செல்லாத நோட்டுக்களும் பொல்லாத அரசும்  

{மோடி அரசின் பணமதிப்பு நீக்கம் தொடர்பான எனது இரண்டாவது கட்டுரை இது}

நரேந்திர மோடி அரசு  எந்தவிதமான அற மதிப்பீடுகளும் இல்லாத ஒரு மதவாத அரசு என அறிந்த பலரும் கூட அது ஒரு திறமையற்ற அரசு என்பதைப் புரிந்திருப்பதில்லை. இன்னும் சொல்லப்போனால் நமது மத்தியதர வர்க்கம் இந்த அரசைத்தான் ரொம்பவும் திறமையான அரசு எனவும் இதன் மூலமே இந்தியா உலக வல்லரசுகளில் ஒன்றாக ஆகப் போகிறது எனவும் நம்பிக் கொண்டுள்ளது. இந்த நம்பிக்கைகள் எத்தனை அபத்தம் என்பதைப் புரிந்துகொள்ள ஒரு நல்ல வாய்ப்பாகத்தான் இன்று இந்தப் பண மதிப்பீட்டு நீக்க நடவடிக்கை அமைந்துள்ளது. மக்களுக்கு, குறிப்பாக அடித்தள மக்களுக்கு இதன் மூலம் ஏற்பட்டுள்ள இத்தனை சோதனைகளுக்கும் மத்தியில் ஏற்பட்டுள்ள ஒரே நல்ல விளைவு இதுதான்.

யோசித்துப் பார்த்தால் எல்லா எதேச்சிகார அரசுகளுமே இன்னொரு பக்கம் முட்டாள்தனமான அரசாக இருப்பது விளங்கும். ஒரு ஜனநாயக அரசின் சிறப்பே எந்தப் பிரச்சினையிலும் கூட்டு முடிவு எடுப்பது என்பதுதான். ஆனால் இந்த விஷயத்தில் என்ன நடந்தது? நிதி அமைச்சருக்கும், ரிசர்வ் வங்கி கவர்னருக்கும் கூடத் தெரியாமல் முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது. இது குறித்த குற்றச்சாட்டு நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டபோது நிதி அமைச்சர் அருண் ஜேட்லி எழுந்து அதை மறுக்கவில்லை அசடு வழிய அமர்ந்திருந்தார். ஒரு ஜனநாயக முறையில் முடிவெடுக்கப்பட்டிருந்தால் நிச்சயம் இப்படியான ஒரு முட்டாள்தனமான முடிவு அப்போது உருப்பெற்றிருக்காது. நரேந்திரமோடி, அமித் ஷா முதலான ஒரு சில நபர்கள் எடுத்த இந்த எதேச்சதிகார முடிவு இன்று 130 கோடி மக்களையும் பாதித்துள்லது.

நிதி அமைச்சருக்கும் ரிசர்வ் வங்கி கவர்னருக்கும்தான் தெரியவில்லையே ஒழிய யாருக்கெல்லாம் தெரிய வேண்டுமோ அவர்களுக்குத் தெரிந்தே இருந்தது. அறிவிப்பு வருவதற்கு முதல்நாள் மே.வங்க பா.ஜக அலுவலகத்திலிருந்து 1 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த உயர்மதிப்பு நோட்டுக்கள் வங்கியில் செலுத்தப்பட்ட கதை ஊரறியும். தவிரவும் இந்த ஏப்ரலில் அதிக அளவில் 500 மற்றும் 1000 தவிர்த்த சிறிய அளவிலான நோட்டுகள் தங்கள் வங்கியிலிருந்து பெறப்பட்டுள்ளன என SBI வங்கி தெரிவித்துள்ளது. இப்படியான நடவடிக்கை எடுக்கப்போவது குறித்த செய்திகள் பல இதழ்களிலும் கூட வெளியாகியிருந்தன.

இன்னொன்றையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். மோடி அரசு ஆட்சிக்கு வந்தது முதல் அரசின் இருப்பை ஒரு பெருஞ்சுமையாக மக்கள் மீது சுமத்தி வருவதுதான் அது. அரசு சர்வ வல்லமையுடையது; அதன் முன் மக்கள் எந்த அதிகாரமும் அற்ற தூசிகள் என்கிற கருத்தை மக்கள் மனதில் பதிய வைப்பதில் அது குறியாய் உள்ளது. ஆதார் அட்டை இப்போது  அனைத்துத் துறைகளிலும் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. சமையல் எரிவாயுக் கலன்களுக்குக் கொடுத்து வந்த சொற்ப மானியத் தொகையை ஆதார அட்டையுடன் இணைத்த அரசு இப்போது எளிய மக்களிடம் உள்ள அந்த ஒரு சில 500 / 1000 ரூ நோட்டுக்களையும் செல்ல வைக்க வேண்டுமானால் ஆதார அட்டை  அல்லது ‘பேன் கார்டு’ வேண்டும் என்றெல்லாம் சொல்லத் துணிகிறது. மாணவர்களைத் தரம் பிரிப்பது, உயர் கல்வி நிறுவனங்களில் கார்பொரேட் ஊடுருவலுக்கு வித்திடுவது, பொது சிவில் சட்டம் என்கிற பெயரில் தனி நபர் அடையாளங்களைக் கேள்விக்குள்ளாக்குவது, போர்ச் சூழலை உருவாக்கி அரசின்  மீதான மக்களின் விமர்சன உரிமைகளை மறுப்பது…. எனச் சொல்லிக் கொண்டே போகலாம்.

அரசு எந்த அளவு வலிமை குறைந்ததாக உள்ளதோ அந்த அளவு மக்கள் வலிமை மிக்ககவர்களாகிறார்கள். ஆனால் அரசுகள் என்றைக்கும் தங்களின் வலிமையையும் அதிகாரக் குவியலையும் இழக்கத் தயாராக இருப்பதில்லை. அதன் உச்ச வடிவத்தைத்தான் பாசிசம் என்கிறோம்.

மோடி அரசின் இந்த நடவடிக்கை அரசியல் சுதநெதிரத்திற்கு அப்பால் இன்று பொருளாதாரச் சுதந்திரத்தையும் இன்று கேலிக் கூத்தாக்கியுள்ளது. நான் என்ன வாங்குகிறேன், எப்படி வாங்குகிறேன், எதைச் சாப்பிடுகிறேன், எப்படி என் பணத்தைச் செலவழிக்கிறேன் என்பதெல்லாம் என் சொந்தப் பிரச்சினை. இதில் தலையிட அரசுக்கு அருகதையும் இல்லை; அனுமதியும் இல்லை. இன்று மோடி அரசு நம் மீது திணிக்கும் இந்த எலெக்ரானிக் பணப் பரிவர்த்தனை என்பது நமது இந்தப் பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தையும் அரசின் கண்காணிப்பிற்குள் கொண்டு வருகிறது. இப்படிச் செய்ய அரசுக்கு உரிமையில்லை. அது மாத்திரமல்ல, இப்படியான எலெக்ட்ரானிக் பரிவர்த்தனையின் ஊடாக ஒவ்வொரு முறையும் நாம் அதற்கெனப் பணம் செலுத்த வேண்டியுள்ளது. அதன்மூலம் நமக்குச் சொந்தமான பணத்தின் மதிப்புக் குறைந்து கொண்டே போகிறது.

இன்று இந்த 500 / 1000 ரூ நோட்டுகளின் மதிப்பு இழப்பு நடவடிக்கையின் நோக்கமும் மக்களின் முன் அரசின் வலிமையை இன்னொரு முறை நிகழ்த்திக் காட்டுவதுதான். மற்றபடி கருப்புப் பணம், எல்லை தாண்டிய கள்ள நோட்டு உற்பத்தி என்று அவர்கள் கதைப்பதெல்லாம் இந்த நோக்கத்தை நிறைவேற்றும் வழிமுறைகளில் ஒன்றுதான்.  அறிவிக்கப்பட்ட இந்த நோக்கங்களுக்கும்  இந்த நடவடிக்கைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப் பார்ப்போம்.

1.500 மற்றும் 1000 ரூ நோட்டுக்களைச் செல்லாததாக்குவதன் மூலம் கருப்புப் பணத்தை ஒழிக்க இயலாது. ஏனெனில் இன்று மொத்தமுள்ள கருப்புப் பண்த்தில் பணமாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது வெறும் 5 முதல் 6 சதம்தான். கடந்த ஐந்தாண்டுகளில் நடத்தப்பட்ட வருமானவரிச் சோதனைகள் மூலம் வெளி வந்துள்ள உணமை இது. மற்றவை தங்கமாகவும், நகர்ப்புற நிலங்களாகவும், அந்நிய நாடுகளில் வாங்கப்படும் சொத்துக்களாகவும் அந்நியச் செலாவணியாகவும்தான் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை மூலம் அவற்றையெல்லாம் வெளிக் கொணர முடியாது.

2.இந்த நடவடிக்கை மூலம் கள்ள நோட்டுக்கள் ஒழிக்கப்படும் என்கிற பிரச்சாரத்திலும் பொருளில்லை. கொல்கத்தாவில் உள்ள ‘இந்தியப் புள்ளியியல் நிறுவன’ ஆய்வு ஒன்றின்படி இன்று புழக்கத்தில் உள்ள கள்ள நோட்டுகளின் மதிப்பு 400 கோடி ரூபாய்தான். அதாவது இன்று செல்லாதவை என ஆக்கப்பட்டுள்ள நோட்டுகளில் வெறும் 0.028 சதம்தான் கள்ள நோட்டுகள். இதற்காக 14 லட்சம் கோடி மதிப்புள்ள நோட்டுக்களைச் செல்லாததாக்கி மக்களைத் தெருவில் அல்லாட வைப்பது மாதிரி அநீதி, குரூரம், அபத்தம் ஏதும் இருக்க முடியுமா? இது ஏதோ மூட்டைப்பூச்சியை ஒழிக்க வீட்டைக் கொளுத்திய கதையை நினைவூட்டவில்லையா? தவிரவும் இந்த நோட்டுக்களைச் செல்லாததாக்கிவிட்டுப் புதிய நோட்டுக்களை அச்சிட ஆகும் செலவு 12,000 கோடி முதல் 15,000 கோடி ஆகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

3.தொடக்கத்தில் குறிப்பிட்டபடி இந்த நடவடிக்கை குறித்த செய்தி அப்படி ஒன்றும் இரகசியமாக வைக்கப்படவில்லை.

4.இருந்த கொஞ்ச நஞ்சக் கருப்புப் பணத்தையும் வெள்ளையாக்கப் பல வழிமுறைகள் இருந்தன. பழைய தேதியிட்டு தங்கம் வாங்குவது அதில் ஒன்று. கருப்புப் பணத்தை  மாற்றுவதற்கான கருப்புச் சந்தைகளும் உருவாகிச் சுறு சுறுப்பாக வேலைகள் நடந்தன.

5.கருப்புப் பணம் உற்பத்தியாகும் வழிகளைத் தடுக்கும் முயற்சி இணையாக மேற்கொள்ளப்படவில்லை. மொத்த தேசிய உற்பத்தியில் (GDP) கருப்புப் பணத்தின் மதிப்பு 20 சதம். எனவே ஆண்டுதோறும் உற்பத்தி ஆகும் கருப்புப் பணம் 30 லட்சம் கோடி. மொத்தமாகப் புழக்கத்தில் உள்ள பணத்தின் மதிப்பு வெறும் 17.77 லட்சம் கோடிதான். இதில் 86 சதம் 500 / 1000 ரூ நோட்டுகளாக உள்ளன. அவைதான் இன்று செல்லாததாக்கப்பட்டன. ஆக இவ்வாறு செல்லாததாக்கப்பட்ட அத்தனை பணமுமே கருப்புப் பணம்தான் என்றாலும் கூட இது ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தியாகும் கருப்புப் பணத்தில் பாதி மட்டுமே. இந்தக் கருப்புப் பண உருவாக்கத்தைத் தடுக்க எந்தத் திட்டமும் இல்லை.

6.விளம்பரத்துக்காக மோடி அரசு செய்த ஆரவாரங்கள் மக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் குழப்பங்களை ஏற்படுத்தின.  வாக்குறுதி அளிக்கப்பட்ட இந்த நோட்டுகளை செல்லாததாக்கியது மட்டுமின்றி அடுத்த சிலவாரங்களுக்குள் பணம் எடுப்பது, நோட்டுகளை மாற்றுவது அல்லது வைப்பில் செலுத்துவது தொடர்பாக சுமார் 59 ஆணைகளை அரசு இட்டுள்ளது. இவற்றில் பல சட்ட விரோத ஆணைகளாகவும் உள்ளன. ஆனால் நீதிமன்றத்திற்குச் சென்றால் இப்படித் தொடர்ச்சியான ஆணைகள், ஒன்றை ரத்து செய்து வெளியிடப்பட்ட இன்னொரு ஆணை என ஏகப்பட்டவை இருப்பதால், நீதிமன்றங்களுக்கும் சட்ட விரோத ஆணைகளைக் கண்டறிவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன

7.எந்தத் தயாரிப்பும், பிரச்சினைகள் குறித்த முன் ஊகங்களும் இல்லாமல் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் மூலம் பொது மக்கள் சந்தித்த துயரங்களை விளக்க வேண்டியதில்லை. ரிசர்வ் வங்கிக்கு அறிவிக்காமல் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் விளைவாக அது போதிய அளவு 100 / 50 ரூ நோட்டுகளை தயாராக வைத்திருக்கவில்லை. புதிய நோட்டுகளும் போதிய அளவு உடனடியாக அச்சிட முடியவில்லை. முன்னாள் திட்டக் குழு உறுப்பினர் சௌமித்ரா சவுத்ரி, “புதிய நோட்டுகள் அச்சடிக்க சுமார் ஆறு மாதங்கள், அதாவது. 2017 மே வரை ஆகும்” என்கிறார். புதிய நோட்டுகள் பழைய நோட்டுகளைவிட அளவில் சிறியதாக இருந்ததால் ATM கள் அனைத்தும் மறு சீரமைப்புச் செய்யப்பட வேண்டிய நிலைக்குள்ளாகின. இது பொருட்செலவு மட்டுமின்றி உடனடியாக ATM களும் வேலை செய்யாமல் போய் மக்கள் சந்தித்த அவதி சொல்லி மாளாது. அச்சிடப்பட்ட புதிய நோட்டுக்கள் தொழில்நுட்ப ரீதியாகபல நுணுக்கங்களுடன் தயாராவதாகவும் இனி யாரும் கணக்குக் காட்டாமல் அதிக அளவு இந்த நோட்டுகளைச் சேமித்து வைத்திருந்தால் தானாகவே அரசுக்கு அது தெரியும் எனவும் ‘ஜீபூம்பா’ கதைகளை எல்லாம் அரசு பரப்பி வந்தபோதும் வந்த நோட்டுக்கள் ஏற்கனவே இருந்தவற்றைக் காட்டிலும் தரம் குறைந்தவையாகவும், எந்தப் புதிய தொழில்நுட்பங்களும், பாதுகாப்புகளும் இல்லாதவையாகவுமே உள்ளன. எளிதாக இவற்றைக் கள்ள நோட்டுகளாக்க முடியும் என்பதோடு 2000 ரூ நோட்டுக்களை இப்படிக் கள்ள நோட்டுகள் ஆக்கினால் அப்படிச் செய்பவர்களுக்கு முன்னைக் காட்டிலும் கூடுதல் லாபமும் ஏற்படும்.

8.உயர் மதிப்பு நோட்டுக்கள் கருப்புப் பணத்தைச் சேமித்து வைக்க இலகுவாக உள்ளது எனச் சொல்லி 500 / 1000 ரூ நோட்டுக்களைச் செல்லாததாக அறிவித்துப் பதிலாக 2000 ரூ நோட்டுக்களை அச்சிடும் முட்டாள்தனத்திற்கு இன்றுவரை அரசிடமிருந்து எந்த சமாதானமும் சொல்லப்படவில்லை. பணப் பரிவர்த்தனை இல்லாப் பொருளாதாரம் என்றெல்லாம் ஆரவாரமாகப் பீற்றிக் கொண்டாலும் அதற்கான உள்கட்டுமானங்கள் ஏதும் இங்கு இல்லை. 30 கோடி மக்கள் இங்கே வங்கிக் கண்க்கு தொடங்குவதற்கான ஆதார ஆவணங்கள் இல்லாதோர். இன்டெர்நெட் தொடர்புகள், கம்ப்யூட்டர் வசதிகள் இல்லாத ஏராளமான மக்களைக் கொண்ட நாடு இது. ATM மற்றும் வங்கி வசதிகள் எல்லாம் பெருநகரங்களில்தான் போதிய அளவு இல்லை. இந்நிலையில் மீண்டும் உயர் மதிப்புள்ள நோட்டுகளைத்தான் அவர்கள் அச்சிட வேண்டி உள்ளது. இதையெல்லாம் முன்கூட்டிச் சிந்திக்கும் அறிவில்லாத ஒரு அரசு நமக்கு வாய்த்துள்ளது.

9.1000 ரூபாய்க்குப் பதிலாக 2000 ரூ நோட்டுகளை அச்சிட்டுவிட்டால் மட்டும் இங்கு எப்படிப் பணப் பரிவர்த்தனை இல்லாத பொருளாதாரத்தைக் கட்டமைக்க முடியும்? இங்குள்ள வங்கி வசதி வெறும் 40 சத அளவுதான். 22 சத மக்கள்தான் இன்டெர்னெட் வசதி உள்ளவர்கள். 19 சத மக்கள் மின்சார வசதிகூட இல்லாதவர்கள். 14 மில்லியன் வணிகர்களில் 1.2 மில்லியன் வணிகர்கள்தான் point of sale வசதி உடையவர்கள். இந்நிலையில் பணப்பரிவர்த்தனை இல்லாப் பொருளாதாரம் என்பது எளிய மக்களின் மீது சுமத்தப்படும் இன்னொரு அநீதி.

10.இந்த முட்டாள்தனமான அவசரக் குடுக்கை நடவடிக்கை மக்களுக்குப் பெரிய அளவில் துயரங்களை ஏற்படுத்தியுள்ளதோடன்றி தொழில் துறையையும் சகல மட்டங்களிலும் பாதித்துள்ளது. ஆட்டோமொபைல் மற்றும் சொகுசுப் பொருட்கள் விற்பனை 30 முதல் 60 சதம் வீழ்ச்சி. மொத்தத்தில் GDP சரிவு 1 முதல் 2 சதமாக இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது. பண்டிகை நாட்களில் வணிகம் வீழ்ந்து சிறு வணிகர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். உற்பத்தித் துறையும் பாதிக்கப்பட்டுள்ளது நிக்கேய் இந்தியா உற்பத்திக் கணக்கீட்டுப் புள்ளி (The Nikkei India Manufacturing PMI) அக்டோபரில் 54.4 ஆக இருந்தது நவம்பரில் 52.3 ஆகக் குறைந்துள்ளது.

“தொலை நோக்கில் நல்ல பலன்கள் கிடைக்கும்”  என்பதுதான் இதுவரை மோடி அரசின் ஒரே பதிலாக வெளிப்பட்டுள்ளது.  மன்மோகன் சிங் அன்று பொருளியல் வல்லுனர் கீன்சை மேற்கோள் காட்டி நாடாளுமன்றத்தில் சொன்னதைப் போல தொலை நோக்கில் நாம் எல்லோருமே செத்துப் போய் விடுவோம்.

.

பண மதிப்பு நீக்கம் பற்றி  இவர்கள் என்ன சொல்கிறார்கள்?

அமார்த்ய சென்:

“ரூபாய் நோட்டு என்கிற காகிதம் ஒரு ‘பிராமிசரி நோட்’, அதாவது அந்தக் காகிதத்தை ஒப்படைத்தால் அதில் வாக்களிக்கப்பட்ட மதிப்புள்ள தொகை எந்தக் கணமும் திருப்பித் தரப்படும் என்பதுதான். திடீரேன ஒரு அரசு தான் அளித்த அந்த வாக்குறுதியை மீறுவதாக அறிவித்தால் அது ஒரு கொடூரமான எதேச்சாதிகார அரசாகத்தான் இருக்க இயலும். யாரோ சில கோணல் பேர்வழிகள் கருப்புப் பணத்தை முடக்கி வைத்துள்ளார்கள் என்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த அறிக்கை இன்று மக்கள் அனைவரையும் கோணல் பேர்வழிகள் என்பதாக எதிர்கொள்கிறது. அவர்கள் கஷ்டத்திற்கு மட்டுமல்ல அவமானத்துக்கும் உள்ளாக்கப் பட்டுள்ளனர். வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டுள்ள கருப்புப் பணத்தைக் கொண்டுவந்து நம் மக்களின் வாழ்வை வளமையாக்கப் போகிறேன் என்கிற தேர்தல் நேரத்து வாக்குறுதியைப் போலவே இதுவும் ஒரு பம்மாத்துதான்.”

முன்னாள் ரிசர்வ் வங்கித் தலைவர் ரகுராம் ராஜன் :

ஒரு காலத்தில் பணமதிப்பீட்டு நீக்கம் என்பது கருப்புப் பணத்தை வெளிக் கொணரும் உத்தியாக இருந்திருக்கலாம். இப்போது கருப்புப் பணத்தை யாரும் மொத்தமாக பணமாக வைப்பதில்லை. அதைப் பலவாறாகப் பிரித்து வைக்கின்றனர். பெரிய அளவு தங்கமாகப் பதுக்கி வைக்கப்படுகிறது. இதை வெளிக் கொண்ர்வது கடினம். நமது நாட்டில் அதிகபட்சமான வரி என்பது மொத்த வருமானத்தில் 33 சதம்தான். தொழில் வளர்ச்சி அடைந்த பல நாடுகளில் வரி இதைவிட அதிகம். அமெரிக்காவில் இது 39 சதம். விற்பனை வரியையும் சேர்த்தால் இது 50 சதத்தை எட்டும்திப்போது உள்ளதைக் காட்டிலும் இன்னும் திறமையான வரி வசூல் முறைதான் கருப்புப் பணம் உற்பத்தியாவதைத் தடுக்க சரியான வழி. 

முன்னாள் அமெரிக்க நிதித்துறைச் செயலர் லாரன்ஸ் எச். சம்மெர்ஸ் (Lawrence H. Summers)

பல குற்றவாளிகள் தப்பித்தாலும் பரவாயில்லை. ஒரு அப்பாவி தண்டிக்கப்படக் கூடாது என்பது நீதி வழங்கல் தொடர்பான ஒரு அறம். இது பொருளாதார நடவடிக்கைகளுக்கும் பொருந்தும். (அதேபோல இன்று மோடி அரசு உருவாக்கியுள்ள) இந்தக் குழப்பத்தின் ஊடாக கருப்புப் பணத்தை ஒழிக்கிறேன் என்ற பெயரில் அப்பாவிப் பொதுமக்கள் துயரத்திற்கு ஆளாக்கப்பட்டிருப்பது ஒரு அறக்கேடு.

The Guardian:

மோடி அரசு இந்தியப் பொருளாதாரத்தின் மீது பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த பண மதிப்பு நீக்கத்தின் விளைவாக 2 ட்ரில்லியன் டாலர் மதிப்புள்ள இந்தியப் பொருளாதாரம் சுருங்கும். ஊழலில் சம்பாதித்த பணத்தை ஷேர்களாகவும், ரியல் எஸ்டேட்டிலும், தங்கமாகவும் பதுக்கி வைத்திருக்கும் பணக்காரர்கள் இதனால் பாதிக்கப்படப் போவதில்லை. ஆனால் வங்கிக் கணக்குகள் இல்லாத பெரும்பாலான ஏழை எளிய மக்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.

The New York Times :

இந்தியாவில் கோலோச்சுவது நேரடியான பணப் பரிவர்த்தனைதான். சுமார் 78 சதப் பரிவர்த்தனைகள் நேரடியான பணப் பரிவர்த்தனையின் ஊடாகத்தான் நடைபெறுகிறது… இப்போது மோடி அரசு புதிய 500, 2000 ரூ நோட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. எனவே பணப் பரிவர்த்தனையின் ஊடான பொருளாதார ஊழல்கள் இனி இந்தப் புதிய நோட்டுக்களின் ஊடாக தொடரப் போகிறது.

Al Jazeera : இந்த நடவடிக்கை ஏழை மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது. பணப் பரிவர்த்தனை மூலமாகவே தம் தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டிருந்த (நடுத்தர) மக்களும் கூட இன்று வங்கிகள் முன்பும் ATM கள் முன்பும் குவிந்துள்ளனர். .

 

இன்குலாப் குறித்த ஜெயமோகனின் வக்கிர உமிழ்வுகள்

இன்குலாப் : காலன் வெல்லலாம், கவிதைகள் வாழும்

கவிஞர் இன்குலாபிற்கு களத்தில் நிற்கும் அனைத்துத் தரப்பு இயக்கத்தினரும் ஒருமித்து அஞ்சலி செலுத்தியுள்ளனர். நக்சல்பாரிப் பாரம்பரியத்தில் வந்தோர், மரபுவழி இடதுசாரிகள், தலித் இயக்கத்தினர், தமிழ்த் தேசியர்கள் என எல்லோரும் அணி அணியாக வந்து ஊரப்பாக்கத்தில் இருந்த அவரது எளிய இல்லத்தில் அன்று அஞ்சலி செலுத்திச் சென்று கொண்டிருந்தனர். அவர் இந்த இயக்க வேறுபாடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். அநீதிக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் அனைவரும் ஒன்றிணையும் குவி புள்ளியாக வாழ்ந்து மரித்துள்ளார் இன்குலாப்.

அவர் இந்த இயக்கங்கள் எல்லாவற்றோடும் நின்றிருந்தாலும் இவற்றில் ஏதொன்றிலும் உறைந்துவிட வில்லை. திராவிட இயக்கம் நடத்திய மொழிப்போராட்டத்தின் ஊடாக அரசியல்மயப்பட்ட அவர், அவர்கள் ஆட்சிக்கு வந்தபின் எல்லா இயக்கத்தினரையும் போலவே தொழிலாளர் போராட்டங்களின் மீது வன்முறையை ஏவியபோதும், தலித் பிரச்சினைகளில் நழுவியபோதும் அவர்களைக் கண்டிக்கவும் விலகி அகலவும் தவறவில்லை. எனினும் அவர்களினூடாக உருவான மொழி உணர்வை அவர் எந்நாளும் உதறிவிடவும் இல்லை. அதே தருணத்தில் அந்த மொழி உணர்வு வரட்டுத்தனமான பழம் பெருமைப் பேசுவதாகவும் இருந்ததில்லை. தமிழ்த் தொன்மை, தமிழ்க் கற்பு, தமிழ் மன்னர்களின் விரிவாக்க வீரப் பெருமைகள் முதலானவற்றை அவரளவுக்குக் கேலி செய்து கிழித்தெறிந்தவர்கள் இல்லை. அவரால் அதிகாரத்தின் குறியீடுகள் எதனுடனும் ஒன்றி நிற்க இயலாதென்பதற்கு அதுவே சான்று. ஈழப் போராட்டத்தையும், பிரபாகரனின் தலைமையையும் அவர் விமர்சனமின்றி ஆதரித்தபோதும்கூட ஈழ இதழொன்றில், “ஒருவேளை நீங்கள் இங்கு பெரும்பான்மையாக இருந்து, சிங்களர்கள் சிறுபான்மையாக இருந்து அடக்குமுறைக்கு ஆளாகியிருந்தால் நான் அவர்களோடுதான் நின்றிருப்பேன்” என ஈழ ஆதரவாளர்களை நோக்கிச் சொல்லும் நெஞ்சுரம் பெற்றிருந்தார். அந்த நெஞ்சுரம் இன்குலாப் தவிர வேறு எந்த விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கும் கிடையாது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

ஆனாலும் அவர் வைத்த அத்தனை விமர்சனங்களுக்கும் அப்பால் போராட்டங்களுக்கான அவரது ஆதரவு என்பது அவற்றின் நியாயங்களுக்காக மட்டுமே இருந்தது. எந்த வகையான சொந்தப் பலாபலன்களுக்கும் குறுகிய கால அரசியல் நோக்கங்களுக்கும் அப்பாற்பட்டதாகவே இருந்தது. அந்த வகையில் அவர் ஒரு அறம் சார்ந்த மனிதர். அவரிடம் நிறைந்திருந்த இந்த அற உணர்வே அவரது கவிதை ஊற்றின் அடிநாதமாகவும் இருந்தது. அவரது வாழ்வின் எளிமை, அவரது வாழ்வைப் போலவே நிகழ்ந்த அவரது மரணத்தின் ளிமை, அவர் விட்டுச் சென்றுள்ள குடும்பத்தின் எளிமை இவை மட்டுமே போதும் அவரது அற வாழ்விற்குச் சான்று பகர.
அவரது தலித் ஆதரவு அவர் வாழ்ந்து அனுபவித்த வாழ்வின் ஊடாகக் கிளர்ந்த ஒன்று. அவர் தன்னை ஒரு தலித்தாகவே உணர்ந்தார். ஏதோ தன் பெருந்தன்மையைக் காட்ட ஒரு வாய்ப்பாக தலித் ஆதரவு நிலை எடுத்தவர் அல்லர் அவர். அவரது மனுசங்கடா பாடலில் மட்டுமல்ல தலித் வன்முறைகளைக் கண்டித்துக் கிளர்ந்து சீறிய அத்தனை பாடல்களிலுமே அந்த நிந்தனைக்கும், வேதனைக்கும் ஆளானவர்களாக அவர் தன்னையே கண்டார். அவை இரங்கற் பாடல்கள் அல்ல. அவை மற்றவர்க்கு இரங்கிப் பாடியவை அல்ல. அவை தன்னுணர்ச்சிப் பாடல்கள். தன் சுய வேதனையைச் சொல்லி அரற்றிய பாடல்கள்; சீறிச் சினந்த பாடல்கள். சீறி வழி கண்ட பாடல்கள். சுயத்திற்கும் சுயத்திற்கு அப்பாலுக்கும் உள்ள இடைவெளியை அழித்த பாடல்கள்.

அரசியல் கவிதைகள் என்பன சுயப் பிரக்ஞையிலிருந்து விடுப்பட்டவை (that which renounces the fiction of self) என்பர். சுயத்தைத் துறக்க முயலும் போராட்டத்தின் ஊடாகவே (challenging the ego within the poetry itself) அரசியல் கவிதைகள் பிறக்கின்றன. அந்த வகையில் இன்குலாப்பின் கவிதைகளில் பல தமிழின் முக்கிய அரசியல் கவிதைகள் எனும் இடத்தைப் பெறுகின்றன.

ஒரு அறம் சாரந்த வாழ்வை வாழ்ந்து விடைபெற்றுள்ள அவரை ஜெயமோகன் எனும் ஆர்.எஸ்.எஸ் எழுத்தாளர் கோடூரமான சொற்களில் சாடியுள்ளதை இங்கு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். தமிழ் எழுத்துக்களுக்கு அக்மார்க் குத்திரை குத்தும் அதிகாரியாக நினைத்துக் கொண்டிருக்கும் அவர் தன் பதிவொன்றில் இன்குலாப் மீது துப்பியுள்ள அவதூறுகள் வருமாறு:

“நேர்மையான இலக்கியச்செயல்பாட்டாளர் (என நினைத்திருந்தேன் அப்படி அல்ல)”

“பாதுகாப்பான புரட்சிகளில் ஈடுபட்டவர்” (அதாவது ‘ரிஸ்க்’ எடுக்காமல் பம்மாத்து பண்ணியவர்)

“புரட்சி என்றால் வசைபாடுதல் என அன்று ஒருமாதிரி குத்துமதிப்பாக புரிந்துகொண்டிருந்தார். இந்தியாவில் சில விஷயங்கள் முற்போக்கு என்றும் புரட்சிகரமானவை என்றும் சொல்லப்படும். அவை என்ன என்று தெரிந்துகொண்டு அவற்றைச் சொல்லிக்கொண்டிருந்தார்”

(ஆபத்துகளைத் தவிர்த்து) இன்குலாப் மிக நுணுக்கமாக அந்த இடங்களை லௌகீகமான விவேகத்துடன் கடந்து வந்தார்..

“கிருஷ்ணனையும் ராமனையும் வசைபாடினார். ராஜராஜ சோழன் என்ன புடுங்கினான் என்று கேட்டார். அதே கேள்வியை தன் மதம் பற்றிக் கேட்டிருந்தால்தான் அவர் உண்மையில் புரட்சியைத் தொடங்கியிருக்கிறார் என்று அர்த்தம்.”

“தனியாளுமையின் நேர்வெளிப்பாடல்ல கவிதை. இன்குலாபுக்கு நவீனக் கவிதையின் ஆரம்பப் பாடமே புரியவில்லை. அவர் எழுதியவை வெறும் கூக்குரல்கள். பிரச்சார அறைகூவல்கள். பிரகடனங்கள்.”

இவை அனைத்தும் ஜெயமோகன் இன்குலாபின் மீது தூற்றியுள்ள வசைகள். தன் பிள்ளைகளைக் கூட எல்லோரையும் பெரிய படிப்பு படிக்க வைத்து மேம்படுத்துவதை நோக்கமாகக் கொள்ளாத வாழ்க்கை வாழ்ந்த ஒரு பெருந்தகையை, எந்த நேரமும் வேலை போய்விடலாம் என்கிற அச்சத்துடனேயே வாழ்வைக் கழித்த ஒரு கவிஞனை, போலீஸ் மிரட்டல்களுக்கும், நள்ளிரவுக் கடத்தல்களுக்கும் ஆட்பட்ட ஒரு போராளியை, முஸ்லிம்களின் மத்தியில் உள்ள சாதியத்தையும் பெண்ணடிமைத்தனத்தையும் வெளிப்படையாகக் கண்டித்த ஒரு நேர்மையாளரை, தான் பணியாற்ரிய ஒரு முஸ்லிம் கல்லூரியிலேயே அடக்குமுறைகளை எதிர்த்து நின்று, ஆதரவாக வந்த பழனிபாபாவுடன் மோதத் தயங்காத ஒரு மதச்சார்பற்ற வாழ்வை வாழ்ந்தவரை ஒரு எழுத்தாளன் இத்துனைக் கீழிறங்கி அவதூறு செய்திருப்பது கடுமையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.

இதற்குமேல் விரிவான பதில் ஜெயமோகன் போன்ற நபர்களுக்குத் தேவையில்லை.

***************************************************

கிட்டத்தட்ட சுமார் பத்தாண்டுகளாக இன்குலாப் நோய்வாய்ப்பட்டு முடங்கி இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன் அவர் தன் கால்களில் ஒன்றை இழக்கவும் நேரிட்டது. அக்காலகட்டத்தில் அவர் அதிகம் எழுதவில்லை. எனினும் அப்போது வர் எழுதியவற்றில் சில முன்னதன் தொடர்ச்சியாகவும் (முள்ளிவாய்க்கால் கரையில் அலைந்துகொண்டிருக்கிறது என் தாய்மொழி), பல இன்னொரு கட்டத்தை எட்டியதாகவும் உள்ளன. எடுத்துக்காட்டாக அவர் இறுதியாக எழுதியது எனச் சொல்லப்படும் கீழ்க்கண்ட கவிதையைச் சொல்லலாம்:

கண்ணாமூச்சு

(இறுதிக் கவிதை, உகரம் இதழ்)

“உயிர்ப்பின் போதே என்னுடன்
ஒப்பந்தம் செய்தது காலம்
தான் விரும்பும்போது தன்னோடு
கண்ணாமூச்சு ஆட வேண்டும்

கருவறைச் சுவரில்
கைச்சாத்திட்டோம்

தவழும்போதே ஆட்டம் தொடங்கியது.
நான்தான் ஜெயித்தேன்.

பிள்ளைப் பருவமும் இப்படியே
தொடர்ந்தது.
இளமையில் ஒப்பந்தம்
குறித்து
மறந்தே போனோம்.

என் கிளைகளில் பறவைகள்
பேசின.
கருங்குயிலும் வரிக்குயிலும்
இடையறாது கூவின.
செண்பகக் குயில்
கூடுகட்டிக்
குஞ்சும் பொரித்தது.

வெளியும் ஒளியும்
எமக்குச் சாட்சியமாயின.

காலம்
என் பற்கள் சிலவற்றைப்
பிடுங்கியது.
ஒரு கண்ணில் ஒளியைத்
திரையிட்டது.
மூக்குக்கு மணத்தை
மறைத்தது.
இதயத்தைக் கீறிப்பார்த்தது
ஒரு காலைப் பறித்து
ஊனமாக்கியது.
என் இளமை உதிர்ந்து
விட்டது

காலம் இன்னும் வேர்களைக்
குலுக்கி
விளையாடக் கூப்பிடுகிறது

இத்தனைக் காயங்களுக்குப்
பிறகும்
என் இருப்பு
என் திறமையாலா?
காலத்தின் கருணையாலா?

என் பற்களைப் பிடுங்கிச்
செல்லலாம்
என் சொற்கள் சிரிக்கும்

என் கண்ணொளியை
மறைக்கலாம்
என் சிந்தனை சுடரும்

என் இதயத்தை நிறுத்தலாம்
என் எழுத்துத் துடிக்கும்

என் ஒரு காலை வாங்கலாம்
என் சுவடுகள் தொடரும்

இறுதியாக ஆடிப் பார்க்கலாம்!”

(நன்றி: செ.சண்முகசுந்தரம்)

இன்குலாபின் “ஒவ்வொரு புல்லும்” எனும் மொத்தக் கவிதைத் தொகுதி வெளிவந்த பின் இப்படியாக அவர் எழுதியுள்ள கவிதைகளை வாசித்து மதிப்பீடு செய்வது அவசியம். மனிதர்கள் வாழ்ந்து கொண்டும் வளர்ந்து கொண்டும் இருக்கின்றனர். நோய், பிரிவு என்பனவெல்லாம் பல மாற்றங்களை ஒவ்வொருவரிடமும் எற்படுத்துகின்றன். படைப்பாளிகளும் இதற்கு விதிவிலக்கல்ல. அந்த வகையில் 2010 க்குப் பிந்திய இன்குலாப்பின் எழுத்துக்கள் விரிவாக விவாதிக்கப்பட வேண்டும். அதே போல ‘ஆனாலும்’ எனும் தலைப்பில் தொகுக்கப்பட்ட அவரது கட்டுரைகள், “பாலையில் ஒரு சுனை” எனும் அவரது தொடக்க காலக் கதைத் தொகுப்பில் உள்ள 12 கதைகள் மற்றும் ஒரு குறுநாவல் ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துக் கொண்டு இன்குலாப் எனும் நம் காலத்து நாயகனின் மொத்தப் படைப்புகளையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும்.

காலனுக்கும் இன்குலாப்புக்கும் நடந்த கண்ணாமூச்சி விளையாட்டில் காலன் வென்றுவிட்டான். இன்குலாப் காலம் ஆகிவிட்டார். அவர் இதயம் நின்றுவிட்டது. ஆனால் அவர் எழுத்து துடித்துக் கொண்டுள்ளது.

இன்குலாப்: போராட்டங்கள் ஈன்ற சிசு 

(கவிஞர் இன்குலாப் குறித்து இன்றைய ‘உயிர்மை’ மாத இதழில் வெளிவந்துள்ள கட்டுரை)

சில நேரங்களில் அப்படித்தான் நடந்துவிடுகிறது. சுமார் இரண்டு மாதங்கள் இருக்கும், ஒரு தொலைபேசி அழைப்பு காலையில் என்னை எழுப்பியது. “தோழர், நேத்து இன்குலாபைப் பார்த்தேன். உடம்பு சரியில்லைன்னு கேள்விப்பட்டுப் போயிருந்தேன். ரொம்ப முடியாம இருக்கார். போன உடனே அவர் முதலில் கேட்டது, மார்க்ஸ் எப்படி இருக்கார்னுதான்…”

இனி என்ன செய்தாலும் ஆற்றிக் கொள்ள இயலாத துயராக அடுத்த சில வாரங்களில் அந்தச் செய்தி. கடைசியாக அவரைச் சந்தித்தது கவிக்கோ அப்துல் ரஹ்மான அவர்களின் பவழ விழா நிகழ்ச்சியில். ஊரப்பாக்கத்திற்குக் குடிபெயர்ந்த பின் இன்குலாபைச் சந்திக்கும் வாய்ப்புகள் குறைந்தன. உடனடியாகச் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தக் கூட இயலாத தொலைவில் இருந்தேன். என் துயரத்தை நண்பர்களோடு முகநூலில் இப்படிப் பகிர்ந்து கொள்ளத்தான் முடிந்தது.

“இன்குலாப் என் இளமைக்கால அரசியல் ஈடுபாட்டின் ஆதர்சங்களில் ஒருவர். என்னுடைய முதல் நூல் ‘எதுகவிதை’ யை நான் அவருக்குத்தான் அர்ப்பணித்திருந்தேன். அந்த நூலுக்கு அவர்தான் முன்னுரையும் எழுதியிருந்தார். அந்த நூலில் நான் அன்றைக்கு இருந்த இளமைத் துடிப்புடனும் உணர்ச்சிப் பெருக்குடனும் பாரதிக்குப் பிந்திய மகாகவி என அவரைக் குறிப்பிட்டிருந்தேன். என்னைப் போன்ற அன்றைய இளைஞர்கள்,  பாரதிக்குப் பின் சம கால அரசியலில் அச்சமின்றி நேர்மையாய்த் தன் குரலை ஒலித்த ஒரு பெருங் கவியாய் அவரைத்தான் கண்டோம். பாரதி காலத்திய ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலின் வடிவம் பிரிட்டிஷ் எதிர்ப்பு என்றால் இன்குலாப் காலத்தி்ய ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலை நக்சல்பாரிகள்தான் முன்னெடுத்திருந்த சூழலில் அவர் எள்ளளவும் தயக்கமின்றி அவர்களுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.

அன்று அப்படி நக்சல்பாரிகளுடன் அடையாளப்படுத்திக் கொள்வது என்பது அத்தனை எளிதானதல்ல. கடும் அடக்குமுறைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பது குறித்த எந்த அச்சமும் இன்றி அவர் தன் கவிதைகளையே ஆயுதமாக்கிக் களத்தில் நின்றார்.

சோழர்கால நிலவுடமைக் கொடுமையைத் தோலுரித்த இன்குலாப்பின் ‘ராஜராஜேச்வரீயம்’ எனும் கவிதை அன்றைய அரசால் பாடநூலிலிருந்து நீக்கப்பட்டபோது கல்லூரி ஆசிரியர் அமைப்புகளின் ஊடாக நாங்கள் எல்லாம் எதிர்த்துக் குரல் கொடுத்தோம்.

தஞ்சையில் ஏகப் பெரிய விளம்பரங்களுடன் ராஜராஜ சோழன் சிலையை கருணாநிதி அரசு திறந்தபோது இன்குலாப்பின் அந்தக் கவிதையை சில ஆயிரம் பிரதிகள் அச்சிட்டு நானும் மன்னை உ.இராசேந்திரனும் தஞ்சை வீதிகளில் வினியோகித்துத் திரிந்தபோது காவல்துறை எங்களை வலைவீசித் தேடியது.

எளிய வாழ்க்கை வாழ்ந்தவர் இன்குலாப். அப்போது நான் தஞ்சையில் வசித்து வந்தேன். சென்னை வரும்போதெல்லாம் தவறாது ஜாம்பசார் ஜானிஜான் தெருவில் இருந்த அவரது வீட்டிற்குச் செல்வேன். முதல் முறை நான் அவரைச் சந்திக்கச் சென்ற போது சென்னையில் கடும் தண்ணீர்ப் பஞ்சம். என்னை உட்காரச் சொல்லிவிட்டு அவர் கீழே ஓடி ஓடிச் சென்று குழாயில் நீர் பிடித்துச் சுமந்து வந்த காட்சி இன்னும் நிழலாய் என் மனதில்……

சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த இன்குலாப் எந்த மத அடையாளங்களையும் தரித்துக் கொண்டதில்லை. சாகுல் ஹமீது எனும் தன் இயற் பெயரைக்கூட அவர் எந்நாளும் முன்னிலைப்படுத்திக் கொண்டதில்லை.

ஈழப் போராட்டம் மேலெழுந்தபோது அவர் முழுமையாக எந்த விமர்சனங்களும் இன்றி அதை ஆதரித்தார்.

கடந்த சுமார் 20 ஆண்டுகளாகவே அவர் நோய்வாய்ப்பட்டு , இறுதிப் பத்தாண்டுகள் அதிக இயக்கமின்றி முடங்க நேரிட்டது. மென்மையும், அன்பும், கனிவும் மிக்க அவரது குரலையும், புன்னகை தவழும் அவரது முகத்தையும் அடிக்கடி பார்க்கும் வாய்ப்பை எல்லோரும் இழக்க நேரிட்டது.

இனி அவரை என்றென்றும் பார்க்க இயலாது என எண்ணும்போது கண்கள் பனிக்கின்றன. நெஞ்சம் நெகிழ்கிறது.

“இன்குலாப் ஜிந்தாபாத்” எனும் எழுச்சி முழக்கம் இன்று
புதிய பொருள் பெறுகின்றது.

என் காலத்துப் புரட்சிக் கவிஞனுக்கு என் மனமார்ந்த அஞ்சலிகள் !”

#   #    #

சிறுபான்மைச் சமூகத்திற்குள்ளும் பின் தங்கிய ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த  இன்குலாப் மொழி மற்றும் இனப் பற்றுகளின் ஊடாக அரசியலுக்கு வந்தவர். அக்டோபர் 1, 2000 த்த்தில் அவர் இலங்கை தமிழ் இதழ் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில், “சமூகத்தை மாற்றி அமைக்கக் கூடிய புரட்சிகர அரசியலில்தான் என் இளமைக் காலத்தில் எனக்கு ஈடுபாடு இருந்தது” எனக் கூறிய அவர், அதை அன்றைய தி.மு.க சாதிக்கும் எனத்தான் நம்பியதையும் பதிவு ன்செய்கிறார். “கருப்பு சிவப்புக் கொடி முழு சிவப்பாக மாறும்” என அண்ணா சொன்னதையும் நம்பினார். “1967 தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் திராவிடநாடு வரும்” என எதிர்பார்த்தார், ஆனால் அவர் நம்பிக்கைகள் பொய்த்தன. 1968ல் நடந்த கீழ்வெண்மணிக் கொடுமை, அதற்குக் காரணமானவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தித் தண்டனை பெற்றுத் தருவதில் அன்றைய ஆட்சியாளர்கள் காட்டிய மெத்தனம், அண்ணாவின் மறைவு, சிம்சன் தொழிலாளர் போராட்டத்தை தி.மு.க அரசு கொடுமையாக அடக்கியது ஆகியன தன்னைத் திராவிட இயக்க அரசியலிலிருந்து விலக்கி நக்சல்பாரி இயக்கத்தை நோக்கிக் கொண்டு சென்றதாக அந்த நேர்காணலில் கூறுகிறார்.

தனக்கு எக்காலத்திலும் தேர்தல் அரசியலில் ஈடுபாடு இருந்ததில்லை எனக் கூறும் அவர் அதனாலேயே “புரட்சியை நிகழ்ச்சி நிரலில் கொண்டு வந்திருந்த”தாக அன்று அவர் நம்பிய நக்சல்பாரி இயக்கத்தில் இணைந்தார்.

அப்போது நக்சல்பாரி இயக்கம் இந்தியாவெங்கிலும் அது கடுமையான அடக்குமுறைக்கு உள்ளாகியது. இன்குலாபும் அதற்கு விதிவிலக்கல்ல. அவர் கடுமையாகக் கண்காணிக்கப்பட்டதோடு நள்ளிரவில், குழந்தைகள் தூக்கம் கலைந்து பதற, உறுமிய ஜீப்பில் வந்து வந்து அழைத்துச் சென்று விசாரிக்கப்பட்ட அனுபவங்களையும் எதிர் கொள்ள நேரிட்டது.

“என் வாழ்க்கை எப்போதும் பணி அச்சுறுத்தலுக்கும், எதிர்கால அச்சுறுத்தலுக்கும் இடையேதான் கழிந்திருக்கிறது. ‘சில நேரங்களில் உயிர்தரிப்பது வாழ்க்கையாக இருக்கிறது. சிலநேரங்களில் உயிர் கொடுப்பது வாழ்க்கையாக இருக்கிறது’ என மகாகவி இக்பால் எழுதியதைத்தான் நினைத்துக் கொள்கிறேன்” என வாழ்வின் இறுதிக் கட்டத்தில் (2015) அவர் ‘குங்குமம்’  இதழுக்கு அளித்த நேர்காணலில் குறிப்பிடுவதை அத்தகைய வாழ்வை வாழ்ந்தவர்கள்தான் எளிதில் உணர்ந்து கொள்ள இயலும்.

இருந்தபோதும் அவர் எந்நாளும் அத்தகைய ஒடுக்குமுறைகளையும் போராட்டங்களையும் தன் கவிதைகளிலும் ‘தராசு’, ‘உங்கள் விசிட்டர்’ முதலான செய்தி இதழ்களில் எழுதிய பத்திகளின் ஊடாகவும் கண்டிக்கத் தவறவில்லை.

நெருக்கடி நிலை காலத்திற்குப் பின் அரசியலுக்கு வந்த எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு அவரது எழுத்துக்கள் ஆதர்சமாக இருந்தன. அந்தக் காலகட்டத்தில் அவரது அரசியல் தொடர்புகள் நக்சல்பாரி இயக்கங்களுக்குள் ‘வினோத் மிஸ்ரா குழு’ எனப்பட்ட சி.பி.ஐ (எம்.எல்) எனும் அமைப்புடன் இருந்தன. அது நக்சல்பாரி அரசியலில் இரண்டாவது கட்டம் எனலாம். இந்திய அளவில் கடுமையாக ஒடுக்கப்பட்ட அந்த இயக்கம் சிதறிக் கொண்டிருந்த காலம் அது. நக்சல்பாரி இயக்கத்தை அடையாளப்படுத்திய அம்சங்களில் ஒன்றான ஆயுதப் போராட்டத்தைக் கைவிட்டு தேர்தல் பாதையை நோக்கித் திரும்பியிருந்த குழு அது. அன்றைய காலகட்டத்தில் வெளிநாட்டு நிதி உதவிகளுடன் செயல்படும் தொண்டு நிறுவனங்களையும் புரட்சிகரச் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்கிற கருத்தைக் கொண்டிருந்த வகையிலும் அது பிற குழுக்களிடமிருந்து வேறுபட்டு இருந்தது. எங்களைப் போன்றவர்கள் இந்த அணுகல்முறைகளை ஏற்காததால் நாங்கள் வேறு குழுக்களில் இருந்தோம். இருந்தபோதிலும் இன்குலாபின் எழுத்துக்களும் கவிதைகளும் நக்சல்பாரி அரசியலை ஏற்றுக் கொண்ட அனைவராலும் ஏற்கப்பட்டன. கொண்டாடப்பட்டன.

1980 களுக்குப் பின், குறிப்பாக 1983 க்குப் பின் தமிழக அரசியலில் ஈழப் போராட்டம் மிகப் பெரிய தாக்கத்தை விளைவித்ததை அறிவோம். அடிப்படையில் தமிழ்த் தேசியப் பற்று மிக்க இன்குலாப் முழுமையாகத் தன்னை ஈழ ஆதரவுக்கு அர்ப்பணித்துச் செயல்பட்டார். இறுதிவரை அவரது அர்ப்பணிப்பு தொடர்ந்தது.

#   #   #

எனினும் இன்குலாப்பின் அரசியல் தமிழ்த் தேசியத்திலிருந்து பல அம்சங்களில் வேறுப்பட்டிருந்தது. இங்குள்ள தமிழ்த் தேசியர்கள் உருவாக்கியிருந்த, உருவாக்கி வருகிற ‘தமிழக வரலாற்றுப் பொற்கால’ பிம்பத்தை அவரளவு கட்டுடைத்தவர்கள் யாருமில்லை.

“திராவிட இயக்கங்கள் முன்னின்று நிகழ்த்திய மறுமலர்ச்சி இயக்கம் கூட புராணத்திற்கு மாற்றாகத் தமிழ்த் தொன்மங்களைத்தான் முன்வைத்தது. எல்லாம் மூவேந்தர் காலப் பெருமிதங்கள். பத்தினித் தனத்தின் உன்னதங்கள். பகுத்தறிவையும் மக்கள்நாயகத்தையும் நாத்தளராது சொற்பொழிந்தாலும் வரலாறு எனக் காட்டியவை மன்னர் காலக் கற்பிதங்கள். வீரத்துக்கு ஒரு கரிகாலன், விரிவாக்கத்துக்கு ஒரு ராஜராஜன் என்று பீத்தல் ராஜ உடைகளைப் போட்டுக் கொண்டு மக்களின் சிந்தனைகளை முடக்கினார்கள்”

என்பது அவரது கூற்று.

இது ஏதோ திராவிட இயக்கத்தை நோக்கிச் சொன்னவை என இன்றைய தமிழ்த் தேசியர்கள் மவுனம் காக்க இயலாது. இன்குலாப்பால் இழிவு செய்யப்பட்ட இந்த நிலவுடமைக் கொடுமைகளைத்தான் இன்றைய தமிழ்த் தேசியர்கள் தமிழர்களின் “காணியாட்சி முறை” எனப் பெருமிதம் கொள்கின்றனர். இன்குலாப்பால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட ராஜராஜன் அறிமுகப்படுத்திய தேவதாசி முறையை இன்று அவர்கள் கொண்டாடுவதை யாரும் மறந்துவிட இயலாது. இன்குலாபின் ‘ராஜ மகேந்திர சதுர்வேதி மங்கலம்’, ‘ஶ்ரீராஜராஜேச்சுவரியம்’, ‘பொட்டல் தோண்டிகள்’ எனும் மூன்று நெடுங்கவிதைகள் இந்த வகையில் முக்கியமானவை. தமிழ்த் தேசிய அரசியல் அபத்தங்களைக் கட்டுடைத்தவை.

இன்குலாப் இந்தக் கவிதைகளை எழுதிய காலத்தில் பேரா.நா.வானமாமலை மற்றும் மே.து.ராசுகுமார் போன்ற அவரது குழுவினர் ஒரு பக்கமும் நொபோரு கரோஷிமா, கத்லீன் கவ், ஒய்.சுப்பராயலு போன்றோர் இன்னொரு பக்கமும் சோழர்காலம் குறித்த பல முக்கியமான ஆய்வுகளை முன்வைத்துக் கொண்டிருந்தனர். முன்னதாக கல்கி கிருஷ்ணமூர்த்தி முதலானோர் கட்டமைத்திருந்த பொற்காலக் கட்டமைப்பு கலகலத்திருந்த காலம் அது. அவற்றை உள்வாங்கி எழுதப்பட்டவை இக்கவிதைகள்.

இன்னொரு பக்கம் தமிழ்ப் பேராசிரியரான இன்குலாப் ஆக்கிய இரு முக்கிய நாடக ஆக்கங்களான “ஔவை” மற்றும் “மணிமேகலை” ஆகிய இரண்டும்கூட இந்தத் தமிழ்த் தேசியப் பாரம்பரியத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டவை. தமிழ்த் தேசியம் என்றைக்குப் பெண்ணியம், தலித்தியம் குறித்தெல்லாம் பேசியது? என்றைக்கு அவற்றை அது கொண்டாடியது?

இன்குலாப்பின் ஔவை குறித்து நான் விரிவாக எழுதியுள்ளேன். அது நம் தமிழ்ப் பாரம்பரியம் மட்டுமல்ல ஏ.பி.நாகராஜன், எஸ்.எஸ்.வாசன் முதலானோர் முன்வைத்த ஔவையிலிருந்தும் வேறுபட்ட ஒன்று. பட்டையும், கொட்டையுமாய் முருகனைப் பாடிய ஒரு வயதான மூதாட்டியாக ஆத்திச்சூடி பாடிய ஔவையையும், விநாயகரகவல் மற்றும் ஞானக்கோவை பாடிய ஔவையையும் ‘தமிழ் மூதாட்டியாக’ அடையாளப்படுத்திக் கொண்டிருந்த தமிழ் மரபில் பாட்டும் கூத்துமாய்ப் பாடிவந்த சங்கத்து ஔவையை  மேடை ஏற்றினார் இன்குலாப். அவள் துள்ளும் இளமையள். அதியனுடன் கள்ளருந்தி மகிழ்பவள். அதேபோல அவர் தன் இறுதிக்காலத்தில் இன்னொரு நாடக நாயகியாக வரித்துக் கொண்டது சாத்தனாரின் மணிமேகலை. சமகால ஆண் தத்துவவியலாளர்கள் பலரையும் வாதில் வென்றவர் அவர். ஒரு பெண்ணைக் காவியத் தலைவியாகக் கொண்ட ஒரே பெருங்காவியம் அது.

இன்குலாபின் தலித் வெளிப்பாடுகள் குறித்து இங்கு விரிவாகச் சொல்லத் தேவையில்லை. அந்த வகையில் அவர் வெண்மணி ஈன்ற புத்திரன். அவர் காலத்தில் நடந்த தலித்கள் மீதான அனைத்து வன்முறைகளும் அவர் மூலம் கவிதைகளாய்ப் பதிவு கண்டன. அவரது ‘மனுசங்கடா’ பாடலை நண்பர் கே.ஏ.குணசேகரனுடன் பட்டி தொட்டிகளெல்லாம் முழங்கியவர்களில் என் இரு மகள்களும் உண்டு என்பதை கண்களில் நீர்பனிக்க நினைவுகூர்கிறேன்.

இவை மாத்திரமல்ல. ஈழத் தமிழ் இதழுக்கு அளித்த அந்த நேர்காணலில் அவர் இன்னொன்றையும் சொல்வார். தான் வெறும் தமிழ் உணர்வால் ஈழப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை எனக் கூறும் இன்குலாப், ஒருவேளை இலங்கையில் தமிழர் பெரும்பான்மையாக இருந்து அவர்களால் சிங்களச் சிறுபான்மையினர் ஒடுக்கப்பட்டார்கள் எனின் நான் அந்தச் சிங்களச் சிறுபான்மையோருடன்தான் நிற்பேனென்றார். அவரது உணர்வுகள் அறச்சீற்றத்தின் அடிப்படையிலானவை. வெறும் கேவலமான அர்சியல் லாபம் கருதியவை அல்ல.

#   #   #

“அகிம்சையின் முறையீடுகளை எந்த ஆதிக்கக்காரனும் செவி மடுப்பதில்லை” எனக் கூறும் இன்குலாப்,

“எனக்கு இசை தெரியாது. எனக்குக் கவிதை வசப்பட்டு வரும் முன்னே பாட்டு வசப்பட்டு இருந்தேன். என்னால் பாடமுடியாது. ஆனால் எனக்குள் எப்போதும் பாடியபடியே இருக்கிறேன். என் இசை எழுத்தாகிறது. அதிலும் போராட்டங்களின் கருக்களே என் இசை…”

“புரட்சிகர மரபு என்பது வெறும் கோட்பாடு சார்ந்ததல்ல. போராட்டத்திலிருந்துதான் கோட்பாடுகளும் மரபுகளும் உருவாகின்றன..”

என வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் போராட்டங்களின் புகழைப் பாடியவர் அவர்.. ஒரு மதவாதி கடவுளை வைக்கும் இடத்தில் அவர் போராட்டத்தை வைத்தார். எப்படி ஒரு மதவாதி அவனது கடவுள் விமர்சிக்கப்படுவதையோ, ஆய்வு செய்யப்படுவதையோ ஏற்றுக் கொள்ளமாட்டானோ அதே போல இன்குலாபுக்கும் போராட்டங்கள் ஆய்வுக்கு அப்பாற்பட்டவை.

2012 என நினைக்கிறேன். தோழர் வைகறை அவர்கள் இன்குலாப்பின் நேர்காணலுடன் என்னைப் போன்றவர்களின் கருத்துக்களையும் பெற்று ஒரு சிறு மலரொன்றை வெளியிட்டார். அதில் “இன்குலாப் : வற்றாத கவிதை ஊற்றின் இரகசியம்” எனும் தலைப்பில் நான் எழுதிய சிறு கட்டுரையின் இறுதிப் பகுதி இப்படி அமைந்திருந்தது;

“இந்தக் குறிப்பை எழுதுவதற்காக அவரது ‘ஒவ்வொரு புல்லையும்..’ என்கிற பெருந்தொகுப்பைப் புரட்டுகிறபோது இந்தக் கவிதைகள் அனைத்தையும் அவர் ஒரே நாளில் எழுதி முடித்தாரோ என்கிற பிரமிப்புத்தான் நம்மை அசத்துகிறது. கருத்து, உணர்ச்சி, மொழி, சொற் தேர்வு, இன்குலாப்பிற்கே உரித்தான அந்த இசை லயம்… இவற்றில் எந்தச் சிறு மாற்றமும் இல்லை. அவர் எழுதத் தொடங்கிய காலத்தில் இருந்த கவிதா மனோநிலை, உணர்ச்சிப் பெருக்கு ஆகியவற்றைச் சிறிதும் வற்றவிடாமல் அவர் எப்படிப் பாதுகாத்து வருகிறார்? 39 வயதில் செத்துப் போன பாரதி இன்னும் 30 ஆண்டு காலம் உயிருடன் இருந்திருந்தால் இப்படித் தன் கவித்துவத்தையும் சிந்தனைப் போக்கையும் மாற்றமின்றித் தக்கவைத்துக் கொண்டிருக்க மாட்டார் என்றுதான் தோன்றுகிறது. ஆனால் மிகப் பெரிய மாற்றங்கள் இன்குலாப் வாழ்ந்த காலத்தில் ஏற்பட்டுவிட்டன. சோவியத் யூனியனின் வீழ்ச்சி ஒன்று போதாதா மார்க்சீயத்தால் உந்துதல் பெற்ற ஒரு கவிஞன் நிலைகுலைய? நம் கண்முன் ஒரு ஒற்றைத்துருவ உலகம் உருவானது. மார்க்சீயத்திற்கு அடுத்தபடியாக இன்குலாப்பிற்கு உந்துதல் அளித்த ஈழப் போராட்டம் நசிந்தது. நசுக்கப்பட்டது.  இவை இன்குலாப்பிற்கு நிச்சயம் துயரத்தை விளைவித்துருக்கும்தான். ஆனால் எந்த மாற்றத்தையும் கலக்கத்தையும் அவரிடம் இவை ஏற்படுத்திவிடவில்லை. அவர் போராட்டங்கள் ஈன்ற சிசு. ‘எல்லாம் போராடும். நீயும் போராடு’ என்பதே அவரது தாரக மந்திரம். அவரைப் பொருத்தமட்டில் போராட்டங்கள் ஆய்வுக்குரியவை அல்ல. ஆய்வுசெய்பவர்களை அவர் சகித்துக் கொள்வதுமில்லை. உலகின் எந்த மூலையில் போராட்டங்கள் நிகழ்ந்தாலும் அவை அவரது கவிதைகளின் உயிர் மூச்சைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும். வற்றாத ஊற்றாய் அதே உற்சாகத்துடன் அவரிடம் கவிதைகள் ஊறிக் கொண்டிருப்பதன் இரகசியம் அதுதான்.”

#    #    #

இன்குலாப்பின் கவிதை ஆக்கங்கள் குறித்து இங்கு கவிதைகளே இல்லை எனச் சிலர் கூறுவது உண்டு. அந்த மேட்டிமை விமர்சனங்களுக்குத் தான் பதிலளிப்பதே தனக்கு இழுக்கு எனக் குறைந்தபட்சம் இருமுறை பதிவு செய்துள்ள இன்குலாப் அதற்காக விமர்சனங்களை முகம் கொள்ளத் தயங்கியதில்லை. சுய விமர்சனங்களுக்கும் அஞ்சியதில்லை. அப்படியாகவும், தன் நிறைவேறாத இலக்குகளாகவும் அவர் கூறிய சிலவற்றையும் தொகுத்துக் கொள்வது அவரைப் பற்றிய மதிப்பீடுகளுக்கு உதவும்.

சொல்வார்:

“இவ்வளவு காலத்திற்குப் பிறகு இப்போதுதான் எனக்கு எழுத்து பிடிபடுவதுபோலத் தோன்றுகிறது..”

“போராட்டங்களைப் பதிவு செய்துள்ள போதிலும் வெகுமக்களைக் கருவாகக் கொண்ட நெடுங்கவிதை ஒன்றைப் படைக்க வேண்டும் என்பது என் கனவு. இந்தக் கனவு நாடகங்களாக வடிவம் கொண்டு வருகிறது..”

பல்வேறு சமரசங்களோடுதான் தன் வாழ்க்கையும் அமைந்துள்ளது என ஓரிடத்தில் கூறும் இன்குலாப் எனினும் சமரசங்கள் சாசுவதமில்லை, அவற்றிற்கு அப்பாற்பட்ட போராட்டங்கள்தான் சாசுவதம் என்கிறார்.

“சமரசங்களால் கிடைக்கும் பலன்களைக் காட்டிலும் போராடுவதால் கிடைக்கும் நஷ்டங்களை நான் மதிக்கிறேன்..”

என்று கூறுபவர் தான் வந்த அரசியல் பாதை குறித்த சுயவிமர்சனமாகச் சொல்வது:

“இன்னும் நான் போராட்டத்திற்கான அமைப்பை முழுமையாக ஏற்றிருக்க வேண்டும். போராட்டத்தில் பங்கு பெறுவது என்றில்லாமல் பலபோராட்டங்களை நான் கட்டமைத்திருக்க வேண்டும்.சில போராட்ட வாய்ப்புகளை நான் தவறவிட்டுவிட்டேன். எழுத்துபூர்வமாக நான் எளிய மக்களின் கோரிக்கைகளைப் பதிவு செய்திருக்கிறேன். ஆனால் களப் போராளியாக நான் இன்னும் முனைப்புடன் செயல்பட்டிருக்க வேண்டும்…”

மொத்தத் தொகுப்பை உருவாக்கியபோது அவற்றில் கவித்துவம் குறைந்த சிலவற்றை நீக்கிவிடலாம் என எண்ணியதாகவும், அப்போது உரையாடிய பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் ‘இல்லை அப்படியே வரட்டும்’ எனச் சொல்லியதால் அந்த எண்ணத்தைக் கைவிட்டதாகவும் சொல்லும் இன்குலாப்,

“ஒரு கவிதை அதற்குரிய கலை நியாயங்களுடன் இயங்கவேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு உண்டு. என் கவிதைகள் பல அரசியல் நிகழ்வுகளின் உடனடிப் பதிவுகளாக இருந்தன. எனது அரசியல் பங்கேற்பின் முக்கியமான மையமாக என் கவிதை இருந்தது. அதனால் கவித்துவத்தில் பின்னப்படாத வெறும் வரிகளாகவும் வெளிப்பட நேர்ந்தது. அக்காலத்திய அரசியல் நிகழ்வுகளின் பதிவு என்பதால் கவித்துவம் குறைந்த சில வரிகளையும் தெரிந்தே இணைத்துள்ளேன்..”

“என் முதற்கவிதை எதிர்ப்பின் குரலாக இருந்தது. இன்றுவரை அப்படியே தொடர்கிறது. தாலாட்டாகவும், பாடல்களாகவும், பழமொழியாகவும் சின்ன வயதிலிருந்தே முகம் காட்டிய கவிதையை நான் எதிர்ப்பின் குரலாக அடையாளம் கண்டேன். ஒரு காதலின் பூங்கொத்தாக அது எனக்கு முதலில் அடையாளம் காட்டவில்லை. இன்று அது எனக்கு எல்லாமுமாக இருக்கிறது. இந்த வயதில் அது தனது முழு அழகையும் ஒளிவு மறைவில்லாமல் காட்டுகிறது. இந்தக் காட்சிக்கு இவ்வளவு காலம் ஆனதற்கு நான் காரணமா? கவிதை காரணமா? இன்று இந்த அழகின் உள்ளடக்கத்தை நான் வரித்துக் கொண்டாக வேண்டும்…”

இன்குலாப் போராட்டங்கள் ஈன்ற சிசு. தன்னலம் குடும்பநலம் என எதையும் அவர் தனது லட்சியங்களுக்கு இடையூறாவதை அனுமதிக்காது வாழ்ந்து மறைந்தவர்.

அவரது கவிதை ஆக்கங்களைப் பொறுத்த மட்டில் அவரே ஒரு கணம் யோசித்தது போல ‘கவிதைக்குரிய கலை நியாயங்கள் அற்ற கவிதைகளை” நீக்கி ஒரு தொகுப்பை உருவாக்க வேண்டும் எனில் இப்போதுள்ள அவரது பெருந்தொகுப்பில் கிட்டத்தட்ட பாதிக் கவிதைகளை நீக்கிவிட்டு ஒரு செந்தொகுப்பை உருவாக்கலாம். அப்படி உருவாக்கினால் அது தமிழ்ப் பாரம்பரியத்தின் சிறந்த படைப்புகளில் ஒன்றாக அமையும் என்பது உறுதி.

 

 

“மௌனத்தை மிகப் பெரிய ஆபத்தாகப் பார்க்கிறேன்!” – விகடன் தடம் நேர்காணல்

அ.மார்க்ஸ் – தமிழ் இலக்கியச் சூழலிலும் அறிவுச் சூழலிலும் பல்வேறு திசைமாற்றங்களை ஏற்படுத்தியவர். ‘இலக்கியம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட உன்னதமானது’ என்ற மாயையை, 90-களில் தன் கோட்பாட்டு விமர்சனங்கள் மூலம் உடைத்தெறிந்தவர். தலித் இலக்கியம், பெண்ணெழுத்து ஆகியவை தமிழில் உருவாவதற்கான வெளியை ஏற்படுத்தியவர். மார்க்சியம், பின்நவீனத்துவம், பெரியாரியம், அம்பேத்கரியம், காந்தி மறுவாசிப்பு எனத் தொடர்ச்சியாக உரையாடல்களை முன்வைத்தவர். வெறுமனே எழுத்தோடு நின்றுவிடாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் மீதான வன்முறைகளுக்கு எதிரான மனித உரிமைக் களப்பணியில் தன்னை ஒப்புக்கொடுத்தவர். இடைவிடாத பயணங்களின் வழியாக இயங்கிக்கொண்டிருக்கும் அ.மார்க்ஸ் உடனான மாலை நேர உரையாடல் இது…

எழுத்தின் மீதான ஆர்வம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?

என் அப்பா ஒரு கம்யூனிஸ்ட். மலேசியாவில் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்கியவர்களில் ஒருவரான என் அப்பா அந்தோணிசாமி நாடு கடத்தப்பட்டு தமிழகம் வந்தார். வாட்டாக்குடி இரணியன் போன்ற போராளிகளோடு தொடர்புடையவராக இருந்தார். அப்போது கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நக்சல்பாரிகள் என்று பல பிரிவுகளாக இருந்தாலும் அனைவருடனும் தொடர்பைப் பேணியவர் அப்பா. எனவே தோழர்கள் வந்துபோகும் இடமாக என் வீடு இருந்தது.

அப்பா வாசிப்புப் பழக்கம் உடையவர் என்பதால், இயல்பாகவே என் வீட்டில் புத்தகங்கள் இருந்தன. குறிப்பாக, ரஷ்ய மொழிபெயர்ப்புப் புத்தகங்கள். மறுபுறம் தமிழ், ஆங்கில நாளிதழ்கள், ஆனந்த விகடன், குமுதம், மஞ்சரி, சோவியத் நாடு போன்ற இதழ்களை வீட்டில் வாங்குவோம். அவை வீடு வந்து சேரும் முன்பே, தபால் அலுவலகத்துக்குப் போய் அங்கேயே தொடர்கதைகளை எல்லாம் படித்துவிடுவேன். ஒருமுறை என் அப்பா ஆனந்த விகடனில் வெளிவந்த முத்திரைக் கதைகளைக் குறிப்பிட்டு அவற்றைப் படிக்கச் சொன்னார். அவை எனக்கு மிகவும் பிடித்திருந்தன. தொடர்ந்து, ஜெயகாந்தனின் ‘யாருக்காக அழுதான்’ குறுநாவலை விகடனில் வாசித்தேன். மெள்ள மெள்ள வாசிப்பின் மீதான ஆர்வம் அதிகரித்தது. படிக்கப் படிக்க எல்லோரையும் போல எழுத வேண்டும் என்ற ஆர்வம் எனக்கும் ஏற்பட்டது. கல்லூரி மலரில் பாரதி பற்றி ஒரு கட்டுரை எழுதினேன். அதுதான் அச்சில் வந்த என் முதல் எழுத்து.

அப்போது, எங்கள் வீட்டுக்கு நக்சல்பாரி இயக்கத்தைச் சேர்ந்த பல தோழர்கள் வருவார்கள். ஆனால், என் அம்மா என்னை அவர்கள் பக்கமே போகவிட மாட்டார். அப்பாவுக்கு நேர்ந்த காவல்துறை நெருக்கடிகளினால் அம்மாவுக்கு ஏற்பட்ட அச்சம்தான் காரணம். இதனால் நானும் அவர்களுடன் நெருங்க மாட்டேன். ஆனால் அப்போது உள்ளூரில் ஓரளவு செல்வாக்குடன் இருந்த சி.பி.ஐ கட்சியுடன் கொஞ்சம் நெருக்கமாக இருந்துவந்தேன். எமெர்ஜென்சி காலம் என்னைப் போன்றவர்களுக்கு ஒரு பெரிய அரசியல் விழிப்பு உணர்வைக் கொடுத்தது. சி.பி.ஐ கட்சி எமெர்ஜென்சியை ஆதரித்ததால், நான் சி.பி.ஐ-யுடன் இருந்த தொடர்பைத் துண்டித்துக்கொண்டு சி.பி.எம் கட்சியில் இணைந்தேன். கல்லூரி ஆசிரியனாக இருந்துகொண்டே தீவிரமாகச் செயல்பட்டேன். சி.பி.எம் கட்சியின் ‘தீக்கதிர்’, ‘செம்மலர்’ இதழ்களில் கட்டுரைகள் எழுதினேன். வாரம் இரு கட்டுரைகள்கூட எழுதி இருக்கிறேன். என் கட்டுரைகள், கட்சியின் சிறுபிரசுரங் களாகவும்கூட வெளியிடப்பட்டன. கவிஞர் மீராவின் ‘அன்னம்’, பொதியவெற்பனின் ‘முனைவன்’ சிற்றிதழ்களிலும் கட்டுரைகள், விமர்சனங்கள் எழுதத் தொடங்கினேன். ‘மணிக்கொடி’ இதழ்களை ஆராய்ந்து ‘முனைவன்’ இதழில் எழுதிய கட்டுரையும் கி.ராஜநாராயணன் மணிவிழா அரங்கில் பேசி பின் மீரா வெளியிட்ட ‘ராஜநாராயணியம்’ நூலில் வந்த கட்டுரையும் மிகுந்த கவனம் பெற்றன. இப்படித்தான் எனது எழுத்துகள் தொடங்கின.

அந்தக் காலகட்டத்தில் யாருடைய எழுத்துகள் உங்களைப் பெரிதும் பாதித்தன?

மார்க்சிய விமர்சகர்களான கைலாசபதி, கா.சிவத்தம்பி ஆகிய இருவரும் அப்போது என்னை மிகவும் பாதித்தவர்கள். இருவருமே பேராசிரியர் ஜார்ஜ் தாம்சனிடம் பயின்றவர்கள்.

கா.சிவத்தம்பியுடன் ஆறு மாத காலம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அவர் தஞ்சையில் இருந்தபோது நானும் பொ.வேல்சாமியும் தினமும் அவருடன் மாலை நேரத்தைக் கழிப்போம்.

கா. சிவத்தம்பியின் பேச்சைப்போல் எளிமையானவை அல்ல அவரது எழுத்துகள்.வாசிக்கச் சற்றுக் கடினமானவை. அதேசமயம், கைலாசபதியின் எழுத்துகளோ எளிமையானவை. கைலாசபதி பத்திரிகையாளராக இருந்தது அவரது எளிமையான நடைக்குக் காரணமாக அமைந்தது. ஆகவே, அவரது எழுத்துகள் என்னை மிகவும் வசீகரித்தன. இலக்கியம் மற்றும் வரலாற்று ஆய்வுகளில் கைலாசபதியின் நூல்கள் பெரிதும் பாதித்தன. மார்க்சிய நோக்கில் விஷயங்களைப் பார்க்கும் ஆர்வம் அவர் மூலம்தான் எனக்கு ஏற்பட்டது.

மேலும், அப்போது இடதுசாரிகளிடம் ‘ரஷ்ய ஆதரவா…? சீன ஆதரவா…?’ என்ற நிலைப்பாடு முக்கிய விவாதமாக இருந்தது. இதில், கா.சிவத்தம்பி ரஷ்யாவை ஆதரித்தார்; கைலாசபதி சீனாவை ஆதரித்தார். என்னைப் போன்றவர்களுக்கும் சீன ஆதரவு நிலைப்பாடே இருந்ததால், கைலாசபதியிடம் ஈடுபாடுகொண்டேன்.

இயல்பாகவே என்னிடம் தேடல் அதிகம் இருந்ததால், நிறைய தேடித் தேடி வாசித்தேன். மார்க்சிய எழுத்தாளர்களோடு நில்லாமல், தமிழில் வெளிவந்துள்ள ஆய்வு நூல்கள் அனைத்தையும் வாசித்தேன். தமிழில் வந்த முக்கிய நாவல்கள், சிறுகதைத் தொகுதிகள் எல்லாவற்றையும் வாசித்தேன். அந்தக் காலத்தில் என்னை மிகவும் ஈர்த்தவர்களில் தி.ஜானகிராமனும் ஒருவர். நியோ மார்க்சியக் கருத்துகளும் என்னை ஈர்த்தன. இவை எல்லாம் சி.பி.எம் கட்சியின் மேலிடத்தில் இருந்தவர்களுக்குப் பிடிக்கவில்லை. பிறகு, எனக்கு அவர்களோடும் முரண்பாடு ஏற்பட்டது. கட்சியில் இருந்து வெளியே வந்தேன். இப்போதும் அந்தக் கட்சி அப்படித்தான் இருக்கிறது எனச் சொல்லவில்லை. நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சோவியத் மற்றும் கம்யூனிஸக் கொள்கைகளுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு இந்த மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

ஜெயகாந்தன், கி.ரா, தி.ஜானகிராமன் எனத் தொடங்கிய நீங்கள், ஏன் புனைவுகள் எழுத விரும்பவில்லை?

எனக்கு ஏற்பட்ட அரசியல் ஆர்வம், என்னை அரசியல் கட்டுரைகள் எழுதுபவனாகவும் இலக்கிய விமர்சனம் செய்பவனாகவும் மாற்றியது. எனக்கு முன்பிருந்த இளைய தலைமுறைக்கு, திராவிட இயக்கத்தின் அண்ணாதுரை, கருணாநிதி போன்றோரின் எழுத்துகள் ஆதர்சம் என்றால், என்னுடைய தலைமுறை புதிய இடதுசாரி மற்றும் அதற்கும் அப்பாற்பட்ட நவீனச் சிந்தனைகளால் ஊக்கம் பெற்றது எனலாம். அப்படியான நூல்களையும், மொழி பெயர்ப்புகளையும், அவற்றை வெளியிட்டுவந்த சிற்றிதழ்களையும் தேடிப் படித்தேன். இந்த எழுத்துகள் எனக்குப் புதிய திறப்பை ஏற்படுத்தின. தமிழ் இலக்கியங்களை இயங்கியல் அடிப்படையில் எப்படிப் பார்க்க வேண்டும் என்றும், தமிழ் வரலாறு, பண்பாடு அனைத்தையும் எப்படி வெறும் உயர்வுநவிற்சி மனோபாவமற்று, வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும் என்றும் தெரிந்துகொண்டேன். சமகால அரசியல் போக்குகளோடு ஒன்றிச் செயல்பட்டு வந்ததாலும், அரசியல், சமூகம் சார்ந்த கட்டுரைகளுக்கே முக்கியத்துவம் தரவேண்டிய நிலை ஏற்பட்டது.

ஆனாலும், இலக்கிய விமர்சனத்தில் தீவிரமாக இயங்கிவந்தவர் நீங்கள். இப்போது அதுவும் குறைந்துவிட்டதே… என்ன காரணம்?

நான் எழுதிய இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் என்பவை, வழக்கமான இலக்கிய நுணுக்கங்களைச் சுட்டும் கட்டுரைகள் அல்ல. ஒருவகை சமூக ஆய்வு விமர்சனங்களாகத்தான் அவை தொடக்கம் முதல் இருந்தன. பாரதி, கி.ரா., கே.டானியல், மௌனி, புதுமைப்பித்தன், எம்.வி.வெங்கட்ராம் இப்படி யாரைப் பற்றி எழுதினாலும் அவற்றின் ஊடாக சமூகத்தின் புனிதம் எப்படிக் கட்டமைக்கப்படுகிறது அல்லது உடைக்கப்படுகிறது என்பதைப் போன்ற சமூக நோக்கில்தான் படைப்புகளை அணுகி விமர்சித்தேன். உதாரணமாக, மெளனி, புதுமைப்பித்தன் என யாராக இருந்தாலும் அவர்களை விமர்சனம் இன்றிக் கொண்டாடுவதில் உள்ள ஆபத்துகளில் நான் கவனம் செலுத்தினேன். தற்போது இலக்கியம் வாசிக்க அதிக நேரம் ஒதுக்க இயலவில்லை. தொடர்ந்து, சமூகத்தில் இருந்துகொண்டிருக்கும் பிரச்னைகளுக்கு முகம் கொடுத்து, அதைப் பற்றிப் பேச வேண்டியது, எழுத வேண்டியதே ஏராளமாக உள்ளன. களப்பணிகளோடு என் வாழ்க்கை பிரிக்க இயலாமல் பிணைந்திருப்பதும் ஒரு காரணம்.

இயற்பியல் ஆசிரியராக மூன்று தலைமுறைக்குக் கற்பித்திருக்கிறீர்கள். ஓய்வுபெற்ற ஓர் ஆசிரியராக இன்று உங்களது மனநிலை என்ன?

நான் என்னுடைய பாடங்களை ஒழுங்காக நடத்தியிருக்கிறேன் (சிரிக்கிறார்). நான் நிறையப் பயணிக்கிறேன்; ஆதலால், அதிகமாக விடுப்பு எடுத்துவிடுவேன்; வகுப்புக்கு சரிவரச் செல்ல முடியாது என்று பலர் நினைக்கக்கூடும்,. ஆனால், எனக்குக் கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்தை நான் ஒழுங்காகக் கற்பித்திருக்கிறேன். என்னை நானே சுயவிமர்சனம் செய்துகொள்ள வேண்டும் என்றால், இன்னும் கொஞ்சம் நல்ல ஆசிரியனாக இருந்திருக்கலாம் என்பேன்.

மாணவர்கள் மத்தியில் அரசியல் பேசுவது உண்டா?

கவிஞர் தய்.கந்தசாமி போன்ற என் பல மாணவர்கள் அரசியல் உணர்வு பெற்றதற்கு நானும் ஒரு காரணமாக இருந்திருக்கிறேன்.ஆனால், சென்னை மாநிலக் கல்லூரிக்கு வந்த பிறகு, நான் வகுப்புகளில் பாடம் மட்டுமே நடத்தினேன் என்பதுதான் உண்மை. என்னுடைய பெரும்பாலான மாணவர்களுக்கு, நான் இவ்வளவு தீவிரமாக அரசியல் பேசுபவன் என்பதே தெரியாது. மாற்றுக்கல்வி குறித்து நான் கொண்டிருந்த, எழுதிய கருத்துகளைக் கூட கல்லூரியில் நடைமுறைப்படுத்த முயன்றது இல்லை. இந்த சிஸ்டத்துக்குள் ஆசிரியர்களால் பெரிய மாற்றங்கள் ஒன்றையும் கொண்டுவந்துவிட முடியாது.

மூன்று தலைமுறை மாணவர்களை அவதானித்தவர் என்கிற வகையில், அவர்களிடம் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதையேனும் பார்க்க முடிகிறதா?

கல்விமுறையே இங்கு சிக்கலாக இருக்கிறது. கல்வி என்பது வேலைவாய்ப்பிற்கானதாக, போட்டி மனப்பான்மையை விதைக்கக்கூடிய ஒன்றாக மாறியுள்ளது. சமூக மாற்றத்துக்கான மனப்பாங்கு உள்ள இளைஞர்களை உருவாக்கும் கல்விமுறையாக இது இல்லை. நான் பணிக்குச் சேர்ந்த எழுபதுகளைக் காட்டிலும் இன்று நிலைமை மோசம். எதிர்காலம் இன்னும் மோசமாக இருக்கும். மாணவர்கள் அவர்களது துறைகளில் திறமையானவர்களாக இருக்கிறார்கள். இப்போதைய பாடப்புத்தகங்களும்கூட சிறப்பானவையாக உள்ளன. ஆனால், மாணவர்கள் மத்தியில் சமூகப் பொறுப்பு பெரிதும் குறைந்துள்ளது. சமூகப்பொறுப்பற்ற திறமை எந்த வகையில் பயனுள்ளதாக இருக்கும்?

மாணவர்கள் அரசியலுக்கு வருவதைப் பற்றிய உங்கள் கருத்து என்ன?

வராமல் இருக்க முடியாது. வந்துதான் ஆக வேண்டும். ஆனால், எல்லா காலகட்டங்களிலுமே ‘அன்றைய’ மாணவர்கள் அரசியலுக்கு வருவதை அதற்கு முந்தைய தலைமுறைக்காரர்கள் விரும்பியது இல்லை. புரட்சிக்குப் பிந்தைய காலகட்டம் என்று நினைக்கிறேன்… லெனின் மாணவர்களை நோக்கிச் சொன்னார், “நீங்கள் முதலில் செய்ய வேண்டியது படிப்பு; இரண்டாவது செய்ய வேண்டியது படிப்பு; மூன்றாவது செய்ய வேண்டியதும் படிப்பு!” (சிரிக்கிறார்) ஆட்சியாளர்கள் எப்போதுமே மாணவர்கள் அரசியலுக்கு வருவதை விரும்புவதில்லை. ஆனால் நாம் விரும்பித்தான் ஆக வேண்டும்.

இந்தச் சமூகச் சூழலில் இனி ஒரு நம்பிக்கைக்குரிய தலைவர் உருவாவது சாத்தியமா?

அப்படியெல்லாம் ஆருடம் சொல்ல முடியாது. சமூகம் குறித்த ஒரு பரந்த ஆய்வுகளோடு அரசியலுக்குள் வருகிறவர்கள் இன்று யாரும் இல்லை. அது நல்ல தலைவர்கள் உருவாவதை அறவே அழித்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் மக்கள், அரசியல் விழிப்பு உணர்வு பெறுவதற்குக் கலை வடிவங்கள் உதவியாக இருக்க முடியுமா?

முன்பு, சுதந்திரப் போராட்டக் காலத்தில் விடுதலை உணர்வை மக்களிடம் பரப்ப கலை வடிவங்கள் பயன்பட்டன. விடுதலைப் போராட்டக் காலகட்டத்தில் வை.மு.கோதைநாயகி போன்றவர்கள் வீதி வீதியாகச் சென்று பாரதியார் பாடல்களை உரக்கப் பாடி, மக்களைக் கவர்ந்து, கதர்த் துணிகள் விற்றார்கள். சத்தியமூர்த்தி போன்ற காங்கிரஸ் தலைவர்கள்கூட நாடகக் கலைஞர்களுடன் நெருக்கமான தொடர்புகொண்டிருந்தார்கள் என்பார்கள். அது அப்படிப்பட்ட ஒரு காலமாக இருந்தது. பின்னாட்களில் நக்சல்பாரி இயக்கம் கலை வடிவங்கள், வீதி நாடகங்கள் முதலியவற்றை நிறைய பயன்படுத்தியது. இன்று அப்படியான சூழல் குறைந்துள்ளது. சமூக ஊடகங்கள் வரை அனைத்திலும் நாம் யாருக்கு எதிராகப் போராடுகிறோமோ, அவர்களும் அந்த வடிவத்தைத் தீவிரமாகப் பயன்படுத்துகிறார்கள். அனைத்திலும் பிற்போக்கான, மேலோட்டமான கருத்துகள் தொடர்ந்து பரப்பப்பட்டு வருகின்றன. கார்ப்பரேட் முதலாளித்துவத்தையும், இந்துத்துவத்தையும் நிறுவுவதற்காக ஜெயமோகன் போன்றவர்கள் கலை வடிவங்களைப் பயன்படுத்தும் காலம் இது. கலை வடிவங்கள், மக்களிடையே வெறுப்பை விதைக்க அதிக அளவில் பயன்படுத்தப்படும் காலம் இது..

இடதுசாரியான நீங்கள், பின் நவீனத்துவம் மாதிரியான சிந்தனைகளை நோக்கி எப்படி நகர்ந்தீர்கள்?

மார்க்சியத்துக்குள் இருந்துகொண்டே மார்க்சியம் சார்ந்த வெவ்வேறு வகையான சிந்தனைப் போக்குகளை வாசித்துவந்தேன். சோவியத் யூனியனின் தகர்வு என்பதுதான் என்னை அடுத்தகட்டச் சிந்தனைகளை நோக்கி நகர்த்தியது. ஏன் சோவியத் உடைந்தது என்ற கேள்விக்கான பதிலைத் தேடிச் சென்றபோது, நாம் சமூகம் சார்ந்த விஷயங்களை வேறொரு கோணத்தில் பரிசீலனை செய்ய வேண்டும் என்று தோன்றியது. அதிகாரம் எப்படித் தோன்றுகிறது; எப்படிச் செயல்படுகிறது? என்ற உரையாடல்கள், ஃபூக்கோ, தெரிதா போன்றவர்களின் பின் நவீனச் சிந்தனைகள் நோக்கி நகர்த்தியது.

பின் நவீனத்துவத்தில் உங்கள் பங்களிப்பு என்ன என்று நினைக்கிறீர்கள்? இன்று பின் நவீனத்துவம் அடைந்துள்ள நிலை என்ன?

பின் நவீனத்துவம் என்பதைப் பற்றி நான் மட்டுமல்ல, வேறு பல சிற்றிதழ் சார்ந்த எழுத்தாளர்களும் பேசினார்கள். மற்றவர்கள் பேசியதற்கும் நான் பேசியதற்கும் ஒரு சிறிய வேறுபாடு இருந்தது. மற்றவர்கள் இலக்கியத்தில் பின் நவீனத்துவச் சிந்தனையின் தேவைக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார்கள். நான்-லீனியர் எழுத்து, மையமற்ற எழுத்து, விளிம்பு நிலை எழுத்து போன்றவையாக அவர்களின் அக்கறை இருந்தது. நான் பின் நவீனத்துவம் எப்படி தத்துவ வரலாற்றில் நவீனத்துவத்தைத் தொடர்ந்த அடுத்த கட்டமாக வருகிறது என்பது குறித்தும், பின் நவீன உலகில் அரசியல் வடிவங்களில் ஏற்பட்டு வருகிற மாற்றங்கள் குறித்தும் கவனம் செலுத்தினேன்.

முன்பு பேசியதைப் போல இனி, ‘மொத்தத்துவ’ நோக்கும் ‘ஒற்றை மையம்’ சார்ந்த அணுகல்முறையும் சாத்தியம் இல்லை என்பதாகவும், தலித்துகள், இஸ்லாமியர்கள், பெண்கள், மாற்றுப் பாலினத்தவர்கள் போன்ற விளிம்புநிலை மக்களின் அடையாள அரசியலின் தேவைகள் குறித்தும் பேசினேன். இது தமிழ்த் தேசியர்கள், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சியினரையும் கோபப்படுத்தியது. மறுபுறம் இலக்கியத்தில் உள்ளவர்களையும் எரிச்சலுக்கு உள்ளாக்கியது.

என்னுடைய பின் நவீனத்துவம் குறித்த நூல் வந்தபோது, இலக்கியம், அரசியல் என இரண்டு தரப்புமே கடுமையாக எதிர்த்தார்கள். இலக்கியவாதிகள், நான் எல்லாவற்றையும் அரசியலாக்குகிறேன் என்றார்கள். அஷ்வகோஷ் போன்றவர்கள், ‘பின் நவீனத்துவம் பித்தும் தெளிவும்’ போன்ற அபத்தத் தலைப்புகளில் நூல்கள் எழுதினார்கள். கிட்டத்தட்ட நான் அப்போது தனிமைப்படுத்தப்பட்டேன்.

இன்று யாரும் பின் நவீனத்துவம் குறித்து அதிகமாகப் பேசுவதும் சர்ச்சையிடுவதும் இல்லை. ஆனால், ‘விளிம்புநிலை’,‘கட்டுடைத்தல்’, ‘சொல்லாடல்’ போன்ற சொற்களை எல்லோருமே இயல்பாகப் பாவிக்கிறார்கள். இன்று எழுதிக்கொண்டிருக்கும் ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் உட்பட, அனைவரின் எழுத்து வடிவங்களிலும் பின் நவீனத்துவ சிந்தனையின் தாக்கம் இருக்கிறது. எதார்த்தவாதத்துக்கு இனி இங்கு இடம் இல்லை என்று நம்பியது நடக்கவில்லை என்றாலும் யாரும் இப்போது மொண்ணையான எதார்த்த வடிவில் எழுதுவது இல்லை. மறுபுறம், யாரெல்லாம் பின் நவீனச் சிந்தனைகளை எதிர்த்தார்களோ, அவர்கள்தான் இன்று அடையாள அரசியலை முன்னெடுக்கிறார்கள். குறிப்பாக, சி.பி.எம் போன்ற கட்சிகள் இன்று தீண்டாமை எதிர்ப்பு முன்னணி, மாற்றுப் பாலினத்தவர் பிரச்னை போன்றவற்றை எல்லாம் கையில் எடுத்துச் செயல்படும் நிலை வந்துள்ளது. இது பின் நவீன நிலை, தமிழ்ச் சமூகத்தையும் ஆழமாகப் பாதித்திருக்கிறது என்பதற்குச் சான்று.

பின் நவீனத்தை இவ்வளவு முக்கியமான கருத்தியலாகக் கருதும் உங்களைப் போன்ற சிந்தனையாளர்கள், ஏன் பின் நவீனம் குறித்த ஒரு முழுமையான நூலைக்கூட தமிழில் மொழிபெயர்க்கவில்லை?

தெரிதாவின் Writing and Difference நூலையெல்லாம் தமிழில் மொழிபெயர்க்கும் அளவுக்கு நாம் தமிழை வளர்த்தெடுக்கும் முயற்சியில் இறங்கவில்லை. பாரம்பரியம் மிக்க நம் தமிழை அந்த அளவுக்குத் தகுதிப்படுத்தவில்லை. நான்காம், ஐந்தாம் நூற்றாண்டுகளில் சாத்தனார், வீர சோழிய ஆசிரியர் எல்லாம் தமிழை அன்றைய தத்துவ விவாதங்களுக்குத் தக்க மேலுயர்த்திச் சென்ற முயற்சிகளைக் காணும்போது, நமக்கு இன்று பிரமிப்பாக இருக்கிறது. இன்று அந்தப் பணியை அத்தனை சிரத்தையுடன் செய்யத் தவறிவிட்டோம் ஆங்கிலத்தில் வெளியாகும் கோர்ட் தீர்ப்புகளையேகூட தமிழில் குறைந்த வார்த்தைகளில் கச்சிதமாக இரட்டை அர்த்தம் வந்துவிடாமல் உருவாக்குவதே சிரமமாகத்தானே இருக்கிறது. தமிழில் உரைநடையே தாமதமாக வந்ததுதானே? ஒரு ஜனரஞ்சகமான உரைநடையை பாரதிதானே துவக்கிவைக்கிறார். அதற்கு முன்பு ஏது? அவரும்கூட எட்டையபுரத்தில் உட்கார்ந்து சீட்டுக் கவிதைகளாக எழுதிக்கொண்டிருந்திருந்தால், இதுவும் நடந்திருக்காது. அவர் ஒரு பத்திரிகையாளர் ஆகி, பிரிட்டிஷ் ஆட்சியின் ஊடாக உருவான நவீனமயமாதலின் அங்கமானதால் விளைந்த நன்மை இது.

முதலில் சி.பி.எம், பிறகு மக்கள் யுத்தக் குழுவின் புரட்சிகரப் பண்பாட்டு இயக்கம் ஆகியவற்றில் இணைந்து, பிறகு அவற்றில் இருந்து விலகி, மார்க்சியத்தின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தீர்கள், இப்போது மீண்டும் கம்யூனிஸ்ட்களுடன் இணைந்து பணியாற்றுகிறீர்களே?

மார்க்சியத்தை அப்படி ஒன்றும் நான் தாக்கவில்லை. சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்றேன். நாம் ஹிட்லரையும் முசோலினியையும் அவர்களின் கொடுங்கோன்மைக்காகவும் அவர்களின் ஜனநாயக விரோதப் போக்குகளுக்காகவும் நிராகரிக்கிறோம். வேடிக்கை என்னவென்றால், உலகெங்கிலும் இடதுசாரிகள்கூட வன்முறையே புரட்சிக்கான வழி என்றார்கள். பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என, தங்கள் ஆட்சிமுறையைக் கூறிக்கொண்டார்கள். முதல் உலகப் போர் முடிந்த சமயம், ‘கிரேட் டிப்ரஷன்’ ஏற்பட்டு, பெரும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டபோது, உலகம் முழுதுமே முதலாளித்துவம் வீழ்ந்தது என்ற நம்பிக்கை ஏற்பட்டது. சோஷலிசமே தீர்வு என்ற நம்பிக்கை உலகம் முழுதும் பரவிவந்தது. அதற்கு ஏற்ப ரஷ்யாவிலும் இடதுசாரிகள் அதிகாரத்தைக் கைப்பற்றினார்கள்.

இத்தாலியாகட்டும், ஜெர்மனியாகட்டும், அங்கும் ‘சோஷலிசம்’ எனக் கட்சிக்குப் பெயர் வைத்துக்கொண்டுதான் பாசிஸ்ட்டுகள் அதிகாரத்துக்கு வந்தார்கள். ‘நாஸி’ என்றாலே தேசிய சோஷலிசக் கட்சி என்றுதான் பொருள். காந்தி போன்றவர்களுக்குத் தேவை இல்லாமல் ஒரு கம்யூனிஸ எதிர்ப்பு உணர்வு உருவானதற்கு கம்யூனிஸ்ட்கள் முன்வைத்த ‘துப்பாக்கி முனையிலிருந்து அதிகாரம் பிறக்கிறது,’ ‘பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம்’ முதலான சொல்லாடல்களும் ஒருகட்சி ஆட்சிமுறையும்தான் காரணம். கம்யூனிஸத்தின் உள்ளார்ந்த அம்சம், மகத்தான அன்பும் மானுடநேயமும், மக்களிடையே பொருளாதாரரீதியாக மட்டுமல்லாமல், அனைத்து அம்சங்களிலுமான சமத்துவமும்தான். இதை உணரவும் உணர்த்தவும் இடதுசாரிகள் தவறிவிட்டார்கள். இந்த நிலம் என்பது இந்துக்களும், முஸ்லிம்களும் கிறிஸ்துவர்களும், பெளத்தர்களும், சமணர்களும் இன்னும் அனைவருமே காலங்காலமாக இணைந்து வாழ்ந்த நிலம். ஒற்றை அடையாளத்துக்கு இங்கு இடம் இல்லை. அது குறித்தெல்லாம் உரிய முக்கியத்துவம் அளிக்கத் தவறினார்கள். அதைத்தான் விமர்சித்தேன்.

இன்று, சூழ்நிலை வெகுவாக மாறிவிட்டது. பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம் என்பதை இன்று பெரும்பாலான கம்யூனிஸக் கட்சிகளே கைவிட்டுவிட்டன. அவர்களும் பல கட்சி ஆட்சிமுறைக்கு மாறிவருகிறார்கள். தேர்தல் பாதையை நோக்கித் திரும்பும் நிலை அதிகரித்துள்ளது. இங்கு நடக்கும் வெறுப்பு அரசியலுக்கு எதிராகக் குரல் எழுப்பும், நம்பிக்கை அளிக்கும் சக்திகளாகவும் இடதுசாரிகள் உள்ளார்கள். பொது சிவில் சட்டமாகட்டும், புதிய கல்விக் கொள்கையாகட்டும் – அதை விமர்சிப்பவர்களாக, செயல்படுபவர்களாக அவர்கள்தானே இருக்கிறார்கள்.

பா.ஜ.க அரசின் புதிய கல்விக் கொள்கை என்பது, இங்கே நுழைய இருக்கும் கார்ப்பரேட் கல்விமுறை. இது ஏதோ சமஸ்கிருதம் அல்லது வேதக் கல்வி முதலான பிரச்னை மட்டும் அல்ல. அது மாணவர்களை, வெகு நுட்பமாக ‘படிப்பை உயர் கல்வி அளவுக்குத் தொடர வேண்டிய மாணவன்’, ‘தொடரக்கூடாத மாணவன்’ எனப் பிரிக்கிறது. கல்விமீதும் பன்னாட்டு ஆதிக்கத்தைப் பெருக்குவதற்கு வழி அமைப்பதாக இருக்கிறது. இதை எல்லாம் இடதுசாரிகள்தான் பேசிக்கொண்டி ருக்கிறார்கள். எனவே, பிரச்னையின் தீவிரம் மற்றும் தேவை கருதி நானும் அவர்களுடன் இணைந்து நிற்கிறேன். மதவாத பாசிச எதிர்ப்பில் நம்பிக்கை தரும் சக்தியாக வேறு யாரும் இங்கு இன்று இல்லை.

இடதுசக்திகளுக்கான எதிர்காலம் என்பது என்னவாக இருக்கிறது?

இன்று உலகம் முற்றிலுமாக மாறிவிட்டது. மிச்சமுள்ள சோஷலிச நாடுகளுமே நிறைய மாறிவிட்டன. இனி, கம்யூனிஸம் அதன் ஆதிப் பண்பான சமத்துவம் என்பதை வலியுறுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும். அரசு உதிரும் என்பது போன்ற அதிகார எதிர்ப்புச் சிந்தனைகளை மீட்டெடுக்க வேண்டும். உலகின் பன்மைத்துவத்துக்கு அழுத்தம் அளிக்கவேண்டும். நாடுகளுக்கு இடையே உள்ள எல்லைக் கோடுகள் அழியும் இந்தக் காலகட்டத்தில், ஏகாதிபத்திய எதிர்ப்பை முற்றிலும் இக்காலக்கட்டத்துக்கு உரிய வடிவில் மாற்றியமைக்க வேண்டும்.

தமிழ்த் தேசியத்தை ஏன் முழுமுற்றாக மறுதலிக்கிறீர்கள்?

தமிழ்த் தேசியத்தை மட்டுமல்ல… பொதுவாக தேசியம், சாதியம், மதவாதம் என்றெல்லாம் மக்கள் கூறுபோடப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. இங்கே ‘தமிழ்த் தேசியம்’ என்கிற பெயரில் பேசப்படும் ‘வந்தேறி வடுகர்’ முதலான சொல்லாடல்கள், அருந்ததியர் உள்ளிட்ட ‘பிற மொழியினருக்கு’ இட ஒதுக்கீடு கூடாது எனச் சொல்வதை எல்லாம் எப்படி ஏற்றுக்கொள்ள இயலும்? இங்கு உருவாகும் தமிழ்த் தேசியம் எளிதில் இந்துத்துவத்துக்குப் பலியாகக்கூடிய ஒன்று!

இந்துத்துவம், சாதி என்று பேச்சு வருகிறபோது, அம்பேத்கரின், பெரியாரின் போதாமைகளை முன்வைத்து நடக்கும் உரையாடல்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இங்கு நிறைய குழப்பங்கள், அபத்தங்கள் உள்ளன. அம்பேத்கர் போதாது; பெரியார் போதாது என ஆளாளுக்கு சர்ச்சை யிடுகிறார்கள். அப்படியானால் யார்தான் இங்கு போதுமானவர்? யாருமே எக்காலத்துக்குமே, எல்லா இடங்களுக்குமே போதுமானவர்களாக இருப்பது சாத்தியம் இல்லை. மதவாதிகள்தான் அப்படி நினைக்கக்கூடும். அம்பேத்கர், காந்தி, பெரியார், மார்க்ஸ் – இவர்களில் யார் சொன்னதும் முக்கியமானவைதான். யாரேனும் ஒருவர் ஒரு விஷயத்தில் தோற்றுப் போனதாக யாரேனும் சொன்னார்களானால், அந்த விஷயத்தில் மற்ற மூவர் என்ன சாதித்தார்கள் என்பதைச் சொல்லியாக வேண்டும்.

இவர்கள் எல்லோரிடமும் பொதுவான அம்சங்கள் உண்டு. குறிப்பாக, இவர்கள் நால்வருக்கும் தேசியத்தில் நம்பிக்கை இல்லை. அதேபோல, ஒவ்வொருவரிடமும் குறைகளும் உண்டு. ஒருவரை முன்னிறுத்தி மற்றவரைப் போதாது என்பதெல்லாம் ஏற்புடையது அல்ல. அம்பேத்கர் போதாது; மார்க்ஸ் வேண்டும் என்பதுபோலவே, மார்க்ஸ் போதாது; அம்பேத்கர் வேண்டும் என்பதும் உண்மைதான். இதில் சர்ச்சையை உண்டாக்குவது உள்நோக்கம் கொண்டது.

இன்றைய மிகப் பெரிய ஆபத்து, பாசிசம். அந்த எதிர்ப்பை இத்தகைய சர்ச்சைகள் பலவீனப்படுத்தும். அது போலவே, காந்தி பற்றி நிறைய தவறான நம்பிக்கைகள் இங்கு உள்ளன. அவரை விமர்சிக்கும் யாரும் அவரை வாசிப்பது இல்லை. காந்தியிடம் பல மாற்றங்கள் இருந்தன. அதேபோல, ஒரு தொடர்ச்சியும் இருந்தது. அவர் 1910-களிலேயே தீண்டாமை பற்றி சிந்தித்து இருக்கிறார். தான் உருவாக்கிய கம்யூன்களில் அவர் தீண்டாமையை ஒழித்திருந்தார். அம்பேத்கரோ, பெரியாரோ – யார் பாதிக்கப்பட்டார்களோ, அவர்களிடம் பேசியபோது, காந்தி – யார் பாதிப்பை உருவாக்குகிறார்களோ, அவர்களை நோக்கிப் பேசினார். ஆலய நுழைவுப் போராட்டங்களில் காந்தி இறங்கிய பிறகுதான் முழு வெற்றி கிடைத்தது. அதற்கு முன்பு நடந்த போராட்டங்கள் அவருக்குத் தூண்டுகோலாக இருந்தன என்பது உண்மைதான். அதற்காக, காந்தியின் போராட்டங்களின் முக்கியத்துவத்தை நிராகரிக்க முடியுமா?

காந்தி தோற்றுவிட்டார் என்றால், இங்கு யார்தான் வென்றவர்? அம்பேத்கர்…பெரியார்… மார்க்ஸ்… எல்லோரும்தான் தோற்றார்கள். மார்க்ஸ், உலகம் முழுக்கத் தோற்றார். சரியாகச் சொல்வதானால், இவர்கள் யாருமே தோற்கவில்லை. இவர்கள் உலகை மாற்றினார்கள். அவர்களது முழு லட்சியமும் நிறைவேறவில்லை என்பது உண்மை. ஆனால், உலகம் இனி அவர்களுக்கு முந்திய காலத்துக்குத் திரும்பிச் செல்ல முடியாது. இனி இங்கு யாராவது சமஸ்கிருதம் தேவ பாஷை; தமிழ் நீச பாஷை எனச் சொல்ல இயலுமா? அப்படியானால், திராவிடக் கருத்தியல் தோற்றது என எப்படிச் சொல்வீர்கள்?”

அம்பேத்கரை ‘இந்துத்துவ அம்பேத்கராக’ சித்திரிக்க முயல்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பா.ஜ.க-வினர் அப்படித் திட்டமிட்டு ஓர் உரையாடலை உருவாக்குகிறார்கள். அம்பேத்கர் மகாராஷ்டிராக்காரர். சாவார்க்கரோடு எல்லாம் பழகியிருக்கிறார் என்பதை வைத்து, அப்படிப் பேச முயல்கிறார்கள். இஸ்லாத்துக்கு அவர் மாறாததற்கு, ‘தேசியம் பலவீனப்பட்டுவிடும்’ என்று அவர் சொன்னதையெல்லாம் அவர்கள் இந்த நோக்கத்துக்குப் பயன்படுத்துகிறார்கள். ஆனால், அடிப்படையில் ‘இந்து ராஷ்டிரம்’ என்பதை வெளிப்படையாகவும் உறுதி யோடும் காந்தியைவிடவும் கடுமையாக எதிர்த்தவர் அம்பேத்கர். எப்படியாயினும் இந்து மதத்தை விட்டு வெளியேறுவது என்பதில் உறுதியாக இருந்தார்; வெளியேறினார். அவரை இந்து மத அடையாளங்களுக்குள் அடைப்பது முடியாத காரியம். இதற்கான பதிலையும் மறுப்பையும் நாம்தான் முன்வைக்க வேண்டும்.

அதேசமயம் இந்த விஷயத்தில் பா.ஜ.க-வினரின் இந்த முயற்சியைக் காட்டிலும் இங்குள்ள தலித் இயக்கங்கள் இது தொடர்பாகக் காட்டும் மௌனத்தை நான் மிகப் பெரிய ஆபத்தாகப் பார்க்கிறேன். இதுபோன்ற மௌனத்தின் வழியாக அவர்கள் இதற்கு ஒத்துழைக்கிறார்கள். ரவிக்குமார் போன்றவர்களின் பா.ஜ.க-வை நோக்கிய நகர்வு ஆபத்தானது. மாட்டிறைச்சிப் பிரச்னை பூதாகரமானபோது, உனாவில் ஜிக்னேஷ் மேவானி தலைமையில் அவ்வளவு பெரிய போராட்டம் நடத்தப்பட்டது. அதில், தலித்-முஸ்லிம் ஒற்றுமை பிரதானமாக முன்வைக்கப்பட்டது. தொடர்ந்து இந்தியா முழுவதும் பரவிய அந்த எழுச்சி, சமீபத்திய நம்பிக்கையூட்டும் ஒரு முக்கிய நிகழ்வு. ஆனால், அதில் பங்குகொள்ளாமல் அமைதிகாத்த ஒரே மாநிலம், தமிழகம்தான். இங்கு அனுசரிக்கப்பட்ட மௌனம் மிக மிகக் கவலைக்குரிய ஒன்று.

இது பெரியாரின் மண். இங்கு இந்துத்துவத்தால் ஒருநாளும் கால் ஊன்ற முடியாது!” என்று் பேசப்படுவது எதார்த்தத்துக்கு மாறானதா?

ஆமாம். நிச்சயமாக. அப்பாவித்தனமான நம்பிக்கை அது. பெரியாருக்குப் பிறகு இந்தப் போராட்டம் நீர்த்துப்போனது. தொடர்ந்து மதவாதத்துக்கும் பெரும்பான்மைவாதத்துக்கும் எதிராக வலுவாகப் போராடியே தீரவேண்டிய காலகட்டம் இது. இன்று இடதுசாரிகளின் தீண்டாமை எதிர்ப்பு நடவடிக்கைகளும் செயல்பாடுகளும் ஓரளவு நம்பிக்கை அளிக்கிறது. இன்னும்கூட கம்யூனிஸ்ட்டுகள் இந்தப் பிரச்னைக்கு முக்கியத்துவம் தர வேண்டும். தலித் – கம்யூனிஸ்ட் ஒற்றுமை இன்னும் போதிய அளவில் நிகழவில்லை. இந்துத்துவ எதிர்ப்பில் தமிழ்த் தேசியர்களையும் நம்புவதற்கு இல்லை.

தலித்-கம்யூனிஸ்ட் ஒற்றுமை போதிய அளவு சாத்தியப்படாதது போலவே இஸ்லாமியச் சமூகமும் தன்னைப் பெரிதும் தனிமைப் படுத்திக்கொள்கிறதே?

இன்று முஸ்லிம் இளைஞர்கள் மாற்றங்களுக்கான நம்பிக்கையைத் தருகிறார்கள். பொது சிவில் சட்டம் தொடர்பான பிரச்னையில்கூட, இன்று அதை எதிர்த்தபோதும் அதே சமயம் தனிநபர் சட்டத்தில் திருத்தங்கள் செய்யவேண்டும் என்கிற கருத்துகள் முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இன்னொரு பக்கம் நமக்கு இருக்கும் கொஞ்சநஞ்ச பாதுகாப்பையும் ஒழிப்பதற்கான நடவடிக்கையாக இது உள்ளதே என்கிற நியாயமான அச்சமும் மூத்தவர்கள் மத்தியில் இருக்கிறது. முஸ்லிம்களின் பிரச்னைகள் தனித்துவமானது. உடனடியான ஆபத்துகள் அவர்களை எதிர்நோக்கியுள்ளன. அவர்கள் தனி அரசியல் அடையாளங்களுடன் ஒன்று சேர்வது தவிர்க்க இயலாதது!

நீங்கள் முஸ்லிம் அரசியலை விமர்சனமற்று ஆதரிப்பதாகச் சொல்லப்படுவது பற்றி…

எனக்கு எந்த முஸ்லிம் அரசியல் கட்சியுடனும் தொடர்பு கிடையாது. நான் பாதிக்கப்படுபவர்களுக்காக நிற்கிறேன். இங்கு பெரிய அளவில் பாதிக்கப்படக் கூடியவர்களாக முஸ்லிம்கள் உள்ளனர். எனவே, அவர்களோடு நிற்கிறேன். அவர்கள் குறித்து மிகப் பெரிய பொய்களும் அவதூறுகளும் மக்கள் மத்தியில் பதிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு எதிராக உண்மைகளைக் கூறுகிறேன், அவ்வளவுதான். மற்றபடி, எனது கருத்துகள் பலவற்றை முஸ்லிம்களே ஏற்பது இல்லை. ஏற்க முடியாது என்பது எனக்கும் தெரியும். என்னைப் பொறுத்தமட்டில், நான் எந்த மதத்தையும் ஏற்க இயலாதவன். ‘என்னுடைய மதமே சிறந்தது’ எனச் சொல்வதைக் காட்டிலும் ஆபாசமான ஒன்று இருக்கவே முடியாது என்பதுதான் என் கருத்து. எல்லா மதங்களிலும் சிறப்புகளும் உண்டு; விமர்சனங்களும் உண்டு. இந்துமதத்திலும் என்னைப் பொறுத்தமட்டில் சிறப்பான கூறுகளும் உண்டு. ஓர் இறுக்கமான புனித நூல் அதில் கிடையாது என்பதே அதன் சிறப்புகளில் ஒன்று என்பது என் கருத்து. நிச்சயமாக என் முஸ்லிம் நண்பர்கள் அதை ஏற்கமாட்டார்கள்!

இடைநிலைச் சாதிகள் அரசியலில் உறுதிப்படுகின்ற இந்தக் காலகட்டத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இடைநிலைச் சாதிகள் அரசியலில் உறுதிப்படுவதென்பதே இந்துத்துவம் உறுதிப்படுவதுதான். பெரியார், இடைநிலைச் சாதிகளை ஒன்றுதிரட்டினார் என்று சிலர் குற்றம்சாட்டுகிறார்கள். அப்படியே வைத்துக்கொண்டாலும்கூட அவர் இந்துத்துவத்திற்கு எதிராகவே ஒன்று திரட்டினார். ஆனால், இன்று இந்துத்துவத்தோடு இணைந்து அந்தத் திரட்சி நடக்கிறது. இந்தியா முழுக்கவும் இதுதான் நிலை. முசாபர்நகரில் முஸ்லிம்களை இந்துக்கள் தாக்கினார்கள் என்றால், அவர்களை ‘இந்துக்கள்’ என்பதாக மட்டும் பார்க்க முடியாது. அதை ஜாட்களின் தாக்குதல்களாகவும் பார்க்க வேண்டும். தாத்ரியில் நடந்த தாக்குதல்களை ரஜபுத்திரர்களின் தாக்குதல்களாகவும் பார்க்க வேண்டும். தமிழகத்திலும் இப்படித்தான். குறிப்பான இடைநிலைச் சாதிகளின் திரட்சி, இந்துத்துவத் திரட்சியுடன் இணைந்தே நிகழ்கிறது!

திராவிட இயக்கங்களில் என்ன மாதிரியான மாற்றங்கள் நடக்க வேண்டும் என்று கருதுகிறீர்கள்?

திராவிடக் கருத்தாக்கத்தின் அடிப்படையான அம்சமே தமிழக எல்லைக்குள் வாழ்பவர்கள் அனைவருமே தமிழர்கள், திராவிடர்கள் என ஏற்றுக்கொள்வதுதான். சாதிரீதியான, மதரீதியான பிளவுகளற்று, தமிழ் அடையாளத்தை முன்வைத்து இயங்குவதுதான். ஆனால், வாரிசு அரசியல் அதன் இழுக்கு. தலைவரைப் பார்த்து அடிமட்ட தொண்டர்கள் வரை வாரிசு அரசியலை முன்னெடுக்கிறார்கள். அது ஜனநாயக நோக்கத்துக்குப் பெருங்கேடு. அது மாற வேண்டும்!

டாஸ்மாக் – குடிக் கலாசாரம் குறித்து…

தவறாமல் எல்லோராலும் என்னிடம் கேட்கப்படும் ஒரு கேள்வி (சிரிக்கிறார்). இது கவலைக்குரிய ஒரு விஷயம்தான். சிறுவர்கள், இளைஞர்கள் அதிகமாகக் குடிப்பழக்கத்துக்கு ஆளாகியிருப்பது வருத்தமான விஷயம்தான். அதேசமயம், பூரண மதுவிலக்கு என்பது நடைமுறைக்குச் சாத்தியம் இல்லாத ஒன்று. இதை வெறும் ஒரு சட்டம் ஒழுங்குப் பிரச்னையாகப் பார்க்கக் கூடாது. இது ஒரு சமூகப் பிரச்னை. இதைப் பேசவேண்டியவர்கள் எழுத்தாளர்கள், மனோதத்துவ நிபுணர்கள், சிந்தனையாளர்கள். இந்தப் பொறுப்பைப் போலீஸ்காரர்களிடம் கொடுப்பது கள்ளச் சாராயத்துக்கும், போதை மருந்துப் பழக்கத்துக்கும், குற்றவாளிகள் உருவாவதற்கும் மட்டுமே பயன்படும்.

மோடி அரசின் இந்த இரண்டாண்டு ஆட்சியின் மீதான உங்கள் விமர்சனம்?

ஒரு போராட்டத்தை மிகவும் கஷ்டப்பட்டு நடத்திக்கொண்டிருக்கும் ஆட்சி அது. காந்தியும் நேருவும் இட்டுச் சென்ற பலமான ஜனநாயக அடித்தளத்தையும், அம்பேத்கர் தலைமையில் உருவான நம் அரசியல் சட்டத்தின் அடிப்படைகளையும், சுமார் மூவாயிரம் ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வரும் மத ஒருமைப்பாட்டையும் தகர்த்துவிடும் அத்தனை எளிதற்ற ஒரு போராட்டத்தை நடத்திக் கொண்டுள்ள ஆட்சி அது.

பணமதிப்பு நீக்கம் குறித்த உங்கள் பார்வை?

இதை நான் வரவேற்கிறேன். மோடி அரசு எத்தனை பொய்யானது; திறமையற்றது; அடிப்படைப் பொருளாதார அறிவற்றது; சர்வாதிகாரமானது; அடித்தள மக்களின் துயரங்களைப் பற்றிக் கவலையற்றது என்பதை எல்லாம் மக்கள் எளிதாகப் புரிந்துகொள்ள இந்த நடவடிக்கைதான் ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது!

போருக்குப் பிறகான ஈழத்தின் அரசியல் நிலை என்னவாக இருக்கிறது? ஏதேனும் நம்பிக்கைகள் தென்படுகின்றனவா?

போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் முழுமையாக நீதி கிடைக்கவில்லை. அதே சமயம், எந்த முன்னேற்றமும் வரவே இல்லை என்றும் சொல்ல முடியாது. ராஜபக்‌ஷேவின் தோல்வி; அங்கு ஏற்பட்டிருக்கிற கூட்டணி ஆட்சி முதலியன வரவேற்கப்பட வேண்டிய மாற்றங்கள். நீண்டகாலப் போர், அது சார்ந்த அடக்குமுறைகள் – இவற்றால் அங்கு மக்கள் பலவிதமான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். ராணுவம் ஆக்கிரமித்துக்கொண்ட நிலம் மக்களுக்கு மீண்டும் வழங்கப்பட வேண்டும். அதிகாரப் பரவல், ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிப்பு, எனப் பிரச்னைகள் ஏராளமாக உள்ளன. அதேசமயம், அங்கு ஏற்பட்டிருக்கிற மாற்றங்களையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். நீண்ட காலப் போரின் முடிவு அங்கு கொஞ்சமாகவேனும் சுதந்திரக் காற்று வீசுவதற்கு வழியமைத்துள்ளதை நாம் முற்றாக மறுத்துவிட இயலாது.

உண்மையறியும் குழுவில் நீங்கள் ஒரு தரப்பு மக்களுக்கு மட்டுமே சாதகமாக நடந்துகொள்வதாகச் சிலர் சொல்லி வருகிறார்களே…?

அப்படி இல்லை. பொதுவாக எல்லா பிரச்னைகளிலும் அதிகம் பாதிக்கப்பட்டவர்களாக தலித்துகளும், இஸ்லாமியர்களும், பிற விளிம்புநிலை மக்களுமே இருக்கிறார்கள் என்பதால், அப்படியான தோற்றம் இருக்கக்கூடும். கடந்த ஆண்டு விழுப்புரத்தைச் சேர்ந்த செந்தில் என்ற தலித் இளைஞர், காதல் தகராறால் ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண்ணின் தாய்மாமனால் கை கால்கள் வெட்டப்பட்டதாக ஒரு புகார் வந்தது. நாங்கள் அங்கு சென்று முழுமையாக விசாரித்து, அது காதல் தகராறோ, ஆணவக் கொலை முயற்சியோ அல்ல என்றும் ரயில் விபத்துதான் என்றும் ஆய்வறிக்கை வழங்கினோம். இப்படி, சம்பவங்களின் உண்மை நிலைக்கு ஏற்பத்தான் எப்போதுமே செயல்படுகிறோம். இதில் எங்களுக்கு விருப்புவெறுப்புகள் இல்லை. பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய உண்மைகளைச் சொல்வதே போதுமானது. கூடுதலாகச் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

இத்தனை ஆண்டுகால சமூகப்பணியில் உங்களுக்கு கிடைத்த அங்கீகாரமாக எதை நினைக்கிறீர்கள்?

நிறைய எதிர்ப்புகளையும் அவதூறுகளையும் சந்தித்தவன் நான். அதே சமயம், அ.மார்க்ஸ் சொன்னால் எவ்வித சுயநலனும் இன்றி, இன, மத சார்பற்று உண்மையைச் சொல்வார் என்று மற்றவர்கள் என்மீது நம்பிக்கை கொள்வதை நான் உணர்கிறேன். அதில் முக்கியமான வெற்றி, காந்தியைப் பற்றி நான் பேசியதன் வாயிலாக பலர் காந்தியை மறுபரிசீலனை செய்தார்கள். அது மிக முக்கியமானது என்று நினைக்கிறேன். Secularism என்ற தத்துவச் சொல்லாடலை அரசியல் சொல்லாடலாக மாற்றியவர் காந்தி. இந்துத்துவத்தை எதிர்ப்பதில் காந்தி உருவாக்கிய தளமே, நாம் கைக்கொண்டு இயங்கவேண்டிய தளம்.

அன்றாடம் பல்வேறு பிரச்னைகளை முன்னிட்டு போராட்டங்கள் நடந்தவண்ணம்தான் உள்ளன. இந்தப் போராட்டங்கள் எல்லாம் கண்டுகொள்ளப் படுகின்றனவா? அகிம்சைப் போராட்டங்களுக்கு இன்னும் இங்கு மதிப்பு இருக்கிறதா?

அகிம்சை, வன்முறை என்பதையெல்லாம் தாண்டி எந்தப் போராட்டமும் மக்கள் போராட்டமாக மாற்றப்பட வேண்டும். பல ஆயுதப் போராட்டங்கள் வீழ்ந்ததன் காரணம் அது மக்கள் போராட்டமாக மாறாததுதான். மக்கள் போராட்டமாக மாறாத எந்தப் போராட்டமும் வெல்வது இனிச் சாத்தியம் இல்லை. பெருந்திரளாக மக்களைத் திரட்டுவது; ஒருமித்த கருத்தை உருவாக்குவது என்பது எந்த ஒரு போராட்டத்திலும் முக்கியமான அம்சம்.

“சமூக ஊடகங்களின் வளர்ச்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”

பாசிட்டிவாகச் சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அரசால் ஒரு பொய்யை இனி எளிதாகச் சொல்வது சாத்தியம் இல்லை என்றாகிவிட்டது. ஒரு கருத்தை சமூகத்திடம் கொண்டுசெல்ல கார்ப்பரேட் மீடியாக்களை மட்டுமே மக்கள் நம்பியிருந்த காலமும் மலையேறிவிட்டது. கார்ப்பரேட் மீடியாக்களே இன்று சமூக ஊடகங்களைக் கவனித்து, தங்களைத் திருத்திக்கொள்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. இதன் பொருள், இன்று கார்ப்பரேட் மீடியாக்கள் பலம் இழந்துவிட்டன என்பது அல்ல.

சமூகச் சிந்தனைக்குள் புதிதாக வருகிறவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இந்தியாவின் பன்மைத்தன்மையை உணர்வதும் அதைக் காப்பாற்றுவதும் முதன்மையான ஒன்றாக வைத்து இயங்குங்கள். பன்மையைப் போலொரு அற்புதமான விஷயம் எதுவும் இல்லை.

சந்திப்பு: சுகுணா திவாகர், வெய்யில், இளங்கோ கிருஷ்ணன்

படம்: ஸ்டீவ்ஸ் சு.இராட்ரிக்ஸ்.