போலீஸ் பொய்சாட்சிகளை உருவாக்க முயன்ற கதை

[பா.ஜ.க பிரமுகர் ஒருவர் கொலையில் இரு அப்பாவி முஸ்லிம்களைச் சிக்க வைக்க போலீஸ் பொய் சாட்சிகளை உருவாக்க முயற்சித்துப் பிடிபட்ட கதை]

இரண்டு நாட்களுக்கு முன் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் நண்பர் மனோகரன் அவசரமாகத் தொலைபேசியில் அழைத்தார். பரமக்குடி பகுதியைச் சேர்ந்தவரும் தற்போது சென்னை பெரும்பாக்கத்தில் வசித்து வருபவருமான இத்ரிஸ் என்பவரை பா.ஜ.க தலைவர் முருகனின் கொலை சம்பந்தமாக விசாரிக்க அழைத்துச் சென்றதாகவும் கடந்த இரண்டு மூன்று நாட்களாக அவரிடமிருந்து சரியான தகவல் இல்லை எனவும் அவரது உறவினர்கள் தன்னிடம் வந்து சொல்லிக் கொண்டிருப்பதாகவும் இது குறித்து நாம் ஏதேனும் செய்ய வேண்டும் எனவும் கூறினா ர். இத்ரிசின் ஊரைச் சேர்ந்தவரும், திருச்சியில் சிறைக் காவலராக உள்ளவருமான மதார் சிக்கந்தர் என்பவர் பெயரைச் சொல்லி இத்ரிஸ் அழைத்துச் செல்லப்பட்டார் என்றும் இருவர் குறித்தும் சரியான தகவல் இல்லையென்றும் மனோகரன் குறிப்பிட்டார்.

“சரி, நீங்கள் இது பற்றி ஹேபியாஸ் கார்பஸ் (ஆட் கொணர்வு மனு) ஏதாவது போட முடியுமான்னு பாருங்க. மேலப்பாளயத்திலேயும் கடுமையா பிரச்சினைகள் இருக்குன்னு ஏதாவது செய்திகள் வந்துட்டே இருக்கு. அடுத்த வாரத்தில எல்லாத்தையும் சேர்த்து ஏதாவது ஃபேக்ட் ஃபைன்டிங் பண்ணலாமான்னு பார்ப்போம். முடிந்தால் நம்ம அறிக்கையை டி.ஜி.பிய நேர்ல பார்த்து குடுக்க முயற்சிப்போம்” என்று சொன்னேன்.

இது தொடர்பாக மேலதிக விவரங்களைத் திரட்ட நண்பர்களைத் தொடர்பு கொண்டு பேசிக் கொண்டுள்ளபோதே சற்று முன் திருச்சி வழக்குரைஞர்கள் கென்னடி மற்றும் கமருதீன் அனுப்பியிருந்த செய்தி அதிர்ச்சியை அளித்தது. இந்த நாட்டில் முஸ்லிம்களாகப் பிறந்தால் எத்தனை வேதனைகளைச் சந்திக்க வேண்டி உள்ளது என்பது இது போன்ற போலீசின் அத்து மீறல்களளையும், விசாரணை என்னும் பெயரில் நடத்துகிற சட்ட மீறல் மற்றும் அப்பட்டமான பொய் வழக்குகளையும் தொடர்ச்சியாய்ப் பார்த்துக் கொண்டு இருப்பவர்களுக்கே அதிர்ச்சி அளிக்கக் கூடியதாய் இருக்கிறது. நடந்தது இதுதான்.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இடைக்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் இத்ரீசும் மதார் சிக்கந்தரும். இத்ரீஸ் பெரும்பாக்கத்திற்கு (சென்னை) இடம் பெயர்ந்ந்து ஏதோ தொழில் செய்துகொண்டுள்ளார். மதாருக்கு சிறைக்காவலர் வேலை கிடைத்து திருச்சி சிறையில் பணியமர்த்தப்பட்டுள்ளார். அவர் பணியில் அமர்ந்த நாள் தொடங்கியே காவல்துறையினராலும் உளவுத் துறையினராலும் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு உதவி செய்கிறாயா எனப் பலமுறை மிரட்டப்பட்டும் விசாரிக்கப்பட்டும் இருந்துள்ளார். முஸ்லிம்கள் யாரேனும் இத்தகைய பணிகளில் நியமிக்கப்படும்போது இப்படி ’விசாரிக்கப்படுவதும்’ கண்காணிக்கப்படுவதும் வழக்கமாம். இது தொடர்பாக வழக்குரைஞர்களின் ஆலோசனையின் பேரில் மதார் உயர் அதிகாரிகளிடம் புகாரளித்தது இவரை இவ்வாறு ‘விசாரித்து’ வந்தவர்களுக்கு உவப்பளிக்கவில்லை. சென்ற மாதத்தில் பலநாட்கள் அவரிடம் ஏதோ விசாரணை என தொலை பேசியில் மிரட்டியுள்ளனர். இறுதியில் ஜூலை 30 அன்று அவரைக் கட்டாயமாக ஒரு போலீஸ் வேனில் ஏற்றி மிரட்டி செல்போனில் யார் யாருடனோ பேசச் சொல்லித் துன்புறுத்தியுள்ளனர். இது நடந்துகொண்டுள்ள போதே மதார் அழைப்பதாகச் சொல்லி இத்ரீசைக் கொண்டு சென்ற விசாரணைப் படையினர் அவரைக் கடுமையாகச் சித்திரவதைகள் செய்து முருகனைக் கொன்றது தான்தான் என ஒத்துக்கொள்ளச் சொல்லி வற்புறுத்தியுள்ளனர். முருகன் கொலையை விசாரித்து வரும் ஏ.டி.ஜி.பி மயில்வாகனனின் படையைச் சேர்ந்த இன்ஸ்பெச்டர் மாடசாமி மற்றும் 15 காவலர்கள் கொண்ட படைதான் இந்தக் கொடுமைகளைச் செய்துள்ளது. முழு விவரங்களியும் நீங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள புகார்க் கடிதங்களின் நகல் மற்றும் ஸ்கான் செய்யப்பட்ட பிரதிகளை வாசித்தால் விளங்கும்.

இப்போது இந்தக் கொடூர நாடகத்தின் மூன்றாம் காட்சி தொடங்குகிறது. இதே ஊரைச் சேர்ந்த எஸ்.பாண்டி, என்.சுந்தரவேல் இருவரும் ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில் வெளி வந்தவர்கள். மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் உத்தரவின் பேரில் திருச்சி நடுவர் நீதிமன்றம் 2ல் கடந்த 15ம் தேதி முதல் தினம் கையொப்பமிட்டு வருகின்றனர். இவர்கள் சென்ற 30 அன்று கையொப்பமிட்டு வெளியே வரும்போது மேற்படி காவல் படையினர் இவர்களைக் கட்டாயமாக இரண்டு டெம்போ வான்களில் தனித்தனியாக ஏற்றி (எண் TN 59 G 0930; TN 59 G 0915), கண்களைக் கட்டிக் கொண்டு சென்றுள்ளனர். அடையாளந் தெரியாத ஓரிடத்தில் இறக்கி, தாங்கள் என்கவுன்டர் வெள்ளத்துரை ‘டீம்’ எனவும், அவர்களை என்கவுன்டர் செய்யப்போவதாகவும் மிரட்டியுள்ளனர். எனினும் முருகன் கொலை வழக்கில் தாங்கள் சொல்வதுபோலச் சாட்சி சொன்னால் விட்டு விடுவதாகக் கூறியுள்ளனர். அதாவது, திருச்சியில் தங்கள் ஊரைச் சேர்ந்த மதார் சிக்கந்தரின் அறையில் தங்கி தினந்தோறும் நீதிமன்றத்திற்குச் சென்று கையொப்பமிட்டுக் கொண்டிருந்ததாகவும், அப்போது அங்கு இத்ரிஸ் முதலானோர் முருகனைக் கொலை செய்வது குறித்துத் திட்டமிட்டுக் கொண்டிருந்ததற்குத் தாங்கள் நேரடி சாட்சி எனச் சொல்ல வேண்டும் என அவர்கள் மிரட்டப்பட்டுள்ளனர். உயிருக்குப் பயந்து அவர்கள் அப்படியே செய்வதாகக் கூறியுள்ளனர்.

பிறகு அவர்களைக் கொண்டு சென்று திருச்சியில் உள்ள குரு லாட்ஜில் அடைத்து வைத்துள்ளனர். மீண்டும் அடுத்த நாள் அவர்கள் அவ்வாறே அழைத்துச் சென்று மிரட்டப்பட்டபோது சங்கிலியால் கட்டப்பட்ட இத்ரிசை இவர்களின் கண்முன்னால் சித்திரவதை செய்துள்ளனர். இரும்புத் தடியால் அடிப்பது, கொரடால் நகங்களைப் பிடுங்குவது. கால்களை எதிரெதிர்த் திசையில் இழுப்பது உட்படச் சித்திரவதைகள் நடந்தேறியுள்ளன. இந்த நேரத்தில் அங்கே அவர்கள் ஊரைச் சேர்ந்தவரும் திருச்சி சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டுள்ள சரவணபவன் என்பவரும் இவ்வாறு கொண்டுவரப்பட்டு இருந்துள்ளார். ஒரு சிவப்பு நிற அப்பாச்சி டூ வீலரில் வந்து இத்ரிஸ் முருகனைக் கொலை செய்ததைத் தான் பார்த்ததாக அவர் சாட்சி சொல்ல வேண்டும் என மிரட்டப்பட்டுள்ளார். அவர் அதை மறுத்துள்ளார். அடுத்த நாள் பூட்டி வைக்கப்பட்ட ஓட்டல் அறையிலிருந்து இவர்களைக் கொண்டுவந்த மாடசாமி குழுவினர் நீதிமன்ற வளாகத்தில் வந்து அமர்ந்துகொண்டு உள்ளே சென்று கையொப்பமிட்டு வருமாறு கூறியுள்ளனர். உள்ளே வந்த பாண்டியும் சுந்தரவேலனும் அங்கிருந்த வழக்குரைஞர் கென்னடி மற்றும் அவருடன் செயல்படும் இளம் வழக்குரைஞர் கமருதீன் ஆகியோரிடம் தங்களின் பரிதாபக் கதையை முறையிட்டுள்ளனர். எனது பக்கங்களைப் பின்பற்றி வருவோர்க்கு இவ் வழக்குரைஞர்களை நினைவிருக்கலாம்.

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகப் பொய் வழக்கில் கைது செய்யப்பட்ட தமீம் அன்சாரி வழக்கில் கடும் மிரட்டல்களுக்கு மத்தியில் ஆஜராகி என்.எஸ்.ஏ முதலிய சட்டப் பிரயோகங்களை உடைத்து அவரைப் பிணையில் வெளிக் கொணர்ந்தவர்கள்தான் கென்னடியும் கமருதீனும். அவர்கள் உடனடியாக பாண்டியையும் சுந்தரவேலனையும் நீதித் துறை நடுவர் திரு எம்.ராஜேந்திரன் முன் ஆஜர்படுத்தினர். அவர்களின் முறையீட்டைக் கேட்ட நீதியரசர் ராஜேந்திரன்,

1) உயிராபத்து உள்ளிட்ட கிரிமினல் மிரட்டல்கள்

2) பொய் சாட்சியங்களை உருவாக்க மோசடி செய்தல்

3) அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இன்ஸ்பெக்டர் மாடசாமி என்கிற பெயரில் வந்த போலீஸ் கிரிமினல் கும்பலை விசாரிக்க திருச்சி சி.பி.சி.ஐ.டி காவல்துறைக்கு ஆணையிட்டுள்ளார்.

(“இந்த் நாட்டிலேயே அமைப்பாக்கப்பட்ட மிகப் பெரிய கிரிமினல் கும்பல் காவல்துறைதான்” என்கிற கருத்தைக் கூறியது அலகாபாத் நீதிமன்றம்.) திருச்சி நீதித்துறை நடுவர் ராஜேந்திரனின் இந்த வரவேற்கத்தக்க ஆணை ஏ.டி.ஜி.பி மயில்வாகனனின் தலைமையில் இயங்கும் புலனாய்வுப் படையினது மட்டுமல்ல, தமிழகக் காவல்துறையின் கொடூர முகத்தைத் தோலுரித்துக் காட்டியுள்ளது (பார்க்க இணைப்பு). பொய் சாட்சியம் சொல்வதெற்கென அழைத்துச் செல்லப்பட்ட காவல்துறை வாகன எண்கள், இவர்கள் அடைத்து வைக்கப்பட்ட விடுதிகளின் பெயர்கள், அறை எண்கள் எல்லாமும் இணைப்புகளில் உள்ளன. நான் மிகச் சுருக்கமாக இங்கே இவற்றைப் பதிவு செய்துள்ளேன். தயவுசெய்து நண்பர்கள் முழுமையாக இந்தப் புகார்க் கடிதங்களை வாசிக்க வேண்டுகிறேன். அப்போதுதான் நமது காவல்துறையின் லட்சணம் புரியும்.

இதுபோன்ற கொடூரங்களை வெளிக் கொணர்வதற்காக எங்களைத் தேசத் துரோகிகள் எனச் சொல்லும் அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ் காரர்களான ஜெயமோகன் போன்றோரின் லட்சணங்களும் புரியும். கொலை செய்யப்பட்ட முருகனது கடை ஒன்றிலிருந்த சிசி டிவியில் (கண்காணிப்புக் காமரா) இத்ரிஸ் முதலானோர் எதிரே இருந்த சாலையில் நடந்து சென்ற பதிவு ஒன்று உள்ளதாம். அந்த அடிப்படையில்தான் இந்த விசாரணையாம். அந்த ஊரைச் சேர்ந்தவர்கள் அந்த ஊர் வீதிகளின் வழியே செல்லாமல் வேறெப்படிச் செல்வார்கள். அப்படியே காவல் துறைக்குச் சந்தேகமிருந்தால் முறைப்படி விசாரித்து, உண்மையான சாட்சியங்கள் ஏதேனும் கிடைத்தால் அதன் பின்பே குற்றம் உறுதி செய்யப்பட்டிருக்க வேண்டும். இப்படிப் பொய் சாட்சியங்களை உருவாக்கி விரைவாக வழக்கை ‘முடித்து’ மயில்வாகனன்களும் மாடசாமிகளும் அவார்டுகளும் பதவி உயர்வுகளும் பெற இத்ரீஸ்களும் மதார் சிக்கந்தர்களும் தங்கள் வாழ்வை இழக்க வேண்டியுள்ளது. இன்று கைது செய்யப்பட்டுச் சிறையில் கிடக்கும் பெரும்பாலான முஸ்லிம் இளைஞர்கள் இப்படியாக ‘விசாரிக்கப்பட்டு’க் குற்றம் “உறுதி செய்யப்பட்டவர்கள்”தான். கென்னடி, கமருதீன், நீதியரசர் ராஜேந்திரன் முதலானோரின் தலையீடுகள் மூலம் நீதி கிடைத்தவர்களின் எண்ணிக்கை வெகு வெகு சொற்பம். இப்படி ஒரு சமூகம் இந்த நாட்டின் காவல்துறை மற்றும் புலனாய்வுகளில் நம்பிக்கை இழப்பது எங்கு கொண்டுபோய்விடும்?

இணைப்பு 1:

பதிவு அஞ்சல் மற்றும் இமெயில் வழியாக

திருச்சி, 31.07.2013.

அனுப்புதல்:

கா.மதார் சிக்கந்தர்,

இரண்டாம் நிலை சிறைக் காவலர்,

மத்தியச் சிறை,

திருச்சி-20.

பெறுதல்,

1. உயர்திரு. சிறைத்துறை துணைத்தலைவர் அவர்கள்,

திருச்சி சரகம்,(digprisontry@dataone.in)

திருச்சி.

2. உயர் திரு. சிறைக் கண்காணிப்பாளர் அவர்கள்,

மத்தியச் சிறை,(supdtcjl@bsnl.in)

திருச்சிராப்பள்ளி 620 020.

ஐயா,

நான் திருச்சி மத்திய சிறையில் இரண்டாம் நிலை காவலராக கடந்த 23.02.2011 முதல் பணிபுரிந்து வருகிறேன். சிறை வளாகத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருகிறேன். எனது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை வட்டம், இடைக்காட்டூர் ஆகும். எனது குடும்பத்தினர் தற்சமயம் பரமக்குடியில் வசித்து வருகின்றனர். நான் மதுரை வக்பு வாரிய கல்லூரியில் பி.எஸ்.சி. படித்து பட்டம் பெற்றேன். எனக்கு சிறு வயது முதலே காவல் துறையில் பணிபுரிய வேண்டுன்றே ஆசை அதிகம். அதனால் 2011ம் ஆண்டு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடைபெற்ற தேர்வில் தேர்ச்சி பெற்று சிறைக்காவலராக கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். என்னுடைய பணியை நான் நல்ல முறையில் செய்துவந்ததினால் என் மீது இன்று வரையில் எந்த குறையும் கிடையாது.

நான் படிக்கும் காலத்திலிருந்து இன்று வரையில் எந்தவிதமான அரசியல் இயக்கங்களிலும் பங்கு கொண்டதும் கிடையாது. சுமார் 8 மாதங்களுக்கு முன்பு திருச்சி மத்திய சிறையில் பணியில் இருந்தபோது சிறை கேண்டீன் கேட் பாரா பணியில் இருந்த தமிழ்நாடு சிறப்புக்காவல் படையை சேர்ந்த காவலர் ஒருவரிடம் தற்செயலாக பேசிக்கொண்டிருந்தேன். அப்போது அங்கு வந்த பெரம்பலூர் டவுன் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமுருகன் (Central I.G. Zone Team ஐ சேர்ந்தவர்) என்பவர் என்னிடம் வந்து “என்னடா துலக்கப் பயலுங்களா, என்ன திட்டம் போடுறீங்க? நாட்டை கெடுக்க திட்டம் போடுறீங்களா? குண்டு வைக்க திட்டம் போடுறீங்களா?” என்றும் இன்னும் பலவிதமான தகாத வார்த்தைகளாலும் திட்டினார். அவர் என்னை திட்டிய பிறகுதான் நான் பேசிகொண்டிருந்த சிறப்புக்காவல் படையை சேர்ந்த காவலர் முஸ்லீம் என்றே எனக்கு தெரியும். பலபேர் முன்னிலையில் என்னை திட்டியதால் எனக்கு அவமானமாகி விட்டது. அதனால் அமைதியாக வந்துவிட்டேன். உடனே நான் இது குறித்து எனது மேலதிகாரி சிறை அதிகாரி திரு.செந்தாமரைக் கண்ணன் அவர்களிடம் வாய் மூலமாக தகவல் தெரிவித்தேன். சிறை அதிகாரி அவர்கள் மேற்படி திருமுருகன் என்பவரை அழைத்து எச்சரிக்கை செய்து அனுப்பிவிட்டார்.

மேலும் என்னிடம் “பலபேர் இதுபோலதான் தேவையில்லாமல் பேசி வம்பிழுப்பார்கள். உன் வேலையை மட்டும் பார்” எனக் கூறி என்னையும் அனுப்பிவிட்டார். இந்த சம்பவத்திற்கு பின்னர் சிறையில் கண்காணிப்பு பணியில் இருந்த ஐ.ஜி டீம் போலீசாரும், உளவுத்துறையை சேர்ந்தவர்களும் என்னிடம் மிகுந்த காழ்புணர்ச்சியோடு நடந்து கொண்டனர். இந்நிலையில் கடந்த மே மாதம் பரமக்குடி டவுன் காவல் நிலைய ஆய்வாளர் ரத்தினக்குமார் என்பவர் என்னை விசாரணை என்ற பெயரில் பல முறை பரமக்குடி காவல் நிலையத்திற்கு வருமாறு தொலைபேசி மூலம் அழைத்தார். நான் முறையாக என்னை சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்தால் வருகிறேன் என்று கூறினேன். ஆனால் அவ்வாறு அழைக்காமல் தொலைப்பேசியில் மட்டும் பேசி டார்ச்சர் செய்து வந்தார். இது குறித்து எனது அண்ணன் பைசல் ரஷீத் என்பவருக்கு தகவல் தெரிவித்தேன். அவர் முதுகுளத்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் விக்ரமன் என்பவரை நேரில் சந்தித்து வாய்மொழியாக புகார் அளித்தார். மேலும் பரமக்குடி காவல் ஆய்வாளர் ரத்தினக்குமார் அவர்களையும் சந்தித்து விபரம் கேட்ட போது பரமகுடியில் நடந்த கொலை சம்பவத்தில் இறந்து போனவரின் உறவினர் கடையை கடந்து நான் நடந்து சென்றதாகவும், அந்தக் கடையின் வாசலில் உள்ள CCTV யில் எனது உருவம் பதிவாகி உள்ளதாகவும், அதனால் என்னை விசாரிக்க வேண்டுமெனவும் கூறி உள்ளார். ஆனால் அது குறித்து மேலும் சரிவர விபரங்கள் ஏதும் அவர் தெரிவிக்கவில்லை. அதன் பின் அது குறித்து என்னை மீண்டும் தொடர்புகொள்ளவில்லை.

இதற்கிடையில் கடந்த 19.07.2013 அன்று எனது செல்போனுக்கு (8973774922) மாலை 5.30 மணியளவில் 8760182068 என்ற எண்ணிலிருந்து ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர் என்னிடம் “மானாமதுரை புரபஷ்னல் கூரியர் அலுவலகத்திலிருந்து பேசுவதாகவும், எனக்கு ஒரு பார்சல் வந்துள்ளதாகவும், அதனை பெற்றுக்கொள்ள வருமாறு தெரிவித்தார். ஆனால் அவர் தெரிவித்த தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இருந்தது. உடணே அந்த பார்சலை வாங்க சொல்லி எனது அண்ணன் பைசல் ரஷீத் அவர்களுக்கு தகவல் தெரிவித்தேன். அவரும் தொடர்பு கொண்டு கேட்டபோதும் சரிவர பதிலளிக்கவில்லை. அதற்கு பிறகு என்னுடன் பணிபுரியும் என்னுடன் குடியிருப்பில் இருக்கும் எனது ஊரை சேர்ந்த மணிமாறன் என்பவரிடம் பேசியபோதுதான் எனக்கு பேசிய அதே எண்ணிலிருந்து அவருக்கு பேசிய ஒருவர் தான் SBCID யை சேர்ந்த S.I. என்றும் ஒரு ரகசிய விசாரணை என்றும் கூறி பேசியுள்ளார். இதை தெரிந்துகொண்டு பிறகு நான் மேற்படி எண்ணிற்கு மீண்டும் பேசிய போது அதில் பேசியவர் தான் மதுரை Ad.S.P. மயில்வாகணன் தலைமையில் செயல்படும் சிறப்புப் பிரிவை சேர்ந்தவர் என்று கூறினார்.

ஆனால் எனக்கு எந்த பதிலையும் சரிவர தெரிவிக்கவிலை. இந்நிலையில் நேற்று (30.07.2013) மாலை 6.20 மணியளவில் நான் பணி முடிந்து வந்து எனது குடியிருப்பில் இருந்தபோது, சாதாரண உடையில் வந்த இருவர் தாங்கள் மதுரை Ad.S.P. மயில்வாகணன் தலைமையில் செயல்படும் சிறப்புப் பிரிவை சேர்ந்தவர்கள் என்றும் என்னை விசாரணைக்காக அவர்களோடு வருமாறு அழைத்தனர். நான் அவர்களோடு செல்ல மறுத்தபோது நீ ஒரு அரசு ஊழியர், நீ எங்களோடு வரவில்லை என்றால் கடுமையான பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டி, எனது செல்போனையும் பறித்துகொண்டு, என்னை வலுக்கட்டாயமாக அவர்களோடு அழைத்துச் சென்றனர். கொட்டப்பட்டு ஆனந்தா பேக்கரி அருகே நிறுத்தி வைத்திருந்த TN 59 G 0930 என்ற காவல்துறை வாகனத்தில் என்னை ஏற்றிக்கொண்டு, மதுரை புறவழிச்சாலை மணிகண்டம் அருகே கொண்டுசென்று TN 59 G 0915 என்ற வாகனத்துக்கு என்னை மாற்றினார்கள். அந்த இரு வாகனத்திலும் இருந்த சுமார் 15 நபர்கள் தங்களை மதுரை Ad.S.P. மயில்வாகணன் தலைமையில் செயல்படும் சிறப்புப் பிரிவை சேர்ந்தவர்கள் என்று கூறினார்கள். அனைவரும் சாதாரண உடையிலேயே இருந்தார்கள். அவர்கள் பேசிக்கொண்டதிலிருந்து அதில் ஒருவர் இன்ஸ்பெக்டர் மாடசாமி என்றும், இன்னும் இருவர் S.I மோகன், மற்றும் சரவணன் என்றும் எனக்கு தெரியவந்தது.

இதற்கிடையில் எனது அறையில் தங்கி திருச்சி சட்டக்கல்லூரியில் படித்துவரும் எனது ஊரை சேர்ந்த சரவணபவ என்பவர் மூலம் தகவல் தெரிந்துகொண்ட எனது அண்ணன் பைசல் ரஷீத் என்னை தொடர்புகொண்டு எங்கே இருகிறாய் என்று கேட்கவும் உடணே என்னை மீண்டும் எங்கள் குடியிருப்பருகே அழைத்து வந்து எனது அண்ணனிடம் நான் வீட்டில்தான் இருக்கிறேன். எந்த பிரச்சனையும் இல்லை என்று மிரட்டி பேச வைத்தனர். அதேபோல எங்க ஊரை சேர்ந்த மணிமாறன் மற்றும் சரவணபவ இருவரையும் எனது செல்போன் மூலம் அழைத்து என்னை மிரட்டி பேசவைத்தது போலவே அவர்களையும் எனது அண்ணனிடம் எந்த பிரச்சனையும் இல்லை என பேச வைத்தனர். அதற்கு பிறகு என்னையும் சரவணபவையும் மட்டும் அழைத்துக்கொண்டு அவர்களது டெம்போ டிராவலர் வாகனத்தில் சுமார் 10மணியளவில் சென்னைக்கு அழைத்துச் சென்றனர். போகும் வழியில் என்னை துப்பாக்கி முனையில் மிரட்டி எனது செல்போன் மூலம் பலருக்கும் பேசவைத்தனர். பதட்டத்தில் எனக்கு யாரிடம் பேசினேன் என்னபேசினேன் என்று நினைவில்லை.

இடையிடையே எனது அண்ணன் தொடர்பு கொண்டாலும் என்னையும், மேற்படி சரவணபவயும் மிரட்டி திருச்சியிலேயே இருப்பது போல அவரிடம் பேசவைத்தனர். அதற்குப்பிறகு சென்னை பெரும்பாக்கத்தில் செல்போன் கடை நடத்திவரும் எங்கள் ஊரை சேர்ந்த இத்ரீஸ் என்பவரை விசாரிக்க வேண்டுமெனக் கூறி என்னை பேசச் சொல்லி அவரை பெரும்பாக்கம் பஸ்டாப் அருகே வரவழைத்து, அவரையும் எங்களோடு வண்டியில் ஏற்றிக்கொண்டனர். இத்ரீசை வண்டியில் ஏற்றியவுடன் அவனது கண்ணை கட்டிவிட்டனர். அப்போது 31.07.2013 அதிகாலை மணி சுமார் 4.30 இருக்கும். அதன் பின்னர் எங்கள் மூவரையும் துப்பாக்கி முனையில் விசாரணை என்ற பெயரில் ஏதேதோ சம்பந்தம் இல்லாமல் கேட்டனர். அதன் பிறகு காலை 10.30 மணியளவில் திருச்சிக்கு எங்களை கொண்டு வந்தனர். என்னை மட்டும் தனியாக திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள குரு ஹோட்டலில் ஒரு அறையில் அடைத்து வைத்தனர்.

இத்ரீஸ் மற்றும் சரவணபவ இருவரையும் எங்கே அழைத்து சென்றனர் என்று தெரியவிலை. என்னை சுமார் 12.40 மணிக்கு மீண்டும் வண்டியில் ஏற்றிச்சென்று திருச்சி மத்திய சிறை அருகே இறக்கிவிட்டு விட்டு பணிக்கு செல்லுமாறும், மீண்டும் மாலை 7.00 மணிக்கு வரவேண்டும் என்றும், அவ்வாறு வந்தால்தான் மற்ற இருவரையும் விடுவோம் என்றும் இதை யாரிடமாவது கூறினால் இருவரின் உயிருக்குத்தான் ஆபத்து என்றும் என்னை மிரட்டிவிட்டு சென்றுவிட்டனர். நானும் சரியாக 1.00 மணிக்கு பணியில் சேர்ந்து மாலை 6.00 மணி வரையில் லையன் கேட் பணியில் இருந்தேன். கடுமையான மிரட்டலாலும், பயத்தாலும் என்னால் உடணடியாக எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. அதற்குள் எனது அண்ணனும் என்னைத் தேடி திருச்சி சிறைக்கு வந்து சேர்ந்தார்.

பணி முடிந்து நான் எனது அண்ணனை அழைத்துக்கொண்டு தங்களிடம் வாய்மொழியாக புகார் அளித்தேன். என்னை விசாரணை என்ற பெயரில் பிடித்து வைத்திருந்தபோது எனது செல்போனில் முஸ்லீம் பெயரில் உள்ள பலருக்கும் என்னை மிரட்டி போன் செய்யவைத்து ஏதேதோ பேச வைத்தனர். என்னை சம்பந்தமில்லாமல் ஏதேதோ விசாரணை செய்தனர். இடையில் பல முறை பலரும் துலுக்கப்பயலே நீயெல்லாம் ஏன் டிபார்ட்மெண்ட்டில் சேர்ந்தே? உன்னை என்ன செய்கிறோம் பார் என்றும் பலவாராக மிரட்டினார்கள். சில வெற்று பேப்பர்களிலும் மிரட்டி கையெழுத்து வாங்கிக்கொண்டார்கள். துப்பாக்கி முனையில் என்னை பலமுறை மிரட்டியதோடு மட்டுமல்லாமல், நான் சார்ந்த மதத்தையும் பலவாறாக இழிவாக பேசினார்கள். தற்சமயம் வரையில் இத்ரீஸ் மற்றும் சரவணபவ இருவரும் என்னவானார்கள் என்று தெரியவில்லை. நான் ஒரு அரசு ஊழியர்.அப்பாவி. என் மீது பணியில் சேர்வதற்கு முன்பும், பணியில் சேர்ந்த பின்பும் எந்த குற்ற வழக்கும் கிடையாது. நான் எந்த காலத்திலும் எந்த விதமான அரசியல் இயக்கங்களிலும் தொடர்பில் இருந்ததில்லை. நான் முஸ்லீம் என்ற காரணத்தினால் மட்டும் காவல்துறையால் பலவிதமான இன்னல்களுக்கு ஆளாகியுள்ளேன்.

நான் முஸ்லீம் என்பதால் மட்டும் போலீசாரால் பலவிதமான பாகுபாடுகளுக்கும், தொல்லைகளுக்கும் உள்ளாகி வருகிறேன். என்னை தேவையில்லாமல் கடத்திச் சென்று, பல இடங்களுக்கு அழைத்துச் சென்று அழைகழித்து, அடைத்து வைத்து மிரட்டியதோடு இல்லாமல், எனது நண்பர்கள் இருவரையும் பணயமாகப் பிடித்துவைத்துக் கொண்டு என்னை தற்போதுவரையில் மிரட்டி வருகின்றனர். ஆகவே ஐயா அவர்கள் என்னை கடத்திச்சென்று, அடைத்து வைத்து, துன்புறுத்தி எனது நண்பர்களையும் கடத்தி வைத்துக் கொண்டு மிரட்டிவருபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், எனது நண்பர்களை மீட்டுத்தரும்படியும், நான் அமைதியாக வாழவும், பணி செய்யவும் உதவும்படியும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். இப்படிக்கு தங்கள் உண்மையுள்ள, கா.மதார் சிக்கந்தர்.

ஆனந்த விகடன் : செய்தியும் சிந்தனைகளும்

[ஆனந்த விகடன் ‘செய்தியும் சிந்தனையும்’ தொலைபேசி உரை நிகழ்ச்சியில் சென்ற ஜூலை 3ம் வாரத்தில் அன்றைய முக்கிய செய்திகள் குறித்துப் பேசியவை]

1. இடியும் கட்டிடங்கள் சாகும் தொழிலாளிகள்..

இரண்டு வாரங்களில் இரண்டாம் முறையாக இடிபாடுகளில் சிக்கி மக்கள் இறந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. போன வாரம் முகலிவாக்கத்தில் கட்டிக் கொண்டிருந்த 11 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து 61 பேர் செத்துப் போனாங்க. நேற்று பொன்னேரிக்குப் பக்கத்தில ஒரு தனியார் குடோனின் 20 அடி உயர சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து ஒரு குழந்தை உட்படப் 11 பேர் பரிதாபமாகச் செத்துப் போயிருக்கிறாங்க.

இரண்டிலுமே செத்துப் போனவங்க எல்லோரும் கட்டிடத் தொழிலாளிகள். நமது தமிழ்நாட்டைச் சேர்ந்தவங்க தவிர ஆந்திரா, ஒடிசா முதலான மாநிலங்களிலிருந்து தொழில் செய்து பிழைப்பதற்காக இங்கு வந்து குறைந்த ஊதியத்தில் வேலை செய்து கொண்டிருந்த வெளி மாநிலத் தொழிலாளிகள்.

பெரிய அளவு மழை வெள்ளம் கூட இல்லை. பருவ மழை இப்போதுதான் தொடங்கி இருக்கு. அதற்குள் இந்த விபத்துக்கள். இந்திய அளவிலும் சரி, தமிழ்நாட்டிலும் சரி இப்படி கட்டிடங்கள் இடிந்து விழுந்து மக்கள் சாவது அதிகமாகி வருது. இரண்டு வருடத்துக்கு முன்னால் ஶ்ரீ பெரும்புதூருக்குப் பக்கத்தில ஜேப்பியார் தொழில் நுட்பக் கல்லூரிக்கான கட்டிடம் ஒன்ணு இப்படிக் கட்டிக்கொண்டிருக்கும்போது இடிஞ்சு விழுந்து 10 வெளி மாநிலத் தொழிலாளிங்க செத்துப் போனாங்க.

போன வருடம் மும்பையில அடுத்தடுத்து இரண்டு கட்டிடங்கள் இடிஞ்சு விழுந்து ஒண்னுல 74 பேரும் இன்னொண்ணுல 61 பேரும் செத்துப் போனாங்க.

இந்த விபத்துகள் எதுவும் புயல், வெள்ளம், நில நடுக்கம் மாதிரி இயற்கைச் சீற்றங்களால் நடந்தது இல்ல. முழுக்க முழுக்க இவை மனிதர்கள்தான் இந்த அழிவுக்குக் காரணம்.

விதிகளை மீறி, சட்ட விரோதமா கட்டிடங்களைக் கட்டுவதன் விளைவு இது. இப்படி விதிகளை மீறுவதில் பெரிய அளவு லஞ்சம், ஊழல் பங்கு வகிக்குது. இப்பவெல்லாம் ஒருவர் சொந்தமா ஒரு வீடு கட்ட ஆரம்பிச்சா பட்ஜெட்ல ஒரு லட்ச ரூபா லஞ்சத்துக்குன்னு ஒதுக்கி வைக்க வேண்டி இருக்கு. இப்படி கோடிக் கணக்கில முதலீடு பண்ணி இன்னும் பல கோடிக் கணக்கில லாபம் சம்பாதிக்கிற பெரிய கட்டிட நிறுவனங்கள் விதிகளை மீறிக் கட்டுறதுக்கு எத்தனை கோடி வேணும்னாலும் லஞ்சம் கொடுக்கத் தயாரா இருக்காங்க. கட்டிடங்களுக்கு அனுமதி கொடுக்கிற பஞ்சாயத்து, நகராட்சி. மாநகராட்சி, பெரு நகர வளர்ச்சிக் குழுமம் – CMDA இதில் எல்லாம் கட்டிட அனுமதி வழங்கும் துறையில போதிய அளவில் அதிகாரிகள், வல்லுனர்கள் இல்லை என்பது ஒரு பக்கம். இருக்கிறவர்கள் எல்லாம் ஊழல் பேர்வழிகளா இருக்கிறது இன்னொரு பக்கம். விதி மீறல் கண்காணிப்புக் குழு என ஒண்ணு பேருக்கு இருக்கு. அதுக்குப் பெரிய அதிகாரமில்ல. ஒழுங்கா அதைக் கூட்டுவதும் கிடையாது.

விதிமீறிக் கட்டப்படும் கட்டிடங்களை இடிச்சால்மட்டும் பத்தாது. கட்டிய பில்டர், அநுமதி அளித்த அதிகாரி எல்லோரும் கடுமையா தண்டிக்கப்படணும். பொறுப்பான சமூக உணர்வாளர்கள், வல்லுனர்கள அடங்கிய விதி மீறல்கண்காணிப்புக் குழுக்களை அமைத்து அவற்றிற்கு உரிய அதிகாரமும் அளிக்கப்படணும்.

புலம் பெயர்ந்து வரும் தொழிலாளிகளா இருந்தாலும், உள்ளூர்த் தொழிலாளிகளா இருந்தாலும் அவர்கள் உரிய முறையில் பதிவு செய்யப்பட்டு, அவர்களுக்குப் பணியிடப் பாதுகாப்பு உறுதி செய்யப்படணும். வெளி மாநிலத் தொழிலாளிகள்தான் அதிகம் சுரண்டப் படுறாங்க. அவங்களுக்குக் கேட்க நாதி இல்லை என்பதற்காகத் தான் நம்ம ஊர் முதலாளிகளும் ஒப்பந்தக்காரர்களும் அவங்களை வேலைக்கு வச்சுக்கிறாங்க. அவங்களுக்கு பணி இடப் பாதுகாப்பு மட்டுல் இல்லாம பாதுகாப்பான தங்குமிடங்களும் செய்து தரப்படணும். இவற்றை அரசாங்கம் உரிய முறையில் கண்காணிக்கணும்.

ஒரு உண்மையை நாம மறக்கக் கூடாது. “லஞ்சம் கொல்லும்”. “ஊழல் மக்களை அழிக்கும்” என்பதுதான் அது.

2. பா.ஜ.க அரசின் பட்ஜெட்

பா.ஜ.க அரசின் முதல் பட்ஜெட் முந்தைய காங்கிரஸ் அரசின் தொடர்ச்சியாக உள்ளது என்பதை மேலோட்டமாக அதைக் கவனிப்பவர்கள் கூடப் புரிந்து கொள்ள முடியும். ஆட்சிக்கு வந்து 45 நாட்களுக்குள் வேறென்ன செய்துவிட முடியும் என அரசுத் தரப்பில் சொல்லப்படுகிறது. அதில் உண்மை இருந்த போதிலும் தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர்கள் தரப்பில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் உருவாக்கப்பட்டதால், இப்போது அந்த எதிர்பார்ப்புகளை நோக்கி எதுவும் செய்யப்படாததால் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் அரசு கடைசியாக அறிவித்த இடைக்கால பட்ஜெட்டில் நிதிப்பற்றாக்குறை இலக்கு 4.1 சதம் என்றால் பா.ஜ.க பட்ஜெட்டிலும் அதுதான்., ரெவின்யூ செலவு அதிகரிப்பாக காங்கிரஸ் அறிவித்தது 1.5 லட்சம் கோடி. பா.ஜ.க வும் அதுதான் சொல்லி இருக்கு. இப்படி நிறையச் சொல்லலாம். வருமான வரி விலக்கு அதிகரிப்பும் பெரிசா இல்ல. 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்க ஒதுக்கியுள்ள நிதி வெறும் ஏழாயிரம் கோடிதான்,

இன்சூரன்ஸ், பாதுகாப்பு ஆகிய துறைகளில் நேரடி அந்நிய முதலீடு காங்கிரஸ் பட்ஜெட்ல 29 சதம். பா.ஜக்வோ இன்னும் ஒரு படி மேலே போய் 49 சதம் ஆக்கிட்டாங்க.

ஏற்கனவே அயல் உறவுக் கொள்கை, குறிப்பா ஈழப் பிரச்சினை, மீனவர் பிரச்சினை, கச்சத்தீவு எல்லாவற்றிலும் காங்கிரஸ் அரசாங்கத்தின் கொள்கையைத்தான் பா.ஜ.க அரசு கடை பிடிக்கிறது என்கிற விமர்சனம் இருக்கு. இப்ப பொருலளாதாரக் கொள்கையிலும் வித்தியாசம் இல்லை என்பது தெரிஞ்சு போச்சு.

தங்களோட இந்துத்துவ நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவது என்கிற அம்சத்தில் மட்டுந்தான் பா.ஜ.க அரசு காங்கிரஸ் ஆட்சியிலிருந்து வேறுபடுது.

இதில ரொம்ப வருந்தத் தக்க விசயம் என்னன்னா, இதுவரைக்கும் இதே கொள்கைகளுக்காக காங்கிரசை விமர்சித்த ஊடகங்கள் எல்லாம் இப்ப எந்த விமர்சனமும் இல்லாம புதிய ஆட்சியைக் கொண்டாடுவதுதான்.

விமர்சனத்துக்குரிய அம்சங்களை யாராவது சுட்டிக் காட்டினால், காங்கிரஸ் ஆட்சியிலும் அப்படித்தானே நடந்தது என்பதுதான் அவர்களின் பதிலாக் இருக்கு. ஆக, ஆட்சியில இருக்கும்போதும் காங்கிரசையும் தி.மு.கவையும் திட்டுவது, ஆட்சியில இல்லாதபோதும் இன்றைய ஆட்சியாளர்களின் தவறுக்காகவும் மறுபடியும் காங்கிரசையும் தி.மு.கவையும் திட்ட்வது என்பது ஜனநாயகத்திற்கு உகந்ததல்ல. ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.

3. இந்த வேட்டி விவகாரம்

சென்னை கிரிக்கெட் கிளப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு நீதிபதி அரி பரந்தாமனும் இரு மூத்த வழக்குரைஞர்களும் வேட்டி அணிந்து சென்றதற்காக அனுமதி மறுக்கப்பட்ட செய்தி நேற்று சட்டமன்றம் வரைக்கும் வந்துள்ளது.

இந்தப் பிரச்சினையை சரியாக விளங்கிக் கொள்ள நாம் இரண்டு உண்மைகளைக் கணக்கில் கொள்ளவேண்டும் 1. இத்தகைய மேல்தட்டு வர்க்கங்களுக்கான கிளப்புகளில் வேட்டிக்கு மட்டுமல்ல பைஜாமா, குர்தா, காலர் இல்லாத டீ சர்ட்டுகள், செருப்பு ஆகியவற்றுக்கும் அனுமதி இல்லை. 2. இது சென்னை கிளப்பில் மட்டுமல்ல இந்தியாவெங்கிலும் உள்ள மேல் தட்டு வர்க்க கிளப்புகள் எல்லாவற்றிலும் உள்ள நடைமுறைதான், 2002ம் ஆண்டில் பெங்களூரு தேசிய சட்டப் பல்கலைக் கழக இயக்குநர் மோகன் கோபால் இப்படி வேட்டி செருப்பு அணிந்து வந்த காரணத்திற்காக பெங்களூரு கிளைப்பில் அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையாகியது. மீண்டும் சில ஆண்டுகளுக்குப் பின் சத்யஜித்ரேயின் மருமகன் அசோக் சட்டர்ஜிக்கும் இதே காரணத்திற்காக அங்கு அநுமதி மறுக்கப்பட்டது.

ஆக இது அடிப்படையில் ஒரு மேல் தட்டு வர்க்க மனோபாவம். காலனீய எச்ச சொச்சம். மேல் தட்டினர் தம்மை அடித்தட்டு மக்களின் அடையாளங்களிலிருந்து பிரித்துக் காட்டிக் கொள்ளும் ஒரு திமிர் நடவடிக்கை என்றே கொள்ள வேணும்.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இது போன்ற ஆடை விதிகளும் பண்பாட்டுத் தடைகளும் பல மட்டங்களில் சமூகத்தில் செயல்படுவதைக் காணலாம். அரசு நிறுவனங்களிலும் கூட உண்டு. சென்ற ஆண்டில் ஆதார அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கவந்த துப்பட்டா அணியும் வழக்கமில்லாத பெண்கள் வெளியே அனுப்பப்பட்டார்கள். படத்தில் முகம் தெளிவாக இருக்க வேண்டும் என்பது தவிர வேறு விதிகள் ஏதும் இல்லாத போதும் இப்படிச் செய்யப்பட்டது. தமிழக அரசு பள்ளிகளில் பெண் ஆசிரியைகள் அவர்களுக்குச் சவுகரியமான உடை ஆகிய சுடிதார் அணிய அனுமதிக்கப்படுவதில்லை.
கிராமங்களில் இன்னும் கூட தாழ்த்தப்ப்பட்ட மக்கள் செருப்பு அணியக் கூடாது, இரு சக்கர வாகனங்களில் செல்லக்கூடாது. வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு செல்லக் கூடாது என்றெல்லாம் எழுதப்படாத விதிகள் செய்ல்பட்டுக் கொண்டுதான் உள்ளன. நான்காண்டுகளுக்கு மும் மதுரையை அடுத்த வில்லூரில் இப்படியான ஒரு பிரச்சினையில் துப்பாக்கிச் சூடு வரை சென்றது. இன்றும் கூட பெரிய ஷாப்பிங் மால்களில் கைலி அணிந்து செல்வதற்கு இடமில்லை. இத்தனைக்கும் கைலி என்பது ஒரு தமிழர் ஆடை. தந்தை பெரியார் பொதுக் கூட்டங்களுக்குக் கைலி அணிந்தே சென்றார். ஷர்ஜா, துபை போன்ற முஸ்லிம் நாடுகளில் நம் தமிழ் முஸ்லிம்கள் கைலி அணிந்து பொது இடங்களில் செல்வதற்குத் தடை உள்ளது,

ஆடை என்பது நமது சவுகரியத்திற்காக உள்ளது. பண்பாடு என்பதற்கு ஒரு தொடர்ச்சியும் உண்டு அதேபோல அதில் கலப்பிற்கும் இடம் உண்டு. பேன்ட், சர்ட், சுடிதார் என்பதெல்லாம் இப்போது ஏதேனும் ஒரு நாடு அல்லது இனத்துடன் தொடர்பு படுத்திப் பார்க்கக்கூடிய உடைகள் அல்ல. இன்றைய கலகட்டத்திற்குரிய உடைகளாக அவை மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டன, வேட்டியாக இருக்கட்டும், சுடிதாராக இருக்கட்டும் இவற்றை கண்ணியமற்ற உடைகள் என்பதாகக் காண்கிற நிலை வன்மையாகக் கண்டிக்கத் தக்கது.

வக்கீல்கள் கருப்புக் கோட், அதற்கு மேல் நீண்ட கருப்பு அங்கி ஆகியவற்றைக் கட்டாயம் அணிந்துதான் நீதிமன்றங்களுக்கு வரவேண்டும் என்பது உட்பட அனைத்து ஆடை விதிகளும் ஒழிக்கப்பட வேண்டும்.

4. இஸ்ரேலின் கொலை வெறித் தாக்குதலும் இந்தியாவின் மௌனமும்

நேற்று மாநிலங்கள் அவையில் இஸ்ரேல் காஸாவில் நடத்தும் கொலை வெறித் தாக்குதல் குறித்து விவாதிக்க வேண்டுமென காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் நேரம் ஒதுக்க வேண்டினர். இதை அயலுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தடுத்து நிறுத்தியுள்ளார்.

இரு தரப்பினருமே நமக்கு வேண்டியவர்கள்தான், எனவே நாம் ஒன்றும் பேச முடியாது எனக் கூறியுள்ளார். இது ஒரு அப்பட்டமான சந்தர்ப்பவாதம். அடிப்படை அற நெறிகளுக்கு மட்டுமல்ல அயலுறவு நெறிகளுக்கும் எற்புடையதல்ல. இன்று நடப்பது இரு தரப்பினருக்கு இடையேயான சமமான போருமல்ல. முதற்கட்டத் தாக்குதலில் 193 பலஸ்தீனியர்கள் இறந்துள்ளனர். மருத்துவமனைகள், பள்ளிக் கூடங்கள், மாற்றுத் திறனாளிகளின் இல்லங்கள் குறி வைத்துத் தாக்கப்பட்டுள்ளன. இவை ஏதோ குறி தவறி நடந்த தாக்குதல்கள் அல்ல. இஸ்ரேல் நாட்டுத் தலைவர்கள் இதை வெளிப்படையாகவே சொல்லிச் செய்கின்றனர். “காஸாவைக் கற்கால நிலைமைக்குக் கொண்டு செல்வோம்” “அனைத்து சக்தியையும் திரட்டி அழிப்போம்” என்றெல்லாம் சூளுரைக்கின்றனர்.

மூன்று இஸ்ரேலிய இளைஞர்களைக் கொன்றது நாங்கள் இல்லை என் பலஸ்தீனிய அமைப்புகள் அனைத்தும் மறுத்துள்ளபோதும் இஸ்ரேல் அவர்கள்தான் இதைச் செய்துள்ளனர் எனத் தன் தாக்குதலுக்கு நியாயம் சொல்கிறது.றது. ஆதாரம் என்ன என ஐ.நா இஸ்ரேல் அரசைக் கேட்டதற்கு இதுவரை எந்த பதிலும் இல்லை. ஆனால் தாக்குதல்கள் தொடர்கின்றன.

பலஸ்தீனியர்களின் ஹமாஸ் அமைப்பும் ராக்கெட் தாக்குதல்களை நடத்துகிறது என்றாலும் இதுவரை ஒரே ஒரு இஸ்ரேலியர்தான் கொல்லப்பட்டுள்ளார். ஹமாஸ் அமைப்புடன் நல்ல உறவில் இல்லாத தற்போதைய எகிப்து அரசு முன் வைத்தப் போர் நிறுத்தத் திட்டத்தை ஹமாஸ் நிராகரித்துள்ளது. அதை ஒட்டி இஸ்ரேல் தனது இரண்டாம் கட்டக் குண்டு வீச்சைத் தொடங்கியுள்ளது.

இஸ்ரேலின் போர் நிறுத்த வாக்குறுதிகளை நம்பவே இயலாது. அப்படித்தான் 2008ல் போர் நிறுத்தத்திற்கு ஒத்துக் கொண்ட இஸ்ரேல் பின்னர் சிறையிலுள்ள ஒரு இஸ்ரேலியன் விடுதலை செய்யப்பட வேண்டும் என ஒரு காரணத்தைச் சொல்லி மீண்டும் போரைத் தொடங்கியது. அந்தப் போரில் மட்டும் சுமார் 1200 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

தமக்குள் எதிர் எதிராக நின்ற பலஸ்தீனிய அமைப்புகளான ஹமாசும் ஃபடாவும் சென்ற ஏப்ரலில் இணைந்து காசாவில் ஒரு “ஒற்றுமை அரசு” (unity Govrnment) அமைத்ததை இஸ்ரேலால் செரித்துக் கொள்ள இயலவில்லை. அதன் விளைவுதான் இந்தத் தாக்குதல்.

மூன்று இஸ்ரேலிய இளைஞர்கள் கொல்லப்பட்ட போது “ஒரு தந்தை என்கிற முறையில்” கண்ணீர் வடிப்பதாகச் சொன்ன ஒபாமா அந் நிகழ்ச்சிக்கு முன் இரு பலஸ்தீனிய இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதையும் பின் ஒரு பலஸ்தீனியச் சிறுவன் உயிருடன் எரிக்கப்பட்டதையும் கண்டிக்கவில்லை. சுமார் 250 பலஸ்தீனச் சிறுவர்கள் நீண்ட காலமாக இஸ்ரேலியச் சிறையில் அடைபட்டுக் கிடப்பது குறித்தும் பேசியதில்லை.

பலஸ்தீனர்களின் உரிமையை இந்தியா எப்போதுமே அங்கீகரித்து வந்துள்ளது. இந்நிலை 1998ல் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி வந்தபோது மாறியது. இஸ்ரேலுக்கு ஆதரவான நிலையை இந்தியா எடுத்தது. அடுத்து வந்த காங்கிரஸ் ஆட்சி நேரு காலத்திய அணுகல் முறையைக் கைவிட்டு பா.ஜ.க தொடங்கிய வழியிலேயே சென்றது.
இன்று பா.ஜ.க அரசு இன்னும் ஒரு படி மேலே சென்று இஸ்ரேலின் கொலைவெறித் தாக்குதலில் “நடுநிலைமை” வகித்துக் கொலைக்குத் துணை போகிறது.

குடிமக்களாகிய நாம் இதைக் கண்டிக்க வேண்டும். அறம் சார்ந்த ஒரு அயலுறவுக் கொள்கைக்காகப் போராட வேண்டும்.

5. கல்வி நிறுவனகளில் கட்சி சார்ந்தோரை நியமிக்கக் கூடாது

பா.ஜ.க அரசின் கல்வி சார்ந்த இரு நடவடிக்கைகள் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கின்றன. இந்திய வரலாற்று ஆய்வுக் கழகத்தின் (ICHR) தலைவராக எல்லப்பிரகத சுதர்ஷன் ராவ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வரலாற்றுத் துறையில் எந்தப் பங்களிப்பையும் செய்ததில்லை. இது ஒரு தகுதியற்ற நியமனம் என உலகப் புகழ் பெற்ற வரலாற்றறிஞர்களான ரொமிலா தப்பார், டி.என்.ஜா போன்றோர் கண்டித்துள்ளனர்.

சென்ற முறை பா.ஜ.க தலைமையில் ஆட்சி நிறுவப்பட்டபோது இதே ICHR அமைப்பின் தலைவராக பி.ஆர்.குரோவர் என்பவர் நியமிக்கப்பட்டார். அப்போதும் இதே போல சர்ச்சை எழுந்தது. அதோடு ஏற்கனவே பணியில் இருந்த புகழ்பெற்ற வரலாற்றறிஞர்கள் பணி நீக்கமும் செய்யப்பட்டனர், இந்திய சமூக விஞ்ஞான ஆய்வுக் கழகத்தின் தலைவராக (ICSSR) பி.எல்.சோந்தி என்கிற அவர்கள் கட்சியின் முன்னாள் எம்.பி ஒருவர் நியமிக்கப்பட்டார்.

இந்த நியமனங்களும் பணி நீக்கங்களும் கல்வியாளர்களால் அப்போது கடுமையாக எதிர்க்கப்பட்டன. இது போன்ற உயர் கல்வி நிறுவனங்கள், ஆய்வு நிறுவனங்கள், கல்விக் கொள்கைகளை வகுக்கும் நிறுவனங்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டவையாக இருக்க வேண்டும். இவைகளில் முக்கிய பொறுப்புகளில் நியமிக்கப் படுபவர்கள் உலக அளவில் கல்விக் குழுமங்களால், ஆராய்ச்சி அறிஞர்களால் மதிக்கப்படுபவர்களாகவும் சாதனை புரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.

ஆளுங் கட்சி தனது கருத்தியலைக் கல்விக் கூடங்களில் புகுத்தும் நோக்கத்திற்காகத் தகுதியற்றவர்களை நியமிக்கக் கூடாது. தங்கள் நோக்கத்திற்காக வரலாற்றைத் திரித்து இளம் நெஞ்சங்களில் வெறுப்பை விதைக்கக் கூடாது. தற்போது ICHR தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சுதர்ஷன் ராவ் எழுதிய கட்டுரை ஒன்று நேற்று சர்ச்சைக்குள்ளானது.

இந்தியச் சாதி அமைப்பு வரலாற்றில் சிறந்த பங்களிப்பைச் செய்துள்ளது எனவும், அதனால் யாரும் பாதிக்கப்பட்டதோ இல்லை பயனடைந்ததோ கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார். இது ஆட்சியில் உள்ளவர்களுக்குப் பிடித்த கருத்தாக இருக்கலாம். ஆனால் இது கல்வியாளர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட பொதுக் கருத்து அல்ல. வரலாற்றில் புத்தர், பெரியார், அம்பேத்கர் போன்றோர் சாதிமுறையை எதிர்த்துள்ளனர்.

கல்வி சார்ந்த இன்னொரு அறிவிப்பும் செய்யப்பட்டுள்ளது. CBSE அமைப்பு தனது 15,000 பள்ளிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தை சமஸ்கிருத வாரமாகக் கொண்டாட வேண்டுமாம். அதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லியுள்ளனர். 1. சமஸ்கிருதம் எல்லா மொழிகளுக்கும் தாயாம். 2. சமஸ்கிருதம் மட்டுமே இந்திய வரலாற்றுடன் பிரிக்க இயலாது இணைந்துள்ளதாம்.

இரண்டு கருத்துக்களுமே ஏற்புடையதல்ல. சமஸ்கிருதம் எல்லா மொழிகளின் தாய் என்கிற சனாதனக் கருத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே பொய் என நிறுவப்பட்டு விட்டது. வில்லியம் ஜோன்ஸ், ராபர்ட் கால்டுவெல் ஆகியோர் சமஸ்கிருதமும் தமிழ் உள்ளிட்ட திராவிட மொழிகளும் வெவ்வேறு மொழிக் குடும்பங்களைச் சேர்ந்தவை என மொழி இயல் அடிப்படையில் நிறுவினர். இது இன்று அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு முடிவு, சமஸ்கிருதம் ஐரோப்பிய மொழிக் குடும்பத்தைச் சார்ந்தது. திராவிட மொழிகள் தான் இந்திய மண்ணில் தோற்றம் கொண்டவை. சமஸ்கிருதத்தை எல்லா மொழிகளுக்கும் தாய் என்பது எத்தனை பெரிய அபத்தம்.

பல்வேறு மொழிகளும், இனங்களும், மக்கட் பிரிவுகளும் உள்ள நாட்டில் இது போன்ற கருத்துக்கள் நாட்டு ஒற்றுமையைக் கெடுக்கும். யாரேனும் ஒரு தரப்பினர் செய்தால் கூட அவர்களின் கருத்து அது என விட்டு விடலாம். ஒரு அரசே இப்படிச் செய்யலாமா?. கல்விக் கொள்கைகள் எதுவாயினும் அவை போதிய கால அவகாசம் கொடுக்கப்பட்டு, தேசிய அளவில் விவாதிக்கப்பட்டே முடிவு செய்யப்பட வேண்டும்.

6. நதி நீர்ப் பிரச்சினைகள் : மத்திய அரசுக்கு உறுதி வேண்டும்

நதி நீர்ப் பிரச்சினையில் ஒரு புறம் தமிழக மக்களுக்கு ஆறுதலும் இன்னொரு புறம் அதிர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. சென்ற 13 அன்று முல்லைப் பெரியார் அணையின் 13 ஷட்டர்களும் திறக்கப்பட்டு நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்படும் முயற்சி தொடங்கப்பட்ட நிகழ்ச்சி தமிழக விவசாயிகளுக்கு மகிழ்சியளிக்கும் செய்தி.

தான் அளித்துள்ள தீர்ப்பின்படி 192 டி.எம்.சி நீரைத் தமிழகத்திற்கு அளிக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்குத் தான் ஆணையிட முடியாது எனச் சென்ற 15 அன்று காவிரி நடுவர் மன்றம் மறுத்துள்ளது வேதனை அளிக்கும் செய்தி. உச்ச நீதிமன்றத்திடம் முறையிட்டுக் கொள்ளுங்கள் எனக் கூறி நடுவர் மன்றம் ஒதுங்கிக் கொண்டதை ஒட்டி தஞ்சையில் இன்று கடைஅடைப்பையும், டெல்டா மாவட்டங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகை இடும் போராட்டத்தையும் காவிரி உரிமை மீட்புக் குழு அறிவித்துள்ளது.

நதி நீர்ப் பிரச்சினை, கடலில் மீன் பிடிக்கும் பிரச்சினை ஆகியவற்றில் பாரம்பரிய உரிமை என்பது மிகமுக்கியமான ஒன்று. அந்த வகையில் முல்லைப் பெரியாறு பிரச்சினை ஆகட்டும், காவிரிப் பிரச்சினை ஆகட்டும் தமிழக விவசாயிகளின் கோரிக்கை முற்றிலும் நியாயமானது.

பாரம்பரிய உரிமை என்பது தவிர சமீபத்திய இவை தொடர்பான நடுவர் அமைப்புகளும், நீதிமன்றத் தீர்ப்புகளும் தமிழக விவாசாயிகளின் கோரிக்கைகளை ஆதரித்தே வந்துள்ளன. காவிரி நதி நீர்ப்பங்கீட்டைப் பொருத்தமட்டில் ஆண்டுக்கு 192 டிஎம்.சி நீர் என்பது தவிர, மாதந் தோறும் இதை எவ்வாறு பிரித்தளிக்க வேண்டும் என்பதும் வரையறுக்கப் பட்டுள்ளது. இதைக் கண்காணிக்க ஒரு மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறி ஏழாண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. கர்நாடக அரசு இந்த நடுவர் தீர்ப்பை மதிக்கவில்லை.

முல்லைப் பெரியாறு அணையில் ஒரு நேரத்தில் 152 அடி வரை நீர் தேக்கப்பட்டு வந்தது, அணை பலவீனமாக உள்ளது என்கிற காரணத்தைச் சொல்லி நீர்த்தேக்கம் 136 அடியாகக் குறைக்கப்பட்டது. தமிழக அரசோ 142 அடி வரைக்குமாவது நீர்மட்டத்தை உயர்த்தக் கோரிகை வைத்து நீதிமன்றத்தை அணுகியது. நீதிமன்றம் நியமித்த வல்லுனர் குழு அணை முழுப் பாதுகாப்புடன் இருப்பதாக உறுதி கூறியது, சென்ற மே மாதம் உச்ச நீதி மன்றம் தமிழகக் கோரிக்கையை ஏற்று 142 அடியாக நீர் மட்டத்தை உயர்த்த அனுமதி அளித்து ஆணையிட்டது.

இத்தனைக்குப் பின்னும் இன்று கர்நாடக அரசும், கேரள அரசும் இம்முடிவுகளை ஏற்க மறுக்கின்றன. கர்நாடக அரசு தமிழகப் பங்கை அளிக்க மறுக்கிறது. மேலாண்மை வாரியம் அமைக்க முட்டுக்கட்டை போடுகிறது. கேரள அரசோ புதிய அணை கட்டியே தீருவேன் என ஒற்றைக்காலில் நிற்கிறது. நீதிமன்றத் தீர்ப்பை ஏற்க மறுக்கிறது.

இப்படியான சூழல்களில் இத்தகைய நடுநிலை நிறுவனங்களின் தீர்ப்பை நடைமுறைப் படுத்துவதில் மத்திய அரசுக்கு மிகப் பெரிய பொறுப்பு உள்ளது. அது பக்கச் சார்பு எடுக்க வேண்டியதில்லை. ஆனால் அதே நேரத்தில் அது நடுவர் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகளை நிறைவேற்றுவதில் உறுதி காட்ட வேண்டும். கூட்டாட்சி முறை நிலைத்து நிற்பதற்கு இந்த உறுதி மிக முக்கியம்.

மத்திய அரசு உடனடியாக காவிரி நதி நீர் மேலாண்மை வாரியத்தை அமைத்து தமிழக நதி நீர்ப் பங்கை உறுதி செய்ய வேண்டும். புதிய அணை கட்டும் கேரள முயற்சியைத் தடுக்க வேண்டும்.

அரசியல் கட்சிகள் முக்கியமாக தேசிய அளவிலான கட்சிகளும் இடதுசாரிகளும் இரு மாநிலங்களிலும் இரு வேறு குரல்களில் பேசுவதை நிறுத்தி ஒற்றைக் குரலில் பேச வேண்டும்; நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும்.

இல்லையேல் இந்தப் பிரச்சினைகளை மூலதனமாக்கி ‘சிவசேனை’ பாணியிலான ஒரு இனவாத வன்முறை அரசியலை முன்னெடுக்க முனைவோருக்கே இச்சூழல் பயன்படும்.

7. உக்ரேன் நெருக்கடியும் மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதும்

மலேசிய விமானம் MH 17 சுட்டு வீழ்த்தப்பட்டு 298 பேர் பலியாகியுள்ளது எல்லோருக்கும் கவலை அளிக்கும் செய்தி.. விலை மதிக்க முடியாத 298 உயிர்கள் பலியானது தவிர உலக அளவில் ஒரு அரசியல் நெருக்கடி ஒன்று ஏற்படுமோ என்கிற அச்சத்தையும் இந்த நிகழ்ச்சி எற்படுத்தியுள்ளது.

பயணிகள் விமானத்தை வீழ்த்தியது யார் என்பது உறுதியாக இதுவரை கண்டுபிடிக்கப் படாதபோதும், ரசிய ஆதரவு கிரீமியப் போராளிகளே இதற்குக் காரணம் என்கிற கருத்து இன்று பலமாக முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவும் இதர நேடோ நாடுகளும் இப்படிச் சொல்லுகின்றன. ஏற்கனவே கிரீமியப் பிரச்சினையைக் காரணம் காட்டி ரசியா மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடை இன்னும் அதிகமாகலாம் எனக் கூறப்படுகிறது.

உக்ரேன் அரசு இன்னும் ஒருபடிமேலே போய் ரசியப் படைகளே நேரடியாக இதைச் செய்திருக்க வேண்டும் என்கிறது. ஆனால் இதற்கான எந்த ஆதாரத்தையும் அதனால் தர இயலவில்லை. இன்னொரு பக்கம் கிரீமியப் போராளிகள் இதை உக்ரேன் அரசுதான் செய்திருக்க வேண்டும் என்கின்றனர். ஆனால் இதை யாரும் நம்பத் தயாராக இல்லை.

சுட்டு வீழ்த்தப்பட்ட MH 17 விமானம் 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது அதைச் சுட்டு வீழ்த்த வேண்டுமானால்.தீவிரமான ரடார் தொழில் நுட்பமும் அதற்குரிய ஏவுகணைக் கருவிகளும், அவற்றை இயக்கும் பயிற்சியும் தேவை. ரசிய ஆதரவுக் கிரீமியப் போராளிகளுக்கு ரசியா பயிசி அளிப்பது உண்மைதான். ஆனால் ஒரு இரண்டு வாரப் பயிற்சி இதற்கெல்லாம் போதாது. உக்ரேனிய இராணுவத்திலிருந்து பிரிந்து வந்து போராளி அமைப்புகளில் இணைந்தவர்கள் இதைச் செய்திருக்கலாம் என்றொரு கருத்தும் உண்டு.

சென்ற சில நாட்களில் உக்ரேன் எல்லை மீது பறந்துகொண்டிருந்த நான்கு விமானங்கள் இவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்டன. மற்ற மூன்றும் போர் விமானங்கள். இதில் இரண்டைச் சுட்டு வீழ்த்தியதற்கு போராளிகள் உரிமை கோரியுள்ளனர். ஆனால் இவை தாழப் பறந்தவை. சாதாரணத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் அதிகப் பயிற்சி இல்லாதவர்களும் இதைச் செய்ய முடியும். ஆனால் மலேசிய விமானம் உட்பட மற்ற இரு விமானங்களையும் தாங்கள் சுடவில்லை எனப் போராளிகள் சொல்கின்றனர்.

நடுநிலை விசாரணை ஒன்றை ஏற்றுக்கொண்டுள்ள ரசிய அதிபர் புடின், “கிரீமியாவில் அமைதி நிலைநாட்டப் படுவதற்குக் தடையாக இருந்தவர்களே இதற்குப் பொறுப்பு” என்றுள்ளார். அதாவது உக்ரேனிய அரசும் அதற்கு ஆதரவாக உள்ளவர்களுமே காரணம் என்கிறார்.

உக்ரேனின் கிழக்குப் பகுதில் உள்ள கிரீமியாவும் செவஸ்டாபோலும் ரசிய மொழி பேசுபவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பகுதிகள்.. சென்ற பிப்ரவரியில் உக்ரேனில் நடைபெற்ற ஒரு ஆட்சி கவிழ்ப்பை ஒட்டி இப்பகுதிகள் ரசியாவுடன் இணைய விருப்பம் தெரிவித்தன. ஒரு வாக்கெடுப்பு நடத்தி 90 சதத்திற்கும் மேற்பட்டோர் இந்தக் கருத்தை ஆதரித்து ரசியாவுடன் சேர்வதாக அறிவித்த போதும் நேட்டோ நாடுகளும் ஐ.நாவும் இதை ஏற்கவில்லை. எல்லை ஓரங்களில் ரசிய மற்றும் உக்ரேனியப் படைகள் குவிக்கப்பட்டுள்ள பின்னணியில்தான் இன்று இந்த மலேசிய விமானம் பயணிகளோடு சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது..

எப்படி ஆயினும் பயணிகள் விமானத்தைச் சுட்டுவீழ்த்தி மக்கள் கொல்லப்படுவது கண்டிக்கத் தக்கது. இது வரை வரலாற்றில் குறைந்த பட்சம் ஏழு முறை இப்படி நடந்துள்ளன. இதில் 1988ல் அமெரிக்கா சுட்டு வீழ்த்திய ஈரானிய விமானமும் அடக்கம். இதிலும் 290 பேர்கள் கொல்லப்பட்டனர்.

போரும், ஆயுதப் போராட்டங்களும் மக்களின் உயிர்களை மதிப்பதில்லை. தேச இறையாண்மை என்கிற பெயர்களில் அரசுகளும், நாட்டு விடுதலை என்கிற பெயர்களில் போராளிகளும் இப்படியாக ஆயுதம் தரிக்காத மக்களின் கொலைகளை நியாயப் படுத்துவதை ஏற்க இயலாது. எல்லாவற்றையும் கொள்கைகளைச் சொல்லி நியாயப்படுத்திவிட இயலாது.

இராமகிருஷ்ணர், விவேகாநந்தர், காந்தி: சில குறிப்புகள்

ஒன்று

இந்தியாவின் முக்கிய வலதுசாரி மதவாத அமைப்பான ‘ஆர்.எஸ்.எஸ்’ எனப்படும் “ராஷ்ட்ரீய சுயம் சேவக் சங்” விவேகாநந்தரின் 150ம் ஆண்டை (2013) இந்தியா முழுவதும் பெரிய அளவில் கொண்டாடியது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் உருவாக்கி இயக்கப்படும் பல நிறுவனங்களில் ஒன்றான ‘விவேகாநந்த கேந்திரா’ இதில் முன்னணியில் இருந்தது. ஆர்.எஸ்.எஸ் அமைப்பை இன்றைய வடிவத்திலும் நோக்கிலும் கட்டமைத்த குருஜி கோல்வால்கரால் விவேகாநந்த கேந்திராவை அமைக்கத் தேர்வு செய்யப்பட்ட ஏக்நாத் ரானடே விவேகாநந்தரின் உரைகளை “இந்து தேசத்திற்கான ஒரு எழுச்சி அறைகூவல்” என்கிற பெயரில் தொகுத்தவர். அது மட்டுமல்ல ஆர் எஸ்.எஸ் அமைப்பு காந்தி கொலையை ஒட்டிச் சிறிது காலம் தடை செய்யப்பட்டிருந்தபோது அந்த அமைப்பைத் தலைமறைவாகவே இருந்து வழி நடத்தியவருங் கூட. இந்த அமைப்பு பல மட்டங்களில் பல்வேறு பகுதிகளில் வேலை செய்கிறது. அந்தமான் முதலான பகுதிகளில் உள்ள கிறிஸ்தவப் பழங்குடியினர் மத்தியில் “சேவைகள்” செய்து அதன் ஊடாகக் “கர் வாபசி” நிகழ்வுகளை நடத்திப் பெரிய அளவில் மத மாற்றம் செய்வது உட்பட, கன்னியாகுமரியில் விவேகாநந்தர் நினைவிடத்தை அமைத்த அந்த அமைப்பு செய்யும் வேலைகள் குறித்து இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

இங்கே நாம் கவனம் கொள்ள வேண்டிய அம்சம் விவேகாநந்தரை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இப்படி முன்னிறுத்துவதன் பின்னணி என்ன என்பதுதான். பரவலாக இங்கு விவேகாநந்தர் பற்றி உருவாக்கப்பட்டுள்ள பிம்பம் என்பது அவர், 1. ‘சநாதன தர்மத்தின்’ (இந்து மதம்) பெருமையை உலகறியச் செய்தவர் 2. இந்து மதத்தின் சாதிமுறை, பார்ப்பன மேலாண்மை ஆகியவற்றைக் கண்டித்து இந்து மதச் சீர்திருத்தத்தை வலியுறுத்தியவர் 3. இஸ்லாம், கிறிஸ்தவம் முதலான பிற மதங்களைச் சமமாக ஏற்று உள்ளடக்கும் தாராளப் பார்வை கொண்டவர் என்பவைதான்.

இத்தகைய சமத்துவப் பண்புகள் கொண்டிருந்த விவேகாநந்தரை, சநாதன இந்து மதத்தில் எந்த மாற்றங்களும் இன்றிப் பாதுகாத்தல், எந்த வகையிலும் முஸ்லிம், கிறிஸ்தவ மதங்களை உள்ளடக்காமல் அந்நிய மதங்களாகவே அணுகும் இறுக்கமான பார்வை, இந்தியாவை ‘இந்து ராஷ்டிரமாக’ ஆக்குவதற்கு வன்முறை உட்பட அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்துதல் முதலான நோக்கங்களுடன் செயல்படும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு எவ்வாறு முன்நிறுத்துகிறது என்பது ஒரு மில்லியன் டாலர் கேள்வி. ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மட்டுமல்ல நரேந்திர மோடியும் கூடச் சமீபத்தில் விவேகாநந்தரின் கருத்துக்களைப் பரப்ப வேண்டும் எனத் தன் ஆதரவாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதும் கவனத்துக்குரியது.

ஆனால் நம்மில் பெரும்பாலோர் இந்த முரண்பாடு குறித்துச் சிந்திப்பதில்லை. “நம்மில்” என ஏன் சொல்கிறேன் என்றால் அச்சுதானந்தன் உள்ளிட்ட இடதுசாரித் தலைவர்கள், திராவிட இயக்கத்தில் சிலர், இந்துத்துவத்திற்கு எதிராக நிறைய எழுதியுள்ள கே.என்.பணிக்கர் போன்ற புகழ்மிக்க வரலாற்றாசிரியர்கள், ஏன் பல கிறிஸ்தவ,முஸ்லிம் நண்பர்கள் உட்பட விவேகாநந்தரை இப்படி ஒரு தாராளவாதியாகவே கருதுகின்றனர்.

இதற்கு ஆர்.எஸ்.எஸ் தரப்பிலிருந்தே உரிய பதில் சொல்லப்பட்டுள்ளது. ஒரு முறை கே.என். பணிக்கர் விவேகாநந்தரைத் தாராளவாதி எனவும், அவரை ஆர்.எஸ்.எஸ் சுவீகரிப்பது அபத்தம் எனவும் ஆங்கில இந்து நாளிதழில் எழுதினார் (April 10, 2013, Vivekananda’s Legacy of Universalism). அதற்கு ஆர்.எஸ்.எஸ் தரப்பிலிருந்து எழுதப்பட்ட பதிலின் சுருக்கம் இதோ: “விவேகாநந்தரால் உருவாக்கப்பட்ட ராமகிருஷ்ணா மிஷனிலிருந்து வெளி வந்த ஒருவர்தான் ஆர்.எஸ்.எஸ்சின் புகழ் பெற்ற “சர் சங் சலக்” (தலைவர்) ஆக இருந்தவர் (கோல்வால்கரைத்தான் அவர்கள் குறிக்கின்றனர்). அந்த ஆர்..எஸ்.எஸ் அமைப்பையா விவேகநந்தரின் 150வது பிறந்த நாளைக் கொண்டாடக் கூடாது என்கிறாய்?” என்று கூறி விவேகாநந்தரின் உரைகளிலிருந்து அவர்கள் காட்டிய சில மேற்கோள்கள் வருமாறு:

1.(சிகாகோவில் பேசியது) மதங்கள் எல்லாவற்றிற்கும் தாயான இந்து மதத்தின் சார்பாக நின்று நான் பேசுகிறேன்….. எனது நோக்கம் எங்கள் நாட்டை புத்தெழுச்சி கொள்ளச் செய்வது மட்டுமல்ல, இந்து இனம் இந்த உலகையே வெல்ல வேண்டும் என்பதுதான்.

2.முஸ்லிம்கள் தமது இறைத் தூதராக நம்பும் முகம்மது ஒரு வகையான மனப் பிரம்மைக்கு (hallucination) ஆட்பட் டிருந்தார். வானவர் கப்ரியேல் மூலமாகத் தனக்கு இறைவாக்குகள் வந்தடைந்ததாக காட்டிக் கொண்டார். ஒரு இந்து யோகியைப்போல யோக நிலையினூடாகப் பெற்ற பேறல்ல இது. மாறாக இது தட்டுத் தடுமாறி வீழ்ந்த ஒரு விபத்து. சுய அறிவோடு சில தந்திரமான மூட நம்பிக்கைகளும் (quaint superstition) இணைந்த நிலை. இந்து யோகிகள் அல்லாதோர் தங்களை இத்தகைய சில மனப் பிரம்மைகளுக்கு (hallucinations) ஆட்படுத்தியும் கொள்வர். வானவர் கப்ரியேல் (ஜிப்ரீல்) ஒரு குகையில் வந்து தன்னைச் சந்தித்து. ‘ஹரக்’ எனும் குதிரையில் சுவர்கத்திற்கு (சுவனம்) அழைத்துச் சென்றதாக முகம்மது கூறிக் கொண்டார். ஆனால் இதற்கெல்லாம் அப்பால் அவர் சில அற்புதமான உண்மைகளையும் சொன்னார். நீங்கள் குரானை வாசித்தீர்களானால் இந்த அற்புதமான உண்மைகள் மூட நம்பிக்கைக்ளோடு கலந்து கிடப்பதைக் காணலாம். இதை எப்படி நீங்கள் விளக்குவீர்கள்?

3. அவர் ஒரு பயிற்சி பெற்ற யோகி அல்ல. அவர் என்ன செய்கிறார் என்பதன் பின்புலத்தை (reason) அவர் அறிந்திருக்கவில்லை. நல்ல முகம்மது என்ன செய்தார் என்பதையும், (கெட்ட முகம்மதின்) வெறித்தனத்தால் (fanaticism) எத்தகைய தீமை இந்த உலகிற்கு விளைந்தது என்பதையும் யோசித்துப் பாருங்கள். முகம்மதின் போதனைகளின் விளைவாகக் கொல்லப்பட்ட கோடிக் கணக்கான மக்கள், பிள்ளைகளை இழந்த தாய்மார்கள், அனாதைகளாகிய குழந்தைகள், அழிக்கப்பட்ட நாடுகள், கொல்லப்பட்ட கோடானுகோடி மக்கள்….(எவ்வளவு பேர்?)…. (இந்து யோகிகள் அல்லாத) மற்றவர்களின் பெருமை மிகு போதனைகள் எந்த அளவிற்கு இந்த உலகிற்கு உதவினவோ அதே அளவு பாதிப்புகளையும் இந்த வெறித்தனங்களும் மூடநம்பிக்கைகளும் உலகத்திற்கு ஏற்படுத்தின.

4. (இஸ்லாம் போன்ற அருள் வெளிப்பாடுகள்) முழு இறை உண்மையைச் சொன்னவையல்ல. அவை முழுமையானவையும் அல்ல. அவை குறுகிய மனநிலை. ஒன்றின் பகுதி மட்டுமே. ஒரு பகுதி தன்னை முழுமை என உரிமை கோருவது, எல்லைக்குட்பட்ட ஒன்று எல்லையற்றதாக உரிமை கோருவது எல்லாம் தவறிழைக்கக் கூடிய மனித மூளைகளிலிருந்து பிறந்த குறு மதப் பிரிவுகள் (sects) மட்டுமே. இவை இறைவனின் எல்லையற்ற உண்மையை முழுமையாக அறிந்தவை எனக் திமிராக (arrogant) உரிமை கோருவதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். இதன் விளளைவான கொடூரங்களை (arrogance) யோசித்துப் பாருங்கள்…. ஆனால் இவை அனைத்தும் எப்போதும் தோற்றே போயின என்பதை காணத் தவறாதீர்கள்”.

4.இப்படி உரிமை கோருவதில் முகமதியர்கள் ஆகச் சிறந்தவர்கள்; அவர்களின ஒவ்வொரு படி முன்னேற்றமும் வாளின் உதவியுடனேயே மேற்கொள்ளப்பட்டன. ஒரு கையில் குரான்; ஒரு கையில் வாள்: குரானை ஏற்றுக் கொள்; இல்லாவிட்டால் செத்துப்போ; வேறு மூன்றாவது வழி உனக்குக் கிடையாது எனச் சொல்லி அவர்கள் எத்தனை வெற்றிகளைப் பெற்றார்கள்? ஆனால் இறுதியில் அவர்கள் தோற்றே போனார்கள்.

5. (இந்து மதத்திலிருந்து பிறமதத்திற்கு மாறியவர்களை (“வக்கிரமானவர்கள்”) மீண்டும் ‘கர் வாபசி’ செய்து இந்து மதத்திற்குக் கொண்டு வருதல் பற்றிக் கேட்டபோது விவேகானந்தர் சொன்னது) நிச்சயமாக அவர்களைக் கொண்டு வர முடியும். கொண்டு வர வேண்டும்….. அப்படிச் செய்யாவிட்டால் நமது எண்ணிக்கை குறையும். …இப்படி இந்து அடையாளத்திலிருந்து (pale) வெளியே செல்லும் ஒவ்வொரு மனிதனும் நம் எண்ணிக்கையில் ஒன்றைக் குறைப்பவன் மட்டுமல்ல. நம் எதிரிகளின் எண்ணிக்கையில் ஒன்றைக் கூட்டுபவனும் கூட. அதோடு, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களுக்கு வக்கிரமானவர்களில் பெரும்பாலோர் வாளால் இப்படி மாற்றப்பட்டோர், அல்லது அவர்களின் வழி வந்தோர். இவ்வாறு அவர்கள் வக்கிரமானதற்கு (இந்து மதத்தின்) ஏதோ சில குறைபாடுகள்தான் காரணம் எனச் சொல்வது அப்பட்டமான ஒரு அநீதி (அழுத்தம் நம்முடையது).

இவை அனைத்தும் ஆர்.எஸ்.எஸ் தரப்பிலிருந்து மேற்கோள்காட்டப்பட்ட விவேகானந்த உரைகள். இவற்றிலிருந்து விவேகாநந்தரின் கருத்துக்களை இப்படித் தொகுத்துக் கொள்ளலாம்.

அ. இந்து மதம் மட்டுமே முழு இறை உண்மையையும் அறிந்த முழுமையான மதம், இஸ்லாம், கிறிஸ்தவம் போன்ற பிற முழுமையானவை அல்ல அவை வெறும் குறு மதப் பிரிவுகளே. அவை தம்மை முழுமையான மதங்களாகக் கருதிக் கொண்டதன் விளைவு மிகப் பெரிய அழிவுகள். ஆ. நபிகள் நாயகத்திற்கு இறைவாக்குகள் வானவர்கள் மூலம் வந்திறங்கின என்பது பொய். அது ஒரு வெறும் பிரம்மை. இ. இஸ்லாம் வாளோடு வந்து மதம் மாற்றிய மதம். இந்து மதத்திலுள்ள (சாதி வேறுபாடு, தீண்டாமை போன்ற) குறைபாடுகளால்தான் இவர்கள் மதம் மாறினார்கள் என்பது பொய். .ஈ. இந்து மத்திலிருந்து ஒருவர் மதம்மாறும்போது ஒரு இந்து எண்ணிக்கையில் குறைகிறார் என்பதல்ல. இந்து மதத்தின் எதிரிகளின் எண்ணிக்கையில் ஒன்று அதிகரிக்கிறது. உ. எனவே இந்து மதத்திலிருந்து பிற மதங்களுக்குச் சென்றோரை மீண்டும் இந்து மதத்திற்குக் கொண்டு வருதல் அவசியம்.

இத்தகைய கருத்துக்களைக் கொண்டிருந்தவரை எப்படி எல்லா மதங்களையும் சமமாக நேசித்த தாராளவாதி எனச் சொல்லுவது?

இவை எல்லாம் விவேகாநந்தரின் எண்ணற்ற உரைகளிலிருந்து இந்துத்துவவாதிகள் தமக்குச் சாதகமானவற்றைப் பொறுக்கி எடுத்தவை. ஆனால் விவேகாநந்தர் உண்மையில் அப்படி அல்ல என ஒருவர் கருதலாம். ஆனால் விவேகாநந்தரிடம் அடிப்படையாக இழையோடும் கருத்து இத்தகையதே என்பதை வேறு ஏராளமான மேற்கோள்களோடு இது குறித்து விரிவாக ஆய்வு செய்த பேராசிரியர்கள் சுமித் சர்கார், ஜோதிர்மய் சர்மா ஆகியோர் நிறுவியுள்ளனர். ஒரு சிறிய அறிமுகக் கட்டுரையில் அவ்வளவையும் சொல்லி விட இயலாது.

இரண்டு

விவேகாநந்தரை வாசிப்போர் எத்தகைய மனநிலையை அடைவர், வாசிப்போர் மீது அவரது கருத்துக்கள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்பதற்கு அசீமானந்தரின் கூற்றுக்கள் சான்று. ராமகிருஷ்ண பரமஹம்சரின் சமய சமத்துவக்கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு ராமகிருஷ்ணா மடத்தில் சேர்ந்த அசீமானந்தர் இப்போது மலேகான் குண்டு வெடிப்பு உட்படப் பல இந்துத்துவப் பயங்கரவாத நடவடிக்கைகளில் பங்குபெற்று சிறையில் இருப்பவர். தன் மீது சாட்டப்பட்டுள்ள குற்றங்களை ஏற்றுக் கொண்டவர் அவர் என்பது குறிப்பிடத் தக்கது.

அதற்குமுன் இன்னொன்றையும் இங்கு குறிப்பிட வேண்டும். ராமகிருஷ்ண பரமஹம்சர் “யதோ மத் ததோ பத்” (இறைவனை அடைய நம்பிக்கைகள் பல, வழிகளும் பல) என்கிற பன்மைத்துவத்தைப் போதித்தவர். விவேகாநந்தர் இராமகிருஷ்ணரின் தலையாய் சீடர். இராமகிருஷ்ணரின் வாரிசாகத் தன்னை அறிவித்துக்கொண்டவர். சாகுமுன் தனது அனைத்து ஆற்றல்களையும் தமக்கு ஒரு அற்புத அனுபவத்தின் ஊடாகத் தந்து சென்றவர் எனச் சொல்லிக் கொண்டவர். அப்படிப்பட்ட விவேகானந்தர் எப்படிப் பிற மதங்களைச் சமமாக ஏற்காதவராக இருக்க முடியும் என்பது விவேகானந்தரை தாராளவாதி என நம்புவோர் முன் வைக்கும் ஒரு கேள்வி.

இராமகிருஷ்ணர் அப்படியான சர்வ சமய சமத்துவக் கருத்துக்களைத் தூக்கிப் பிடித்தவர் என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அவர் இந்து என்கிற அடையாளத்தை வற்புறுத்தியவரும் அல்லர். எல்லாவற்றிற்கும் மேலாக அவர் தனது புகழ் பெற்ற சீடர் விவேகாநந்தரைப் போல இந்து மதத்தையும் இந்திய நாட்டையும் பிணைத்து ஒரு இந்து ராஷ்டிரக் கோட்பாட்டிற்கு அடித்தளம் அமைத்தவரும் அல்லர். அதனால்தான் சீடரைத் தன் நெறியாளராக ஏற்றுக் கொண்டுள்ள ஆர்.எஸ்.எஸ் அமைப்பு குருவைக் கண்டு கொள்வதில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.

ராமகிருஷ்ணரின் சமய சமத்துவக் கருத்துக்களை அவரது சீடர் எப்படியேல்லாம் வளைத்துத் தன் நோக்கத்திற்காகப் பயன்படுத்தினார் என்பதைப் பார்க்கு முன் மீண்டும் அசீமானந்தரின் அனுபவத்திற்குத் திரும்புவோம். தான் எப்படி இந்த வன்முறைப்பாதைக்குத் திரும்பினார் என்பதை இதழாளர் லீனா கீதா ரகுநாத்திடம் அவர் (Caravan, The Beleiver) கூறியுள்ளதிலிருந்து ஒரு பகுதியை மட்டும் இங்கே காண்போம். அசீமானந்தரின் பூர்வ பெயர் நவ குமார் சர்கார். பட்டப்படிபு முடித்திருந்த நவ குமார் இராமகிருஷ்ணரின் சமய சமத்துவக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு இராமகிருஷ்ணா மடத்தில் சேர்கிறார். அங்கே அவரைச் சந்தித்த விஜய் ஆத்யா என்கிற ஆர்.எஸ்.எஸ் ஊழியர் நமது பாதை என ஆர்.எஸ்.எஸ்சை அடையாளம் காட்டுகிறார். அதுதான் விவேகாநந்தர் காட்டிய பாதை என்கிறார். அது எப்படி என நவகுமார் வினவியபோது அவரிடம் ஏக்நாத் ரானடே தொகுத்த விவேகாநந்தரின், “இந்து தேசத்திற்கான எழுச்சி அறைகூவல்” என்கிற நூலை வாசிக்கத் தருகிறார். இனி அசீமானந்தரின் கூற்று.

“ராமகிருஷ்ணா மிஷனின் கொள்கை எல்லா மதமும் சமம்கிறதுதான். அங்கே கிறிஸ்மஸ், ஈத் பெருநாள் எல்லாம் கொண்டாடுவாங்க. நானுந்தான். ஆனா இது விவேகாநந்தர் காட்டிய வழி இல்லைன்னு ஆத்யா சொன்னபோது என்னால நம்ப முடியல. அவர் தந்த ரானடே தொகுத்த விவேகாநந்தர் உரைகளைத் தீவிரமாகப் படிச்சேன்”

அப்போது நவகுமார் சர்காரை அசீமானந்தராக மாற்றிய அந்த வரிகள் கண்ணில் படுகின்றன.

“இந்து மதத்திலிருந்து ஒருவன் மதம் மாறினால், இந்து மதத்தில் இருப்பவர்களின் எண்ணிக்கையில் ஒன்று குறைந்தது எனப் பொருளல்ல: மாறாக இந்து மதத்தின் எதிரிகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடியது என்று பொருள் என்று விவேகாநந்தர் சொன்னதைப் படிச்ச போது அது எனக்குப் பெரிய அதிர்ச்சியா இருந்தது. தொடர்ந்த நாட்களில் நிறையச் சிந்திச்சேன், விவேகாநந்தரைப் புரிந்து கொள்ள என்னோட சிற்றறிவுக்குச் சக்தி இல்லங்கிறதைப் தெரிஞ்சுகிட்டேன். அவர் சொல்லிருக்கிறார், நாம அதை வாழ்க்கையில பின்பற்றுவோம்னு முடிவு செஞ்சேன்.”

மூன்று

இந்து மதத்திலுள்ள குறைபாடுகள் எதையும் விவேகாநந்தர் விமர்சித்தாரா என்பது குறித்து இனி பார்க்கலாம்.

இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவைத்தை மட்டுமல்ல விவேகாநந்தர் இந்தியாவில் பிறந்த இதர சமையங்களையோ இல்லை இந்து மதம் சார்ந்த உட்பிரிவுகளையோ அவர் எந்நாளும் ஆதரித்ததில்லை. சநாதன இத்து மதம் ஒன்றே இந்தப் பிரபஞ்சத்தின் உண்மையான தாய் மதம் என்பதே அவரது கருத்தாக இருந்தது. சாதிமுறை உட்பட சநாதன இந்து மதத்தின் எந்த நம்பிக்கைகளையும் நிறுவனங்களையும் அவர் இந்து மதத்தின் குறைபாடுகளாகவோ நீக்கப்பட வேண்டியவையாகவோ விமர்சித்ததில்லை. பலரும் நம்புவதைப்போல சாதி அமைப்பை அவர் இந்து மதத்தின் கேடு எனக் கருதியவர் இல்லை. பல்வேறு பிளவுகளையும், ஏற்றத் தாழ்வுகளையும் ஒட்டி இணைத்து இந்து மதத்தை முழுமையாக்கப் பயன்பட்ட ஒரு பசையாகவே அவர் சாதி அமைப்பை ஏற்றுக் கொண்டார்.

விவேகாநந்தரின் எழுத்துக்கள் மற்றும் உரைகள் குறித்து ஒன்றைச் சொல்ல வேண்டும். அவை பல நேரங்களில் தெளிவற்றவையாகவும் சிக்கலானவையாகவும் இருக்கும் அந்தச் சிக்கல் அவர் பேச எடுத்துக்கொண்டபொருளின் சிக்கற் தன்மையினால் (complexity) உருவானதல்ல. மாறாக அவர் வெளிப்படையாகப் பேச விரும்பாத சிலவற்றை, சற்றே நசுக்கி, நசுக்கிப் பேச நேர்ந்ததின் விளைவு அது.
19ம் நூற்றாண்டில் இந்துவாக இருப்பதன் பொருள், அதாவது “இந்துத்தன்மை” (Hinduism) என்பதற்கு அளிக்கப்பட்ட பல்வேறு வரையறைகளில் மிகவும் தீவிரமான சமூக மற்றும் அரசியல் விளைவுகளை ஏற்படுத்துவதற்குக் காரணமாக இருந்த ஒன்று விவேகாநந்தரின் வரையறை. மிகவும் நவீனமானதாக இன்று நம்பப்படும் அவரது வரையறை இந்து மதத்தின் கட்டுப்பெட்டித்தனமான, களையப்பட வேண்டிய பல அம்சங்களைப் புதிய மொழியில் நியாயப்படுத்தின. எவை எல்லாம் இந்து மதத்தின் கொடு அம்சங்களாகச் சமூக மாற்றத்தை முன்வைத்து இயங்கியோரால் அடையாளம் காட்டப்பட்டனவோ அவை எதுவும் இந்து மதம் பிற உலக மதங்கள் எல்லாவற்றிற்கும் “தாய் மதமாக” இருப்பதற்குத் தடையாக இல்லை என அவரை வாசிப்பவர்களை நம்ப வைப்பதாகவும் இருந்தன.

இராமகிருஷ்ணரைத் தனது குருவாக மட்டுன்றி கிருஷ்ணனின் அவதாரமாகவும், தனது தெய்வீக ஆற்றல்கள் அனைத்தையும் இறப்பதற்கு முன் ஒரு அற்புத நிகழ்வொன்றின் மூலம் தனக்கு ஈந்து சென்றவராகவும் முன்னிறுத்தியவர் விவேகாநந்தர், இராமகிருஷ்ணர் இது போன்ற சித்துக்களை நம்பாதவர் மட்டுமல்ல, ஏற்காதவருங்கூட என்பது ஒருபுறம் இருக்க இந்து அடையாளம் குறித்த தன்னுடைய கட்டமைப்பிற்கு ஏற்ப தனது குருவை விவேகாநந்தர் கட்டமைத்த விதம் சுவாரசியமானது. இராமகிருஷ்ணரின் போதனைகளாக இன்று நமக்குக் கிடைப்பது மகேந்திரநாத் குப்தா என்பவர் இராமகிருஷ்ணரின் இறுதி நான்காண்டுகளில் அவரைச் சந்தித்துத் தொகுத்த அவரது உரையாடல்கள்தான். அவற்றையும் அவரது வாழ்க்கை வரலாறுகளையும் படிக்கும்போது இராமகிருஷ்ணர் எல்லோரையும் எல்லா நம்பிக்கைகளையும் சமமாக நேசிக்கும் விரிந்த இதய விசாலம் உடையவர் என்பது தவிர, பக்திப் பாரம்பரியத்தில் வந்த அவர் ஒருவிதப் பித்து நிலையில் (religious ecstacy) வாழ்ந்தவர் என்பது விளங்கும். ஆனால் விவேகநந்தரோ தன் குருவைப் பல மதங்களையும் ஆய்ந்து அவற்றின் சிறந்த அமசங்களைத் தொகுத்துக் கொண்ட ஒரு தத்துவ ஞாநியைப்போல முன்வைப்பார்.

இராமகிருஷ்ணர் எந்நாளும் இந்து மதத்தைப் பிற மதங்களைக் காட்டிலும் உயர்ந்தது எனச் சொன்னதில்லை. குறிப்பாக இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களை அவர் எதிர் நிலையில் நிறுத்தியதில்லை. இந்து மதத்தை அவர் பெருமிதத்தோடு நினைவு கூர்வது ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் மட்டுந்தான். அதுவும் கூட மார்வாரி இனத்தவரின் ஒரு பக்திக் கொண்டாட்டத்தைக் கண்டு அவர் பரவசமடந்த தருணத்தில்தான், ஆகா இதுவன்றோ இந்து மதம் என்கிற ரீதியில் அவர் அதைச் சொன்னார்.

“ஒரு நபர் ஏற்றுக்கொண்ட மதத்தில் தவறுகள் உள்ளதென்றால் அவர் நேர்மையாக இருக்கும் பட்சத்தில் கடவுளே அதைத் திருத்துவார். மற்ற மதங்களில் தவறுகள் இருக்கிறதென்றால் அவற்றைத் திருத்துவது நம் வேலை அல்ல. கடவுள் அதைப் பார்த்துக் கொள்வார்” என்று சொன்னவர் இராமகிருஷ்ணர். அது மட்டுமல்ல, தன் மதமே சிறந்தது எனச் சொல்வதையும் அதன் மூலம் அடையும் வெற்றிப் பெருமிதத்தையும் அவர் கடுமையாகக் கண்டிப்பார். வெற்றி பெறுவது பெரிய விசயமல்ல. வென்றவர்கள் தோற்பதும் தோற்றவர்கள் வெல்வதும் சகஜம் என்பார். மதங்களுக்கிடையே ஏற்றத் தாழ்வுகளை அவர் ஏற்றுக் கொண்டதில்லை. ஆனால் சீடர் விவேகாநந்தரோ இந்து மதம் ஒன்றே முழுமையான மதம் எனவும் பிற அனைத்தும் பல்வேறு வளர்ச்சிக் கட்டங்களில் (phases) உள்ளவை என்றும் சொன்னவர். அது மட்டுமல்ல இராமகிருஷ்ணரின் கருத்தும் அதுதான் எனச் சொல்லத் துணிந்தவரும் கூட.

1896ல் விவேகாநந்தர் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் இராமகிருஷ்ணர் குறித்து இரண்டு சொற்பொழிவுகளை ஆற்றுகிறார். இராமகிருஷ்ணரை வாசித்துவிட்டு இராமகிருஷ்ணர் குறித்த விவேகாநந்தரின் உரையை வாசித்தால்தாறியப்பட்ட இராமகிருஷ்ணருக்கும் விவேகாநந்தரின் இராமகிருஷ்ணருக்கும் உள்ள வேறுபாடுகள் விளங்கும். மேற்கத்திய பொருள் முதல் அணுகல்களையும் இஸ்லாத்தின் வாள்வீச்சையும் வென்ற மதம் சநாதன இந்து மதம் என்கிற இராமகிருஷ்ணருக்குச் சற்றும் பொருந்தாத ஒரு திரையில் அவரை வரைந்து காட்டுவார் அவரது சீடர். இராமகிருஷ்ணர் இஸ்லாம், கிறிஸ்தவம் என ஒவ்வொரு மதமாக கற்றுத் தேர்ந்து ஆய்வு செய்து அவற்றில் புதிதாக ஒன்றுமில்லை என அறிந்தாராம்.

இராமகிருஷ்ணர் யாருடைய நம்பிக்கையையும் தாக்க வேண்டாம், “மிகவும் உள்ளடக்கும் தன்மையே இல்லாத” இஸ்லாமிய நம்பிக்கையையும் கூடத் தாக்க வேண்டாம் என்றாராம். மற்ற நம்பிக்கைகளைத் தாக்காமலேயே அவற்றை மேலுயர்த்த வேண்டும் என்றாராம். ஆக, மற்ற நம்பிக்கைகளை மேலுயர்த்தப்பட வேண்டியவை என இராமகிருஷ்ணர் கருதினார் என்றாகிறது. விவேகநந்தரைப் போற்றுபவர்கள் இப்படி இராமகிருஷ்ணர் எங்கே சொன்னார் எனத் தேடிப்பார்த்தால் ஏமாற்றமடைவர்.. சனாதனமதத்தை என்றென்றைக்கும் அழியாத மதம் என இராமகிருஷ்ணரை முன்னிறுத்திப் பேசும் அவரது சீடர், “இந்த மதத்தைப் போதிக்க உகந்த மண் இந்திய மண், உகந்த மக்கள் இந்துக்கள்” என்று கூறியதன் ஊடாக, “இந்தியா”, “இந்திய மண்” “இந்து” ஆகியவற்றை ஒன்றாக நிறுத்தி இந்துத்துவ அரசியலுக்குக் கால்கோள் இட்டார் என்பது நினைவிற்குரியது. “தேசம்” என்கிற கருத்தாக்கத்தை முன்னிறுத்தாத, சொல்லப்போனால் வெறுத்த இராமகிருஷ்ணரின் பெயரால் இதைச் செய்வதற்கு விவேகாநந்தர் இம்மியும் தயங்கவில்லை.

நான்கு பார்ப்பனர்களை விமர்சித்தார், “அழுகிப் போன சாதிமுறையை ஒழிக்கவேண்டும்” எனச் சொன்னார் என்றெல்லாம் விவேகாநந்தர் குறித்துக் கட்டமைக்கப்பட்ட பிம்பமும் இப்படித்தான். பார்ப்பனர்கள் அதிகார ஆசை கொண்டவர்கள் எனச் சொல்லும் விவேகாநந்தர்தான் இதை அவர்களின் ஒரே ஒரு பலவீனம் எனவும் மற்றபடி அவர்கள் நல்லவர்கள், ஒழுக்கமானவர்கள், சொத்து சேர்க்காதவர்கள் எனவும் சொல்கிறார். “புத்தர் முதல் ராம் மோகன் ராய் வரை” இந்தச் சமூகத்தைச் சீர்திருத்த வந்த எல்லோரும் “மதம், சாதி ஆகிய இரு நிறுவனங்களையும் முற்றாக வீழ்த்த நினைத்தார்கள், தோற்றார்கள்” என்கிறார். ஆக சாதியை முழுமையாக வீழ்த்த வேண்டியதில்லை, வீழ்த்தவும் முடியாது என்றாகிறது.

“மத ஆசாரியார்கள் (priests) என்ன சொன்ன போதிலும் சாதி என்பது ஒரு கெட்டி தட்டிப்போன நிறுவனம். அது தன் சேவையை முடித்து விட்டது. இப்போது அது தன் அழுகல் நாற்றத்தால் இந்தியாவை நிறப்பியுள்ளது. மக்களுக்கு அவர்கள் இழந்துபோன சமூகத் தனித்துவத்தை (social individuality) மீட்டளிப்பதன் முலமே அதை நீக்க முடியும்” – என்கிற விவேகாநந்தரின் வாசகங்களை வைத்துத்தான் அவர் பெரிய சாதி எதிர்ப்பாளர் என்கிற பிம்பம் இங்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த வாகங்கள் தெளிவாக சாதி ஒழிப்பை வற்புறுத்தி ஏதும் சொல்லவில்லை என்பது தவிர இதன் மூலம் அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதைத் தொடர்ந்து வாசித்தால் அதிர்ச்சி அளிக்கும்.

விவேகாநந்தர் பேசுகிறார்: “சமஸ்கிருதத்தில் ‘ஜாதி’ என அழைக்கப்படும் உயிர்கள்தான் (species) படைப்பின் அடிப்படைத் தத்துவம். எல்லா வேதங்களும் சொல்வது., ‘நான் ஏகன்; நான் அநேகன் ஆனேன்’ என்பதைத்தான்.. படைப்புக்கு முன் உள்ளது ஒருமை; படைப்பு என்பது பன்மை. இந்தப் பன்மைத்துவம் முடிவுக்கு வரும்போது படைப்பு அழியும். எந்த உயிர்களும் ஊக்கத்துடனும் செயல்திறனுடனும் இருந்தால் அது பன்மைத்துவத்தை வெளிப்படுத்தும். இது முடிவுக்கு வரும்போது அது சாகிறது. ஆக, ஒரு தனிநபர் தனது இயல்பை, அவனது பிரகிருதியை, அவனது ஜாதியை வெளிப்படுத்தும் சுதந்திரம்தான் ஜாதி என்பதன் மூலக் கருத்து. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அப்படித்தான் இருந்து வந்தது. சமீபத்திய நூல்களிலும் கூட சம பந்தி போஜனம் மறுக்கப்படவில்லை. நம் தொல் பழ நூல்களிலும் கூடசாதிகளுக்கிடையே திருமணம் மறுக்கப்படவில்லை. பின் ஏன் இந்தியா வீழ்ந்தது? ஜாதி குறித்த இந்தக் கருத்தை விட்டொழித்ததால்தான்..” என்ன சொல்கிறார் விவேகாநந்தர்? சாதியை அதாவது ஒருவரது இயல்பை வெளிப்படுத்துவதுதான் சுதந்திரமாம். ஒருவருக்கு மலம் அள்ளுவது இயல்பாக இருக்கலாம். இன்னொருவருக்கு மந்திரம் சொல்வது இயல்பாக இருக்கலாம். அதை அவர்கள் வெளிப்படுத்தும் சுதந்திரம் அழியும்போது சமூகத் தனித்துவம் பாழாகிறது. இன்று அப்படித்தான் ஆகிவிட்டது. இந்தியாவின் அழிவிற்கு அதுவே காரணம்.

இனி மீண்டும் விவேகாநந்தர்: “இப்போதுள்ள ஜாதி என்பது உண்மையான ‘ஜாதி’ அல்ல. மாறாக அதன் முன்னேற்றத்திற்கான தடை. இன்றுள்ள அமைப்பு ஜாதியுடைய சுதந்திரச் செயல்பாட்டைத் தடுத்துவிட்டது. எந்த ஒரு கெட்டிதட்டிப்போன வழமை அல்லது உரிமை அல்லது பரம்பரைத் தன்மையான வகுப்பு (class) என்பதும் உண்மையில் ஜாதியின் வீச்சைத் தடுக்கிறது. எந்த ஒரு தேசமும் எப்போதெல்லாம் இந்தப் பன்மை நிலையை (variety) இழக்கிறதோ அப்போது அது சாக நேர்கிறது. என் நாட்டு மக்களே நான் உங்களுக்குச் சொல்வது இதுதான். நீங்கள் ஜாதியை அழித்ததால்தான் இந்தியா வீழ்ந்தது, எந்த ஒரு உறைந்த பிரபுத்துவம்(frozen aristocracy) அல்லது முன்னுரிமை பெற்ற வர்க்கம் (privileged class) என்பதெல்லாமும் ஜாதியின் மீதான தாக்குதல்தானே ஒழிய அதுவே ஜாதி அல்ல. . ஜாதி அதன் வீச்சைப் பெறட்டும். ஜாதிக்குத் தடையாக உள்ள அனைத்தும் உடைந்து சிதறட்டும். நாம் மேலெழுவோம்…”

இதுதான் விவேகாநந்தர் சாதி மீது வைக்கும் “விமர்சனம்”. அவரது “விமர்சனத்திற்காக” அவர் தேர்ந்து கொண்ட மொழி எத்தனை சிடுக்குகள் நிறைந்ததாக உள்ளது என்பதையும் கவனியுங்கள். ஜாதி என்பது ஒருவரது இயல்பின் அடியாக உருவாவது. அந்த இயல்பை அவர் நிறைவேற்றி வரும்வரை அது அற்புதமான ஒன்றுதான். வருணம், பரம்பரை என்கிற வடிவில் கெட்டிதட்டிப் போக விடாமல் ஜாதி என்பது சமூகத்தில் சுதந்திரமாக நிலவ விட வேண்டும். புத்தர் முதலானோர் சாதியை முற்றாக ஒழித்துவிடுவது என்று கூறியது அபத்தம் என விவேகாநந்தர் கூறியதன் பொருள் விளங்குகிறது.

இந்தியா பல ஜாதிகளை மட்டுமல்ல, மொழிகளை, இனங்களைக் கொண்ட ஒரு நாடு. ஆனாலும் இந்தியா என்பது இந்த வேற்றுமைகளை எல்லாம் கடந்து ஒரு ஒருமையாக நின்று உலகிற்கு வழிகாட்டும் என்பதாக விவேகாநந்தர் முன்வைக்கும் சிந்தனைகள் பலவும் இன்றைய ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க ஆகியவற்றின் திட்டங்கள், இலட்சியங்கள் ஆகியவற்றுக்கு மிகவும் நெருக்கமாக உள்ளதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சமஸ்கிருதத்தை “ஒரு மகத்தான புனித மொழி” எனச் சொல்லும் விவேகாநந்தர், பிற மொழிகள் அனைத்தையும் “(அதனுடைய) வெளிப்பாடுகள் (manifestations)” என்கிறார். பிற மதங்களை தாய் மதமான இந்து மதத்தை நோக்கிய வளர்ச்சியின் இடை நிலைகள் (phases) என அவர் முன்வைத்ததின் இன்னொரு பக்கம்தான் தமிழ் உள்ளிட்ட பிற இந்திய மொழிகளை சமஸ்கிருதத்தின் வெளிப்பாடுகள் என அவர் கூறுவதும் என்பதை நான் கவனிக்கத் தவறலாகாது. “ஆரியர்” என்கிற இன அடையாளம், “சமஸ்கிருதம்” என்கிற மொழி அடையாளம், “இந்து மதம்” என்கிற மத அடையாளம் ஆகியவற்றின் ஊடாக அவர் இந்தியாவை வரையறுக்கிறார்.
“சமஸ்கிருதம் என்பது (இந்தியாவின்) மொழியியல் தீர்வாக அமைவதைப் போல, ‘ஆரிய’ என்பது இனவியல் தீர்வாக அமைகிறது. சமூக அரசியல் பிரச்சினைகளுக்கும், கலாச்சாரம், வளர்ச்சி ஆகியவை பல்வேறு மட்டங்களில் ஏற்றத் தாழ்வுடன் இருப்பதற்கும் பிராமணத்துவமே தீர்வாக உள்ளது” என்பது விவேவேகாநந்தர் நம் நாட்டுப் பிரச்சினைகளுக்கு முன்வைக்கும் இறுதித் தீர்வு.

இந்தியாவிற்கு இத்தகைய மகத்தான கலாச்சாரத்தைத் தந்ததற்காக ஆரியர்களை மனதாரப் பாராட்டும் விவேகாநந்தர், இந்தக் கலாசாரம் சாதி அமைப்பின் ஊடாகக் கையளிக்கப்பட்டது என நன்றி ததும்புகிறார்.
“அது (அதாவது ஆரியக் கலாசாரத்தின் கொடையான சாதி அமைப்பு) முழு இந்தியாவையும் பொருள் அல்லது வாளால் (wealth or sword) வழி நடத்தப்படாமல் ஆன்மீகத்தால் தூய்மை செய்து கட்டுப்படுத்தப்பட்ட அறிவுத் திறனின் வழிகாட்டலில் வைத்தது. இந்தியாவின் தலைமை ஜாதியாக உள்ளவர்கள் உயர்ந்த ஆரியர்கள்- அதாவது பிராமணர்கள்” என்கிற விவேகாநந்தரின் கூற்றை நாம் மிகக் கவனமாக ஆராய வேண்டும். ‘பொருளால்” வழிநடத்தப்படுவது என்பது கிறிஸ்தவதையும். வாளால் வழி நடத்தப்படுவது என்பது இஸ்லாமையும். ஆன்மீகம் தழுவிய அறிவுத் திறன் மிக்க பார்ப்பனர்களால் வழி நடத்தப்படுவது என்பது இந்து மதத்தையும் இங்கே குறியீடு செய்கின்றன.. இப்படிப் பார்ப்பனர்களால் வழிநடத்தப்படும் இந்து மதம் ஆரியர்களின் கொடை என்பது விவேகாநந்தர் வைக்கும் முத்தாய்ப்பு.

பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகிய வருணங்களைப் பிறவி அல்லது கர்ம பலன் என்கிற வடிவில் வரையறுத்துப் பெயர் சூட்டப்பட்ட (designated) சாதிகளாகத் தான் கருதவில்லை என விவேகாநந்தர் சில இடங்களில் கூறுகிறார். அதாவது அப்படிப் பிறவி அடிப்படையில் வரையறுக்கப்படாத யாரும் இந்த நிலைகளை அடையலாம் என்கிற பொருளில் அவர் இதைச் சொல்கிறார். வாளின் மூலம் அதிகாரம் பெற்ற யாரும் சத்திரியராகலாம்; கல்வியின் ஊடாக யாரும் பிராமணர் ஆகலாம்; சொத்தின் மூலம் யார் ஒருவரும் வைசியர் ஆகலாம் என்பது விவேகாநந்தரின் துணிபு. அப்படி மேல் நிலையை அடைந்தோர் அந்த உயர் நிலையின் பெருமைகளைக் தக்க வைப்பவர்களாக இருக்க வேண்டும்.

இங்கே நமக்கொரு அய்யம் எழுகிறது. அப்படியானால் ஒரு சூத்திரர் கல்வியின் மூலம் பிராமணர் ஆக இயலுமா? அது முடியாது என்பதுதான் விவேகாநந்தரின் கருத்தாக உள்ளது. சூத்திரர்களைப் பொருத்தமட்டில் அவர்கள் இப்படி மேல் நிலை அடைய வேண்டுமானால், “நீங்கள் உங்களின் சாதி முழுமையையும் முதலில் மேல் நிலைக்குக் கொண்டு வரவேண்டும். பிறகு உங்களின் மேல் நோக்கிய வளர்ச்சியை யாராலும் தடுத்து நிறுத்திவிட இயலாது. எனவே அடித்தளச் சாதியினரைப் பொருத்த மட்டில் அவர்கள் உயர் சாதி நிலையை அடைய வேண்டுமானால் யாரொருவரும் அதைத் தம் சொந்த முயற்சியில் சாதித்துவிட இயலாது. அவர்கள் ஒட்டு மொத்தமாய் அதற்கு ஆசைப்பட வேண்டும். அந்தச் சமூகம் முழுமையுமே அதற்குத் தம்மைத் தகுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான விதி முறைகளை “இந்திய மூதாதைகளான ஆரிய பிராமணர்கள்” உருவாக்கியுள்ளனர் என்கிறார். இதை எல்லாம் செய்யாமல் வெறுமனே சாதி அமைப்பையும் பார்ப்பனீயத்தையும் திட்டிக் கொண்டு இருந்தால் போதாது என்கிறார்.
“”உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் நான் சாதிகளைப் பார்த்துள்ளேன். ஆனால் எங்கும் அவற்றின் திட்டங்களும் நோக்கங்களும் இந்தியாவில் உள்ள அளவிற்கு உன்னதமானவைகளாக இல்லை. ஜாதி என்பது இப்படித் தவிர்க்க இயாலாதது என ஆகிற போது தூய்மை, பண்பாடு, தியாகம் ஆகியவற்றால் அடையாளப் படுத்தப் படும் ஜாதியையே நான் ஏற்றுக் கொள்வேன். டாலர்களால் அடையாளப்படுத்தப்படும் ஜாதியை அல்ல, எனவே (இந்தச் சாதி அமைப்பின் மீது) கண்டன வார்த்தைகளைக் கொட்டாதீர்கள். வாய்களை மூடிக் கொள்ளுங்கள். இதயங்களைத் திறவுங்கள்.”
இதுதான் விவேகாநந்தர் நமக்குச் சொல்லும் சேதி விவேகாநந்தரைத் தூக்கிப் பிடிப்போர் அவரின் ஊடாக நமக்குச் சொல்லும் சேதியும் கூட.

ஒரு பின்னிணைப்பு:
மகாத்மா காந்தியும் விவேகாநந்தரும்

மகாத்மா காந்தி

முக நூலில் விவேகாநந்தர் குறித்து நான் சில குறிப்புகளைப் பகிர்ந்தபோது எதிர் கொண்ட எதிர்வினைகளில் ஒன்று, “காந்தியும் இதைத் தானே சொன்னார். அவரது செயல்பாடுகளை வியக்கும் நீங்கள் ஏன் விவேகாநந்தரை மட்டும் விமர்சிக்கிறீர்கள்?” என்பது. காந்தி எந்நாளும் இந்து மதமே முழுமையான மதம் மற்றவை அந்த நிலையை எட்ட முயற்சிப்பவை எனச் சொன்னதில்லை. அவரது பிரார்த்தனைக் கூட்டங்கள்தான் சர்வ சமய ஒற்றுமையின் அடையாளங்களாக இருந்தன. அங்கே இந்துக்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் என அனைவரும் தினந்தோறும், ஆம் ஒவ்வொரு பிரார்த்தனைக் கூட்டங்களிலும் ஒன்றாகக் கடவுள்களைப் பாடினர். தீண்டாமைக்கு எதிராகக் காந்தியும் பேசினார், விவேகாநந்தரும் பேசினார்.

உண்மைதான். ஆனால் காந்திதான் தீண்டத் தகாதவர்களை இந்துக் கோவில்களுக்குள் அழைத்துச் சென்றவர். ஆலய நுழைவுப் போராட்டங்களை வெற்றிகரமாக நடத்தியவர்.இதனால் அவரை “வருண சங்காரம் செய்ய வந்தவர்” என அன்றைய சங்கராச்சாரியாரின் பண உதவியுடன் நடத்தப்பட்ட ‘ஆர்ய தர்மம்’ எனும் இதழ் தூற்றியது. காந்தியின் வருகையை ஒட்டி தமிழகக் கோவில்கள் சாத்தப்பட்டன. விவேகாநந்தர் சாதி, தீண்டாமை முதலானவற்றிற்கு எதிராக எந்த முயற்சிகளையும் மேற்கொண்டதில்லை. இந்து மத நிறுவனங்களின் எதிர்ப்புகள் எதையும் அவர் சந்திக்க நேர்ந்ததும் இல்லை.

மகாத்மா காந்தியயைப் பற்றிய எதிர்மறையான பிம்பமும், விவேகாநந்தர் பற்றிய உயர் மதிப்பீடும் ஒரே அடிப்படையிலிருந்துதான் எழுகின்றுன. ஆழ்ந்த ஆய்வுகள் இன்றி, வெறும் கேள்வி ஞானத்தின் அடிப்படையில் பொதுப் புத்தியில் பதிக்கப்பட்டவைதான் இந்த இரு பிம்பங்களுமே. இதைப் புரிந்து கொள்ள வெறும் மேற்கோள்கள் பயன்படாது. ஒட்டுமொத்தமான கருத்துக்கள் மற்றும் அதன் அடிப்படியிலான செயல்பாடுகள் ஆகியவை குறித்த மதிப்பீடு முக்கியம்.

“ஒரு மதத்தை விரோதித்துக் கொண்டுதான் அந்த மதத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டுமா? மதத்துடன் இணைந்து அதைச் செய்ய இயலாதா என்பது இன்னொரு கேள்வி. இதற்குப் பெயர்தான் கொக்கு தலையில் வெண்ணை வைத்துப் பிடிப்பது என்பது. ஒரு மதத்தின் அடிப்படைகளை அசைத்துச் சீர்திருத்தம் செய்யும் முயற்சியை நிச்சயம் அந்த மதம் எதிர்க்கத்தான் செய்யும். மகாத்மா காந்தியை விடவா இந்து மதத்தை அணைத்துச் சென்றவர் உலகில் இருக்க முடியும். ஆனால் அவரை அந்த இந்து மத அடிப்படைவாதிகள்தான் சுட்டுக் கொன்றனர். ஏன்? அவர் என்ன கோவிலை உடைத்தாரா? மதமாற்றம் செய்தாரா? சாகும்போதும் ‘ஹே ராம்’ எனச் சொல்லித்தானே வீழ்ந்தார். அவர் ‘இந்துராஷ்டிரம்’ அமைவதற்கு எதிராக இருந்தார். தீண்டத் தகாதவர் என இந்து மதம் யாரை ஒதுக்கி வைத்ததோ அவர்களை அழைத்துச் சென்று ஆலயப் பிரவேசம் நடத்தினார். அதுதான் இந்து மத அடிப்படைவாதிகளுக்கு எரிச்சல்.சங்கரசாரிக்கும் காந்திக்கும் நடந்த உரையாடலைக் கொஞ்சம் தயவு செய்து படித்துப் பாருங்கள். விவேகாநந்தருக்கும் இந்து மதத்திற்கும் அப்படி ஏதும் உரசல் நிகழ்ந்ததா? விவேகாநந்தர் அப்படி மதத்தை அரவணைத்துச் சென்று எங்காவது அவர் வெறுப்பதாகச் சொன்ன சாதீயத்திற்கும், தீண்டாமைக்கும் எதிராகப் பெரிய அளவில் சமபந்தி போஜனங்களையோ, ஆலயப் பிரவேசங்களையோ நடத்தினாரா? அவர் இந்து மத விழிப்பைப் பற்றிப் பேசியதை எல்லாம், அதேபோல இந்தியாவின் எழுச்சியைப் பற்றிப் பேசியதை எல்லாம் தொகுத்துப் பாருங்கள். அப்போது விளங்கும் அவர் இராண்டையும் பிரித்துப் பார்க்கவில்லை என.

“விவேகாநந்தரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர்கள் செய்வதற்கெல்லாம் அவர் பொறுப்பாகமுடியுமா?” என்பது இன்னொரு கேள்வி. நான் சொல்வது அவரது கருத்துக்கள் வெறும் ஆன்மீகம் சார்ந்ததோ, இந்துமதப் பெருமையைப் பேசுவதாகவோ மட்டும் இல்லை, அது எப்படி political hinduism த்திற்கு கால்கோள் இடுவதாக இருந்தது என்பதைத்தான் சுட்டிக் காட்டியுள்ளேன். இந்திய எழுச்சியை அவர் இந்து மதத்தின் எழுச்சியுடன் இணைக்கிறார். இரண்டையும் பிரிக்க இயலாததாக்குகிறார். மோடியும் ஆர்.எஸ்.எஸ்சும் விவேகாநந்தரை உயர்த்திப் பிடிப்பதும், இராமகிருஷ்ணரை ஓரங் கட்டுவதும், காந்தியைப் பகையாக நினைப்பதும் தற்செயலானதல்ல; மிகவும் தர்க்கபூர்வமான விளைவு (logical end) .

“காந்தி ஒரு அரசியல்வாதி. அவர் தீண்டாமையை எதிர்த்து நடத்திய இயக்கங்கள் போல விவேகாநந்தரும் செய்வார் என எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?” என்பது அடுத்த கேள்வி. அவர் ஒன்றும் சாதி, மத சீர்திருத்தங்களை இலக்காக்கிச் செயல்பட்டுக் கொண்டிருந்தவர் அல்ல. பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து மிகப் பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தவர். இதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை என அவர் ஒதுங்கவில்லை. இது அவரது ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலுக்கு மக்களைத் திரட்டும் பணியைக் கூடப் பாதிக்கலாம் என்ற போதிலும் அவர் தயங்கவில்லை. “விவேகாநந்தர் கோவில் வழிபாட்டில் எல்லாம் ஆர்வங்காட்டாதவர், அதனால் இதையெல்லாம் செய்யவில்லை” என்பதெல்லாம் அபத்தம். காந்தி மட்டும் என்ன கோவில் வழிபாட்டில் ஆர்வங் காட்டினவரா? அவர் கோவில்களுக்குச் செல்வதை எல்லாம் வழக்கமாகக் கொண்டவர் அல்ல. அம்பேத்கர், பெரியார் எல்லாம் ஆலய நுழைவுப் போராட்டத்தை நடத்தினார்களே அவர்களெல்லாம் என்ன கோவில் வழிபாட்டில் ஈடுபாடுடையவர்களா? விவேகாநந்தர் ஒன்றும் வெறும் ஆன்மீகப் பிராச்சாரம் செய்து கொண்டிருந்த ஒரு சாமியார் இல்லை. இராமகிருஷ்ணரின் பெயரால், முற்றிலும் அவருக்குப் பொருந்தாத ஒரு வலுவான அமைப்பை நிறுவியவர் அவர். இராமகிருஷ்ணர் தன்னிடம் சொல்லிச் சென்றதாக அவர் பின்னாளில் சொல்லித் தன்னை நியாயப்படுத்திக் கொண்டதற்கெல்லாம் எந்த ஆதாரமும் இல்லை. இராமகிருஷ்ணர் குறித்து ஊன்றிப் படித்தவர்களுக்குத் தெரியும் விவேகாநந்தர் இராமகிருஷ்ணரின் கருத்தாகக் கூறிய பலவும் இராமகிருஷ்ணருக்குப் பொருந்தாதவை என்பது.

ஈழ ஆதரவு மாணவர் போராட்டம்

(‘சண்டே இந்தியன்’ இதழுக்காக அப்பண்ணசாமி செய்த நேர்காணல்)

ஈழப் பிரச்சினை தொடர்பாகத் தமிழகத்தில் தற்போது ஒரு எழுச்சி உருவாகியுள்ளது. ஆனால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளில் ஒரு குழப்பம் இருப்பதாகத் தெரிகிறது. அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டும் என்கிற கோரிக்கையுடன் போராட்டம் தொடங்கியது. இப்போது அமெரிக்கத் தீர்மானத்தை ஆதரிக்கக் கூடாது எனப் போராடும் மாணவர்கள் கூறுகிறார்கள். அமெரிக்கத் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என ‘டெசொ’ கடை அடைப்பு நடத்துகிறது. ஈழப் பிரச்சினை தொடர்பாகத் தமிழகத்தில் இவ்வளவு கருத்து வேறுபாடுகள் இருப்பது ஏன்?

அமெரிக்கத் தீர்மானத்தால் எந்த விளைவும் ஏற்படப்போவதில்லை என்பது நாம் முன்பே ஊகித்ததுதான். “இன்னொரு ஆண்டு கால அவகாசம் கொடுத்து ஊத்தி மூடப் போகிறார்கள்” என இரண்டு வாரம் முன்பு எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன். மே 2009 கடைசி நேரப் போரை ‘சாடர்லைட்’ மூலம் நேரடியாகப் பார்த்துக் கொண்டிருந்த நாடுகள்தான் அமெரிக்காவும் இந்தியாவும். கடைசி நேரம் வரை இரண்டு நாடுகளும் இலங்கை அரசுக்கு உதவி செய்து கொண்டும் இருந்தன. இந்த இரண்டு நாடுகளும் உள்நாட்டிலும் பிற நாடுகளிலும் இதே போன்ற மனித உரிமை மீறல்களைச் செய்தவை மட்டுமல்ல செய்து கொண்டிருப்பவையும் கூட. இன்று இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வருவதென்பதெல்லாம் போர் மற்றும் கடல் வழி முக்கியத்துவம் வாய்ந்த இந்து மகா சமுத்திரப் பகுதியில் யார் அதிகாரம் செலுத்துவது என்கிற அரசியலின் அடிப்படையிலேயே நடக்கிறது. இதற்கெல்லாம் அப்பால் மனித உரிமைகளை நிலை நாட்டுவதில் அமெரிக்காவுக்கோ இந்தியாவிற்கோ எந்த அக்கறையும் கிடையாது. எனவே அமெரிக்கா பெரிதாகத் தீர்மானம் கொண்டு வந்து ராஜபக்‌ஷே அரசை இனப்படுகொலை செய்த நாடாகவும் போர்க் குற்றவாளியாகவும் நிறுத்தி விசாரிக்கும் என எதிர்பார்ப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதுதான். இதை நாம் முன்னூகித்திருக்க வேண்டும். “எல்லாம் எங்களுக்கும் தெரியும், அமெரிக்காவை வந்த வரைக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என நினைத்தோம்” என்பதெல்லாம் சரியான சமாதானமாகாது, ராஜபக்‌ஷேவைப் போர்க் குற்றவாளியாக அறிவிக்க யாரை வேண்டுமானாலும் ஆதரிக்கலாம் என்கிற நிலைபாடு இப்படியான குழப்பங்களுக்குத்தான் இட்டுச் செல்லும். ஏதோ இந்த அடிப்படையில் தமிழகத்தில் ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளது. அது வரைக்கும் லாபம்தான் எனச் சொல்வதையும் ஏற்க இயலாது. அரசியல் தெளிவுடன் மேற்கொள்ளப்படும் எழுச்சிகள்தான் தொடர்ந்து மேலெழுந்து செல்லும். மற்றவை தேவையற்ற இழப்புகளுக்கே காரணமாகும்.

முப்பதாண்டுகளாக ஈழப் போராட்டத்தைக் கவனித்து வருபவன் என்கிற வகையில் தொடக்க காலத்தில் ஈழ விடுதலை குறித்து அரசியல் மற்றும் தத்துவார்த்தத் தளத்தில் நடந்த விவாதங்கள் இன்று இல்லாமற் போனது ஒரு பெருங்குறை. யோசித்துப் பாருங்கள், எண்பதுகளில், தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ஈழப் போராட்டம், தேசிய இனப் பிரச்சினை தொடர்பாக எத்தனை நூல்கள் வந்தன, எவ்வளவு விவாதங்கள் நடந்தன, ஆய்வுகள் வேண்டியதில்லை, விவாதங்கள் வேண்டியதில்லை என்கிற நிலை எப்போது தொடங்கியதோ அப்போதே போராட்டம் பின்னடையவும் தொடங்கிவிட்டது. அதனுடைய விளைவுதான் இன்றைய குழப்பங்கள்.

அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்ப்பது, போர்க்குற்றம் தொடர்பான பொது விசாரணை மற்றும் பொது வாக்கெடுப்பு முதலான கோரிக்கைகள் மேலுக்கு வந்துள்ளது குறித்து என்ன கருதுகிறீர்கள்?

வரவேற்கத்தக்கதுதான். சென்ற மாதம் வெளியிடப்பட்ட நவநீதம் பிள்ளையின் அறிக்கை இப்படியான ஒரு சுயேச்சையான பன்னாட்டு விசாரணை என்கிற கருத்தைத்தான் முன்வைத்தது. அதை வலியுறுத்துவதும் தொலை நோக்கில் பொது வாக்கெடுப்பு என்பதை நோக்கி உலக அளவில் ஒரு கருத்தை உருவாக்கும் முயற்சியில் நமது ஆற்றலைச் செலவிடுவதும்தான் சரியான நடைமுறையாக இருக்கும். ஆனால் அதற்காக அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்ப்பது ன்கிற நிலைக்குச் செல்ல வேண்டியதில்லை என்பதே என் கருத்து. அடுத்து எது உடனடிக் கோரிக்கை, எது தொலை நோக்குடன் செயல்பட வேண்டிய கோரிக்கை என்பதில் நமக்குத் தெளிவு இருக்க வேண்டும். நவி பிள்ளை அறிக்கையின் அடிப்படையில் ஒரு சுதந்திரமான பன்னாட்டு விசாரணை என்பதற்கு நாம் உடனடி அழுத்தம் கொடுப்பது சரி. பொது வாக்கெடுப்பு என்பதற்காகக் கால வரையரையற்ற உண்ணாநிலைப் போராட்டம் என்பதெல்லாம் அத்தனை உசிதமாகத் தெரியவில்லை. அதை வேறு வடிவங்களில்தான் செய்ய வேண்டும். அப்படியான ஒரு பொது வாக்கெடுப்பைத் தீர்மானிக்கும் அதிகாரம் இன்று ஜெனிவாவில் கூடியுள்ள ஐ.நா மனித உரிமை கவுன்சிலுக்குக் கிடையவும் கிடையாது. மனித உரிமை தொடர்பான தீர்மானத்தில் நமக்கு ஆதரவாக வாக்களிக்கும் நாடுகள் கூட பொது வாக்கெடுப்பை ஆதரிக்குமா எனச் சொல்ல இயலாது. இன்று இலங்கைக்குள் தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் ஆகியோர் நடத்தப்படும் அவலம், இராணுவமயமாகும் இலங்கையின் ஆளுகை, வாக்களித்த அரசியல் தீர்வை மறுக்கும் திமிர்த் தனம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி உலகளவில் கடும் பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் நமக்கிருக்கிறது. குறிப்பாக வாக்களித்த 13வது சட்டத் திருத்தத்தைக் கூட இலங்கை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதை நாம் முன்னிலைப் படுத்திப் பிரச்சாரம் செய்ய வேண்டும். இந்தப் பின்னணிகளிலேயே பொது வாக்கெடுப்பு குறித்து நாம் பேச வேண்டும். இன்று இலங்கை கிட்டத்தட்ட ஒரு தோற்றுப்போன நாடு என்கிற நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. உள்நாட்டுப் போரில் அது வெற்றி பெற்றிருக்கலாம். பொருளாதார ரீதியாகவும் ஆளுகை என்கிற அடிப்படையிலும் அது தோற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் நடத்தப்படும் போராட்டங்கள், எதிர்ப்புகள் ஆகியவற்றைக் காட்டியும் புலிகளுக்கு எதிரான போர் வெற்றியைக் காட்டியும், தேசத்தை அந்நிய நாடுகளில் அடகு வைத்து அங்கே உருவாக்கப்படுகிற வளர்ச்சித் திட்டங்களைக் காட்டியும் அங்கு நடைபெறும் குடும்ப சர்வாதிகார ஆட்சியும் இராணுவ மயமான ஆளுகையின் கீழ் அனைத்து மக்களுக்கும் அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுவதும் ரொம்ப நாட்கள் நீடிக்க இயலாது.

இராணுவ மயமான அரசியல், ஆளுகை என்பதையெல்லாம் கொஞ்சம் விளக்க இயலுமா?

இன்று அந்தச் சின்னத் தீவில் 4,50,000 பேர் கொண்ட இராணுவம் உள்ளது. 2009ல் போர் முடிந்தது. அன்று 9ஆக இருந்த இராணுவ டிவிஷன்கள் இன்று 20 ஆகவும், 44 பிரிகேடுகள் 71 ஆகவும், 149 பெடாலியன்கள் 284 ஆகவும் அதிகரித்துள்ளன. 2013ம் ஆண்டுக்கு மட்டும் 290 பில்லியன் ரூபாய் பதுகாப்பு மற்றும் நகர வளர்ச்சி அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது சென்ற ஆண்டைக் காட்டிலும் 25.9 சதம் அதிகம். போருக்குப் பிந்திய சமாதானத்தின் கூலியாக இத்தனை பெரிய சுமையை எத்தனை நாட்கள் மக்கள் மீது சுமத்த முடியும்? இந்தப் பெரும் படையைக் கலைக்கவும் இயலாது. போரால் சீரழிந்த பொருளாதாரத்தில் தென்னிலங்கைக் கிராமப்புற சிங்கள இளைஞர்களின் ஒரே வேலை வாய்ப்பு அதுதான். இவ்வளவு பெரிய இராணுவத்தை எவ்வளவு நாளைக்குச் சும்மா வைத்திருக்க இயலும்? எனவே இப்போது அவர்கள் ‘வளர்ச்சிப் பணிகளுக்கு’ப் பயன்படுத்தப் படுகின்றனர், கான்டீன்கள் நடத்துவதிலிருந்து, அதி வேக நெடுஞ்சாலைகள் அமைப்பதிலிருந்து, ஆக்ரமிக்கப்பட்ட தமிழர் நிலங்களில் விவசாயம் செய்வதிலிருந்து பல்வேறு பணிகளில் அவர்களை நீங்கள் இலங்கை முழுதும் காணலாம். இதையெல்லாம் விட இன்னொரு ஆபத்தான விஷயம் உயர்கல்வி மாணவர்கள் அனைவருக்கும் ‘தலைமைப் பயிற்சி’ என்கிற பெயரில் மூன்று வாரங்களுக்கு இராணுவம் கட்டாயமாகப் பயிற்சி அளிக்கிறது. அதே போல பயிற்சியளிக்கப்பட்ட ப்ரின்சிபால்களுக்கு கர்னல், பிரிகேடியர் பட்டங்கள் அளிக்கப்படுகின்றனர். ஓய்வு பெற்ற இராணுவ ஜெனரல்கள் மாநில ஆளுநர்களாக நியமிக்கப்படுகின்றனர். புலிகளின் மாவீரர் கல்லறைகள் தகர்க்கப்பட்டு அங்கே இராணுவ முகாம்களையும் வெற்றியைப் பறைசாற்றும் நினைவுச் சின்னங்களையும் அமைத்து தமிழர்களை நோக்கி, “நீங்கள் தோற்றவர்கள், தோற்றவர்கள்” என ஒவ்வொரு கணமும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இராணுவத்தில் 75 சதம் இன்று வட கிழக்குப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒரு கணக்குப்படி சுமார் 1,98,000 இராணுவ வீரர்கள் இங்கே தமிழ்ப் பகுதிகளில் உள்ளனர். அதாவது வட பகுதியில் 1000 பேருக்கு 198.4 இராணுவ வீரர்கள் உள்ளனர். அல்ஜீரியா, அயர்லாந்து போன்ற இடங்களில் உள்நாட்டுப் போர் உக்கிரமாக நடை பெற்றபோது கூட படை அடர்த்தி 1000க்கு 60 என்கிற அளவைத் தாண்டியதில்லை. இன்று போர் முடிந்து, அமைதி நிலை எட்டிய பிறகு இத்தகைய இராணுவ அடர்த்தியை ஏற்கவே இயலாது என்பதை உலக நாடுகளிடம் வலியுறுத்த வேண்டும். போர் முடிந்த பின் வாக்களிக்கப்பட்ட அரசியல் தீர்வை இப்போது சாத்தியமே இல்லை எனத் துணிந்து சொல்வதை முக்கிய பிரச்சினையாக்க வேண்டும். டயஸ்போரா தமிழர்களின் நிலைபாட்டிலிருந்து மட்டுமே ஈழ்ப் பிரச்சினையை அணுகாமல் வட, கிழக்கு தமிழர்கள் எதிர் கொண்டு போராடிக் கொண்டிருக்கும் பிரச்சினைகளோடு தமிழக ஈழ ஆதரவுப் போராட்டங்களை இணைக்க வேண்டும்.

இராணுவத்தை இப்படி அதற்குத் தகுதியில்லாத பணிகளில் அமர்த்துவது, பொருத்தமற்ற அளவில் அதன் எண்ணிக்கையை வளர்த்து வைத்திருப்பது என்பதெல்லாம் பாம்புக்குப் பால் வார்க்கிற கதைதான். என்றைக்கு இருந்தாலும் இந்த ஊட்டி வளர்க்கப்படும் இராணுவத்தால்தான் ராஜபக்ஷேக்களின் குடும்ப சர்வாதிகாரத்திற்கு ஆபத்து வரப்போகிறது.

இறுதியாக ஒரு கேள்வி. தமிழக மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் தாக்கப்படுவது தொடர்கிறது. கச்சத்தீவை மீட்கவேண்டும் என்கிற கோரிக்கை மீண்டும் மேலெழுந்துள்ளது. அதைப்பற்றி..

கச்சத்தீவைத் தமிழக மக்களைக் கலந்தாலோசிக்காமல் இலங்கைக்கு அளித்தது மிகப் பெரிய தவறு. ஆனால் கச்சத்தீவை மீண்டும் பெற்றுவிட்டால் தமிழக மீனவர் பிரச்சினைகள் தீர்ந்துவிடப் போவதில்லை. போர் நடந்தபோது பாதுகாப்புக் கருதி இராணுவம் சுட வேண்டியுள்ளது எனச் சொல்லிக் கொண்டிருந்தனர். இப்போது போர் முடிந்த பின்னும் இப்படியான நிலை தொடர்வது இலங்கை அரசு எந்த வகையிலும் தன்னை மாற்றிக் கொள்ளவில்லை என்பதைத்தான் காட்டுகிறது. மீனவர்களைப் பொருத்தமட்டில் இது உடனடியான உயிர்ப் பிரச்சினை. கடலைப் பொருத்த மட்டில் நிலத்தைப் போல முள் வேலி அமைத்து எல்லை அமைத்துவிட முடியாது. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட கடலில் மீன் வளம் அதிகம் உள்ள பகுதிகளில் பாரம்பரியமாக நாம் மீன் பிடித்து வந்துள்ளோம். அந்தப் பாரம்பரிய உரிமை மதிக்கப்பட வேண்டும். வெறும் கடல் எல்லை என்கிற அடிப்படையில் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க இயலாது. பாரம்பரிய உரிமைகள் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது குறித்து இரு தரப்பு மீனவர்களையும் உள்ளடக்கிய பேச்சு வார்த்தைகள் உடனடித் தேவை. நமது மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பது அவசியம். அயல் நாடுகளுடனான எல்லைப் பிரச்சினைகளைப் பொருத்த மட்டில் அது சீனாவாக இருக்கட்டும் அல்லது பாகிஸ்தானாக இருக்கட்டும் பேசுவார்த்தை, ‘டிப்ளமசி’ இரண்டுக்கும் முன்னுரிமை அளித்துச் செயல்படுவதுதான் உசிதம். சமீபத்தில் நடைபெற்றுள்ள தாக்குதல்கள் தொடர்பான உடனடி விசாரணையையும் விளக்கத்தையும் இந்திய அரசு கோர வேண்டும். மீனவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இருக்க வேண்டும். சற்றுமுன் வந்துள்ள செய்திகள் மேலும் கவலை அளிப்பதாக உள்ளன. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள எதிர்ப்புகள், போராட்டங்கள் எது குறித்தும் கவலைப்படாமல் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைதாவது தொடர்கிறது. கடல் எல்லையைத் தாண்டுகிறார்கள் என்கிற ஒரே காரணம்தான் இலங்கை அரசுத் தரப்பில் சொல்லப்படுகிறது. பாரம்பரிய உரிமை என்கிற வகையில் மீன்பிடி எல்லையை வரையறுப்பது தொடர்பாக இந்திய அரசு இலங்கையுடன் கறாராக ஒப்பந்தம் செய்யவும் அதனடிப்படையில் நடவடிக்கை எடுக்கவும் வேண்டிய வேண்டிய தருணம் வந்துவிட்டது.

அ.மார்க்சுக்கு என்ன நடந்தது இலங்கையில்?

(தீராநதி இதழுக்காக மீனா செய்த நேர்காணல்)

பேரா.அ.மார்க்ஸ் இலக்கியம், அரசியல், மனித உரிமைச் செயற்பாடுகள் என பல்வேறு தளங்களில் இயங்கி வருபவர். ஈழப்பிரச்சினை குறித்து எண்பதுகளின் தொடக்கத்தில் இருந்தே வினையாற்றி வருகிற அ.மா, ஈழப்போர் அதன் உச்சகட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது விடுதலைப் புலிகள் மற்றும் ராஜபக்சே அரசின் மனித உரிமை மீறல்களையும் படுகொலைகளையும் கண்டித்து, ஒரு உரையாடலுக்கான தேவையை தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். போருக்குப் பிந்திய அந்த மயானவெளிக்குள் இரண்டுமுறை பயணம் மேற்கொண்ட அவர், தற்போது மூன்றாவது முறையாக கடந்த 8.2.13 அன்று பல்வேறு கருத்தரங்க விவாதங்களில் பங்கேற்பதன் பொருட்டு சென்றிருந்தார்.

முதல்நாள் கூட்டத்திலேயே இலங்கை அரசு அதிகாரிகளால் அவரது பேச்சிற்கு தடைவிதிக்கப்பட்டது. இதையொட்டி அவரது மற்ற கருத்தரங்கக் கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டன. வழக்கமாக இலங்கைப் பயணத்திற்குப் பின்பு ‘என்ன நடக்குது இலங்கையில்’ என்று தனது பார்வைகளை அம்பலப்படுத்தும் அ.மா.விடம், ‘என்ன நடந்தது இலங்கையில்’ என்பது குறித்து விவாதிப்பதற்காய் சென்னை திரும்பிய அவரைச் சந்தித்தோம். இலங்கை அரசின் தடை, தொடரும் அதிகார அத்துமீறல்கள், வரவிருக்கும் ஐ.நா.தீர்மானம் ஆகியவை குறித்து அவர் முன்வைத்த கருத்துக்கள் இங்கே..

தீராநதி : தோழர்.நா.சண்முகதாசனின் இருபதாவது நினைவு தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில், இடதுசாரி இயக்கங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து சிறப்புரை ஆற்றுவதற்காகத் தான் நீங்கள் இலங்கை சென்றதாக அறிகிறோம். முதலில், தோழர் சண்முகதாசன் குறித்து கொஞ்சம் சொல்லுங்கள்..

அ.மா : நா.சண்முகதாசன் என்றொரு தமிழர் இலங்கைக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்ததெல்லாம் உங்களைப் போன்ற இளைய தலைமுறையினருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. உலகளாவிய பொதுவுடைமை இயக்கப் பிளவின்போது அவர் மாஓ பக்கம், அதாவது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பக்கம் நின்றார். மாஓ உடன் நெருங்கிப் பழகியவர் என அவரைப் பற்றிச் சொல்வதுண்டு. எண்பதுகளில் கைலசாபதி, சிவத்தம்பி ஆகியோரது நூல்களை எல்லாம் நாங்கள் தேடித் தேடிப் படித்துக் கொண்டிருந்தபோது, நாங்கள் ஆவலுடன் படித்த நூல்களில் ஒன்று சண்முகதாசனின் மார்க்சீயப் பார்வையிலிருந்து எழுதப்பட்ட இலங்கை வரலாறு.

அவர் உருவாக்கிய செங்கொடிச் சங்கம் முக்கியமான ஒரு தொழிலாளர் இயக்கம். இலங்கையில் ஆயுதப் போராட்டம் என்கிற கருத்தாக்கத்தை அறிமுகம் செய்தவர் என்றும் அவருக்கு ஒரு பெயருண்டு. ஒரு கட்சித் தலைவராக மட்டுமின்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் எது குறித்தும் ஆழமாக உடனுக்குடன் கருத்துக்கள் சொல்லவும் எழுதவும் வல்லவராகவும் அவர் இருந்தார். இதழ்களில் அவர் எழுதியுள்ள கட்டுரைகள் தொகுப்புகளாகவும் வந்துள்ளன. எல்லாவற்றிற்கும் மேலாக ஈழத் தமிழர்கள் மத்தியில் இருந்த சாதி, தீண்டாமைக் கொடுமைகளைக் கவனத்தில் எடுத்து, ‘தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்’ ஒன்றைக் கட்டியது அவரது முக்கிய பங்களிப்புகளில் ஒன்று. தலித் இலக்கிய முன்னோடி கே.டானியல் அவரைத் தலைவராக ஏற்றுச் செயல்பட்டவர். அவர் மூலமாக எனக்கு ‘சண்’, ஆம் அவர் இலங்கை மக்கள் மத்தியில் அப்படித்தான் அறியப்பட்டிருந்தார் எண்பதுகளின் தொடக்கத்தில் பழக்கமானார். 83 கருப்பு யூலைக்குப் பின் தமிழர்கள் மீதான வன்முறைகள் குறித்த அரிய புகைப்படங்களுடன் அவர் சென்னை வந்திருந்தபோது, சிறிய சந்திப்பு ஒன்றைச் சென்னை விடுதி ஒன்றில் ஏற்பாடு செய்திருந்தோம்.

தீராநதி : சரி. அவரது நினைவுப் பேருரையில் கலந்துகொண்டது, உங்கள் பேச்சு தடை விதிக்கப்பட்டது பற்றி கூறுங்கள்…

அ.மா : அவர் இறந்து இருபது ஆண்டுகள் ஆகின்றன. அவர் பெயரில் இயங்கும் ‘மார்க்சீயக் கற்கைகளுக்கான சண்முகதாசன் நிலையம்’ அவரது இருபதாம் நினைவுப் பேருரையை நிகழ்த்த என்னை அழைத்திருந்தது. அவரது நூல் தொகுப்பு ஒன்றும் அதில் வெளியிடப்பட இருந்தது, கம்யூனிச இயக்கத் தலைவர்கள் செந்தில்வேல், அஜித் ரூபசிங்க, எழுத்தாளர் சிவசேகரம் ஆகியோர் பேச இருந்தனர். சண்ணின் இறுதிக் காலம் வரை அவரோடு இருந்தவரும், தொடர்ந்து அவரது நூல்களை மொழியாக்கி வெளியிட்டு வருபவருமான ‘தினக்குரல்’ நாளிதழ் ஆசிரியர் வீ.தனபாலசிங்கம் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்திருந்தார். புகழ் பெற்ற கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் அதன் தற்போதைய தலைவர் பேரா. சபா. ஜெயராசா தலைமையில் சென்ற 10ந்தேதி மாலையில் நடை பெற இருந்த கூட்டம் தொடங்க இருந்த அரை மணி நேரத்திற்கு முன்னதாக அங்கு வந்த இலங்கை அரசின் நான்கு ‘இம்மிக்ரேஷன்’ அதிகாரிகள் கூட்ட ஏற்பாட்டாளர்களைச் சந்தித்து நான் பேசக் கூடாது என்றார்கள்.

தீராநதி : உங்கள் உரையின் தலைப்பு அப்படியொன்றும் இலங்கை அரசை நேரடியாக விமர்சிப்பது கூட இல்லையே.. உங்களை அழைத்து ஏதும் விசாரித்தார்களா?

அ.மா : என்னிடம் ஏதும் பேசவில்லை. தனபாலசிங்கம் மற்றும் ஜெயராசா ஆகியோருடந்தான் பேச்சு நடந்தது. அவர்களுக்கு ஏதோ புகார் வந்துள்ளதாகவும், அந்த அடிப்படையில் விசாரித்தபோது அது உண்மை எனத் தெரிந்ததாகவும் எனவே நான் பேசக் கூடாது என்றும் சொன்னார்கள். எந்த விதி அல்லது சட்டத்தின் கீழ் பேசக்கூடாது எனக் கேட்டபோது ‘டூரிஸ்ட்’ விசாவில் வந்தவர்கள் கூட்டங்களில் பேசக்கூடாது என்றார்கள்.

தீராநதி : நீங்கள் ஏன் டூரிஸ்ட் விசாவில் சென்றீர்கள்? ‘கான்ஃபெரன்ஸ்’ என விசா வாங்கி இருக்கலாம் தானே?

அ.மா : நான் இதுவரை பலமுறை வெளிநாடுகள் சென்றுள்ளேன். எல்லாமே கூட்டங்களில் பேசுவதற்காகத்தான். டூரிஸ்ட் விசாவில் செல்வதுதான் வழக்கம். பெரும்பாலும் அப்படித்தான் எல்லோரும் போய் வருகிறார்கள், இலங்கைக்கும் அப்படித்தான் இரு முறை சென்று வந்தேன். கூட்ட அழைப்பிதழைக் காட்டி விசா கேட்டால், என்ன கூட்டம், யார் ஏற்பாடு, நீங்கள் பேசப் போவதை எழுதித் தாருங்கள் என்றெல்லாம் விசாரணை நடக்கும். கால தாமதம் மட்டுமின்றி அந்த அடிப்படையில் விசா மறுக்கவும் படலாம். அதனால் ட்ராவெல் ஏஜன்சிகளே, “நீங்க ஏன் சார் அதை எல்லாம் சொல்றீங்க? எல்லோரும் டூரிஸ்டுன்னு சொல்லித்தான் போய் வராங்க. நீங்களும் அப்படியே போடுங்க” என்பார்கள்.

தீராநதி : சரி, அப்புறம் என்ன நடந்தது?

அ.மா : தனபாலசிங்கமும் ஜெயராசாவும் விளக்கிச் சொன்னார்கள். ஏற்கனவே நான் சிவத்தம்பி நினைவுரைக்கு வந்ததையும், இப்போதும் கூட அடுத்த சில நாட்களில் தமிழ்ச் சங்கத்திலேயே, “சங்க இலக்கியத்தின் தொடர்ச்சியாக இரட்டைக் காப்பியங்கள்” என நான் உரை நிகழ்த்த இருப்பதையும், கிழக்குப் பல்கலைக் கழகங்களிலும் நான் பேச இருப்பதையும் விளக்கிச் சொன்னார்கள். வந்த நான்கு அதிகாரிகளில் ஒருவர் தமிழர். தன்னை ஜெயராசாவின் மாணவர் என்றும் அறிமுகப்படுத்திக் கொண்டார். ‘நாங்கள் ஒன்றும் செய்ய இயலாது. மேலிடத்து ஆணை” என்றார்கள். சரி மேடையிலாவது அமரலாமா? எனக் கேட்டபோது மேலதிகாரிகளிடம் பேசிவிட்டு அதுவும் கூடாது என்றார்கள். ஆனால் கூட்டம் நடத்தத் தடை இல்லை நடத்திக் கொள்ளுங்கள் என்றார்கள். சரி அரங்கத்தில்கூட அவர் இருக்கக் கூடாதா எனக் கேட்டபோது மறுபடியும் யாருடனோ பேசிவிட்டு இருக்கலாம் என்றார்கள். கூட்ட ஏற்பாட்டாளர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டபின்பே சென்றார்கள். தொடர்ந்து உளவுத் துறையினர் கூட்டத்தைக் கண்காணித்தனர்.

தீராநதி : இந்தத் தடை தமிழர்களிடையே என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியது?

அ.மா : சண் மீதுள்ள மரியாதை நிமித்தமாகவும் என்னுடைய பேச்சைக் கேட்பதற்காகவும் பெரிய அளவில் கூட்டம் திரண்டிருந்தது. என்னுடைய உரை அச்சிடப்பட்டுத் தயாராக இருந்தும் வினியோகிக்கப்படவில்லை. வந்திருந்தவர்களில் அமைச்சர் பஷீர் சேகு தாவூத், ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மனோ கணேசன் முதலியோரும் இருந்தனர். சேகு தாவூத் முன்னாள் ‘ஈரோஸ்’ காரார். நிறப்பிரிகை வாசகர். ஒவ்வொரு முறை நான் செல்லும்போதும் ஏதாவது ஒரு கூட்டத்திற்கு வந்து விடுவார். அவராலும் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஆறுதல் சொல்ல மட்டுந்தான் முடிந்தது. ராஜபக்‌ஷே குடும்பத்தைத் தவிர அங்கு கேபினட் அமைச்சர்கள் உட்பட அங்கு யாருக்கும் அதிகாரமில்லை. கைகளைப் பற்றிக் கொண்டு வருத்தம் தெரிவித்த மனோ கணேசன், “பரவாயில்லை விடுங்கள். நீங்கள் பேசியிருந்தால் இந்த முன்னூறு பேரோடு போயிருக்கும். இப்போது மூவாயிரம் பேருக்குச் செய்தி போயுள்ளது” எனக் கூறி அகன்றார். உடனடியாக, முகநூல் ஆகியவற்றின் ஊடாகச் செய்தி பரவியது. பி.பி.சி, புதிய தலைமுறை ஆகிய ஊடகங்களிலிருந்து என்னிடம் கருத்துக் கேட்கப்பட்டபோது நடந்ததைத் தவிர கூடுதலாக நான் எதையும் கூற மறுத்துவிட்டேன். லெனின் மதிவானம், ஃபர்சான் ஆகியோருடன் தொடர்புகொண்டு மலையகத்திலும், கிழக்கிலும் நடக்க இருந்த கூட்டங்களை ரத்து செய்தேன். கிழக்குப் பல்கலைக் கழக நண்பர்களிடமும் பேசி ரத்து செய்யச் சொன்னேன்.

தீராநதி : உங்கள் வருகை குறித்து அரசிடம் யாரோ புகார் அளித்ததாகச் சொன்னீர்கள். இந்த புகாரின் அடிப்படையில் தான் தடை விதிக்கப்பட்டதாக நினைக்கிறீர்களா? உங்களின் மற்ற கூட்டங்கள் என்னவாயின?

அ.மா : இதுவரை நான் சென்ற போதெல்லாம் அங்கு கூட்டங்களில் பேசும்போது நேரடியாக அரசை விமர்சித்துப் பேசியதில்லை. ஆனால் இங்கு வந்தபின் அங்குள்ள சூழலை விமர்சித்துக் கட்டுரைகள் எழுதியுள்ளேன். அவை அரசின் கவனத்திற்குச் சென்றதை அறிவேன். தீராநதியில் நான் ‘என்ன நடக்குது இலங்கையில்’ தொடர் எழுதியபோது முதல் இதழுக்குப் பின் இரண்டாவது மூன்றாவது கட்டுரைகள் வந்த இதழ்கள் இலங்கையில் விற்பனை செய்யப்படவில்லை. நண்பர்கள் கடிதம் எழுதி இங்கிருந்து பிரதிகள வாங்கினார்கள். நான் வந்து சென்ற பிறகு கூட்டம் நடத்திய சிலரிடம் என் வருகை குறித்து விசாரித்துள்ளனர். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் கார்கில் யுத்தம் நடந்தபோது நான் அது குறித்து ‘சரிநிகர்’ இதழில் எழுதியபோது இந்திய தூதரக அதிகாரிகள் வந்து விசாரித்ததைச் சரிநிகர் நண்பர்கள் சொன்னார்கள். அப்போது தபாலில்தான் கட்டுரைகள் அனுப்புவேன். இரண்டாவது மூன்றாவது கட்டுரைகள் அவர்களுக்குப் போய்ச் சேரவே இல்லை. ஜூ.வியில் நான் எழுதிய கட்டுரைத் தொடர் அப்படியே அங்கு மீள்பிரசுரமானது.

யார் புகார் எழுதினார்கள் எனத் தெரியவில்லை. பல ஊகங்கள் உள்ளன. அது பற்றி நான் ஒன்றும் சொல்ல விரும்பவில்லை. கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் மௌனகுருவைச் சந்தித்தபோது அவர் சொன்னார்: ‘சரி விடுங்க மார்க்ஸ். இதுவும் நல்லதுக்குத்தான். உங்களைப் பற்றி உங்க ஊரில் அரசாங்க ஆதரவுடன் வந்து போறீங்கன்னு சிலர் ஏதாவது எழுதுவாங்கதானே. இப்ப அவங்க ஒண்ணும் பேச முடியாதில்லே..” என்றார். நான் சொன்னேன்: “சார் என்னைப் பத்தி அப்படியெல்லாம் எழுதுறவுங்க உண்மை தெரியாம எழுதுறதில்லை. என்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்சுதான் எழுதுவாங்க. இப்ப கூட, ‘இது ராஜபக்‌ஷேவும் அ.மார்க்சும் சேர்ந்து செய்த கூட்டுச் சதி’ன்னு எழுதினாலும் எழுதுவாங்க” என்று சொல்லிச் சிரித்தேன்.

பொதுக் கூட்டங்கள் ரத்தானாலும் மலையகத்திலும் கிழக்கிலும் நண்பர்களின் வீடுகளில் சந்திப்புகள் நிகழ்ந்தன. கிழக்குப் பல்கலைக் கழக நுண்கலைப் பள்ளியிலும், காத்தான்குடியில் விபுலானந்தர் பெயரில் இயங்கும் நுண்கலைத் துறையிலும், கிழக்குப் பல்கலைக் கழக ஸ்டாஃப் டெவெலப்மேன்ட் சென்டரிலும் சந்திப்புகள் நடந்தன.

தீராநதி : இப்போது அங்கு நிலைமைகள் எப்படி உள்ளன? ஐ.நா மனித உரிமைக் கழகக் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டுவர இருக்கும் தீர்மானம் அங்கே ஏதாவது அச்சத்தை உருவாக்கியுள்ளதா?

அ.மா : நிச்சயமாக ஒரு அச்சம் உருவாகித்தான் உள்ளது. ராஜபக்‌ஷேவின் இந்திய வருகை இந்திய அரசுத் தரப்பில் கண்டுகொள்ளப்படாமை குறித்தும் பத்திரிகைகள் எழுதின. இலங்கையில் நடந்துள்ள மனித உரிமை மீறல்கள் குறித்து ஐ.நா மனித உரிமைப் பேரவையின் உயர் தூதுவர் நவனீதம் பிள்ளை ஒரு பன்னாட்டு விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிக்கை அளித்திருப்பது குறித்தும், பிரிட்டன் வெளி விவகார இணை அமைச்சர் அலிஸ்டெர் பேர்ட் வடக்கில் நிலைமை சீரடையவில்லை, இராணுவ இருப்பு குறையவில்லை என்றெல்லாம் எழுதியுள்ளது குறித்தும் அங்கு விரிவாகச் செய்திகள் வெளிவந்தன. வெளிநாட்டுத் தலையீட்டை அனுமதிக்க மாட்டோம் என அமைச்சர் கெஹலிய ரம்புக்லெவ போன்றோரும் சில பிக்குமார்களும் வீரம் பேசுவதும் கூட ஒருவகை அச்சத்தின் வெளிப்பாடாகத்தான் உள்ளது. ஆனாலும் இலங்கை அரசு எந்த வகையிலும் தன் போக்குகளை மாற்றிக் கொள்வதாகத் தெரியவில்லை. ஐ.நா மனித உரிமை அவை கூட உள்ள சூழலில் தலைமை நீதிபதி ஷிராணி பண்டாரநாயகா பதவி இறக்கம் செய்யப்பட்டு ராஜ பக்‌ஷே குடும்ப விசுவாசி ஒருவர் அந்த இடத்தில் அமர்த்தப்பட்டுள்ளார். அரசால் கடத்திக் கொல்லப்பட்ட லசந்த விக்ரமசிங்க ஆசிரியராக இருந்த அதே ‘சண்டே லீடர்’ இதழின் இன்றைய உதவி ஆசிரியர் அஸ்கர் பரான் சவுகத் அலி நான் அங்கிருந்தபோது சுடப்பட்டார். யாழ்ப்பாணத்தில் ‘தினக்குரல்’ நாளிதழ் விற்பனை முகவர் ஒருவர் தாக்கப்பட்டார்.

மீள்குடியேற்றம் நிகழவிடாமல் இராணுவம் தமிழ்ப்பகுதிகளை ஆக்ரமித்து வைத்துள்ளதற்கு ஏதிராக ஆங்காங்கு போராட்டங்கள் நடை பெறுகின்றன. நான் அங்கிருந்தபோது இவ்வாறு வலிகாமம் வடக்கில் முப்பதாயிரம் பேர் குடியமர்த்தப்படாமல் இருப்பதைக் கண்டித்துத் தெல்லிப்பழையில் மிகப் பெரிய உண்ணாவிரதம் நடந்தது, அரசுக்கு எதிராக உருவாகியுள்ள பத்து கட்சிக் கூட்டணி ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டத்தில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தலைவர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்த உண்ணாவிரதத்திலும் இறுதியாகச் சிலர் புகுந்து குழப்பம் விளைவிக்க முனைந்தனர். இவர்கள் வடபகுதி இராணுவக் கட்டளைத் தளபதி ஹத்ருசிங்கவின் கூலிப் படையினர் என எதிர்க் கட்சித் தலைவர் ரணில் குற்றம் சாட்டினார். பள்ளிவாசல்கள் தாக்கப்படுவது தொடர்கிறது. முஸ்லிம்கள் நான்கு மனைவிகள் வைத்துக் கொண்டு ஏராளமாகப் பிள்ளை பெற்றுக் கொள்வதாக பவுத்த பிக்குகள் வெறுப்புப் பிரச்சாரம் செய்கின்றனர். ‘ஹலால்’ முத்திரை குத்திப் பொருட்களை விற்கக் கூடாது என பிக்குகளின் ‘பொது பல சேனா’ என்கிற அமைப்பு கெடு விதித்துப் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளது. மாத்தளையில் எலும்புக் கூடுகள் தோண்டி எடுக்கப்படுகின்றன.

சென்ற ஆண்டு இயற்றப்பட்ட ஐ.நா தீர்மானம் இந்திய அரசால் அதன் கடுமைகள் எல்லாம் நீர்க்கப்பட்டுத்தான் நிறைவேற்றப்பட்டது. ராஜபக்‌ஷே அரசே நியமித்த மீளிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைப்படி அந்த அரசே ஒரு குழுவை அமைத்து போர்க் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்பதுதான் தீர்மானம். இதை விட எளிமையாக என்ன தீர்மானம் இருக்க முடியும். அதைக் கூடச் செய்ய மறுக்கிறது இலங்கை அரசு. கிரிசாந்த டி சில்வா என்ற இராணுவத் தளபதி ஒருவர் தலைமையில் படைத் தளபதிகளின் குழு ஒன்றை அமைத்து ‘விசாரணை’ ஒன்று நடத்தப்பட்டு அந்த அறிக்கை சென்ற வாரம் தலைமைத் தளபதி ஜெயசூர்யாவிடம் அளிக்கப்பட்டது.. இலங்கை இராணுவம் எதுவுமே செய்யவில்லை எனவும், புலிகள்தான் எல்லாவற்றையும் செய்தார்கள் எனவும் அந்த அறிக்கை சொல்கிறது. யார் விசாரிக்கப்பட வேண்டியவர்களோ அவர்களே தம்மை விசாரித்துக் குற்றம் அற்றவர்கள் எனச் சொல்லிக் கொள்ளும் அதிசயம் இலங்கையைத் தவிர வேறெங்கும் நடக்காது.

தீராநதி : சேனல் 4 வீடியோ ஆதாரங்கள், சர்வதேச நெருக்கடிகள், மனித உரிமைப்புகளின் கண்டனங்கள் இவற்றிற்கெல்லாம் அப்பால் இலங்கை அரசு இத்தனை துணிச்சலாக அதிகாரத்தை உமிழ்வதன் பின்னணி என்னவென்று நினைக்கிறீர்கள்?

அ.மா : பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் கொடூரமாகக் கொல்லப்பட்ட செய்தி வெளிவந்த அதே நாளில் இன்னொரு செய்தியும் வெளிவந்தது. சென்ற ஆண்டிலும் கூட பிரிட்டன் இலங்கைக்கு இராணுவ ஆயுதங்களை விற்றுள்ளது என்பதுதான் அது. நான் அங்கிருந்தபோது நடந்த ஏதோ ஒரு நிகழ்ச்சியில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் கலந்து கொண்டு இலங்கையில் எல்லாம் சரியாகிவிட்டது, அமைதி நிலவுகிறது என்று பேசினார். மிலோசெவிக் மீது சர்வதேச நீதிமன்ற விசாரணை ஒன்று நடத்தப்பட்டது போலத் தன் மீது நடத்துவது சாத்தியமில்லை என ராஜபக்‌ஷே நம்புகிறார். சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை உறுப்பினர் கிடையாது. எனவே ஐ.நா பாதுகாப்பு அவை ஒப்புதலுடன்தான் ராஜபக்‌ஷேவைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த இயலும். அதற்கு சீனா, ருஷ்யா முதலிய நாடுகள் சம்மதிக்காது என்பது ராஜபக்‌ஷேக்களுக்கு இருக்கக்கூடிய மிகப் பெரிய ஆறுதல்.

ஒன்றை நாம் மறந்துவிடக் கூடாது. இந்தியாவின் ஒப்புதலின்றி அமெரிக்கா இலங்கைப் பிரச்சினையில் எந்த முடிவையும் எடுக்காது. இந்து மகா சமுத்திரம் போர் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதி. இந்தியாவும் அமெரிக்காவும் ‘strategic partners’. இலங்கைத் தீவின் கீழும் மேலும், அம்பாந்தோட்டவிலும், மன்னாரிலும் சீனா உறுதியாகக் கால் பதித்துள்ளது. பத்தாயிரம் சீனக் கைதிகள் இன்று இலங்கை முழுதும் பல்வேறு பணிகளில் உள்ளனர். கட்டுநாயக்கா உயர் வேகப் பாதை உட்பட பல கட்டுமானப் பணிகளை இன்று சீனா இலங்கையில் செய்து வருகிறது. மலேசியாவுக்கு அடுத்தபடியாக இன்று மிக அதிக அளவு இலங்கையில் அந்நிய முதலீடு செய்துள்ள நாடு இந்தியா. அவ்வளவு எளிதாக இவர்கள் எல்லாம் நம்மை விட்டுக் கொடுத்துவிட மாட்டார்கள் என்கிற நம்பிக்கை ராஜபக்‌ஷேக்களுக்கு.

தீராநதி : அப்படியானால் வரும் ஐ.நா மனித உரிமைக் கூட்டத்தில் பெரிதாக ஒன்றும் நடக்கப் போவதில்லை என்று சொல்கிறீர்களா?

அ.மா : நடக்க வேண்டும் என்பது தான் நமது ஆசை. ஆனால் இன்னும் ஓராண்டு கால அவகாசம் அளித்து விஷயம் முடிக்கப்படுமோ என்பது நமது அச்சம். உண்மையிலேயே இன்றைய சூழலில் இலங்கை மீதான நடவடிக்கையின் உச்சபட்சமான சாத்தியம் என்ன என்பதைத் தெளிவாக்கிக் கொண்டு அதற்கு இந்திய அரசு எந்த அளவிற்கு உறுதியாக இருக்கும் என்று நாம் யோசிக்க வேண்டும். நேற்று சானல் 4 வெளியிட்டுள்ள படங்கள் ஒன்றை உறுதி செய்கின்றன. கடைசி நேரத்தில் புலிகளின் தலைவர்கள் கொல்லப்பட்டது ஏதோ போரின் ஊடான தாக்குதலில் அல்ல என்பதுதான் அது. இது பிடித்து வைத்து systematic ஆகச் செய்யப்பட்ட படுகொலை. இந்தக் கொலைகளுக்கான command responsibility மஹிந்த மற்றும் கோத்தபய ராஜபக்‌ஷேக்களுக்கும் அன்றைய தளபதி ஜெனெரல் ஃபொன்சேகாவிற்கும் உண்டு. அந்த வகையில் அவர்கள் போர்க் குற்றவாளிகளாக விசாரிக்கப்படத் தகுதி பெற்றவர்களாகிறார்கள். புலிகளும் செய்தார்கள் நாங்களும் செய்தோம் என்று அவர்கள் சொல்வதை ஏற்க இயலாது. அவர்கள் கூற்றுப்படி புலிகள் இயக்கம் என்பது ஒரு பயங்கரவாத அமைப்பு. ஒரு பயங்கரவாத அமைப்பு போலவே நானும் செயல்படுவேன் என ஒரு அரசு எப்படிச் சொல்ல முடியும்?

மேலும் ஓராண்டு கால அவகாசம் என்பதாக இல்லாமல் நவநீதம் பிள்ளை அறிக்கையில் கூறியுள்ளபடி போர்க் குற்றங்கள் மற்றும் காணமலடிக்கப்பட்டவர்கள் தொடர்பான ஒரு சுயேச்சையான பன்னாட்டு விசாரணை என்கிற தீர்மானத்தை நீர்க்கச் செய்யாமல் நிறைவேற்றுவதற்கு இந்தியா மனப்பூர்வமாகச் செயல்படவேண்டும். செயல்படுமா?!!