹிம்சைப் போராட்டங்களில் சௌரிசவ்ரா உட்பட சில இடங்களில் வன்முறைகள் நிகழ்கின்றன. வழக்கு விசாரணையின்போது இந்த வன்முறைகளுக்குக் காந்தி பொறுப்பல்ல என பிராசிகியூஷன் தரப்பு வழக்குரைஞரே ஏற்றுக் கொள்கிறார். ஆனால் காந்தி தான் அஹிம்சையில் உறுதியாக நம்பிக்கை உள்ளவன் ஆனபோதிலும் தனது போராட்டங்களில் நிகழ்ந்த வன்முறைகளுக்குத் தான் பொறுப்பேற்பதாக ஏற்றுக் கொள்கிறார். நீதிமன்றம் அவருக்கு ஆறாண்டுகள் தண்டனை வழங்குகிறது.
நான்காவது காட்சி: சுதந்திரம் அளிப்பது உறுதியாகிவிட்டது. தேதியையும் மவுன்ட்பேட்டனே நிச்சயிக்கிறார். அன்றைய காங்கிரஸ் கட்சிக்குள்தான் பின்னாளில் பா.ஜ.கவை உருவாக்கிய தலைவர்கள் எல்லாம் இருக்கின்றனர். மவுன்ட்பேடன் ஒருமுறை காந்தியிடம் எகதாளமாகக் கூறுகிறார் :”உங்கள் காங்கிரஸ் காரியக் கமிட்டியே இப்போது என் கைகளில்..” . நறுக்குத் தெறித்தாற்போலப் பேசுவதில் வல்ல காந்தி, “அதனாலென்ன, இந்திய மக்கள் என் பக்கம் அல்லவா இருக்கின்றனர்” என்கிறார்
காந்தியின் இறப்பின்போது பியர்ல் எஸ் பக் முதலானவர்கள் உரைத்த சில கருத்துக்களோடு தேனுகாவின் கட்டுரை முடிகிறது.
############
தேனுகா அவரது கடைசி ஆண்டுகளில் என்னிடம் சற்று நெருக்கமாக இருந்தார். நான் மாதத்தில் சுமார் பத்து நாட்கள் குடந்தையில் இருப்பேன். என் வீடும் அவர் வீடும் மயிலாடுதுறைச் சாலையில்தான் என்கிற வகையில் மாதத்திற்கு ஒரு முறையேனும் அவரைச் சாலையில் சந்திப்பதுண்டு, என் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டுச் சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்துவிட்டு அகல்வோம். கடைசியாக ஒரு முறை வீட்டுக்கு வந்து அவரது பெருந் தொகுப்பாக வந்திருந்த நூலைத் தந்துவிட்டுப் பேசிக் கொண்டிருந்து விட்டுச் சென்றார்.
அடுத்த முறை நான் வந்தபோது அவசரமாக ஏதோ வேலையாகச் சென்று கொண்டிருந்தேன். எதிரில் வந்த அவர் என்னை நிறுத்தியபோது, “அவசரமாகச் செல்கிறேன். போய் போன் செய்கிறேன்..:” எனச் சொல்லி அகன்றேன். ஆனால் மறந்து போனேன். அடுத்த சில வாரங்களில் நான் சென்னையில் இருந்தபோது அம்மாசத்திரம் இளங்கோவன் அந்தத் துயரச் செய்தியைக் கூறியபோது அன்று அவர் அழைத்த கணம் நான் நிற்காமல் அகன்ற நினைவு மேலெழுந்து கண்களை மறைத்தன.
என்ன செய்வது சில நேரங்களில் அப்படித்தான் ஆறாத வடுக்கள் அமைந்து விடுகின்றன.
(மேற்கோள்கள் அனைத்தும் நினைவிலிருந்து கூறியவை)

கிறிஸ்தவத்தில் தொடரும் தீண்டாமை: ஓரியூரில் ஒரு தலித் பலி

இந்தியாவில் தோன்றிய மதமாக இருந்தாலும் சரி, வெளியிலிருந்து வந்த மதமானாலும் சாதி மற்றும் தீண்டாமைக் கொடுமையிலிருந்து தப்பித்ததில்லை. எதிர்த்து நின்ற பவுத்தம் இந்தியாவிலிருந்தே விரட்டப்பட்டது. இறையியல் அடிப்படையில் சாதி, தீண்டாமை முதலான பிரிவினைகளை ஏற்காத கிறிஸ்தவ மதம் இந்தியாவைப் பொருத்தமட்டுல் இந்த அம்சத்தில் முழுமையாக இந்து மதத்தைப் போலவே செயல்படுகிறது. இதில் ஓரளவு விதிவிலக்கு என்றால் அது இஸ்லாம்தான்.

வரலாறு முழுவதும் இந்தியக் கிறிஸ்தவத்தில் தீண்டாமை இருந்து வந்துள்ளதற்கு ஏராளமான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே புதுச்சேரியில் உள்ள சம்பா கோவில்’ எனப்படும் செய்ன்ட் பால்ஸ் ஆலயத்தில் பூசையின்போது தலித் மக்கள் தனியாக உட்கார வைக்கப்பட்டிருந்துள்ளனர். காரைக்காலிலிருந்து மாற்றலாகி வந்த ஒரு வெள்ளைப் பாதிரியார் இதற்கு எதிராக தலித் மக்களைத் திரட்டிப் போராடியுள்ளார். அக்டோபர் 16, 1745 அன்று தலித் மக்கள் அங்கிருந்த தலைமைக் குருவைச் சந்தித்து முறையிட்டபின் தலித் மக்களை ஒதுக்கிய குறுக்குச் சுவர் இடிக்கப்பட்ட சம்பவத்தை அனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பில் பார்க்கிறோம். ஆதிக்க சாதியினர் சும்மா இருக்கவில்லை. அந்தக் காரைக்கால் சாமியாரிடம் வம்பு செய்துள்ளனர். தாங்கள் இனி பூசைக்கு வரமுடியாது எனவும் கூறியுள்ளனர். இதனால் மீண்டும் தலித்கள் தனியே உட்கார வைக்கப்பட்டுள்ளனர். காரைக்கால் சாமியார் பிரச்சினையை ஆளுநர் டூப்ளேயிடம் கொண்டு செல்ல அவர் இப்படி ஆதிக்க சாதிக் கிறிஸ்தவர்கள் கூடி நின்று எதிர்த்தால் அவர்களைக் கைது செய்ய உத்தரவிட்டுள்ளார்.

ஓரளவு ஜனநாயகம் கடை பிடிக்கப்படும் சீர்திருத்தக் கிறிஸ்தவத்தில் கத்தோலிக்கம் அளவிற்கு நிலைமை மோசமில்லையாயினும் அங்கும் தீண்டாமைப் பிரச்சினைகள் உண்டு. புகழ் பெற்ற தமிழறிஞர் ஜி.யு. போப் தஞ்சையில் பாதிரியாராகப் பணியாற்றியபோது (1851 -58) தாழ்த்தப்பட்ட மக்கள் பலர் கிறிஸ்தவர்கள் ஆயினர். தங்களைக் ‘காராள மரபினர்’ என அழைத்துக் கொண்ட வெள்ளாளக் கிறிஸ்தவர்களுக்கு ஜி.யு.போப் அவர்கள் இரு தரப்பையும் சமமாக நடத்துவது பிடிக்கவில்லை. ஆதிக்க சாதியினருக்குத் தலைமை தாங்கியவர் “எல்லாம் ஏசுவே, எனக்கு எல்லாம் ஏசுவே..” முதலான இனிய கிறிஸ்தவப் பாடல்களை இசையோடு அமைத்துத்தந்த வேதநாயக சாத்திரியார்தான். இரு தரப்புக்கும் திருவையாறு நீதிமன்றத்தில் வழக்கும் நடந்தது. போப்புக்கு எதிராக வேதநாயகர் “போப் அய்யர் உபத்திரா உபத்திரவம்” என்றொரு நூலே எழுதினார் என்றும் சொல்லப்படுகிறது. இறுதியில் ஆதிக்க சாதியினரின் எதிர்ப்பு தாங்காத போப் அவர்கள் இரவோடு இரவாக தன் குடும்பத்தோடு வண்டி ஒன்றில் ஊரை விட்டு அகன்றார். தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்கள் வல்லம் வரை அவரது வண்டியின் பின்னே சென்றார்களாம். இறுதிக் காலத்தில் அவர் நீலகிரியில் வாழ்ந்து மறைந்தார்.

இது போன்ற எத்தனையோ நிலழ்ச்சிகள் வரலாற்றில் உண்டு. இந்தக் கொடுமை நாளுக்கு நாள் அதிகமாகிறதே ஒழியக் குறைந்த பாடில்லை. சுமார் நான்காண்டுகளுக்கு முன் விழுப்புரம் மாவட்டம் இறையூரில் இப்படி ஒரு பிரச்சினை. தங்கள் தெருவுக்கும் திருவிழாவின்போது மாதா ஊர்வலம் வர வேண்டும் என தலித் கிறிஸ்தவர்கள் நீண்ட நாட்களாகப் போராடி வருகின்றனர். அந்த ஆண்டில் தலித் மக்களின் வீடுகளை வன்னிய கிறிஸ்தவர்கள் தாக்கி உடைத்தார்கள். போலீஸ் துப்பாகிச் சூட்டில் இரண்டு வன்னியக் கிறிஸ்தவர்கள் இறந்தார்கள். நாங்கள் குழு அமைத்து உண்மை அறியச் சென்ற அன்று இறந்த வன்னியர் வீட்டுக் குடும்பங்களைச் சந்தித்துத் துக்கம் விசாரிக்க சுமார் 10 பாதிரிமார்கள் புதுச்சேரியிலிருந்து வந்திருந்தனர். அவர்கள் இறந்து போன வன்னியர் வீடுகளுக்கு மட்டும் சென்றனர். வீடுகள் அழிக்கப்பட்டிருந்த தலித் கிறிஸ்தவர்களை அவர்கள் ஒப்புக்காகக் கூடச் சந்திக்காதைக் கவனித்தோம். அன்றைய நாளிதழில் இந்து முன்னணித் தலைவர் அர்ஜுன் சம்பத், “தீண்டாமைக் கொடுமை ஒழிய கிறிஸ்தவ தலித்களே இந்து மத்திற்கு வாருங்கள்” எனப் பேசி இருந்தது வெளி வந்திருந்தது (இது எப்டி இருக்கு!). நாங்கள் அந்தப் பாதிரியார்களைச் சந்தித்துப் பேசியபோது அவர்கள் முழுக்க முழுக்க சாதி உணர்வுடன் கோபமாகப் பதிலளித்தனர். அர்ஜுன் சம்பத்தின் அறிக்கையைக் காட்டி, “ஃபாதர், உங்கள் மதம் அழிந்து விடும் போல இருக்கிறதே கவலை இல்லையா?” எனக் கேட்டபோது அவர்களில் ஒருவர் சொன்னார்: “அது அழிந்தால் அழிஞ்சிட்டுப் போகுது…”. ஆம் அவர்களுக்கு மதமோ இறை நம்பிக்கையோ பெரிதல்ல. சாதிதான் முக்கியம்.

இந்திய தலித் கிறிஸ்தவர்கள் இரண்டு வகைகளில் பாதிக்கப்பட்டவர்கள். இந்து தலித்களுக்கு உள்ள அத்தனை தீண்டாமைகளையும் அவர்கள் அனுபவித்தாக வேண்டும். அதே நேரத்தில் இந்து தலித்களுக்கு உள்ள பட்டியல் சாதி உரிமைகளும் அவர்களுக்குக் கிடையாது. திருச்சபைக்கோ இது குறித்து எந்தக் கவலையும் இல்லை. இரட்டைக் கோவில்கள், இரட்டைக் கல்லறைகள் என தலித்கள் இழிவு செய்யப்படுவதை அது எந்நாளும் கண்டுகொண்டதில்லை.

தீண்டாமையின் உறைவிடமாகச் சிவகங்கை மறை மாவட்டம்:

சென்ற மாதம் கிறிஸ்தவத்தின் இந்தச் சாதிக் கொடுமை சிவகங்கை மறைமாவட்டத்தில் ஒரு தலித் உயிரைப் பலிவாங்கிய கதையை இப்போது பார்ப்போம். இராமநாதபுரம் மாவட்டத்துலுள்ள ஓரியூர் எனும் கிராமம் திருவாடனையிலிருந்து 31 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குதான் கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களால் மிகுந்த பக்தியுடன் வணங்கப்படும் அருளானந்தர் திருத்தலம் உள்ளது. கத்தோலிக்க மதத்தால் புனிதராக ஏற்கப்பட்ட அருளானந்தர் (St.John de Brito 1647- 1693) அவரது மதமாற்றப் பணிக்காக மறவர் நாட்டு மன்னன் கிழவன் சேதுபதியால் வெட்டிக் கொல்லப்பட்ட இடம் இது. போர்த்துகீசியரான இவர் பிரேசில் நாட்டு ஆளுநரின் மகன். இளவரசுப் பதவியைத் துறந்து இங்கு வந்து தியாகியான புனிதர் இவர். வேளாங்கன்னி, பூண்டி முதலான கத்தோலிக்கத் தலங்களுக்கு இணையாக கிறிஸ்தவர்கள் புனித யாத்திரை வந்து போகும் ஆலயங்களில் ஒன்று இது. தான் இரத்தம் சிந்திய இந்த ஓரியூரில் இந்தியக் கிறிஸ்தவத்துடன் இரண்டறக் கலந்து போன சாதீயமும் தீண்டாமையும் தலித் கிறிஸ்தவர்களை ஆண்டாண்டு காலமும் அடிமைப் படுத்தி வைத்திருக்கும் எனப் புனிதர் டி பிரிட்டோ கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.

ஓரியூர் பங்கைச் சேர்ந்த 11 கிராமங்களிலும் தலித் கிறிஸ்தவர்களே நிறைந்துள்ளனர். எடுத்துக்காட்டாக திருத்தலம் அமைந்துள்ள ஓரியூர் கிராமத்தில் உள்ள சுமார் 180 குடும்பங்களில் சுமார் 150 குடும்பங்கள் தலித் கிறிஸ்தவர்கள். எனினும் ஓரியூரை ஓரங்கமாகக் கொண்ட சிவகங்கை மறைமாவட்டத்தில் எண்ணிக்கையில் அதிகமானோர் உடையார் கிறிஸ்தவர்கள். அடுத்த நிலையில் இருப்போர் தலித் கிறிஸ்தவர்களில் ஒருவரான தேவேந்திர குல வேளாளப் பிரிவினர். பிற தலித் கிறிஸ்தவர்களையும் சேர்த்தால் ஆக மொத்தத்தில் அதிகமாக உள்ளவர்கள் தலித் கிறிஸ்தவர்கள்தான். பிற நாடார், வெள்ளாளர். கோனார் முதலான அனைத்துசாதிகளைச் சேர்ந்தோர்களும் அங்கிருந்தபோதும் அவர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகக் குறைவு.

ஒன்றாக இருந்த மதுரை மறைமாவட்டத்திலவெள்ளாளக் கிறிஸ்தவர்களின் சாதி ஆதிக்கம் இருந்தது என எழுந்த எதிர்ப்பின் விளைவாகப் புதிதாக உருவாக்கப்பட்ட சிவகங்கை மறைமாவட்டம் உடையார் கிறிஸ்தவர்களின் ஆதிக்க பூமியாகியது. திருச்சபையிலும் அவர்களின் ஆதிக்கமே மிகுந்திருந்தது. வெளிப்படையாகத் தீண்டாமையும் பல்வேறு வடிவங்களில் கடைபிடிக்கப்பட்டது. இங்குள்ள சுமார் 125 மறை மாவட்டப் பள்ளிகளில் சுமார் 960 பேர்கள் பணி செய்கின்றனர். இதில் 80 சதம் பேர் உடையார் கிறிஸ்தவர்கள். கிட்டத்தட்ட சம அளவில் உள்ள தலித் கிறிஸ்தவர்களின் பங்கு வெறும் 10 முதல் 15 சதம் கூட இல்லை.
ஆர்.எஸ்.மங்கலம் எட்டியத்திடல், ஆண்டாவூரணி, வளியன்வயல், சுக்குராபுரம், முதலான ஊர்களில் உயர்சாதியினருக்கும் தலித்களுக்கும் தனித்தனிக் கோவில்கள் உள்ளன. உயர் சாதியினர் வசிக்கும் பகுதிகளில்தான் மறைமாவட்டப் பள்ளிகள், அழகான விசாலமான ஆலயம், மருத்துவ மனை, கன்னியர் மடம் முதலிய வசதிகள் செய்யப்படுவதும் (எ.கா சவேரியார் பட்டினம்), தலித் பகுதிகளில் இந்த வசதிகள் எதுவும் இல்லாததோடு ஆலயமும் கூட சிறுத்துக் குறுகலாக இருப்பதும் கண்கூடு. காளையார் கோவிலுக்கு அருகில் உள்ள சூசையப்பர் பட்டினத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு சமுதாயக் கூடத்திற்கு சாதிப் பெயர் இடப்பட்டுள்ளது.
சிவகங்கை மறைமாவட்டத்தில் உள்ள மொத்த குருக்களின் எண்ணிக்கை 157. இதில் 89 பேர் உடையார்கள், 32 வெள்ளாளர்கள், 12 நாடார்கள், 4 கள்ளர், 9 பறையர், 2 கடையர். இதில் இப்பகுதியில்இரண்டாவது பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த தேவேந்திர குல வேளாளர்கள் ஒருவர் கூட இல்லை.

இப்படி நிறையச் சொல்லலாம். இப்பகுதியில் உள்ள தலித் மாணவர்கள் குருத்துவக் கல்லூரிகளில் சென்று படிக்கும்போது, அவர்களுக்கு ஏதாவது காரணம் சொல்லி குரு பட்டம் மறுக்கப்படுகிற குற்றச்சாட்டுகளும் இங்குண்டு. மைக்கேல்ராஜ் என்பவர் முறையாகப் படிப்பை முடித்த பின்னும் கூட மற்றொருவர் செய்த ஒரு குற்றத்தை இவர் மீது சுமத்தி, இவருக்கு இன்று வரை குருபட்டம் அளிக்கவில்லை. இத்தனைக்கும் ரெக்ஸ்டன் என்பவர் தானே அதைச் செய்ததாக ஒப்புக்கொண்ட பின்னும் இது நடந்துள்ளது. 18 தலித்களுக்கு இவ்வாறு குரு பட்டம் மறுக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிரது.
இதுதவிர இந்தத் தவறுகளைச் சுட்டிக்காட்டுபவர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்திப் புகார் அளிப்பது,, மறைமாவட்டக் கட்டுமானப் பணி ஒப்பந்தங்களை உயர் சாதியினருக்கே கொடுப்பது, ஆலயத் திருவிழாக்களில் கொடி சுமந்து செல்வது போன்ற மரியாதைக்குரிய பணிகளை அடித்தளப் பிரிவினருக்கு அளிப்பதில் பிரச்சினை செய்வது, அடித்தள மக்கள் வசிக்கும் ஓரியூர் போன்ற திருத்தலங்களின் முக்கிய மத நிகழ்வுகளான மறை மாவட்ட திருயாத்திரை முதலானவற்றை அப்பகுதியிலிருந்து வேறு பகுதிகளுக்கு அப்பகுதி மக்களின் எதிர்ப்பையும் மீறி மாற்றுவது முதலான பல வடிவங்களில் இந்தத் தீண்டாமைகளை திருச்சபையும் அதில் தலைமை ஏற்றுள்ள உயர்சாதிப் பாதிரிமார்களும் செய்து வருகின்றனர்.

சென்ற ஆண்டில் அப்படித்தான் தியாகி இம்மானுவல் பேரவைத் தலைவர் சந்திரபோஸ் அவர்கள் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தை என்னைச் சந்திக்க அனுப்பியிருந்தார். இப்படியான கொடுமைகளை எதிர்த்துப் சிவகங்கை மறை மாவட்டம் மேல அரும்பூர் கிராமத்தலைவர் பெர்னர் தூஸ்பால் என்பவர் பங்கு சாமியார் அருட் பணி. ஆரோக்கியசாமியிடம் முறையிடச் சென்றபோது ஒரு வாக்குவாதம் நடந்துள்ளது. பாதிரியார் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறை தூஸ்பாலைக் கைது செய்ததோடு அவர் மீது குண்டர் சட்டத்தையும் பிரயோகித்தது (ஆணை எண் 7 / குண்டர் / 2104). இந்தக் கொடுமைகளை விளக்கி நான் அவ்ர்களுக்காக ஒரு மனு தயாரித்துக் கொடுத்தேன். குண்டர் சட்ட மேல் முறையீட்டு ஆயம் பின்னர் அவரை விடுதலை செய்தது.

ஓரியூர் சார்லஸ் மரணம்:

தொடர்ந்து பல்வேறு வகைகளிலும் புறக்கணிக்கப்பட்டு வந்த ஓரியூர் தலித் கிறிஸ்தவர்கள் தங்களது நீண்ட நாள் கோரிக்கைகளை வலியுறுத்தி 2012 ஜூலையில் சிவகங்கை மறைமாவட்ட வெள்ளி விழாவின்போது முற்றுகைப் போராட்டம் ஒன்றை நடத்தினர், விழாநிகழ்ச்சிக்கு வந்திருந்த சிவகங்கை மறை மாவட்ட ஆயர் சூசைமாணிக்கம் உட்பட 7 ஆயர்களும் இதைக் கண்டுகொள்ளாமல் திருப்பலி நிகழ்ச்சியைத் தொடங்கினர். அதை எதிர்த்து தலித் கிறிஸ்தவர்கள் முழக்கப் போராட்டத்தைத் தொடர்ந்தனர். தலித் கிறிஸ்தவரான ஓரியூர் திட்டையைச் சேர்ந்த அருள்வேதமாணிக்கம் தாக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். ஆயர் சூசைமாணிக்கம் உட்பட ஆறு பேர்கள் மீது வேதமாணிக்கம் புகார் கொடுத்தும் நடவடிக்கை ஏதுமில்லை.

பின்னர் பங்குப் பேரவை ஒன்றை உருவாக்கி அதன் ஒப்புதலுடனேயே ஆலயம் சார்ந்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. எனினும் வழக்கமாமக்டோபர் மாதத்தில் ஓரியூரில் தொடங்கும் மறை மாவட்ட திருயாத்திரை 2013ம் ஆண்டு காரை ரஸ்தாவிலிருந்து தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. பங்குப் பேரவையைக் கலந்தாலோசிக்காமல் ஆயர் சூசைமணிக்கம் தன்னிச்சையாக எடுத்த இந்த முடிவைப் பங்குப் பேரவை எதிர்த்தது. இப்படிப் பிரச்சினைகள் தொடர்ந்தன. 2014 ஆகஸ்ட் 27 அன்று தொண்டி காவல் ஆய்வாளர் முன்னிலையில் பங்குப் பேரவை உறுப்பினர்களும் ஓரியூர் ஏசுசபை நிர்வாகமும் ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கினர். ஓரியூர் திருத்தல நடவடிக்கைகள், திருவிழாக்கள் முதலியவற்றை இனி பங்குப் பேரவையுடன் ஆலய நிர்வாகம் கலந்து நிறைவேற்றப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது.

இந்த ஆண்டு ஓரியூர் திருவிழா நடத்துவது பர்றி ஜூன் 14 ஆகஸ்ட் 9 தேதிகளில் பங்குத் தந்தையும் பேரவை உறுப்பினர்களும் பேசி ஒப்பந்தம் செய்து கொண்டனர். இதன்படி ஆலயத் திருவிழாக் கொடியேற்ற நிகழ்வின் போது பங்குப் பேரவைச் செயலாளர் ஆரோக்கிய சாமியும், மூத்த தலைவர் சோழகன்பேட்டை அருளானந்தமும் கொடியைத் தூக்கி வநது அளிப்பது என ஒருமனதாக முடிவுசெய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியது. .
எனினும் இவ்வாறு பேரவைக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை முறியடிப்பதென மத நிர்வாகம் முடிவெடுத்துச் தலித் கிறிஸ்தவர்களின் ஒற்றுமையைச் சிதைக்க முனைந்தது.. செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு மாறாக கொடியேற்றத்திற்கு முந்திய நாளன்று ஒரு அறிவிப்பை ஆலய நிர்வாகம் வெளியிட்டது.ஆரோக்கியசாமி மற்றும் அருளானந்தம் இருவர் தவிர மூன்றாவதாக ஓரியூர் கிராமத் தலைவர் அருள்பத்திநாதன் என்பவரும் கொடியைச் சுமந்து வருவார் என்று அதில் சொல்லப்படிருந்தது. அருள்பத்திநாதனும் கூட தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்தான் என்றபோதிலும் அவர் பங்குப் பேரவையுடன் இணைந்து செயல்பட்டவர் இல்லை. மாறாக அவர் மறைமாவட்ட நிர்வாகத்திற்கு நெருக்கமானவர். அவரை இப்படி பங்குப் பேரவைக்கு எதிராக நிறுத்தித் தலித் கிறிஸ்தவர்கள் மத்தியில் பிளவு ஏற்படுத்தப்பட்டது.. கொடியேற்றத்தில் அருள்பத்திநாதன் கொடி தூக்கி வந்தால் நாங்கள் கொடி தூக்க மாட்டோம் என சார்லஸ் தலைமையில் இருந்த பங்குப் பேரவை மறுத்தது. ஆக 29, கொடி ஏற்றும் நாளன்று கொடி ஏற்றும் நேரத்திலும் சார்லஸ் தலைமையில் பங்குப் பேரவையினர் ஒப்பந்தப்படிச் செயல்படுமாறு வற்புறுத்தினர். பாதிரிமார்கள் ஒப்புக் கொள்ளவில்லை. இடையில் காவல்துறை தலையிட்டு யாரும் கொடிதூக்கி வரவேண்டாம் பாதிரிமார்களே கொடியேற்றட்டும் என அறிவுறுத்த அவ்வாறே நடைபெற்றது.

ஒப்பந்தம் மீறப்பட்டது கண்டு மனம் வெதும்பிய சார்லசும் பங்குப் பேரவையினரும் தாங்கள் திருப்பலியில் கலந்து கொள்ளாமல், ஜெப வழிபாடு செய்து தொடர்ந்து மண்டகப்படிகளையும் சப்பர ஊர்வலத்தையும் நடத்துவதாகக் கூறியபோது ஆலய நிர்வாகம் அவ்வாறு செய்தால் சாமித் திரு உரு மற்றும் சப்பரங்களைத் தர இயலாது என அறிவித்தது. காவல்துறையும் ஆலய நிர்வாகத்திற்கு முழு ஆதரவளித்தது. சார்லசும் பங்குப் பேரவையினரும் திகைத்து நின்றனர். அப்படியெல்லாம் திருவிழாவை நடத்தத் தாங்கள் அனுமதிக்க முடியாது என சார்லஸ் கூறியபோது போலீசை வைத்து நடத்திக் கொள்வோம் என ஓரியூர் ஆலய சுப்பீரியர் யாகு கூறியுள்ளார்.

அவ்வாறே ஆக 30 அன்று மண்டலக்கோட்டை முதல் மண்டகப் படியை காவல்துறை உதவியுடன் ஆலய நிர்வாகம் டிராக்டர் ஒன்றில் சப்பரத்தை ஏற்றி மக்களின் முழுமையான பங்கேற்பு இல்லாமலே நடத்தி முடித்தது.
ஆக 31 அன்று சார்லசின் சொந்த ஊரான புல்லூர் மண்டகப்படியையும். ஆலய நிர்வாகம் புல்லூர் மக்களின் ஒத்துழிப்பின்றி காவல்துறைத் துணையுடன் “வெற்றிகரமாக” தம் டிராக்டர் சப்பர ஊர்வலத்துடன் நிகழ்த்த இருந்த தருணத்தில்தான் இரவு எட்டுமணிவாக்கில் ஆலயத்தின் பின்புறம் சுமார் 100 மீ தொலைவில் முட்புதர்களுக்கு மத்தியில் சார்லஸ் தீயில் எரிந்து மரணமடைந்தார்’

சந்தேகத்திற்குரிய சார்லசின் மரணம்:
ஒரு உண்மை அறியும் குழு அஇத்துச் சென்ற மாதத்தில் நாங்கள் இது குறித்து ஆய்வு செய்தோம். சார்லசின் மரணம் குறித்து இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. காவல்துறை அதிகாரிகளிடம் நாங்கள் பேசியபோது சார்லஸ் செய்து கொண்டது தற்கொலைதான் எனவும் இதற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ மறைமாவட்ட நிர்வாகமோ பாதிரியார்கள் யாருமோ காரணமில்லை எனவும் கூறினர். தற்கொலைக்குத் தூண்டுதல் எனவும் யாரையும் குற்றம் சொல்ல இயலாது என்றனர்.

ஆனால் சார்லசின் குடும்பத்தாரும், பேரவை உறுப்பினர்களும், பிற இயக்கத்தவர்களும், நண்பர்களும் இதை மறுக்கின்றனர். சார்லஸ் தற்கொலை மனநிலையுடன் இருக்கவில்லை, அன்று முழுவதும் மிகவும் இயல்பாக நடந்து கொண்டிருந்தார் எனக் கூறுகின்றனர்.. அன்று மாலை அவரைச் சந்தித்த பிற அவரது நண்பர்களும் அவர் வழக்கம்போல உற்சாகமாக இருந்ததாகவே கூறினர். இயல்பாகப் பேசிச் சென்ற சற்று நேரத்தில் சார்லஸ் தீப்பற்றி எரிந்து கொண்டுள்ள நிலையில் ஓடி வந்தது புதரில் வீழ்ந்ததாகவும் காவல்துறையினர் ஓடி வந்து அந்த இடத்தில் யாரையும் அனுமதிக்காமல் விரட்டியதாகவும் அனைவரும் கூறினர்.
அடுத்த நாள் சாலை மறியல் நடந்துள்ளது. வயதான பாதிரியார் காப்ரியல் தாமஸ் அவர்களின் தலையில் காயமும் பட்டுள்ளது. பின் ஆக 7 அன்றுதான் சார்லசின் உடலைப் பெற்று உறவினர்கள் அடக்கம் செய்துள்ளனர்.
உறவினர்களிடமும் நண்பர்களிடமும் அவர் இறுதி வரை உற்சாகமாகவே பேசிக்கொண்டிருந்த சார்லஸ் இப்படித் திடீரென தற்கொலை முடிவுக்கு வந்ததும் எந்தக் குறிப்பும் எழுதி வைக்காமல் இறந்ததும் இது தற்கொலைதானா என்கிற நியாயமான அய்யத்தை ஏற்படுத்துகிறது. ஒரு எதிர்ப்பாகத் தீக்குளிக்க ஒருவர் முடிவு செய்தால் யாருக்கும் தெரியாமல் கொல்லைப்புறமாக வந்து எந்தத் தற்கொலைக் குறிப்பும் எழுதி வைக்காமல் இப்படிச் செய்து கொள்வாரா என்கிற கேள்வியும் எழுகிறது.

முடிவாக…

சிவகங்கை மறைமாவட்டத்தில் தலித் கிறிஸ்தவர்களே அதிகம் இருந்த போதும் ஆதிக்க சாதியைச் சேர்ந்தவரும் சாதி உணர்வுடன் செயல்பட்டவருமான பணி.சூசைமாணிக்கம் போன்றோரை ஆயர்களாக நியமித்து வந்த திருச்சபை கண்டனத்துக்குரியது.

சென்ற ஆண்டில் ஓரியூருக்கு அருகில் உள்ள எஸ்.பி.பட்டணம் காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட ஒரு முஸ்லிம் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் அந்தக் காவல் நிலையத்தில் ஒரு முஸ்லிம் காவலர்கள் கூடப் பணியமர்த்தப்படாததோடு, முஸ்லிம் எதிர்ப்பு இயக்கங்களுக்கு ஆதரவான ஒருவர் உதவி ஆய்வாளரும் நியமிக்கப்பட்டிருந்த நிலையில் அது நடந்தது. இது சுட்டிக்காட்டப்பட்ட பின் அவசர அவசரமாக அங்கு ஒரு முஸ்லிம் அதிகாரியை காவல்துறை நியமித்தது. அதேபோலத்தான் இன்று சிவகங்கை மறைமாவட்டமும் செயல்பட்டுள்ளது. எல்லாம் முடிந்த பின் இன்று மறைமாவட்டம் ஓரியூர் பங்குத் தந்தையாக அங்குள்ள பெரும்பான்மை தலித் சமூகத்தைச் சேர்ந்த அருட் திரு எஸ். மரியநாதன் அவர்களை நியமித்துள்ளது. இது ஒரு வகையான damage control முயற்சியாக இருந்தபோதும் தந்தை மரியநாதன் அவர்கள் மிகவும் பொறுப்பானவர். தன்னால் இயன்றவரை நாங்கள் சுட்டிக்காட்டிய குறைபாடுகளைக் களைய முயல்வதாக அவர் கூறினார். மறைமாவட்டம் தலித் கிறிஸ்தவர்களைத் தொடர்ந்து புறக்கணித்து வந்திருந்தால் அது மிகவும் தவறு எனவும் தான் அவற்றைச் சரிசெய்ய முயல்வதாகவும் கூறினார்.

இன்றைய பிரச்சினைகள் அனைத்திற்கும் காரணம் கிறிஸ்தவத்தில் ஊறிப்போன சாதிமுறையும் தீண்டாமைக் கொடுமையுந்தான். இது வேறோடு களையப்பட வேண்டும் என்பது ஒரு புறம் இருக்க, உடனடியாக மறைமாவட்டத்தில் உள்ள குறைபாடுகளை அறிய திருச்சபையினர் அருட் திரு எக்ஸ்.டி.செல்வராசு போன்ற ஒரு மூத்த நடுநிலையாளர் ஒருவரை நியமித்து இந்தக் குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றை நீக்க வேண்டும். சாதி உணர்வுடன் செயல்பட்ட பாதிரிமார்கள் தண்டிக்கப்பட வேண்டும். முறையாக எல்லாத் திருத்தலங்களிலும் பங்குப் பேரவைகளை உருவாக்கி ஆலய நிர்வாகமும் பங்குப் பேரவையும் இணைந்தே ஜனநாயக முறையில் முடிவு செய்து செயல்பட வேண்டும், காவல்துறையினர் மறைமாவட்ட அதிகாரத்திற்கு ஆதரவாகவே எப்போடும் செயல்படுகின்றனர். இது போன்ற சந்தர்ப்பங்களில் காவல்துறை தலையிட நேர்ந்தால் அதை அவர்களே முடிவு செய்யாமல் ஒரு விரிந்த சமாதானக் குழுவை அமைத்து அதன் பரிந்துரையின்படி செயல்பட வேண்டும். சார்லசின் மரணத்தைப் பொறுத்தமட்டில் அதை ஒரு தற்கொலை என்கிற கோணத்தில் மட்டுமே அணுகாமல் குடும்பத்தார் முன் வைக்கும் நியாயமான சந்தேகங்களைக் கண்க்கில் கொண்டு இது ஒருகொலையாகவும் இருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

சார்லசின் மரணம் தற்கொலையாகவே இருந்தாலும் கூட பங்குப் பேரவையின் முடிவைத் தன்னிச்சையாக மாற்றியது, அடித்தளச் சமூகத்தைப் பிளவு படுத்தியது. ஊருக்கு முக்கியமானவர்களே இல்லாமல் டிராக்டர் வைத்து சப்பர ஊர்வலம் நடத்துவது ஆகியவற்றின் மூலம் சார்லசுக்குத் தீராத மன உளைச்சல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சார்லஸ் செய்து கொண்டது தற்கொலை ஆயின் அவர் இந்த வகையில் தற்கொலைக்குத் தூண்டப்பட்டார் என்றே ஆகிறது. எனவே வழக்கை சந்தேகத்திற்குரிய மரணம் என்பதிலிருந்து மாற்றி தற்கொலைக்குத் தூண்டப்பட்ட வழக்காக (இ.த.ச 306) விசாரிக்கப்பட வேண்டும். தவிரவும்சார்லஸின் மரணம் அது எப்படி ஆயினும் அதற்கு திருச்சபையே பொறுப்பேற்க வேண்டும். அவரது குடும்பத்திற்கு திருச்சபை 10 இலட்ச ரூபாய் இழப்பீட்டை திருச்சபை அளிக்க வேண்டும்.

(‘மக்கள் களம்’ இதழில் வெளிவந்த கட்டுரை)

‘பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன்’ -முன்னுரை – மு.சிவகுருநாதன்

(‘உயிர்மை’ வெளியீடாக வெளிவந்துள்ள எனது ‘பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன்’ (520 பக்) நூலுக்கு நண்பர் சிவகுருநாதன் எழுதியுள்ள முன்னுரை)
“பேசாப்பொருளைப் பேச நான் துணிந்தேன்” என்ற மகாகவி பாரதியின் வரிகளை முகப்பாகக் கொண்டு ‘தீராநதி’ மாத இதழில் ஜன. 2007 முதல் டிச. 2011 முடிய அறுபது மாதங்கள் பத்தியாக வெளியான பேரா. அ.மார்க்ஸ் –ன் ஆக்கங்கள் மிகத் தாமதமாக நூல்வடிவம் பெறுகின்றன.
பேரா. அ.மார்க்ஸ் அவர்களின் எழுத்துகளுக்கு முன்னுரை எழுதும் தகுதி எனக்குத் துளியும் இல்லை என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். இருப்பினும் 1990 களின் தொடக்கத்தில் புதுமைப்பித்தன் கருத்தரங்கில் தொடங்கி இன்று வரைத் தொடரும் தோழமை உணர்வினுடாக ஓர் வாசகப் பார்வையாக இதை எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.
அன்று நிறப்பிரிகையில் வெளியான கட்டுரைகள் இன்று குமுதம் நிறுவன இதழான ‘தீராநதி’யில் வெளியாகக் கூடிய அளவிற்கு நிறைய மாற்றங்கள் தமிழ் இதழியல் உலகில் ஏற்பட்டுள்ளன. அரசியலற்ற ஓர் நிலைப்பாட்டை பெரும்பாலான தமிழ்ச் சிறுபத்திரிகைகள் பலகாலமாக எடுத்திருந்த நிலையில் ‘நிறப்பிரிகை’ நுண் அரசியல் களங்களை விவாதப் பொருளாக்கியது. இதில் அ.மார்க்ஸ் – ன் பங்கு பணி அளப்பரியது.
தமிழ்ச்சூழலில் அ.மார்க்ஸ் அளவிற்கு கடும் விமர்சனங்களுக்கு ஆளான சமகால அறிவுஜீவி யாருமில்லை.. இந்தத் தொகுப்பின் குறுக்கு வெட்டாகப் பார்த்தால்கூட அவர் தொடாமல் விட்ட பிரச்சினைகள் மிகக் குறைவு. சமகால தமிழ்ச் சிந்தனையாளர்களில் இது அரிது. கிராம்சியின் ‘உயிர்ப்புமிகு அறிவுஜீவி’ (Organic Intellectual) எனும் கருத்தாக்கத்திற்கு தமிழ்ச்சூழலில் மிகவும் பொருத்தமான ஆளுமை அ.மார்க்ஸ். அ.மார்க்ஸால் இது சாத்தியமாகியுள்ளது எங்களைப் போன்ற நண்பர்களுக்குப் பெருமையாக இருக்கிறது. புத்தர், காந்தி, அம்பேத்கர், பெரியார், தாகூர், ஸ்பாடிஸ்டா, பரமேஸ்வர அய்யர் என எங்கும் அறத்தைத் தேடி அலையும் மனித உரிமைப் போராளியாகவே அ.மார்க்ஸ்ளைந்நூல் முழுவதும் காட்சியளிக்கிறார். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அறத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். நீதி செத்த உலகில் அறத்தைத் தேடி தன்னந்தனியனாய் நெடுந்தூரம் பயணிக்கிறார்.
தமிழகத்தில் சொல்லப்படும் எந்தக் கருத்தும் தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. என்கிற இரு பார்வைகள் வழியே பயணிப்பதால் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் அவர் படும் இடர்பாடுகளை சொல்லி மாளாது. இருப்பினும் எது குறித்தும் கவலை கொள்ளாமல் தொடர்ந்து தனது கருத்துக்களோடு அனைவரையும் கடந்து செல்கிறார். இத்தொகுப்பில் இலங்கைப் பிரச்சினை குறித்து அதிக எண்ணிகையிலான கட்டுரைகள் இருக்கின்றன. இந்தப் பார்வைகள் அவருக்கு நிறைய எதிர்ப்புக்களை உருவாக்கித் தந்தன.
அதற்காக தனது அறம் சார் நிலைப்பாட்டில் அவர் எள்ளளவும் உறுதி குலைவதில்லை. ஈழப்பிரச்சினை தமிழ்த் தேசியவாதிகளால் கட்டமைக்கப்பட்ட எல்லைகளைத் தாண்டி போருக்குப் பிந்தைய இலங்கையில் சமாதானம், பெற்ற படிப்பினைகள், அரசியல் தீர்வு, கச்சத்தீவு, மீனவர் பிரச்சினைகள், அகதிகள் வாழ்வு குறித்தான கரிசனங்கள் என்பதாக அ.மார்க்ஸிடம் விரிவு கொள்கின்றன. கச்சத்தீவு, அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை போன்ற சிக்கல்களில் தேசியம் கடந்த ஒருவகை ஆளுகை முறை பற்றி யோசிக்கிறார்.
அவர் சொல்வதைக் கேளுங்கள்: “இன்றையத் தேவை போரல்ல; சமாதானம், சமாதானம் மட்டுமே. பேச்சுவார்த்தைகள் மூலமே எல்லைகள் வரையறுக்கப்பட வேண்டும். வரையறுத்தல் என்பதைவிட வரையறை நீக்கம் (delimit) செய்தல், நெகிழ்ச்சியாக்கப்படுதல், ஒருங்கிணைக்கப்படுதல் (integrate) வேண்டும். முன்பொரு முறை நான் இந்தப் பத்தியில் எழுதியது போல தேசியம் கடந்த ஆளுகை முறை (Non-Nationalistic mode of Governance) குறித்தல்லாம் நாம் யோசிக்கவேண்டும். குறைந்தபட்சம் எல்லைப் பிரச்சினைகளிலாவது இந்தப் பார்வைகள் தேவை.”
விலகி நிற்றல், தன்னிலை அழிப்பு, பன்முகப்பார்வை குறித்த அவதானிப்புகள், மற்றமை சார்ந்த கரிசனங்கள், அறவியல் நிலைப்பாடு, பெருங்கதையாடல் தகர்ப்பு, ஒற்றைத்தீர்வுகளில் முடங்காமல் பன்மைத் தீர்வுகளைப் பரிந்துரைத்தல், தேசபக்தி எனும் மூட நம்பிக்கைக்கு எதிரான நிலை, எங்கும் உரையாடலுக்கான சாத்தியப்பாடு, வைதீக எதிர்ப்பு என்பதான தன்மைகள் இத்தொகுப்பு முழுதும் இழையோடுவதைக் காணலாம். அரபுலக எழுச்சி, ஈழப்பிரச்சினை, பாகிஸ்தானுடனான உறவு என எந்தச் சிக்கலுக்கும் “தொடர்ந்த உரையாடலுக்கான சாத்தியமும், பன்மைத்துவம் தக்கவைக்கபடுதலுமே முக்கியம்” என வலியுறுத்துகிறார். ஈழச்சிக்கலுக்கு அடுத்தபடியாக காந்தி குறித்த இவரது பார்வைகள் கடும் விமர்சனத்தை எதிர்கொள்கின்றன. நீதி செத்த உலகில் அறத்தைப் பேச இவருக்குக் கிடைத்த பெரு வாய்ப்பு காந்திதான். பெரியார், அம்பேத்கரைப் போற்றும் இவர், பெருகி வரும் வெறுப்பு அரசியலை எதிர்கொள்ள காந்தியின் உதவியை நாடுகிறார். அதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. எல்லாவற்றையும் அரசு-அதிகார கண்ணோட்டத்திலிருந்து சிந்திக்காமல் அரசுக்கு எதிராகவும் அரசுக்கு அப்பாலும் எனகிற நிலையிலிருந்து அணுக முயலும் அ.மார்க்ஸ் காந்தியைக் கண்டடைவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. காந்தியைக் கடுமையாக விமர்சித்த பெரியார்தான் இந்த நாட்டிற்கு காந்திதேசம் என்று பெயரிடச் சொன்னவரும் கூட என்பதை மறந்துவிட இயலுமா?? காந்தி வலியுறுத்தியது அனைவரையும் உள்ளடக்கிய (Inclusive) ஓர் தேசியம். தேசியம் என்பதை ஓர் அரசியல் வகையினமாக அன்றி கலாச்சாரமாக அவர் பார்க்கவில்லை. சுயாட்சி என்ற கருத்துடன் அரசற்ற நிலையை (anarchy) விரும்பியவர் காந்தி. காந்தியின் சிந்தனைகளில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பினும் அடிநாதமாக ஒன்றிணைக்கும் இழை இருப்பதை மார்க்ஸ் தெளிவுபடுத்துகிறார்.
கடும் நோய்வாய்பட்டபோது ஊசிகளைத் தவிர்த்த காந்தி ரயில் பயணங்களை மறுத்ததில்லை என்று சொல்லும் மார்க்ஸ் நவீன தொழில்நுட்பங்களுக்கு அவரை ஒரு வரட்டுத்தனமான எதிரியாகக் கட்டமைக்க முடியாது என்றும் சொல்கிறார்.
டால்ஸ்டாய் போன்ற உலகின் தலை சிறந்த எழுத்தாளர்கள் முதல் ஈன்ஸ்டின் உள்ளிட்ட அறிஞர்கள் வரை தேசபக்தியை ஏன் வெறுத்தார்கள் என கேள்விகேட்டு அதற்கான விடையும் தேடுகிறார். தேசபக்தி உணர்வு இயற்கையானதல்ல. அது அறிவுக்குப் புறம்பானது; ஆபத்தானது. மானுடத்தை நேசிப்பவர்கள் தேசபக்தியை வெறுக்கத்தானே முடியும்? பெரியாரிடமிருந்து அண்ணா வேறுபடும் புள்ளிகளை மிக நுணுக்கமாக சுட்டுகிறார். இதன் பொருள் அண்ணாவை நிராகரிக்கிறார் என்பதல்ல. அ.மார்க்ஸை விமர்சிப்பவர்கள் இவ்வாறான எளிய சமன்பாட்டிற்கு வந்துவிடுகின்றனர். “அடையாள அரசியல், அடையாளத்தைப் பேணுவதன் ஊடாக எல்லாவற்றையும் உள்ளடக்குவதாகவும் இருக்கவேண்டும். காந்தி, பெரியார், அண்ணா என்றொரு நல்ல பாரம்பரியம் நமக்கு இந்தவகையில் உண்டு” என்று அவர் சொல்வதையும் நாம் கவனிக்க வேண்டும்.
இந்நூலில் உள்ள அம்பேத்கர் குறித்த மூன்று கட்டுரைகள் அம்பேத்கர் குறித்து இதுவரை யாரும் தொடாத புதிய பரிமாணங்களை எட்டுகிறது. சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதி தமிழ்ச் சூழலில் மிகப் பெரிய தாக்கத்தை விளைவித்த ‘டாக்டர் அம்பேத்கரின் போர்க்குரல்’ எனும் குறுநூல் அவரின் அரசியல் பார்வைகளைத் துல்லியப்படுத்தியது என்றால் இந்நூலிலுள்ள கட்டுரைகள் அம்பேத்கர் என்னும் சிந்தனையாளரின் இதயத்தை நமக்கு அடையாளம் காட்டுகிறது.
அ.மார்க்ஸ் எழுத்தில் ஓர் பிடித்த விடயம் என்னவெனில் எந்த சிக்கலான கோட்பாடுகளைச் சொல்லும்போதும் அதற்கு எளிய உதாரணங்களையும் ஒப்பீடுகளையும் நிகழ்த்திவிடுவார். அதைபோல சமயம் பார்த்து குறைகளை நேருக்குநேர் சுட்டும் பண்பு அநாயசமானது. விக்ரமாதித்யன் மணிவிழாவிற்கு கூடிய எழுத்தாளர்களைப் பட்டியலிட்டு விக்ரமாதித்யன் என்ன கனிமொழியா இல்லை தமிழச்சியா? இத்தனை எழுத்தாளர்கள் குவிந்திருந்ததே பெரிய விஷயமில்லையா? என்று கேட்பார். கூடவே விக்ரமாதித்யன் மீதான விமர்சனமும் சட்டென்று வரும். “ஒருபக்கம் அப்பட்டமான சைவப் பிள்ளைமார்த்தனம்; மறுபக்கம் அசாத்தியமான கலகக் குணம், முழுசான அதுதானே விக்ரமாதித்யன். இன்னும் சரியாகச் சொல்வதானால் அவர் ஒழுங்கான சைவப்பிள்ளையும் கிடையாது, கலகக்காரனும் இல்லை” என்று கருத்துரைப்பார். தமிழ் அறிவுலகில் இவ்வாறு வெளிப்படையாகப் பேசும் ஆளுமைகள் அரிது. மன்மோகன் சிங் மீதான விமர்சனத்துடன் கூடவே அவரது மகளும் அமெரிக்க மனித உரிமைச் செயல்பாட்டாளருமான அம்ரித்சிங்கை பாராட்டுகிறார். கனிமொழியின் அணு ஒப்பந்ததிற்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கடும் விமர்சனத்திற்கு உட்படுத்துகிறார்.
இங்கு பெருஞ்சித்திரனாரின் வாரிசு பொழிலன் சிறைப்பட நேர்ந்ததை வருத்தத்துடன் பதிவு செய்கிறார். புலவர் கலியபெருமாள் அவரது மனைவி, மகன்கள் அனைவரும் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது இரு மகள்களுக்கு அடைக்கலம் கொடுத்து தனது பள்ளியில் சேர்த்தக் குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்ட கலியபெருமாளின் மனைவியின் சகோதரி அனந்தநாயகி அம்மையார் பற்றி இப்பத்தியில் எழுதி மு.கருணாநிதிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கிறார். அப்பாவி பெண்மணியை சிறைவைக்கக் காரணமாக இருந்தவர் தனது மகள் சிறைப்பட்டதற்குப் புலம்பும்போது ஒரு உயிர்ப்பு மிகு அறிவுஜீவி எப்படி மவுனமாக இருக்கமுடியும்? நிறப்பிரிகை காலத்தில் விளிம்புநிலை ஆய்வுகள் குறித்த கவனத்தை ஈர்த்த அ.மார்க்ஸ் இன்றும் தனது ஆய்வுத்தேடலை பல்வேறு புதிய களங்களில் தொடந்த வண்ணம் உள்ளார். சஞ்சய் சுப்ரமணியத்தின் ‘உள்ளடக்கப்பட்ட மோதல்கள்’, ‘இணைப்புண்ட வரலாறுகள்’ போன்ற புதிய பார்வைகளையும் தமிழுக்கு அறிமுகம் செய்கிறார். ஆங்கில நூற்கள் குறித்து மட்டுமின்றி. செயல்வழிக் கற்றல் பற்றி பேரா. கல்யாணி வெளியிட்ட குறு வெளியீடுகள் குறித்தும் தனது பதிவை மேற்கொள்கிறார். கோட்பாடுகளை மட்டும் பேசிக்கொண்டிராமல் பாலை நிலவன் கதைகள், யவனிகா ஶ்ரீராம் கவிதைகள், ‘வாத்தியார்’, ‘மறுபக்கம்’ ஆகிய நாவல்கள் பற்றியும் நிறையப் பேசுகிறார். தமிழ் எழுத்துலகில் கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கப்பட்ட ‘வாத்தியார்’ நூலைத் தேடி எடுத்து அடையாளம் காட்டிய அவர் விமர்சிக்க வேண்டியவற்றைக் கடுமையாக விமர்சிக்கவும் செய்கிறார். மிலன் குந்தேரா முன்வைக்கும் வரலாற்றுணர்வு கொண்ட எழுத்தாளர்கள் தமிழில் அரிது என்கிறார். தாகூர், டால்ஸ்டாய் போன்று தமிழ் எழுத்தாளர்கள் அறவியல் நிலை எடுக்கும் வரை இங்கு காத்திரமான படைப்புகள் தோன்ற வாய்ப்பில்லை என்றும் சொல்கிறார். தேசத்திலிருந்து வரலாற்றை விடுவிக்கவேண்டிய தேவை பற்றி வலியுறுத்துகிறார். புனைவுகள் வழியே தமிழ், இந்திய வரலாறு கட்டமைக்கப்படுவதில் உள்ள ஆபத்தையும், தொல்லியல் தோண்டிகள் இதற்கு உறுதுணையாக இருப்பதையும் வெளிப்படுத்துகிறார். சோழப்பெருமை பேசும் தமிழ்தேசியம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இன்று வெளிப்படையாக நிலப்பிரபுத்துவப் பெருமைகளைப் முன்னிறுத்தத் துணிந்துள்ளதைச் சுட்டி, இதன் பின்னாலுள்ள பாசிச அம்சங்களை தோலுரிக்கிறார்.
யாரும் செய்ய மறுக்கும் இப்பணிகளைச் செய்ய இன்றைய தமிழ்ச்சூழலில் மார்க்ஸை விட்டால் யாருமில்லை. வரலாற்றை அரசியல்வாதிகள் கையிலெடுப்பதன் ஆபத்தை பரமேஸ்வர அய்யரின் ‘Ramayana and Lanka’ என்ற நூல் மூலம் விளக்குவது குறிப்பிடத் தக்கது.. தேவதாசி வாழ்வு பற்றி எழுதும்போது, “சுதந்திரமான பாலியல் தேர்வை இழிவு எனக் கருதும் ஆணாதிக்க நோக்கிலிருந்து பாலியல் தொழிலை மதிப்பிடுவது எத்தனை தவறோ, அத்தனை தவறு சுதந்திரமான பாலியல் தேர்வு சாத்தியம் என்கிற ஒரே காரணத்தை வைத்து பாலியல் தொழிலை உன்னதப்படுத்துவதும்கூட.” என்று சொல்லிவிட்டு, “பிரச்சினைகள் சிக்கலானவை, எளிய தீர்ப்புகள் சாத்தியமில்லை” என்றும் சொல்கிறார். ‘விரிந்த பார்வை, அகன்ற படிப்பு, பிரச்சினைகளை எளிமைப்படுத்திப் புரிந்துகொள்ளாமல் அவற்றின் சகல பரிமாணங்களுடன் அணுகுதல்” என்பவற்றிற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இக்கட்டுரைகள் இன்றைய இளைஞர்கள் ஆழப் பயில்வதற்கு உரியன.
மு.சிவகுருநாதன் திருவாரூர்.
ஆகஸ்ட் 20, 2015