ஜல்லிகட்டுப் போராட்டமும் காவல்துறை அத்துமீறல்களும்

 ஜல்லிகட்டுப் போராட்டம்: இறுதி நாட்களில் நடைபெற்ற காவல்துறை அத்துமீறல்கள்: உண்மை அறியும் குழு அறிக்கை                                                                                                                                                சென்னை,                                                                                                                                                                                              ஜன 25,2017

ஜல்லிக்கட்டுத் தடையை நீக்கக் கோரி சென்னை மெரினா கடற்கரையிலும், தமிழகம் முழுமையிலும் இந்த மாதம் 17ம் தேதி முதல் இளைஞர்கள் பொதுவெளிகளில் கூடி இரவிலும் பகலிலும் அகலாமல் அமர்ந்து முற்றிலும் அமைதி வழியில் போராடினர். எந்த ஒரு குறிப்பான கட்சி அல்லது இயக்க வழிகாட்டலும் இன்றி தன்னெழுச்சியாகவும் முற்றிலும் அமைதியாகவும் நடைபெற்ற இந்தப் போராட்டம் பல வகைகளிலும் 2011- 12 களில் நியூயார்க்கில் நடைபெற்ற ‘வால்ஸ்ட்ரீட் அமர்வு’ போராட்டத்தை நினைவூட்டியது.

அனைத்துத் தரப்பினரின் ஆதரவுடன் நடைபெற்ற இப்போராட்டம் கொடுத்த அழுத்தத்தின் விளைவாக தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க நேர்ந்தது. மத்திய அரசை வற்புறுத்தி அவசரச் சட்டம் ஒன்றை இயற்ற வைப்பதில் தோல்வியுற்ற தமிழக அரசு சென்ற ஜன 21 அன்று ஜல்லிக்கட்டுத் தடையை நீக்கும் வகையில் மிருக வதைத் தடைச் சட்டத்தில் உரிய திருத்தங்கள் செய்து அவசரச் சட்டம் ஒன்றை இயற்றியது. அடுத்த நாளே மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிகட்டுப் போராட்டம் நடத்தப்படும் எனவும் முதலமைச்சர் அதில் கலந்து கொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டது.

எனினும் தமிழகமெங்கும் இருந்த இந்த அமர்வுப் போராட்டத்தினர் நிரந்தரச் சட்டம் வேண்டும் எனவும், தமிழகத்தைப் பாதிக்கும் பிற பிரச்சினைகள் குறித்துக் கவனத்தை ஈர்த்தும் தம் இடங்களைவிட்டு அகல மறுத்தனர். அலங்காநல்லூர் மக்களும் கூட ஜல்லிக்கட்டு நடத்தவிட மாட்டோம் என்றனர். இந்நிலையில் சென்ற ஜன 23 அன்று சென்னை, சேலம், கோவை, வேலூர், புதுக்கோட்டை, அலங்காநல்லூர் முதலான இடங்களில் கூடியிருந்த மக்களைக் காவல்துறையினர் வன்முறையாக வெளியேற்றத் துவங்கினர். வெளியேற மறுத்தவர்கள் தாக்கப்பட்டனர். காவல்துறையினரே வாகனங்களைக் கொளுத்துகிற படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகத் தொடங்கின. மெரினாவில் சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்த போராட்டக்காரர்களின் வாகனங்களைப் போலீசாரே தாக்கி உடைத்தனர். சில இடங்களில் அவை எரியூட்டவும் பட்டன. காலைக் கடன்களை முடிப்பதற்காக அருகிலுள்ள நடுக்குப்பம் போன்ற பகுதிகளுக்குச் சென்ற போராட்டக்காரர்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு அப்பகுதியில் வசித்த அடித்தள மக்கள் உதவினர். அப்படி வந்தவர்களைத் துரத்தி வந்து காவல்துறையினர் தாக்கியபோது நடுக்குப்பம், வி.ஆர்.பிள்ளைத் தெரு முதலான பகுதிகளில் இருந்த மீனவர் மற்றும் தலித் மக்கள் அவர்களுக்குப் பாதுகாப்பும் அளித்தனர்.

கோவை முதலான தமிழகத்தின் பல பகுதிகளில் கூடியிருந்த மக்கள் மீதான காவல்துறை தாக்குதல் கடுமையாக இருந்தது. நிரந்தரச் சட்டம் இயற்ற உள்ளதை ஏற்றுச் சில பகுதிகளில் மக்கள் கலையவும் செய்தனர்.

இதற்கிடையில் ஜன 23 அன்று தொடங்கிய சட்டமன்றக் கூட்டத்தில் மாலை 5 மணிக்குக் கூடிய சிறப்பு அமர்வு மிருகவதைச் சட்டத்தில் உரிய திருத்தங்களைச் செய்து ஜல்லிக்கட்டின் மீதான தடையை நீக்கி நிரந்தரச் சட்டத்தை அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் இயற்றியது. இன்னொரு பக்கம் வன்முறையாக அமர்வுப் பொராளிகள் வெளியேற்றப்படுதலும் தொடர்ந்தது.

ஐஸ்ஹவுஸ் மற்றும் அம்பேத்கர் பாலம் அருகில் உள்ள குடியிருப்புகளில் காவல்துறை நடத்திய தாக்குதல்

சுமார் 12 மணி அளவில் யாரோ சில சமூக விரோதிகள் ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்தைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்குத் தீ வைத்தனர். சற்று நேரத்தில் அந்தத் தீ பெரிய அளவில் மற்ற பகுதிகளுக்குப் பரவாமல் அணைக்கப்பட்டது. காவல் நிலையத்திற்குள் இருந்த பெண் போலீஸ் ஒருவரும் ஆபத்தின்றி காப்பாற்றப்பட்டார்.

பிற்பகலில், சுமார் மூன்று மணிக்குப் பிறகு ஐஸ் ஹவுசுக்கு அருகிலுள்ள மீனவர் மற்றும் தலித் குடியிருப்புப் பகுதிகளில் நுழைந்த காவல்துறையினர் மிகக் கொடூரமாக அம்மக்கள் மீது தாக்குதலைத் தொடங்கினர். சிறுவர்கள் உள்ளிட்ட கையில் அகப்பட்ட ஆண்களை அடித்துப் போலீஸ் வாகனங்களில் ஏற்றிச் சென்று ‘ரிமான்ட்’ செய்தனர்.

இந்த அத்துமீறல்கள் எங்கள் கவனத்திற்கு வந்தபோது இது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க கீழ்க்கண்டவாறு குழு ஒன்று அமைக்கப்பட்டது.

குழுவில் பங்கு பெற்றோர்: பேரா.அ.மார்க்ஸ் முனைவர் ப. சிவகுமார், பேரா. மு..திருமாவளவன், வீ.சீனிவாசன், நட்ராஜ், பெரியார் சித்தன், முனைவர் ஜெ. கங்காதரன், பேரா.கோ.கார்த்தி, அகமது ரிஸ்வான்.

பார்வையிட்ட பகுதிகள்: 1.நடுக்குப்பம் எனும் மீனவர் குடியிருப்பு மற்றும் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள மீன் மார்கெட் 2. அம்பேத்கர் பாலத்திற்கு அருகில் உள்ள ரூதர்புரம் எனும் தலித் குடியிருப்பு 3. அம்பேத்கர் பாலத்திற்கு அருகில் உள்ள மீனாம்பாள்புரம் எனும் தலித் குடியிருப்பு 4. வி.ஆர்.பிள்ளைத் தெரு மற்றும் கால்வாய்த் தெரு. 5. முனுசாமி நகர் 6. அனுமந்தபுரம் 7. ரோட்டரி நகர்

நாங்கள் கண்டவை :

1.நடுக்குப்பம் : பெண்கள் சிறுவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். வீடுகள் தாக்கிக் கண்ணாடிகள் உடைக்கப்பட்டுள்ளன. கதவுகள், தொலைக்காட்சிப் பெட்டிகள் நொறுக்கப்பட்டுள்ளன. இராணி மேரிக் கல்லூரியை ஒட்டி அமைந்துள்ள மீன் மார்கெட் முறிலும் எரித்துச் சாம்பலாக்கப்பட்டுள்ளது. இலட்சக் கணக்கான மதிப்புள்ள மீன்கள், எரால்கள் கொளுத்தி நாசமாக்கப்பட்டுள்ளன. மோட்டார் சைகிள்கள், ஒரு ஸ்கார்பியோ உள்ளிட்ட சில கார்கள், ஆட்டோக்கள் தாக்கப்பட்டடு நொறுக்கப்பட்டுள்ளதோடு இவற்றில் பல முற்றிலுமாய் எரிக்கவும்பட்டுள்ளன. ஏதோ ஒரு தூளைத் தூவி (பாஸ்பரஸ்?) எரியூட்டியதாக மக்கள் கூறினர். சிங்காரவேலர் பிறந்த இந்த நடுக்குப்பத்தில் இத்தகைய வன்முறைகளைக் கண்டதே இல்லை எனப் பலர் உணர்ச்சிவயப்பட்டுக் கூறினர். தமது வாழ்வாதரமே அழிக்கப்பட்டு விட்டது எனப் பெண்கள் அழுதனர். போலீசார், குறிப்பாகப் பெண் போலீசார் தம்மை அடித்தும் கற்களை வீசியும் தாக்கியதோடு மிக மோசமான வார்த்தைகளில் இழிவாக ஏசியதாகவும் கூறினர். ஆண் போலீசார் தங்கள் முன் காற்சட்டை ‘ஸிப்’ களை அவிழ்த்து ஆபாசமாகப் பேசியதாகவும் குற்றம் சாட்டினர். மெரினாவிலிருந்து அடிபட்டு ஓடி வந்த இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் உதவியதைத் தவிர நாங்கள் என்ன பாவம் செய்தோம் எனக் குமுறினர்.

2.ரூதர்புரம்: அம்பேத்கர் பாலத்தை ஒட்டி இரண்டு வேன்களும் தெருவை ஒட்டி ஒரு ஆட்டோவும் எரிக்கப்பட்டிருந்தன. தெரு நுழைவில் நிறுத்தப்பட்டிருந்த 6 ஆட்டோக்கள், 8 பைக்குகள், 2 சைகிள்கள், 1 சோஃபா செட் எரிந்து கிடந்தன. ஏன் உங்கள் பிள்ளைகளை மெரீனா போராட்டத்துக்கு அனுப்பினீர்கள் எனக் கேட்டுப் பெண் போலீஸார் தம்மைத் திட்டியதாகப் பெண்கள் குமுறினர். அங்கிருந்த சுமார் 100 பேர் திரண்டு சென்று ‘சிட்டி மால்’ அருகில் நின்று. “எங்கள் மாண்வர்களை அடிக்காதீர்கள்” என முழக்கம் எழுப்பியதாக ஞானம்மாள் என்பவர் கூறினார். அப்போது ஒரு வாகனத்தில் வந்து இறங்கிய போலீசார் கற்களையும் பாட்டில்களையும் வீசித் தாக்கியதாகவும் வாகனங்களைத் தீவைத்துக் கொளுத்தியதாகவும் ஒருவர் கூறினார்.

3.மீனாம்பாள்புரம் : லேடி வெலிங்டன் பள்ளியில் +2 படிக்கும் தன் 18 வயது மகன் கிருபாகரனை பள்ளியிலிருந்து வந்துகொண்டிருந்தபோது அடித்து இழுத்துச் சென்றதை அழுது கொண்டே சொன்னார் சிவகாமி (33) க/பெ தினகரன். காவல் நிலையத்திலிருந்த அவனுக்கு இரவில் சோறூட்டச் சென்ற போது அவன் கைகள் வீங்கி இருந்தன என்றார் அவர். அவனை விட்டுவிடுவதாகச் சொன்ன போலீசார் இறுதியில் ரிமான்ட் செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். ரமேஷ் மனைவி கீதா சொன்னது: “எங்க வீட்டுக்காரருக்கு 45 வயசு. தூய்மைப் பணி நிறுவனம் ஒன்றில் தெருக்கூட்டுபவராக வேலை செய்கிறார். வேலை முடிஞ்சு வரும்போது போலீசுங்க அவரை மிருகத் தனமா அடிச்சுப் போட்டு இருக்காங்க.” வேலு மனைவி பொற்கொடி (35): “என் மவனைத் தேடிப் போனேன். ஒரு பெண் போலீஸ் என்னை அடிச்சதுல என் கை முறிஞ்சு போச்சு” எனத் தன் வீங்கிய கையைக் காட்டினார். கணவரை இழந்து வாழும் தமிழரசி (40): “வீட்டுக்குள்ள நுழைஞ்ச போலீஸ் என் புடவையைக் கிழிச்சாங்க” எனச் சொல்லிக் கிழிந்த தன் புடவையைக் காட்டினார். குப்பன் மனைவி காந்தா (60): “வீட்டுக் கதவை உடைசிச்சுட்டாங்க. மோட்டார் சைகிளையும் நொறுக்கிட்டாங்க. பாத்ரூமுல இருந்தவங்களை எல்லாம் ‘சீக்கிரம் வாங்கடீ.'”ன்னு சொல்லி கத்துனாங்க..”

4.வி.ஆர்.பிள்ளை தெரு: போலீஸ்காரர்கள் போராட்டக்காரர்களைத் துரத்திவந்தபோது தாங்கள் அதைப் பார்த்துக் கொண்டு நின்றதாகவும், பின் திடீரென வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இவர்களையே போலீஸ் துரத்தித் தாக்கியதாகவும் பெண்கள் கூறி அழுதனர். பின் சுமார் 100 பேர் திரண்டு இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தபோது போலீசார் அவர்களை அசிங்கமாகத் திட்டினர் என்றனர். மீன்வளத்துறையில் பணியாற்றும் பழனி (58), “நாங்க எல்லாரும் மிரட்டப்பட்டோம். பெண்களை ரொம்ப மோசமாப் பேசுனாங்க. ஊரே பயந்து கிடக்கு..” என்றார்.

5.முனுசாமி நகர்: ராஜீவ் என்பவரின் மனைவி தேவி (36): “என் வீட்டுக்கார்ர ஒரு பெயின்டர். வீட்டில இருந்தவரைப் போட்டு அடிச்சுட்டாங்க. கையில் புத்தகப் பையோடு வந்த மாணவர்களையேல்லாம் துரத்தி அடிச்சாங்க. சம்மந்தமில்லாத எல்லாரையும் அடிக்க ஆரம்பிச்சாங்க. எங்க தெரு பொம்பளை ஒருத்தரோட 5 பவுன் சங்கிலியையும் அறுத்துட்டுப் போயிட்டாங்க..” அடிபட்டிருந்த அவரது கணவரையும் பார்த்தோம்.

6.அனுமந்தபுரம் – கால்வாய்த் தெரு: ஆட்டோ டிரைவர் கார்திக் (45); “நான் நேத்து வேலைக்கிப் போகல. ஆட்டோ வாசல்ல நின்னுச்சு. உள்ளே நுழைஞ்ச போலீஸ் என்னைக் கடுமையா அடிச்சுட்டாங்க..” அவர் உடலெங்கும் காயம். கட்டுகள் இருந்தன. வெளியில் நின்றிருந்த அவரது ஆடோ தாக்கப்பட்டுக் கண்ணாடி உடைந்திருந்தது. “ரெண்டு பிள்ளைங்கள நான் காப்பாத்தியாவணும். எப்ப எனக்கு இந்தக் காயங்கள் ஆறும், எப்பிடி நான் இந்த ஆட்டோவை சரி பண்ணி ஓட்டப்போறேன்னு ஒண்ணும் தெரியல..” என்று அவர் அழுதார். கட்டுமானப் பணி செய்யும் தங்கவேலு (33) உடலெங்கும் காயங்கள். அவர் காலொன்று உடைந்து கட்டு போடப்பட்டிருந்தது. வீட்டில் அடித்ததோடு போலீஸ் வானில் ஏற்றிச் சென்று லேடி வெலிங்டன் பள்ளியில் வைத்து மீண்டும் அடித்ததாக அவர் கூறினார். பின் இன்னொரு இடத்திற்குக் கொண்டு சென்று அங்கும் அடித்தனராம். பின் அவர்களில் சுமார் 10 பேர்களைக் கொண்டு சென்று ஒரு இடுகாட்டில் தள்ளிச் சென்றுள்ளனர். அவர்களின் வீட்டார்கள் அவர்களைக் கண்டுபிடித்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

7.ரோட்டரி நகர்: பெருங் கூட்டமாகத் திரண்டு வந்த பெண்கள் தாங்கள் எவ்வாறெல்லாம் அசிங்கமாகத் தூற்றப்பட்டோம் எனச் சொல்லி அழுதனர். அவர்களில் ஒருவரின் கை உடைந்திருந்தது.. பெண் போலீசாரே இப்படிச் செய்ததாக அவர்களும் கூறினர்.

இறுதியாக நாங்கள் மயிலாப்பூர் காவல் நிலையத் துணை ஆணையர் வி.பாலகிருஷ்ணன் I.P.S அவர்களைச் சந்தித்தோம். தான் மெரினாவில் கண்காணிப்புப் பணியில் இருந்ததாகவும் இங்கு நடந்தவை குறித்து அதிகம் தெரியாது எனவும் காவல்துறை அத்துமீறல்கள் பற்றி நிரூபணங்களுடன் சொன்னால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இனி யாரையும் கைது செய்யும் உத்தேசம் தமக்கு இல்லை எனவும் அவர் கூறினார். சில ஆண்டுஅகள் முன் இரட்டைக் கொலை ஒன்று இப்பகுதியில் நடந்ததாகவும் அதைப் புலனாய்ந்த ஒரு காவல்துறை அதிகாரியே தற்கொலை செய்து கொள்ள நேர்ந்ததாகவும் அதனால் இப்பகுதி மக்கள் காவல்துறைமீது கோபம் கொண்டவர்களாகவே உள்ளதால்தான் காவல் வாகனங்களையெல்லாம் இவர்கள் கொளுத்தினர் எனவும் அவர் கூறினார்.

எமது பார்வைகளும் கேள்விகளும்

  1. 1984 ல் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது இப்பகுதி மக்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு இதுதான் இம்மக்கள் சந்திக்கும் மிகப் பெரிய காவல்துறை அத்து மீறல். காவல்துறை மீது இப்பகுதி மக்களுக்கு ஒரு பகையும் கோபமும் இருந்ததாக துணை ஆணையர் கூறுகிறார். அது உண்மையோ பொய்யோ காவல்துறைக்கு இப்பகுதி அடித்தள மக்களின் மீது ஒரு பகையும் கோபமும் இருப்பது இன்று அரங்கேறியுள்ள கொடும் வன்முறைகளில் வெளிச்சமாகிறது. போராட்டக்காரர்களுக்கு இம்மக்கள் ஆதரவு காட்டியதையும் அவர்களால் ஏற்க முடியவில்லை. மெரினாவிலிருந்து போலீஸ்காரர்களால் துரத்தப்பட்டு ஓடி வந்த ஒரு பெண் ஓடிக் கொண்டிருக்கும்போதே கருச்சிதைவுக்கு ஆளாகியதையும் அவரை ரோட்டரி நகர் பெண்கள் காப்பாற்றியதையும் அவர்களில் ஒருவர் கூறினார்.
  2. மெரினாவில் அமைதியாக அமர்ந்து போராடிக் கொண்டிருந்த இளைஞர்களிடம் முதலமைச்சரும் அவரது சக அமைச்சர்களும் நேரடியாக வந்து பேசி உறுதி அளித்திருந்தால் இந்தப் போராட்டம் அமைதியாக முடிந்திருக்கும். இறுதிவரை காவல்துறையினர்தான் அரசுத் தரப்பில் போராட்டக்காரர்களுடன் பேசினரே ஒழிய முதலமைச்சர் வந்து பேசாததே இத்தனை வன்முறைகளுக்கும் கொடுமைகளுக்கும் காரணம்.
  3. நிரந்தரச் சட்டம் இயற்றிய பின்னும் அது குறித்த முழு விவரங்களையும் போராட்டக்காரர்களுக்கு அதிகாரபூர்வமாகத் தந்து விளக்கி இருக்க வேண்டும். ஏன் அதில் தயக்கம் காட்டப்பட்டது எனத் தெரியவில்லை.
  4. தமிழகமெங்கும் 23 ந்தேதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. இதே போன்று நடந்த வால்ஸ்ட்ரீட் அமர்வுப் போராட்டத்தின்போது அமெரிக்க அரசு இப்படி நடந்துகொள்ள வில்லை. பலமாதங்கள் தொடர்ந்து நடந்த போராட்டம் அது. சர்வாதிகாரிகளின் ஆட்சிக்கு எதிராக நடந்த அரபு வசந்தப் போராட்டங்கள் கூட இப்படி ஒடுக்கப்பட வில்லை. அடிப்படை ஜனநாயகப் பண்பு அற்ற அரசுகளாகவே நமது அரசுகள் உள்ளன என்பதற்கு இந்த அடக்குமுறை இன்னொரு சாட்சியாக உள்ளது.
  5. ஜன 23 அன்று பள்ளி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுப் பின் அன்று நடந்த இந்த தாக்குதல்களின் ஊடாகப் போக்குவரத்தை நிறுத்திப் பள்ளிப் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் உருவாக்கப்பட்ட சிரமங்கள் இந்த அரசின் பொறுப்பின்மையையும் திறமை இன்மையையுமே காட்டுகின்றன.

பரிந்துரைகள்

  1. மரீனாவை ஒட்டியுள்ள தலித் மற்றும் மீனவர் குடியிருப்புகளில் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலை விசாரிக்க நீதிபதி ஒருவர் தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்க வேண்டும்.
  2. மீன்வளத்துறையின் மூலம் உடனடியாக தீப்பிடிக்காத கூரையுடன் கூடிய மீன் மார்கெட் ஒன்றை நடுக்குப்பத்தில் அரசு கட்டித்தர வேண்டும்.

3 .நடுக்குப்பத்தைச் சேர்ந்த மீன் வணிகம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு உடனடியாக          இடைக்கால நிவாரணமாக ஒவ்வொருவருக்கும் உடனடியாக ரூ 25,000 அளிக்கவேண்டும்.

  1. தலித் மற்றும் மீனவர்களின் வீடுகள், வீட்டுப் பொருட்கள் மற்றும் வாகனச் சேதங்களை ஒரு மாதத்திற்குள் உடனடியாக மதிப்பிட்டு உரிய இழப்பீடுகளை அரசு வழங்க வேண்டும்.
  2. கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் எந்த நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
  3. இந்த அத்துமீறல்கள் குறித்த விசாரணை முடியும்வரை உயரதிகாரிகள் உட்பட இதற்குப் பொறுப்பானவர்களைக் கட்டாயக் காத்திருப்பில் வைக்க வேண்டும். வன்முறையிலும் தீவைப்பிலும் ஈடுபட்ட காவல்துறையினர் உடனடியாக சஸ்பென்ட் செய்யப்படவேண்டும்.
  4. பெண் போலீசார் இப்படிப் பெண்கள் மீதே வன்முறையாக நடந்து கொண்டது குறித்துக் காவல்துறையும் அரசும் கவனம் கொள்ள வேண்டும். அவர்களுக்கு உரிய உணர்வூட்டும் பயிற்சிகள் அளிக்க வேண்டும்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தொடர்பு: அ.மார்க்ஸ், 3/5,முதல் குறுக்குத் தெரு, சாஸ்திரி நகர், சென்னை 20, செல்:9444120582

அம்பேத்கர் பெரியார் மாணவர் வட்டத் தடையும் ராதா ராஜன் எனும் ஆர்.எஸ்.எஸ் அம்மையும்

1950களில் தொழில்நுட்பத்தில் மிகவும் தரமான உயர் கல்வியைத் தர வேண்டும் என்கிற நோக்கில் உருவாக்கப்பட்டதுதான் ‘இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்’ (Indian Institute of Technology). சென்னை உட்பட இந்தியாவெங்கும் 18 ஐ.ஐ.டி நிறுவனங்கள் உள்ளன. சுயேச்சையான இந்தப் ‘ப்ரீமியர்’ கல்வி நிறுவனத்தில் படிப்பது பெருமை. இடம் கிடைப்பது அருமை. தேசிய அளவில் போட்டித் தேர்வு நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப் படுகின்றனர்.

இந்த சுயேச்சை நிறுவனத்தின் ஆசிரியர் தேர்வில் இந்தியாவெங்கும் அமுலில் உள்ள சாதிவாரி இட ஒதுக்கீடு முறையாகக் கடைபிடிக்கப்படுவதில்லை. இதன் விளைவாக ஐ.ஐ.டி நிறுவனங்களில் 90 சதத்திற்கும் மேற்பட்டோர் உயர் சாதியினர். பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சாதியினரை விரல் விட்டு எண்ணி விடலாம். ஆக உயர் சாதியினரின் தீவுகளாகவே இந்திய ஐ.ஐ.டிக்கள் உள்ளன.

பன்னாட்டுத் தரத்தில் உள்ள இந்நிறுவனங்களில் மாணவர் அமைப்புகள் செயல்பட அனுமதியுண்டு இந்த அமைப்புகளுக்கு நிர்வாகம் ஏற்பு (recognition) வழங்கும் போது அவர்களின் சந்திப்பு மற்றும் கருத்துப் பரிமாற்றங்கள், கருத்துரைகள் ஆகியவற்றிற்கு  கல்வி வளாகத்தின் வசதிகளைப் பயன் படுத்திக் கொள்ளலாம்.

சென்னை ஐ.ஐடியில் இந்துத்துவக் கருத்தியல் சார்புடன் ‘விவேகாநந்தர் வட்டம்’, ‘ஜெய்ஹிந்த் வட்டம்’, ‘இராமாயண வட்டம்’, ‘வந்தே மாதர வட்டம்’ எனப் பல மாணவர் வட்டங்கள் இயங்கி வருகின்றன. சென்ற ஆண்டு முற்போக்கு மற்றும் சமத்துவ சிந்தனைகள் உள்ள மாணவர்கள் “அம்பேத்கர் பெரியார் மாணவர் வட்டம்” என்றொரு அமைப்பை உருவாக்கி இயங்கி வந்தனர். இதனை உள்ளேயும், வெளியேயும் உள்ள இந்துத்துவ சக்திகள் பல்வேறு வகைகளில் எதிர்த்து வந்தன.

இந்நிலையில் இவர்கள் மோடிக்கு எதிராகவும் பிற தீவிரமான கருத்துக்களைப் பேசுவதாகவும் ஒரு மொட்டைக் கடிதம் வந்துள்ளதாகவும் அது குறித்து நடவடிக்கை எடுக்குமாறும் மத்திய கல்வித்துறை சென்னை ஐ.ஐ.டி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியது. இதை ஒட்டி சென்ற மாத இறுதியில் ஐ.ஐ.டி நிர்வாகம் அம்பேத்கர், பெரியார் பெயரில் இயங்கி வந்த அந்த அமைப்பிற்கான ஏற்பை ரத்து செய்ததாக அறிவித்தது.

இந்த நடவடிக்கை தேன் கூட்டில் கல்லெறிந்த கதையாகிவிட்டது பா.ஜ.க, அ.தி.முக, சில தமிழ் தேசியக் குழுக்கள் தவிர அனைத்து முக்கிய கட்சிகளும், இயக்கங்களும் இன்று இன்று இந்த நடவடிக்கையைக் கண்டித்துக் களத்தில் இறங்கி விட்டன. நாடெங்கிலும் கல்வி வளாகங்களிலும் வெளியிலும் ஏராளமான “அம்பேத்கர் பெரியார் வட்டங்கள்” இன்று உருவாக்கப் படுகின்றன.  ஐ.ஐ.டி நிர்வாகமும் மத்திய அரசும் பம்முகின்றன.

ஒரே ஒரு தரப்புதான் ஐ.ஐ.டி நிர்வாகம் மேற்கொண்ட நடவடிக்கையைச் சரி என்கிறது. சரி என்பது மட்டுமல்ல, இன்னும் சில பேராசிரியர்களையும் அடையாளம் காட்டி அவர்களைக் களை எடுக்க வேண்டும் என்கிறது. அவர்கள் இதற்குச் சொல்லும் காரணத்தை ஆய்ந்தால் அவர்களின் அடிப்படை நம்பிக்கைகளையும் இறுதி நோக்கங்களையும் நாம் புரிந்து கொள்ள இயலும்.

ஆர்.எஸ். எஸ்சின் அறிவுத் தொட்டியில் ஒருவர் ராதா ராஜன். ஆர்.எஸ்.எஸ் கொள்கைகளை விளக்கி ஆங்கிலத்தில் நிறைய எழுதிக் குவிப்பவர். அவரது பெரு நூல் ஒன்று அத்வானி முன்னுரையுடன் வெளிவந்துள்ளது. India Facts என்கிற அவரது வலைத் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள Something Awry in IIT Madras: The Full Story என்னும் கட்டுரையிலிருந்து சில செய்திகள்:

1.2006ல் சென்னை ஐ.ஐ.டி யில் ஆங்கிலம், வளர்ச்சிக் கல்விகள், பொருளாதாரம் ஆகிய பாடங்களுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட ஐந்தாண்டு எம்.ஏ படிப்பு தொடங்கப்பட்ட காலத்திலிருந்துதான் அங்கு இத்தகைய பிரச்சினைகள்..

2.இப்படி உருவான மாணவர் ‘ஆக்டிவிசம்’ மற்றும் சீரழிவு அறிவாளித்தனம் (student activism and disruptive intellectualism) கிட்டத்தட்ட சென்னை சட்டக் கல்லூரி, நந்தனம் கல்லூரி, மாநிலக் கல்லூரி முதலானவற்றில் உள்ள வன்முறைகளுக்கு இணையான மாணவ ரவுடித் தனத்திற்கு ஒப்பான தோற்றத்தை எடுத்தது.

3.கலை மற்றும் சமூகவியல் துறை (HSS)  ஆசிரியர்கள் மற்றும், வெளியிலிருந்து பேசுவதற்கு அழைக்கப்பட்டவர்களின்  கருத்தியல் சாய்வு, விவாதங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகள், நவம்பர் 2004ல் IIT வளாகத்தில் அரங்கேற்றப்பட்ட முத்தப் போராட்டம், அப்புறம் இப்போது நடைபெறும் இந்த இந்து மத எதிர்ப்பு மாணவர் அமைப்புப்  (அ.பெ.மா.வ) போராட்டம் எல்லாம் ஒரு காலத்தில் உன்னதமாக விளங்கிய ஐ.ஐ.டி யில் வளர்ந்துள்ள இந்தப் புற்று நோயின் வெளிப்பாடுதான்.

இவை அந்த ஆர்.எஸ்.எஸ் அம்மை முன்வைக்கும் கருத்துக்கள். ஆக 2006ல் தொடங்கப்பட்ட ‘ஒருங்கிணைக்கப்பட்ட ஐந்தாண்டு எம்.ஏ பட்டப் படிப்பு’ (integrated five year M.A) தான் எல்லாவற்றிற்கும் காரணம் எனச் சொல்லும் இந்த ஆர்.எஸ்.எஸ் சார்பு இணையம், “ஏன் இப்படி ஐ.ஐ.டி நிர்வாகம் அ.பெ.மா.வ வைத் தடை செய்ய நேர்ந்தது என்பதை மோடி சர்க்கார் அறிய வேண்டுமானால் ஏன் இந்த 5 ஆண்டு ஒருங்கிணைக்கப்பட்ட எம்.ஏ படிப்பைக் காங்கிரஸ் தலைமையிலான ஐ.மு.கூ அரசு தொடங்கியது என ஆய்வு செய்ய வேண்டும்” என்கிறது. மோடி சர்க்கார் எதையெல்லாம் பரிசீலிக்க வேண்டுமாம்?

“மோடி சர்கார் இந்த ஐந்தாண்டு ஒருங்கிணைக்கப்பட்ட எம்.ஏ வகுப்பின் பாடத் திட்டம், யாரெல்லாம் ஆசிரியர்களாகத் தேர்வு செய்யப்பட்டார்கள், அவர்களின் கருத்தியல் சாய்வு, இந்த வகுப்பிற்கு என்னவிதமான மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள் ஆகியவற்ரைப் பரிசீலித்தால் இந்த ஐந்தாண்டுப் பாடத் திட்டத்தின் உண்மை நோக்கம் வெளிப்படும்”.

இந்த இடத்தில் கலை மற்றும் சமூக விஞ்ஞானத் துறைத் தலைவர் பேரா. எஸ்.செல்லா ராஜனை நோக்கி நீள்கிறது கட்டுரையாளரின் விரல்.  இந்தப் பேராசிரியரால் தொடங்கப்பட்ட ஐந்தாண்டு ஒருங்கிணைக்கப்பட்ட எம்.ஏ பாடத் திட்டத்திற்கான அறிமுக வெளியீட்டில் உள்ள, “இப்பாடத் திட்டம் ஒரு பன்மை ஒழுங்கு அணுகல் முறையுடன் (interdisciplinary perspective) அமையும்” என்கிற சொற்களை உருவி எடுத்து ஒரு மிகப் பெரிய சொற் சிலம்பாட்டத்தை ஆடிக் காட்டுகிறார் கட்டுரை ஆசிரியர். அந்த ஆட்டத்தின் ஊடாக அவரது உண்மை உருவம் வெளிப்பட்டுவிடுகிறது. ஆர்.எஸ்.எஸ் அம்மையாரின் சொற்களில் அவற்றைக் காண்போம்:

1.வரலாறு தொடர்பான இந்தப் பன்மை ஒழுங்கு அணுகல் முறை மிகவும் ஆபத்தானது.  அரசியல் அறிவியல், சமூக அறிவியல் மற்றும் மானுடவியல் ஆகிய போலி அறிவியல்களைப் பயன்படுத்தி தேசம், தேசியம் முதலான வரலாற்றுத் தரவுகளை மதிப்பீடு செய்கிற பெயரில் அவற்றை மறுப்பதற்காகப் பயன்படுத்தப் படுவதுவதுதான் இந்தப் பன்மை ஒழுங்கு அணுகல்முறை. தாங்கள் வென்ற மனிதர்கள் மற்றும் ஆக்ரமித்த  நிலங்களின் வரலாற்றை எழுத  கிறிஸ்தவம் கண்டுபிடித்த அறிவுத் துறைதான் இந்தப் பன்மை ஒழுங்கு அணுகல்முறை.

2.அமெரிக்காவில் ‘பெரிங் ஸ்ட்ரைட் கோட்பாடு’ இப்படித்தான் உருவானது. உள்நாட்டு அமெரிக்கர்கள் என்போர் உண்மையில் உள்நாட்டில் தோன்றியவர்கள் அல்லர். அவர்கள் ஆதி காலத்தில் புலம்பெயர்ந்து வந்தவர்கள் என்று இந்தக் கோட்பாடு கூறியது. இந்தியாவில் இந்த inter disciplinary அணுகல் முறைதான் சமஸ்கிருதத்திற்கு இருந்த உன்னத இடத்தை அழித்தது. ஆரியப் புலப் பெயர்வுக் கொள்கையை முன்வைத்து பிராமணர்களை இந்தத் தேசத்திற்கு வெளியிலிருந்து வந்தவர்களாக நிறுத்தியது.

3.இத்தகைய அணுகல் எளிதில் சாதி, வர்க்கம், பெண்ணியம் மற்றும் பழங்குடி உள்ளுறைகளுடன் கூடிய அறிதல்களாக மாற்றி அமைக்கத் தோதாக உள்ளது.

ஆக ஆடிய ஆட்டத்தில் கட்டுரையாளர் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு விட்டார். அவரது ஆத்திரம் எங்கிருந்து முளைக்கிறது என்பது வெளிப்பட்டுவிட்டது. இங்கே அவர் ஒப்பிலக்கணம், ஒப்பிலக்கியம், கால்டுவெல்லின் திராவிட மொழிகள் குறித்த கண்டுபிடிப்பு ஆகியவை பற்றி எல்லாம் சொல்லாவிட்டாலும் இத்தகையவற்றின் மீது இங்குள்ள பார்ப்பன அறிவுஜீவிகளின் ஆத்திரத்தை அவர் மறைமுகமாக வெளிப்படுத்தி விட்டார்.  சமஸ்கிருதத்தை மொழிகளின் தாய் எனச் சொல்ல விடாமல் செய்து விட்டார்களே, முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் மட்டுந்தான் வந்தேறிகள் என நம்மை அரசியல் பண்ண விடாமல் செய்து விட்டார்களே என்று அவர் சீறிப் பெருமூச்சு விடுகிறார். பேயாய் அலறுகிறார். மேலும் அவர் சொல்வது:

“17,18,19ம் நூற்றாண்டுகளில் ஐரோப்பிய மிஷனெரிகள் தமது கட்டுப்பாட்டில்  இந்தியாவில் ஆங்கில மீடியம் பள்ளிகள் அப்புறம் கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் முதலியவற்றை எல்லாம் இந்த நோக்கத்திற்காகவே கொண்டு வந்தனர்.  சுதந்திரத்திற்குப் பின் மார்க்சிஸ்ட்கள் நேரடியாகவும், கிறிஸ்தவ மிஷனரிகள் மறைமுகமாகவும் வரலாற்றுக் கல்வியைத் தங்கள் கைக்குள் வைத்துக் கொண்டார்கள். தமிழ்நாட்டில் திராவிட இயக்கத்தவர் பிராமண எதிர்ப்பு, இந்து எதிர்ப்புக் கருத்துக்களைக் கல்வித்துறையில் புகுத்தினர்”.

ஆர்.எஸ்.எஸ் அம்மையாரின் கட்டுரை விரிவானது, அது இன்ன்னும் பலவற்றைப்ப் பேசுகிறது. அது கிடக்கட்டும். ஒப்பிலக்கணம், மானுடவியல் முதலியன இந்திய வரலாற்று ஆய்வில் பல முக்கிய பங்களிப்புகளைச் செய்துள்ளன (பார்க்க: எனது, ‘ஆரியக் கூத்து’, எதிர் வெளியீடு, பொள்ளாச்சி). சமஸ்கிருதத்தைத் தேவ பாஷையாகவும், தமிழை நீச மொழியாகவும் கட்டமைதிருந்த வரலாற்றை அவை தகர்த்தன. சாதிகளின் உருவாக்கம், அதன் இயக்கம் ஆகியவற்றைப் புரிந்து கொள்ள உதவின. எப்படி, தலித்கள், பழங்குடியினர், பெண்கள் முதலானோர் அடிமைகளாக்கப்பட்டனர் என்பதை விளக்கின.

அது பொறுக்கவில்லை இவர்களுக்கு. அது மட்டுமல்ல கல்வியைக் கிறிஸ்தவம் இங்கு கொண்டு வந்ததே ஒரு சதி என இன்று சொல்லவும் துணிவதை நாம் நோக்க வேண்டும். ஏகலைவனின் கட்டை விரலை வெட்டியவர்கள் வேறென்ன சொல்வார்கள். சில ஆண்டுகளுக்கு முன் இவர்களின் இன்னொரு அறிவுஜீவிக் கருத்தியலாளர் கே.ஆர்.மல்கானி “இந்தியர்களுக்குப் படிப்பு தேவையில்லை” எனக் கூறி சர்ச்சை ஒன்றைக் கிளப்பியது நினைவில்லையா?

படிப்பே வேண்டாம் என்றால் இவர்கள் சொல்லும் வலிமையான இந்தியாவை எப்படி உருவாக்குவது? வேறொன்றுமில்லை. ஐ.ஐ.டியை வெறுமனே தொழில்நுட்பர்களை, நுண்திறன் பெற்ற ‘டெக்னொக்ராட்’களை உருவாக்கும் நிறுவனமாக மாற்றுவதுதான் இவர்களின் நோக்கம்.

இங்கெதற்கு இந்தக் கலைத்துறைப் படிப்பு, பன்மை ஒழுங்கு அறிதல்முறை, ஒப்பிலக்கணம், மானுடவியல் என்கிற “கல்விச் சீரழிவுகள் எல்லாம்?” எனக் கேட்கிறது ஆர்.எஸ்.எஸ்.

சோவியத் ருஷ்யாவில் லெனின் காலந் தொடங்கி சுமார் 30 ஆண்டு காலம் கல்வி அமைச்சராக இருந்த லூனாசாஎஸ்கி, “அதீத நுண்திறம் ஒருவரை முடமாக்கும்” (Overspecialisation cripples a man)” என்பார். கல்வியின் அடிப்படை நோக்கம் முழுமையான மனிதனை உருவாக்குவது. அதனால்தான் பட்டப் படிப்புகளுக்கு Bachelor, Master, Doctor of Philosophy என்றெல்லாம் பெயர்கள் கொடுக்கப்பட்டன. ஒரு 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு பட்டப் படிப்பிலும் ஒரு major பாடம் தவிர ஒரு minor பாடமும் இருந்தது. விஞ்ஞானம் பயில்பவர் ஒரு கலைப்படத்தையும், கலைப்பாடத்தில் பட்டப்படிப்பு படிப்பவர் சிறிது விஞ்ஞானத்தையும் அறிவது அவசியம் எனக் கருதப்பட்டது. இது கார்பொரேட் காலம். கலைப் பாடங்களையே ஒழிக்க வேண்டும் எனச் சொல்கிற காலம். கார்ப்பொரேட்களும் இந்துத்துவமும் கைகோர்க்கும் இன்னொரு முக்கிய புள்ளி இது.

கலை மற்றும் சமூக அறிவியல்துறைத் தலைவர் டாக்டர் சுதிர் செல்லா ராஜன் மிகவும் தகுதிமிக்க படிப்புகளையும் அனுபவங்களையும் கொண்டவர். அவர், அவரது மனைவி சுஜாதா பைரவன், பேரா. மிலிந்த் ப்ராஹ்மி ஆகிய மூவரே இன்றைய ஐ.ஐ.டி “சீரழிவுக்கு” காரணம் என அடையாளம் காட்டுகிறது ஆர்.எஸ்.எஸ்.

ஒன்று நிச்சயம். இப்போதைய எதிர்ப்பின் விளைவாக ஐ.ஐ.டி நிர்வாகமும், மோடி அரசும் சற்றே பொறுத்திருந்தாலும் விரைவில் சென்னை ஐ.ஐ.டியில் உள்ள இந்த 5 ஆண்டு ஒருங்கிணைக்கப்பட்ட M.A படிப்பு ஒழிக்கப்படும் அல்லது மாற்றியமைக்கப்படும். சுட்டிக்காட்டப்பட்ட ஆசிரியர்கள் பழிவாங்கப்படுவர்.

நெஞ்சில் கனல் மணக்கும் பூக்கள்

‘தீராநதி’ இலக்கிய இதழில் ஜனவரி 2017 முதல் ‘நெஞ்சில் கனல் மனக்கும் பூக்கள்’ எனும் தலைப்பில் தொடர் கட்டுரை தொடங்கியுள்ளேன். முன்னதாக 2007 ஜனவரி முதல் 2012 டிசம்பர் வரை ‘பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன்’ எனும் தலைப்பில்  எழுதிய 60 கட்டுரைகள் தற்போது ‘உயிர்மை’ வெளியீடாக அதே பெயரில் வெளிவந்துள்ளது. இந்த இதழில் வெளிவந்துள்ள தொடக்கக் கட்டுரை.

‘தீராநதி’ யின் ஊடாக உங்களோடு மீண்டும் உரையாட ஒரு வாய்ப்புக் கிடைத்தமையில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய எழுத்துப் பணிகளில் மூன்று கட்டங்கள் முக்கியமானவையாக இருந்துள்ளன. ஒன்று கோமல் சுவாமிநாதன் அவர்களின் ‘சுபமங்களா’ இதழில் வெளிவந்த என் கட்டுரைகளும் நேர்காணலும். அடுத்து ‘நிறப்பிரிகை’ என்றொரு இலக்கிய – அரசியல் முயற்சியும் என் எழுத்துக்களும், அடுத்து ‘தீராநதி’ யில் நான் எழுதி வந்த ‘பேசாப் பொருளைப் பேசத் துணிந்தேன்’ கட்டுரைத் தொடர்.

வெகுமக்கள் இதழ்க் குழுமம் ஒன்றின் இலக்கிய இதழில் எழுதுவது குறித்து சற்றே தயக்கத்துடன்தான் என் தீராநதி நுழைவு அமைந்தது. ஆனால் அந்தத் தொடர் இடைவிடாது வெளிவந்த அந்த ஐந்து ஆண்டுகளில் (ஜனவரி 2007 – டிசம்பர் 2011) என் எழுத்துச் சுதந்திரத்தில் எந்தத் தலையீடும் இன்றி அது அமைந்ததை நான் வாய்ப்புக் கிடைத்த இடங்களில் எல்லாம் நன்றியோடு பதிவு செய்து வந்துள்ளேன்.

ஐந்தாண்டுகள், அறுபது கட்டுரைகள் ஒவ்வொன்றும் ஐந்து அல்லது ஆறு பக்கங்கள்… இன்று நினைத்துப் பார்த்தால் மலைப்பாக உள்ளது. வாசக இடையீடுகள், மறுப்புகள், பாராட்டுகள் என அந்த ஐந்தாண்டுகளும் என் எழுத்து வாழ்வில் மறக்க முடியாதவை.

2011 முதல் 2016 வரையிலான இடைப்பட்ட இந்த நான்காண்டுகளிலும் நான் அவ்வப்போது ஈழம் மற்றும் மலேசிய இதழ்கள் உட்படப் பல்வேறு இதழ்களிலும் எழுதிவந்த போதும், அவ்வப்போதைய நிகழ்வுகளின் மீதான என் கருத்துக்களை உடனுக்குடன் வெளிப்படுத்தும் சாதனமாகப் பெரிய அளவில் நான் பயன்படுத்தியது சமூக ஊடகங்களைத்தான், குறிப்பாக முகநூல். உடனுக்குடன் கருத்துக்களை எழுதுவதற்கும், எழுதிய சில கணங்களில் எதிர்வினைகளைப் பெறுவதற்குமான இந்தப் புதிய ஊடகங்கள் இன்று சக்தி வாய்ந்த கருத்து வெளிப்பாட்டுச் சாதனங்களாக வெளிப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் பெரிய அளவில் இன்று கருத்து வெளிப்பாட்டில் ஒரு ஜனநாயகப்பாடும் நிகழ்ந்துள்ளது. கூடவே  ஜனநாயகப்பாட்டின் மூலம் உருவாகும் பிரச்சினைகளையும் அது தன்னகத்தே கொண்டுள்ளது. குறிப்பாக எது குறித்தும் பொறுப்பற்ற முறையில் எதையும் சொல்லிவிடுவது என்பதற்கு இது ஒரு வாய்ப்பாக உள்ளது. எனினும் உடனுக்குடன் தவறுகள் சுட்டிக்காட்டப்படுவது, மாற்றுக் கருத்துக்களை வெளிப்படுத்துவது என்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன என்பது இந்தப் பிரச்சினையை ஓரளவு ஈடு செய்யக் கூடியதாகவும் அமைகிறது.

தகவல் பெருக்கம் என்பது இந்த நூற்றாண்டின் ஒரு அற்புதம். யாரும் எந்த ஒரு நிகழ்வு குறித்தும் உலகெங்கிலும் என்ன கருத்து வெளிப்பாடுகள் நிகழ்ந்துள்ளன என்பதை அறியும் இந்த வாய்ப்பு நம் முந்திய தலைமுறையினருக்குக் கிட்டியதில்லை. அந்த வகையில் நாம் பாக்கியசாலிகள். எனினும் இந்தச் சூழல் இணையப் பயன்பாடு மிக்கவர்களின் மத்தியில் ஒரு குறிப்பிட்ட அளவு நூல் வாசிப்பைக் குறைத்துள்ளது என்பதையும் கவனிக்க வேண்டி உள்ளது.. எல்லாவற்றையும் இணையத் தளங்களிலேயே வாசித்து எழுதும் பல கட்டுரைகள் ஆழமற்று அமைந்து விடுகின்றன. அதுவும் தினம் ஒரு கட்டுரை எழுத வேண்டிய கட்டாயப் பொறுப்பில் உள்ளவர்கள் எழுதுபவை பல நேரங்களில் ஆழமற்றவையாக மட்டுமின்றி பிரச்சினைக்குரியவையாகவும் ஆகிவிடுகின்றன.

நூல் வெளியீட்டிலும் மிகப் பெரிய தொழில்நுட்ப வெடிப்பு இன்று நிகழ்ந்துள்ளது. மிகத் தரமாக, அழகாக, விரைவாக நூல்கள் வெளிவந்து விடுகின்றன. ஆனால் ஒரு பத்தாண்டுகளுக்கு முன் இருந்தது போல 1200 பிரதிகளை அச்சிடுவது, அதில் 200 பிரதிகள் விமர்சனம் முதலானவைகட்கு இலவசமாக அளிப்பது என்பவையெல்லாம் இன்று பழங்கதைகளாகி விட்டன. நூறு பிரதிகள், சில நேரங்களில் வெறும் 50 பிரதிகள் என்கிற அள்விற்கு இன்று நூல் வெளியீடுகள் அமைகின்றன. பல நேரங்களில் நூல் வெளியீட்டாளர்கள் அவை விற்றவுடன் தொடர்ந்து அவற்றை அச்சிடுவதில்லை.

இன்னொரு பக்கம் முன்னெல்லாம் ஒரு 300 பிரதிகளுக்குப் பெரும்பாலும் உறுதியாக நூலக ஆணை கிட்டும் எனும் நிலையும் இன்று இல்லை. நல்ல நூல் வாசிப்பாளரான கருணாநிதியின் ஆட்சியில் தொடங்கிய இந்நிலை இன்றும் தொடர்கிறது. இது குறித்து எந்தப் பெரிய எதிர்ப்பும், விவாதமும் தமிழகத்தில் இல்லை. சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலகத்தில் சுமார் 300 பேர்கள் அமரக் கூடிய கருத்தரங்க வளாகம் குறைந்த வாடகையில் எழுத்தாளர்களுக்கும் வெளியீட்டாளர்களுக்கும் கிடைத்து வந்ததும் இன்று எந்த நியாயங்களும் இன்றி நிறுத்தப்பட்டு விட்டது. இதற்கும் எந்தப் பெரிய எதிர்ப்பும் இல்லாதது வருத்தத்திற்குரியது. இன்று ஒரு நூல் வெளியீட்டைச் சென்னையில் நடத்த வேண்டுமானால் அறை வாடகைக்கே பத்தாயிரம் ரூபாய் குறைந்தபட்சம் தேவைப் படுகிறது.  எனவே இத்தகைய கூட்டங்கள் இப்போது மிகச் சிறிய அளவில் புத்தகக் கடைகளில் நடத்தப்படக் கூடிய நிலைக்கு வந்துவிட்டன.

நல்ல ஆங்கில நூல்கள் விற்கக் கூடிய கடைகளும் இன்று குறைந்துவிட்டன. அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற ‘ஆன்லைன்’ விற்பனை அதிகரித்துள்ளதன் விளைவு இது. புத்தகக் கடைகளுக்குச் சென்று அங்கே கடலெனக் குவிந்து கிடக்கும் நூல்களை ஆசை தீரக் கண்களை விரித்துப் பார்த்து, பல மணி நேரங்கள் அங்கு செலவிட்டுச் சுமந்து வந்த நூல்களை, வீட்டுக்கு வந்தவுடன் பிரித்து அவற்றின் புதிய வாசனையை நுகர்ந்து புரட்டிப் பார்க்கும் அனுபவங்களும் குறைந்து விட்டன. பயணங்களிலும் கூடப் புத்தகங்கள் படிப்பது என்பது அழிந்து செல்போன்களில் மூழ்குவது என்கிற நிலை ஏற்பட்டுவிட்டது. நண்பர்கள் மத்தியிலும் கூட வாசித்த புதிய புத்தகங்கள் குறித்த உரையாடல்கள் குறைந்து விட்டன.

#   #   #

என் மீது நண்பர்கள் வைக்கும் விமர்சனங்களில் ஒன்று தொடக்க காலத்தில் நான் தமிழ் நூல்கள், எழுத்துக்கள், போஸ்ட்மார்டனிசம் முதலான கோட்பாடுகள் குறித்தெல்லாம் எழுதி வந்தது இப்போது குறைந்து விட்டது என்பதுதான். அது உண்மை களப்பணி மற்றும் உடனடி அரசியல் நிகழ்வுகள் குறித்து எழுதுவதில் என் நேரம் கழிந்து விடுவதால் நூல்கள் குறித்த உசாவல்கள் குறைந்துவிட்டன. சொல்லப்போனால் எல்லா மட்டங்களிலும் இது நிகழ்ந்துகொண்டுள்ளது. ஒரு இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு பல கோட்பாடுகள் அறிமுகமாயின; பெரிதும் விவாதத்திற்குள்ளாயின; ஃபூக்கொ, தெரிதா, பாத்ரிலா லத்தீன் அமெரிக்க எழுத்துக்கள் என்றெல்லாம், நிறையப் பேசப்பட்டன. இன்று அதன் தொடர்ச்சியும் அறுந்துள்ளது.

தீராநதியில் எழுதக் கிடைத்துள்ள இந்த வாய்ப்பை இப்படியானவற்றிற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என உள்ளேன். வழக்கம்போல உங்களின் எதிர்வினைகள் இதில் பெரும்பங்கு வகிக்க வேண்டும்.

அடுத்த இதழில் சந்திப்போம்…

 

 

 

 

 

ஆனால் இந்தப் பெரு வாய்ப்பை நாம் பயன்படுத்தும்போது நமக்குக் கூடுதல் எச்சரிக்கைகள் தேவை. நாம் இதுவரை அறிந்திராத, பரிச்சயமற்ற எது குறித்தும் எழுதிவிடும் இந்த வாய்ப்பு ஆபத்தாகவும் உருமாற

செல்லாத நோட்டுக்களும் பொல்லாத அரசும்  

{மோடி அரசின் பணமதிப்பு நீக்கம் தொடர்பான எனது இரண்டாவது கட்டுரை இது}

நரேந்திர மோடி அரசு  எந்தவிதமான அற மதிப்பீடுகளும் இல்லாத ஒரு மதவாத அரசு என அறிந்த பலரும் கூட அது ஒரு திறமையற்ற அரசு என்பதைப் புரிந்திருப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் நமது மத்தியதர வர்க்கம் இந்த அரசைத்தான் ரொம்பவும் திறமையான அரசு எனவும் இதன் மூலமே இந்தியா உலக வல்லரசுகளில் ஒன்றாக ஆகப் போகிறது எனவும் நம்பிக் கொண்டுள்ளது. இந்த நம்பிக்கைகள் எத்தனை அபத்தம் என்பதைப் புரிந்துகொள்ள ஒரு நல்ல வாய்ப்பாகத்தான் இன்று இந்தப் பண மதிப்பீட்டு நீக்க நடவடிக்கை அமைந்துள்ளது. மக்களுக்கு, குறிப்பாக அடித்தள மக்களுக்கு இதன் மூலம் ஏற்பட்டுள்ள இத்தனை சோதனைகளுக்கும் மத்தியில் ஏற்பட்டுள்ள ஒரே நல்ல விளைவு இதுதான்.

யோசித்துப் பார்த்தால் எல்லா எதேச்சிகார அரசுகளுமே இன்னொரு பக்கம் முட்டாள்தனமான அரசாக இருப்பது விளங்கும். ஒரு ஜனநாயக அரசின் சிறப்பே எந்தப் பிரச்சினையிலும் கூட்டு முடிவு எடுப்பது என்பதுதான். ஆனால் இந்த விஷயத்தில் என்ன நடந்தது? நிதி அமைச்சருக்கும், ரிசர்வ் வங்கி கவர்னருக்கும் கூடத் தெரியாமல் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. இது குறித்த குற்றச்சாட்டு நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டபோது நிதி அமைச்சர் அருண் ஜேட்லி எழுந்து அதை மறுக்கவில்லை அசடு வழிய அமர்ந்திருந்தார். ஒரு ஜனநாயக முறையில் முடிவெடுக்கப்பட்டிருந்தால் நிச்சயம் இப்படியான ஒரு முட்டாள்தனமான முடிவு அப்போது உருப்பெற்றிருக்காது. நரேந்திரமோடி, அமித் ஷா முதலான ஒரு சில நபர்கள் எடுத்த இந்த எதேச்சதிகார முடிவு இன்று 130 கோடி மக்களையும் பாதித்துள்லது.

நிதி அமைச்சருக்கும் ரிசர்வ் வங்கி கவர்னருக்கும்தான் தெரியவில்லையே ஒழிய யாருக்கெல்லாம் தெரிய வேண்டுமோ அவர்களுக்குத் தெரிந்தே இருந்தது. அறிவிப்பு வருவதற்கு முதல்நாள் மே.வங்க பா.ஜக அலுவலகத்திலிருந்து 1 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த உயர்மதிப்பு நோட்டுக்கள் வங்கியில் செலுத்தப்பட்ட கதை ஊரறியும். தவிரவும் இந்த ஏப்ரலில் அதிக அளவில் 500 மற்றும் 1000 தவிர்த்த சிறிய அளவிலான நோட்டுகள் தங்கள் வங்கியிலிருந்து பெறப்பட்டுள்ளன என SBI வங்கி தெரிவித்துள்ளது. இப்படியான நடவடிக்கை எடுக்கப்போவது குறித்த செய்திகள் பல இதழ்களிலும் கூட வெளியாகியிருந்தன.

இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். மோடி அரசு ஆட்சிக்கு வந்தது முதல் அரசின் இருப்பை ஒரு பெருஞ்சுமையாக மக்கள் மீது சுமத்தி வருவதுதான் அது. அரசு சர்வ வல்லமையுடையது; அதன் முன் மக்கள் எந்த அதிகாரமும் அற்ற தூசிகள் என்கிற கருத்தை மக்கள் மனதில் பதிய வைப்பதில் அது குறியாய் உள்ளது. ஆதார் அட்டை இப்போது  அனைத்துத் துறைகளிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. சமையல் எரிவாயுக் கலன்களுக்குக் கொடுத்து வந்த சொற்ப மானியத் தொகையை ஆதார அட்டையுடன் இணைத்த அரசு இப்போது எளிய மக்களிடம் உள்ள அந்த ஒரு சில 500 / 1000 ரூ நோட்டுக்களையும் செல்ல வைக்க வேண்டுமானால் ஆதார அட்டை  அல்லது ‘பேன் கார்டு’ வேண்டும் என்றெல்லாம் சொல்லத் துணிகிறது. மாணவர்களைத் தரம் பிரிப்பது, உயர் கல்வி நிறுவனங்களில் கார்பொரேட் ஊடுருவலுக்கு வித்திடுவது, பொது சிவில் சட்டம் என்கிற பெயரில் தனி நபர் அடையாளங்களைக் கேள்விக்குள்ளாக்குவது, போர்ச் சூழலை உருவாக்கி அரசின்  மீதான மக்களின் விமர்சன உரிமைகளை மறுப்பது…. எனச் சொல்லிக் கொண்டே போகலாம்.

அரசு எந்த அளவு வலிமை குறைந்ததாக உள்ளதோ அந்த அளவு மக்கள் வலிமை மிக்ககவர்களாகிறார்கள். ஆனால் அரசுகள் என்றைக்கும் தங்களின் வலிமையையும் அதிகாரக் குவியலையும் இழக்கத் தயாராக இருப்பதில்லை. அதன் உச்ச வடிவத்தைத்தான் பாசிசம் என்கிறோம்.

மோடி அரசின் இந்த நடவடிக்கை அரசியல் சுதநெதிரத்திற்கு அப்பால் இன்று பொருளாதாரச் சுதந்திரத்தையும் இன்று கேலிக் கூத்தாக்கியுள்ளது. நான் என்ன வாங்குகிறேன், எப்படி வாங்குகிறேன், எதைச் சாப்பிடுகிறேன், எப்படி என் பணத்தைச் செலவழிக்கிறேன் என்பதெல்லாம் என் சொந்தப் பிரச்சினை. இதில் தலையிட அரசுக்கு அருகதையும் இல்லை; அனுமதியும் இல்லை. இன்று மோடி அரசு நம் மீது திணிக்கும் இந்த எலெக்ரானிக் பணப் பரிவர்த்தனை என்பது நமது இந்தப் பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தையும் அரசின் கண்காணிப்பிற்குள் கொண்டு வருகிறது. இப்படிச் செய்ய அரசுக்கு உரிமையில்லை. அது மாத்திரமல்ல, இப்படியான எலெக்ட்ரானிக் பரிவர்த்தனையின் ஊடாக ஒவ்வொரு முறையும் நாம் அதற்கெனப் பணம் செலுத்த வேண்டியுள்ளது. அதன்மூலம் நமக்குச் சொந்தமான பணத்தின் மதிப்புக் குறைந்து கொண்டே போகிறது.

இன்று இந்த 500 / 1000 ரூ நோட்டுகளின் மதிப்பு இழப்பு நடவடிக்கையின் நோக்கமும் மக்களின் முன் அரசின் வலிமையை இன்னொரு முறை நிகழ்த்திக் காட்டுவதுதான். மற்றபடி கருப்புப் பணம், எல்லை தாண்டிய கள்ள நோட்டு உற்பத்தி என்று அவர்கள் கதைப்பதெல்லாம் இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வழிமுறைகளில் ஒன்றுதான்.  அறிவிக்கப்பட்ட இந்த நோக்கங்களுக்கும்  இந்த நடவடிக்கைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப் பார்ப்போம்.

1.500 மற்றும் 1000 ரூ நோட்டுக்களைச் செல்லாததாக்குவதன் மூலம் கருப்புப் பணத்தை ஒழிக்க இயலாது. ஏனெனில் இன்று மொத்தமுள்ள கருப்புப் பண்த்தில் பணமாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது வெறும் 5 முதல் 6 சதம்தான். கடந்த ஐந்தாண்டுகளில் நடத்தப்பட்ட வருமானவரிச் சோதனைகள் மூலம் வெளி வந்துள்ள உணமை இது. மற்றவை தங்கமாகவும், நகர்ப்புற நிலங்களாகவும், அந்நிய நாடுகளில் வாங்கப்படும் சொத்துக்களாகவும் அந்நியச் செலாவணியாகவும்தான் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை மூலம் அவற்றையெல்லாம் வெளிக் கொணர முடியாது.

2.இந்த நடவடிக்கை மூலம் கள்ள நோட்டுக்கள் ஒழிக்கப்படும் என்கிற பிரச்சாரத்திலும் பொருளில்லை. கொல்கத்தாவில் உள்ள ‘இந்தியப் புள்ளியியல் நிறுவன’ ஆய்வு ஒன்றின்படி இன்று புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுகளின் மதிப்பு 400 கோடி ரூபாய்தான். அதாவது இன்று செல்லாதவை என ஆக்கப்பட்டுள்ள நோட்டுகளில் வெறும் 0.028 சதம்தான் கள்ள நோட்டுகள். இதற்காக 14 லட்சம் கோடி மதிப்புள்ள நோட்டுக்களைச் செல்லாததாக்கி மக்களைத் தெருவில் அல்லாட வைப்பது மாதிரி அநீதி, குரூரம், அபத்தம் ஏதும் இருக்க முடியுமா? இது ஏதோ மூட்டைப்பூச்சியை ஒழிக்க வீட்டைக் கொளுத்திய கதையை நினைவூட்டவில்லையா? தவிரவும் இந்த நோட்டுக்களைச் செல்லாததாக்கிவிட்டுப் புதிய நோட்டுக்களை அச்சிட ஆகும் செலவு 12,000 கோடி முதல் 15,000 கோடி ஆகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

3.தொடக்கத்தில் குறிப்பிட்டபடி இந்த நடவடிக்கை குறித்த செய்தி அப்படி ஒன்றும் இரகசியமாக வைக்கப்படவில்லை.

4.இருந்த கொஞ்ச நஞ்சக் கருப்புப் பணத்தையும் வெள்ளையாக்கப் பல வழிமுறைகள் இருந்தன. பழைய தேதியிட்டு தங்கம் வாங்குவது அதில் ஒன்று. கருப்புப் பணத்தை  மாற்றுவதற்கான கருப்புச் சந்தைகளும் உருவாகிச் சுறு சுறுப்பாக வேலைகள் நடந்தன.

5.கருப்புப் பணம் உற்பத்தியாகும் வழிகளைத் தடுக்கும் முயற்சி இணையாக மேற்கொள்ளப்படவில்லை. மொத்த தேசிய உற்பத்தியில் (GDP) கருப்புப் பணத்தின் மதிப்பு 20 சதம். எனவே ஆண்டுதோறும் உற்பத்தி ஆகும் கருப்புப் பணம் 30 லட்சம் கோடி. மொத்தமாகப் புழக்கத்தில் உள்ள பணத்தின் மதிப்பு வெறும் 17.77 லட்சம் கோடிதான். இதில் 86 சதம் 500 / 1000 ரூ நோட்டுகளாக உள்ளன. அவைதான் இன்று செல்லாததாக்கப்பட்டன. ஆக இவ்வாறு செல்லாததாக்கப்பட்ட அத்தனை பணமுமே கருப்புப் பணம்தான் என்றாலும் கூட இது ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தியாகும் கருப்புப் பணத்தில் பாதி மட்டுமே. இந்தக் கருப்புப் பண உருவாக்கத்தைத் தடுக்க எந்தத் திட்டமும் இல்லை.

6.விளம்பரத்துக்காக மோடி அரசு செய்த ஆரவாரங்கள் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் குழப்பங்களை ஏற்படுத்தின.  வாக்குறுதி அளிக்கப்பட்ட இந்த நோட்டுகளை செல்லாததாக்கியது மட்டுமின்றி அடுத்த சிலவாரங்களுக்குள் பணம் எடுப்பது, நோட்டுகளை மாற்றுவது அல்லது வைப்பில் செலுத்துவது தொடர்பாக சுமார் 59 ஆணைகளை அரசு இட்டுள்ளது. இவற்றில் பல சட்ட விரோத ஆணைகளாகவும் உள்ளன. ஆனால் நீதிமன்றத்திற்குச் சென்றால் இப்படித் தொடர்ச்சியான ஆணைகள், ஒன்றை ரத்து செய்து வெளியிடப்பட்ட இன்னொரு ஆணை என ஏகப்பட்டவை இருப்பதால், நீதிமன்றங்களுக்கும் சட்ட விரோத ஆணைகளைக் கண்டறிவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன

7.எந்தத் தயாரிப்பும், பிரச்சினைகள் குறித்த முன் ஊகங்களும் இல்லாமல் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் மூலம் பொது மக்கள் சந்தித்த துயரங்களை விளக்க வேண்டியதில்லை. ரிசர்வ் வங்கிக்கு அறிவிக்காமல் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் விளைவாக அது போதிய அளவு 100 / 50 ரூ நோட்டுகளை தயாராக வைத்திருக்கவில்லை. புதிய நோட்டுகளும் போதிய அளவு உடனடியாக அச்சிட முடியவில்லை. முன்னாள் திட்டக் குழு உறுப்பினர் சௌமித்ரா சவுத்ரி, “புதிய நோட்டுகள் அச்சடிக்க சுமார் ஆறு மாதங்கள், அதாவது. 2017 மே வரை ஆகும்” என்கிறார். புதிய நோட்டுகள் பழைய நோட்டுகளைவிட அளவில் சிறியதாக இருந்ததால் ATM கள் அனைத்தும் மறு சீரமைப்புச் செய்யப்பட வேண்டிய நிலைக்குள்ளாகின. இது பொருட்செலவு மட்டுமின்றி உடனடியாக ATM களும் வேலை செய்யாமல் போய் மக்கள் சந்தித்த அவதி சொல்லி மாளாது. அச்சிடப்பட்ட புதிய நோட்டுக்கள் தொழில்நுட்ப ரீதியாகபல நுணுக்கங்களுடன் தயாராவதாகவும் இனி யாரும் கணக்குக் காட்டாமல் அதிக அளவு இந்த நோட்டுகளைச் சேமித்து வைத்திருந்தால் தானாகவே அரசுக்கு அது தெரியும் எனவும் ‘ஜீபூம்பா’ கதைகளை எல்லாம் அரசு பரப்பி வந்தபோதும் வந்த நோட்டுக்கள் ஏற்கனவே இருந்தவற்றைக் காட்டிலும் தரம் குறைந்தவையாகவும், எந்தப் புதிய தொழில்நுட்பங்களும், பாதுகாப்புகளும் இல்லாதவையாகவுமே உள்ளன. எளிதாக இவற்றைக் கள்ள நோட்டுகளாக்க முடியும் என்பதோடு 2000 ரூ நோட்டுக்களை இப்படிக் கள்ள நோட்டுகள் ஆக்கினால் அப்படிச் செய்பவர்களுக்கு முன்னைக் காட்டிலும் கூடுதல் லாபமும் ஏற்படும்.

8.உயர் மதிப்பு நோட்டுக்கள் கருப்புப் பணத்தைச் சேமித்து வைக்க இலகுவாக உள்ளது எனச் சொல்லி 500 / 1000 ரூ நோட்டுக்களைச் செல்லாததாக அறிவித்துப் பதிலாக 2000 ரூ நோட்டுக்களை அச்சிடும் முட்டாள்தனத்திற்கு இன்றுவரை அரசிடமிருந்து எந்த சமாதானமும் சொல்லப்படவில்லை. பணப் பரிவர்த்தனை இல்லாப் பொருளாதாரம் என்றெல்லாம் ஆரவாரமாகப் பீற்றிக் கொண்டாலும் அதற்கான உள்கட்டுமானங்கள் ஏதும் இங்கு இல்லை. 30 கோடி மக்கள் இங்கே வங்கிக் கண்க்கு தொடங்குவதற்கான ஆதார ஆவணங்கள் இல்லாதோர். இன்டெர்நெட் தொடர்புகள், கம்ப்யூட்டர் வசதிகள் இல்லாத ஏராளமான மக்களைக் கொண்ட நாடு இது. ATM மற்றும் வங்கி வசதிகள் எல்லாம் பெருநகரங்களில்தான் போதிய அளவு இல்லை. இந்நிலையில் மீண்டும் உயர் மதிப்புள்ள நோட்டுகளைத்தான் அவர்கள் அச்சிட வேண்டி உள்ளது. இதையெல்லாம் முன்கூட்டிச் சிந்திக்கும் அறிவில்லாத ஒரு அரசு நமக்கு வாய்த்துள்ளது.

9.1000 ரூபாய்க்குப் பதிலாக 2000 ரூ நோட்டுகளை அச்சிட்டுவிட்டால் மட்டும் இங்கு எப்படிப் பணப் பரிவர்த்தனை இல்லாத பொருளாதாரத்தைக் கட்டமைக்க முடியும்? இங்குள்ள வங்கி வசதி வெறும் 40 சத அளவுதான். 22 சத மக்கள்தான் இன்டெர்னெட் வசதி உள்ளவர்கள். 19 சத மக்கள் மின்சார வசதிகூட இல்லாதவர்கள். 14 மில்லியன் வணிகர்களில் 1.2 மில்லியன் வணிகர்கள்தான் point of sale வசதி உடையவர்கள். இந்நிலையில் பணப்பரிவர்த்தனை இல்லாப் பொருளாதாரம் என்பது எளிய மக்களின் மீது சுமத்தப்படும் இன்னொரு அநீதி.

10.இந்த முட்டாள்தனமான அவசரக் குடுக்கை நடவடிக்கை மக்களுக்குப் பெரிய அளவில் துயரங்களை ஏற்படுத்தியுள்ளதோடன்றி தொழில் துறையையும் சகல மட்டங்களிலும் பாதித்துள்ளது. ஆட்டோமொபைல் மற்றும் சொகுசுப் பொருட்கள் விற்பனை 30 முதல் 60 சதம் வீழ்ச்சி. மொத்தத்தில் GDP சரிவு 1 முதல் 2 சதமாக இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது. பண்டிகை நாட்களில் வணிகம் வீழ்ந்து சிறு வணிகர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உற்பத்தித் துறையும் பாதிக்கப்பட்டுள்ளது நிக்கேய் இந்தியா உற்பத்திக் கணக்கீட்டுப் புள்ளி (The Nikkei India Manufacturing PMI) அக்டோபரில் 54.4 ஆக இருந்தது நவம்பரில் 52.3 ஆகக் குறைந்துள்ளது.

“தொலை நோக்கில் நல்ல பலன்கள் கிடைக்கும்”  என்பதுதான் இதுவரை மோடி அரசின் ஒரே பதிலாக வெளிப்பட்டுள்ளது.  மன்மோகன் சிங் அன்று பொருளியல் வல்லுனர் கீன்சை மேற்கோள் காட்டி நாடாளுமன்றத்தில் சொன்னதைப் போல தொலை நோக்கில் நாம் எல்லோருமே செத்துப் போய் விடுவோம்.

.

பண மதிப்பு நீக்கம் பற்றி  இவர்கள் என்ன சொல்கிறார்கள்?

அமார்த்ய சென்:

“ரூபாய் நோட்டு என்கிற காகிதம் ஒரு ‘பிராமிசரி நோட்’, அதாவது அந்தக் காகிதத்தை ஒப்படைத்தால் அதில் வாக்களிக்கப்பட்ட மதிப்புள்ள தொகை எந்தக் கணமும் திருப்பித் தரப்படும் என்பதுதான். திடீரேன ஒரு அரசு தான் அளித்த அந்த வாக்குறுதியை மீறுவதாக அறிவித்தால் அது ஒரு கொடூரமான எதேச்சாதிகார அரசாகத்தான் இருக்க இயலும். யாரோ சில கோணல் பேர்வழிகள் கருப்புப் பணத்தை முடக்கி வைத்துள்ளார்கள் என்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அறிக்கை இன்று மக்கள் அனைவரையும் கோணல் பேர்வழிகள் என்பதாக எதிர்கொள்கிறது. அவர்கள் கஷ்டத்திற்கு மட்டுமல்ல அவமானத்துக்கும் உள்ளாக்கப் பட்டுள்ளனர். வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தைக் கொண்டுவந்து நம் மக்களின் வாழ்வை வளமையாக்கப் போகிறேன் என்கிற தேர்தல் நேரத்து வாக்குறுதியைப் போலவே இதுவும் ஒரு பம்மாத்துதான்.”

முன்னாள் ரிசர்வ் வங்கித் தலைவர் ரகுராம் ராஜன் :

ஒரு காலத்தில் பணமதிப்பீட்டு நீக்கம் என்பது கருப்புப் பணத்தை வெளிக் கொணரும் உத்தியாக இருந்திருக்கலாம். இப்போது கருப்புப் பணத்தை யாரும் மொத்தமாக பணமாக வைப்பதில்லை. அதைப் பலவாறாகப் பிரித்து வைக்கின்றனர். பெரிய அளவு தங்கமாகப் பதுக்கி வைக்கப்படுகிறது. இதை வெளிக் கொண்ர்வது கடினம். நமது நாட்டில் அதிகபட்சமான வரி என்பது மொத்த வருமானத்தில் 33 சதம்தான். தொழில் வளர்ச்சி அடைந்த பல நாடுகளில் வரி இதைவிட அதிகம். அமெரிக்காவில் இது 39 சதம். விற்பனை வரியையும் சேர்த்தால் இது 50 சதத்தை எட்டும்திப்போது உள்ளதைக் காட்டிலும் இன்னும் திறமையான வரி வசூல் முறைதான் கருப்புப் பணம் உற்பத்தியாவதைத் தடுக்க சரியான வழி. 

முன்னாள் அமெரிக்க நிதித்துறைச் செயலர் லாரன்ஸ் எச். சம்மெர்ஸ் (Lawrence H. Summers)

பல குற்றவாளிகள் தப்பித்தாலும் பரவாயில்லை. ஒரு அப்பாவி தண்டிக்கப்படக் கூடாது என்பது நீதி வழங்கல் தொடர்பான ஒரு அறம். இது பொருளாதார நடவடிக்கைகளுக்கும் பொருந்தும். (அதேபோல இன்று மோடி அரசு உருவாக்கியுள்ள) இந்தக் குழப்பத்தின் ஊடாக கருப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்ற பெயரில் அப்பாவிப் பொதுமக்கள் துயரத்திற்கு ஆளாக்கப்பட்டிருப்பது ஒரு அறக்கேடு.

The Guardian:

மோடி அரசு இந்தியப் பொருளாதாரத்தின் மீது பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த பண மதிப்பு நீக்கத்தின் விளைவாக 2 ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள இந்தியப் பொருளாதாரம் சுருங்கும். ஊழலில் சம்பாதித்த பணத்தை ஷேர்களாகவும், ரியல் எஸ்டேட்டிலும், தங்கமாகவும் பதுக்கி வைத்திருக்கும் பணக்காரர்கள் இதனால் பாதிக்கப்படப் போவதில்லை. ஆனால் வங்கிக் கணக்குகள் இல்லாத பெரும்பாலான ஏழை எளிய மக்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.

The New York Times :

இந்தியாவில் கோலோச்சுவது நேரடியான பணப் பரிவர்த்தனைதான். சுமார் 78 சதப் பரிவர்த்தனைகள் நேரடியான பணப் பரிவர்த்தனையின் ஊடாகத்தான் நடைபெறுகிறது… இப்போது மோடி அரசு புதிய 500, 2000 ரூ நோட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே பணப் பரிவர்த்தனையின் ஊடான பொருளாதார ஊழல்கள் இனி இந்தப் புதிய நோட்டுக்களின் ஊடாக தொடரப் போகிறது.

Al Jazeera : இந்த நடவடிக்கை ஏழை மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது. பணப் பரிவர்த்தனை மூலமாகவே தம் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டிருந்த (நடுத்தர) மக்களும் கூட இன்று வங்கிகள் முன்பும் ATM கள் முன்பும் குவிந்துள்ளனர். .

 

இன்குலாப் குறித்த ஜெயமோகனின் வக்கிர உமிழ்வுகள்

இன்குலாப் : காலன் வெல்லலாம், கவிதைகள் வாழும்

கவிஞர் இன்குலாபிற்கு களத்தில் நிற்கும் அனைத்துத் தரப்பு இயக்கத்தினரும் ஒருமித்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். நக்சல்பாரிப் பாரம்பரியத்தில் வந்தோர், மரபுவழி இடதுசாரிகள், தலித் இயக்கத்தினர், தமிழ்த் தேசியர்கள் என எல்லோரும் அணி அணியாக வந்து ஊரப்பாக்கத்தில் இருந்த அவரது எளிய இல்லத்தில் அன்று அஞ்சலி செலுத்திச் சென்று கொண்டிருந்தனர். அவர் இந்த இயக்க வேறுபாடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். அநீதிக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் அனைவரும் ஒன்றிணையும் குவி புள்ளியாக வாழ்ந்து மரித்துள்ளார் இன்குலாப்.

அவர் இந்த இயக்கங்கள் எல்லாவற்றோடும் நின்றிருந்தாலும் இவற்றில் ஏதொன்றிலும் உறைந்துவிட வில்லை. திராவிட இயக்கம் நடத்திய மொழிப்போராட்டத்தின் ஊடாக அரசியல்மயப்பட்ட அவர், அவர்கள் ஆட்சிக்கு வந்தபின் எல்லா இயக்கத்தினரையும் போலவே தொழிலாளர் போராட்டங்களின் மீது வன்முறையை ஏவியபோதும், தலித் பிரச்சினைகளில் நழுவியபோதும் அவர்களைக் கண்டிக்கவும் விலகி அகலவும் தவறவில்லை. எனினும் அவர்களினூடாக உருவான மொழி உணர்வை அவர் எந்நாளும் உதறிவிடவும் இல்லை. அதே தருணத்தில் அந்த மொழி உணர்வு வரட்டுத்தனமான பழம் பெருமைப் பேசுவதாகவும் இருந்ததில்லை. தமிழ்த் தொன்மை, தமிழ்க் கற்பு, தமிழ் மன்னர்களின் விரிவாக்க வீரப் பெருமைகள் முதலானவற்றை அவரளவுக்குக் கேலி செய்து கிழித்தெறிந்தவர்கள் இல்லை. அவரால் அதிகாரத்தின் குறியீடுகள் எதனுடனும் ஒன்றி நிற்க இயலாதென்பதற்கு அதுவே சான்று. ஈழப் போராட்டத்தையும், பிரபாகரனின் தலைமையையும் அவர் விமர்சனமின்றி ஆதரித்தபோதும்கூட ஈழ இதழொன்றில், “ஒருவேளை நீங்கள் இங்கு பெரும்பான்மையாக இருந்து, சிங்களர்கள் சிறுபான்மையாக இருந்து அடக்குமுறைக்கு ஆளாகியிருந்தால் நான் அவர்களோடுதான் நின்றிருப்பேன்” என ஈழ ஆதரவாளர்களை நோக்கிச் சொல்லும் நெஞ்சுரம் பெற்றிருந்தார். அந்த நெஞ்சுரம் இன்குலாப் தவிர வேறு எந்த விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கும் கிடையாது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

ஆனாலும் அவர் வைத்த அத்தனை விமர்சனங்களுக்கும் அப்பால் போராட்டங்களுக்கான அவரது ஆதரவு என்பது அவற்றின் நியாயங்களுக்காக மட்டுமே இருந்தது. எந்த வகையான சொந்தப் பலாபலன்களுக்கும் குறுகிய கால அரசியல் நோக்கங்களுக்கும் அப்பாற்பட்டதாகவே இருந்தது. அந்த வகையில் அவர் ஒரு அறம் சார்ந்த மனிதர். அவரிடம் நிறைந்திருந்த இந்த அற உணர்வே அவரது கவிதை ஊற்றின் அடிநாதமாகவும் இருந்தது. அவரது வாழ்வின் எளிமை, அவரது வாழ்வைப் போலவே நிகழ்ந்த அவரது மரணத்தின் ளிமை, அவர் விட்டுச் சென்றுள்ள குடும்பத்தின் எளிமை இவை மட்டுமே போதும் அவரது அற வாழ்விற்குச் சான்று பகர.
அவரது தலித் ஆதரவு அவர் வாழ்ந்து அனுபவித்த வாழ்வின் ஊடாகக் கிளர்ந்த ஒன்று. அவர் தன்னை ஒரு தலித்தாகவே உணர்ந்தார். ஏதோ தன் பெருந்தன்மையைக் காட்ட ஒரு வாய்ப்பாக தலித் ஆதரவு நிலை எடுத்தவர் அல்லர் அவர். அவரது மனுசங்கடா பாடலில் மட்டுமல்ல தலித் வன்முறைகளைக் கண்டித்துக் கிளர்ந்து சீறிய அத்தனை பாடல்களிலுமே அந்த நிந்தனைக்கும், வேதனைக்கும் ஆளானவர்களாக அவர் தன்னையே கண்டார். அவை இரங்கற் பாடல்கள் அல்ல. அவை மற்றவர்க்கு இரங்கிப் பாடியவை அல்ல. அவை தன்னுணர்ச்சிப் பாடல்கள். தன் சுய வேதனையைச் சொல்லி அரற்றிய பாடல்கள்; சீறிச் சினந்த பாடல்கள். சீறி வழி கண்ட பாடல்கள். சுயத்திற்கும் சுயத்திற்கு அப்பாலுக்கும் உள்ள இடைவெளியை அழித்த பாடல்கள்.

அரசியல் கவிதைகள் என்பன சுயப் பிரக்ஞையிலிருந்து விடுப்பட்டவை (that which renounces the fiction of self) என்பர். சுயத்தைத் துறக்க முயலும் போராட்டத்தின் ஊடாகவே (challenging the ego within the poetry itself) அரசியல் கவிதைகள் பிறக்கின்றன. அந்த வகையில் இன்குலாப்பின் கவிதைகளில் பல தமிழின் முக்கிய அரசியல் கவிதைகள் எனும் இடத்தைப் பெறுகின்றன.

ஒரு அறம் சாரந்த வாழ்வை வாழ்ந்து விடைபெற்றுள்ள அவரை ஜெயமோகன் எனும் ஆர்.எஸ்.எஸ் எழுத்தாளர் கோடூரமான சொற்களில் சாடியுள்ளதை இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். தமிழ் எழுத்துக்களுக்கு அக்மார்க் குத்திரை குத்தும் அதிகாரியாக நினைத்துக் கொண்டிருக்கும் அவர் தன் பதிவொன்றில் இன்குலாப் மீது துப்பியுள்ள அவதூறுகள் வருமாறு:

“நேர்மையான இலக்கியச்செயல்பாட்டாளர் (என நினைத்திருந்தேன் அப்படி அல்ல)”

“பாதுகாப்பான புரட்சிகளில் ஈடுபட்டவர்” (அதாவது ‘ரிஸ்க்’ எடுக்காமல் பம்மாத்து பண்ணியவர்)

“புரட்சி என்றால் வசைபாடுதல் என அன்று ஒருமாதிரி குத்துமதிப்பாக புரிந்துகொண்டிருந்தார். இந்தியாவில் சில விஷயங்கள் முற்போக்கு என்றும் புரட்சிகரமானவை என்றும் சொல்லப்படும். அவை என்ன என்று தெரிந்துகொண்டு அவற்றைச் சொல்லிக்கொண்டிருந்தார்”

(ஆபத்துகளைத் தவிர்த்து) இன்குலாப் மிக நுணுக்கமாக அந்த இடங்களை லௌகீகமான விவேகத்துடன் கடந்து வந்தார்..

“கிருஷ்ணனையும் ராமனையும் வசைபாடினார். ராஜராஜ சோழன் என்ன புடுங்கினான் என்று கேட்டார். அதே கேள்வியை தன் மதம் பற்றிக் கேட்டிருந்தால்தான் அவர் உண்மையில் புரட்சியைத் தொடங்கியிருக்கிறார் என்று அர்த்தம்.”

“தனியாளுமையின் நேர்வெளிப்பாடல்ல கவிதை. இன்குலாபுக்கு நவீனக் கவிதையின் ஆரம்பப் பாடமே புரியவில்லை. அவர் எழுதியவை வெறும் கூக்குரல்கள். பிரச்சார அறைகூவல்கள். பிரகடனங்கள்.”

இவை அனைத்தும் ஜெயமோகன் இன்குலாபின் மீது தூற்றியுள்ள வசைகள். தன் பிள்ளைகளைக் கூட எல்லோரையும் பெரிய படிப்பு படிக்க வைத்து மேம்படுத்துவதை நோக்கமாகக் கொள்ளாத வாழ்க்கை வாழ்ந்த ஒரு பெருந்தகையை, எந்த நேரமும் வேலை போய்விடலாம் என்கிற அச்சத்துடனேயே வாழ்வைக் கழித்த ஒரு கவிஞனை, போலீஸ் மிரட்டல்களுக்கும், நள்ளிரவுக் கடத்தல்களுக்கும் ஆட்பட்ட ஒரு போராளியை, முஸ்லிம்களின் மத்தியில் உள்ள சாதியத்தையும் பெண்ணடிமைத்தனத்தையும் வெளிப்படையாகக் கண்டித்த ஒரு நேர்மையாளரை, தான் பணியாற்ரிய ஒரு முஸ்லிம் கல்லூரியிலேயே அடக்குமுறைகளை எதிர்த்து நின்று, ஆதரவாக வந்த பழனிபாபாவுடன் மோதத் தயங்காத ஒரு மதச்சார்பற்ற வாழ்வை வாழ்ந்தவரை ஒரு எழுத்தாளன் இத்துனைக் கீழிறங்கி அவதூறு செய்திருப்பது கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.

இதற்குமேல் விரிவான பதில் ஜெயமோகன் போன்ற நபர்களுக்குத் தேவையில்லை.

***************************************************

கிட்டத்தட்ட சுமார் பத்தாண்டுகளாக இன்குலாப் நோய்வாய்ப்பட்டு முடங்கி இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன் அவர் தன் கால்களில் ஒன்றை இழக்கவும் நேரிட்டது. அக்காலகட்டத்தில் அவர் அதிகம் எழுதவில்லை. எனினும் அப்போது வர் எழுதியவற்றில் சில முன்னதன் தொடர்ச்சியாகவும் (முள்ளிவாய்க்கால் கரையில் அலைந்துகொண்டிருக்கிறது என் தாய்மொழி), பல இன்னொரு கட்டத்தை எட்டியதாகவும் உள்ளன. எடுத்துக்காட்டாக அவர் இறுதியாக எழுதியது எனச் சொல்லப்படும் கீழ்க்கண்ட கவிதையைச் சொல்லலாம்:

கண்ணாமூச்சு

(இறுதிக் கவிதை, உகரம் இதழ்)

“உயிர்ப்பின் போதே என்னுடன்
ஒப்பந்தம் செய்தது காலம்
தான் விரும்பும்போது தன்னோடு
கண்ணாமூச்சு ஆட வேண்டும்

கருவறைச் சுவரில்
கைச்சாத்திட்டோம்

தவழும்போதே ஆட்டம் தொடங்கியது.
நான்தான் ஜெயித்தேன்.

பிள்ளைப் பருவமும் இப்படியே
தொடர்ந்தது.
இளமையில் ஒப்பந்தம்
குறித்து
மறந்தே போனோம்.

என் கிளைகளில் பறவைகள்
பேசின.
கருங்குயிலும் வரிக்குயிலும்
இடையறாது கூவின.
செண்பகக் குயில்
கூடுகட்டிக்
குஞ்சும் பொரித்தது.

வெளியும் ஒளியும்
எமக்குச் சாட்சியமாயின.

காலம்
என் பற்கள் சிலவற்றைப்
பிடுங்கியது.
ஒரு கண்ணில் ஒளியைத்
திரையிட்டது.
மூக்குக்கு மணத்தை
மறைத்தது.
இதயத்தைக் கீறிப்பார்த்தது
ஒரு காலைப் பறித்து
ஊனமாக்கியது.
என் இளமை உதிர்ந்து
விட்டது

காலம் இன்னும் வேர்களைக்
குலுக்கி
விளையாடக் கூப்பிடுகிறது

இத்தனைக் காயங்களுக்குப்
பிறகும்
என் இருப்பு
என் திறமையாலா?
காலத்தின் கருணையாலா?

என் பற்களைப் பிடுங்கிச்
செல்லலாம்
என் சொற்கள் சிரிக்கும்

என் கண்ணொளியை
மறைக்கலாம்
என் சிந்தனை சுடரும்

என் இதயத்தை நிறுத்தலாம்
என் எழுத்துத் துடிக்கும்

என் ஒரு காலை வாங்கலாம்
என் சுவடுகள் தொடரும்

இறுதியாக ஆடிப் பார்க்கலாம்!”

(நன்றி: செ.சண்முகசுந்தரம்)

இன்குலாபின் “ஒவ்வொரு புல்லும்” எனும் மொத்தக் கவிதைத் தொகுதி வெளிவந்த பின் இப்படியாக அவர் எழுதியுள்ள கவிதைகளை வாசித்து மதிப்பீடு செய்வது அவசியம். மனிதர்கள் வாழ்ந்து கொண்டும் வளர்ந்து கொண்டும் இருக்கின்றனர். நோய், பிரிவு என்பனவெல்லாம் பல மாற்றங்களை ஒவ்வொருவரிடமும் எற்படுத்துகின்றன். படைப்பாளிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. அந்த வகையில் 2010 க்குப் பிந்திய இன்குலாப்பின் எழுத்துக்கள் விரிவாக விவாதிக்கப்பட வேண்டும். அதே போல ‘ஆனாலும்’ எனும் தலைப்பில் தொகுக்கப்பட்ட அவரது கட்டுரைகள், “பாலையில் ஒரு சுனை” எனும் அவரது தொடக்க காலக் கதைத் தொகுப்பில் உள்ள 12 கதைகள் மற்றும் ஒரு குறுநாவல் ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு இன்குலாப் எனும் நம் காலத்து நாயகனின் மொத்தப் படைப்புகளையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.

காலனுக்கும் இன்குலாப்புக்கும் நடந்த கண்ணாமூச்சி விளையாட்டில் காலன் வென்றுவிட்டான். இன்குலாப் காலம் ஆகிவிட்டார். அவர் இதயம் நின்றுவிட்டது. ஆனால் அவர் எழுத்து துடித்துக் கொண்டுள்ளது.