உளவுத் துறையிடம் காவல் அதிகாரம் இருக்கக் கூடாது

(‘மக்கள் ரிபோர்ட்’ இதழில் பிரசுரமான எனது பேட்டி)

கடந்த 19ம் தேதி அன்று தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தை சேர்ந்த தமிமுன் அன்சாரி என்கிற வெங்காய வியாபாரி இந்திய இராணுவ ரகசியங்களை வெளிநாட்டிற்கு கடத்த முயன்றதற்காகவும், இந்தியாவை சீர்குலைப்பதற்காக வெளிநாட்டு சக்திகளோடு இணைந்து சதி வேலையில் ஈடுபட்டதற்காகவும் கைது செய்யப்பட்டார் என்று ஊடகங்கள் வழியாக செய்தி சொன்னது திருச்சி கியூ பிரிவு போலீஸ்.

அன்சாரி கைது விவகாரத்தில் போலீஸ் கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியிருப்பதால் அது குறித்த உண்மை நிலை என்ன என்பதை கண்டறிவதற்காக பேராசிரியர் அ. மார்க்ஸ் தலைமையிலான உண்மை அறியும் குழு தஞ்சைப் பகுதியில் முகாமிட்டிருக்கும் தகவல் கிடைக்கவே மக்கள் ரிப்போர்ட்டுக்காக பேராசிரியர் அ. மார்க்ஸை நேரில் சந்தித்தோம். இந்த வழக்கு தொடர்பாக தனது குழுவுடன் சென்று கண்டறிந்த உண்மைகளையெல்லாம் தொகுத்து திருச்சி பிரஸ் கிளப்பில் 24-09-2012 அன்று அறிக்கையாக வெளியிடுவதற்காக பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த நிலையிலும் மக்கள் ரிப்போர்ட்டுடனான நேர்காணலுக்கு நேரம் ஒதுக்கித் தந்தார் அ. மார்க்ஸ். அவருடனான நேர்காணலை வாசகர்களுடன் பரிந்து கொள்கிறோம்.

மக்கள் ரிப்போர்ட்: உண்மை அறியும் குழுவில் யார் யார் இடம் பெற்றிருக்கிறார்கள்?

மார்க்ஸ்: நான், கோ. சுகுமாரன், எஸ்.வி. ராஜதுரை, பேராசிரியர் பிரபா கல்விமணி, பேரா. கோச்சடை, வழக்குரைஞர் கமருத்தீன் ஆகியோர் இடம் பெற்றிருக்கிறோம்.

ம.ரி : உண்மை அறியும் குழுவின் நோக்கம்தான் என்ன?

மார்க்ஸ் : காவல்துறையினரால் பாரதூரமான குற்றச்சாட்டுகள், பெரிய வழக்குகள் போடப்படும்போது, அதில் ஏதும் சந்தேகங்கள் இருந்தால் அதிலுள்ள உண்மைத்தன்மையை அறிந்து அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் சொல்வதுதான் எங்கள் நோக்கம்.

ம.ரி: அதிராம்பட்டினம் அன்சாரி மீது அப்படியென்ன குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருக்கிறது போலீஸ்?

மார்க்ஸ்: அன்சாரி இந்திய இராணுவ ரகசியங்களை இலங்கைக்கு கடத்த முயன் றதாகவும், இந்தியாவின் இறையாண்மையை சீர்குலைக்க வெளிநாட்டு சக்திகளோடு சேர்ந்து சதி செய்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ம.ரி: இந்த குற்றச் சாட்டுகளில் உண்மை இருப்பதாக உங்கள் குழு கருதுகிறதா?

மார்க்ஸ்: அது குறித்துத்தான் ஆய்வு செய்ய வந்துள்ளோம்.வழக்கில் பல அய்யங்கள் உள்ளன. ஏனென்றால் அன்சாரி பிளாக்பெரி செல்போனை வைத்துக் கொண்டு ஊட்டியில் இயங்கும் இந்திய இராணுவ தளத்தை வெளியில் ரோட்டில் நின்று கொண்டு படம் பிடித்தார். அந்தப் படத்தை இலங்கைக்கு அனுப்ப முயற்சி செய்தார் என்று எஃப். ஐ.ஆரில் சொல்லப்படுகிறது. இந்த எஃப்.ஐ.ஆரில் பல முரண்பாடுகள் உள்ளன. அவற்றை நாங்கள் தொகுத்திருக்கும் உண்மை அறியும் குழுவின் அறிக்கையில் பதிவு செய்துள்ளோம். இலங்கை இராணுவ அதிகாரிகளுக்கு இந்திய இராணுவமே இந்த இராணுவ தளத்தில் பயிற்சி அளிக்கும்போது அன்சாரியின் புகைப்படம், அதுவும் வெளியில் ரோட்டிலிருந்து எடுக்கும் படம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதுவருக்கு எதற்கு? அவர்களுக்கு கிடைக்காத என்ன இரகசியத்தை இந்த செல்போன் படங்கள் தந்து விட முடியும்? இந்தியாவும் இலங்கையும் “மோஸ்ட் ஃபேவர்டு நேஷன்ஸ்’ என்ற அடிப்படையில் செயல்படுவதை நாம் அறிவோம் என்பதையும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

ம.ரி: தூத்துக்குடி துறைமுகம் போன்ற முக்கிய இடத்தின் வரைபடங்கள் அன்சாரியிடம் கைப்பற்றப்பட்டதாக போலீஸ் கூறுகிறதே!

மார்க்ஸ் : இன்று கூகுள் உள்ளிட்ட இணைய தளங்களில் இவர்கள் சொல்லக் கூடிய மேப்கள் கிடைக்கின்றன. அதனால் அன்சாரியின் மூலம் இதை வாங்க வேண்டியது இல்லை. அதுவும் சி.டி.யில் பதிவு செய்து நேரடியாக கொடுக்க அன்சாரி இலங்கைக்கு போனார் என்பதும் நம்பும்படியாக இல்லை.

ம.ரி : அன்சாரி கைது செய்யப்பட்டது குறித்து முன்னுக்குப்பின் முரணான தகவல் வருகிறதே?

மார்க்ஸ் : காவல்துறை 19ம் தேதி திருச்சி டோல் கேட்டில் விரட்டிப் பிடித்து கைது செய்ததாக சொல்கிறது. அது உண்மையல்ல. அன்சாரியை 16ம் தேதியன்றே திருச்சி விமான நிலையத்தில் கைது செய்து காவல்துறை வைத்திருந்தது. திருச்சி டோல் கேட்டில் அன்சாரியை கைது செய்யவில்லை.

ம.ரி : அப்படியானால் 16ம் தேதி யன்று கைது செய்யப்பட்ட அன் சாரியை 19ம் தேதி கைது செய்த தாக காவல்துறை ஏன் பொய் சொல்ல வேண்டும்?

மார்க்ஸ் : பொதுவாக பொய் வழக்கை ஜோடிப்பதற்காக இந்த அவகாசத்தை காவல்துறை பயன்படுத்திக் கொள்ளும். அன்சாரி விஷயத்திலும் அப்படித்தான் நடந்து இருக்க வேண்டும் என்று நம்புகிறோம். உண்மையில் அன்சாரி காவல்துறையால் கண்காணிக்கப்பட்டிருந்தால், அவர் குற்றச் செயலில் ஈடுபட்டதற்கு உளவுத்துறையிடம் ஆதாரம் இருந்தால் கைது செய்த உடனே அன்சாரியை கோர்ட்டில் ஒப்படைத்திருக்க வேண்டும். ஆனால் காவல்துறை அப்படிச் செய்யவில்லை. அதுவும் எங்களுக்கு சந்தேகத்தை கிளப்புகிறது. தஞ்சை வல்லம் பகுதியைச் சேர்ந்த ராதா என்ற ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியுடன் அன்சாரி நெருங்கிப் பழகினாராம். அவரிடமிருந்து இராணுவ ரகசி யங்களைப் பெற்றாராம். இதை போலீஸ் சொல்கிறது. ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளிடம் எல்லாம் இராணுவ ரகசியங்கள் இருக்கும் என்பது நம்பும்ப டியாக இல்லை. அதே சமயம், அந்த இராணு அதிகாரியை போலீஸ் ஏன் இதுவரை விசாரிக்கவில்லை என்பதற்கும் பதிலில்லை.

ம.ரி : அன்சாரியை வழக்கத்திற்கு மாறாக கியூ பிரிவு போலீசார் கைது செய்திருப்பது பற்றி?

மார்க்ஸ் : ஆமாம். கியூ பிரிவு போலீஸ் கைது செய்து வழக்கை நடத்துகிறது. கியூ பிரிவு போலீஸ் நக்ஸலைட்டுகளின் செயல்பாடுகளை உளவு பார்க்க 1970களில் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. இதற்கு 1993ல் போலீஸ் அதிகாரம் கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு சீருடை கிடையாது. காவல் நிலையத்திலும் பெயர் பலகை கிடையாது. காவல் துறைக்கும், உளவுத்துறைக்கும் செயல்பாடுகளில் வேறுபாடுகள் உண்டு. உளவுத்துறை என்பது இரகசிய அமைப்பு. ஒரு வகையில் சட்ட நெறிகளுக்கு அப்பாற்பட்ட அமைப்பு என்றும் கூட சொல்லலாம். இது சேகரிக்கும் உளவுத் தகவல்களை அப்படியே சாட்சியமாக ஏற்க முடியாது. காவல்துறை என்பது அப்படியல்ல… ஒருவரை கைது செய்தால் அவர் குற்றவாளி என போலீஸ் கருதினால் முறையாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தல், அதை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து கைது செய்தல், பொருட்களை பறிமுதல் செய்தல், தேடுதல், அவருக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டுதல் போன்ற பணிகளை மேற்கொள்ளும். இதோடு இதன் பணி முடியாது. அது சேகரித்த தகவல்களை, சாட்சியங்களின் உண்மைத் தன்மையை நீதிமன்றத்தில் அது நிறுவியாக வேண்டும்.

ம.ரி : ஒரே இலாகா போலீசாரே கைது செய்து வழக்கை நடத்தக் கூடாது என்கிறீர்களா?

மார்க்ஸ் : அப்படியல்ல. உளவுத் துரைக்குக் காவல்துரை அதிகாரம் இருக்கக்கூடாது. இருந்தால் இந்த இலாகாவை பயன்படுத்தி அரசியல் காரணத்திற்காகவும், மற்ற சுய லாபத்திற்காகவும் பொய்யான வழக்கைப் போட்டு, போலியான ஆதாரங்களை தயார் செய்து யாரை வேண்டுமானாலும் பழி வாங்க முடியும். ஆகவேதான் கூடாது என்கிறோம். இது மனித உரிமை மீறலாகவும் அமையும்.

ம.ரி : கியூ பிரிவு போலீஸ் இந்த வழக்கை நடத்துவது மனித உரிமை மீறலாகக் கருதுகிறீர்களா?

மார்க்ஸ் : மனித உரிமைக்கும், ஜனநாயகத்திற்கும் விரோதமாமியங்குவதற்கு வழைவகுக்கும் கியூ பிரிவை கலைக்க வேண்டும்.மேலை நாடுகளில் கூட இதுபோல காவல் அதிகாரமுடைய உளவு அமைப்புகள் கிடையாது. எனவே கியூ பிரிவு இந்த வழக்கை நடத்துவது சரியல்ல.

ம.ரி : அன்சாரி மீது போடப்பட்டிருப்பது பொய் வழக்கு என்றால் அதில் உள்நோக்கம் இருப்பதாக கருதுகிறீர்களா?

மார்க்ஸ் : இஸ்லாமியர்கள் இறைத் தூதராக ஏற்றுக் கொண்ட நபிகள் நாயகத்தை உண்மைக்குப் புறம்பாக அவதூறு கூறி படமெடுக்கப்பட்டதை கண்டித்து அந்த இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், இந்தக் கொடும் செயலுக்கு துணைபோகும் அமெரிக்க அரசை கண்டித்தும் உலகம் முழுவதும் போராட்டம் நடந்தாலும் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் எதிர்ப்பு போராட்டம் மிகவும் தீவிரமாகவும் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்காகவும், இஸ்லாமிய சமுதாயத்தை அச்சப்படுத்தி போராட்டத்தை வீரியமிழக்கச் செய்யவும்தான் அன்சாரி மீது வழக்கு போடப்பட்டிருக்கலாம் என்று நம்பத் தோன்றுகிறது. அன்சாரி கைதுக்குப் பின்னால் உள்நோக்கம் இருப்பதாகவே நமக்கும்படுகிறது.

(பேட்டி & படங்கள் : நாச்சியார் கோவில் அபு முஜாஹிதா)

இஸ்லாமியர்கள் சட்டரீதியாக எதிர் கொள்ள வேண்டும்!

அன்சாரி கைது தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் தஞ்சை மாவட்டத் தலைவரும் சமூக ஆர்வலருமான ராஜவேலுவை நேரில் சந்தித்து கருத்து கேட்டோம். “இஸ்லாமிய சமூகம் முதலில் சட்ட ரீதியான விழிப்புணர்வை பெற வேண்டும். இதுபோன்ற வழக்குகளை சட்ட ரீதியாக எதிர் கொள்ள வேண்டும். பாதிக்கப்படும் இஸ்லாமியர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக அனைத்து இயக்கங்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும். மிக முக்கியமாக, இஸ்லாமிய சமூகம், திமுக, அதை விட்டால் அதிமுகவை மட்டும் ஆதரிப்பதை விட்டு மாற்று அரசியல் சக்திகளுக்கு ஆதரவு கொடுத்து தங்களின் இருப்பை வலிமைப்படுத்த வேண்டும்…” என்றார் நம்மிடம்.

ஜூனியர் விகடன் தொலைபேசி உரைகள்

(2012ல் இரு வாரங்கள் தினந்தோறும் ஜூ.வி வாசகர்களுக்கென தொலைபேசியில் வெவ்வேறு தலைப்புகளில் பேசுவதற்கென பதிவு செய்யபட்ட உரைகள்)

1. நகைச்சுவை

மனித வாழ்க்கையில நகைச்சுவைக்கு ஒரு பங்கு உண்டு. நமது இலக்கியங்கள், நாடகங்கள், திரைப்படம், ஊடகங்கள் எல்லாவற்றிலும் நகைச்சுவைக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. ‘நகைச்சுவை உணர்ச்சி இல்லாவிட்டால் நான் எப்போதோ செத்துப் போயிருப்பேன்னு காந்தி சொல்லியிருக்கார். நகைச்சுவை என்பது வெறுமனே சிரிச்சுட்டுப் போகிற விஷயம் மட்டும் இல்லை, அதன்மூலம் சிந்திக்கவும் வைக்க முடியும், அரசியலை நுணுக்கமா விமர்சனம் செய்ய முடியும். முல்லா, தெனாலிராமன் போன்றோர் இப்படிச் சிரிப்பின் மூலம் சிந்திக்க வைத்தோர்.

ஹிட்லருடைய கடுமையான பாசிச ஆட்சியில் நகைச்சுவை மூலம் கேலி செய்தவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டார்கள். மரண தண்டனை கூட வழங்கப்பட்டது. அப்படியும் இரகசியமாக பல நகைச்சுவைகள் புழங்கி வந்தன. அதில் ஒன்று:

ஹிட்லர் ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்கு வந்தார். இரண்டு நாள் முன்னதாகவே அந்த ஆஸ்பத்திரியில் ஏகப்பட்ட டென்ஷன்; கெடுபிடிகள். அங்கிருந்த 300 பைத்தியங்களையும் வரிசையாக நிற்க வைத்து, சீருடை கொடுத்து ஹிட்லர் வந்தவுடன் ஃபாசிஸ்டுகளின் வழக்கப்படி கையை நீட்டி சல்யூட் செய்யக் கடும் பயிற்சி கொடுத்திருந்தனர்.

குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்ட்தில் ஹிட்லர் வந்தார். பைத்தியங்கள் சீருடையுடன் வரிசையாக நின்றிருந்தார்கள். “சல்யூட்” என்று சத்தம் வந்தவுடன் எல்லாப் பைத்தியங்களும் கையை நீட்டி சல்யூட் செய்தார்கள். இறுகிய முகத்துடன் ஹிட்லர் எல்லோரையும் பார்வையிட்டு வந்தார். அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஒரே ஒருவர் மட்டும் சல்யூட் பண்ணாமல் நின்றிருந்தார். அவர் அருகே நின்ற ஹிட்லர்’ “ஏன் நீ சல்யூட் பண்ணவில்லை?” எனக் கடுமையாகக் கேட்டார்.

நடுங்கிப்போன அவர் மெல்லிய குரலில் பதில் சொன்னார்: “ மேய்ன் ஃப்யூஹ்ரர், நான் பைத்தியமில்லை. நர்ஸ்…”

சமகால அரசியல் நகைச்சுவை ஒன்றைச் சொல்லட்டுமா? அமெரிக்கர்கள் வணிக இலாபத்திற்காகக் காசு கொடுத்து எதையும் வாங்கி விடுவார்கள் என்பதைக் கேலி செய்யும் நகைச்சுவை இது:

போப் ஆண்டவர் ஒரு நாள் தோட்டத்தில் நடைப் பயிற்சி செய்து கொண்டிருந்தார், அருகே தோட்டக்காரர் புற்களை வெட்டி அழகு செய்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் ஒரு அமெரிக்கன் நீண்ட கோட், உயரத் தொப்பி சக்தம் வந்து போப் ஆண்டவர் முன் பணிவாக வணக்கம் சொல்லி ஏதோ கிசு கிசுத்தான். போப் ஆண்டவர் கடுப்பாகி, “நோ, நோ” அதெல்லாம் முடியாது” என்றார். உடனே அந்த அமெரிக்கன் இன்னும் பணிவாக, “5 மில்லியன் டாலர்..” என்றான். “சாரி..அதெல்லாம் முடியாது” என இன்னும் கடுமையாகச் சொன்னார் போப். “ பத்து மில்லியன் டாலர் …” என இழுத்தான் அமெரிக்கன். “முடியாது..முடியாது” என இன்னும் கோபமாகச் சொன்னார் போப் ஆண்டவர். “ சரி ஃபாதர் 10 பில்லியன் டாலர்” என்று அழுத்தமாகச் சொல்லி போப் ஆண்டவரின் முகத்தைப் பார்த்தான் அமெரிக்கன். போப் ஆண்டவர் கடுங்கோபமாகி “ நோ, நோ கெட் அவுட்..” என்று கத்தியவுடன் அந்த அமெரிக்க்ன் ஓடிப்போனன்.

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த தோட்டக்காரர் போப் அருகில் சென்று, “சாமி, நீங்க இப்பிடிக் கோபப்பட்டு நான் பார்த்ததே இல்லியே, அந்த அமெரிக்கன் அப்படி என்ன சொன்னான்?” போப் ஆண்டவர் கோபம் தணியாமல் சொன்னார்: “ ஒண்ணுமில்ல, நாம ‘சர்ச்’ல ஜெபம் சொல்லி முடிச்சவுடன் ‘ஆமென்’னு சொல்றோம் இல்லியா, அதுக்குப் பதில் ‘கொகோ கோலா’ன்னு சொல்லணுமாம்..”

2. காந்தியை மறு வாசிப்பு செய்தல்

சமீபத்தில் என்னிடம் பலரும் கேட்கிற கேள்விகளில் ஒன்று என்ன சார் கார்ல் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார்னு பேசிட்டுருந்த நீங்க திடீர்னு காந்தி பற்றி பேச ஆரம்பிச்சுட்டிங்களே என்பது. காந்தி பற்றிப் பேசுவது என்பது மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் ஆகியோரை விட்டுவிடுவது என்பதல்ல. அதேபோல காந்தி பற்றி பேசுவதென்பது காந்தீயம்தான் இன்றைய பிரச்சினைகளுக்கெல்லம் ஒரே தீர்வென்று சொல்வதும் அல்ல. தலித்களுக்குத் தனி வாக்காளர் தொகுதி என்கிற கோரிக்கையை அவர் முறியடித்தது உட்பட அவரது எல்லா அரசியல் செயல்பாடுகளையும் ஏற்பதும் அல்ல. ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும் காந்தி, ஏசு, புத்தர், நபிகள், பெரியார், மார்க்ஸ் இன்னும் யாராக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட காலத்தில், ஒரு குறிப்பிட்ட அரசியல் சூழலில் வாழ்ந்தவர்கள். அவர்கள் வாழ்ந்த காலத்திலிருந்து நாம் வெகு தொலைவு வந்துவிட்டோம். இன்றைய பன்முகச் சிக்கல்களையும் எதிர்கொள்வதற்கு இவர்கள் யாரொருவருடைய சிந்தனை மட்டுமே போதாது. இன்றைய சூழல்களுக்கான வழிகாட்டல்களை நாம்தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.அத்தகைய முயற்சியில் இவர்களது அனுபவங்கள் நமக்குத் துணை செய்யக்கூடும், அவ்வளவுதான்.

காந்தியை நான் எந்தக் காலத்திலுமே அவதூறு செய்தது கிடையாது. அவரது அணுகல் முறை குறித்து நான் சற்று ஆழமாகப் படிக்க நேர்ந்தது பாபர் மசூதி இடிப்பிற்குப் பிந்திய காலகட்டத்தில்தான். இந்தியா என்பது பல இன, மொழி, மதம், சாதிகளைப் பின்பற்றுகிறவர்கள் வாழ்கிற ஒரு நாடு. எல்லோரும் அவரவர் நம்பிக்கைகளைப் பின்பற்றுகிற அதே நேரத்தில் மற்றவர்களுக்குரிய நம்பிக்கைகளை அங்கீகரித்து வாழ வேண்டும். அந்த வகையில்தான் மதச்சார்பற்ற நாடு என்கிற கருத்தாக்கத்தைக் காந்தி முன்மொழிந்தார். அதற்காகவே அவர் தன் உயிரைப் பலிகொடுக்கவும் நேரிட்டது.

பலரும் காந்தியை இந்து மதவாதி, வருணாசிரமத்தை ஏற்றவர் எனச் சொல்வார்கள். காந்தி, தான் ஒரு இந்து எனச் சொல்லிக் கொண்டவர். சாகும்போதுகூட ‘ஹே ராம்’ எனச் சொல்லி மாண்டவர். ஆனால் அவர் எந்நாளுமே இந்து மதம் ஒன்றே சிறந்த மதம் என்றோ, இந்த நாடு இந்து மதத்திற்கு மட்டுமே உரியது என்றோ சொன்னதில்லை. இந்த தேசத்தை அவர் மொழி, மதம், இனம் என்கிற ஏதோ ஒரு பெரும்பான்மையின் அடிப்படையில் வரையறுக்காமல், பல்வேறு சிறுபான்மையினரின் தொகுதியாக வரையறுத்தார். அந்த வகையில் அவர் உலக அளவில் ஒரு முன் மாதிரியாகத் திகழ்ந்தார். அவரது தேசியம் territorial nationalism. .அது புவி இயலை அடிப்படையாகக் கொண்டது. இந்த நாட்டு எல்லைக்குள் பிறந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் இந்நாட்டுக்குரியவர்கள் என்றார்.

அவர் இந்து மதவாதியாக இருந்திருந்தால் ஏன் இந்து ராஷ்டிரத்தை முன்மொழிந்தவர்கள் அவரைச் சுட்டுக் கொன்றார்கள்? அவர் வருணாசிரமத்தை முன்மொழிந்தவர் என்றால், ஏன் மடாதிபதிகள் ‘ஆரிய தர்மம்’ என்றொரு பத்திரிக்கை நடத்தி அதில் “கலி யுகத்தில் வருண சம்ஹாரம், அதாவது வருணாசிரமத்தை ஒழிக்க வந்தவர் காந்தி” என்று பிரச்சாரம் செய்தார்கள்?

அவரது தீண்டாமை ஒழிப்பு முயற்சிகளைக் கேலி செய்வதிலும் எனக்கு உடன்பாடில்லை. தீண்டாமைக்கு உட்பட்டவர்களை ஒருங்கு திரட்டிப் போராடவைப்பது என்பது ஒரு வழிமுறை. தீண்டாமைக்குக் காரணமானவர்களையே அதற்கு எதிராகப் பேச வைப்பது என்பது இன்னொரு முயற்சி. காந்தி இரண்டாவது வழி முறையைத் தெர்வு செய்தார். இருசாரரும் ஒரே காரணத்திற்காக இரு வேறு மக்கள் தொகுதிகளை நோக்கிப் பேசினார்கள். எனவே இருவர் மொழியும் ஒரே மாதிரியாக இருக்கும் என நாம் எதிர் பார்க்க இயலாது.

காந்தியை வெறுப்பதற்கோ, இல்லை கணக்கிலெடுப்பதற்கோ முன் அவரைப் படிப்போம். அவரது எழுத்துக்களும் பேச்சுக்களும் 99 தொகுதிகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன, உலகப் பெரும் அறிஞர்கள் பலரும் அவரது வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளனர், சுமார் 1000 வாழ்க்கை வரலாற்று நூல்கள் அவருக்கு உண்டு.

3. சமூக வலைத் தளங்கள்

நானெல்லாம் கல்லூரியில் படிக்கும்போது செய்தி ஊடகம்னா, அது அச்சு ஊடகந்தான். அப்புறம் தொலைக்காட்சி சேர்ந்து கொண்டது. ஒவ்வொரு தொலைக்காட்சியும் இப்போது ஒன்று அல்லது இரண்டு செய்தித் தொலைகாட்சிகளை நடத்துகின்றன. உடனுக்குடன் போட்டி போட்டுக் கொண்டு செய்திகள் ஊரெங்கும் பரவி விடுகின்றன. காட்சி ஊடகங்கள் இப்படி உடனுக்குடன் செய்திகளைச் சொல்லி விடுவதால், அடுத்த நாள் காலை வரும் நாளிதழ்கள் வெறுமனே செய்திகளை மட்டும் சொல்லாமல் அது தொடர்பான வேறு முக்கிய தகவல்களையும் சேகரித்துத் தர வேண்டியவையாக மாறியுள்ளன. ஊடகங்களுக்குள் உள்ள போட்டியால் செய்திகள் குறித்து விவாதங்கள் நடத்துதல், அது தொடர்பான வல்லுனர்கள் மற்றும் மாற்றுக் கருத்துடையவர்களின் கருத்துக்களை எல்லாம் கேட்டு முன்வைத்தல் என்பதெல்லாம் இன்று நடைமுறைக்கு வந்துள்ளன. செய்திப் பத்திரிக்கைகள் வண்ணப் படங்களோடு நம்ப இயலாத அளவிற்குக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இவை எல்லாம் இன்று செய்திப் பரவலில் வரவேற்கத் தக்க ஒரு சனநாயக மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள இன்னொரு புதிய மாற்றம் இந்த ஃபேஸ்புக், ட்விட்டர் முதலான சமூக வலைத் தளங்கள். இது செய்திப் பரவலில் ஏற்பட்டுள்ள இன்னொரு பெரிய புரட்சி. பழைய ஊடகங்களில், அதாவது அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் முன்தணிக்கை சாத்தியம். இவற்றை உரிமையாகக் கொண்டுள்ள பெரு முதலாளிகளின் அரசின் கருத்துக்களுடன் பெரிய அளவில் மாறுபடுவதில்லை. எனவே அரசுக்கும் கார்பொரேட் நலன்களுக்கும் உவப்பாக இல்லாத செய்திகள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்தப் புதிய ஊடகங்களும்கூட பெரும் பன்னாட்டுக் கார்பொரேட்களின் கையில்தான் உள்ளன என்ற போதிலும், இந்தப் புதிய தொழில் நுட்பத்தின் தன்மை முன்தணிக்கையைச் சாத்தியமில்லாமல் செய்து விடுகிறது. எனவே இதில் பங்கு பெறுபவர்கள் மிகவும் சுதந்திரமாகத் தம் கருத்துக்களை எந்தத் தடையும் இன்றி உடனுக்குடன் பதிவேற்றம் செய்து, அது அடுத்த கணமே உலகெங்கிலுமுள்ள பார்வையாளர்களுக்குக் காணக் கிடைக்கிறது. எழுதுபவர்கள் உடனடி எதிர்வினையையும் பெறமுடிகிறது.

மிகவும் பொறுப்புடனும், அரசியல் கூர்மையுடனும் பயன்படுத்தினால் வலிமை வாய்ந்த சர்வாதிகாரிகளையே இந்த ஊடகங்களின் துணையோடு வீழ்த்திவிட முடியும் என்பதற்கு சமீபத்திய அரபுலகப் புரட்சிகள் ஒரு உதாரணமாகத் திகழ்கின்றன. துனீசியாவிலும் எகிப்திலும் இருபது முப்பதாண்டுகாலம் கொடுங்கோல்ஆட்சி நடத்திய சர்வாதிகாரிகள் தூக்கி எறியப்பட்டு சனநாயகம் தழைத்ததில் முக நூலுக்கு ஒரு முக்கிய பங்குண்டு..

தமிழிலும் கூட கூடங்குளம், முல்லைப் பெரியாறு முதலான பிரச்சினைகளில் முகநூல் கருத்துப் பிரச்சாரத்திற்குப் பெரிய அளவில் படன்பட்டுள்ளது. குறிப்பாகக் கூடங்குளம் பிரச்சினையில் அனைத்துப் பெரிய அரசியல் கட்சிகளும் அணு உலைக்கு ஆதரவான ஒரு நிலையை எடுத்திருந்த சூழலில் இடிந்தகரை மீனவ மக்களின் போராட்டத்தை வெளி உலகிற்குக் கொன்டு வருவதில் முகநூல் முக்கிய பங்காற்றியது.

எனினும் முன்தணிக்கை இல்லாத சூழலில் எழுதுபவர்களுக்குப் பொறுப்பு அதிகமாகிறது. குறிப்பாக அவதூறுகள் பேசுவது, வெட்டி அரட்டை அடிப்பது, மாறுபட்ட கருத்துக்களை எதிர்கொள்ள இயலாதபோது எந்த ஆதாரமும் இன்றி பொய்க் குற்றச் சாட்டுகளை முன்வைப்பது என்பதெல்லாம் தமிழ்ச் சூழலில் அதிகமாகக் காணப்படுகிறது. பெண்களாயின் பாலியல் ரீதியாகச் சீண்டுவது, அவதூறு செய்வது என்பதும் இங்கு அதிகம். பாடகி சின்மயி விவகாரத்தில் இது கூர்மையாக வெளிப்பட்டது. பொறுப்பற்ற முறையில் கருத்துச் சொல்வதற்குச் சின்மயி ஒரு எடுத்துக்காட்டு என்றால், அதை ஒட்டி அவதூறு செய்து துன்புறுத்தியதற்கு அவரை எதிர்த்தவர்கள் உதாரணமானார்கள்.

பொறுப்புடனும் அற உணர்வுடன் கூடிய சுய தணிக்கையுடனும் செயல்பட்டால் இந்தச் சமூக வலைத் தளங்கள் எதிர்காலத்தில் சமூகமாற்றத்தில் முக்கிய பங்காற்ற வாய்ப்புண்டு.

4. ஈழ அகதி முகாம்கள்

தமிழகத்தில் உள்ள நம் எல்லோருக்கும் ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் ஒரு உணர்வு பூர்வமான அக்கறை உள்ளது. கண்முன் நடந்த மனித உரிமை மீறல்களையும், போர்க் கொடுமைகளையும் நம்மால் தடுத்து நிறுத்த முடியவில்லையே என்கிற ஏக்கமும் இருக்கிறது. போர்ச் சூழலில் வாழ இயலாத நம் ஈழத் தமிழர்கள் இன்று உலகெங்கிலும் அகதிகளாகத் திரிகின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் இன்றும் சுமார் ஒரு லட்சம் அகதிகள் இருக்கிறார்கள். இவர்களில் சுமார் 68,500 பேர் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் 111 அகதி முகாம்களில் வாழ்கிறார்கள். 26 மாவட்டங்களில் இந்த அகதி முகாம்கள் பரவிக் கிடக்கின்றன.

உங்கள் ஊருக்கு அருகிலும் கூட எங்காவது ஈழ அகதி முகாம் இருக்கும். எப்போதாவது அதற்குள் போய் பார்த்திருக்கிறீர்களா? ஒருமுறை போய்ப் பாருங்கள். எவ்வளவு மோசமான நிலையில் , வாழத் தகுதியற்ற சூழலில் வாழ்ந்து கொண்டுள்ளார்கள் என்பது தெரியும். 1983 யூலை கலவரம் தொடங்கி ஈழத் தமிழர்கள் இங்கே அகதிகளாக வந்து கொண்டே இந்தார்கள். .

வருகிறவர்களுக்கு முகாம்கள் அமைத்து 10க்குப் 10 என்கிற அளவில் இடம் ஒதுக்கிக் கொடுத்தது தமிழக அரசு. கூரைக்குத் தார்ப்பாய் அட்டை, அல்லது டின் ஷீட்டும், மிகச் சில இடங்களில் ஓடுகளும் தரப்பட்டன. இதச் சிறிய வீட்டில் ஒரு குடும்பம் வசிக்க முடியாது என்பதால் அவர்களாகவே சார்ப்பு இழுத்துக் கொஞ்சம் பெரிதாக்கி வாழ்கிறார்கள். சுனாமி, புயல் மழையால் பாதிக்கப்படும்போது மறுபடி இந்தப் பத்துக்குப் பத்து அளவில்தான் தகரக் கூறைகள் தருகிறார்கள். இழுத்துக் கட்டிய இடங்கள் கூரையின்றிக் காட்சி அளிக்கின்றன. வெயில் காலங்களில் தகரக் கூரைக்குள் உட்கார இயலாது. மழைகாலத்தில் சேரும் சகதியும் முகாம்களுக்குள் நடமாட இயலாது. கழிப்பிடம், போதிய குடி நீர். இடுகாடு முதலான வசதிகளும் படு மோசம்.

இன்னொரு பக்கம் இன்னும் ஈழ அகதிகள் சந்தேகத்திற்குரிய குற்றவாளிகளைப் போலவே நடத்தப்படுகின்றனர். ‘கியூ’ பிரிவு போலீசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இம்முகாம்களில் வசிப்போர் மாலை 6 மணிக்குள் முக்காம்களுக்குத் திரும்ப வேண்டும். வெளியூர் முகாம்களில் உள்ள உறவினர்களைப் பார்க்கப் போக வேண்டுமானால் அனுமதி பெற்றுப் போய், குறித்த நாளில் திரும்ப வேண்டும். அருகிலுள்ள ஊர்களுக்கு யாரேனும் அரசியல் தலைவர்கள் வந்தால் அன்று பூராவும் முகாம்களை விட்டு யாரும் வெளியேறக்கூடாது.

இவர்களுக்குக் குறைந்த பட்ச மாதாந்திர உதவித் தொகை, மாநிய விலையில் அரிசி சர்க்கரை முதலியன கொடுக்கப்பட்டபோதும் நமது நாட்டுச் சட்டத்தின்படி இவர்கள் “சட்ட விரோதமாக உள்ளே நுழைந்தவர்களாகவே” (Illegal Immigrants) கருதப் படுகிறார்கள். சர்வதேச அளவில் அகதிகளிக்கு அளிக்கப்படும் உரிமைகள் இவர்களுக்குக் கிடையாது. ஏனெனில் ஐ. நா அவையின் 1951ம் ஆண்டு அகதிகள் குறித்த உடன்பாடு, 1987ம் ஆண்டு விருப்ப ஒப்பந்தம் ஆகியவற்றில் இந்தியா இதுவரை கையெழுத்திடவில்லை. அதனால்தான் இந்திய அரசு ஒரு இலட்சம் ஈழ அகதிகளை ராஜீவ் கொலையை ஒட்டி வெளியேற்றியபோது ஐ.நா. அகதிகள் ஆணையத்தால் அதைத் தட்டிக் கேட்க இயலவில்லை.

இந்தியாவுக்கு தேசிய அளவிலான ஒரு அகதிகள் கொள்கையும் கிடையாது, அதனால்தான் திபேத்திய அகதிகள் ஒரு விதமாகவும், ஈழ அகதிகள் மோசமாகவும் நடத்தப்படுகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளுக்குத் தப்பிச் சென்ற ஈழ அகதிகளில் பெரும்பாலோருக்கு அந்தந்த நாடுகளில் இன்று குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழ் பேசும் மக்களான அவர்களுக்கு இந்திய அரசு மட்டுந்தான், அவர்கள் வந்து 30 ஆண்டுகள் ஆகியும் குடியுரிமை வழங்க மறுக்கிறது.

அதனால்தான் முகாம்களில் உள்ள இளைஞர்கள் வெளிநாடுகளுக்கு ஆள்கடத்துபவர்களுக்கு ஏராளமான பணம் கொடுத்துஉயிரைப் பணையம் வைத்து மீன்பிடிக் கப்பல்களில் ஆஸ்திரேலியா போக முயற்சித்து மாட்டிக் கொள்கிறார்கள். ஈழ மக்கள் பிரச்ச்சினையில் அக்கறை உள்ள நாம் ஈழ அகதிகள் முகாம்களின் நிலை சீர்திருத்தப் படுவது, முக்காம்களில் உள்ளவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை அளிப்பது, அகதிகள் ஒப்பந்தங்களில் இந்திய அரசு கையெழுத்திட வேண்டுவது ஆகியவற்றிற்காக அழுத்தம் கொடுக்க வேண்டும்.

5. மனித உரிமை மீறல்கள்

குடிமக்களின் அடிப்படை உரிமைகளைப் பொருத்த வரையில் நம்முடைய நாட்டு அரசியல் சட்டம் ஓரளவு வரவேற்கத்தக்கதாகவே உள்ளது. 1948ம் ஆண்டு உலகளாவியமனித உரிமைப் பிரகடனம் வெளியிடப்பட்ட பின்பு இயற்றப்பட்டதும், அம்பேத்கர் போன்றோர் அதை எழுதுமிடத்தில் இருந்ததும் இதற்குக் காரணங்களாக அமைகின்றன. ஆனால் நிறைவேற்றுச் சட்டங்களாக உள்ள இந்தியக் குற்றவியல் சட்டம், இந்திய போலீஸ் சட்டம் முதலியன காலனிய ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டவை. நமது அரசியல் சட்டத்தின் தொனிக்குத் தக்கவாறு அவை இன்றுவரை மாற்றி அமைக்கப்படவில்லை. தவிரவும் அரசியல் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளை மறுக்கும் வகையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம் முதலான கருப்புச் சட்டங்களை இயற்றிக் கைவசம் வைத்துக்கொண்டு அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை அரசுகள் கேலிக் கூத்தாக்குகின்றன..

நமது மனித உரிமை ஆணையங்களுக்கு வருகிற புகார்களில் 80 சதத்திற்கும் மேற்பட்டவை காவல் துறை அத்து மீறல்கள் பற்றியவைதான். கூட்டங்கூடுவது, அமைப்பாவது, தமது கொள்கைகளைப் பிரச்சாரம் செய்வது, அரசு நடவடிக்கைகளை விமர்சிப்பது என்பதெல்லாம் நமது சட்டபூர்வமான உரிமைகள் என்றபோதிலும், பல நேரங்களில் இந்தக் காரணங்களுக்காகவே மக்கள் கைது செய்யப்பட்டுத் தண்டிக்கப்படுகிறார்கள். சென்றமாதத்தில் கூட வெளிப்படையாக இயங்கிக் கொண்டிருந்த ஒரு இயக்கத்தினரும், கூடங்குளத்திற்கு உண்மை அறியச் சென்ற ஒரு குழுவினரும் தமிழக அரசால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தியா முழுவதும் இப்படிஆயிரக்கணக்கானோர் அரசியல் காரணங்களுக்காகத் தினந்தோறும் சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

சித்திரவதைகளுக்கு எதிரான ஐ. நா உடன்பாடு முதலிய பல சர்வதேச மனித உரிமை உடன்பாடுகளில் இந்திய அரசு இதுவரை கையெழுத்திடவில்ல. அதேபோல உலகத்தில் 130 நாடுகளுக்கும் மேலாக மரண தண்டனைஅயை ரத்து செய்துள்ள போதிலும் இந்திய அரசு இன்னும் அதைக் கைவிடவில்லை.

காவல்நிலையச் சித்திரவதைகள், சிறைச்சாலை அத்துமீறல்கள், கைது செய்து கொண்டுபோய் சுட்டுத்தள்ளி என்கவுண்டரில் கொன்றதாகப் பொய் சொல்லுதல் என்பதெல்லாம் இந்தியாவில் மட்டுமே உண்டு. 50 என்கவுன்டர் செய்தவன், 100 என்கவுன்டர் செய்தவன் என்றெல்லாம் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டுகளின் ஆல்பம் ஒன்றை அவுட்லுக் இதழ் ஒருமுறை வெளியிட்டிருந்தது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இவர்களில் பலர் இன்று காசு வாங்கிக் கொண்டு என்கவுண்டர் பண்ணியதற்காகவும்ம், போலி என்கவுண்டர்களுக்காகவும் சிறையில் உள்ளனர், ராஜ்குமார் பாண்டியன், வன்சாரா என்கிற இரு ஐ.பி.எஸ் அதிகாரிகளும் இவர்களில் அடக்கம். என்கவுன்டர் கொலைகளுக்குப் பெயர்பெற்ற இன்னொரு மாநிலம் நம்முடைய தமிழ்நாடு.

அரசு மற்றும் காவல்துறையின் இத்தகைய மீறல்கள் தவிர சாதி, மதம், ஆணாதிக்கம் ஆகியவற்றின் அடிப்படையிலும் பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்றன. இதனால் தலித்கள், சிறுபான்மையோர், அதிலும் குறிப்பாக முஸ்லிம்கள், அப்புறம் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

இத்தகைய மனித உரிமை மீறல்களை வெளிக் கொணரும் பணி பெரிய அளவில் பாராட்டுக்குரியதாக அமைவதில்லை. சமூக விரோதிகளுக்காகவும், தீவீரவாதிகளுக்காகவும் வக்காலத்து வாங்குகிறோம் என்கிற அவப்பெயரையும் சில நேரங்களில் சுமக்க வேண்டி வரும். அரசு, காவல்துறை, அதிகார வர்க்கம், சமூக ஆதிக்க சக்திகள் ஆகியோரின் பகையைச் சம்பாதித்துக் கொள்ளும் பணி என்பது மட்டுமல்ல, அதிகம் உழைப்பையும், அலைச்சலையும், செலவையும் கோரும் பணி இது. எங்களைப் போன்றோர் வெளி நிதி உதவிகளைச் சார்ந்திராமல் சொந்தச் செலவிலேயே இதைச் செய்கிறோம். சந்தேகத்திற்கிடமில்லாத உண்மைகளையே மக்கள் முன் வைக்கிறோம். பாதிக்கப்பட்டவர்களின் சார்பாகத்தான் போகிறோம் என்றாலும் அதற்காக எந்த உண்மையையும் மிகைப்படுத்துவதோ குறைத்துச் சொல்வதோ கிடையாது. ஒரு மனித உரிமைப் பணியாளரின் ஒரே சொத்து அவர் சம்பாதிக்கும் credibility,நம்பிக்கைத் தன்மைதான். இவர்கள் சொன்னால் அது உண்மையாகத்தான் இருக்கும் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில்தான் எங்கள் பணி அமைகிறது.

6. இராமர் சேது பாலம்

சென்ற இரண்டு வாரங்களுக்கு முன் உச்ச நீதி மன்றத்தின் முன் தமிழக அரசு சேது சமுத்திரத் திட்டம் சாத்தியமில்லை எனத் தன் கருத்தைத் தெரிவித்துள்ளது. இது நாள் வரையிலான தமிழக அரசின் அணுகல்முறைக்கு இது நேர் எதிரானது, இதை எதிர்க் கட்சிகள் எதிர்த்துள்ளன.

‘ஆடம் பாலம்’ என இதுநாள்வரை சொல்லிவந்த ஜெயலலிதா, இந்த அறிக்கையில் அதை ‘இராமர் சேது’ பாலம் எனச் சொல்லியிருப்பதைக் கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார். முன்னதாக ஜெயலலிதா இராமர் சேதுவை ஒரு தேசிய மரபுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என பிரதமரைச் சந்த்தித்துக் கோரிக்கை வைத்ததும் நினைவுக்கு வருகிறது.

இரண்டாண்டுகளுக்கு முன் நான் வாசித்த ஒரு நூல் எனக்கு நினைவுக்கு வருகிறது. இதை எழுதியவர் பரமசிவ ஐயர். மறைந்த மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் ஏ.பாலசுப்பிரமணியத்தின் சித்தப்பா இவர். மிகவும் ஆசாரமான வைணவக் குடும்பத்தில் பிறந்த பரமசிவர் வால்மீகி இராமயணத்தை எழுத்தெண்ணிப் படித்தவர். அவரது சகோதரர் நீதிபதி சர். சதாசிவ ஐயர் வால்மீகி இராமயணத்தைப் பாராயணம் செய்தவர்.

வால்மீகி இராமயணத்தின் பால காண்டமும் சுந்தர காண்டமும் காவியத் தன்மையில் எழுதப்பட்டுள்ளதாகக் கருதும் பரமசிவர், அயோத்தியா, ஆரண்யா மற்றும் கிஷ்கிந்தா காண்டங்கள் அக்கால வரலாற்றைச் சொல்பவை என்கிறார்.

1934ம் ஆண்டு இலங்கை சென்று வந்த இரவீந்திரநாத் தாகூர் சென்னையில் பேசும்போது, சீதையை இராவணன் ஏன்கிற இராட்சசன் கடத்திவந்து சிறை வைத்தது உங்கள் ஊரில்தான் எனத் தான் இலங்கையில் பேசியதாகக் குறிப்பிட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார் பராம்சிவர். இதேபோல இராஜாஜியும் பிறிதொரு சந்தர்ப்பத்தில் பேசியதைக் கண்டு மனம் நொந்து போன பரமசிவர், இது போன்ற தவறான நம்பிக்கையின் அடிப்படையில் வரலாற்றை முன்வைப்பது சமகால அரசியல் பகைகளை உருவாக்கும் எனக் கருதி அடுத்த ஐந்தாண்டுகள், தன் வேலையை விட்டுவிட்டு வால்மீகி இராமயண ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்.

சிவசமுத்திர நீர்மின் திட்டத்தில் உதவியாளராகப் பணியாற்றிய அனுபவம் மிக்க பரமசிவருக்கு ஆங்கிலேய அரசு அன்று வெளியிட்டிருந்த புவியியல் நுண் விளக்க வரைபடம் ‘coloured mile to inch topograph’ பெரிதும் உதவியது. வால்மீகி குறிப்பிடும் தமஸா, கோமதி, சயந்திகா, ஸ்றின்ங்கவேரபுரம் முதலிய பகுதிகள் இன்றும் கங்கையின் வடகரைப் பகுதியில் டோன்ஸ், கும்தி, சாய், சிங்ரார் என்ற பெயர்களில் அழைக்கப்படுவதைச் சுட்டிக் காட்டுகிறார். வாவ்மீகியில் காணப்படும் அத்தனை ஊர்களையும் இலங்கை உட்பட அவர் அடையாளம் காண்கிறார். சித்ரகூடமலை, அத்ரியின் ஆசிரமம், விராடன் புதையுண்ட குழி, தாண்டவ வனம் எல்லாவற்றையும் தற்போது அவை எங்குள்ளன எனச் சுட்டிக்காட்டுகிறார். இன்றும் மத்திய மாகாணங்களில் ‘இராவண வம்சிகள்’ என அழைக்க்கப்படும் கோண்டுப் பழங்குடியினர்தான் இராட்சதர்கள் எனவும் முண்டா மொழி பேசும் கோர்க்கர்களே வால்மீகி குறிப்பிடும் வானரர்கள் என்பதையும் நிறுவுகிறார்.

ஆறுகளுக்க்கு இடைப்பட்ட மணற் திட்டுகளை ‘லங்கா’ என அழைக்கும் மரபைச் சுட்டிக்காட்டும் பரமசிவர் இராவணன் சீதையைக் கழுதை பூட்டிய வண்டியில் கடத்திச் சென்றான் எனவும், அனுமன் நீந்திச் சென்றான் எனவும், இராமன் பாலம் அமைத்துப் படைகளுடன் கடந்தான் எனவும் வால்மீகி சொல்வதைச் சுட்டிகாட்டுவார், திரிகூடம் என்பது இந்திரான மலை, அதைச் சுற்றி ஓடும் கிரண் நதி பனகர், சிங்கள் தீபம் மற்றும் மசோலி சாலையில் ஒரு ஏரியைப்போலத் தோற்றமளிக்கும். அதுதான் லங்கா என அறிவியல் பூர்வமாக நிறுவுகிறார். வால்மீகியின் லங்காவை இன்றைய சிங்களத் தீவுடன் ஒப்பிடும் வழமை பத்தாம் நூற்றாண்டுக்குப் பின்பே வந்தது என்பதைச் சுட்டிகாட்டும் பரமசிவர் இராமன் எந்நாளும் விந்தியமலையக் கடந்ததில்லை என்கிறார். பண்டைய வரலாற்றைத் திரித்து இன்றைய அரசியலுக்குப் பயன்படுத்துவது குறித்த அறிஞர் பரமசிவரின் கருத்துக்களைப் படித்துக் கொண்டிருந்தபோது என் கண்களில் நீர் கசிந்ததை என்னால் தடுக்க இயலவில்லை.

7. கூடங்குளப் போராட்டம்

கூடங்குளத்தில் தொடர்ந்து 144 தடை உத்தரவு விதித்திருப்பது, பெரிய அளவில் போலீசைக் குவித்து வீடுகளைச் சூறையாடியது, துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரைக் கொன்றது ஆகியவை குறித்து நீதி விசாரணை வேண்டும் எனவும், போலீஸ் அடக்குமுறையை நிறுத்த வேண்டும் எனவும் நான் தொடுத்திருந்த வழக்கை இரண்டு நாட்களுக்கு முன் மதுரை உயர் நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்தது.

அரசு கொள்கைகள் பற்றிய பொது விவாதம் என்பது ஜனநாயகத்தின் ஒரு முக்கிய பண்பு எனக் கூறியுள்ள நீதிமன்றம், அதற்காக மக்கள் தங்கள் இஷ்டத்திற்குப் பிரச்சினைகளைக் கையில் எடுத்துக்கொள்ள அனுமதிக்க இயலாது எனக் கூறியுள்ளது. கூடங்குளம் மக்கள் போராட்டம் அந்த வகையில் கண்டிக்கத் தக்கது எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

கூடங்குளம் போராட்டம் கடந்த ஓராண்டுக்கும் மேலமாக மிகவும் அமைதியான முறையில் நடைபெற்று வாருகிறது. இதுவரை நான்கு முறை நாங்கள் அங்கு சென்று வந்துள்ளோம். தங்கள் அச்சத்தைப் போக்கும் வகையில் அரசும் வல்லுனர்களும் தங்களை நேரில் சந்தித்துப் பேச வேண்டும், அது வரை உலையை இயக்கக் கூடாது என்பது அவர்களின் முக்கிய கோரிக்கை. ஆனால் நீதிமன்றம் சொல்லியுள்ளதைப் போல மக்கள் பங்கேற்கிற பொது விவாதம் ஒன்றை அரசு நடத்தவில்லை என்பதுதான் உண்மை. அரசு நியமித்த வல்லுனர் குழுக்களில் பொதுவானவர்கள் யாரும் இல்லை. அரசு கொள்கைகளை ஆதரிப்பவர்கள் மட்டுமே இருந்தனர். அவர்கள் மக்களைச் சந்திப்பதைத் தவிர்த்தனர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்கூட அவசரமாக வந்து அவசர “ஆய்வொன்றைச்” செய்து. கவனமாக மக்களைச் சந்திப்பதைத் தவிர்த்து, கூடங்குளம் பாதுகாப்பானது என அறிக்கை அளித்துச் சென்றார்.

சுற்றுச் சூழல் பாதிப்பு தொடர்பான அறிக்கை, உலைப் பாதுகாப்பு அறிக்கை, உலை அமைக்கப்பட்டுள்ள இடம் குறித்த மதிப்பீட்டு அறிக்கை முதலியவை இது நாள் வரை மக்களின் கண்களுக்குக் காட்டப்படவில்லை. போராட்டக் குழுவினர் தொகுத்து முன்வைத்த கேள்விகளில் பலவற்றிற்கும் இன்று வரை பதிலில்லை. போராட்டக் குழுவினர் அமைத்த வல்லுனர்குழு பல அச்சம் விளைவிக்கும் ஆபத்துச் சாத்தியங்களைச் சுட்டிக்காட்டியுள்ளது. அதற்கும் பதிலில்லை.

பேரிடர் ஆபத்துக் காலத்திய பாதுகாப்புப் பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்பது ஒரு முக்கிய நிபந்தனை. அரசு அதையும் கண்டு கொள்ளவில்லை. அடுத்தடுத்துக் கூடங்குளத்தில் கட்டப்படுவதாக உள்ள உலைகளுக்கு இந்திய அமெரிக்க அணு ஒப்பந்ததில் கண்டுள்ளபடி விபத்து இழப்பீட்டுப் பொறுப்பை ரசிய அரசு ஏற்றுக் கொள்ளுமா இல்லையா, பழைய ஒப்பந்தத்தில் இதற்கு இடமுண்டா என்பாது குறித்துப் பிரதமருக்கே பதில் தெரியவில்லை.

இந்நிலையில் மக்கள் அச்சம் கொள்வதையும், போராடுவதையும் எப்படித் தவறெனச் சொல்ல இயலும்? ஜனநாயகத்தில் இரகசியங்களுக்கு இடமில்லை. வெளிப்படைத்தன்மை முக்கியம். ஆனால் பாதுகாப்பு எனக் காரணக்காட்டி அணு ஆற்றல் தொடர்பான எல்லாச் செய்திகளையும் அரசு மக்களிடமிருந்து மறைத்தே வைத்தூள்ளது. அரசியல் சட்ட அவை விவாதத்தின்போது அணு ஆற்றல் தொடர்பான சட்டத்தில் இத்தனை இரகசியம் ஏன்? அமைதி வழியில் பயன்படுத்துவது எனச் சொல்கிறீர்கள் அப்படியானால் ஐரோப்பிய நாடுகளில் உள்ள அளவிற்கு இங்கே வெளிப்படைத் தன்மை இல்லாதது ஏன் என ஒரு உறுப்பினர் திரும்பத் திரும்பக் கேட்டபோது எரிச்சலுற்ற நேரு, “அணு விஷயத்தில் போர்க்காலப் பயன்பாட்டையும் அமைதிக்கான பயன்பாட்டையும் எப்படி வித்தியாசப் படுத்த இயலும்?” என் கேட்டதை நாம் மறந்துவிட இயலாது. ஆமாம் போர்க்காலம், அமைதிக் காலம் என்றெல்லாம் எந்த வேறுபாடும் இல்லை அணு ஆற்றல் விஷயத்தில் இரகசியங்கள் எப்போதுமே ஊழலுக்கு வித்திடும். மிகவும் ஆபத்தான தொழில்நுட்பமான அணு உலை விஷயத்தில் நேரும் ஊழல்கள் பேரழிவை ஏற்படுத்திவிடும்.

1980 களில் பொது நலவழக்குகள் என்பன நமது நீதிமன்றங்களால் ஊக்குவிக்கப்பட்டன. சுற்றுச் சூழல் பாதிப்பு, வளர்ச்சித் திட்டங்களின் அடிப்படையில் மக்கள் வெளியேற்றப்படுதல் முதலான நடவடிக்கைகளில் பல பொதுநல வழக்குகளில் மக்களுக்குச் சாதகமான பல தீர்ப்புகள் வழங்கப்பட்டன. ஆனால் இன்று..

8. எழுத்தாளரின் சமூகப் பொறுப்பு

எழுத்தாளர் அமிதவ் கோஷின் கட்டுரை ஒன்றை இன்று முகநூலில் படித்தேன். ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களில் முக்கியமானவர் அமிதவ் கோஷ். . ஆக்ஸ்ஃபோர்டில் பி.எச்டி முடித்துவிட்டு, டெல்லிப் பல்கலைக் கழகத்தில் ஆசிரியப் பணி செய்து கொண்டிருந்தபோது நடந்த ஒரு சம்பவம் அவரை எழுத்துத் துறைக்கு ஈர்த்துள்ளது.

அது 1984ம் ஆண்டு அக்டோபர் இறுதி, நவம்பர் தொடக்கம். பிரதமர் இந்திரா அவரது மெய்க் காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்படுகிறார். கொன்றவர்கள் சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் புனிதத் தலமான பொற்கோவிலுக்குள் புகுந்து இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையைக் கண்டித்து அவர்கள் இந்திரா காந்தியைக் கொன்றனர். கொன்றவர்கள் சீக்கியர்கள் என்பதால் டெல்லியில் வாழ்ந்த சீக்கியர்கள் மீது மிகப் பெரிய வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அவர்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. வீடுகள் எரிக்கப்பட்டன். டெல்லியில் மட்டும் 2500 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். பிற வட மாநில நகரங்களிலும் பலர் கொல்லப்பட்டனர். காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சிலர் திட்டமிட்டு இதை நடத்தி முடித்தனர். எனினும் கலவரத்தைத் தூண்டியவர்கள் யாரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.

இந்தக் கலவரத்தின் நேரடி சாட்சியாக இருந்த அமிதவ் கோஷ் தனக்கு நேர்ந்த மூன்று அநுபவங்களைச் சொல்கிறார். ஒன்றில் அவர் பயணம் செய்து கொண்டிருந்த பஸ்சில் இருந்த ஒரு சீக்கியரை, தாக்க வந்தவர்களிடமிருந்து பயணிகள் மறைத்துக் காப்பாற்றுகின்றனர். மற்றது ஒரு இந்துக் குடும்பம் ஆபத்து என்று தெரிந்தும் பக்கத்து வீட்டில் வசித்த ஒரு முதிய சீக்கியத் தம்பதியரைக் கொல்ல வந்தவர்களிடமிருந்து காப்பாற்றிய சம்பவம். மூன்றாவதில் கலவரக்காரர்களுக்கு எதிராக முழக்கமிட்டுச் சென்ற அமைதி ஊர்வலத்தில் அவரும் பங்கேற்ற அனுபவம். கலவரக் கும்பல் அவர்களைக் கடும் ஆயுதங்களுடன் கொல்ல வருகிறது. ஊர்வலத்திலிருந்த பெண்கள் ஆண்களைச் சுற்றி வளையமிட்டு நின்றதைக் கண்ட வன்முறையாளர்கள் தயங்கிப் பின் வாங்குகின்றனர்.

18 ஆண்டுகளுக்குப் பின் இதை நினைவுகூறும் அமிதவ் கோஷ்,. ஒரு எழுத்தாளனின் பணி என்ன? எழுதுவதா, இல்லை ஊர்வலத்தில் பங்கு பெறுவதா? அதாவது சமூக அரசியல் செயல்பாடுகளில் பங்கு பெறுவதா? என்கிற கேள்வியை எழுப்பிகிறார். பெரும்பாலானவர்களின் பதில் எழுத்து என்கிற வலிமையான ஆயுதத்தைப் பயன்படுத்துவது மட்டுந்தான் என்பதாகத்தான் இருக்கும். ஆனால் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய அரசு செயலற்றுப் போகும்போதும், அதுவே உரிமைகளைப் பறிக்கும்போதும் எப்படிப் பார்த்துக் கொண்டிருக்க இயலும் என்று கேட்கிறார் அமிதவ்.

பங்குபெறும்போது நமது அனுபவம் விரிவடைகிறது. இது போன்ற பேரழிவுக் கலவரங்கள் வெறும் வன்முறையால் மட்டும் நிரம்பி இருக்கவில்லை. மானுட நேயமும் இன, மத மொழி வேறுபாடுகளைத் தாண்டிய மனித நேயமும் இந்த வன்முறைகளுக்கிடையே ஊடாடி நிற்கின்றன. இந்தக் கலவரங்களளை எழுதுவது என்பது எத்தனை பேர் செத்தார்கள், எப்படியெல்லாம் அந்தப் பேரழிவு நிகழ்ந்தது என விவரிப்பது மட்டுமல்ல. அதை ஒரு தொலைக்காட்சி செய்தி நிகழ்ச்சியே இன்னும் சிறப்பாகச் செய்துவிட முடியும். எழுத்தாளனின் பணி வேறு. இந்த வன்முறையை மட்டுமல்ல, இது போன்ற வன்முறகளின் அர்த்தத்தை, எல்லவற்றினூடாகவும் விகசிக்கும் மாநுடத்தை அது வெளிக் கொணர வேண்டும்.

அத்தகைய அழகியல் ஒன்று இன்று உருப்பெற்றுள்ளதா? இல்லை என்றுதான் தோன்றுகிறது. ஒருவகையான aesthetics of indifference, சமூகப் பிரச்சினைகளிலிருந்து ஒதுங்கிய அழகியல், அல்லது ஒரு வகையான வரட்டுக் கோட்பாட்டுடன் சமூகப் பிரச்சினைகளை அணுகி ஆரசியல் கறார்த்தன்மையை நிலை நாட்டுதல் என்பதுதான் இன்றைய பெரும்பான்மைப் போக்காக இருக்கிறது. இது அத்தனை உவப்பளிக்கக் கூடிய ஒன்றல்ல.

9. அர்விந்த் கெஜ்ரிவால்

கடந்த இரண்டாண்டு காலமாக இந்திய அரசியலை அன்னா ஹஸாரேயும் அர்விந்த் கெஜ்ரிவாலும் கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். முதலில் சகல அதிகாரங்களும் பொருந்திய ஜன்லோக்பால் அமைக்க வேண்டும் எனத் தொடங்கி இப்போது அரசியல் கட்சி என்கிற அளவிற்கு அதிலரொரு பிரிவு வளர்ந்துள்ளது.

கிட்டத்தட்ட நமது முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்துமே இவர்களின் போராட்ட முறையை எதிர்க்கின்றன. பாராளுமன்ற அரசியல் இலக்கணத்திற்கு இத்தகைய நடைமுறை ஒத்துவராது என அறிவுரை பகர்கின்றன.

அன்னா மற்றும் கெஜ்ரிவால் ஆகியோர் முன்நிறுத்துவது “ஊழலை ஒழிப்பது” என்கிற ஒற்றை நிகழ்ச்சி நிரலைத்தான். அதற்கு இந்திய மத்தியதர வர்க்கத்திடம் அமோக ஆதரவு உள்ளது. இந்தக் கோரிக்கைக்கும் கெஜ்ரிவால் போன்றோரின் செயல்பாடுகளுக்கும் இத்தனை பெரிய ஆதரவு உருவானதற்குக் காரணம் என்ன? நமது பாராளுமன்ற அரசியல் கட்சிகள் இந்த அம்சத்தில் தோற்றுப்போனது ஒரு முக்கிய காரணம். எல்லா அரசியல் கட்சிகளும் ஊழலில் சிக்கியுள்ளன. எனவே இவை ஒன்றை ஒன்று எதிர்த்து நிற்பதில் மக்களுக்கு நம்பிக்கையில்லை. பாராளுமன்றத்திற்குள் தீவிரமாக எதிர்த்து நிற்கும் இவர்கள் வெளியே கைகோர்த்துத் திரிகிறார்கள். எல்லோருமே தங்கள் வாரிசுகளை அரசியலில் மேலே கொண்டு வருவது என்பதைத் திட்டமிட்டுச் செய்து கொண்டுள்ளனர். ஒரு கட்சியினர் இன்னொரு கட்சியின் வாரிசு அரசியலையும், வாரிசுகளின் ஊழலையும் பேசுவதில்லை. சமீபத்தில் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வட்ரா மீது கெஜ்ரிவால் சுமத்திய குற்றச்சாட்டு ஓராண்டுக்கு முன்னரே தங்களுக்குத் தெரியும் எனவும், இருந்தாலும் தங்கள் கட்சி அதை மேலுக்குக் கொண்டு வரவேண்டாம் என முடிவெடுத்துவிட்டதாகவும் பா.ஜ.க தலைவர் ஒருவர் கூறியுள்ளதைப் பார்த்திருப்பீர்கள்.

பெரிய அரசியல் கட்சிகள் கைவிடுகிற இது போன்ற பிரச்சினைகளை சிறிய அமைப்புகள் எடுத்து ஒரு ஆர்பாட்டமோ, உண்ணவிரதமோ நடத்தினால்ஆது பெரிதாகக் கண்டுகொள்ளப்படுவதில்லை. பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடுவதுமில்லை. சுருக்கமாகச் சொல்வதானால் நமது பாராளுமன்ற விவாதங்கள், வழக்கமான போராட்ட முறைகள்ஆகியவற்றில் மக்கள் நம்பிக்கை இழக்கத் தொடங்கிவிட்டனர். அன்னா மற்றும் கெஜ்ரிவாலுக்கு உருவாகியுள்ள அமோக ஆதரவு இதைத்தான் காட்டுகிறது.

கெஜ்ரிவால், அன்னா ஆகியோரிடம் உள்ள பிரச்சினை அவர்கள் ஊழல் எதிர்ப்போடு நிறுத்திக் கொள்வது என்பதுதான். ஊழல் ஒரு பிரச்சினைதான். ஆனால் ஊழல் மட்டுமே பிரச்சினை அல்ல. இன்றைய மெகா ஊழல்களெல்லாம் இந்தியச் சந்தை உலக கார்பொரேட்களுக்குத் திறந்துவிடப்பட்ட பின்பு உருவானவை என்பதை நாம் மறந்து விடக் கூடாது. இத்தகைய பெரும் கார்பொரேட்களின் நிதி உதவியுடன் இயங்கும் தொண்டு நிறுவனங்களுடன் தொடர்புடையவர்கள்தான் கெஜ்ரிவால் போன்றோர். இன்றைய ஊழல், விலைவாசி ஏற்றம் ஆகியவற்றுக்குக் காரணமான அரசின் பொருளாதாரக் கொள்கைகளை இவர்கள் விமர்சிப்பதில்லை.

அதேபோல இங்குள்ள தீண்டாமைக் கொடுமை, மதவாதம், தலித் மர்றும் பழங்குடி மக்களின் பிரச்சினைகள், காவல்துறை அத்துமீறல்கள் இவை குறித்தும் இவர்கள் பேசுவதில்லை. வளர்ச்சித் திட்டங்களின் பெயரால் மக்கள் வெளியேற்றப்படுதல், குடிசை மக்கள் ஊரை விட்டு விரட்டப்படுதல், நாளுக்கு நாள் தொழிலாளர் உரிமைகள் பறிக்கப்படுதல், விவசாயிகள் தற்கொலை முதலியன குறித்தும் இவர்கள் கண்டுகொள்வதில்லை. அதனால்தான் இவர்களுக்கான ஆதரவு மத்திய தர வர்க்கத்தோடு நின்றுபோய் விடுகிறது. மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைப் பேசுவோருக்கு கெஜ்ரிவால் அரசியலை ஏற்றுக் கொள்ள இயலாமல் போய்விடுகிறது.

10. நபிகள் நாயகம்

அமெரிக்கத் திரைப்படம் ஒன்றை எதிர்த்து உலகெங்கிலுமுள்ள முஸ்லிம்கள் போராட்டம் நடத்தியதை நாம் அறிவோம். இந்தியாவிலும், குறிப்பாகத் தமிழகத்திலும் பெரிய அளவில் இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன. மேலோட்டமாகப் பார்க்கும்போது ஒரு திரைப்படத்திற்கு எதிராக இத்தனை எதிர்ப்பு தேவைதானா எனத் தோன்றலாம். ஆனால் மேலை நாடுகளின் வரலாற்றில் தொடர்ந்து இஸ்லாம் மதமும், அவர்கள் இறுதி இறைத்தூதராக ஏற்றுக்கொண்டுள்ள நபிகள் நாயகமும் இழிவு செய்யப்பட்ட வரலாற்றைப் பார்க்கும்போதுதான் இன்று முஸ்லிம்கள் இவ்வாறு கொதித்தெழுந்ததைப் புரிந்து கொள்ள இயலும்..

மகாகவி தாந்தேயிலிருந்து வரலாற்றாசிரியர் எட்வர்ட் கிப்பன் வரை நபிகளை இழித்துரைத்துள்ளனர். உருவ வணக்கத்தை முஸ்லிம்கள் ஏற்பதில்லை என்றபோதிலும் வேண்டுமென்றே நபிகளைக் கேலிச் சித்திரம் வரைவது என்றெல்லாம் அவ்வப்போது அவர்களின் ஆத்திரத்தைத் தூண்டி வருகின்றனர், கிறிஸ்து தோன்றி ஆறு நூற்றாண்டுகளுக்குப் பின் உருவான இஸ்லாம் மிக வேகமாக உலகம் முழுவதும் பரவி கிறிஸ்தவ விரிவாக்கத்திற்கு மிகப் பெரிய சவாலாக அமைந்தது. இன்றளவும் அதை ஒரு வெல்ல இயலாத மதமாகவே மேலை நாகரிகம் கருதுகிறது. அதன் விளைவுதான் அவ்வப்போது இப்படி அதைச் சீண்டிப் பார்ப்பது.

தவிரவும் கடந்த இருபது ஆண்டுகளில் அமெரிக்கா தனது ஆதரவு நாடுகளின் துணையோடு ஆப்கானிஸ்தான், ஈராக் முதலான நாடுகளின்மீது பொய்யான காரணங்களைச் சொல்லி மேற்கொண்ட படைஎடுப்புகளும், ஏற்படுத்திய அரசியல் குழப்பங்களும் உலக முஸ்லிம்கள் மத்தியில் தீராத வருத்தத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பின்னணீயில்தான் இன்று நபிகள் நாயகத்தை இழிவு செய்து எடுக்கப்பட்ட அந்தத் திரைப்படதிற்கான எதிர்ப்பு அமெரிக்க எதிர்ப்பாகவும் வெளிப்பட்டதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

இந்தியச் சூழலிலும் பாபர் மசூதி இடிப்பை ஒட்டி ஒரு இஸ்லாமிய வெறுப்பு அரசியல் கட்டவிழ்க்கப்பட்டபோது இஸ்லாத்தையும் நபிகள் நாயகத்தையும் புரிந்து கொள்ளும் நோக்கில் நான் ஒரு நூலை எழுதினேன். ஒவ்வொரு மதத்திலும் இறைவன் என்கிற கருத்திற்கு அப்பால் மத முன்னோடிகள் புனிதர்களாகவும் பெரு மதிப்பிற்குரியவர்களாகவும் சில மதங்களில் இறைவனுக்குச் சமமாக வணக்கத்திற்கு உரியவர்களாகவும் கருதப்படுகின்றனர். இறைத்தூதர், இறைமகன், அவதாராம், தீர்த்தங்கரர், போதிசத்துவர் என்றெல்லாம் அந்தந்த மதங்களில் இவர்கள் போற்றப்படுகின்றனர்.

நபிகள் நாயகத்தைப் பொருத்த மட்டில் இறுதி இறைத்தூதராக அவர் கருதப்பட்டபோதும் ஒரு சாதாரண மனிதராக, ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து நாகரிக வளர்ச்சியின்றி ஒரு இருண்ட காலத்தில் வாழ்ந்து கொண்டிருந்த அரபுலகில் ஒரு எழுச்சியை உருவாக்கி அம்மக்களுக்கான ஒரு பேரரசை உருவக்கியவர் அவர்,

அவரது நாற்பதாவது வயது தொடங்கி அவருக்கு இறை வாக்குகள் அருளப்பெற்றன எனவும் அவற்றைச் செயல்படுத்தியதன் வழியாகவே அவர் இதைச் சாதித்தார் எனவும் ஏற்றுக் கொள்வது முஸ்லிம்களின் ஒரு முக்கியமான இறை நம்பிக்கை. இறை வாக்குகள் அருளப் பெற்றது என்பது தவிர வேறு எந்த அற்புதங்களையும் அவர் செய்து காட்டி மக்களை ஈர்த்ததாக அவரது வரலாற்றில் இல்லை. மாறாக ஒரு புரட்சிகரப் போராளியாக, பல்வேறு எதிர்ப்புகளையும், புலப்பெயர்வையும், ஏன் சமயங்களில் தோல்வியையும் கூடச் சந்தித்தவராகவே நாம் அவரைக் காண்கிறோம். ஆவரது திறமை, சாதுரியம், அற நெறிசார்ந்த அணுகல் முறை, போர்த் திறமை ஆகியவற்றினூடாக இறுதி வெற்றியை ஈட்டித் தந்து, எந்த அற்புதங்களுமின்றி மிகச் சாதாராண மனிதரகவே அவர் மரித்துப் போனார்.

இறை மறுப்பாளரான பேரியார் ஈ.வெ.ரா அவர்களையும், மதங்களை ஏற்காத இடதுசாரிகளையும் நபிகளின் வரலாறு ஈர்த்ததற்கான காரணம் அவர் உருவாக்கிய சமூகம் சாதி, இன வேறுபாடுகளற்ற ஒரு சமநிலைச் சமூகமாக இருந்ததுதான். அதனால்தான் இன்றளவும் இந்தியாவில் தோன்றிய மதங்களாயினும், வெளியிலிருந்து வந்த மதங்களாயினும் ஒப்பீட்டளவில் சாதி வேறுபாடுகளைக் கடந்த மதமாக அது உள்ளது.

11.சமண பவுத்த மதங்கள்

மணிமேகலையையும் சிலப்பதிகாரத்தையும் நேற்றிரவு புரட்டிக் கொண்டிருந்தேன். தமிழின் இரட்டைக் கப்பியங்கள் என்று இவற்றைச் சொல்வார்கள். மாதவி, கண்ணகி, மணிமேகலை எனப் பல பாத்திரங்கள் இர்ண்டிலுமே உலவுவர். ஒருவகையில் சிலப்பதிகாராத்திற்குப் பிந்திய கதையைச் சொல்வதாகவும் மணிமேகலையைப் பார்க்கலாம். கோவலன் கொலையுண்டு, கண்ணகி பத்தினித் தெய்வமாகியதற்குப் பிந்திய என்கிற அடிப்படையில் மட்டுமல்ல காப்பியம் விவரிக்கும் நிலப்பரப்பு (landscape), காப்பியத்தின் வாசகப் பரப்பு எல்லாமே மாறுகிறது. அடுத்தக் கட்டத்திற்குச் செல்லுகிறது. புகார், மதுரை வஞ்சி என்கிற நகரக் காட்சிகள் மாறி காப்பியப் பரப்பில் திடீரென காஞ்சி தோன்றுகிறது. கடலை ஒட்டிய வணிகப் பட்டினமான புகார், அதனுடைய செழிப்பு, கோலாகலங்கள் என்பதற்கப்பாலான மிகப்பெரிய தத்துவ விசாரங்கள் நடக்கும் பூமி, intellectual centre ஒன்றும் அத்தகைய விவாதங்களைப் புரிந்து கொள்ளும் ஒரு வாசகத் தளம் ஒன்று உருவாகியுள்ளதையும் நாம் காண்கிறோம்

இரண்டும் சமண, பவுத்த அவைதீக மரபில் தோன்றியவை. கிட்டத்தட்ட தமிழ்க் காப்பியங்கள் எனச் சொல்லப்படும் அத்தனையுமே இம்மரபில் வந்தவைதான். இவ்ற்றில் பவுத்தக் காப்பியங்கள் பலவும் அழிந்து பட்டதுதான் மிகப் பெரிய இழப்பு. இந்த அவைதீக மரபின்றி தமிழில்லை எனச் சொல்லும் அளவிற்கு தமிழ் சமண பவுத்த மரபுகளுடன் இரண்டறக் கலந்துள்ளது.. தமிழுக்கு மட்டுமின்றி இந்தியா முழுமைக்கும் ‘பிராமி’ எழுத்து வடிவத்தைக் கொடை அளித்தது சமணம் அல்லவா? பிராமி என்பவள் ஆதிநாதரின் இரு புதல்வியரில் ஒருத்தி. மற்றவள் ‘எண்களின்’ நாயகி. “எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என்றாரல்லவா சமண மரபில் வந்த திருவள்ளுவர்.

அகம், புறம், திணக் கோட்பாடு என்பன தமிழ் மரபுக்கே உரித்தான ஒரு சிறப்புக் கூறு. காப்பிய மரபின் ஊடாக இந்தத் தமிழ் மரபின் தொடர்ச்சி அறுபட்டு, வடமொழியின் அலங்கார சாத்திர மரபின் தாக்கம் இங்கு ஏற்படுகிறது என்பார்கள். ஆனால் பவுலா ரிச்மான், பார்த்தசாரதி, ஆன்னி மோனியஸ் ஆகிய நவீன ஆய்வாளர்கள் உண்மையில் இவ்விரு காப்பியங்களும் எப்படி அகம், புறம் எனும் திணை மரபின் தொடர்ச்சியாகவே அமைந்துள்ளன் என்பதை நிறுவுகின்றனர், சிலம்பில் எவ்வாறு ஊடல் அல்லது காதற் துரோகக் காட்சிகள் மருதத் திணைப் பின்புலத்திலும், பரத்தையர் பிரிவு என்பது முல்லைத் திணைப் பின்புலத்திலும், இப்படி ஒவ்வொரு கதை நிகழ்வும் அதற்குரிய திணைப் பின்னணியுடன் எவ்வாறு இளங்கோ அடிகளால் அமைக்கப்பட்டுள்ளது என்பதை ஆழ்ந்து வாசிப்போர் உணர முடியும்.

சமண, பவுத்த மரபுகள் அற வாழ்வை வற்புறுத்துபவை. பக்தி மரபு என்பதில் அறத்தை காட்டிலும் பக்தியே முதன்மையான வாழ்வு நெறியாக அமையும். சமண பவுத்தக் காப்பியங்கள் தமது காப்பிய இலக்கணத்தை மீறாமல் இந்த அற வாழ்வை வலியுறுத்தும் பாங்கு குறிப்பிடத்தக்கது.

சிலம்பில் ஒரு காட்சி, சிலம்பை விற்றுப் புது வாழ்வு தொடங்கும் நோக்குடன் கண்ணகியும் கோவலனும் மதுரை நோக்கிச் செல்கின்றனர். புகாருக்கருகிலுள்ள சோமகுண்டம், சூரியகுண்டம் எனும் புனிதக் குளங்களில் நீராடிச் சென்றால் முற்பிறவிச் சாபம் நீங்கும் என்று கண்ணகிக்கு அறிவுரை வழங்கப்படுகிறது. “பீடன்று”, அதாவது எமக்கு அது வழக்கமல்ல எனக் கண்ணகி மறுத்துத் தன் பயணத்தைத் தொடர்வாள். “தீர்த்த மூடம், தெய்வமூடம்” என இத்தகைய செயல்களை சமணம் மறுக்கும்.

தண்டியலங்காரத்தில் வட மரபு தழுவி எண்வகைச் சுவைகள் குறிப்பிடப்படும். ஆனால் வீர சோழியம் என்னும் பவுத்த நூல் ‘சாந்தம்” (அமைதி) என்னும் ஒன்பதாவது சுவையைக் கூடுதலாக இணைக்கும். தமிழ்த் தொல்காப்பிய மரபுடன் பவுத்த மரபு இணைந்து உருவாகியதுதான் பவுத்த இலக்கண நூலான வீரசோழியம். பவுத்த அறத்துடன் கூடிய ஒரு புதிய இலக்கணவியல் பார்வைக்குக் கட்டியங்கூறுகிறது வீர சோழியம்.

12. பெரியார் ஈ.வெ.ரா

தமிழகம் கண்ட ஒரு மாபெரும் சிந்தனையாளர் பெரியார் ஈ.வெ.ரா அவர்கள். நீண்ட காலம் தமிழக அரசியலில் ஒரு தவிர்க்க இயலாத அரசியல் சக்தியாக இருந்த அவர், தனித்துவம் உடைய ஒரு மாபெரும் சிந்தனையாளராகவும் திகழ்ந்தார், அதிகம் படித்திராத அவர் பல்வேறு பிரச்சினைகளிலும் உதிர்த்துள்ள சிந்தனைகள், இத்தகைய துறைகளில் மெத்தப் படித்த வல்லுனர்களின் சிந்தனைகட்கு ஈடானவை, சில நேரங்களில் அவற்றையும் விஞ்சியவை.

பெரியார் என்றவுடன் கடவுள் மறுப்பு, பார்ப்பன எதிர்ப்பு, ஒடுக்கப்பட்ட சாதியினரின் விடுதலை அகியவற்றைப் பற்றிப் பேசியவர், போராடியவர் என்று மட்டுந்தான் யாருக்கும் நினைவுக்கு வரும். ஆனால் பெரியார், “நான் நாத்திகனல்ல,” “ஆத்திகம் சரியா நாத்திகம் சர்ரியா என்பது ஒரு பயனற்ற பிரச்சினை” என்றெல்லாம்பெரியார் சொல்லியுள்ளார் என்றால் பலரும் நம்ப மாட்டார்கள். ஆனால் இப்படிச் சொன்னதன் பொருள் அவர் கடவுளை ஏற்றுக் கொண்டவர் என்பதல்ல. “நான் கடவுள் இல்லை என்பவனும் அல்ல, இருக்கிறவன் என்று சொல்பவனும் அல்ல” என்கிறார் அடுத்த வரியிலேயே. “புராண வேத சாஸ்திரங்களை ஒப்புக் கொள்ளாதவர்களையே பார்ப்பனர் நாத்திகன் என்று குறிப்பிடுகின்றனர்” என்று அதற்கு விளக்கமளிப்பார்.

ஆக, பெரியாரைப் பொருத்த மட்டில் கடவுளை மறுத்தது என்பது உண்மையிலேயே கடவுளை ஆதாரமாக்கி முன்வைக்கப்படுகிற நமது வேத, புராண, இதிகாசக் கருத்துக்களைளை மறுத்ததே. அப்படியென்ன இவற்றின்மீது ஆவருக்கு வெறுப்பு? மனிதர்களை நான்கு வருணங்களாகவும், தீண்டத் தகாதவர்களாகவும் பிரித்து ஒதுக்கி வைத்தற்காகத்தான்.

ஆமாம், அடிப்படையில் அவர் ஒரு சாதி ஒழிப்புப் போராளி. நீ கீழ்சாதி, தீண்டத்தகாதவன் என்பதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையைத்தான் அவர் சுயமரியாதை இல்லாமை என்கிறார். மனிதர்கள் சுய மரியாதை பெறுவதற்கு எதிராக இருப்பதனாலேயே அவர் வேத புராணங்களையும், கடவுள் நம்பிக்கையையும் எதிர்த்தார்.

கடவுள் நம்பிக்கையை மட்டுமல்லஒரு வகையில் கண்மூடித்தனமான எல்லா நம்பிக்கைகளையுமே அவர் எதிர்த்தார். முக்கியமாக தேசபக்தி, மொழிப்பற்று, மதப்பற்று இம் மூன்றும் மனிதர் சுயமரியாதை பெறுவதற்குத் தடையாக உள்ளன என அவர் கருதினார். மேலோட்டமாகப் பார்க்கும் போது இது எப்படிச் சரியாகும் என நமக்குத் தோன்றும். ஆழ்ந்து சிந்தித்தால் உண்மை விளங்கும். தேசம், மொழி, மதம் ஆகியவற்றின் பெயரால் தீண்டாமை, சாதி ஆதிக்கம் ஆகியவற்றை நியாயப்படுத்திவிடும் போக்கைக் கூர்ந்து கவனிப்போர் விளங்கிக் கொள்ள இயலும். முதலில் நாட்டு விடுதலை, அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் இந்த சாதிப் பிரச்சினையை எல்லாம் என இதற்காகப் போராடுபவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் சொல்வதை நாம் பார்த்துள்ளோம்.

இதற்காக அவர் மொழியின் பெயராலும், மதத்தின் பெயராலும் மக்கள் ஒடுக்கப்படுகிறபோது பெரியார் பார்த்துக் கொண்டு இருக்கவில்லை. மிகப் பெரிய இந்தி எதிர்ப்புப் போராளியாகவும் பவுத்தம், இஸ்லாம் போன்ற மதங்களின் ஆதரவாளராகவும் அவர் இருந்ததை நாம் அறிவோம்.

ஆனால் தனித் தமிழ்நாடு, திராவிட நாடு என்றெல்லாம் அவர் பேசினாரே என ஒருவருக்குத் தோன்றலாம். அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் அவர் பிரதமர் இந்திராவை நோக்கிச் சொன்னார்: “இந்த நாட்டில் பிராமண சூத்திர வேறுபாடு இல்லை, சாதி இல்லை. எல்லோரும் சமம் எனச் சட்டம் போடுங்கள் பிரிவினை கோரும் என் போராட்டத்தை நிறுத்திக் கொள்கிறேன்” என்றார்.

பெரியாரின் பெண் விடுதலை தொடர்பான கருத்துக்கள், தேசம், மொழி, இன்னும் பல நம்பிக்கைகள் எல்லாவற்றையும் வெறும் கற்பிதங்கள்தான் என அவர் சொன்னதெல்லாம் மிக மிக நவீனமான சிந்தனைகளுடன் ஒப்பிடத் தக்கவை.

பெரியாரைப் படிப்போம். பின்பற்றுவோம்.

13. சாதி அமைப்புகளும் காதல் திருமணங்களும்

இன்றைய நாளிதழ்களில் தர்மபுரி மாவட்டத்தில் நடைபெற்றுள்ள மிகப் பெரிய சாதிக கலவரம் பற்றிய செய்தி வந்துள்ளது. உண்மையில் இதைச் சாதிக் கலவரம் எனச் சொல்லக் கூடாது. அங்கே இரண்டு சாதிகள் சமமாக மோதிக் கொள்ளவில்லை. மூன்று கிராமங்களிலுள்ள சுமார் 268 தலித் வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளன. வாகனங்கள் எரிக்கப்பட்டு சொத்துக்களும் சூறையாடப்பட்டுள்ளன. தலித்கள் மீதான தாக்குதல் என்றே இதைச் சொல்ல வேண்டும்.

தலித் மக்கள் மீது இப்படியான கொடுந்தாக்குதல் நடத்தப் படுவதற்கு உந்துதலாக இருந்த சம்பவம் என்ன? இளவரசன் என்கிற தலித் பையனும், திவ்யா என்கிற ஒரு மேல் சாதிப் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொண்டுள்ளனர். பெண்ணின் சாதியினர் அவர்களைப் பிரிக்க முயன்று தோற்றுள்ளனர். தன் மகள் இப்படி ஒரு தாழ்ந்த சாதிப் பையனத் திருமணம் செய்து கொண்டதை அவமானமாகக் கருதிய பெண்ணின் அப்பா இரண்டு நாட்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். உடனே வெடித்தது வன்முறை.

இந்த வன்முறை மட்டுமல்ல இது போன்ற பிரச்சினைகளில் காதல் ஜோடிகள் பிரிக்கப்பட்டுக் கவுரவக் கொலைகள் நிகழ்வது, அல்லது அவர்கள் தற்கொலை செய்து கொள்வது என்பதெல்லாம் தமிழகத்தில் இப்போது அதிகமாகியுள்ளன. சில நேரங்களில் அவை இப்படியான வன்முறைகளில் முடிந்து விடுகின்றன.

ஏன் இப்படி நிகழ்கின்றன?

ஒருபக்கம் இன்றைய வாழ்க்கை முறையில் திருமண வயது தள்ளிப் போதல், இருபாலரும் இணந்து கல்வி பயில்வதும் மற்றும் வேலை செய்வதும் அதிகமாகி இருப்பது, செல்போன் மூலம் என்னேரமும் தெரிந்தும் தெரியாமலும் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு அதிகரித்திருப்பது முதலியன காதலித்துத் திருமணங்கள் செய்யும் நிலையை அதிகரித்துள்ளன. இந்தக் காதல் திருமணங்கள் பலவும் சாதிகளைத் தாண்டியதாகத்தான் அமைகின்றன.

ஆனால் அதே நேரத்தில் சாதி மத இறுக்கங்கள் சமூகத்தில் அதிகமாகிக் கொண்டே போகின்றன. சாதிக் கட்சிகளும் சாதி அமைப்புகளும் அதிகமாகியுள்ளன. சாதி அல்லது மதம் போன்ற ஒரு குறிப்பான அடையாளங்களின் அடிப்படையில் கட்சிகள் உருவாகும்போது அவர்களின் அதிக பட்ச ஆதரவிற்கு ஒரு எல்லை, limit ஏற்பட்டுவிடுகிறது. எனவே தனது குறிப்பிட்ட ஆதரவுச் சாதியை அதிகபட்சமாகத் திரட்டி consolidate பண்ணுவது என்பது மட்டுமே இக்கட்சிகளின் ஒரே வேலை ஆகி விடுகிறது. எனவே மற்றவர்களின் மீது வெறுப்பை விதைப்பதற்கு இவை தயங்குவதில்லை. இத்தனை வெறுப்புகளுக்கும் அப்பால் தாங்கள் பொதுவானவர்கள்தான் எனக் காட்டிக்கொள்ள இவர்கள் தமிழ்த் தேசியத்தைப் படு தீவிரமாகப் பேசுவார்கள். சாதி வன்முறையில் இவர்கள் தம் வேடத்தைக் கலைக்கும்போது அதைக் கண்டிக்காமல் பிற தமிழ்ட்த் தேசியர்கல் பம்முவார்கள்.

தன் சாதி ஆதிக்கத்தை விரிவுபடுத்துவது, தன் சாதிக்காரரை முதலமைச்சர் ஆக்குவது, தன் சாதிப் பெண்களை வேறு யாரும் குறிப்பாகக் குறைந்த சாதியினர் திருமணம் செய்வதைத் தடுப்பது என்பதெல்லாம் இன்று வெளிப்படையாகப் பேசப்படுகின்றன. எல்லாச் சாதி அமைப்புகளும், மதவாத அமைப்புகளும் காதல் திருமணங்களுக்கு எதிராக இருப்பதையும் காணலாம். காதலர் தினக் கொண்டாட்டங்கள் மீது வன்முறை மேற்கொள்வது, காதலர்களை அடித்துப் பிரிப்பது என்பதெல்லாம் அதிகமாகியுள்ளன.

தமிழகத்திலுள்ள சாதி அமைப்புகள் எல்லாம் சமீப காலத்தில் காதல் திருமணங்களை எதிர்த்து வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவதும் அதிகமாகியுள்ளது. இன்று தருமபுரியில் வன்முறையை மேற்கொண்ட சாதியினர் இந்த ஆண்டு சித்திரா பவுர்ணமி அன்று கூட்டிய மாநாட்டில் அச் சாதி அமைப்பின் தலைவர் இப்படி காதல் திருமணத்திற்கு எதிராகப் பேசியது குறிப்பிடத் தக்கது

காதல் திருமணங்களுக்கு எதிரான இத்தகைய வன்முறையைத் தூண்டும் பேச்சுக்கள் தடை செய்யப்பட வேண்டும். தலித்கள் மீதான வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாக்கப்பட வேண்டும். காதல் திருமணங்கள் சமூகத்தில் அதிகமாகக் கூடிய நிலை தவிர்க்க இயலாது என்பதை ஒரு பொதுக் கருத்தாக மக்கள் மத்தியில் உருவாக்க வேண்டும். பெற்றோர்கள் இது குறித்துப் பதற்றமடையத் தெவையில்லை என்கிற உணர்வு பரவலாக்கப் படுதல் அவசியம். சாதி அடிப்படையில்லாத அரசியல் கட்சித் தலைவர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் ஆகியோர் இதில் முன்கை எடுக்கவேண்டும்.

14. சட்டமன்றங்களில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு

நாடாளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சத ஒதுக்கீடு இபோதைக்கு நிறைவேற்றப் படக் கூடிய வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது. அரசியல் சட்டத் திருத்தம் ஒன்றின் மூலமே இது சாத்தியம் என்பதால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இதற்குத் தேவையாகிறது. எனவே அரசியல் கட்சிகளுக்கிடையே கருத்தொருமிப்பு இருந்தால்தான் இது சாத்தியம்.

ஆனால் அரசியல் கட்சிகளிடையே இதை நிறைவேற்றுவது என்பதைக் காட்டிலும் தவிர்ப்பது என்பதில்தான் ஒற்றுமை உள்ளது. ஏன்? நிறைவேற்றினால் 181 தொகுதிகளைப் பெண்களுக்காக ஒதுக்க நேரிடும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால் 181 ஆண்களின் வாய்ப்புகள் பறிபோகும். தவிரவும் இரண்டு தேர்தல்களுக்கு ஒரு முறை தொகுதிச் சுழற்சி rotation செய்யவேண்டும் என்பதால் யாரும் இரு தடவைகளுக்கு மேல் ஒரே தொகுதியில் நிற்க இயலாது. எனவே தம் தொகுதியைப் பாராட்டிச் சீராட்டித் தக்க வைக்க முனைவோருக்கு இது ஒரு பிரச்சினை ஆகிவிடும். அதனால்தான் 16 ஆண்டுகளாக இச் சட்ட முன் வரைவு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

இதை நேரடியாகச் சொல்லாமல் வேறு காரணங்களைச் சொல்லி மறுக்கின்றனர், பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினருக்கான ஒதுக்கீட்டையும் சேர்த்தால் மொத்தம் 33+22=55 சத இடங்கள் சுழற்சி செய்யப்பட வேண்டும். இங்கெல்லாம் செல்வாக்குள்ள ஆண்கள் தங்கள் மனைவி அல்லது மகளை நிறுத்தி இந்த இட ஒதுக்கீட்டையே அர்த்தமற்றதாக்கி விடுவார்கள் என்பது ஒரு வாதம். இப்படிப் பதிலியாக யாரும் உறவினர்களை நிறுத்தக்கூடாது என்றால் அது சட்டப்படி செல்லாது. ஏனெனில் அது அவர்களது உரிமையைப் பறிப்பதாகிவிடும்.

பெண்களுக்கு ஒதுக்கீடு அளித்தால் நகர்ப்புற உயர்ர்சாதிப் பெண்கள்தான் வெற்றி பெறுவார்கள். எனவே சாதி, மத வாரி ஒதுக்கீடு பெண்களுக்க்கு அளிக்கப்பட வேண்டும் என்று சிலர் வற்புரறுத்துவதும் அதச் சிலர் மறுப்பதும் இம் மசோதா முடக்கி வைககப்பட்டுள்ளதன் இன்னொரு காரணமாகிறது. ஆண்களுக்கு இப்படி ஒதுக்கீடு இல்லாதபோது பெண்களுக்கு மட்டும் எப்படிச் செய்ய முடியும் என்பது இதற்கெதிராகக் கிளப்பப்படும் சட்டப் பிரச்சினை.

ஸ்வீடன், ஜெர்மனி, நேபாளம், நெதர்லான்ட், ஃபின்லான்ட் போன்ற நாடுகளில் இருப்பதுபோல ஒவ்வொரு கட்சியும் தாங்கள் நிறுத்தும் வேட்பாளர்களில் 33 சதம் பெண்களாக இருக்க வேண்டும் என அரசியல் சட்டத்தில் உரிய திருத்தம் கொண்டு வந்தால் எப்படி? நமது கட்சிகள் இதற்கும் ஒரு வழி கண்டுபிடிக்காதா என்ன? வெற்றிபெற வாய்ப்பே இல்லாத தொகுதிகளாகப் பார்த்துப் பெண்களை நிறுத்துவார்கள். எடுத்துக்காட்டாக சமாஜ்வாதி கட்சி தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களை நிறுத்திக் கணக்குக் காட்டினல் அது எத்தன அபத்தமாக இருக்கும்?

இன்னொரு வழி இருக்கிறது. மக்கள் தொகை அதிகரிப்பிர்கு ஏற்ப தொகுதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது. அதன்படி 530 பாராளுமன்ரத் தொகுதிகளை 750 ஆக்க வேண்டும். 6000 சட்டமன்றத் தொகுதிகளை 9000 ஆக்க வேண்டும். இப்படி அதுகரித்து அவற்றைப் பெண்களுக்கு வழங்கலாம். அல்லது 33 சதத் தொகுதிகளை இரட்டை வாக்காளர் தொகுதிகளாக ஆக்கலாம். மனம் இருந்தால் வழியுண்டு.

பெண்களுக்கு இவ்வாறு ஒதுக்கீடு அளிப்பது என்பது ஏதோ அவர்களுக்கு வழங்கும் சலுகை அல்ல. அது அவர்களின் உரிமை. எனவே விவாதங்களுக்கு இடமேயின்றி பெண்களுக்கு உடனடியாக இந்த ஒதுக்கீட்டை நிறைவேற்ற வேண்டும்.

முஸ்லிம் நாடான பாகிஸ்தானில் கீழ்மட்டங்களில் 33 சதமும், தேசியச் சட்ட மன்றத்தில் 20 சதமும் செனட்டில் 18 சதமும் பெண்களுக்கு ஒதுக்கப்படுகிறது என்கிற செய்தி யாருக்குத் தெரியும்?

15. ஒபாமா வெற்றி

சற்று முன், “ஒபாமா வெற்றி பற்றி என்ன நினைகிறீர்கள்? இந்தியாவுக்கு அது எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்?” என்று என்னிடம் ஒரு வார இதழிலிருந்து கேட்டார்கள். ஒபாமாவாக இருந்தாலும் மிட் ரோம்னியாக இருந்தாலும் இந்திய அமெரிக்க உறவுகளில் எந்தப் பெரிய மாற்றங்களும் ஏற்பட்டுவிடாது என்று சொன்னேன்.

சென்ற முறை ஒபாமா வென்றபோது உண்மையிலேயே ஒரு ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. எல்லோராலும் வெறுக்கப்பட்ட புஷ்சின் எட்டாண்டு கால ஆட்சி ஒபாமாவின் கைக்கு வந்தது என்பது மட்டுமல்ல, குடியரசுக் கட்சியிடமிருந்து ஜனநாயகக் கட்சிக்கு ஆட்சி மாறியது என்பது மட்டுமல்ல அமெரிக்க வரலாற்றில் முஸ்லிம் வேர்களை உடைய ஒரு கருப்பரின் கைக்கு முதன்முதலாக அதிகாராம் பெயர்ந்தது என்கிற வகையில் எல்லோருக்கும் ஒரு மகிழ்ச்சியும் இருந்தது. எதிர்பார்ப்புகளும் இருந்தன.

ஆனால் புஷ்சின் அமெரிக்காவுடன் இழைந்து கொண்டிருந்த மன்மோகன்சிங் அரசைப் பொருத்த மட்டில் ஒரு தயக்கம் இருந்தது. காஷ்மீர் பிரச்சினையில் அமெரிக்காவின் ‘தலையிடாக் கொள்கை’ மாறுமோ, அமெரிக்காவுடன் செய்து கொண்டிருந்த அணு ஒப்பந்தம் கைவிடப்படுமோ என்றெல்லாம் இந்திய அரசுக்குக் கவலைகள் இருந்தன. இந்திய அரசுக்குத்தான், மக்களுக்கல்ல. மக்களுக்கு இதைப்பற்றி என்ன கவலை?

ஆனால் ஒபாமா ஆட்சி இந்த இரு அம்சங்களில் மட்டுமல்ல இந்தியாவைப் பொருத்தமட்டில் எல்லா அம்சங்களிலுமே புஷ் ஆட்சியின் தொடர்ச்சியாகவே இருந்தது. இந்தத் தேர்தல் பிரச்சாரத்தின்போதும் ரோம்னியும் சரி, ஒபாமாவும் சரி இந்தியக் கொள்கை குறித்து எந்த விவாதமும் நடத்தவில்லை. ஏனெனில் குடீயரசுக் கட்சியாயினும், ஜனநாயகக் கட்சி ஆயினும் இந்தியக் கொள்கையில் பெரிய மாற்றமில்லை. வளர்ந்து வரும் ஒரு சந்தை, சீனாவுக்கு அருகிலுள்ள போர் நிலை முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாடு என்கிற வகையில் இரண்டுமே இந்தியாவைக் கைப்பிடிக்குள் வைத்துக் கொள்வதையே விரும்புகின்றன.

மற்றபடி இந்தியாவிலிருந்து அமெரிக்கா செல்லும் தொழில் நுட்பர்களுக்கு விசா கெடுபிடிகள் மற்றும் விசா கட்டணத்தைக் குறைத்தல், அமெரிக்கர்கள் இந்தியாவில் வந்து ‘மெடிகல் டூரிசம்’ அனுபவிக்கும் வகையில் மருத்துவக் காப்பீட்டு விதிகளைத் தளர்த்துதல், இந்தியர்களின் வேலை வாய்ப்பை பாதிக்காத வண்ணம் அமெரிக்கா இங்கு ‘அவுட் சோர்சிங்’ செய்வதைக் குறைக்காதிருத்தல் முதலானவற்றில் ஒபாமாவின் அணுகல்முறை எதிர்மறையாகவே தொடர்கிறது.

ஈராக்குடனான நமது உறவுகளையும், எண்ணைத் தேவையைப் பெரிய அளவில் நாம் அங்கிருந்து பூர்த்தி செய்து கொள்வதையும் கட்டுப்படுத்துவதிலும் நமது இன்சூரன்ஸ் செக்டாரைத் திறந்து விடுவதிலும் அமெரிக்க கெடுபிடிகள் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கலாம். வர்த்தகப் பெருக்கம், இராணுவக் கூட்டு, இராணுவ தளவாட விற்பனை இதெல்லாமும் அதிகரிக்கும். ஒபாமாவின் வெற்றியை இந்திய முதலாளிகள் வரவேற்றுள்ளனர். எதிர்பார்த்ததுதான். மக்களைப் பொருத்த மட்டில் வரவேற்க ஏதுமில்லை.

உலக வரலாற்றில் மிக அதிகமான செலவில் நடந்த தேர்தல் இது. இரு வேட்பாளர்களும் சேர்ந்து 40 பில்லியன் டாலர்கள் செலவழித்துள்ளனர். இதில் ஒபாமாவின் செலவு அதிகம், 2008 தேர்தலிலும் ஒபாமாவின் செலவுதான் அதிகம். ஏழை ஒபாமாவுக்கு ஏது இத்தனை பணம்? கார்பொரேட்கள் அள்ளிக் கொடுப்பதுதான். எந்த நம்பிக்கையில் கொடுக்கிறார்கள் தம் நலன் காப்பாற்றப்படும் என்றுதானே?

சென்ற முறை அவர் வாக்களித்தவாறு குவான்டனமோ பே மற்றும் அபுகாரிப் சித்திரவதை கூடங்களை ஒழித்துக் கட்டுவதையோ, முஸ்லிம் நாடுகளின் மீதான கெடுபிடிகளைக் குறைப்பதையோ அவரால் முழுமையாகச் செய்ய முடியவில்லையே? ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை வெளியேற்றுவது, ஆளில்லாத விமானங்கள் மூலமாகப் பாகிஸ்தான் எல்லையைத் தாக்குவதை நிறுத்துவது எதையும் செய்ய முடியவில்லையே?

போலி மோதல் படுகொலைகள் சமூக பிரச்சினைகளுக்கு தீர்வாகுமா? இவை தொடர்பான சட்டத்தின் பார்வை என்ன?

(நேர்கண்டது: சிவ. காளிதாசன்)

போலி மோதல் எதிர்ப்புக் கூட்டியக்கம் ஒன்றை அமைத்துள்ளீர்கள். மோதல்(என்கவுன்டர்) என்ற பெயரால் திட்டமிட்ட படுகொலைகளே நிகழ்கின்றன என்று கூறியுள்ளீர்கள். எப்படி என்று விளக்க முடியுமா….?

இந்த கூட்டியக்கம் சென்ற ஆண்டு நடுவில் உருவாக்கப்பட்டது. தமிழக அளவில் உருவாக்கப்பட்டது என்ற போதிலும் இதற்கு முன்னதாக 2007 ஜுன் 26 ஆம் நாள் மும்பையில், இந்திய அளவில் மனித உரிமை அமைப்புகள் இணைந்து ஒரு மாநாடு நடத்தின. போலி மோதல்களுக்கு எதிரான பரப்புரைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. குசாரத்தில் வன்சாரா, இராஜ்குமார் பாண்டியன் முதலிய IPS அதிகாரிகள் முன்னின்று நடத்திய சொராபுதீன் மோதல் ஒரு திட்டமிட்ட படுகொலை என்பது அம்பலப்பட்டுத் துணைக்கண்ட அளவில் விவாதப் பொருளான நிலையில் அந்த மாநாடு கூட்டப்பட்டது. இந்தியாவெங்கிலும் பல்வேறு மாநிலங்களிலும் இது போன்ற போலி மோதல் கொலைகள் மேற்கொள்ளப்படுவது கவனத்திற்கு வந்தது. “அவுட்லுக்” வார இதழ் (மே 27,2007) என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் சிறப்பிதழ் ஓன்றை வெளியிட்டது. 100 என்கவுண்டர் செய்தவன் 80 செய்தவன் என்றெல்லாம் புகைப்படங்களுடன் ஆல்பம் ஒன்றையும் வெளியிட்டது.

மோதல் என்ற பெயரில் படுகொலைகளை நடத்துவது தமிழகத்திலும் கடந்த 30 ஆண்டுகளாக நடந்துவருவம் கதைதான். 80களில் வால்டர் தேவாரம் தலைமையில் சுமார் இருபது நக்சலைட்டுகள் கொல்லப்பட்டார்கள். பின்னர் ராசாராம்,சரவணன் போன்ற தமிழ்த்தேச விடுதலைக் கோரிக்கையைக் முன்வைத்து இயங்கிய ஆயுதக் குழுவினரும் இம்முறையில் கொல்லப்பட்டார்கள். ராசாராமும்,சரவணனும் சிறையில் இருக்கும்போதே காவல்துறையினரால் கொல்லப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.கருணாநிதி இம்முறை ஆட்சிக்கு வந்த கையோடு மூன்று நான்கு ரவுடிகள்,மோதல் என்ற பெயரில் கொலை செய்யப்பட்டார்கள். முந்தைய ஜெயலலிதாவின் ஆட்சியைக்காட்டிலும் தாங்கள் ஓன்றும் சட்டம்,ஒழுங்கை நிலைநாட்டுவதில் குறைந்தவர்களல்ல எனக் காட்டிக் கொள்வதற்காகவே இக்கொலைகள் நிகழ்த்தப்பட்டன எனப் பத்திரிக்கைகள் எழுதின.

இந்நிலையில் தான்,இத்தகைய போலி மோதல்களை எதிர்க்கக் கூடிய பல்வேறு சிறிய மனித உரிமை அமைப்புகள் ஓன்றாக இணைந்து போலி மோதல் கொலை எதிர்ப்புக் கூட்டியக்கத்தை உருவாக்கினோம். சென்ற ஜுலை மாதத்தில் சென்னையில் எழுச்சிமிக்க கருத்தரங்கம் ஒன்றையும் நடத்தினோம்.போலி மோதலுக்கு எதிரான ஓரு விரிவான துண்டறிக்கையை ஆயிரக்கணக்கில் அச்சிட்டுத் தமிழகமெங்கும் விநியோகித்தோம். இந்தியாவிலும் சரி, தமிழகத்திலும் சரி 99சத மோதல்கள் போலி மோதல்கள்தான். முன்னரே பிடித்துச்சென்று நிராயுதபாணியான நிலையில் கொன்றுவிடும் படுகொலைகள்தான்,இந்த மோதல்கள். எதிலும் காவல்துறையினர் கொல்லப்படுவதில்லை. பெரிய காயங்கள் அடைவதும் கிடையாது. ஆனால் காவல் துறையினரால் குறிவைக்கப் படுபவர்கள் அவ்வளவு பேரும் கொல்லப் படுகின்றனர். தப்பிச் சென்றதாகவோ காயங்களுடன் பிடி பட்டதாகவோ வரலாறு கிடையாது. இது ஒன்றே எல்லா மோதல்களும் போலி மோதல்களே என்பதற்குப் போதிய சான்று.

தமிழகத்திலும் இந்தியாவின் பல பகுதிகளிலும் போலி மோதல் கொலைகள் நிகழ்வதாக அடிக்கடி செய்திகள் வருகின்றன. இந்தக் காவல்துறை உத்தி, எப்போது,எப்படி தொடங்கியது….? மோதல் கொலைக்குப் பலியாகிறவர்கள் யார்….?

நெருக்கடி நிலைக் காலத்தில் ஆந்திராவில் மட்டும் 300க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் இவ்வாறு கொல்லப்பட்டனர். நெருக்கடி நிலை நீக்கப்பட்டவுடன் அப்போது நடைபெற்ற அத்துமீறல்கள் குறித்த விவாதங்கள் பெரிய அளவில் நடைபெற்றதையொட்டி இத்தகைய மோதல் கொலைகள் சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. எனினும், 80களில் காலிஸ்தான் போராட்டம் தீவிரமாகச் செயல்பட்ட பின்னணியில் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார். அதையொட்டி மீண்டும் மோதல் கொலைகள் தொடர்ந்தன. 96ல் மத்தியப் புலனாய்வுக் குழு உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை ஒன்றின்படி 1984-95 காலகட்டத்தில் அமிர்தசரசில் மட்டும் 2,097 உடல்கள் சட்ட விரோதமாக எரிக்கப்பட்டது தெரிய வந்தது. பிற பஞ்சாப் நகரங்களிலும் இதே நிலைதான். காணாமல் போனதாகச் சொல்லப்பட்டவர்களில் 60 விழுக்காட்டினர் கொல்லப்பட்டார்கள் என்பது இப்போது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில் (85-96) ஆந்திர மாநிலத்தில் 1,049 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். தர்மபுரியில்,தேவாரம் தலைமையில் நடைபெற்ற கொலைகளை முன்னரே குறிப்பிட்டேன். 90களுக்குப்பின் மோதல் படுகொலைகள் முஸ்லீம் தீவிரவாதிகள் மீதும் ரவுடிகள் மற்றும் குண்டர்கள் மீதும் மேற்கொள்ளப்பட்டன. பாபர் மசூதி இடிப்பிற்குப் பின் வடமாநிலங்களில் முஸ்லீம்கள் இவ்வாறு பெருமளவில் கொல்லப்பட்டனர். நரேந்திர மோடியைக் கொல்ல வந்ததாகச் சொல்லி இர்ஷத் ஜெகான் என்கிற 19 வயதுக் கல்லூரி மாணவி கொல்லப்பட்டது ஊரறிந்த உண்மை.

ரவடிகள், தாதாக்கள் கொல்லப்படுவது, உலகமயம், ரியல்எஸ்டேட் பெருக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒன்று. தாதாக்களையும் ரவுடிகளையும் அரசியல்வாதிகளும், காவல் துறையுமே உருவாக்குகின்றனர். பிறகு ஒரு கட்டத்தில் அவர்களால் தங்களுக்கே ஆபத்து எனும்போது அவர்களைக் கொன்று விடுகின்றனர். ஆக, இன்று இந்தியத் துணைக்கண்டத்தில் நடத்தப்படும் மோதல் படுகொலைகள் மூன்று தரப்பினரைக் குறிவைத்து நடத்தப்படுகின்றன. ஒன்று, பயங்கரவாதத்தை எதிர்ப்பதன் பெயரால் பெரிய அளவில் முஸ்லீம்கள் கொல்லப் படுகிறார்கள். இரண்டாவதாக வட மாநிலங்களில், குறிப்பாக தண்டகாரண்யப் பகுதியிலும் காஷ்மீரத்திலும், வட கிழக்கு மாநிலங்களிலும் உள்நாட்டுப் பாதுகாப்பு என்ற பெயரால் மாவோயிஸ்டுகளும்,தேசிய இனப் போராளிகளும் கொல்லப்படுகினற்னர். மூன்றாவதாக தாதாக்கள், ரவுடிகள் முதலிய கிரிமினல் குற்றவாளிகள் கொல்லப்படுகிறார்கள்.

இந்தியாவில் ஒருபுறம் மோசமான ரவடிகளுக்கும் மறுபுறம் தீவிரவாதிகள் எனப்படுவோருக்கும் எதிராக இந்தப் போலி மோதல் படுகொலை உத்தி கையாளப்பட்டு வருகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் போலி மோதல் தொடர்பான நிலவரம் என்ன?

சி.கே.காந்திராசன் என்கிற IPS அதிகாரி சென்னையைச் சேர்ந்த 19 ரவுடிக் கும்பல்களை ஆய்வு செய்து அண்மையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அவரது ஆய்வேட்டுச் சுருக்கம் சென்ற ஏப்ரல் 15 “டைம்ஸ் ஆப் இந்தியா” இதழில் வெளிவந்தது. அமைப்பு ரீதியாக மேற் கொள்ளப்படும் எந்தக் குற்றமும் அரசியல்வாதிகள், காவல்துறையினர், வழக்கறிஞர்கள் ஆகியோரின் கூட்டுறவின்றிச் சாத்தியம் இல்லை என்பது அவரது ஆய்வின் முடிவு. சுமார் 12 போலீஸ் அதிகாரிகள் கிரிமினல்களுக்குப் பல்வேறு வகைகளில் ஆலோசனை சொல்பவர்களாய் இருப்பதாகவும் இத்தகைய ஆலோசனைகளுக்கு 50 ஆயிரம் முதல் பல இலட்சம் வரை ஊதியம்(royalty) பெறுவதாகவும் அந்த இதழில் குறிப்பிடப்பட்டிருந்தது. சில எடுத்துக் காட்டுகளும் கொடுக்கப் பட்டிருந்தன.

சென்ற மாதம் திருச்சியில் நடந்த மோதலில் கொல்லப்பட்ட “பாம்” பாலாஜிக்கும், தஞ்சை மேற்குக் காவல் நிலையத்தில் பணியாற்றிய ஆய்வாளர் குமாரவேலுவுக்கும் தொடர்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவர் வேதாரண்யத்துக்கு மாற்றப்பட்டார். “பாம்” பாலாஜி மோதலில் கொல்லப்பட்டார். ஜுனியர் விகடனில் டாக் ரவி, வரிச்சலூர் செல்வம் என்கிற இரு ரவுடிகள் தாங்கள் மோதலில் கொல்லப்படலாம் என்று அச்சம் தெரிவித்துள்ளனர். ரவியின் வழக்கறிஞர் காரல் மார்க்ஸ் என்பவர், ரவியைக் கொல்வதற்காக அவருக்கு எதிரான கும்பல் ஒன்று மிகப் பெரியஅளவில் பணம் செலவழிப்பதாகக் கூறியுள்ளார்.

இங்கு ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன், சில ஆண்டுகளுக்கு முன் நானா படேகர் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்டாக நடித்த இந்தித் திரைப்படம் வெளிவந்தது. “ஜதெக் 56″ அதாவது 56 என் கவுண்டர் செய்தவன் என்பது அதன் பெயர். நானா படேகருக்கு நடிப்புப் பயிற்சி அளித்தவர் பிரதிப்வர்மா என்கிற உண்மையான என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட். இவர் 80 மோதல் கொலைகள் செய்தவர். இவருடைய சீடர் தயா நாயக் 100 மோதல் கொலைகளைச் செய்தவர். இவர்கள் இருவரும் இப்போது பணிநீக்கம் செய்யப்பட்டு நீதிமன்றங்களுக்கு அலைந்து கொண்டுள்ளனர். ஒரு ரவுடிக்கும்பலிடம் பணம் பெற்றுக்கொண்டு மற்றொரு ரவுடிக் கும்பலைக் கொன்று அளவுக்கதிமாகச் சொத்து சேர்த்தனர் என்பது அவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டு. ஒரு சாதாரண காவல்துறை அதிகாரியான பிரதீப் வர்மாவின் சொத்து 100 கோடி. தன்னுடைய சொந்த ஊரில் தன்னுடைய அம்மா பெயரில் பள்ளி ஒன்றை நிறுவி அமிதாப்பச்சனை அழைத்துத் திறந்து வைத்தவர் அவர். இப்படி நிறையச் சொல்லலாம். அவுட்லுக் வெளியிட்ட “என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்”ஆல்பம் பற்றி முன்பு குறிப்பிட்டேன். இதில் குறிப்பிடப்பட்ட பலரில் ரஜ்பீர்சிங் என்பவரும் ஒருவர். 100 என்கவுண்டர் செய்தவர், இவர் சென்ற மார்ச் இறுதியில் ரியல் எஸ்டேட் தகராறு ஒன்றில் சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட்டில் முடக்கும் போது ஏற்பட்ட தகராறு இது. தமிழகத்தில்கூட இத்தகைய குற்றச்சாட்டுகள் வந்து கொண்டுள்ளன. மோதலில் கொல்லப்பட்ட வெள்ளை ரவியின் மனைவி அவரைக் கொல்வதற்கு 60இலட்சம் ரூபாய் கைமாறியதாகப் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார். இவை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்.

போலி மோதல் தொடர்பான சட்டவிதிகள் என்ன? இவை மதிக்கப்படுவதும் மிதிக்கப்படுவதும் எந்த அளவில்?

தற்காப்புக்காக-தன்உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக- தேவையானால் எதிரியைக் கொல்வதற்கு, குற்றநடைமுறைச் சட்டவிதிகள் 154,170,173, 190 மற்றும் இந்தியத் தண்டனைச்சட்டம் 96,97,100,46 ஆகிய பிரிவுக்களில் இடம் உண்டு. பொதுவாக இவை தற்காப்பு உரிமையைக் குறிப்பவை. காவல் துறையினருக்கு மட்டுமின்றி எவருக்கும் பொருந்தக் கூடியவை. ஆனால், இத்தகைய நிகழ்வுகளில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அதில் இந்தியச் சாட்சியக் சட்டம் 105வது பிரிவின்படி அக்கொலை தவிர்க்க இயலாதது எனவும், முற்றிலும் தற்காப்பிற்காகவே செய்யப்பட்டது எனவும் நிறுவப்படுதல் வேண்டும். இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 46ன் படி காவல்துறையினர் ஒருவரைக் கைது செய்யச் செல்லும் போது அவர் கைதாக மறுத்தால் அவரை வலுக்கட்டாயமாகக் கைது செய்யலாம். இந்த வலுக்கட்டாயத்தின் எல்லை அவரை கொல்வதாகக்கூட இருக்கலாம்.

ஆனால், கைது செய்யப்படுபவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றம் மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனைக்குரிய குற்றமாக இருக்கும் நேர்வுகளில் மட்டுமே இந்த வலுக்கட்டாயம், கொல்லுதல் என்கிற எல்லைக்குச் செல்ல முடியும் என பிரிவு 46, உட்பிரிவு 3 வரையறுக்கிறது. குற்ற நடைமுறைச் சட்டம் 176வது பிரிவில் 1983ம் ஆண்டு சேர்க்கப்பட்ட திருத்தத்தின்படி ஒரு நிர்வாக நடுவர் இது குறித்து விசாரணை செய்ய வேண்டும். ஆனால் இது நடு நிலையுடன் மேற்கொள்ளப்படுவதில்லை என்பதே உண்மை.மோதல் நடக்கும்போது கொல்லப்பட்டவரின் மீது அவர் காவல்துறையினரைக் கொலை செய்ய முயன்றதாக இந்தியத் தண்டனைச் சட்டம் 370ம் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்கிறார்கள். பின்னர் குற்றவாளி உயிருடன் இல்லை என்பதைக் காரணம் காட்டி விசாரணை இன்றி வழக்கை முடித்து விடுகிறார்கள். பெயருக்கு வருவாய்க் கோட்ட அலுவலர் (RDO) விசாரணை ஒன்றை நடத்தி மூடிவிடுகிறார்கள்.

ஒன்றை நாம் கவனிக்க வேண்டும். இவ்வாறு மோதல் கொலைகளை ஊற்றி மூடுகிற நடைமுறையில் காவல்துறையினரும், சிவில் நிர்வாகமும், அரசியல்வாதிகளும் கூட்டுக் களவாணிகளாக உள்ளனர்,இணைந்து செயல்படுகின்றனர்,நீதிமன்றங்களும் கண்டுகொள்வதில்லை. இராசாராம், சரவணன் என்கிற இரு தமிழ்த் தீவிரவாதிகள் சென்னை மத்திய சிறையில் இருந்தபோது கொல்லப் பட்டனர். அவர்கள் கொல்லப்படுவது முன்னரே தெரியும். அவர்கள் அந்த அச்சத்தை வெளிப்படுத்தியும் இருந்தனர். காவல் நீடிப்பிற்காக அவர்கள் சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர். காலை நேரத்தில் அழைத்துச் செல்வதே வழக்கம். ஆனால், அன்று அவர்கள் மாலையில் அழைத்துச் செல்லப்பட்டனர். சென்டரல் ரயில்நிலையம் அருகே இருந்த மத்திய சிறைக்கு, சைதாப்பேட்டையிலிருநது அண்ணா சாலை வழியாக வருவதே வழக்கம். அன்று அவர்கள் கோட்டூர்புரம் வழியாகக் கொண்டு வரப்பட்டனர். சாலைப் போக்குவரத்து எல்லாம் நிறுத்தப்பட்டு அவர்கள் சுட்டுக் கொல்லப் பட்டனர். அவர்கள் தப்பிச் செல்ல முயன்றதாக போலீஸ் பொய்யுரைத்தது. காவல்துறை, போக்குவரத்துத் துறை ஆகிய துறைகள் இணைந்து செயல்பட்டன என்பது எண்ணிப் பார்க்க வேண்டிய செய்தி.

மோதல் சாவுகள் குறித்துத் தேசிய மனித உரிமை ஆணையம் பிறப்பித்துள்ள நெறிமுறைகள் யாவை? தமிழக அரசு அவற்றைக் கடைப்பிடிக்கிறதா…?

ஆந்திரப் பிரதேசக் குடியுரிமைக் கழகம் (APCLC) 94 மார்ச்30ல் தேசிய மனித உரிமை ஆணையத்திடம் இது குறித்து விரிவான புகார் ஒன்றை அளித்திருந்தது. அதையொட்டி தேசிய மனித உரிமை ஆணையம் 1996 நவம்பர் 5ல் தனது பார்வைகளைப் பதிவு செய்தது.1997 மார்ச்சு 29ல் ஆந்திர முதல்வருக்கு விரிவான நெறி முறைகளை அனுப்பிய ஆணையம் இதன் நகல்களை எல்லா மாநில முதல்வர்களுக்கும் அனுப்பியது. சென்ற ஆண்டில் இது தொடர்பான விவாதங்கள் இந்திய அளவிலும் தமிழக அளவிலும் மேலுக்கு வந்த போது சென்ற 2007 ஆகஸ்டு 8ல் தமிழக அரசு இது குறித்து நெறிமுறை ஒன்றை உருவாக்கி மிக அவசரம் என்று தலைப்பிட்டு, தலைமைச் செயலாளரே ஒப்பமிட்டு, காவல்துறை இயக்குநருக்கு அனுப்பியது. இதன் நகல்கள் சிறைத்துறையின் துணைக்காவல் இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டன. தேசிய மனித உரிமை ஆணையத்தின் விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மோதல் கொலைகள் தொடர்பாக அறிக்கை அனுப்ப வேண்டும் என்பன இந்த ஆணையின் சாரம்.

மோதல் கொலைகள் நடை பெற்றவுடன் அருகில் உள்ள காவல் நிலையத்தில் உரிய பதிவேட்டில் அதைப் பதிவு செய்ய வேண்டும். RDO விசாரணைக்குப் பதிலாக நீதிமன்ற விசாரணை நடத்த வேண்டும். இவ் விசாரணையில் கொல்லப்பட்டவரின் உடனடி உறவினர்கள் பங்கேற்பது அவசியம். அவர்களது குற்றச் சாட்டுகளைப் பரிசீலிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் மோதலில் பங்கேற்ற அதிகாரிகளுக்கு வீரப் பரிசுகளோ, பதவி உயர்வுகளோ வழங்கக் கூடாது. மோதலில் பங்கு பெற்ற அதிகாரி அதே காவல்நிலையத்தைச் சேர்ந்தவராக இருப்பின் வேறு சுதந்திரமான சிபிசிஐடி போன்ற புலன் விசாரணை அமைப்பைக் கொண்டு விசாரிக்க வேண்டும். இவை அந்நெறி முறைகளில் முக்கியமானவை.

மோதல் என்பது ஒரு கொலை. காவல்துறை செய்தாலும் சரி, சாதாரண ஆள் செய்தாலும் சரி, கொலை கொலைதான் என்கிற அடிப்படையில் கைது செய்து, குற்றநடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய கொலைக் குற்றமாகவே அதைக் கருத வேண்டும். தற்காப்புக்காகக் கொன்றேன் என மெய்ப்பிக்கும் வரை அந்த அதிகாரி கொலைக் குற்றவாளிதான். அதிகாரியின் மீது குற்றம் நிரூபிக்கப்படுமானால் கொல்லப்பட்டவரது குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றெல்லாம் இந்த நெறிமுறைகளில் இருந்தது. இந்த நெறி முறைகளை அவற்றின் ‘வார்த்தை, தொனி’ ஆகிய இரண்டின் அடிப்படையிலும் அப்படியே பின்பற்றவேண்டும் எனவும். இல்லையேல் ‘ கடுமையாகக் கருதப்படும்’ எனவும், மாவட்ட அதிகாரிகள் இதற்கு பொறுப்பாக்கப் படுவார்கள் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது.

நமக்கெல்லாம் பெரிதும் ஆறுதல் அளித்த அந்த நெறிமுறைகளுக்காகப் போலி மோதல் எதிர்ப்புக் கூட்டியக்கம் சார்பாகத் தமிழக முதல்வருக்கு நன்றியும் தெரிவித்தோம். கூடவே இது நடைமுறைப் படுத்தப்படுமா,அல்லது வெறும் வார்த்தைகளோடு நின்றுவிடுமா என்கிற அய்யத்தையும் வெளியிட்டிருந்தோம். நமது அய்யம் இன்று உறுதியாகி விட்டது. ஆறு மாதம் அமைதிகாத்த நம் காவல்துறையினர் சென்ற மாதத்தில் மட்டும் ஐந்து பேரைக் கொன்றுள்ளனர். மேற்கண்ட நெறிமுறைகள் எதையும் பின் பற்றவில்லை. ஏப்ரல் 3 அன்று தஞ்சையில் மிதுன் சக்கரவர்த்தி என்பவரை மோதலில் கொன்ற காவல்துறையினருக்குக் கூடுதல் காவல்துறை இயக்குனர் விஜயகுமார் உடனடியாகப் பரிசுளை வழங்கியுள்ளார். நெறிமுறைகளுக்கு எதிராகச் செயல்பட்ட அவர் மீதும், நடவடிக்கையில்லை. அப்படியானால் இந்த நெறிமுறைகள் யாரை ஏமாற்றுவதற்கு?

போலி மோதல் கொலைகள் குறித்த பொது மக்களின் பார்வை பொதுவாக எப்படியுள்ளது?

பொதுவாக நடுத்தர வர்க்கத்தினரின் பார்வை மோதல் கொலைகளுக்கு ஆதரவாக உள்ளது என்பது வேதனையான உண்மை. காவல்துறையின் பலம் இதுதான். கிரிமினல்களை வெளியே விட்டால் அவர்கள் மேலும் மேலும் கொலைகளைத் தானே செய்வார்கள்? சட்டத்தின் மூலம் அவர்களைச் சிக்க வைக்க முடியுமா? என்கிற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. கிரிமினல் குற்றங்களை ஒழிப்பதற்கு மோதல் கொலைகள் தான் வழி என்ற கருத்தைக் காவல்துறையே பரப்பி வருகிறது.

கிரிமினல்கள் மட்டுமே கொல்லப் படுவதில்லை. அரசியல் காரணங்களுக்காகவும் கொலைகள் நடக்கின்றன என்பதெல்லாம் மக்களுக்குச் சொல்லப்பட வேண்டும். மோதல்கொலைகளுக்கும் கிரிமினல் குற்றங்களுக்கும் தொடர்பே இல்லை. சென்னை நகரத்தில் மட்டும் கடந்த 12 ஆண்டுகளில்,18 மோதல் கொலைகள் நடை பெற்றுள்ளன. ஆனால் கிரிமினல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டேதான் போகின்றன. கிரிமினல்கள் எப்படி உருவாகின்றனர் என்பதை மக்களிடம் விளக்கியாக வேண்டும். காசு வாங்கிக் கொண்டு மோதல் கொலைகள் நிகழ்த்துவது, உன் மகனைக் கொலை செய்து விடுவேன் என மிரட்டி வீட்டாரிடம் பணம் பறிப்பது, இவையெல்லாம் மக்களுக்குத் தெரியாது. இவற்றையும் நாம் விளக்கியாக வேண்டும். பஸ்ஸை எரித்து மாணவிகளைக் கொன்றவர்கள். பத்திரிகை அலுவலகத்தைத் தாக்கி ஊழியர்களைக் கொன்றவர்கள் இவர்களுக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு ஒரு நீதி என்று பாகுபடுத்தித் தேர்வு செய்கிற உரிமையை காவல் துறையினருக்கு யார் அளித்தது?

கொலைக்குற்றம் உறுதி செய்யப்பட்டவர்களுக்குக்கூட மரணதண்டனை கூடாது என 135 நாடுகள் முடிவெடுத்துள்ள நிலையில், குற்றம் நிரூபிக்கவே படாத நிலையில் மரணத்தீர்ப்பை வழங்கும் அதிகாரத்தைக் காவல்துறைக்கு யார் கொடுத்தது? அரசுச் சட்டத்தின் 21வது பிரிவின்படி இந்தியக் குடிமக்கள் எல்லோருக்கும் உயிர் வாழும் உரிமை இருக்கிறது. அரசியல் சட்டம் 14வது பிரிவின்படி எல்லோரும் சமமாக நடத்தப்பட வேண்டும். இந்த மிக அடிப்படையான உரிமைகளை யெல்லாம் குழிதோண்டிப் புதைப்பவையாக மோதல் கொலைகள் உள்ளன என்பதை மக்களிடம் விளக்கிச் சொல்வது அவசியம்.

போலி மோதலை நியாயப்படுத்தும் ஊடகங்கள் அப்படிச் செய்வது ஏன்?

ஊடகங்கள், குறிப்பபாக திரைப்படங்கள் என்கவுண்டரை நியாயப்படுத்தவே செய்கின்றன. இது மிகவும் வேதனைக்குரிய நடைமுறை. சமீபத்தில் திரைப்படத் துறையைச் சேர்ந்த ஒரு சிலருடன் உரையாடக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. நவீன் பிரசாத் என்கிற மாவோயிஸ்டு கொல்லப்பட்டது குறித்து அவர்களிடம் பேசும்போது, மோதல் கொலைகள் குறித்த அப்பட்டமான நடுத்தரவர்க்க மனநிலையே அவர்களிடம் இருந்தது அதிர்ச்சி அளித்தது. இதில் திரைப்படத் துறையை மட்டும் சொல்லிப் பயனில்லை. நம் எழுத்தாளர்கள் சிந்தனையாளர்கள் ஆகியோரும் இதைக் கண்டு கொள்வது இல்லை, இத்தகைய திரைப்படங்களை கண்டிப்பதில்லை. பத்திரிகைகளைப் பொறுத்தமட்டில் புலனாய்வு இதழ்கள் ஒரளவு பாதிக்கப் பட்டவர்கள் தரப்புச் செய்திகளை வெளியிடுவது, சில உண்மைகளை வெளிப்படுத்த வாய்ப்பாக உள்ளது. கூடவே காவல்துறை அளிக்கிற அப்பட்டமான பொய்ச் செய்திகளையும், கொல்லப்பட்டவர் குறித்த அவதூறுகளையும் வெளியிடுவதன் மூலம் ஒட்டுமொத்தமாகக் காவல்துறையின் கருத்துகளுக்கு ஆதரவு ஏற்படும் நிலையே உள்ளது.

டில்லி, மும்பை, குஜராத்தில் போலி மோதல் வல்லுநர்கள் என்றே சில காவல்துறை அதிகாரிகள் பெயர் பெற்றனர். இங்கும் சிலருக்கு அந்தப் பெயர் உள்ளது. சட்டவிரோதமாகச் செய்வதை இப்படிப் பெருமைப்படுத்தலாமா? நான் முன்பே சொன்னேன், தமிழ்நாட்டிலும்கூட இத்தகைய மோதல் கதாநாயகர்கள் இருக்கவே செய்கின்றனர். இவர்களை வீரர்களாகப் பாராட்டுகிற நடைமுறையை அரசுகள் பின்பற்றுகின்றன. கோடிக்கணக்கில் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படுகின்றன. வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் 50க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். பெண்கள் பலர் வன்புணர்ச்சி செய்யப்பட்டனர். தேவாரத்துக்கு வழங்கப்பட்ட வீட்டுமனைப் பட்டா மட்டும் அன்றைய மதிப்பின்படியே ஒரு கோடி ரூபாய் பெறும் என ஒரு பத்திரிகை எழுதியிருந்தது. தேசிய மனித உரிமை ஆணையத்தின் நெறிமுறைகள் கறாராக நடைமுறைப்படுத்தப் பட்டால் இந்தக் கதாநாயகர்களின் சாயம் வெளுக்கும். கொடூர முகங்கள் அம்பலமாகும்.

அண்மைக்காலத்தில் தமிழகத்தில் போலி மோதல் கொலைகள் திடீரென அதிகரித்திருப்பது ஏன்?

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 68 மோதல் கொலைகள் நடைபெற்றுள்ளன. இதில் திமுக,அதிமுக, இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. அதிமுக ஆட்சி என்றாலே அது போலீஸ் ஆட்சிதான். தேவாரம் செய்த கொலைகள் எல்லாம் எம்.ஜி.ஆர்.ஆட்சிக் காலத்தில்தான் நடந்தன. நான் முன்பே சொன்னபடி அதிமுக ஆட்சியைக் காட்டிலும் சட்டம் ஒழுங்கை நிறைவேற்றுவதில் நான் ஒன்றும் குறைந்தவன் இல்லை எனக் காட்டிக் கொள்ளும் நிர்ப்பந்தம் கருணாநிதிக்கு உள்ளது. கடந்த இரண்டாண்டுகளில் 15 மோதல் கொலைகள் நடைபெற்றுள்ளன. இன்னொன்றையும் நாம் இங்கு நினைத்துப் பார்ப்பது அவசியம். செப்டெம்பர் 11க்குப் பிறகு உலக அளவில் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் மனித உரிமை மீறல்கள் அதிகமாகியுள்ளன. இந்தியாவில் மன்மோகன்சிங் தலைமையில் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும் உலகமயம், தாராளமயம், ஊடாகப் பெரிய அளவில் கனிமவளமும், நீர்வளமும் உள்ள நிலங்கள் உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரி வழங்கப்படுகின்றன. அப்பாவிப் பழங்குடி மக்களின் நிலங்கள் இவ்வாறு பெரிய அளவில் பறிக்கப்படுகின்றன.

மாவோயிஸ்டுகளின் நடைமுறை குறித்து நமக்கு விமர்சனம் இருந்த போதும், அவர்கள்தாம் இந்தப் பிரச்சனைகயைக் கையில் எடுக்கின்றனர். எனவே உள்நாட்டுப் பாதுகாப்பு என்கிற ஒலத்தை மைய அரசு தொடர்ந்து எழுப்பிக் கொண்டே இருக்கிறது. இராணுவத்திற்கும் காவல்துறைக்கும் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இரண்டு மாதத்திற்கு ஒரு முறை உள்துறை அமைச்சர்களை எல்லாம் கூட்டிக் கடும் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இப்படியெல்லாம் மோதல் கொலை அதிகரிப்பின் பின்னணியை நாம் பார்க்க வேண்டியுள்ளது. இதில் ஆளும் கட்சியை மட்டும் சொல்லிப் பயனில்லை. பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசைத் தவிர மற்றத் தலைவர்கள் யாரும் மோதல் கொலைகளைக் கண்டிக்கவில்லையே…!

போலி மோதல் கொலைகளை நீதிமன்றங்கள் எவ்வாறு பார்க்கின்றன?

நீதிமன்றங்கள் அவ்வப்போது சில வழக்குகளில் போலி மோதல்களைக் கண்டிக்காமல் இல்லை. மதுசூதனன் ராவ் போலி மோதலில் கொல்லப் பட்டபோது, புகழ்பெற்ற வழக்கறிஞர் கே.ஜி.கண்ணபிரான் ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். (ரிட் எண் 16868/1995). நீதி அரசர்கள் பி.எஸ். மிஸ்ரா, சி.வி.என். சாஸ்திரி ஆகியோர் அளித்த தீர்ப்பு முக்கியமானது. ஒரு குடிமகனின் உயிர் வாழ்வில் இடையீடு செய்வது சாதாரண நிகழ்வாக இருக்க முடியாது என்பதை வலியுறுத்திச் சொன்ன அவர்கள் காவல்துறைக் கொலைக்கும் சாதாரணக் கொலைக்கும் தனித்தனிச் சட்டங்கள் இருக்க முடியாது என்றனர். மோதலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகளை அனைத்துக் கிரிமினல் குற்றவாளிகளைப் போலவுமே புலன் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கூறினர்.புகழ்பெற்ற டி.கே.பாசு-எதிர்-மேற்குவங்க அரசு வழக்கில் நீதியரசர்கள் குல்தீப்சிங், ஏ.எஸ்.ஆனந்த் ஆகியோர் வழங்கிய தீர்ப்பும, பியசிஎல்-எதிர்-இந்திய அரசு வழக்கில் நீதியரசர்கள் ஜீவன் ரெட்டி,சுகவ் சென் ஆகியோர் வழங்கிய தீர்ப்பும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியவை. மிகச்சமீபத்தில் ஏப்ரல் 22 அன்று உச்ச நீதிமன்றத்தில் நீதியரசர்கள் அல்டாப் ஆலம், பி.என்.அகர்வால், ஜி.எஸ்.சிங்வீ ஆகியோர் காஷ்மீர மாநிலத்தில் வீரப் பரிசுகளுக்காகவும் பதவி உயர்வுகளுக்காகவும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை வன்மையாகக் கண்டித்துள்ளனர்.

ஆனால் எல்லா வழக்குகளிலும் நீதிமன்றங்கள் இவ்வாறு நடந்துள்ளன எனச் சொல்ல முடியாது. இது தொடர்பாக மனித உரிமை அமைப்புகள் தொடர்கின்ற வழக்குகளில் நீதிமன்றங்கள் விரைவாகத் தீர்ப்பளிப்பதும் இல்லை. காட்டாக, சமீபத்தில் கொல்லப்பட்ட மாவோயிஸ்டு நவீன் பிரசாரத்தின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமெனக் கோரி மேற்கொள்ளப்பட்ட வழக்கு தள்ளிக் கொண்டே போகிறது. மோதலில் கொல்வதற்கு முன்னரே நபர்கள் கைது செய்யப்படுவது குறித்து நம் எல்லோருக்கும் தெரியும். அது குறித்து ஆட்கொணர்வு மனு போட்டால் விரைவாகத் தீர்ப்பு வழங்குவதும் இல்லை. சமீபத்தில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் அவர்கள் தாங்கள் பொதுச் சேவர்கள் அல்ல,அரசமைப்புச் சட்டக் காப்பாளர்கள் எனவும் கூறியுள்ளார்.

அரசியல் சட்டக் காப்பாளர்கள் மட்டுமல்ல, குடிமக்களின் உயிரையும் காக்க முடியும் என்பதை உணர்ந்து அவர்கள் செயல்பட்டால் பல உயிர்களைக் காக்க முடியும். சிறையில் இருந்த மணல்மேடு சங்கரின் தாய், தன் மகன் என்கவுண்டர் செய்யப்படலாம் என நீதிமன்றத்தில் புகார் செய்தார். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை யென காவல்துறை சொல்லியது. ஆனால், அவர் அவ்வாறே கொல்லப்பட்ட போது இந்த நீதிமன்றம் என்ன செய்தது? இதுபோன்ற பல வழக்குகளையும் என்னால் சொல்ல முடியும்.

போலி மோதல் குறித்து நீதிமன்றம் உறுதியாக நடவடிக்கை எடுத்த வழக்கு ஏதும் உண்டா?

சில வழக்குகள் பற்றிச் சற்றுமுன் சொன்னேன். ஆனால் ஒன்று. இதுவரைக்கும் பெரிய அளவில் காவல்துறையினர் இத்தகைய வழக்குகளில் தண்டிக்கப்பட்டது இல்லை. சொராபுதின் வழக்கு இந்தியத் துணைக்கண்ட அளவில் ஒரு முக்கியப் பிரச்சனையாக மாறியதால் வன்சாரா,ராஜ்குமார் பாண்டியன் மற்றும் பல காவல் துறையினர் சுமார் இரண்டாண்டுகளாகப் பிணையில் வெளிவராத நிலையில் உள்ளனர். வன்சாராவைப் பெரிய தேசபக்தன் எனவும், தேசத்துரோகம் செய்ய வந்த முஸ்லிமைக் கொன்ற வீரன் எனவும் இந்துத்துவவாதிகள் முன்வைத்து ஆதரவு திரட்டுகின்றனர். வன்சாரா நீதிமன்றத்திற்கு வரும் போதெல்லாம் ‘பாரு பாரு யாரு வருது, குஜராத்தின் சிங்கம் வருது’ என்று அவரின் சாதிக்காரார்களையும் உறவினர்களையும் வைத்து முழக்கமிடச் செய்கின்றனர். இப்படியான அரசியலும் ஒரு பக்கம் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

போலி மோதல் குறித்து அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

இந்திய அளவில் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் பெரிய வேறுபாடு இருப்பதாகச் சொல்ல முடியாது. 1949ல் ஜவஹர்லால் நேரு தேசப் பாதுகாப்பிற்கு ஆபத்தானவர்கள் என மூன்று பிரிவினரைச் சுட்டிக் காட்டினார். 1.வகுப்பு வாதிகள் 2.கம்னியூஸ்டுகளில் சிலர் 3.தேச ஒற்றுமைக்கு எதிரானவர்கள். இன்றைய அரசியல் மொழியில் இந்த மூன்று பிரிவினரையும் கீழ்க்கண்டவாறு சொல்லலாம்: 1.முஸ்லீம் தீவிரவாதிகள், 2.மாவோயிஸ்டுகள், 3.தேசிய விடுதலைக்காக ஆயுதம் தாங்கிப் போராடுபவர்கள். உலகமயச் சூழலில் தற்போது ரவுடிகளும் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள் அவ்வளவுதான்.

பொதுவுடமையாளர்களைப் பொறுத்தமட்டில் அவர்கள் மனித உரிமையைப் பற்றிப் பேசியதில்லை என்கிற குற்றச்சாட்டு உண்டு. சோவியத்து ருஷ்யாவில் மக்களுக்கு ஆட் கொணர்வு மனு உரிமைகூட அளிக்கப்பட்டது இல்லை. இபொக,மார்க்சிஸ்டுக் கட்சி இரண்டுமே பொதுவாக மனிதவுரிமைப் பிரச்சினைகளைப் பேசுவதில்லை. சொல்லப்போனால் அவர்கள் ஆளும் மாநிலங்களில் அவர்களே மனிதவுரிமை மீறல்களுக்குக் காரணமாகவும் இருக்கிறார்கள். பிற சிறிய அமைப்புகளும்கூட அவரவர் சார்ந்த மனிதவுரிமை மீறல்கள் நடைபெறும்போது மட்டுமே எதிர்வினை ஆற்றுகின்றன. முஸ்லீம்கள் பிரச்சனையில் பொதுவாக யாரும் அக்கறை காட்டுவதில்லை. முஸ்லீம்களும் அவர்கள் பிரச்சனைகளுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றனர். ஆனால், இன்று எல்லாத் தரப்பினர் மீதும் கடுமையான தாக்குதல்கள் மேற்கொள்ளப் படுவதை முன்னிட்டுச் சிறிய அமைப்புகள் கைகோர்க்கத் தொடங்கியுள்ளன. இது வரவேற்கத்தக்க அம்சம். இந்நிலையில் சென்ற 22 ஆம் தேதி சட்டமன்றத்தில் முதலமைச்சர் கருணாநிதி இது குறித்துப் பேசும்போது, தீவிரவாதத்தை ஒடுக்குவதில் ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் இணைந்து செயல்பட வேண்டும் எனக் குறிப்பிட்டது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இயற்கைச் சீரழிவுகளின் போது எதிர்க்கட்சியினர் ஒத்துழைப்பது போலத் தீவிரவாதத்தை ஒடுக்குவதிலும் ஒத்துழைக்க வேண்டுமாம். இது காவல்துறை அத்துமீறல்களை ஊக்குவிக்கும் பேச்சு. இதை முதல்வர் திரும்பப் பெற வேண்டும்.

போலி மோதல் கொலைகளை வெளிப்படுத்திக் குற்றவாளிகளைக் கூண்டிலேற்ற என்ன செய்ய வேண்டும் எனக் கருதுகிறீர்கள்?

முதலில் போலி மோதல் கொலை தொடர்பாக மக்கள் மத்தியில் உள்ள தவறான கருத்துகளை நீக்குவதற்குக் கருத்துப் பரப்புரை முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். மனிதவுரிமைகளில் அக்கறையுள்ள அமைப்பினர் அனைவரும் ஒன்றாக இணைந்து போலி மோதல்களை எதிர்க்க வேண்டும். ஊடகத் துறையினர்,அரசியல் கட்சியினர் ஆகியோருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு போலி மோதலுக்கு எதிராகக் கருத்துத் தெரிவிக்குமாறு அவர்களை வற்புறுத்த வேண்டும். போலி மோதல்கள் தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள நெறிமுறைகளை உடனடியாகப் பின்பற்ற வேண்டும் என்கிற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்த வேண்டும். மருத்தவர் இராமதாசு அவர்கள் கூறியுள்ளது போல எல்லா மோதல் கொலைகள் குறித்தும் விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.

“ஆயுதம் தாங்கிய எதிர்ப்புகளை நாங்கள் ஆயுதம் கொண்டு எதிர்கொள்ளாமல் சாக வேண்டுமா?” எனக் காவல்துறையினர் கேட்பார்கள். அப்படியான சந்தர்பங்களில் அவர்கள் கேமரா(camera) பொருத்திய துப்பாக்கிகளைப் பயன்படுத்த வேண்டும். உண்மையிலேயே கொல்லப்பட்டவர்கள் தப்பியோட முயன்றார்களா,எதிர்த் தாக்குதல் மேற் கொண்டார்களா,தற்காப்புக்காகத்தான் சுட்டார்களா என்பது அப்போது வெட்ட வெளிச்சமாகும். தீவிரவாதப் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வுகளே காண முடியும் என்ற கருத்தை வலியுறுத்த வேண்டும். 2006ம் ஆண்டில் இந்திய அரசின் திட்டக்குழு, பந்தோப்பாத்தியாயா என்கிற ஒய்வு பெற்ற IPS அதிகாரி ஒருவரின் தலைமையில் குழு ஒன்றை நியமித்தது. மேற்கு வங்கத்தில் நக்சல்களை எதிர்கொள்வதில் இவர் முக்கியப் பங்காற்றியவர். முன்னாள் உத்திரப்பிரதேசக் காவல்துறை இயக்குனர் பிரகாஷ் சிங், பல்கலைக்கழக மானியக் குழுத் தலைவர் சுக்தியோ தோரத், புகழ் பெற்ற மனித உரிமைப் போராளி பாலகோபால் மற்றும் பலர் இக்குழுவில் பணியாற்றினர். இவர்கள் அளித்துள்ள பரிந்துரைகளின் சுருக்கம் ஏப்பரல் 28 ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளிதழில் வெளிவந்துள்ளது. பழங்குடியினரின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவது, குறிப்பாக அவர்கள் குடியிருக்கும் இடமே அவர்களுக்குச் சொந்தமில்லாத நிலை… இவற்றையெல்லாம் கவனத்தில் எடுத்துக் கொண்டு உரிய வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படாமல் வெறும் சட்டம் – ஒழுங்குப் பிரச்சனையாகவே அணுகி நக்சல் பிரச்சனையைத் தீர்த்துவிட முடியாது என அக்குழு அறிவுறுத்தியுள்ளது. கருணாநிதியும் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

டாக்டர் ராமதாசிடம் நிறப்பிரிகை நேர்காணல்

(1992-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிறப்பிரிகை இதழில் வெளிவந்தது)

நாள் : 15.11.1991 வெள்ளி மாலை 6 மணி.
இடம் : டாக்டர் ராமதாஸ் அவர்களின் மருத்துவமனை, திண்டிவனம்.
பங்கேற்பு : நிறப்பிரிகை ஆசிரியர் குழு(அ.மார்க்ஸ், ரவிக்குமார், பொ.வேல்சாமி)வைத் தவிர தோழர் பா.கல்யாணி.

குறித்த நேரத்திற்கு டாக்டர் ராமதாஸ் காத்திருந்தார். நாங்கள் ஏற்கெனவே கொடுத்திருந்த நிறப்பிரிகை இதழ்களைப் படித்திருந்தது பேச்சில் வெளிப்பட்டது. கத்தர், காகர்லிட்ஸ்கி பேட்டிகளும், சாதி ஒழிப்புக் கட்டுரையும் அவரைக் கவர்ந்திருந்தன. சுமார் ஒன்றரை மணி நேரம் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. அரசியல்வாதிகளுக்குரிய குயுக்தி, தந்திரம், சாதுரியம் ஏதுமின்றி மிகவும் எளிமையாகப் பதில்கள் வந்தன. இடையில் இரண்டு நோயாளிகள் வந்தனர். பெயரச்சிடப்படாத வெள்ளைத் தாள்களில் மருந்துகள் எழுதினார். ஒரு சிறுவன் மருந்துச் சீட்டைக் கொடுத்து – அம்மாவுக்கு குணமாகவில்லை வேறு மருந்து வேண்டுமென்றான். சீட்டை வாங்கிப் பார்த்துவிட்டு – ஒரு தடவை மட்டும் சாப்பிட்டிருப்பாங்க, இன்னும் இரண்டு வேளை சாப்பிட்டு விட்டு வரச் சொல் – என்றார். பேட்டி தொடங்கியது.

கேள்வி:
ஓட்டுக் கட்சிகளில் பா.ம.க. மட்டுமே பார்ப்பனர்கள் உறுப்பினர்கள் ஆக முடியாத கட்சி என அறிகிறோம். இன்று தமிழகத்தில் ‘பார்ப்பன மறுமலர்ச்சி’ என்று சொல்லத்தக்க நிலைமைகள் ஏற்பட்டுள்ளன. ஒரு கோடி ரூபாய் செலவில் வேதாகமக் கல்லூரி தொடங்கப்பட இருக்கிறது. இதனை எப்படி எதிர்கொள்ளப் போகிறீர்கள்? இருபது சத இட ஒதுக்கீட்டிற்காக வன்மையான போராட்டம் நடத்தியது போல இப்போதும் நடத்துகிற திட்டம் ஏதுமுண்டா?

பதில்:
பார்ப்பனர்களை நாங்கள் கட்சியில் சேர்ப்பதில்லை. வருணாசிரமம் அவர்களால்தான் உருவாக்கப்பட்டு கட்டிக் காக்கப்பட்டு வருகிறது. இதுவே இன்றைய சாதீய உறவுகளுக்குக் காரணமாக இருப்பதால் தான் இந்த முடிவு.

வேதாகமக் கல்லூரி, கோயில்களுக்கு நிதி திரட்டுவது முதலியன பார்ப்பனியத்தை வளர்க்கும் திட்டமிட்ட நடவடிக்கைகள். பாரதீய ஜனதா கட்சியின் புரிதலுடன் ஜெயலலிதா செயல்படுகிறார். சங்கர மடத்தின் அறிவுரைகளும் பின்னணியில் உள்ளன. தேர்தல் அறிக்கையில் சொன்ன விசயங்கள், மக்களைப் பாதிக்கிற எத்தனையோ பிரச்சினைகள் இருக்கும்போது இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்திருப்பதை பாரதீய ஜனதா, காங்கிரஸ், பார்ப்பனர்கள் தவிர மற்ற எல்லோருமே எதிர்க்கிறார்கள். ஓட்டுப் பொறுக்கும் கட்சிகளுக்குள் நாங்கள் வித்தியாசமான கொள்கையுடையவர்கள். இதை நாங்கள் வன்மையாக எதிர்க்கிறோம். இதன் ஆபத்துக்களை விளக்கி அறிக்கைகள் முதலியவற்றை பா.ம.க. இளைஞர்களுக்கு வினியோகிக்கிறோம். மாவட்ட அளவில் இளைஞர் அணி, மாதர் அணி போன்றவற்றைக் கூட்டி விளக்குகிறோம். ஒட்டுமொத்தமான ஒரு போராட்டத்தைத் தொடங்குவதற்கு முன்னால் இந்தப் பிரச்சார வேலையில் இறங்கியுள்ளோம்.

பஸ் கட்டண உயர்வு மக்களை வெகுவாகப் பாதித்திருக்கிறது. விவசாயிகள் பிரச்சினை, விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு என மக்களுக்குத் தொடர்ந்து பல பிரச்சினைகள். எதற்கு உடனடி முக்கியத்துவமளிப்பது என்பதைச் சிந்திக்க வேண்டியிருக்கிறது. போராட்டம் ஒரு மாதத்தில் முடிகிற காரியமல்ல. போராட்டம், பின் விளைவுகள், பாதிப்புகள் எல்லாவற்றையும் கணக்கிலெடுக்க வேண்டும். பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளோம். பின்னர் வேதாகமக் கல்லூரி ஆரம்பிக்கும்போது பெரிய போராட்டம் ஒன்றைத் தொடங்குவோம்.

கேள்வி:
தி.மு.க. மேற்கொண்டிருக்கும் ‘திராவிட மறுமலர்ச்சி’ நடவடிக்கையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்:
திராவிட மறுமலர்ச்சி என்கிற பெயரில் பார்ப்பனர்-பார்ப்பனரல்லாதோர் எனப் பேசி லாபமடைந்தவர்கள் ஒரு சில சாதியினர் தான். ஒட்டுமொத்தமான திராவிட சமுதாயமல்ல. பார்ப்பனரல்லாதவர் எனப் பார்க்கும்போது தாழ்த்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மக்கள் எந்தப் பலனும் அடையவில்லை. பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பொருளாதார நிலையிலும், சமுதாய நிலையிலும் முன்னேறியிருந்த ஒரு சில சாதியினர் தான் பலன் பெற்றுள்ளனர். இட ஒதுக்கீடு, கல்வி, அரசு வேலை எதுவாக இருந்தாலும் அவர்கள் தான். எனவே இன்று திராவிட மறுமலர்ச்சி என்று அவர்கள் பேசும்போது ஓட்டுப் பொறுக்குவதற்காகத்தான் இந்த வழிமுறைகளைக் கையாள்கிறார்கள் என்கிற எண்ணம் ஏற்படுகிறது.

இது பற்றிய வெளிப்படையான விவாதத்திற்கு அவர்கள் தயாராக இருந்ததில்லை. பல முறை நான் இதனைப் பகிரங்கமாகப் பேசி இருக்கிறேன். தி.க. மாநாடுகளிலே கூடப் பேசி இருக்கின்றேன். அப்போதெல்லாம் பதில் சோல்லி என்னைப் பெரிய மனிதனாக்க வேண்டாம் என்றெல்லாம் கேலி பேசினார்கள். சில வருடங்களுக்கு என்னை அவர்கள் மாநாடுகளுக்கு கூப்பிடாமல் கூட இருந்தார்கள்.

கேள்வி:
இன்றைய தேர்தல் அரசியலில் மக்கள் தொடர்புச் சாதனங்களின் பங்கு மிக முக்கியமாக இருக்கிறது. ஐந்தாண்டுகளுக்கு முன்பு ஈழத் தமிழர்களுக்கு தமிழ் நாடே ஆதரவாக இருந்தது. இன்று ஈழத் தமிழர்களுக்கெதிராக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கெதிராக மக்கள் எழுச்சி ஏற்படாததில் பத்திரிகைகள், தொலைக்காட்சி ஆகியவற்றின் பங்கு மிக முக்கியமாக இருக்கிறது. மக்கள் தொடர்புச் சாதனங்கள் முழுமையாக பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டில் இருப்பது இதற்கொரு காரணமாக இருக்கிறது. பா.ம.க. பற்றி எழுதும்போது கூட ஒவ்வொரு முறையும் “An outfit of Vanniyar Sangam” என்று எழுதத் தயங்குவதில்லை. இவற்றை நீங்கள் கணக்கிலெடுத்துக் கொண்டதுண்டா? இதனை எதிர்கொள்ள என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?

பதில்:
பத்திரிகைகள் பார்ப்பனர்கள் கையிலிருக்கிறது. மேலும் சில பத்திரிகைகள் பிற்படுத்தப்பட்ட – நாடார்களின் கையில் இருந்தாலும் அவையும் வியாபார நோக்கில் மக்களுக்கு எதிராக இருக்கிறது. இவர்கள் ஈழ மக்களுக்கெதிராக, புலிகளுக்கெதிராக, தமிழ்த் தேசிய உணர்வுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள். இதற்குத் தீர்வாக நாங்கள் – பல குறைகள் இருந்தாலும் கடந்த – மூன்றாண்டு காலமாக தினசரி ரூ.2,000/- நஷ்டத்தில் தினப்புரட்சி” நடத்துகிறோம். ஆட்சியாளர்கள்-ஜெயலலிதா, கருணாநிதி, ராஜீவ் என யாராக இருந்தாலும் கடுமையாக விமர்சனம் செய்கிறோம். இதனால் எங்களுக்கு அரசு விளம்பரங்கள் கிடையாது. ஒரு ஐம்பது வன்னியர்கள் ஆளுக்கு பதினைந்தாயிரம் ரூபாய் போட்டுத் தொடங்கிய நிறுவனம் இது. இதில் முழுக்க ஒரு பண்பாட்டுப் புரட்சியை, சமூக மாற்றத்தை உள்ளடக்கும் நோக்கில் கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. அறிவு ஜீவிகள், அறிஞர்கள் இதனை ஒரு சாதிப் பத்திரிகையாகத்தான் பார்க்கிறார்கள். அவர்கள் இதனைத் தங்களது பத்திரிகையாக ஆக்கிக் கொள்ளலாம். எந்த விமர்சனமும் செய்யலாம். குறைகளை நீக்க வழி செய்வோம். வியாபார-பார்ப்பனப் பத்திரிகைகளுக்கெதிராக வெகுமக்கள் பத்திரிகையாக இதனை ஆக்கிக் கொள்ளலாம். அல்லது இந்த நோக்கில் வேறு யாரேனும் பத்திரிகை தொடங்கினால் அதையும் வரவேற்கிறோம். தேவையான ஒத்துழைப்புத் தரத் தயாராக இருக்கிறோம். தமிழ் மக்களின் எதிரியே இந்த பார்ப்பன-வியாபாரப் பத்திரிகைகள்தான். நம் முன்னர் இருக்கும் உடனடிப் பிரச்சினை இதுதான். டி.வி., ரேடியோவும் வெகு மக்களுக்கு எதிரானதுதான் என்றாலும், அரசதிகாரத்தைக் கைப்பற்றாமல் அதை நாம் உடனடியாக மாற்ற முடியாது.

கேள்வி:
மாற்றுப் பத்திரிகை என்பது ஒரு தீர்வுதான். இந்தச் சூழலிலேயே மக்களுக்கெதிராக அவதூறுகள் பரப்புகிற பத்திரிகைகளில் தலையிடுவதும் ஒரு தீர்வாக அமையலாமே. இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது இப்படி நடந்ததே. இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டவுடன் நிலைமை சற்று மாற்றமடைந்ததே! அருண்சோரி போன்றோர் நீக்கப்பட்டதற்குக் கூட இது ஒரு காரணமில்லையா?

பதில்:
உண்மைதான். இவ்வாறு அவதூறுகள் பரப்பப்படும்போது டி.வி., ரேடியோ, பத்திரிகைகள் முன் உடனடியாகக் கூடிப் போராடலாம். ஓட்டுப் பொறுக்காத கட்சிகள் தனித்தனியாகவும், சேர்ந்தும் குரல் கொடுக்கலாம். என்னுடைய தனிப்பட்ட கருத்து: ஒரு சிறிய அளவிலாவது வன்முறையுடன் கூடிய பாடம் கற்பித்தாலொழிய – பாதிப்புகளை உருவாக்கினாலொழிய இது சரியாகாது. பார்ப்பனர்களே முழுக்க முழுக்கத் தொலைக்காட்சி-ரேடியோவை ஆக்கிரமித்துள்ள நிலை மாறி தாழ்த்தப்பட்டோர்/பிற்படுத்தப்பட்டோர் பெரிய அளவில் பங்குபெறும் போது அங்கும் நிலைமை ஓரளவு சீரடையலாம். “தினமலர்” போன்ற மக்கள் விரோதப் பத்திரிகைகளை வாங்கக் கூடாது என மக்கள் மத்தியில் பிரச்சாரம் செவதும் பயனளிக்கும்.

கேள்வி:
பொதுவான மக்கள் மத்தியிலும் கூட பா.ம.க. என்பது வன்னியர் கட்சி என்கிற எண்ணமே நிலவுகிறது. புவியியல் ரீதியாகவும் ஒரு சில மாவட்டங்களில் மட்டுமே பா.ம.க. இருக்கிறது. இந்நிலை மாற என்ன செய்கிறீர்கள்? பொதுவான தாழ்த்தப்பட்ட-பிற்படுத்தப்பட்ட மக்களின் கட்சியாக இதனை உருவாக்குவது எப்படி?

பதில்:
இந்த நிலைமை இப்போது மாறி வருகிறது. சமீபத்திய பஸ் மறியல் போராட்டத்தில் பாளையங்கோட்டைச் சிறையில் 400 பேரும், மதுரையில் 1200 பேரும் அடைபட்டிருந்தனர். கோவை, குமரி மாவட்டங்களிலும் போராட்டம் நடைபெற்றது. நாங்கள் வளரக் கூடாது என அரசு எந்திரமும், ஊழல் பத்திரிகைகளும் திட்டமிட்டு எங்களை வன்னியர் கட்சி, படையாச்சி கட்சி எனப் பிரச்சாரம் செய்கிறார்கள். நல்ல முற்போக்குச் சிந்தனையுடன் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஒரு கட்சி வளரக் கூடாது என்கிற கருத்து இந்தச் சக்திகளிடம் உள்ளது. இதை விட நல்ல சிந்தனையுள்ள ஒரு கட்சி இருந்தால் நான் அதில் சேர்ந்து விடத் தயார். தனி நபர் வழிபாடு உருவாகாமல் தடுக்கவும் முயற்சிக்கிறோம்.

போஸ்டரில் என் படம் பெரிதாய்ப் போடுவதைக் குறைக்கச் சொல்கிறோம். தினப்புரட்சியில் என் படம் தலைப்பில் போட வேண்டும் எனச் சொன்ன போது, கடுமையாகப் போராடி அதனை மாற்றி மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் படம் போட வைத்தோம். தனி நபர் வழிபாட்டைக் குறைக்க தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறோம். பயிற்சி வகுப்புகள் நடத்துகிறோம். சமுதாயம் தெளிவு பெற்றால் இந்நிலைமை மாறும். கட்சி கார்டில் கூட என் படம் இல்லை.

கட்சியின் கொள்கையில் ஓட்டு வாங்குவது கடைசிக் குறிக்கோள் தான். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றிணைத்து சமுதாய மாற்றத்தை உருவாக்குவதே நோக்கம். தேர்தல் சமயத்தில் கூட இதனால்தான் எந்தக் கட்சியுடனும் கூட்டுச் சேராமல் விலகி நின்றோம்.

கேள்வி:
“தாழ்த்தப்பட்டவரை முதல்வராக்குவோம்” என அறிவித்த ஒரே கட்சியாக இருந்த போதிலும் கூட, தமிழகமெங்கிலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பா.ம.க. மீது ஒரு ஐயம் இருக்கவே செய்கிறது. இதனை எவ்வாறு போக்கி தாழ்த்தப்பட்ட மக்களின் நம்பிக்கையைப் பெறப் போகிறீர்கள்?

பதில்:
முன்பு தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் எங்கள் போஸ்டர் ஒட்டினால் கிழிப்பார்கள். இப்போது நிலைமை மாறி வருகிறது. அண்ணல் அம்பேத்கரின் கொள்கையிலான கட்சியாக பா.ம.க.வை முன் வைக்கிறோம். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள், உழைக்கும் மக்கள் இவர்களுக்குள் மோதல் கூடாது. இம்மக்களுள் அரசு ஊழியர்கள், படித்த இளைஞர்கள் போன்றோர் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர். ஓட்டு வாங்கத்தான் இப்படிச் சோல்கிறோம் என்கிற பயம் தேர்தல் நேரத்தில் இருந்திருக்கலாம். திட்டமிட்ட பிரச்சாரத்தின் மூலமே முழுமையான நம்பிக்கையைப் பெற வேண்டும். ஷெட்யூல்டு இன மக்களைப் பொறுத்தமட்டில் தமிழகத்தில் சுய நலமில்லாத அரசியல் ரீதியான தலைவர்கள் யாருமே இல்லை. இப்போதுள்ள தலைவர்களின் பிடியிலிருந்து என்றைக்கு விடுபடுகிறார்களோ சமூக மாற்றமும், அரசியல் மாற்றமும் அப்போதுதான் பிறக்க வழி ஏற்படும். இந்த அரசியல் தலைவர்களின் பிடியிலிருந்து விடுபட்டால் வெகு சீக்கிரமே பா.ம.க. அம்மக்களைப் புரிய வைத்து ஒரு பெரிய வலுவான அரசியல் இயக்கமாக ஆக முடியும். விரைவில் பா.ம.க.வை நம்பி ஷெட்யூல்டு இன மக்கள் நிச்சயம் வருவார்கள்.

தாழ்த்தப்பட்டவர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக பா.ம.க. சில திட்டங்களை அறிவித்துள்ளது. பறையடித்தல், பிணம் சுடுதல், செத்த மாடு புதைத்தல் போன்றவற்றை அவரவர்களே செய்து கொள்ள வேண்டும் எனவும், பொதுக்குளம், பொதுக்கிணறு ஆகியவை கடைபிடிக்கப்பட வேண்டும் எனவும், மறைமுகமான தீண்டாமைக் கொடுமைகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அறிவித்து செயல்படுத்துகிறோம். பா.ம.க.வால் மட்டுமே தீண்டாமைக் கொடுமையை ஒழிக்க முடியும். வெகு மக்களாக உள்ள ஷெட்யூல்டு இன, மிகப் பிற்படுத்தப்பட்ட மக்கள் இந்தச் சமூக மாற்றத்தை விரும்பி ஏற்கும்போது வேறு எந்தச் சக்தியும் குறுக்கே வந்து நிற்க முடியாது.

பா.ம.க. என்றால் வன்னியர் கட்சி எனத் தாழ்த்தப்பட்ட மக்கள் நினைப்பது ஒரு புறம். இன்னொரு பக்கம் இந்தப் பிரச்சினை குறித்து சமூகப் பிரக்ஞையுள்ள கம்யூனிஸ்ட், தி.க. கட்சிகள் போதிய அக்கறை காட்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இங்கே வன்னியர்/ஆதி திராவிடர், தெற்கே முக்குலத்தோர்/பள்ளர், கோவையில் கொங்கு வேளாளர்/அருந்ததியர் பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கில் ஓட்டுப் பொறுக்காத பொதுவான அமைப்புகள் கருத்தரங்கம், மாநாடு நடத்தினால் அங்கெல்லாம் பா.ம.க. துணை நிற்கும்.

கேள்வி:
இம்முடிவுகளை அணிகள் மத்தியில் கொண்டுபோகும் போது உங்கள் அனுபவம் எப்படி? தாழ்த்தப்பட்டவர்களைப் பொறுத்தமட்டில் தீண்டாமைக் கொடுமையே தலையான பிரச்சினை. இதற்கெதிரான போராட்டங்கள் ஏதும் எடுத்துள்ளீர்களா? பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட அணியினர் மத்தியில் இருக்கும் உயர்சாதி மனப்பான் மையைத் துடைத்தெறிய என்ன முயற்சிகள் மேற்கொண்டுள்ளீர்கள்?

பதில்:
கிராம அளவில் இப்பிரச்சினைகள் பேசப்படும் அளவிற்குப் பதிய வைத்துள்ளோம். கூட்டங்களில் நானே மாடு புதைப்பேன் எனப் பேசியது நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல இடங்களில் பறை அடிப்பது நிறுத்தப்பட்டு விட்டது. சில இடங்களில் தாழ்த்தப்பட்டவர்களே தங்களது வருமானம் பாதிக்கப்படுகிறது எனத் தானாகவே முன்வரும்போதுதான் ஏதும் செய முடிவதில்லை. இழிவு என்பதனால் அதைச் செய்யவே வேண்டாம் எனச் சொல்கிறோம். செயல் வடிவத்தில் முழுமையாக வரா விட்டாலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளோம். தாழ்த்தப்படவர்களுக்குக் குடியிருப்பு ஊர் நடுவில் கட்ட வேண்டுமென்கிறது எங்கள் தேர்தல் அறிக்கை. ஒன்றை சொல்ல விரும்புகிறேன். இந்தக் கருத்தைத் திரித்து எல்லா இடங்களிலும் பேசித் திரிந்தது தி.க., தி.மு.க.வினர்தான். “டாக்டர் பாரு, பறையனையெல்லாம் நடுவில் வைக்க வேண்டுமென்கிறார்” என ஒவ்வொரு ஊரிலும் தி.மு.க.வினர் பேசினர். இதன் விளைவாக ஒரு அரை சதவீதம் ஓட்டுக்கள் எங்களுக்குக் குறைந்தது என்றாலும், இது பற்றி எங்களுக்குக் கவலை இல்லை. கட்சிப் பொறுப்புகளில் கூட எங்கெல்லாம் தாழ்த்தப்பட்டவர்கள் முன் வருகிறார்களோ அங்கெல்லாம் அவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கிறோம். பிற கட்சிகளில் இந்நிலைமை இல்லை. தாழ்த்தப்பட்டவர் அணி எனத் தனியாக வைத்து அதில் பொறுப்புத் தருவார்களே யொழிய பொதுப் பொறுப்புகளைத் தருவதில்லை. எங்கள் கட்சியில் பொதுச் செயலாளரே தாழ்த்தப்பட்டவர். செங்கை மாவட்டத்தில் தலைவர், தஞ்சையில் தலைவர், நாகை மாவட்டத்தில் செயலாளர் இவர்களெல்லாம் ஆதி திராவிடர்கள்தான். எங்கள் கட்சியின் மூதறிஞர் அணித் தலைவர் மணியரசு நாராயணசாமி அவர்களும் ஒரு ஆதி திராவிடர்தான்.

கேள்வி:
தீண்டாமைக் கொடுமை என்பது கலாச்சார ரீதியாக வெளிப்படுவது. இதனை எதிர்த்த நடவடிக்கைகள் கலாச்சாரத் தளத்திலும் நடைபெற வேண்டும். அத்தகைய திட்டங்கள் ஏதும் உண்டா? மஞ்சள் துண்டணிவது, அக்னித் திருவிழாக்கள் நடத்துவதென்பதெல்லாம் பா.ம.க.வினரால் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றின் பொருளென்ன? தாழ்த்தப்பட்டோரின் பண்பாட்டு அடையாளம் எதையும் பொதுக் குறியீடாக மாற்றும் திட்டமுண்டா?

பதில்:
குறிப்பிட்ட வடிவம் ஏதும் கிடைத்தால் செய்வதில் தடையில்லை. கட்சிக் கொடியில் மஞ்சள் சிவப்புடன் நீலமும் இருக்க வேண்டும் என்கிற கருத்து வந்தபோது உடனடியாக ஏற்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் சில ஊர்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனி ‘டீ க்ளாஸ்’ வைக்கும் பழக்கம் உள்ளதைக் கேள்விப்பட்டு அதனைக் கடுமையாக எதிர்த்துப் பேசினேன். மீன் சுருட்டியில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்து எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து டீ குடித்து அந்தப் பழக்கத்தை முடிவுக்குக் கொண்டு வந்தோம். தனி டீ கிளாஸ் பழக்கம் எங்காவது இருந்தால் அங்கு நானே வந்து போராடுவேன் எனப் பேசியதைத் தொடர்ந்து பல ஊர்களில் இப்பழக்கம் ஒழிக்கப்பட்டது. கூட்டங்களுக்கு பேசுவதற்கு அழைக்கும் போது கூட பொதுக்கிணற்றில் நீர் எடுப்பது, கோயில்களில் சம மரியாதை போன்ற செயல் திட்டங்களுடன் இணைந்த கூட்டங்களுக்கே முன்னுரிமை கொடுத்துப் போறேன்.

அண்ணல் அம்பேத்கர் நூற்றாண்டை தமிழக அரசு சரியாகக் கொண்டாடவில்லை. நாங்கள் சிறப்பாகக் கொண்டாடினோம். சுமார் பத்து இடங்களில் அம்பேத்கருக்குச் சிலைகள் திறந்துள்ளோம். இது இளைஞர்கள் மத்தியில் மனமாற்றத்தை உண்டு பண்ணியுள்ளது. வன்னியர்கள் பெரும்பான்மையாக உள்ள ஊர்களில் பதட்டம் குறைந்துள்ளது. தாழ்த்தப்பட்ட பையன்கள் வன்னியப் பெண்களைக் காதலிப்பது போன்ற விஷயங்கள் இப்போது அதிகம் பெரிதுபடுத்தப்படுவதில்லை. பெரும் தண்டனைகள் கொடுக்கப்படுவதில்லை. இவைகளெல்லாம் நல்ல மாற்றங்களானாலும் இதுவரை செய்யப்பட்டுள்ளவை ரொம்பக் குறைவுதான். இன்னும் செய்ய வேண்டியவை எவ்வளவோ இருக்கிறது. பா.ம.க. ஒரு அரசியல் கட்சியாகவும் இருப்பதால் இத்தகைய பிரச்சினைகளில் முழுமையான கவனத்தைச் செலுத்த முடியவில்லை. மக்களைப் பாதிக்கிற இதர பிரச்சினைகளும் வந்து விடுகின்றன. இதில் வருத்தப்பட வேண்டியது என்னவென்றால் தாழ்த்தப்பட்டவர்கள் தபு இயக்கங்கள் எதுவும் இப்படியான பிரச்சினைகளைத் தீர்க்கும் போராட்டங்களுக்காக எங்களை அணுகியதில்லை.

கேள்வி: (கல்யாணி குறுக்கிடுகிறார்)
கட்சியில் பல்வேறு வெகுஜன அணிகள் வைத்திருக்கிறீர்கள். தீண்டாமை ஒழிப்பு அணி என்று ஒன்று தனியாக அமைக்கலாம். தாழ்த்தப்பட்டவர்கள் தலைமையில் அது இயங்கலாம். தீண்டாமைப் பிரச்சினைகளை மட்டுமே அது கவனத்தில் எடுத்துச் செயல்படலாம்.

பதில்:
ரொம்ப அருமையான கருத்து. இதுவரை யாரும் சொன்னதில்லை. இதை உடனடியாக நிறைவேற்றுவோம். சாதி ஒழிப்புக் கூட்டு விவாதத்தில் உங்கள் வீட்டில் மாட்டுக்கறி விருந்தளித்ததாகப் பார்த்தேன். ரொம்ப நன்றாக இருந்தது. நாங்களும் இப்படிச் செய்வோம். நான் கூட கூட்டங்களில் பேசுவதுண்டு – உங்களில் பாதிப் பேர் பன்றிக் கறி சாப்பிடுகிறீர்கள். பன்றியாவது மலம் தின்கிறது. ஆட்டுக்கும் மாட்டுக்கும் என்ன வித்தியாசம்? மாட்டுக்கறி சாப்பிடுங்கள் – என்பேன்.

கேள்வி:
அரசில் குறுக்கிட்டு ஸ்தம்பிக்கச் செய்வது என்கிற போராட்ட வடிவத்தை எங்கிருந்து முன்மாதிரியாகப் பெற்றீர்கள்?

பதில்:
முன்மாதிரி என்று எதையும் பார்க்கவில்லை. அரசின் கவனத்தை ஈர்க்க வேண்டும். ரொம்பவும் நியாயமான கோரிக்கை என்பதால் மக்கள் பெருமளவில் முன்வந்தார்கள். தாழ்த்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் நாங்கள் பங்கு கோருகிறோம் என்கிற தவறான பிரச்சாரம் செய்யப்பட்டது. இதனை எதிர்த்து மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக தாழ்த்தப்பட்டவர்களுக்கு 22 சதம் வன்னியர்களுக்கு 20 சதம் எனப் போராடினோம்.

கேள்வி:
ஈழ மக்களுக்கெதிராக தமிழக அரசு சமீபத்தில் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கெதிராக ஓட்டுக் கட்சிகளில் ஓரளவு குரல் கொடுத்தது பா.ம.க.தான். இன்னும் வன்மையாக நீங்கள் குரல் கொடுத்திருக்க முடியும். அதன் மூலம் திராவிட இயக்கங்களைத் தோலுரித்து ஒரு மாற்று அரசியல் சக்தியாகப் பரிணமித்திருக்க முடியும். அந்த வாய்ப்பை இழந்து விட்டீர்கள் என்றே கருதுகிறோம்.

பதில்:
ஈழ மக்களுக்கும், புலிகளுக்கும் எதிரான நடவடிக்கைகளைக் கண்டித்துப் பேசினேன். ஆதரவாக நின்ற அமைப்புகள் மீது நடவடிக்கை எடுத்தபோது அதனையும் கண்டித்தோம். ராமகிருஷ்ணன் முதலியோரை சிறையில் சென்று பார்த்தேன். இதர சிறிய அமைப்புகளுடன் சேர்ந்து சில நடவடிக்கைகளையும் மேற்கொண்டோம். தொடர்ந்து இதனைச் செய்வோம். இதில் எந்த விளைவுகளையும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். கட்சியைத் தடை செய்தாலும் சரி.

கேள்வி:
தாராளவாதம் என்கிற பெயரில் சர்வதேச நிதி நிறுவனங்களுக்கு இந்தியா அடிமையாகி வருகிறது. இவற்றின் விளைவாக கல்வி, மருத்துவம் என்பதெல்லாம் கூட இன்று வணிகமயமாகி வருகின்றன. இதனால் அதிகம் பாதிக்கப்படுவது அடித்தட்டு மக்களே. பா.ம.க. இவை பற்றி எல்லாம் பேசுவதாகத் தெரியவில்லையே?

பதில்:
மன்மோகன் சிங் வந்த பிறகு நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. இது குறித்தும் சர்வதேச நிலைமைகள் குறித்தும் நிர்வாகக் குழுவில் பேசுகிறோம். மக்கள் மத்தியில் கொண்டு செல்வோம்.

கேள்வி:
மக்களே Local Power, அதிகாரங்களைக் கையில் எடுத்துக் கொள்வது என்பது இன்று அண்டை மாநிலங்களிலெல்லாம் நடைமுறையாகி வருகிறது. உங்கள் கருத்தென்ன?

பதில்:
Local Power – ஐ மக்களே கையிலெடுத்துக் கொள்வதுதான் சரியான தீர்வு என்பதே என் தனிப்பட்ட கருத்து. மக்கள் கண்காணிப்பு அணிகளை ஆங்காங்கு உருவாக்கிச் செயல்படுத்துவது அவசியம்.

கேள்வி:
சனநாயக உரிமைகளுக்காகப் போராடுவதற்கு முன் நமது அமைப்புக்களை நாம் சனநாயகப்படுத்த வேண்டும். பா.ம.க.வில் அத்தகைய திட்டம் ஏதும் உண்டா?

பதில்:
இன்னும் இரண்டு மாதங்களில் கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை தேர்தல்கள் நடத்த இருக்கிறோம். சில மாவட்டங்களில் அமைப்பு கட்ட வேண்டியுள்ளதும், சிவில் தேர்தல்கள் இடையில் அறிவிக்கப்பட்டதும் தான் தாமதத்திற்குக் காரணம்.

கேள்வி:
கல்விப் பிரச்சினைகளில் நீங்கள் தனிப்பட்ட முறையில் மிகுந்த ஆர்வமுடையவர் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். பா.மக.வின் கல்விக் கொள்கை என்ன?

பதில்:
கல்வியைப் பொறுத்த மட்டில் இதோ இருக்கிறாரே (கல்யாணியைச் சுட்டிக்காட்டி) இவர் சொல்வதுதான். மக்கள் கல்வி இயக்கத்தின் கொள்கையை முழுவதுமாக ஏற்கிறோம். இன்றைய கல்வி முறை கிராமப்புற மக்களைப் பொறுத்தமட்டில் ஆடு, மாடு மேய்க்கத்தான் பயன்படும். தமிழ்வழிக் கல்வி முதலியவற்றுக்காகப் போராடுவதற்கு முன்னுரிமை அளிப்போம்.

கேள்வி: (கல்யாணி குறுக்கிடுகிறார்)
புதிய தீவிர வடிவங்கள் தேவை என்பது ஒரு புறம். இப்போது இருக்கும் தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு இயல்பாயுள்ள போர்க்குணத்தை – Militancyயையும் அல்லவா குறைத்து விடுகின்றன. நிறப்பிரிகை 600 பிரதிகளே அச்சிடப்பட்டாலும் சிந்திக்கக் கூடிய, செயல்படக் கூடியவர்கள் மத்தியில் செல்லும் ஒரு இதழ். இதன் மூலம் நீங்கள் எதையேனும் சொல்லலாம்.

பதில்:
பா.ம.க. பற்றிய குறைகளைச் சுட்டிக் காட்டுங்கள். விமர்சனங்களை எந்த நிலையிலிருந்து வேண்டுமானாலும் செய்யலாம். திருத்திக்கொள்ள எப்போதும் தயாராக இருக்கிறோம். தினப்புரட்சி நமது பத்திரிகை. அதில் எல்லோரும் எழுதலாம். நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

(நிறப்பிரிகை, பிப்ரவரி 4, 1992)