அல்துஸ்ஸரின் அமைப்பியல் மார்க்சியம்

(கார்ல் மார்க்ஸ் 5  – கார்ல் மார்க்ஸ் 200 தொடரில் இன்று வெளிவந்துள்ள ஐந்தாம் கட்டுரை, மக்கள் களம், செப் 2017)

karl-marx-reading-louis-althusser-reading-capital-copy

ஃப்ரென்ச் மார்க்சியரும், ஃப்ரான்ஸ் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து செயல்பட்டவருமான லூயி அல்துஸ்ஸர், கார்ல் மார்க்சின் மிகவும் ஆழமான சிந்தனைகள் பல நேரங்களில் அவரைப் பின்பற்றியவர்களாலும் கூடத் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளன எனக் கருதியவர். மார்க்சை எவ்வாறு வாசிப்பது என்பது அவரது முக்கியமான நூல்களில் ஒன்று. ‘வரலாற்றுவாதம்’, ‘கருத்துமுதல்வாதம்’, ‘பொருளாதாரவாதம்’ முதலான பல்வேறு தவறான அணுகல்முறைகளின் விளைவாக மார்க்சைப் புரிந்து கொள்வதில் பல தவறுகள் ஏற்பட்டுள்ளன என்பது அவரது வாதம். எடுத்துக்காட்டாக பொருளாதாரமே எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது என மிகவும் எந்திரகதியாக எல்லாப் பிரச்சினைகளையும் பார்ப்பதால் விளையும் தவறுகளைச் சொல்லலாம். மார்க்சின் மிக முக்கிய பங்களிப்பான வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தைச் சரியாகப்  புரிந்துகொள்ள வேண்டும் எனச் சொன்ன அவர், அதன் முதல் படியாக கோட்பாட்டளவிலும், செயல்பாட்டளவிலும் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு ஏராளமாக எழுதிக் குவித்த மார்க்சின் சிந்தனைகளை மாற்றமில்லாத ஒரே முழுமையாகப் பார்ப்பதைக் கைவிட வேண்டும் என்றார். மார்க்சின் கருத்துக்களில் ஏற்பட்ட மாற்றங்களின் பால் அவர் கவனம் ஈர்த்தார். மார்க்சின் எழுத்துக்களை மிக்க கவனத்துடன் வாசித்தால் அவரது முக்கிய நூல்களில் ஒன்றான ‘ஜெர்மன் கருத்தியல்’ (The German Ideology, 1985) எனும் நூல் அவரது சிந்தனைப் போக்கில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்திய புள்ளி என்பதை உணர முடியும் என அவர் குறிப்பிட்டார். “அறிவுத்தோற்றவியல் முறிவு” (epistemological break) என அவர் இந்தப் புள்ளியை விளக்கினார். அதற்குப் பின் மார்க்சின் சிந்தனைப் போக்கில் ஏற்படும் மாற்றத்தைப் புரிந்து கொள்ள ‘நுணுக்க வாசிப்பு’ (symptomatic reading) ஒன்றையும் அவர் முன்வைத்தார். இந்தச் சிந்தனையின்படி “அந்நியமாதல்” எனும் மார்க்சியக் கருத்தாக்கம் இந்த அறிவுத்தோற்றவியல் உடைவுக்கு முன்பட்ட ஒன்று. 1845 க்குப் பிந்திய, சிந்தனை முதிர்ச்சி மிக்க மார்க்சிடம் ‘அந்நியமாதல்’ கோட்பாட்டை முதன்மைப்படுத்திய இளம் மார்க்சின் அடையாளங்கள் இல்லை என்பது அல்துஸ்ஸரின் கருத்து.

எந்த ஒரு சிந்தனைப்போக்கிலும், செயல்பாட்டிலும் அவ்வக் காலகட்டத்தின் வரலாறு ஒரு முக்கிய போக்கு வகிக்கிறது என்பது மார்க்சிய வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் ஒரு முக்கிய பங்களிப்பு என்பதை நாம் அறிவோம். அது மார்க்சின் சிந்தனை வெளிப்பாட்டிற்கும் பொருந்தும் என்பது அல்துஸ்ஸரின் கருத்து.

1818 ல் பிறந்தவர் மார்க்ஸ்.1845 க்கு முற்பட்ட இளம் மார்க்சின் காலத்தில் ஜெர்மானிய அறிவுச் சூழலில் மிகப் பெரிய செல்வாக்குடன் விளங்கிய சிந்தனையாளர்களாக இருந்தவர்கள் ஹெகலும் ஃபாயர்பாக்கும் என்பதைப் பார்த்தோம். ஒரு கோட்பாட்டை (thesis) இன்னொரு எதிர்க் கோட்பாடு (anti-thesis) மறுக்கிறது. இந்த இரண்டும் ஒன்றை ஒன்று மறுப்பதென்பது இரண்டும் ஒன்றையொன்று அழித்துக் கொள்வதல்ல. மாறாக இந்த இரண்டிலிருந்தும் இரண்டுமல்லாத ஒரு மூன்றாவது கிளர்ந்தெழுகிறது (synthesis). இப்படித்தான் மனித சிந்தனையின் வளர்ச்சிப்போக்கை விளக்குகிறது ஹெகலின் இயங்கியல் கோட்பாடு. ஒரு சுருள் கம்பியைப்போல (spiral) இந்த வளர்ச்சி அமைகிறது. “முழுமையான உண்மையை” (absolute truth) நோக்கிய மேல் நோக்கிய வளர்ச்சி இது. இந்த முழுமையான உண்மைதான் ‘கடவுள்’ என்பது ஹெகல் முன்வைக்கும் கருத்து. மதம் மற்றும் மானுட சுதந்திரம் என்கிற எல்லைக்குள் நின்றது ஹெகலின் சிந்தனை.

“கடவுளுக்கான என்றென்றைக்குமான வாழ்வு” என்பது தன்னைக் கண்டடைவதே. கடவுளோடு தன்னை அடையாளம் காண்பதே. இந்த மேல்நோக்கிய நகர்வில் ஒவ்வொரு கட்டத்திலும் தன்னிலிருந்து தானே ‘அந்நியமாதல்’ நிகழ்கிறது; இவ்வாறு அந்நியப்படுதல் மூலம் புதிதானதும் மேலானதுமான இன்னொரு அடையாளத்தை நோக்கி இந்த இயக்கம் நிகழ்கிறது. இத்தகைய இயக்கமே அதன் சுதந்திரமும், விடுதலையும் (freedom) கூட..” என்பார் ஹெகல்.

இதைத்தான் கருத்துமுதல் இயங்கியல் என்கிறோம். மதம், வரலாற்றுச் சூழலிலிருந்து அகற்றப்பட்ட மனிதம் (humanism), கருத்தின் மேல் நோக்கிய வளர்ச்சி, அதனூடாக நிகழும் அந்நியமாதல் ஆகியனவே ஹெகலியத்தின் அடிப்படைக் கூறுகள். சமூகம், சமூக அமைப்பு, வரலாறு ஆகியவற்றிற்கு இதில் பங்கில்லை என்பதுதான் இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய ஒன்று. ஹெகலின் இந்த இயங்கியலை மார்க்ஸ் வரலாற்றுக்குப் பொருத்தினார். ‘உடமைகள்’ என்கிற கருத்தாக்கம் இல்லாத புராதனச் சமூகம், தனி உடமைகள் தோன்றிய வர்க்க சமூகங்களான அடிமைச்சமூகம், நில உடைமைச் சமூகம், முதலாளியச் சமூகம் இறுதியில் பொது உடமைச் சமூகம் என்பதான ஒரு மேல் நோக்கிய வரலாற்று இயங்கியலை அவர் முன்வைத்தார். ஹெகலியச் சிந்தனைப் போக்கில் ‘மனிதம்’ என்கிற இடத்தில்  மார்க்ஸ் “மனித சமூக அமைப்பு” (social structure) என்பதை வைத்தார். இப்படி “அமைப்பு” என்பதற்கு மார்க்ஸ் அளித்த முக்கியத்துவத்தின் மீது அல்துஸ்ஸர் நம் கவனத்தை ஈர்த்தார்.marx

அன்று ஹெகலியச் சிந்தனை மீது இளைஞர்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டிருந்தனர். கடவுள், மதம், கருத்து என்கிற அடிப்படைகளில் சிந்தித்த ஹெகலின் சிந்தனை முறையைப் பின்பற்றிய “இளம் ஹெகலியர்கள்” கூட்டத்தில் இவற்றை எல்லாம் ஏற்காத ஃபாயர்பாக்கும்கூட  ஒருவராக அடையாளம் காணப்படும் அளவிற்கு அன்று ஹெகலியச் செல்வாக்கு மிகுந்திருந்தது. மார்க்சைக் காட்டிலும் 14 வயது மூத்தவரான ஃபாயர்பாக் ஹெகலிய அந்நியமாதல் கோட்பாட்டைத் தன் கடவுள் மறுப்புச் சிந்தனைக்குப் பயன் படுத்தினார். அந்த வகையில் இந்த இளம் சிந்தனையாளர்கள் ஹெகலை ஏற்றுக் கொண்டு அவரைத் தலைகீழாக்க முயன்றனர். கடவுள் என்று ஒன்று கிடையாது. அது மனித சிந்தனையின் ஒரு கண்டுபிடிப்பு மட்டுமே. மனிதரின் இந்தக் கண்டுபிடிப்பு இன்று மனிதரையே ஆள்வதாக ஆகிவிட்டது. மனிதர் தன்னிடமிருந்தே அந்நியமாக இது வழி வகுத்தது என்றார் ஃபாயர்பாக். மனிதன் இந்த அந்நியமாதலிலிருந்து தன்னை மீட்டெடுக்க வேண்டுமானால் மத மதிப்பீடுகளிலிருந்து அவன் தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவன் தன்னை ஒரு இயற்கையான உயிரியாகக் கருதுவான், தன்னிலிருந்தே தான் அந்நியமான நிலையிலிருந்து விடுதலை அடைவான் என்றார் பாயர்பாக்.

ஆக அன்றைய ஜெர்மானியச் சிந்தனை அந்நியமாதல் என்பதைச் சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது தெளிவு. கார்ல் மார்க்சும் இதற்கு விதிவிலக்காக இல்லை என்பது அல்துஸ்ஸரின் கருத்து. “1844 பொருளாதார மற்றும் தத்துவக் கையெழுத்துப் படிகள்” (1844 Economic and Philosophical Manuscripts) எனும் மார்க்சின் புகழ் பெற்ற நூலில்தான் அவர் தனது அந்நியமாதல் எனும் கோட்பாட்டை முன் வைக்கிறார் என்பது கவனத்துக்குரியது. “…. மதத்தில் அதுதான் நடக்கிறது. எந்த அளவிற்கு மனிதன் (மேன்மையான எல்லாவற்றையும்) கடவுளுக்குரியதாகக் கொண்டு வைக்கிறானோ அவ்வளவுக்கு அவன் தன்னிடம் ஒன்றுமில்லாதவனாகிறான்..” என மார்க்ஸ் சொல்வது இந்தப் பொருளில்தான்.

ஆனால் மார்க்ஸ் ஹெகலுடனோ இல்லை ஃபாயர்பாக்குடனோ நின்று விடுபவரல்ல என்பதை நாம் அறிவோம். மார்க்சின் மிக முக்கியமானதும் சுருக்கமானதுமான படைப்பாகிய ‘Theses on Feuerbach’ ல் (1845) ஃபாயர்பாக்கின் இந்தச் சிந்தனையை வெறும் ‘கருத்து அடிப்படையிலான பொருள்முதலியம்’ (contemplative materialism) என அவர் ஒதுக்குவது குறிப்பிடத் தக்கது. தனது இயங்கியல் பொருள் முதலியச் சிந்தனைக்கு அது பொருந்தி வரவில்லை என்கிற அடிப்படையில் அவர் இப்படி ஃபாயர்பாக்கை ஒதுக்க வேண்டி இருந்தது. ஃபாயர்பாக் குறித்த 11 வது கோட்பாட்டில், “தத்துவவாதிகள் இதுவரை உலகை விளக்கிக் கொண்டிருந்தனர். இனி தத்துவத்தின் வேலை உலகை மாற்றுவதுதான்” எனக் கூறியதன் ஊடாக மார்க்ஸ் தன்னை ஃபாயர்பாக், ஹெகல் ஆகிய இருவரிடமிருந்தும் துண்டித்துக் கொள்வது நிகழ்கிறது.imagenes_althusser_825a5e92

இது நிகழ்ந்தது 1845 ல். அப்போதுதான் மார்க்சின் இன்னொரு முக்கிய நூலான ‘ஜெர்மன் கருத்தியல்’ (German Ideology) உருவாகியது. ஜெர்மானியத் தத்துவங்களை விமர்சித்து எழுதப்பட்ட இந்த நூலை மார்க்ஸ் உயிருடன் இருந்தவரை வெளியிட ஆர்வம் காட்டவில்லை. அது குறித்துக் கேட்டபோது, “அதை நான் என் புரிதலுக்காக எழுதினேன். (எனவே அச்சிடுவதற்குப் பதிலாக) எலிகளின் விமர்சனத்திற்கு விட்டுவிட்டேன்” எனக் கூறியது கவனிக்கத்தக்கது.

ஆக 1845 என்பது மார்க்சின் சிந்தனை முதிர்ச்சி பெறுவதில் ஒரு முக்கிய பங்கு வகித்தது. அதற்கு முன் ஜெர்மானியக் கருத்துமுதல் சிந்தனையின் தாக்கமே அவரிடம் கூடுதலாக இருந்தது. அதற்குப் பிந்திய “முதிர்ச்சி அடைந்த” மார்க்ஸ் அந்நியமாதல் என்கிற கருத்து முதல் தன்மையுடன் கூடிய கோட்பாட்டைக் கைவிட்டார் என்பது அல்துஸ்ஸரின் கருத்து. மனிதரைப் பிற உயிரிகளிடமிருந்து பிரித்து பிரக்ஞை பூர்வமாகச் செயலாற்றும் தனித்துவமான ‘இன உயிரியாக’ப் (species being) பார்ப்பது என்கிற இறுக்கமான பொருள்முதல் சிந்தனையுடன் கூடிய பிற்கால மார்க்சின் சிந்தனைகளின் அடிப்படையிலேயே மார்க்சின் ஒட்டுமொத்தச் சிந்தனைகளையும் நாம் வாசிக்க வேண்டும் எனவும் அவர் கூறினார். ‘மூலதனத்தை வாசித்தல்’ (Reading Capital) என்பது அவரது முக்கிய நூல்களில் ஒன்று. ஜெர்மானியக் கருத்துமுதல் சிந்தனையை மார்க்ஸ் கைவிடுகிற இந்தப் புள்ளியைத்தான் அல்துஸ்ஸர் அவரது “அறிவுத்தோற்றவியல் முறிவு” என்கிறார்.

வெறும் மனிதாபிமான (humanist) அடிப்படையிலான சிந்தனையான ‘அந்நியமாதல்’ கோட்பாட்டிற்கு முதிர்ச்சியடைந்த மார்க்சின் எழுத்துக்களில் இடமில்லை என்கிற அல்துஸ்ஸரின் கருத்தை மறுப்பவர்களும் உண்டு. ஜெராஸ், வைல்ட் போன்ற சிந்தனையாளர்கள் மார்க்சின் பிற்காலப் படைப்புகளான ‘க்ரன்ட்ரிஸ்’, ‘புனிதக் குடும்பம்’, மூலதனத்தின் முதற் தொகுதி முதலானவற்றிலும் கூட அந்நியமாதல் கோட்பாட்டின் தாக்கங்கள் உண்டு என்கின்றனர். மனிதத் துயர்,  ஏழ்மை, சுரண்டல் முதலானவற்றை ஆழமாகப் புரிந்துகொள்ள அநியமாதல் கோட்பாடு அவசியம் என அவர்கள் கூறுகின்றனர்.

யாருடைய சிந்தனையிலும் முதிர்ச்சி ஏற்படுவதும், இளமைக்காலக் கருத்துக்கள் சற்று வளர்ந்தும்  மாறியும் வருவதும் தவிர்க்க இயலாத ஒன்று. 1845 க்கு  முன் மார்க்ஸ் ஒரு தத்துவ மாணவர் மட்டுமே. அதற்குப் பின்னும் அவர் தத்துவ விவாதங்களிலிருந்து விலகவில்லை ஆயினும், முதன்மையாக அவர் ஒரு முதலாளியத்திற்கு எதிரான போராளியாகவும், இயக்கவாதியாகவும் இருந்தார். அவரது ஆய்வுகளும் கூட முதலாளியத்தின் இயக்க விதிகளைக் கண்டறிவது என்பதாகவே இருந்தன. அந்த வகையில் அவரிடம் ஒரு சிந்தனை முறிவை அடையாளம் காட்ட முடியும் எனினும் மார்க்ஸ் ‘அந்நியமாதல்’ சிந்தனையை ஏற்றுக் கொண்டபோதும் கூட அது ஹெகல், ஃபாயர்பாக் ஆகிய இருவரிடமிருந்தும் வேறுபட்டும் இருந்தது. ஒரு முதலாளியச் சமூக அமைப்பில் மனிதர்கள் எவ்வாறு அந்நியமாக நேர்கிறது என்பதித்தான் அவரது ‘அந்நியமாதல்’ பேசியது என்பதையும் நாம் மறந்து விட இயலாது.

இனி அல்துஸ்ஸரின் இத்தகைய சிந்தனையின் இன்னொரு முக்கிய பங்களிப்பைக் காண்போம். “மனிதன்” என்பதைக் காட்டிலும் மனித சமூக “அமைப்பு” என்பதற்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் “அமைப்பு” (structure) என்கிற கருத்தாக்கத்திற்கு மார்க்ஸ் அளிக்கும் முக்கியத்துவத்தின்பால் கவனத்தை ஈர்க்கிறது அல்துஸ்ஸரிய மார்க்சியம். அந்த வகையில் அல்துஸ்ஸரின் அணுகல்முறையை “அமைப்பியல் மார்க்சியம்” (Structuram Marxism) எனவும் அவரை ‘மார்க்சிய அமைப்பியல்வாதி’ (Structural Marxist) எனக் கூறுவதும் உண்டு.

மார்க்சிய அமைப்பியல்வாதிகள் தனிமனித விருப்புறுதி, சுதந்திரத் தேர்வு, படைப்புத் திறன் ஆகியவற்றிற்கு முக்கியம் அளிப்பதில்லை. அவ்வக்கால சமூக அமைப்புகளே அனைத்திலும் முக்கியம் என்கின்றனர். இந்த அடிப்படையில் அவர்கள் அமைப்புகள் எவ்வாறு தம்மைத் தக்கவைத்துக் கொள்கின்றன என்கிற ஆய்விற்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர். “அரசு” எனும் அடக்குமுறைக் கருவி குறித்து லெனின் அளித்துள்ள விளக்கத்தை மேலும் ஒரு படி மேலுயர்த்துகிறது அல்துஸ்ஸரியம். ‘அரசு கருவி’ என்பது இங்கே இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. அவை:

1.ஒடுக்குமுறை அரசு கருவி (Repressive State Apparatus) : இராணுவம், காவல் மற்றும் உளவுத் துறைகள் முதலியன இதில் அடங்கும்.

  1. கருத்தியல் அரசு கருவி (Ideological State Apparatus) : கல்வி நிறுவனங்கள், ஊடகங்கள், சமூக மற்றும் பண்பாட்டுக் கருத்தியல்கள் முதலியன.

இத்தகைய கருத்தியல் கருவிகள் ஒரு அமைப்பைத் தக்கவைப்பதில் மிக நுணுக்கமாகச் செயல்படுகின்றன. இது குறித்த முக்கியத்துவத்தை கவனப்படுத்துவது மார்க்சிய அமைப்பியலின் சிறப்புகளில் ஒன்று. கருத்தியல் தொடர்பான முக்கியமான ஆய்வுகளுக்கு இது வித்திடுகிறது.

தவிரவும் பொருளாதார அடித்தளம், மேற்கட்டுமானம் என சமூக அமைப்பை செவ்வியல் மார்க்சியம் இரு கட்டுமானங்களாகப் பிரித்து பொருளாதாரமே அனைத்தையும் தீர்மானிக்கிறது எனப் பார்ப்பது ‘சாதி’ போன்ற பல இதர முக்கியமான சமூக அடித்தளங்களைப் புறக்கணிப்பதற்கு ஏதுவாவதை நாம் அறிவோம். அமைப்பியல் மார்க்சியம் சமூக அமைப்பை மூன்று மட்டங்களில் பிரித்தணுகுகிறது. அவை:

1.பொருளாதாரம் : நமது தேவைகளுக்கான அனைத்து விதமான உற்பத்தி சார்ந்த  செயல்பாடுகளையும் இது குறிக்கிறது.

2.அரசியல் : கட்சிகள் மட்டுமின்றி சமூகத்தில் நிலவும் எல்லாவிதமான அமைப்புகளின் செயல்பாடுகளையும் இது குறிக்கிறது.

3.கருத்தியல்: தம்மையும் உலகையும் மக்கள் எவ்வாறு பார்க்கிறார்கள், மதிப்பிடுகிறார்கள், அணுகுகிறார்கள் என்கிற கருத்தாக்கங்களை இது குறிக்கிறது.

பொருளாதாரமே அனைத்தையும் தீர்மானிக்கிறது எனப் பார்க்காமல் சமூகத்தில் நிலவும் அரசியல், கருத்தியல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தின் பால் கவனம் ஈர்க்கும் வகையில் அந்தக் களங்களில் நடத்தப்பட வேண்டிய போராட்டங்களை மார்க்சிய அமைப்பியல் கவனப்படுத்துவது குறிப்பிடத் தக்கது.

இவ்வாறு (தனி) மனிதர் என்பதைக் காட்டிலும் (சமூக) அமைப்பு என்பதற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமைப்பியல் மார்க்சியம் முதலாளித்துவம் போன்ற ஒரு அமைப்பு வீழ வேண்டுமானால் அந்த அமைப்பு நெருக்கடிக்குள்ளாக வேண்டும் என்பதை ஒரு முக்கிய நிபந்தனை ஆக்குகிறது. அது வரை அந்த அமைப்பு தனக்கு எதிரான சிந்தனைகளை எல்லாம் மேலுக்கு வராமல் தடுக்கும் வல்லமை வாய்ந்ததாக உள்ளதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறது.

எனினும் இப்படி சமூக அமைப்பிற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதன் மூலம் தனி மனித முயற்சிகள், இயக்கங்கள் ஆகியவற்றிற்கான முக்கியத்துவம் இதில் மழுங்க அடிக்கப்படுகின்றது என்பது அமைப்பியல் மார்க்சியத்தின் மீது வைக்கப்படும் முக்கிய விமர்சனம்.

(அடுத்த இதழில் மார்க்சியப் பொருளாதாரம் குறித்து)

 

ஏன் கொன்றனர் கௌரியை?

(தோழர் கே.இராமச்சந்திரன் எழுதிய பத்திக் கட்டுரை ஒன்றைத் தழுவியது)

Bengaluru: Citizens with posters and placards during a protest against the killing of journalist Gauri Lankesh, who was shot dead by motorcycle-borne assailants outside her residence last night, during a protest in Bengaluru on Wednesday. PTI Photo by Shailendra Bhojak (PTI9_6_2017_000034A)
“கௌரி மட்டும் ஆர்.எஸ்.எஸ்சைப் பகைத்துக் கொள்ளாமல் இருந்திருந்தால் இந்நேரம் உயிருடன் இருந்திருப்பாள்” – இது சிக்மகளூர் தொகுதி பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினன் சி.டி.ரவி சொல்லியது. கன்னடத் தொலைக்காட்சிகள் இதை அன்று முழுவதும் திருப்பித் திருப்பி ஒளிபரப்பிக் கொண்டிருந்தன. காவிக் கும்பல் சில நேரங்களில் உண்மையைப் பேசுவதுண்டு. அப்படியான சந்தர்ப்பங்களில் ஒன்று இது. பா.ஜ.க எம்.எல்.ஏ வின் இக்கூற்று கௌரியின் கொலை முழுக்க முழுக்க ஒரு அரசியல் படுகொலை என்பதற்குச் சான்றாக அமைகிறது.

 

யார் இந்த கௌரி லங்கேஷ்? ஏன் அவர் கொல்லப்பட்டார்? இந்தச் சின்ன அறிமுகம் இந்தக் கேள்விகளுக்கு விடை சொல்ல முனைகிறது. எல்லா அரசியல் கொலைகளிலும் அதன் நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொள்வது அவசியம்.

கௌரி லங்கேஷ் கொல்லப்படுவதற்கு முன்பாக  மேற்கொண்ட கள நடவடிக்கைகள் சிலவற்றைப் பார்ப்போம்.

கொல்லப்படும் அன்றும் அதற்கு முதல்நாளும் கௌரியும் அவரது பத்திரிக்கைக் குழுவும் மோடியின் அமைச்சரவை விரிவாக்கத்தில் வட கனரா தொகுதி பா.ஜ.க எம்.பி ஆனந்த் ஹெக்டே புதிய அமைச்சராக்கப்பட்டுள்ளதை எதிர்த்துக் கடுமையாக வேலை செய்து கொண்டிருந்தனர். ஆனந்த் ஹெக்டேயை ஒரு ‘கிரிமினல்’ எனவும் ‘ரவுடிக் கும்பல் தலைவன்’ (gangster) எனவும் வெளிப்படையாகக் கௌரி விமர்சித்தார். இந்த ஹெக்டே ஒருமுறை சிர்சியிலுள்ள ஒரு மருத்துவமனைக்குட்தன் தாயைக் கொண்டு சென்றபோது அங்குள்ள ஒரு மருத்துவரை அறைந்த நிகழ்ச்சியை CCTV பதிவுகளை எல்லாம் எடுத்து அம்பலப் படுத்தியவர் கௌரி. அந்த நபரைக் கைது செய்ய வேண்டும் எனத் தீவிரமாகக் களத்தில் நின்று கௌரி போராடிக் கொண்டிருந்தபோது மோடி அந்த ஆளை மத்திய அமைச்சராக்கி அழகு பார்த்தார். இந்தத் தருணத்தில்தான் அந்தத் தளர்ந்து மெலிந்த உடலில் ஏழு குண்டுகள் பாய்ச்சப்பட்டன.

மைசூர் தொகுதி பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹனின் தகிடுதத்தங்களையும் கௌரியின் பத்திரிக்கை தொடர்ந்து அமபலப்படுத்திக் கொண்டிருந்தது. கர்நாடகத்தில் ஆர்.எஸ்.எஸ் கூடாரங்களாக உள்ள சாமியார் மடங்களின் மூட நம்பிக்கைகள் சார்ந்த நடவடிக்கைகளை அம்பலப்படுத்திக் கொண்டிருந்த பேரா.கல்புர்கி இந்துத்துவவாதிகளால் கொல்லப்பட்டதை அறிவோம். அப்போது சித்தாராமையா அரசு இத்தகைய மடங்களின் பாபாக்களும் சாமியார்களும் மேற்கொள்ளும் மூட நம்பிக்கை சார்ந்த நடவடிக்கைகளுக்குத் தடை கொண்டுவர முயன்றார். இது தொடர்பாகச் சட்டமொன்றை இயற்ற குழு ஒன்றையும் அமைத்தார். இந்தக் குழு பொதுமக்களிடமிருந்து இந்த மாதிரி நடவடிக்கைகளை அடையாளம் காட்டுமாறு வேண்டிக் கொண்டது. அவ்வாறு வந்த கருத்துக்களை அது தணிக்கை செய்யாமல் அப்படியே அரசு இணைய தளத்தில் வெளியிடவும் செய்தது. நம்முடைய தீவிர பகுத்தறிவாள நண்பர்களின் அதி உற்சாகம் சில நேரம் பெரிய அளவில் மக்களிடமிருந்து நம்மை அந்நியப்படுத்துவதற்கு இட்டுச் செல்வதுண்டு. மூட நம்பிக்கைகளுக்கும் சில பண்பாட்டுப் பாரம்பரியங்களுக்குமான மெல்லிய இடைவெளியை மிக லாவகமாகக் கையாள வேண்டியுள்ளதைப் பற்றிக் கவலைப் படாத சில அதி உற்சாகிகள் குங்குமம் இட்டுக் கொள்வது, தாலி அணிந்து கொள்வது எல்லாவற்றையும் தடை செய்ய வேண்டிய மூட நம்பிக்கைகளாகப் பரிந்துரைத்தனர். அவையும் அரசு இணையத் தளத்தில் இடம் பெற்றன.

பாஜக எம்பி பிரதாப் சிம்ஹன் இதை மிகத் தந்திரமாகத் தமக்கு ஆதரவாகத் திருப்பினார். இந்த சிம்ஹன் ஒரு ஆர்.எஸ்.எஸ் தலைவனும் கூட. காங்கிரஸ் அரசாங்கம் குங்குமம் அணியக் கூடாது, தாலி கட்டிக் கொள்ளக் கூடாது என்றெல்லாம் தடை விதிக்கப் போவதாகப் பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்.
Gauri-Lankesh-AI - Copy

இந்தப் பிரச்சினையிலும் கௌரிதான் பிரதாப சிம்ஹனை அம்பலப்படுத்தியது. இப்படியெல்லாம் சொல்வதன் மூலம் ஷிமோகாவில் வழிபாடு என்னும் பெயரில் பெண்களை அம்மணமாக ஊர்வலம் விடும் “பெத்தல சேவே”, உடுப்பி பெஜாவர் மடத்தில் பார்ப்பனர் சப்பிட்ட எச்சில் இலைகளின் மீது அடித்தள சாதி மக்களைப் புரள வைக்கும் “உருளு சேவே” போன்ற மூட நம்பிக்கைகளைத் தக்க வைப்பதுதான் பிரதாபனின் நோக்கம் என்பதை அவர் அம்பலப்படுத்தி அசிங்கப்படுத்தினார்.

லிங்காயத்துகள் தம்மை இந்துக்களில் ஒரு பிரிவாகக் கருதக் கூடாது, இந்து மதத்திலிருந்து வேறுபட்ட தனி மதமாக அறிவிக்க வேண்டும் எனக் கோரி நடைபெறும் போராட்டத்திலும் கௌரி முழுமையாக அவர்களோடு நின்றார். ஆதரவளித்தார். இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் மற்றும் வீரசைவச் சனாதனிகளின் ஆத்திரத்திற்கும் அவர் ஆளானார்.

காவிக் கும்பல் கௌரியைக் குறி வைத்ததற்குப் பின்னணியான சம்பவங்களில் சில இவை.

எல்லாவற்றிற்கும் மேலாக நாம் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். எதோ தனது பத்திரிகையில் எழுதியும் முகநூல் போன்ற ஊடகங்களில் பதிந்தும் விட்டுத் தன் கடமையை நிறைவேற்றியதாக நினைத்து ஓய்பவராகக் கௌரி இருக்கவில்லை. அவர் ஒரு களப்போராளியாக இருந்தார். இலக்குகளைச் சரியாக நிர்ணயித்துத் தாக்கினார். நீண்ட கால அதிருப்தி உணர்வுகள் ‘ஜல்லிக்கட்டு’ போன்ற ஒரு மையப் புள்ளி அகப்படும்போது அதை மையமாகக் கொண்டு சிவில் உரிமைப் போர்கள் வெடிக்கின்றன. கர்நாடகத்தில் அப்படியான மையப் புள்ளியாக (Nodal Point) கௌரியின் செயல்பாடுகள் அமைந்தன.

கௌரியின் அரசியல் வரலாறும் வாழ்வும்

1gauri-lankesh-7592

இந்திய அளவிலான பிரச்சினைகளில் கர்நாடகத்தில் செயல்படும் பல்வேறு முற்போக்கு, தலித். சிறுபான்மை இயக்கங்கள் எல்லாவற்றையும் ஒன்றாக இணைத்துக் களம் இறக்க யாரையாவது அணுக வேண்டும் என்றால் அது கௌரி லங்கேஷாகத்தான் இருந்தார். குஜராத் மாநிலத்தில் உள்ள உனாவில் மாட்டுத் தோல் உரித்த தலித்கள் தாக்கப்பட்ட நிகழ்வை ஒட்டி ஒரு புதிய தலைமுறை தலித் தலைமையாக ஜிக்னேஷ் மேவானி உருப்பெற்றபோது கர்நாடகத்திலிருந்து முதலில் நேசக் கரம் நீட்டியது கௌரிதான். தலித் உள்ளிட்ட அடித்தள மக்களை இழிவு படுத்தும் பெஜாவர் மடச் சாமியாரின் ‘உருளு சேவை’ க்கு எதிரான ‘சலோ உடுப்பி’ போராட்டத்திற்கு மேவானியை அழைத்து, தன் இல்லத்தில் தங்க வைத்து விருந்தோம்பினார். மேவானியைத் தன் மகன் என அன்புடன் கூறிக் கொண்ட கௌரி அதற்குப் பின் கர்நாடக தலித் தலைவர் தேவனூர் மகாதேவாவுடன் நடத்திய அத்தனை போராட்டங்களுக்கும் அவரை அழைத்தார்.

ரோஹித் வெமுலாவின் மரணத்தை ஒட்டி இந்தியாவே கொந்தளித்தபோது பெங்களூரில் கண்டனப் போராட்டத்தை ஒருங்கிணைத்தவர் கௌரிதான். பெரிய அளவில் தலித் அல்லாதவர்களை அவர் அந்தப் போராட்டத்தில் இறக்கியது குறிப்பிடத் தக்கது.

டெல்லி JNU மாணவர்கள் மீது மோடி அரசு தேசத் துரோக வழக்குகளைப் போட்டுத் துன்புறுத்தியபோது பெங்களூரு செய்ன்ட் ஜோசப் கல்லூரி மாணவர்களை அணுகி ஒரு மிகப்பெரிய ஆதரவுப் போராட்டத்தை உருவாக்கியதும் கௌரிதான். JNU விலிருந்து இளம் மாணவப் போராளி ஷீலா ரஷீதை அதற்கு அவர் வரவழைத்திருந்தார். மேவானியைத் தன் மகனாகக் கொண்டாடிய கௌரி ஷீலாவைத் தன் மகள் எனக் கூறிக் கொண்டார். கன்னையா குமாரை வரவழைத்து கர்நாடக மக்கள் மத்தியில் நிறுத்திய கௌரி அவரைத் தன் இளைய மகன் என்றார். இனி கன்னையா, ஷீலா, மேவானி இவர்கள்தான் நம் எதிர்காலம் என்று அடையாளம் காட்டினார். சாதி, இனம், மதம் எல்லாவற்றிற்கும் அப்பால் போராடும் இளைய தலைமுறைகளைத் தன் பிள்ளைகளாக அடையாளம் காணும் தாய் மனமுடையவராக கௌரி வாழ்ந்து மடிந்தார்.

இப்படியான பன்மைத்துவ, ஜனநாயக மனப்பாங்கையும் அரசியலையும் கொண்டவராக அவர் உருப்பெற்றதன் பின்புலம் என்ன?

கர்நாடக மாநிலத்தில் லோகியாவின் சாதி சமத்துவச் சோஷலிசக் கொள்கைகளைப் பரப்பிய முக்கிய சமூகச் சிந்தனையாளரான பி.லங்கேஷ் அவர்களின் மகள்தான் கௌரி. இந்திய மாஓயிஸ்ட் போராளிகளில் முதன்மையானவரும், தலைமறைவாக இருந்து என்கவுன்டரில் கொல்லப்படவருமான தோழர் சாகேத் ராஜனின் சம காலத்தவரான கௌரி அவரது கருத்துக்களாலும் ஆளுமையாலும் ஈர்க்கப்பட்டிருந்தார். சாகேத் பயின்ற டெல்லி Institute of Mass Communication ல்தான் கவுரியும் அவருக்குப் பின் பயின்றார். லோகியவாத அரசியல் பின்புலத்தில் உருவானவரான கௌரி ஆயுதப் போராட்டப் பாதையை ஏற்கவில்லை ஆயினும் சாகேத்தில் அரசியல் ஆளுமையிலும் அர்ப்பணிப்பிலும் அவர் ஈர்க்கப்பட்டிருந்தார்.

சாகேத் ராஜன் ஒரு போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டதற்கு எதிராக ஒரு போராட்டத்தை கௌரி முன்னின்று எடுதபோது அவரது தந்தை உயிருடன் இல்லை. அவரது தந்தை நடத்திவந்த “லங்கேஷ் பத்ரிகே” யை நிர்வகித்து வந்த கௌரியின் சகோதரர் அவரது அரசியலை ஆதரிக்கத் தயாராக இல்லை. அந்நிலையில் கௌரி தொடங்கியதுதான் “கௌரி லங்கேஷ் பத்ரிகே”. தந்தையின் அரசியல் பாதையைச் சரியாகத் தொடர்ந்தவர் என்கிற வகையில் லங்கேஷின் ஆதரவாளர்கள் அனைவரும் கௌரியுடனேயே நின்றனர். பி.லங்கேஷின் தொடர்ச்சியாக கௌரி உருவான வரலாறு இதுதான்.
ஆந்திர மாஓயிஸ்டுகளின் ஆயுதப் போராட்டப் பாதை கர்நாடகத்திற்குப் பொருந்தாது, இங்கொரு நீண்ட கால மக்கள் போராட்டம் தேவையாக உள்ளது என்கிற கௌரியின் கருத்தை சாகேத்தின் தோழர்கள் பலரும் ஏற்றனர்.

ஆனால் அப்போதைய கர்நாடக அரசு அவர்களை என்கவுன்டர்களில் வேட்டையாடும் வெறியில் இருந்தது. கௌரி சீதாராமையாவை அணுகிப் பேசி ஒரு சமாதானக் குழுவை (peace committee) அமைத்தார். குறி வைக்கப்பட்டிருந்த சுமார் பன்னிரண்டு மாஓயிஸ்டுகள் மையநீரோட்ட அரசியலுக்கு வர அது வழி வகுத்தது.
3gauri-lankesh-shot-dead_650x400_81504625969

இதே காலகட்டத்தில்தான் குஜராத்திற்குப் பின் கர்நாடகாவை “இரண்டாவது இந்துத்துவச் சோதனைச் சாலையாக” அறிவித்து சங்கப் பரிவாரங்கள் களம் இறங்கின. சிக்மகளூரில் உள்ள பாபா புதன்கிரி என்கிற முஸ்லிம்களின் தலம் ஒன்றைக் கைப்பற்றும் முயற்சியைத் தொடங்கினர். இந்துக்கள் முஸ்லிம்களுடன் இணைந்து வழிபட்டுவந்த தலம் அது. சமூக அமைதியைக் குலைக்கும் இந்த முயற்சிக்கு எதிராக ஒத்த கருத்துக்கள் உள்ளவர்களை இணைத்தார் கௌரி. “கோமு சௌஹார்த்த வேதிகே” (சமூக ஒற்றுமை அமைப்பு) எனும் இயக்கம் உருவாகியது. பாபா புதன்கிரியைக் கைப்பற்றும் பா.ஜ.க முயற்சிக்கு எதிராக 10,000 பேர் திரண்ட ஒரு மிகப் பெரிய பேரணியை அது நடத்தியது. 2008 ல் மங்களூரில் கிறிஸ்தவர்கள் தாக்கப்படபோதும் அதற்கு எதிரான செயல்பாடுகளில் கோமு சௌஹார்த்த வேதிகே முன்னணியில் நின்றது. சமூக ஒற்றுமையைக் குலைக்கும் சங்கப் பரிவாரங்களுக்கு எதிரான ஒரு வானவில் கூட்டணியாக அது அமைந்தது. மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் பலரும் அதில் ஒன்றிணைந்தனர்.

கௌரி: மேவானி, கன்னையா, ஷெய்லா எல்லோரையும் பிள்ளைகளாக ஏற்றுக் கொண்ட ஒரு ‘அம்மா’

தற்போது கர்நாடக முதலமைச்சராக உள்ள சித்தாராமையா போன்ற தளைவர்களுடன் அவர் தனிப்பட்ட முறையில் அரசியல் உறவைப் பேணி வந்தார். சட்ட விரோதமாகக் கனிவளக் கொள்ளையில் ஈடுபட்டுவந்த ரெட்டி சகோதரர்களுக்கு எதிராக “பெங்களூரு முதல் பெல்லாரிவரை” ஒரு நடைப்பயணத்தை சித்தாராமையா மேற்கொண்டபோது கௌரி அதில் கலந்து கொண்டார். இந்த மாஃபியாக்களை எதிர்த்துத் தன் பத்திரிகையில் கடுமையாக எழுதவும் செய்தார். காங்கிரசுக்கு கௌரி ஆதரவாக உள்ளார் எனவும் லோகியாவாதிகள் இப்படிச் செய்யக் கூடியவர்கள்தான் எனவும் கௌரி மீது இந்த அடிப்படையில் விமர்சனங்களும் வந்தன.

ஆர்.எஸ்.எஸ்சும் பா.ஜ.கவும் தான் தனக்கு முதல் எதிரி எனச் சொன்ன கௌரி, அதே நேரத்தில் தற்போது சித்தாராமையாவின் அமைச்சரவையில் உள்ள எச்.டி.சிவகுமார் எனும் காங்கிரஸ்காரரை அவரது கிரானைட் மாஃபியா தொடர்புக்காகத் தன் பத்திரிகையில் மிகக் கடுமையாக விமர்சித்து எழுதவும் செய்தார். இன்னொரு காங்கிரஸ் அமைச்சரான கே.எல். ஜார்ஜின் ரியல் எஸ்டேட் மாஃபியா தொடர்பையும் கௌரி அம்பலப்படுத்தினார். முஸ்லிம் ஓட்டு வங்கியை ஈர்க்கும் நோக்கில் சித்தாராமையா திப்பு ஜயந்தியைக் கொண்டாடியபோது அதையும் விமர்சித்தார். இப்படியான ஜெயந்திகளைக் கொண்டாடுவதெல்லாம் ஒரு மதச்சார்பற்ற அரசின் வேலையல்ல என்று கடுமையாகச் சாடினார்.

புரொமோத் முத்தாலிக்கின் ‘சிரீ ராம சேனா” அமைப்பு மங்களூர் ‘பார்’களில் புகுந்து பெண்களைத் தாக்கியபோது அதைக் கடுமையாகக் கண்டித்தார். மங்களூருக்கு வந்த அவர் அவர் புரமோத் மாலிக்கின் குண்டர் படையை மிகத் துணிச்சலுடன் எதிர் கொண்டார். அந்தக் குமபலை நோக்கிய அவரது கடுமையான எச்சரிக்கை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

மகாராஷ்டிர சித்பவன் பார்ப்பனர்கள் கோட்சே, சாவர்க்கரின் காலத்திலிருந்தே ஆயுதபாணி ஆனவர்கள். கர்நாடக சநாதனப் பார்ப்பனர்கள் கடந்த கால் நூற்றாண்டில் மிகத் தீவிரமான காவி வெறியர்களாகவும் வன்முறையாளர்களாகவும் தம்மை வெளிப்படுத்திக் கொண்டவர்கள். ‘பட்கல் கலவரம்’ (1993) கர்நாடகத்தில் காவித் தீவிரவாதம் வேர்கொள்ளத் தொடங்கியதற்கு ஒரு சாட்சியமாக அமைந்தது. தார்வாட் அருகில் இருந்தும் காவித் தீவிரவாதிகள் செயல்பட்டனர். சநாதன இந்துமதத்தின் பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்த ஒரு ஆய்வாளர் என்பதற்காகவே நேற்று கல்புர்கி கொல்லப்பட்டார். கர்நாடக மாநிலத்தின் மிக வலிமையான பாசிச எதிர்ப்பு அடையாளமாகவும் சிவில் சமூக அமைப்பை ஒருங்கிணைத்தவராகவும் இருந்ததால் இன்று கௌரி கொல்லப்பட்டுள்ளார்.

துரதிர்ஷ்டவசமாக கௌரிக்கும் அமைப்பாக்கப்பட்ட கம்யூனிஸ்டுகளுக்கும் (சி.பி.ஐ / சி.பி.எம்) இடையில் ஒரு இடைவெளி தொடர்ந்து இருந்து வந்தது. கம்யூனிஸ்டுகளைப் பொருத்த மட்டில் அவர்கள் கர்நாடகத்தில் சிறு தொழில்களில் ஈடுபட்டுள்ள ஒரு தொழிலாளர்களின் அமைப்பு என்கிற அளவிற்குச் சுருங்கி உள்ளனர். கௌரியின் ‘கோமு சௌகர்தா வேதிகே’யை அவர்கள் ஐயத்துடனேயே அணுகினர். கம்யூனிஸ்டுகளிடம் கௌரி நெருக்கம் கொள்ளாததற்கு அவரது லோகியாவாதப் பின்புலமும், சாகேத் ராஜன் முதலான மாஓயிஸ்டுகளின் தொடர்பும் தான் காரணம் என கம்யூனிஸ்டுகள் அவரை விமர்சித்தனர். இரண்டில் எது உண்மையோ கன்னையா குமாரையும் ஷகீலா ரஷீத்தையும் அணைத்துக் கொண்ட வகையில் தான் ஒன்றும் அமைப்பாகிய கம்யூனிஸ்டுகளை வெறுப்பவர் அல்ல என்பதை கௌரி நிறுவினார். மிகவும் நெருக்கடியான காலகட்டம் இது. இப்படியான விடயங்களில் மிகவும் விட்டுக் கொடுத்தல்களுடன் பாசிச எதிர்ப்பாளர்கள் இணைந்து இயங்க வேண்டும் என்பதைத் தவிர இது குறித்துச் சொல்வதற்கு ஏதுமில்லை.

ஒரு குறிப்பிட்ட பா.ஜ.க எம்.பி மற்றும் இன்னொரு பா.ஜ.க தலைவர் ஆகியோரின் ஊழல்கள் பற்றி அவர் எழுதியபோது (2008), அவற்றின் அடிப்படையில் போடப்பட்ட இரு அவதூறு வழக்குகளில் பா.ஜ.கவினர் கௌரிக்கு ஆறு மாத சிறைத் தண்டனை பெற்றுத் தருவதில் வெற்றி அடைந்தனர். கௌரிக்கு நிபந்தனையுடன் கூடிய பிணை விடுதலை அளிக்கப்பட்டது. தார்வாடை விட்டு அகலக் கூடாது என்பது நிபந்தனை. நிபந்தனையின்படி அங்கு இருக்க நேர்ந்த அந்த இரண்டு மாத காலத்தையும் கௌரி, தார்வாடை மையமாகக் கொண்ட வட கர்நாடக முற்போக்காளர்களுக்கும் பெங்களூரு மற்றும் மைசூரை மையமாகக் கொண்ட பழைய மைசூர் மாநில முற்போக்காளர்களுக்கும் இடையில் இருந்த இடைவெளியைக் குறைப்பதற்குப் பயன்படுத்துக் கொண்டார். இரு சாரருக்கும் இடையில் ஒரு பாலமாக நின்று அவர் செயல்பட்டார். கல்புர்கி கொலைக்கு நீதி பெறுவது என்கிற போராட்டத்தில் அவர்களை வெற்றிகரமாக இணைத்தார். கொல்லப்படுவதற்குச் சில நாட்கள் முன்பு கூட (ஆகஸ்ட் 30) கல்புர்கியைக் கொன்ற கொலையாளிகளைக் கைது செய்ய அழுத்தம் கொடுக்கும் முகமாக அறைக்கூட்டம் ஒன்றை நடத்தினார்.
டெல்லியில் உள்ள அரசியல் செயல்பாட்டாளர்கள், சிவில் அமைப்பினர் ஆகியோருடன் நெருக்கமாக இருந்ததால் அகில இந்திய அளவிலான சிவில் உரிமைச் செயல்பாடுகளில் சொந்தச் செலவில் கௌரி தொடர்ந்து பங்குபெற்று வந்தார்.

அவரது மனிதாபிமானம் இனம் மொழி இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது. காவிரிப் பிரச்சினையின் பின்னணியில் வன்முறைகள் வெடித்து குடிசைப் பகுதிகளில் வாழ்ந்த தமிழ்த் தொழிலாளிகள் இடம் பெயர்க்கப்பட்ட போது அவர்களுக்கு உணவு, உடை முதலிய உதவிகளை அளிப்பதிலும் அவர் முன் நின்றார். வகுப்புக் கலவரங்களின்போதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள்செய்ய அவர் தவறியதில்லை. சாதி மற்றும் மதங்களுக்கு  இடையேயான கலப்பு மணங்கள் பலவற்றை அவர் நடத்தி வைத்துள்ளார்.
சொந்த வாழ்விலும் அவருக்குப் பல பிரச்சினைகள் இருந்தன. அவரது திருமணம் முறிந்தது. அதற்குப் பின் அவருக்குச் சில பத்திரிகையாள நண்பர்களுடன் தொடர்பிருந்தது எனச் சொல்வதுண்டு. எனினும் அவர் தனியாகவே வாழ்ந்து வந்தார். மரபுகளை மீறிய அவரது வாழ்க்கை முறை பற்றி பலவிதமான கருத்துக்கள் உண்டு. தொடர்ந்து புகை பிடிக்கும் பழக்கம் உடையவர் அவர். குடிப்பதும் உண்டு. இனொரு பக்கம் யோகா, ஆழ் மனக் குவிப்பு (meditation) முதலானவற்றிலும் அவருக்கு ஈடுபாடு இருந்துள்ளது.
வயதான காலத்தில் ஏற்படும் காதல் குறித்து கௌரியும் அவரது சகோதரியும் ஒரு திரைப்படமும் கூட எடுத்துள்ளனர்.

இரண்டுநாள் முன்னர் கூட அவர் தன்னுடனும் இன்னொரு தலித் கிறிஸ்தவ இயக்கத் தோழருடனும் இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும், தலித்கள், இடதுசாரிகள், சிறுபான்மையினர் ஆகியோர் பாசிசத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டியதன் அவசியம் குறித்து கிட்டத்தட்ட ஒருமணி நேரம் மிகத் தீவிரமாக அவர் பேசிக் கொண்டிருந்ததாகவும் ஒரு பாதிரியார் நினைவு கூர்கிறார்.

கௌரிக்குச் சிறிது பணக் கஷ்டமும் இருந்துள்ளது. தனது கடைசி ஆயுள் இன்சூரன்ஸ் பாலிசியையும் காசாக்கி ஒரு இலட்ச ரூபாய் பணத்தைத் திரட்டி வைத்திருப்பதாகவும், அதனைத் தன் ‘மகன்’ கன்னையாவுக்குக் கொடுத்து அவனை இந்தியா முழுவதும் சுற்றி பாசிசத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்து இளைஞர்களை அணி திரட்டச் சொல்ல வேண்டும் எனவும் சமீபத்தில் ஒரு நெருங்கிய நண்பரிடம் கூறியுள்ளார்.

கௌரி லங்கேஷ் என்கிற புரட்சிகர “அம்மா” குறித்த ஒரு சித்திரத்தை உங்களுக்கு இந்தக் கட்டுரை அளித்திருக்கும் என நம்புகிறேன்.
அஞ்சலிகள் தோழி, புரட்சிகர அஞ்சலிகள் !

 

ரோஹிங்யா முஸ்லிம்கள்

(“தம்மத்தின் பெயரால்” எனும் தலைப்பில் செப் 6, 2015 ல் ‘புதிய விடியல்’ எனும் இதழில் எழுதிய கட்டுரை)

சுமார் 6 கோடி மொத்த மக்கள்தொகை உள்ள மியான்மரில் (முன்னாள் பர்மா) வெறும் 4 சதவீத அளவே ரோஹிங்யா முஸ்லிம்களை ஒழித்துக்கட்ட பர்மியப் பேரினவாதம் பவுத்தத்தை எவ்வாறெல்லாம் திரிக்கிறது எனப் பார்த்தால் அதிர்ச்சியில் உறைந்து போவதைத் தவிர வேறு வழியில்லை. புத்தன் இருந்தால், பாவம் அந்தப் போதி மரத்தில் நாண்டு கொண்டு செத்துப்போயிருப்பான்.

பவுத்தத்தில் வன்முறைக்கும் போருக்கும் இடமில்லை. அது சீலங்களின் மதம். தனது பாதையை ‘மஜ்ஜிம் பதிபாதம்’ (நடுநிலைப் பாதை) என அறிவித்தவர் அந்த போதி மாதவர்.

அவர் துறவு பூண்டது குறித்த அந்த “நான்கு தரிசனங்கள்” எனும் பவுத்த நம்பிக்கையை விரிந்த ஆய்வுகளின் அடிப்படையில் கட்டவிழ்க்கும் அண்ணல் அம்பேத்கர் உலகின் அந்த ஆகப் புகழ் பெற்ற துறவிற்குப் பின்புலமாக இருந்த சம்பவத்தை இப்படி உரைப்பார்:

ரோகிணி ஆற்று நீரைப் பகிர்ந்து கொள்வதில் கோலியர் மற்றும் சாக்கிய இனக் குழுக்களிடையே நீண்ட நாள் பகை. அப்போதைக்குப்போது பிரச்சனை மேலுக்கு வரும். புத்தருடைய காலத்திலும் பிரச்சனை கடுமையாக வெளிப்பட்டது. இரு தரப்பிலும் உணர்ச்சிப் பெரு வெள்ளம்.

முடுவெடுப்பதற்காக சாக்கிய இனக்குழுப் பேரவை கூடியது. கோலியர்கள் மீது படை எடுக்க வேண்டுமென எல்லோரும் உணர்ச்சிப் பெருக்குடன் உரையாற்றினர். புத்தர் போர் வேண்டாம். பேசித் தீர்ப்பதே சரியான வழி என எவ்வளவோ மன்றாடிப் பார்த்தார். கேட்பார் இல்லை. வாக்கெடுப்பில் போர் தொடுப்பது என முடிவாயிற்று.

இனக்குழு மரபுப் படி பேரவை முடிவை ஏற்காதவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும். மரண தண்டனையிலிருந்து தப்புவதற்கு ஒரு வழி உண்டு. அனைத்து இனக்குழு உரிமைகளையும் சுற்றத்தையும் துறந்து வெளியேறுவதே அது. புத்தர் துறவு மேற்கொண்ட வரலாறு இதுவே. அத்த கண்ட சுத்தத்தில் புத்தர் உரைப்பார்:

  1. ஆயுதம் தாங்குவது பயங்கரவாதமாகத் தோன்றியது. இந்த மக்கள் எப்படிச் சண்டை இடுகிறார்கள் பாருங்கள்.
  2. குறைவான நீரில் மீன்கள் துடிப்பது போல ஒருவரை ஒருவர் பகைத்துத் துடிக்கும் மக்களைக் கண்டு என் உள்ளத்தில் அச்சம் விளைந்தது.
  3. நான்கு பக்கங்களிலும் உலகம் சாரமற்றதாகியது. திக்குகள் நடுங்கின. புகலுக்குரிய இடமே தென்படவில்லை. மக்கள் கடைசி வரை பகை கொண்டு திரிவதைக் கண்டேன். எனக்கு வைராக்கியம் உண்டாயிற்று.”

இலங்கையிலும், மியான்மரிலும் புத்த பிக்குகள் அத்த கண்ட சுத்தத்தை புத்த வாக்குகளின் தொகுப்புகளிலிருந்து அழித்து விட்டார்களா? இல்லை ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு இரண்டு குழந்தைகள் மேல் பெறக்கூடாது. அதுவும் 36 மாத இடைவெளிக்குப் பின்னேதான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் தடை விதிக்கப்பட்டுள்ளதே அப்படி அத்தகண்ட சுத்தத்தை யாரும் உச்சரிக்கக்கூடாது என மியான்மரிலும் இலங்கையிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதா?

  1. ரோஹிங்யா முஸ்லிம்கள் மியான்மரின மேற்குப் பகுதியில், வங்க தேசத்தை ஒட்டியுள்ள ரகைன் மாநிலத்தில் வசிக்கின்றனர். அந்த மாநிலத்தில் அவர்கள் 60 சதம். ஆனால், இப்போது இந்தத் தொடர் தாக்குதல்களுக்குப் பின் அது 30 சதமாகக் குறைந்துள்ளது.

பெரும்பாலும் ஏழ்மை நிலையில் உள்ள இவர்கள் பர்மியப் பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்துபவர்களாக இனவாதிகளால் குற்றம் சாட்டப்படுகின்றர். இது ஒரு அப்பட்டமான பொய். கட்டுமானப் தொழிலில் உள்ள மிகச் சில ரோஹிங்கியாக்களைத் தவிர பிற அனைவரும் தொழிலாளிகள், சிறு கடைக்காரர்கள் அவ்வளவுதான்.

“அவர்கள் கடைகளில் பொருட்களை வாங்காதீர்கள். நீங்கள் வாங்கும் பொருட்களால் அவர்கள் லாபம் அடைகிறார்கள். வசதியாகிறார்கள். பர்மியப் பவுத்தப் பெண்களைக் கவர்கிறார்கள். பின் அவர்களை முஸ்லிம் மதத்திற்கு மாற்றுகிறார்கள்.”

“இவர்கள் ஏராளமாகப் பிள்ளை பெறுகிறார்கள். இனத்தைப் பெருக்கிறார்கள். விரிவாக்க நோக்குடன் செயல்படுகிறார்கள்.”

இப்படிச் செல்கிறது இனவாதிகளின் பிரச்சாரம்.

இவை எங்கேயோ கேட்ட குரல்கள் போல இல்லை?

ஆம். கேட்ட குரல்தான். மக்களைப் பிளவுப்படுத்தி, இரத்த ஆறு பெருகச் செய்து அதிகாரச் சுகங்காணும் இயக்கங்கள் உலகின் எல்லாப் பகுதிகளிலும் இதைத்தான் செய்கின்றன. எனவே, இது நாம் பல இடங்களிலும் கேட்ட குரல்தான். இந்தியாவில் நாம் தினந்தோறும் கேட்டுக் கொண்டிருக்கும் குரல்தான்.

மியான்மரில் பிக்கு அஷின் விராத்து என்பவரால் உருவாக்கப்பட்டுடிள்ள “969” எனும் இயக்கம்தான் இந்தக் குரலை உரத்து ஒலிக்கிறது. விராத்து 2003ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 2012ல் இன்றைய தெய்ன் செய்ன் அரசு அளித்த பொது மன்னிப்பின் கீழ் அவர் விடுதலை செய்யப்பட்ட பின் மீண்டும் அங்கு பெரிய அளவில் முஸ்லீம்களின் மீது வன்முறைகள் ஏவப்பட்டன. உள்நாட்டுக்குள்ளும், வெளிநாடுகளுக்கு ஓடியும் இலட்சக்கணக்கான ரோஹிங்கியாக்கள் இன்று அகதிகளாக்கப்பட்டுள்ளனர்

இன்று உள்நாட்டில் உள்ள எந்த அடிப்படை வசதிகளும் அற்ற அகதிகள் முகாம்களில் 1,40,000 ரோஹிங்யாக்கள் உள்ளனர். அங்கு அவர்களுக்குத் குறைந்தபட்ச மருத்துவ வசதிகளும் கூட இல்லை. “எல்லை கடந்த மருத்துவர்கள்” எனும் புகழ் பெற்ற சேவை அமைப்பினரையும் வன்முறையாளர்கள் விரட்டியுள்ளனர். கட,ந்த 25 ஆண்டுகளில் வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்தோர் சுமார் 5,00,000. கடந்த பல ஆண்டுளாக நடைபெற்று வரும் வன்முறைகளில் தாய்லாந்து, மலேசியா, பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா முதலான நாடுகளில் 3,00,000ம் மேற்பட்டோர் அகதிகளாய் அடைக்கலம் புகுந்துள்ளனர்.

அதென்ன “969” இயக்கம்?

அது ஒரு பெரிய நகைச்சுவை. கருப்பு நகைச் சுவை.

முஸ்லிம்கள் தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள “பிஸ்மில்லாஹிர்ரஹ்மா னிர்ரஹீம் (…) எனும் புனித வாக்கியத்தைக் குறிக்கும் “786” எனும் எண்ணை அவர்களது கடைகளின் பெயர்ப்பலகைகளிலும், வீடுகளிலும், வாகனங்களிலும் பொறித்துக் கொள்வது வழக்கம்.

அதற்கு இப்படி விளக்கமளித்தார் விராத்து: 7+8+6= 21. அதாவது, அவர்கள் (முஸ்லிம்கள்) 21ம் நூற்றாண்டில் மியான்மரை முழுமையாக கையகப்படுத்துவது என்பதைக் குறிக்கும் குறியீடாக இதைப் பயன்படுத்துகின்றனர். இதை அனுமதிக்கக்கூடாது.

சின்ன வயதில் நாம் கேட்ட ஆற்றில் நீரருந்த வந்த குட்டி ஆடு, அதைத் தின்ன வந்த ஓநாய் கதை போல இல்லை?

“786க்குப் பதிலாக நாம் 969 என்பதை நம் அடையாளமாக்குவோம்” என்கிறார் விராத்து.

புத்தம், தம்மம், சங்கம் ஆகியவற்றை மும்மணிகள் எனப் போற்றுவது பவுத்த மரபு. விராத்து 969ஐ இப்படி விளக்கினார். 9 என்பது புத்தத்தின் மேன்மைமிகு ஒன்பது பண்புகளைக் குறிக்கிறது. 6 என்பது தம்மத்தின் ஆறு மேன்மைப் பண்புகள், கடைசி 9 சங்கத்தின் மேன்மையுரு பண்புகள்…

எப்படி இருக்கிறது கதை?

பவுத்ததின் மும்மணிகளை இப்படிக் கொலையையும் வன்முறைகளையும் நியாயப்படுத்தி இதை விட யாரும் இழிவு செய்துவிட இயலாது.

969 எனும் எண் இத்தகைய உன்னதங்களை அடையாளப்படுத்துவன என்றால் அவற்றிற்கும் அவற்றின் இன்றைய கொடு விளைவுகட்கும் என்ன தொடர்பு?

“குறி”க்கும், “குறி சுட்டும் பொருளுக்கும் எந்தக் தர்க்க பூர்வமான தொடர்பும் இல்லை. அவை தன்னிச்சையானவை (அணூஞடிtணூச்ணூதூ) எனும் சசூரியக் கோட்பாட்டிற்கு வாழும் எடுத்துக்காட்டோ பிக்கு அஷின் விராத்து கண்டுபிடித்த 969 எனும் குறி?

  1. 2012க்குப் பிந்திய கலவரத்திற்குப் பிந்தி மட்டும் 239 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதாக அரசு கணக்குக் காட்டுகிறது. கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை இதை விட மிக அதிகம் என்கிறது ஹ்யூமன் ரைட்ஸ் வாட்ச். 2013 கலவரத்தில் மட்டும் 828 கட்டிடங்கள் அழிக்கப்பட்டன என்றும் 8,000 பேர்கள் இடப் பெயர்வுக்கு உள்ளாகினர் எனவும் அது பட்டியலிடுகிறது. கடந்த மூன்று ஆண்களில் மட்டும் வெளிநாடுகளுக்கு ஆட்கடத்திகள் மூலம் புலம் பெயர்ந்து அவதிப் படுவோர் 1,20,000 பேர்.

பாதுகாப்பில்லாமல் இன்று நாட்டைவிட்டு வெளியேறுவோர் அப்படி ஒன்றும் எளிதாகச் சென்று விடவும் இயலாது. உள்ளூர் அதிகாரிகள் மற்றும் காவல்துறைக்கு நபர் ஒன்றிற்கு 200 டாலர் வரை பணம் கொடுக்க வேண்டும். பிறகு பன்னாட்டு ஆட்கடத்திகளுக்கு நபர் ஒன்றுக்கு 1000 டாலர் வரை கொடுத்து அவர்கள் தாய்லாந்திற்கோ மலேசியாவிற்கோ செல்ல வேண்டும். இந்த ஆட்கடத்திகள் அவர்களைப் பாதுகாப்பில்லாத படகுகளில் அது தாங்கக் கூடியதை விட அதிக அளவில் மனிதர்களை ஏற்றிப் பின் கடலுக்குள் தொலை தூரத்தில் நிற்கும் கப்பலில் ஏற்றி, அது நிரம்பும் வரை காத்திருந்து, போதிய உணவு முதலிய அடிப்படை வசதிகள் இல்லாமல் அவர்களைக் கடத்திச் செல்வர். எந்த நாட்டை நோக்கிச் சென்றனரோ அதன் கரையை அடைந்த பின் காடுகளில் எவ்வித வசதியும் இல்லாத முகாம்களில் தங்க வைக்கப்படுவர். செல்லும் நாடுகள் கடும் பாதுகாப்புகள் மூலம் அவர்களை ஊடுருவ இயலாமல் செய்து விட்டால் பல நாட்கள் கடலிலேயே அவர்கள் தாங்க நேரிடும். நடுக்கடலில் கப்பலை விட்டுவிட்டுக் கடத்தியவர்கள் தப்பிச் செல்வதும் உண்டு.

கடத்தல்காரர்களால் உருவாக்கப்படும் இந்தக் கரையோர முகாம்கள் இருந்த இடங்களில் இறந்துபோன பலர் புதைக்கப்பட்டுள்ளது. (Mச்ண்ண் எணூச்திஞுண்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தங்களது நாட்டில் 28 இடங்களில் இத்தகைய 139 கல்லறைகளை மலேசிய அரசு கண்டுபிடித்துள்ளது. தாய்லாந்து அரசு 33 கல்லறைகளைக் கண்டுபிடித்துள்ளது. ஒவ்வொன்றிலும் பல உடல்கள்.

டோனி அப்போட் ஆட்சிக்கு வந்த பின் (2013) ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய முயலும் ரோஹிங்யாக்களை இரக்கமில்லாமல் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். அவர்கள் “துன்புறுத்தலின்” விளைவாக இங்கு வரவில்லை. “பொருளாதாரக் காரணங்களுக்கே” (அதாவது சம்பாதிப்பதற்காக) வருகின்றனர் என அப்பட்டமாகப் பொய்யுரைத்து அவர்களைத் துரத்துகிறது ஆஸ்திரேலியா. அது மட்டுமல்ல, பிற நாடுகள் எதுவும் அப்படி ரோஹிங்யா முஸ்லிம்களைத் திருப்பி அனுப்பினால் நாங்கள் அதைக் கண்டிக்கவும் மாட்டோம் எனவும், அது கூறியுள்ளது. மியான்மர் அரசு இதை வரவேற்றுள்ளது.

  1. ராகைன் மாநிலத்தில் இன்று வாழும் ரோகிங்யா மொழி பேசும் முஸ்லிம்கள் தம்மை அம்மாநிலத்தின் பூர்வகுடிகள் என உரிமை கோருவதையும், ரோகிங்யா இனத்தவர் என அடையாளப்படுத்திக் கொள்வதையும் மியான்மர் அரசு அனுமதிப்பதில்லை. அவர்களை அது ‘வங்காளிகள்’ என்றே அடையாளப்படுத்துகிறது. தாம் வங்காளிகள் என்பதை ஒத்துக் கொள்ளாத ரோஹிகியாக்களுக்கு எந்த வகைக் குடியுரிமையையும் அளிக்க இயலாது என்கிறது மியான்மர் அரசு.

இன்று ரோஹிங்யாக்கள் பெரும்பான்மையாக இருக்கும் ராகைன் மாநிலம் ஆங்கிலோ பர்மிய யுத்தத்தின் போதுதான் (1826) பர்மாவுடன் இணைக்கப்பட்டது. அதற்கு முற்பட்ட கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சியில் அது வங்க மாநிலத்தின் கீழ்தான் இருந்தது. 19ம் நூற்றாண்டின் மத்தியில் (1860) பெரிய அளவில் அன்றைய வெள்ளை அரசு வங்கதேசத்தினரை இங்கு குடியேற்றியது. இப்படித்தான் அஸ்ஸாமின் பிரம்மபுத்திரா பள்ளத்தாக்கிலும் விவசாயத்திற்கென வங்க முஸ்லிம்களைக் கொண்டு வந்து அது குடியமர்த்தியது. இது தவிர வங்கதேசச் சுதந்திரப் போரின்போது 197172 காலக்கட்டத்திலும் சுமார் 5,00,000 பேர் இன்றைய வங்க தேசத்திலிருந்து ராகைன் மாநிலத்திற்கு இடம் பெயர்ந்தனர்.

எனினும் 1978ல் நடந்த இராணுவத் தாக்குதலின் ஊடாக சுமார் 2,00,000 வங்க முஸ்லிம்கள் வங்கதேசத்திற்குள் விரட்டப்பட்டனர். 199192ல் மேலும் சுமார் 2,70,000 முஸ்லிம்கள் வங்க தேசத்திற்குள் விரட்டப்பட்டனர். இனி மேலும் ஒருவரைக்கூட அனுமதிக்க இயலாது எனக் கறாராக இன்று அறிவித்துள்ளது வங்க தேச அரசு.

மியான்மரில் இன்று சுமார் 138 இனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. ஒரு குடியுரிமை உள்ள தனி இனமாக அங்கீகாரம் மறுக்கப்படுவது ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு மட்டும்தான். 1941ல் ஜப்பானிய ஆக்ரமிப்பின் கீழ் பர்மா வந்தபோது ஆங் சான் சுய் கியின் தந்தை ஆங் சானின் தலைமையில் இயங்கிய பர்மிய விடுதலைப் படை ஜப்பானை ஆதரித்தது. ரோஹிங்கியாக்கள் பிரிட்டீஷ் ஆட்யை ஆதரித்தனர். அதேபோல இந்தியத் துணைக் கண்டத்தில் பாகிஸ்தான் என்கிற தனி நாடு உருவாக்கப்பட இயக்கம் நடந்தபோதும் இவர்கள் தாம் பெரும்பான்மையாக இருக்கும் ராகைன் மாநிலத்தை பாகிஸ்தானுடன் (அதாவது இன்றைய வங்க தேசத்துடன்) இணைக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர்.

ஒரு பேரின ஒடுக்குமுறையின் கீழ் வாழ நேர்ந்த சிறு இனங்கள் இப்படி நடந்து கொள்வதும், அது மேலும் பகை வளர்வதற்குக் காரணமாவதும் எங்கும் நடக்கக் கூடியதுதான்.

1982ல் நீ வின் தலைமையிலிருந்த இராணுவ அரசால் இயற்றப்பட்ட பர்மியக் குடியுரிமைச் சட்டம் (ஆதணூட்ஞுண்ஞு Nச்tடிணிணச்டூடிtதூ ஃச்தீ) ரோகிங்யாக்களுக்குக் குடியுரிமையை மறுத்தது. அவர்களை ‘வங்காளிகள்’ எனவும் மூன்றாம் நிலைக்குடிகள் (Nச்tதணூச்டூடிண்ஞுஞீ இடிtடித்ஞுணண்) எனவும் வகைப்படுத்தியது. அதற்கும் கூட அவர்கள் தம்மை வங்காளிகள் என அடையாளப்படுத்திக் கொள்வது தவிர 1948க்கு முன்னதாகவே அங்கு வாழ்ந்ததை நிறுவுவதும் நிபந்தனையாக்கப்பட்டது.

  1. மியான்மர் இன்று உலகிலேயே பின்தங்கிய, வறுமை மிக்க ஒரு நாடு. சுமார்5 பில்லியன் டாலர் கடனை அது சுமந்து நிற்கிறது. அதன் ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் பாதிச் செலவு கடனைத் திருப்பிக் கொடுப்பதிலேயே கழிகிறது.

சுமார் 50 ஆண்டுகால இராணுவ ஆட்சியின் கீழ் இருந்த நாடு அது. 1987ல் அன்றைய இராணுவ அரசு 100,75,35,25 கியாட் மதிப்புள்ள நோட்டுக்களைச் செல்லாதவை என அறிவித்தபோது மிகப்பெரிய மாணவர் எழுச்சி அங்கு ஏற்பட்டது. ஆகஸ்ட் 8,1988ல் தொடங்கிய அந்த இயக்கம் ‘8888’ இயக்கம் என அழைக்கப்படுகிறது. சுமார் 350 பேர்கள் அப்போது கொல்லப்பட்டனர். ஆங் சான் சுய் கி ஒரு தேசியத் திரு உருவாக வெளிப்போந்தார். 1990ல் நடைபெற்ற தேர்தலில் 485 நாடாளுமன்றத் தொகுதிகளில் 392ஐ அவரது கட்சி கைப்பற்றியது. எனினும் அவர் பதவி ஏற்க அனுமதிக்கப்படவில்லை. அவரது சிறைவாசம் தொடர்ந்தது. 2010ல் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

2011ல் குடியரசுத் தலைவராகப் பதவியேறிய முன்னாள் ஜெனரல் தெய்ன் சேய்ன் மியான்மரின் பொருளாதாரத்தைத் திறந்துவிட்ட வைகிய்ல உலக முதலாளித்துவத்தின் ஆதரவுக்குப் பாத்திரமாகியுள்ளார். சுய் கியைப் பொருத்தமட்டில் தேர்தல் மூலம் விரைவில் மியான்மரின் ஆட்சியைக் கைப்பற்றிவிட இயலும் என்கிற நம்பிக்கையுடன், பெரிய அளவில் தெய்ன் செய்னை எதிர்க்காமல் அரசியல் பண்ணிக் கொண்டுள்ளார். எக்காரணம் கொண்டும் அவர் பர்மிய பவுத்த ஓட்டு வங்கியை இழக்கத் தயாராக இல்லை.

அமெரிக்கா உள்ளிட்ட முதலாளிய நாடுகளைப் பொருத்தமட்டில் மியான்மரைத் தம் கைக்குள் வைத்துக் கொள்வதை மிக முக்கியமாக்கக் கருதுகின்றன. திறந்த பொருளாதாரத்தின் ஊடாக திறக்கப்பட்டது. தவிர இன்று உலக முதலாளியத்தின் மிகப்பெரிய சவாலாகக் கருதப்படும் சீனாவுக்கு மிக அருகாமையில் உள்ள இந்த நாட்டை அவை எந்த வகையிலும் தம் பிடியிலிருந்து நழுவ விடத் தயாராக இல்லை.

இந்த நிலையில் அந்தப் 14 லட்சம் ரோகிங்யா முஸ்லிம்கள் இன அழிப்பு செய்யப்படுவது குறித்து சுய் கியும் சரி, அமெரிக்கா அல்லது ஐ.நா. யாரும் எந்த எதிர்ப்பையும் காட்டப்போவதில்லை.

2012ல் ஒரு பர்மிய பவுத்தப் பெண் மூன்று முஸ்லிம் இளைஞர்களால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதை ஒட்டி இன்றைய வன்முறை தொடங்கியது. ரோஹிங்யாக்கள் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட வேண்டும் எனவும், அவர்களுக்குக் குடியுரிமை வழங்க வேண்டும் எனவும் ஐ.நா. அவையின் மனித உரிமை அமைப்பு தீர்மானம் இயற்றியபோது சுய்கியின் கட்சி அதை தங்களின் இறையாண்மையில் தலையிடுவதாகக் கண்டித்தது. இன்று சுய் கி மௌனமாக இருப்பதை தலாய்லாமா உள்ளிட்ட எல்லோரும் கண்டித்தும் கூட அவர் மௌனத்தைக் கலைக்கத் தயாராக இல்லை.

ரோஹிங்யா மக்கள் மீதான இந்த வன்முறைகளுக்கு மத்தியில் 2014 அக்டோபரில் தெய்ன் செய்ன் அரசு ‘ராகைன் மாநிலச் செயல்த்திட்டத்தை” (கீச்டுடடிணஞு அஞிtடிணிண கடூச்ண) அறிவித்தது. 1818லிருந்து ரகைன் மாநிலத்தில் வசிப்பதற்கு உரிய ஆதாரங்களைக் காட்டுவோருக்கு முழுக் குடியுரிமை எனவும், 1948 முதல் இருப்பதற்கு உரிய ஆதாரங்களைக் காட்டுவோருக்கு அரைக் குடியுரிமை எனவும் அறிவித்தது. பிரச்சனை என்னவெனில் அரசு கோரும் அத்தகைய ஆதாரங்கள் எதையும் காட்ட இயலாதவர்களாகவே பெரும்பாலான ரோஹிங்யாக்கள் உள்ளனர்.

இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெறக்கூடாது, மூன்று வருட இடைவெளி இருக்க வேண்டும் என்றெல்லாம் வேறு சில நாடுகளிலும் கூடப் பேசப்பட்டாலும் எந்த நாட்டிலும் ஒரு குறிப்பிட்ட மக்கள் பிரிவின் மீது மட்டும் இந்த நிபந்தனை விதிக்கப்பட்டதில்லை. இது தவிர மதமாற்றத் தடைச் சட்டம், மதங்களுக்கு இடையே திருமணங்கள் கூடாது எனச் சட்டம், அனுமதியின்றி இடம் பெயரக்கூடாது என்கிற தடை, பொதுப்பள்ளிகளில் மேற்படிப்பு படிக்கத் தடை, அரசுப் பணிகளுக்குத் தடை என இத்தனைக்கும் மத்தியில்தான் இன்று ரோஹிங்யாக்கள் “உலகிலேயே அதிகமாகத் துன்றுபுறுத்தப்படுகிறவர்கள்” என்கிற பெயரைச் சுமந்துகொண்டு கொஞ்சங் கொஞ்சமாக அழிந்து கொண்டுள்ளனர்.

பிக்கு விராத்துவின் 969 இயக்கம் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இயங்கும் பவுத்த அமைப்பான ’பொதுபலசேனா’ வுடன் நெருக்கமான தொடர்பைப் பேணுகிறது.சென்ற ஆண்டு பொதுபல சேனா இலங்கையில் நடத்திய மாநாட்டிலும் அது கலந்து கொண்டுள்ளது.

எனினும் இந்தப் பிரச்சினைகளில் பவுத்தம் மற்றும் பிக்குகளின் பங்கை முன்னிட்டு பவுத்தத்தையே ஒரு எதிரியாகக் கட்டமைக்கத் தேவை இல்லை. இதே பர்மிய பவுத்த பிக்குகள்தான் 2007ல் பர்மிய இராணுவ அரசுக்கு எதிராகக் கடுமையான போராட்டங்களை நடத்தினர். ‘காவிப் புரட்சி‘ (குச்ஞூஞூணூணிண கீஞுதிணிடூதtடிணிண) என இன்று அது அழைக்கப்படுகிறது. தலாய் லாமா மட்டுமின்றி இந்தக் காவிப் புரட்சியில் பங்கு பெற்ற பிக்குகளும் 8888 இயக்கத்தில் பங்கு பெற்ற பலரும் இன்று ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு ஆதரவாகப் பேசியுள்ளனர். மியான்மரில் இயங்கும் பெண்கள் அமைப்புகள் இரண்டும் முஸ்லிம் பெண்கள் பிள்ளை பெற்றுக் கொள்வதற்குத் தடை விதிக்கும் சட்டங்களைக் கண்டித்துள்ளனர்.

இனம், மதம், மொழி போன்ற அடையாளங்களின் அடிப்படையிலான அரசியல்கள் உலக வரலாற்றில் பெரும் அழிவுகளை ஏற்படுத்தியுள்ளன. இதில் எந்த மதமும், எந்த மொழி அரசியலும், இனப் போராட்டங்களும் விதி விலக்கல்ல. இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை பவுத்தப் பேரின வாதம் மட்டுமல்ல, அதை எதிர்த்து நின்ற தமிழ் இன வாதமும் நிகழ்த்தியது என்பதை நாம் மறந்து விடக் கூடாது. சாராம்சமாக எந்த ஒரு மதத்தையும், மொழியையும், இனத்தையும் நாம் பகையாகக் கருதத் தேவையில்லை. நமது உரிமைகளுக்கு எதிரான போராட்டம் இத்தகைய வெறுப்புக்ளுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்.

  1. இறுதியாக ஒன்று. ரோஹிங்யா முஸ்லிம்கள் பிரச்சினையில் மோடி அரசு காக்கும் மௌனத்தைப் புரிந்து கொள்வது கடினமல்ல. ஆட்சிக்கு வந்தவுடன் பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் குண்டுகளை வீசி ஆயிரத்திற்கு மேற்பட்டோரைக் கொன்றபோதும் அது இப்படித்தான் இறுதி வரை மௌனியாக இருந்தது. தவிரவும் வங்க தேச முஸ்லிம்கள் இந்தியாவுக்குள் ஊடுறுவுகின்றனர் எனறு அரசியல் பண்ணி வரும் பாஜக அரசு இப்படி இன்று துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி நிற்கும் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது இரக்கம் காட்டாததில் வியப்பில்லை.

இந்தியா இன்று தென் ஆசியாவில் தன்னை ஒரு பெரிய சக்தியாக நிலை நிறுத்திக் கொள்ள மேற்கொள்ளும் முயற்சிகள் நாம் அறியாததல்ல. பர்மாவில் இராணுவ ஆட்சி உருவானபின் அதனுடனான உறவை நிறுத்திக் கொண்ட இந்திய அரசு 1990 களில் மீண்டும் அதனுடன் நெருக்கமாக உறவைப் பேணத் துவங்கியது. பல துறைகளில் இன்று இந்தியா மியான்மருக்கு உதவி செய்கிறது. இந்தப் பிரச்சினையில் காட்டும் மௌனம் அது இன்று பேணும் நெருக்கமான உறவுக்கு எந்த வகையிலும் பொருத்தமாக இல்லாததை அரசியல் நோக்கர்கள் சுட்டிக் காட்டுகின்ரனர்.

இது போன்ற தருணங்களில் அறம்சார்ந்த ஒரு நிலைபாட்டை மேற்கொள்வதே நேரு காலந்தொட்டு இந்தியாவின் பாரம்பரியமாக இருந்து வந்துள்ளது. இன்றைய அதன் நிலைபாடு அது எந்த அளவிற்கு அறம் சார்ந்த அயலுறவுப் பாரம்பரியத்திலிருந்து அது விலகிச் செல்கிறது என்பதற்கு ஒரு சான்றாக உள்ளது.

‘வாசுதேவக் குடும்பகம் என்றெல்லாம் மோடி பேசித் திரிவதில் ஏதேனும் உணமை இருக்குமானால் ரோஹிங்ய முஸ்லிம்கள் விடயத்தில் மியான்மர் அரசு நடந்து கொள்வதை ஆது கண்டிக்க வேண்டும். அவர்கள் இப்படி வெளியேற்றப்படுவதை அது எதிர்க்க வேண்டும். ஆட்கடத்திகளால் அல்லலுற்று நிற்கும் ரோஹிங்யாக்களைக் காப்பாற்றுவதற்கான புலம் பெயர்பவர்களுக்கான பன்னாட்டு அமைப்புக்கு அது தாராளமாக நிதி உதவி செய்ய வேண்டும்.

 

அ.மார்க்ஸ் நேர்காணல் : மீள்பார்வை (இலங்கை)

 (இலங்கையில் வெளிவரும் வார இதழ் “மீள்பார்வை” யில் இன்று (செப் 1, 2017) வெளிவந்துள்ள என் நேர்காணல்)

 

1) இந்திய அரசியலின் இன்றை நிலையை எப்படி நோக்குகிறீர்கள் அதன் எதிர்காலம் எவ்வகையில் அமையும் என கருதுகிறீர்கள்?

 

இன்றைய நிலை கவலைக்குரியதாகத்தான் உள்ளது. அமெரிக்கா -இஸ்ரேல் – இந்தியா என்பதாக ஒரு கூட்டணி உருவாகியுள்ளது மிகவும் ஆபத்தான ஒரு போக்கு. ‘ஷங்காய் கார்பொரெஷன்’, அணிசேரா நாடுகள் (NAM) அமைப்பு போன்ற வளர்ச்சி அடையும் நாடுகளின் கூட்டமைப்பு முயற்சிகள் இன்று அர்த்தமற்றவை ஆகிவிட்டன. அப்படி ஆனதில் இந்தியாவின் பங்கு முக்கியமானது. காங்கிரஸ் ஆட்சி போய் பா.ஜ.க ஆட்சி வந்தால் ஈழத் தமிழர்களுக்கு அது ஆதரவாக இருக்கும் எனத் தமிழகத்தில் பேசி பாஜகவை  மறைமுகமாக ஆதரித்த தமிழ்த் தேசியர்கள் இன்று தலை கவிழ்ந்து கிடக்கின்றனர். இதர அண்டை நாடுகளுடனான, குறிப்பாக நேபாளம், சீனா, பாகிஸ்தான் ஆகியவற்றுடனான உறவும் சீர்கெட்டுள்ளது. உள்நாட்டில் மோடி அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளன. காஷ்மீரில் பாஜக ஆட்சி ஏற்பட்டபின் நிலைமை பல மடங்கு மோசமாகியுள்ளது. மாநில உரிமைகள் பறிக்கப்படுவது, GST வரி விதிப்பு முறை ஆகியவற்றின் பாதிப்புகள் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன. பண மதிப்பு நீக்க நடவடிக்கை மக்களுக்குச் சொல்லொணா துன்பத்தை விளைவித்ததோடு அதனால் தேசிய அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது எனும் உண்மை இன்று மக்கள் மத்தியில் அம்பலமாகியுள்ளது. ஆனாலும் இந்த வெறுப்புகளைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ள எதிர்க் கட்சிகள் போதிய திறமையுடனும் வலுவுடனும் இல்லை. காங்கிரஸ் மட்டுமல்ல, இடதுசாரிகளும் மாநிலக் கட்சிகளும் கூடப் பலமிழந்து கிடக்கின்றன. பெரும்பான்மை இந்துக்கள் மத்தியில் முஸ்லிம் வெறுப்பை ஊட்டி அதன் மூலம் அரசைத் தக்கவைத்துக் கொள்ள பாஜக செய்யும் தீவிர முயற்சிகளும் அவற்றின் விளைவான வன்முறைகள் அதிகரிப்பதும் மிக்க கவலை அளிப்பதாக உள்ளன.

 

2) இந்தியாவில் அண்மைக்காலமாக இந்துத்துவவாதிகளின் செல்வாக்கு அதிகரித்து வருகின்றது. இது குறித்து.

 

இதில் இரண்டு அம்சங்கள் கவனத்துக்குரியன. 1. சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின் உலகளவில் இப்படியான நவ தாராளவாத, நவ பாசிச சக்திகள் மேலுக்கு வந்துள்ள ஒரு உலகளாவிய போக்கின் ஓரங்கமாகவும் இதை நாம் காண வேண்டு. செப்டம்பர் 11 (9/11) க்குப் பின் உலகளவில் மேற்கொள்ளப்படுகிற “பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்”, முஸ்லிம் வெறுப்பு முதலியன பா.ஜ.க வளர்வதற்கு மிகவும் சாதகமான சூழ்நிலயாக உள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் உருவான ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கான வேட்கைகள், பொருளாதாரத்திலும் சிந்தனையிலும் ஓர் இடது சாய்வு, பஞ்ச சீலம்’ அணிசேரா நாடுகள் முதலான அறம் சார்ந்த அரசியல் கோட்பாடுகள், அணிசேர்க்கை முயற்சிகள் எல்லாம் இன்று அழிந்துள்ளன. இந்த உலகளாவிய பின்னணியில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தையும் நாம் காண வேண்டும். 2. இரண்டாவதாக இதில் புரிந்து கொள்ள வேண்டிய அம்சம் பா.ஜ.க எனும் அரசியல் கட்சிக்குப் பின்னுள்ள ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மிக மிக வலுவான கட்டமைப்பும் வலைப்பின்னலும். மதத்தின் பெயரால் அவர்கள் கட்டமைத்துள்ள எண்ணற்ற அமைப்புகள், அர்ப்பணிப்பு மிக்க தீவிரவாத சக்திகள், காந்தி கொலைக்குப் பின் அவர்கள் தனிமைப் படுத்தப்பட்ட காலத்திலும் கூடத் தம்மை அவர்கள் அமைப்பு ரீதியாகத் தொடர்ந்து வலுப்படுத்தி வளர்ந்த முறை ஆகியன அவர்களின் இன்றைய வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்களின் இந்தத் தீவிரப் பணிக்கு இணையாக இங்கு எந்த அரசியல் கட்சியும் இயக்கமும் இன்று வேலை செய்யவில்லை. பல்லாயிரக் கணக்கான கல்வி நிலையங்கள், ‘சாகா’க்கள் எனப்படும் இராணுவப் பயிற்சிகள், ‘கர்வாபசி’ எனப்படும் மதமாற்றங்கள் என இயங்கும் அவர்களின் தீவிரப் பணிகளை எதிர் கொள்ள இங்கு யாருக்கும் மன உறுதியும் இல்லை. அதோடு இன்று வெளிநாடுகளில் பணி செய்யும் உயர்சாதி இந்தியர்கள் மத்தியில் உருவாகிவரும் ஒருவகைத் தொலைதூரத் தேசியம் (long distance nationalism) பெரிய அளவில் இவர்களுக்கு நிதி சேகரிக்கவும் உலக அளவில் ஆதரவு திரட்டவும் பயன்படுகிறது. இது குறித்து நான் மிக விரிவாக எழுதிவரும் கட்டுரைத் தொடரை (#இந்துத்துவமும்_சியோனிசமும்) என் முகநூல் பக்கத்தில் காணலாம்.

 

3) முத்தலாக் தீர்ப்பையும் அதற்கு பின்னாலுள்ள அரசியலையும் எப்படி பார்க்கிறீர்கள்?

 

முத்தலாக் முறை இங்கு முஸ்லிம் சமூகத்தில் பல நேரங்களில் தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பது உண்மை. இதற்கு எதிராக முஸ்லிம் பெண்கள் அமைப்புகள் போராடி வருகின்றன. இவர்கள் முஸ்லிம்களின் அடிப்படைக் கோட்பாடுகளுக்க்கு எதிரானவர்கள் அல்ல. குர்ரானிய நெறிமுறைகளுக்கு மாறாக ஒரே நேரத்தில் முத்தலாக் சொல்லிக் கைவிடப்படும் முஸ்லிம் பெண்களின் நியாயங்களைத்தான் இவர்கள் பேசி வருகின்றனர். ஆனால் இங்கொன்றை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மிகவும் கட்டுப்பெட்டித் தனமான ‘அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம்’ உட்பட முஸ்லிம் உலமாக்களும் கூட யாரும் இபந்த்டி தொலைபேசி மூலம், தபால் மூலம் முத்தலாக் சொல்வதை எல்லாம் ஏற்பதில்லை. இருந்தாலும் ஆங்காங்கு இது ஒரு சிறிய அளவில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பது உண்மை. எனவே இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்பது ஒரு நியாயமான கோரிக்கை. கூடுதலாக நீங்கள் இதில் புரிந்து கொள்ள வேண்டிய இன்னொரு அமசம் என்னவெனில் இந்திய நீதிமன்றங்கள் பல காலமாகவே இந்த ஒரே நேர முத்தல்லாக்கைச் (Instant triple Talaq) சட்டபூர்வமானது என ஏற்பதில்லை. நீதிநெறிமுறை ஊடாக உருவாக்கப்படும் கோட்பாடாக (judicially evolved principle) இன்று இது செயல்பட்டு வருகிறது. ஆயிரக் கணக்கான முஸ்லிம் பெண்கள் இதன் மூலம் உரிய நீதி வழங்கப்பட்டுள்ளனர். அதே போல முத்தலாக் சொல்லப்படும் பெண்ணுக்கு உரிய இழப்பீடு வழங்குவது என்பதையும் இந்திய நீதிமன்றங்கள் உறுதியாகக் கடை பிடித்து வந்துள்ளன. குடும்பத்திற்குள் பெண்கள் மீதான வன்முறை என்பதைப் பொருத்த மட்டில் எல்லோருக்கும் பொதுவான “குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்ட”த்தின் மூலம் முஸ்லிம் பெண்களும் நீதி பெற முடியும். இம்மாதிரியான பல வழக்குகளையும் தீர்ப்புகளையும் நான் எனது நூலிலும் கட்டுரைகளிலும் சுட்டிக் காட்டியுள்ளேன். பிரச்சினை என்னவெனில் கல்வியறிவும், விழிப்புணர்வும் மிகவும் குறைந்த முஸ்லிம் சமூகத்திற்குள் இப்படியான உரிமைகள் நடைமுறையில் இருப்பதை எல்லாம் முஸ்லிம் ஜமாத்கள், அரசியல் அமைப்புகள், மொத்தத்தில் முஸ்லிம் ஆண்களால் கீழே, குறிப்பாக முஸ்லிம் பெண்கள் மத்தியில் கொண்டு செல்லப்படவில்லை. அதனால்தான் அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரே நேர முத்தலாக்குகளும் இங்கே நடைமுறையில் இருந்தன. இதனால் சமூகத்தின் கீழ்த் தட்டில் உள்ள முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படக் கூடிய நிலை இருந்தது.

 

முஸ்லிம் வெறுப்பு ஒன்றையே மூலதனமாக வைத்து இயங்கும் பா.ஜகவின் ஒரு முக்கிய ஆயுதம் முஸ்லிம் தனி நபர் சட்டத்தை (Muslim Personal Law) ஒழித்துக் கட்டுவது. இங்கு சிவில் மற்றும் கிரிமினல் சட்டம், தண்டனைச் சட்டங்கள் எல்லாம் எல்லோருக்கும் ஒரே மாதிரியானதுதான். திருமணம், வாரிசு, வக்ஃப் சொத்துக்கள் முதலானவை மட்டும் தனி நபர்ச் சட்டத்திற்குள் வருகின்றன. அதையும் ஒழிப்பது என்பது முஸ்லிம்களின் அடிப்படை அடையாளத்தையே அழிப்பது என்கிற வகையில் இந்துத்துவத்தின் இந்த முயற்சியை முஸ்லிம்கள் மட்டுமல்லாமல் நடுநிலையாளர்கள், இடதுசாரிகள் எல்லோரும் எதிர்த்து வருகின்றனர்.

 

இந்தப் பின்னணியில்தான் இரண்டாண்டுகளுக்கு முன் ஒரு முஸ்லிம் பெண் தனக்கு அளிக்கப்பட்ட முத்தல்லாக்கிற்கு எதிராக ஒரு முஸ்லிம் பெண் ஒரு வழக்குரைஞரை அணுகினார். அவர் ஒரு பா.ஜ.க ஆதரவாளர். அவர் அந்தப் பெண்ணுக்கு உரிய நீதி பெற்றுத் தருவது என்பதற்கு அப்பால் தலாக் கிற்கே எதிராக அந்த வழக்கைத் தொடுத்தார். அவர் எதிர்பார்த்தபடி இதன் மூலம் அவர் இந்திய அளவில் பிரபலமானார். பா.ஜ.க அரசும் இதற்கு ஆதரவாகக் களத்தில் புகுந்தது. இதில் வெற்றி அடைந்தால் இதன் மூலம் முஸ்லிம் தனிநபர்ச் சட்டத்தையே ஒழித்து விடலாம் என்பது அதன் கணக்கு.

 

ஐந்து நீதிபதிகள் கொண்ட ஒரு அரசியல் சட்ட அமர்வு அளித்துள்ள தீர்ப்பு இப்போது வந்துள்ளது. அதன் முக்கிய அம்சங்கள்: (அ) ஒரே நேர முத்தலாக் செல்லாது (ஆ) இந்தத் தீர்ப்பு முஸ்லிம் தனிநபர்ச் சட்டத்தின் மீது பிற விளைவுகள் எதையும் ஏற்படுத்தாது (incobsequential) (இ) தனிநபர்ச் சட்டம் முதலான மக்களின் அடிப்படை உரிமைகளில் தலையிடுவதோ மதம் தொடர்பான நடவடிக்கைகளில் நுழைந்து அவை சரி, தவறு எனச் சொல்வதோ நீதிமன்றத்தின் வேலை அல்ல – என்பன தீர்ப்பின் முக்கிய அம்சங்கள். ஆக இது உண்மையில் முஸ்லிம்களின் உரிமைகளை மதிக்கும் தீர்ப்புத்தான். இதன் மூலம் தனி நபர் சட்டங்கள் என்பன அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) என்கிற அளவிற்கு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஒரே நேர முத்தலாக் செல்லாது என்பது ஏற்கனவே நடைமுறையில் உள்ளதுதான். எனவேதான் முஸ்லிம் சட்ட வாரியமே இந்தத் தீர்ப்பை ஆதரித்துள்ளது. மோடி அரசு இது ஏதோ தனக்கு வெற்றி எனச் சொல்லிக் கொள்வது தன் ஆதரவாளர்களை ஏமாற்றுவதற்குத்தான்.

 

4) இந்தியாவில் முஸ்லிம் எதிர்ப்புக்கள் அதிகரிப்பதற்கு பின்னாலுள்ள காரணங்கள் என்ன?

 

நான் ஏற்கனவே சொன்னவைதான். இதை உலகளாவிய ஒருவகை அரசியல் அற வீழ்ச்சியின் விளைவாகவும், இந்தியாவின் முஸ்லிம் எதிர்ப்பு அரசியலின் பின்னணியிலும் பார்க்க வேண்டும். கூடுதலாக உலகமயச் செயற்பாடுகளின் ஊடாக மத்தியதர வர்க்கம் ஊதிப் பெருப்பதும் இதில் ஒரு பங்கு வகிக்கிறது. இவர்கள் மத்தியில் தேசப் பாதுகாப்பு / அதற்கு ஆபத்தாக பாகிஸ்தான் அருகமைந்திருப்பத /, அது ஒரு முஸ்லிம் நாடாக இருப்பது / இந்திய முஸ்லிம்கள் அதற்கு விசுவாசமாக உள்ளனர் என்பன போன்ற அடிப்படைவாதக் கருத்துக்கள் எளிதில் செல்லுபடியாகின்றன.

 

5) அண்மையில் நரேந்திர மோடி இலங்கை வந்தார். இப்பின்னணியில் இலங்கையில் இந்திய அரசியலின் தாக்கம் எந்தளவு தூரம் இருக்கும்?

 

போருக்குப் பிந்திய சூழலில் கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட செயல்பாடுகளில் இந்திய மூலதனத்தை விரிவாக்குவது, இலங்கை சீனாவுக்கு நெருக்கமாவதைக் கூடிய வரையில் தடுப்பது என்பனதான் மோடி அரசின் நோக்கம். அதற்கு மேல் தமிழர் நலனை முதன்மைப்படுத்தியதாக அவரின் அணுகல் முறை அமைவதற்கு வாய்ப்பே இல்லை. திரிகோணமலை துறைமுகக் கட்டுமானப் பணியில் பங்கு, திரிகோணமலை மற்றும் ஹம்பந்தோட்டாவில் சுதந்திர வர்த்தக வலயங்களில் பங்கு முதலியவைதான் இரண்டு நாடுகளுக்கும் இடையே முக்கிய பேச்சுப் பொருளாக அமைந்ததே ஒழிய போர்க் குற்ற விசாரணை, தமிழ்ப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள படைகளைத் திரும்பப் பெறுதல், காணாமற் போன தமிழர்கள் பற்றிய உண்மைகள், இலங்கை இந்திய ஒப்பந்த நிறைவேற்றம் ஆகியவை பேசப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. மோடியின் வருகை மகத்தான வெற்றி எனவும் இரண்டு பிரதமர்களுக்கும் இடையேயான ‘இரசாயனம்’ படு பிரமாதமாக ஒத்துப் போவதாகவும் இலங்கை அமைச்சர் சரத் அமானுகமா சொல்லியுள்ளது குறிப்பிடத் தக்கது. ஒன்றை ஈழத் தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தனி ஈழம் அமைய அது உதவாது. இலங்கை சிங்கள இனவாத அரசுகளுக்கே அது துணையாக அமையும். தனி ஈழம் பிரிந்தால் அது இந்தியா சிதைய ஒரு ஊக்குவிப்பாக அமையும் என்பதே இந்திய அரசியலாரின் புரிதல். தமிழ் அல்லது இந்து எனும் அடையாளத்தின் அடிப்படையில் பா.ஜ.க அரசு தனக்கு உதவும் என எண்ணி ஈழத்தில் சிவசேனா போன்ற பெயர்களில் இந்து அடையாளங்களுடன் கூடிய அமைப்புகளை உருவாக்கும் மறவன் புலவார், யோகேஸ்வரன் முதலானோர் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ் என்கிற அடிப்படையிலும் சிங்கள இனவெறிக்குப் பலியாகிறவர்கள் என்கிற அடிப்படையிலும் இணைந்து நிற்க வேண்டிய தமிழர்களும், முஸ்லிம்களும் பிளவுபடுவதற்கே இது இட்டுச் செல்லும். இந்திய வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கர் சென்ற முறை இலங்கை வந்தபோது தமிழ்த் தலைவர்கள் அவரைச் சந்தித்து இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் உள்ளவாறு வடக்கு – கிழக்கு மாௐஆணங்களின் இணைப்பை வற்புறுத்த வேண்டும் எனக் கோரியபோது என்ன நடந்தது? இனிமேல் இந்தியா அதை வற்புறுத்தாது என அவர் வெளிப்படையாகச் சொல்லவில்லையா?

 

6) இலங்கை அரசியலின் அண்மைக்காலப் போக்குகளை நீங்கள்  எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

போருக்குப் பிந்திய சூழலை முழுமையாகக் கணக்கில் எடுத்துக் கொண்டும், இலங்கை அரசியலில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புள்ள இந்திய அரசின் நோக்கங்கள், மற்றும் இன்றைய புவி அரசியல் சார்ந்த மாற்றங்கள் ஆகியவற்றைச் சரியாகக் கணக்கில் கொண்டு அரசியல் காய்களை நகர்த்துவதாக இன்றைய இலங்கை அரசியல், குறிப்பாக தமிழர்களின் அரசியல் இல்லை. மாறாக தேர்தல் அரசியல் சார்ந்த அபத்தங்கள், முரண்கள், பதவிப் போட்டிகள் என்பதாகத் தமிழர் ஒற்றுமை பலவீனமாகும் நிலையே உள்ளது. வடக்கு கிழக்கு இணைப்புடன் கூடிய அதிகாரப் பகிர்வு மட்டுமின்றி போருக்குப் பிந்திய சூழலில் மேலெழுந்த எந்தக் கோரிக்கையிலும் பெரிதாக முன் நகர்வு இல்லை. இந்திய இலங்கை ஒப்பந்தம் நிறைவேறி முப்பதாண்டுகள் ஆகியும் 13 வது சட்டத் திருத்தம் நிறைவேற வாய்ப்பிருப்பதாகத் தோன்றவில்லை. இந்தத் திசையில் கடந்த ஓராண்டில் சில நகர்வுகள் தென்பட்டபோதும் இன்னொரு பக்கம் பவுத்த தலைமைப் பீடம் அதை வெளிப்படையாக எதிர்த்துள்ளதால் அது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. மொத்தத்தில் நிலைமையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இந்த அமைப்பில் முன்னேற்றம் சாத்தியமே இல்லை என்கிற எண்ணம் தமிழர்கள் மத்தியில் உறுதிப்படுவதைப் பற்றி இலங்கை அரசோ பவுத்தத தலைமையோ கவலைப்படுவதாக இல்லை.

 

7) சர்வதேச அரசியல் போக்குகள் குறித்து..

 

நான் முன்னரே சொன்னதுதான். சோவியத்தின் வீழ்ச்சி என்பது வெறும் சோவியத்தின் வீழ்ச்சியாக மட்டும் இல்லை. அறம் சார்ந்த அரசியலின் வீழ்ச்சியாகவும் அமைந்துவிட்டதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்கத் தலைமையிலான NATO வுக்கு மாற்றாக அமைந்த COMECON, NAM எதுவும் இன்று இல்லை. லத்தின் அமெரிக்க இடதுசாரிகள் சற்றுத் தாக்குப் பிடித்தாலும் அவை பொருளாதார ரீதியாகப் பலவீனமாகவே உள்ளன. சோவியத்திலிருந்த பிரிந்த நாடுகள் மற்றும் முன்னாள் சோவியத் கூட்டணியில் இருந்த கிழக்கு ஐரோப்பிய நாடுகளை NATO வில் சேர்த்துக் கொள்வதில்லை என்கிற வாக்குறுதியை மீறி இன்று அவை அதில் உள்ளடக்கப்படுவது மட்டுமல்லாமல் ரஷ்யாவின் கொல்லைப்புறம் வரைக்கும் இன்று NATO படைகளும் ஏவுகணைகளும் குவிக்கப்பட்டுள்ளன. பனிப்போர்க் கால முடிவுக்குப் பின்னும் கூட இன்னும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ரஷ்யாவும் சீனாவும்தான் உள்ளன. முஸ்லிம் நாடுகளில் ஏற்பட்ட அரபு எழுச்சி மிகவும் நம்பிக்கையூட்டத் தக்கதாகத் தொடக்கத்தில் இருந்தாலும் எதிர்பார்த்த முன்னேற்றங்கள் இல்லை. மீண்டும் எகிப்தில் இராணுவ ஆட்சி; துருக்கியில் ஜனநாயகம் அழிக்கப்பட்டு சர்வாதிகாரத்தை நோக்கிய நகர்வு வேகமாக உள்ளது. நம் கண்முன் அழிந்து கொண்டுள்ள சிரியா இன்று உலக அரசியலில் ஏற்பட்டுள்ள அற வீழ்ச்சியின் ஒரு பௌதிக வெளிப்பாடு. முஸ்லிம் நாடுகள் மத்தியில் அமெரிக்க ஏஜன்டாக இருந்து செயல்படும் சவுதி அரசின் செயல்பாடுகள் மிக ஆபத்தானவையாக உள்ளன. எனினும் உலக மயமான முதலாளியப் பொருளாதாரம் நெருக்கடிகளைச் சந்திப்பது தொடர்கிறது. முதலாளியம் நெருக்கடிகளைச் சந்தித்தே ஆகும் என்கிற மார்க்சின் கணிப்பு பொய்க்கவில்லை. தொழிலாளிகளின் தலைமையில் சோஷலிச அரசு என்பதுதான் இன்று பொய்த்துள்ளது.

 

8) அறிவுஜீவிகள் எவ்வளவு தூரம் சமூக ஊடகங்களை கையாள்கிறார்கள்?

 

சமூக ஊடகங்கள் நமது கால கட்டத்தின் ஒரு மிக முக்கியமான வளர்ச்சி. முதலாளித்துவ ஊடகங்களுக்கும் ஒரு வகையில் எதேச்சாதிகார அரசுகளுக்குமே கூட அது ஒரு மிகப் பெரிய சவால். உண்மைகளை இனி அவ்வளவு எளிதாக அதிகாரத்தின் துணை கொண்டு மறைத்துவிட இயலாது என்கிற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அவற்றின் மீதான கட்டுப்பாடு என்பதை நோக்கி இன்று அதிகாரங்கள் நகர்கின்றன. ஒரு ஜனநாயகப் படுத்தப்பட்ட ஊடகம் என்கிற வகையில் எளிதில் அது அக்கப்போர்களால் நிரம்புகிற ஆபத்தையும் நாம் கூடவே காண முடிகிறது. இந்த ஊடகங்களைச் சரியான வகையில் பயன்படுத்துவது என்பது நம் கையில்தான் உள்ளது. இதற்கான சரியான பயிற்சியை நாம் இளைஞர்களுக்கும் இயக்க அணிகளுக்கும் அளிக்க வேண்டும். அப்படிக் கொடுத்தால் நிச்சயமாக இவை பயனுள்ள, சக்தி வாய்ந்த ஆயுதங்களாக நமக்கு அமையும்.

 

மிக்க நன்றிகள்…