பகத்சிங் சர்ச்சை : புரட்சிகரப் பயங்கரவாதி என்பது சரிதானா?

உலகத் தரமான அறிஞர்களால் எழுதப்பட்ட உலகத்தரமான பாடநூல்களை, குறிப்பாக வரலாற்று நூல்களை ஒழித்துக் கட்டுவது என்பது இந்துத்துவத்தின் முக்கிய திட்டங்களில் ஒன்று என்பதை விளக்கிச் சொல்ல வேண்டியதில்லை.

இப்போது அவர்களின் தாக்குதலுக்கு இலக்காகி இருப்பது மறைந்த டாக்டர் பிபன் சந்திரா அவர்கள் (1928 -2014) தலைமையில் மிருதுளா முகர்ஜி, ஆதித்ய முகர்ஜி, கே.என்.பணிக்கர், சுசேதா மஹாஜன் ஆகியோர் உருவாக்கிக் கடந்த 25 ஆண்டுகளாகப் பாடநூலாக உள்ள ‘இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறு’ (India’s Struggle for Independence, 1857-1947) எனும் நூல். இவர்கள் அனைவரும் புகழ் பெற்ற வரலாற்றறிஞர்கள். பிபன் சந்திரா நீண்ட காலம் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறைத் தலைவராகவும், ‘நேஷனல் புக் டிரஸ்ட்’ டின் தலைவராகவும், இந்திய வரலாற்று மாநாட்டின் தலைவராகவும் (1985) இருந்தவர். இன்று தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள இந்நூலில் உள்ள 39 அத்தியாயங்களில்22 அத்தியாயங்களை எழிதியவர் பிபன் சந்திரா.

இந்த நூலின் 20வது அத்தியாயத்தின் தலைப்பு ‘பகத்சிங், சூரியாசென் மற்றும் புரட்சிகர பயங்கரவாதிகள்’ (Bhagat Singh, Surya Sen and the Revolutionary Terrorists) என்பது. இதில் பயன்படுத்தப்பட்டுள்ள இந்த ‘பயங்கரவாதிகள்’ எனும் சொல்லை வைத்துக் கொண்டுதான் இன்றைய நாடகத்தைத் துவக்கியுள்ளனர் இந்துத்துவவாதிகள். சென்ற ஏப்ரல் 27 அன்று நாடாளுமன்றத்தில் பா.ஜ.க உறுப்பினர் அனுராக் தாகூர் என்பவர் இப்படிப் பாட நூலில் நமது விடுதலைப் போராட்ட வீரர்களை’ பயங்கரவாதிகள்’ எனலாமா என ஒரு பிரச்சினையை எழுப்பினார். ஸ்மிருதி இரானி இப்படி மரணமடைந்த தியாகிகளைக் கூறுவது “ஒரு கல்வித்துறைப் படுகொலை” என்றார்.

பகத்சிங்கின் பேரன் முறையுள்ள யத்விந்தர் சிங் சந்து, அபேய்சிங் சந்து என்கிற இரு வழித்தோன்றல்களும் களத்தில் இறக்கப்பட்டனர். அவர்கள் டெல்லி பல்கலைக்கழகத் துணை வேந்தர் யோகேஷ் தியாகியை அணுகி அந்நூல் திரும்பப் பெற வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்தனர். பிபன் சந்திராவின் நூல் பாடநூலாக இல்லை எனவும், அது ஒரு reference book ஆகவே வைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களின் புகாரைக் கவனிப்பதாகவும் பதிலளித்தார். இதுதான் இன்று இவர்கள் உருவாக்கியுள்ள பிரச்சினையின் சுருக்க வரலாறு.

பிபன் சந்திராவின் இந்நூல் இன்று தங்களின் கொலைவெறி இலக்காகத் தேர்ந்தெடுகப் பட்டுள்ளதன் பின்னணி என்ன?

பகத்சிங்கும் தோழர்களும் கொல்லப்பட்டபோது தந்தை பெரியார் உட்பட அதற்கு எதிராகக் கண்டனம் தெரிவித்து இந்தியா முழுவதும் இயக்கம் நடந்தபோதெல்லாம் இதில் இந்துத்துவவாதிகள் பங்குபெற்றதில்லை என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சம். எந்த வகையிலும் பகத்சிங்கை நேசிக்க அவர்களுக்குக் காரணமில்லை. பகத்சிங் தன்னை ஒரு நாத்திகர் என அறிவித்துக் கொண்டவர். இறுதிக் காலத்தில் இடதுசாரிக் கொள்கை உடையவராகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். இன்றளவும் இந்திய இடதுசாரிகளே அவரது நினைவைப் போற்றி வருகின்றனர்.

பின் இவர்களுக்கென்ன இந்தத் திடீர்க் கரிசனம்?

1.இந்த நூல் மிக்க ஆழமாகவும், மாணவர்களுக்குத் தக எளிமையாகவும் எழுதப்பட்ட ஒன்று. நமது சுதந்திரப் போராட்டம் என்பது ஏதோ காந்தி மற்றும் இந்தியத் தேசிய காங்கிரஸ் ஆகியோரால் மட்டும் போராடிப் பெற்ப்பட்டதல்ல, காங்கிரஸ் போராடியுள்ளது. இடதுசாரிகள் போராடியுள்ளனர், தொழிலாளிகள், விவசாயிகள் போராடியுள்ளனர். படைவீரர்கள் போராடியுள்ளனர், ஏன் அன்னிபெசன்ட் போன்ற ஆங்கிலேயர்களும் கூட அதில் பங்களித்துள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் மன்னர்களின் பங்கு மிக முக்கியமானது.

இப்படிப் பலதரப்பினரும் பங்குபெற்ற இந்திய சுதந்திரப் போரில் யாரேனும் ஒரு தரப்பு பங்குபெறவில்லை என்றால் அது இன்று ஆட்சியில் இருப்பவர்களின் அன்றைய அமைப்பினர்தான். ஆம் இந்துத்துவவாதிகள்தான். எனவே இந்திய சுதந்திரப் போராட்ட வரலாறே இவர்களுக்குக் கசப்பான ஒன்று. ஏதேனும் இந்த வரலாற்றில் அவர்களுக்குப் பங்கு உண்டென்றால் அது காட்டிக் கொடுத்தது, மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தது இப்படித்தான் அமைகிறது. பிபன் சந்திராவின் நூல் உண்மைகளை அப்படியே சொல்வதால் இந்த நூலில் அவர்களுக்கு இடமில்லை. அவர்களால் வெறுக்கப்படும் காந்தி, நேரு, முஸ்லிம்கள், ஏன் சில ஆங்கிலேயர்கள் ஆகியோரே அதில் முக்கிய பங்கு பெறுகின்றனர். இதை இன்றைய ஆட்சியாளர்களால் சகிக்க இயலவில்லை.

2. இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் அவர்களுக்கு இடமில்லை என்பது மட்டுமல்ல, குறிப்பாக பாபர் மசூதிப் போராட்டத்திற்கு முன்னதாக அவர்கள் எந்த வெகுஜனப் போராட்டத்தையும் நடத்தியதில்லை. இந்நிலையில் சுதந்திரப் போராட்டத்தில் பங்குபெற்ற சிலரை இன்று தம் வசமுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்கள் கையகப்படுத்த முயல்கின்றனர். அந்த வகையில் அவர்கள் இப்போது வல்லபாய் படேல், அண்ணல் அம்பேத்கர், சுபாஷ் சந்திர போஸ், சந்திரசேகர ஆசாத் ஆகியோரைக் கையில் எடுப்பதோடு அவர்களால் வெறுக்கப்படும் காந்தி, நேரு, முஸ்லிம் தலைவர்கள் ஆகியோருக்கு எதிராக அவர்களை மிகத் தந்திரமாக நிறுத்தவும் செய்கின்றனர். அந்த வகையில் இப்போது அவர்கள் கையில் எடுக்க முயற்சிப்பது புரட்சியாளர் பகத்சிங். அதன் ஒரு பகுதிதான் இன்று மறைந்த அறிஞர் பிபன் சந்திரா மீது இவர்கள் கல்லெறிவது.

பகத்சிங்கை Terrorist எனச் சொல்வது சரிதானா?

இதுவும் மிகவும் நுணுக்கமாகப் பரிசீலிக்க வேண்டிய ஒன்று. இந்நூல் எழுதப்பட்டு கால் நூற்றாண்டுக்கு மேலாகிறது. சொற்களின் பொருள்கள் காலந்தோறும் மாறி வருகின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். வரலாற்று அனுபவங்கள் சொற்களின் பொருள்களில் புதிய பரிமாணங்களைத் திணித்துக் கொண்டே கொண்டே இருக்கின்றன. அந்தவகையில் “பயங்கரவாதம்” எனும் சொல்லின் பொருளும், அதன் உள்ளடக்கமும் இப்போது பேரளவில் மாறியுள்ளது.

1857 ல் ஆங்கிலேய அரசுக்கு எதிராக நிகழ்ந்த ஆயுத எழுச்சி அப்போது ஆங்கிலேயரால் மட்டுமல்ல நம்மாலும், நம் வரலாற்று ஆசிரியர்களாலும் ‘சிப்பாய் கலகம்’ (Sepoy Mutiny) என்றே அழைக்கப்பட்டு வந்தது. பல காலம் இது நீடித்தது. எனினும் இப்போது நாம் அப்படிச் சொல்வதில்லை. “முதல் சுதந்திரப் போர்” என்கிறோம். அதன் உள்ளடக்கம் குறித்தும் கூட இப்போது கருத்து மாற்றம் வந்துள்ளது. மன்னர்களும் உயர்சாதிப் படை வீரர்களும் நடத்திய போராட்டம் என்பதைத் தாண்டி இப்போது தலித்கள், ஆடல் மகளிர், அடித்தள மக்கள் ஆகியோரின் பங்கு முதன்மைப்படுத்தப் படுகிறது.

இதே போலத்தான் சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின் இங்கு ‘பயங்கரவாதம்’ என்பதன் பொருள் மிகப் பெரிய அளவில் மாறியுள்ளது. இன்றைய பொருளில் அந்தச் சொல் அதற்கு முன் பயன்படுத்தப் பட்டதில்லை என்பதை நாம் மனம் கொள்ள வேண்டும்.

சுதந்திரப் போராட்ட வரலாற்றில் இரு கட்டங்களில் வன்முறை என்பது ஒரு போராட்ட வடிவமாக இருந்தது, இக்கால கட்டங்களில் கொடுமை செய்த ஆங்கிலேய அதிகாரிகளைக் கொல்வது என்கிற வடிவில் கொலைகள் மேற்கொள்ளப்பட்டன. 1908 -18 காலகட்டத்தை இவ்வகையில் முதலாவதாகக் கொள்ளலாம். பிரஃபுல்லா சாகி, குதிராம் போஸ், மதன்லால் திங்ரா, சசின் சன்யால், ராஷ் பிஹாரி போஸ், வாஞ்சி நாதன் முதலானோரை இப்படிச் சொல்லலாம். இக்காலகட்டத்தில் 186 பேர் இக்குற்றங்களுக்காகத் தூக்கிலிடப்பட்டனர் என்பதை பிபன் சந்திராவின் நூல் பதிவு செய்கிறது. போராட்டக் களத்திற்குக் காந்தி வந்தபின் அவர் முன்வைத்த அகிம்சை எனும் கோட்பாட்டின் ஊடாக நம் விடுதலைப் போராட்டம் பெருந்திரள் மக்கள் போராட்டமாக மாறியது. எனினும் 1922 ல் காந்தி தன் புகழ் பெற்ற ஒத்துழையாமைப் போராட்டத்தைத் திடீரென முடித்துக் கொண்ட போது இதனால் வெறுப்புற்ற இளைஞர்கள் மீண்டும் ஆயுதங்களை ஏந்தினர். ருஷ்யப் புரட்சியும் (1917) இத்தகைய முடிவுக்கு அவர்கள் நகர்ந்ததில் முக்கிய பங்கு வகித்தது. 1925 ல் ராம்பிரசாத் பிஸ்மில், அஷ்ஃபகுல்லா கான், சந்திரசேகர் ஆசாத் முதலானோர் பணம் ஏற்றி வந்த ஒரு ரயிலை ஆயுதங்கள் வாங்குவதற்கென கக்கொரி என்னும் இடத்தில் கொள்ளையிட்டனர். 1928ல் பகத்சிங், ஆசாத், ராஜகுரு ஆகியோர் ஆங்கில போலிஸ் அதிகாரி சான்டர்சைக் கொன்றனர். 1929ல் பகத்சிங்கும் பாதுகேஷ்வர் தத்தும் மத்திய சட்டமன்றத்தில் குண்டு வீசினர். 1930ல் சூர்யா சென்னும் அவரது தோழர்களும் சிட்டகாங்கில் ஒரு ஆயுதக் கிடங்கைத் தாக்கினர். முதற்கட்டப் போராளிகள் கையில் கீதையுடன் தூக்கு மேடை ஏறினர் என்றால் இவர்கள் அனைவரும் “இன்குலாப் ஜிந்தாபாத்” எனும் முழக்கத்தோடு கயிற்றை முத்தமிட்டனர். இவை எல்லாமும் பிபன் சந்திராவின் நூலில் புரட்சிகர நடவடிக்கைகளாகவே முன்வைக்கப்படுகின்றன. நமது விடுதலைப் போராட்டத்தில் இவற்றுக்குரிய பங்கு அதில் சரியாக அளிக்கப்படுகிறது. “1931 மார்ச்சில் அவர் தூக்கிலிடப்பட்டப்போது நாடெங்கிலும் ‘பகத்சிங்’ என்பது வீடுகள்தோறும் உச்சரிக்கும் ஒரு பெயரானது…. அவர் தூக்கிலிடப்பட்ட செய்தி அறிந்து நாடு முழுவதும் ஏராளமானோர் கண்ணீர் சிந்தினர். உணவருந்தவும், பள்ளி செல்லவும், தினசரி வேலைகளைச் செய்யவும் மறந்தனர்..” என்கிறார் சந்திரா. இதில் கவனத்தில் கொள்ள வேண்டியது அன்று இந்த நடவடிக்கைகள் அனைத்தும் ‘பயங்கரவாதம்’ என்றே அழைக்கப்பட்டன என்பதுதான். பகத்சிங் உட்பட அவற்றை மேற்கொண்டவர்களே தம் நடவடிக்கைகளை அப்படித்தான் குறிப்பிட்டனர்.

1929ல் வெளியிடப்பட்ட பகத்சிங்கின் ‘இந்துஸ்தான் சோஷலிசக் குடியரசுக் கழக’த்தின் (Hindustan Socialist Republican Association) கொள்கை அறிக்கை இப்படிக் கூறியது: “நமது பயங்கரவாதக் கொள்கைக்காக நாம் கடுமையாக விமர்சிக்கப் படுகிறோம். (ஆனால்) பயங்கரவாதத்தைக் கையிலெடுத்துத்தான் நாம் சரியான எதிர்வினை ஆற்ற முடியும் எனப் புரட்சியாளர்கள் சரியாகவே கருதுகிறார்கள் (We have been taken to task for our terroristic policy. No doubt, the revolutionaries think, and rightly, that it is only by resorting to terrorism that they can find a most effective means of retaliation)” காந்தி இவர்களை “குண்டுகளை வழிபடுபவர்கள்” என விமர்சித்தபோது பகவதி சரண் சர்மா, “குண்டுகளின் தத்துவம் புரட்சியின் ஓர் அங்கம்” எனவும். “பயங்கரவாதம் இல்லாமல் புரட்சி முழுமை அடைவதில்லை” எனவும் கூறினார். எதற்கு இதையெல்லாம் இங்கு சொல்ல வேண்டி வருகிறது என்றால் பிரெஞ்சுப் புரட்சி தொடங்கி கொடுங்கோல் அரசுகளுக்கு எதிரான வன்முறை நடவடிக்கைகள் ‘பயங்கரவாதம்’ என்றே அழைக்கப்பட்டன என்பதையும் பகத்சிங்கும் தோழர்களும், அவர்களின் இயக்கத்தினருமே அப்படித்தான் அச்சொல்லைப் பயன்படுத்தினர் என்பதையும் நாம் மனங்கொள்ள வேண்டும் என்பதற்குத்தான்.

இந்தப் பின்னணியில்தான் பிபன் சந்திரா தனது நூலின் இருபதாம் அத்தியாயத் தலைப்பில் பயங்கரவாதம் எனும் சொல்லைப் பயன்படுத்தினார். இந்தப் புத்தகம் எழுதப் படும்போது ‘பயங்கரவாதம்’ எனும் சொல்லுக்கு இன்றைய பொருள் கிடையாது என்பதை மீண்டும் இங்கு வலியுறுத்த வேண்டி உள்ளது. அப்போது பயங்கரவாதம் என்பது கொடுங்கோல் ஆட்சிக்கு எதிரான ஒரு போராட்டவடிவம் என்பதுதான் அதன் புரிதலாக இருந்தது.. குறிப்பான கொடுங்கோலர்களைத் திட்டமிட்டுக் கொல்வது, இதன் மூலம் மக்களுக்கு நம்பிக்கை ஊட்டுவது என்பதுதான் அன்று அதன் பொருள்.

இன்றோ அடையாளம் தெரியாத அப்பாவி மக்களைக் கொல்வதாகவும் மக்களை அச்சுறுத்துவதாகவும் ‘பயங்கரவாதம்’ எனும் சொல்லின் உள்ளடக்கம் மாறியுள்ளது. இது குறித்து 2007ல் பேசும்போது இன்று அச்சொல்லின் பொருள் மாறியுள்ளது என்பதையும், இனி புரட்சிகரமான நடவடிக்கைகளைப் ‘பயங்கரவாதம்’ என்கிற சொல்லால் குறிப்பிட இயலாது எனவும் பிபன் சந்திரா குறிப்பிட்டார். 2006 ல் பகத்சிங்கின் ”நான் ஏன் நாத்திகன் ஆனேன்?”, “கனவுலகம்” எனும் இரு நூல்களின் தொகுப்பு ஒன்றிற்கு முன்னுரை எழுதியபோது ‘புரட்சிகர பயங்கரவாதம்’ எனும் சொல்லை சந்திரா கையாளவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

இறுதியாக ஒரு கேள்வி நமக்கு எழலாம். இன்றுதான் ‘பயங்கரவாதம்’ எனும் அச்சொல்லின் அந்தப் பொருள் மாறியுள்ளதே, பின் எதற்காக அந்தச் சொல்லுடன் எழுதப்பட்டுள்ள அந்தப் புத்தகத்தை இன்னும் பாடநூலாக வைத்துக் கொள்ள வேண்டும்? அல்லது அந்தச் சொற்களை நீக்கிவிட்டு அந்த நூலைப் பயன்[படுத்த வேண்டியதுதானே? இந்தக் கேள்விக்கு புகழ்மிக்க வரலாற்றாசிரியர் ரொமிலா தாபர் சொல்வது இதுதான்; “ஒரு ஆசிரியனின் எழுத்தை மாற்றி அமைக்க அதைப் பாடபுத்தகமாக வைத்திருக்கும் துணை வேந்தர் உட்பட யாருக்கும், உரிமை இல்லை. ஆசிரியர் உயிருடன் இருந்து, அவர் விரும்பினால் அப்படிச் செய்யலாம். ஆனால் அப்படிச் செய்வது சரியான ஒன்றல்ல. வேண்டுமானால் அந்நூலில் முதல் முறையாக அந்தச் சொல் தோன்றும் இடத்தில் அடிக்குறிப்பாக, அந்த நூலை எழுதும்போது அந்தச் சொல் என்ன பொருளில் கையாளப்பட்டது, இன்று எப்படி அது மாறியுள்ளது என்றொரு விளக்கத்தைப் பதிவு செய்யலாம்.”

அப்படிச் செய்ய வேண்டியதுதானே என்றால் பிபன்சந்திராவே அதைச் செய்து முடித்துவிடார் என்பதுதான் பதில். புத்தகத்தின் 142 ம் பக்கத்தில் ,”இச்சொல் எந்த மரியாதையற்ற பொருளுடனும் பயன்படுத்தப்படவில்லை. வேறு சரியான சொல் இல்லாமையால் இது பயன்படுத்தப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார். தவிரவும் பேரா பிபன் சந்திரா இந்தப் ‘பயங்கரவாதம்’ எனும் சொல்லை எப்போதும் ‘புரட்சிகர பயங்கரவாதம்’ என்றே பயன்படுத்தி வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது.

பின் குறிப்பு

பயங்கரவாதம் குறித்த தன் கருத்தை இறுதிக் காலத்தில் பகத்சிங் மாற்றிக் கொண்டாரா?

ஒரு பக்கம் காந்தியின் அகிம்சை வழிக்கு மக்கள் மத்தியில் இருந்த பெரும் ஆதரவு, இன்னொரு பக்கம் அரசின் அடக்குமுறை ஆகியவற்றுக்கிடையே புரட்சிகரப் பயங்கரவாதப் பாதையைத் தேர்வு செய்த பகத் சிங் முதலானோர் தம் இறுதிக் காலத்தில் தங்களின் கருத்துக்களை மறு பரிசீலனை செய்தனர். வன்முறைப் பாதையைக் கைவிடுவது என்பதை நோக்கி நகர்ந்தனர் என்பதுதான் வரலாறு. இவர்களில் மூத்தவரான ராம்பிரசாத் பிஸ்மில் தூக்கிலிடப் படுவதற்கு முன்னர், “ரிவால்வரையும் பிஸ்டல்களையும் வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆசையைக் கைவிடுங்கள்” என இளைஞர்களை வேண்டிக் கொண்டார். பதிலாக “வெளிப்படையான இயக்கங்களில்” சேருமாறும் கேட்டுக் கொண்டார்.

பகத் சிங் மிக இளம் வயதில் தூக்கிலிடப் பட்டவர். ஆயினும் அவரது சிந்தனைகளும் அரசியலும் தொடர்ந்து முதிர்ச்சியடைந்து வந்தன. அவரது எந்த ஒரு குறிப்பிட்ட கால அரசியலையும் வைத்து அதுதான் பகத் சிங் என அடையாளப் படுத்துவது சரியில்லை. 1929 வாக்கில் அவரது கருத்து மார்க்சீயத்தைச் சார்ந்தும் அகன்ற வெகு மக்கள் இயக்கமே புரட்சிக்கான சரியான பாதை என்பதை நோக்கியும் நகர்ந்தது. தனி நபர் சாகசம் பயனளிக்காது என்கிற முடிவுக்கும் வந்தார்.

1931ல் சிறையிலிருந்தவாரே அவர் தோழர்களுக்குச் சொன்ன அறிவுரை இப்படியாக அமைந்தது: “வெடி குண்டுகளின் பாதை தொடக்க நிலையில் சில பயன்களைத் தரலாம். ஆனால் அது போதாது. உலகமெங்கும் அது தோற்றுத்தான் போயுள்ளது. அதன் தோல்வியின் விதைகள் ஏகாதிபத்தியவாதிகளின் புரிதலில் இப்படி அமைகிறது: ’30 கோடி மக்களை ஆள ஆண்டுக்கு முப்பது பேர்களைத் தூக்கிலிடுவது போதுமானது’. நாம் பயங்கரவாதத்திலிருந்து முற்றாக நம்மைத் துண்டித்துக் கொள்ளவில்லை. தொழிலாளர் புரட்சி என்கிற பார்வையிலிருந்து அதை முழுமையாக மதிப்பிட விரும்புகிறோம். ஒரு புரட்சிகரக் கட்சியின் தயார் நினென்பது அவர்களின் ஆதரவு வலிமையுடன் ஒன்றிணைக்கப்பட்டிருக்க வேண்டும்”

ஆக மக்களின் முழுமையான ஆதரவு இல்லாத சாகசங்களால் பயனில்லை என்பதுதான் பகத்சிங்கின் இறுதிக் கருத்தாக இருந்தது.

டாக்டர் ஜாஹிர் நாயக்கை முன்வைத்து புனிதப் பிரதிகளை வாசிப்பது பற்றி ஓர் உசாவல்

(ஆகஸ்ட் மாதம் ‘உயிர்மை’ மாத இதழில் வெளிவந்துள்ள என் கட்டுரை. அந்தக் கட்டுரையில் பின்னிணைக்கப்பட்ட இணைப்பு இங்கே தவிர்க்கப்பட்டுள்ளது. டாக்டர் ஜாஹிர் நாயக் மீது மோடி அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் எத்தனை ஆபத்தானவை என்பது பற்றிய அந்த இணைப்பு முன்னதாக என் பக்கங்களில் இடம் பெற்றுள்ளதால் அதை இங்கு தவிர்த்துள்ளேன்)

முஸ்லிம் மதப் பிரச்சாரகர் டாக்டர் ஜாஹிர் நாயக்கின் உரையை நான் ஒரே ஒரு முறை, சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் சென்னை அம்பேத்கர் மணி மண்டபம் அருகில் உள்ள இந்தியன் வங்கி அரங்கில் கேட்டுள்ளேன். பெரும்பாலும் உயர் தட்டு முஸ்லிம்கள் பங்கு பெற்ற கூட்டம் அது. முஸ்லிம் பிரச்சினைகளில் ஆர்வம் உள்ளவன், அவர்களின் நியாயங்களைப் பேசுபவன் என்கிற வகையில் முஸ்லிம் நண்பர்கள் என்னை மிகவும் வற்புறுத்தி அழைத்திருந்தனர். டாக்டர் ஜாஹிர் நாயக் இஸ்லாத்தில் ஆழமான புலமையுடைய ஒரு முக்கிய பிரச்சாரகர் என்கிற வகையில் நானும் அந்த அழைப்பை ஏற்று உரையைக் கேட்கச் சென்றிருந்தேன். அழகிய ஆங்கிலத்தில் திருக்குர்ஆன் மற்றும் முஸ்லிம் மத நூற்களிலிருந்து ஏராளமாக மேற்கோள் காட்டி ஜாகிர் நாயக் பேசிய பேச்சு யாரையும் ஈர்க்கக் கூடியது. கூட்ட இறுதியில் நடைபெற்ற கேள்வி பதில்கள் நிகழ்ச்சியிலும் அவர் தன் இஸ்லாமியப் புலமையை நிலைநாட்டினார். அவ்வளவு எளிதில் அவரை யாரும் மடக்கி விட இயலாது என்பதை உணர்ந்து கொண்டேன்.

மீண்டும் அவரது உரையைக் கேட்க எனக்குச் சில வாய்ப்புகள் வந்தன. அவரது பேச்சுக்கள் அடங்கிய குறுந்தட்டுகள் பலவும் அவ்வப்போது பரிசாகக் கிடைத்தன. ஆனால் நான் அந்த வாய்ப்புகள் எதையும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. என்னை ஏனோ ஜாகிர் நாயக் ஈர்க்கவில்லை என்பதுதான் காரணம்.
இஸ்லாத்தில் ஆர்வமுடையவனாக இருந்தும், ஒரு இஸ்லாமிய இதழில் நபிகளின் வரலாற்றைத் தொடர்ந்து எழுதுவதற்காக ஏராளமான இஸ்லாமிய நூல்கள், சீரத்கள் ஆகியவற்றைப் பயின்று கொண்டும் இருந்த போதிலும் என்னை ஏன் ஜாகிர் நாய்க்கின் உரைகள் ஈர்க்கவில்லை?

நபிகளை எழுதுவதற்கு எனக்கு மிகவும் ஆதாரமாக இருந்த நூற்களில் இப்னு இஷாக்கின் சீரத் முதன்மையானது. இயேசு, புத்தர் முதலானோருடன் ஒப்பிடும்போது நபிகள் மிகவும் இளையவர். மிகவும் அதிகாரபூர்வமான, நம்பத் தகுந்த வரலாறுகளும் (சீரத்), அவரது உரையாடல்களும் (ஹதீஸ்) நமக்குக் கிடைக்கின்றன. அவற்றில் எதைத் தேர்வு செய்வது? எவற்றை அடிப்படையாகக் கொள்வது?

எந்த ஒரு வரலாற்று நாயகர்கள் குறித்து எழுதப்படும் பதிவுகளைப் பொருத்த மட்டில் சமகாலத்திலும், சம காலத்திற்கு மிக அருகிலான கால கட்டங்களிலும் எழுதப்படும் நூற்கள் மிகவும் கச்சாவாக இருக்கும். உண்மைகள் பூசி மெழுகப்படாமல் நமக்குக் கிடைக்கும். போகப் போக, அதுவும் வரலாற்று நாயகர்கள் இறை அந்தஸ்து பெறக்கூடிய நிலை வந்தால் அத்தகைய புனித நிலைக்குத் தகாதவை, பொருத்தமற்றவை என்பன தெரிந்தும் தெரியாமலும் தணிக்கைக்கு உள்ளாக்கப்படும். அந்தத் தணிக்கைகள் சுய தணிக்கைகளாகவும் இருக்கலாம்; அதிகாரங்களின் ஊடாக மேற்கொள்ளப் பட்டவையாகவும் இருக்கலாம். இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு நமது இராமாயணம். வால்மீகியின் ‘இராம காதை’யில் இராமனின் அவதாரப் பண்புகள் குறைவு. ஒரு அவதாரமாகக் கட்டமைக்க வேண்டி அதற்குப் பொருந்தாத பண்புகள் செதுக்கப்பட்ட தூய இராமனாகவன்றி குற்றங்களும் குறைகளும் கூட உள்ள ஒரு மானுடனாகவே இராமன் அதில் படைக்கப்பட்டிருப்பான். வால்மீகிக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்குப் பின் தோன்றிய நம் கம்பன் தன் காவியத்திற்கு இட்ட பெயர் ‘இராமாவதாரம்”. ஒரு அவதாரத்திற்குப் பொருந்தாத பண்புகள் செதுக்கப்பட்டு ஒரு தூய இராமனை கம்பர் படைத்திருப்பார்.

வரலாறுகளை, அதிலும் குறிப்பாக இறை வரலாறுகளை வாசிக்கும்போதும் கேட்கும்போதும் இந்தப் பிரச்சினையை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நான் எனது நபிகள் பற்றிய நூலில் முகமது நபிகள் எனும் வரலாற்று நாயகனில் வெளிப்படும் மானுடத் தன்மையை முதன்மைப்படுத்தி எழுதி இருந்தேன். அதற்கு எனக்கு நபிகள் வாழ்ந்த காலத்திற்கு ஆக நெருக்கமான மிகப் பழைய வரலாறான இப்னு இஷ்ஹாக்கின் சீரத்தே பெரிதும் அடிப்படையாக இருந்தது. இப்போது எல்லோராலும் பயிலப்படும் நபிகளின் வழக்கமான வரலாறுகளில் காணப்படாத சில நெகிழ்ச்சியான சம்பவங்கள் எனது நூலில் உண்டு. அதனாலேயே அது இன்றும் பலராலும் அதிகம் விரும்பப்படுகிறது. எடுத்துக்காட்டாக அதில் ஒரு சம்பவம். நபிகளின் ஒரே மகனான இப்றஹீம் குழந்தையாக இருக்கும்போதே இறந்து போகிறார். அந்தக் குழந்தையைப் பெரிதும் நேசித்த நபிகள் குழந்தைக்கு இறுதிச் சடங்குகள் முடித்த பின்னும் அழுது கொண்டு அந்த இடத்தை விட்டு அகல மறுக்கிறார். கூட இருந்தோர் வற்புறுத்தி அழைத்து வருகின்றனர். அப்போது அப்துல் ரஹ்மான் கேட்கிறார், “நீங்கள்தான் யாரும் இறந்தால் அழக்கூடாது எனக் கூறியுள்ளீர்களே, பிறகு ஏன் இன்று இப்படி..?”

அழுது ஆர்பாட்டம் .செய்யக்கூடாது எனத்தான் சொன்னேனே ஒழிய உள்ளத்தில் கசியும் அன்பு கண்களில் கசிவதை எப்படித் தடுத்துவிட இயலும் என்பார் முஹம்மது. இதை நீங்கள் வழக்கமாக இங்கு பயிலப்படும் நபிகளின் வரலாற்றைச் சித்திரிக்கும் நூல்களில் காண இயலாது. ஏன் எனில் இறந்த போது யாரும் அழக்கூடாது என்பதுதான் இஸ்லாமிய நிலைபாடு என்பதாக உருவாகியுள்ள கருத்தாக்கத்திற்கு இந்த உரையாடல் பொருந்தாததாக உள்ளது என்பதுதான் அதற்குக் காரணம். இப்படி நிறையச் சொல்லலாம். இப்படி நிறைய நிகழ்வுகளை என் நூலில் காணலாம்.

எழுதப்பட்ட எந்த ஒரு வாசகத்தையும் எப்படி வேண்டுமானாலும் வாசித்துவிட இயலும் என்பதுதான் இன்று நவீன பிரதியியல் முன்வைக்குக் கோட்பாடு. “பாரத நாடு பழம்பெரும் நாடு. நீரதன் புதல்வர் இந் நினைவகற்றாதீர்..” என மகாகவி பாரதி பாடியது ஆங்கிலேய அரசுக்கு எதிராக. ஆனால் இன்று அதை முஸ்லிம்களுக்கு எதிராக இந்துத்துவவாதிகள் பயன்படுத்துவது இதற்கொரு எடுத்துக்காட்டு. “அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்” எனும் அவரது தத்துவப் பாடலை ஒரு பாலியல் புணர்வு நிகழ்வை முழுமையாக விவரிக்கும் பாடலாகவும் வாசித்து விட இயலும்.

எப்படி வேண்டுமானாலும் வாசிக்கலாம் என்பது உங்கள் இலக்கிய விசாரங்களுக்கு வேண்டுமானால் பொருத்தமாக இருக்கலாம். ஆனால் இறை வாக்குகளுக்கு அது பொருந்தாது என ஒருவர் சொல்லலாம். அவர்களுக்கு ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மெக்காவில் உள்ள Grand Mosque ன் முன்னாள் இமாம் ஷேக் ஆடல் அல் கல்பானி அவர்கள் தன்னை ஒரு சலாஃபிஸ்ட் என அடையாளப்படுத்திக் கொள்ளத் தயங்காதவர். ஆனால் அவர் ‘தேஷ்’ (IS) பயங்கரவாதத்தின் ஊற்றுக் கண்ணும் சலாஃபிசம்தான் என்று சொல்லுகிறார்.

“நாங்களும் தேஷ் ஐப் போலவே சலாஃபிசம்தான் பேசுகிறோம். ஆனால் வேறு கோணத்தில்…… எங்களது புனித நூல்களிலிருந்தும் கோட்பாடுகளில் இருந்தும்தான் அவர்கள் (IS) தங்கள் கோட்பாடுகளை உருவாக்கிக் கொள்கின்றனர்…”

என ஷேக் அல் கல்பானி அவர்கள் கூறுவதை நீங்கள் யூ ட்யூபில் காணலாம். சலாஃபிசத்தை உருவக்கியவரான இமாம் இப்ன் ஏ தைமியா அவர்களின் பல ஃபத்வாக்களை மேற்கோள் காட்டி IS அமைப்பினர் தம் செயல்பாடுகளை நியாயப்படுத்திக் கொள்வதை அவர்களின் ஆன்லைன் செய்தி மடலான தாஃபிக்கில் காணலாம்.

ஆக புனித நூற்களையும் கூட யாரும் எப்படியும் வாசித்து விட இயலும், எப்படியும் பயன்படுத்திவிட முடியும் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். நபிகள் மற்றும் இஸ்லாத்தின் வரலாறு பிற மத வரலாறுகளிலிருந்து மிகவும் இளைய ஒன்று என்றேன். மிகவும் நிகழ்ச்சிகள் நிறைந்த ஒரு வரலாற்றின் நாயகர் நபிகள் நாயகம். அவரது உரையாடல்களும் (ஹதீஸ்), திருக்குர் ஆன் ஆயத்துகளும் அப்படியான பல்வேறு நிகழ்வுகளை ஒட்டி அருளப் பெற்றவை. அவற்றை அந் நிகழ்வுகளிலிருந்து பிரித்துப் பொதுமைப் படுத்தும்போது கவனம் தேவை.

ஒரு முஸ்லிம் மதப் பிரச்சாரகர் இந்தப் பின்னணியில் சந்திக்கும் பிரச்சினைகள் மிகவும் சிக்கலானவை. இஸ்லாம், கிறிஸ்தவம் முதலான யூதேய மதங்கள் (நம் பவுத்தமும் கூட) பரப்புதற்குரிய மதங்கள் (proselytising religions). இம்மதங்களைப் பின்பற்றுவோர் தமக்குக் கிடத்துள்ள நற்செய்தியை பிறருடன் பகிர்ந்து கொள்ளும் கடமை உடையோர். அழைப்புப் பணி என்பது அவர்களின் மதக் கடமைகளில் ஒன்று. அப்படிச் செய்யும்போது தங்கள் மதமே பிறவற்றைக்காட்டிலும் சரியானது என அவர் சொல்லித்தான் ஆக வேண்டும்.

“எனக்கு இந்த நாத்திக வாதத்தில் அப்படி ஒன்றும் பெரிய ஆர்வம் இல்லை. கடவுள் இருக்கு என்கிறவன் இல்லை என்பவனை முட்டாள்னு சொல்லணும்; இல்லைங்கிறவன் இருக்குங்கிறவனை முட்டாள்னு சொல்லணும். இதற்கு முடிவில்லை..” எனும் பொருளில் தந்தை பெரியார் ஒருமுறை பேசியிருப்பார். மதங்களுக்கிடையே உள்ள விவாதங்களிலும் இப்படித்தான் தன்னுடைய மதம் மட்டுமே சிறந்தது என ஒரு பிரச்சாரகர் சொல்லித்தான் ஆக வேண்டும். அப்படிச் சொல்லும்போது மற்ற மதங்கள் குறை உடையன என்கிற கருத்து தவிர்கக் இயலாதது. ஆனால் இது போன்ற கருத்து வெளிப்பாடுகள் எதுவும் பற்றி எரியக் கூடிய இன்றைய சூழலில் எத்தனை பிரச்சினைக்குரியவை என்பதை விளக்க வேண்டியதில்லை. அதுவும் முஸ்லிம் பிரச்சாரகர்களைப் பொருத்த மட்டில் 1400 ஆண்டுகட்கு முன் உருவாக்கப்பட்ட மத வரையறைகள், சட்டங்கள் ஆகியவற்றில், எவ்வித மாற்றங்களையும் அவர்களால் ஏற்க இயலாது. பயங்கரவாதம், மத அடிப்படையிலான வெறுப்பு அரசியல் ஆகியன தலைதூக்கி நிற்கும் இன்றைய சூழலில் இது மிகவும் பிரச்சினைதான். பேச்சுக்களில் மிகுந்த கவனமும் எச்சரிகையும் தேவை.

இந்தக் கோணத்திலிருந்து பார்க்கும்போதுதான் டாக்டர் ஜாஹிர் நாயக்கின் மதப் பிரச்சாரப் பேச்சுக்களை இன்று பேச்சுரிமைக்காகவும் மதவாதத்திற்கு எதிராகவும் இயங்கும் பலரும்கூட விமர்சிக்க நேர்ந்துள்ளது. ஊடகம் மற்றும் செய்தித் தொடர்பு ஆய்வுத் துறை வல்லுனரும் செவ்வியல் அரேபிய மற்றும் இஸ்லாமிய அறிவுத் துறை அறிஞருமான பேரா. குலாம் ரசூல் தெஹ்ல்வி அவர்கள் ஜாஹிர் நாயக்கை பெண் வெறுப்பு, அடிப்படை வாதம் மற்றும் மத ஒற்றுமைக்கு எதிரான பேச்சுக்களைப் பேசும் சலாஃபிஸ்ட் என்கிறார். சென்ற ஜூலை 13 அன்று Muslims for Secularism and Democracy எனும் அமைப்பைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களும் அறிஞர்களும் மேற்கூறிய இதே காரணங்களுக்காக டாக்டர் ஜாஹிர் நாயக் மீது இ.த.ச 153 A பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மும்பையில் அறிக்கை ஒன்று வெளியிட்டனர். அதில் கையொப்பமிட்டுள்ள இர்ஃபான் எஞ்சினீயர், ஜாவேத் ஆனந்த், ராம் புனியானி, ஆனந்த் பட்டவர்தன், மிலிந்த் ரானடே முதலான பலரும் தொடர்ந்து இந்ந்துத்துவ வன்முறைகளையும், வெறுப்பு அரசியலையும் கடுமையாக எதிர்த்து வருவோர் என்பது குறிப்பிடத் தக்கது.

பல் மத நம்பிக்கையாளர்களும் வாழும் நாடு இது. இதில் பிற நம்பிக்கைகளை விமர்சிக்கும்போது அது யாராக இருந்த போதிலும் கவனம் தேவை. அரசாங்க நடவடிக்கை இருக்கட்டும். நமக்கே அந்தக் கட்டுப்பாடுகள் தேவை. அது ஒரு அடிப்படை குடிமைச் சமூகப் பண்பு. “பன்றிகள் மட்டுமே தன் மனைவியைப் பிற ஆடவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வழக்கமுடையவை. பன்றிகளை உண்ணுவோரும் அப்படித்தான்” என்றெல்லாம் பொது வெளியில் எப்படிப் பேச இயலும்? பர்தா முறையை ஆதரித்துப் பேசுவதும், அப்படி அணிவது எங்களின் கலாச்சார உரிமை எனப் பேசுவதற்கும் உரிமை உண்டு. ஆனால் அதற்காக பர்தா அணியாத பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளைக்கு அவர்களின் பண்பாட்டு உடைகளே காரணம் எனச் சொல்வது எப்படிச் சரியாகும்?

“ஆண்கள் தங்கள் மனைவி மட்டுமின்றி அவர்களின் வலது கையில் பற்றப்பட்டுள்ள பெண்களின் மீதும் உரிமை உடையவர்கள்” என்கிற பொருள்படும் புனித வாசகங்கள் நாயக்கின் உரையில் பயன்படுத்தப்பட்டது இன்று சர்ச்சை ஆகும்போது அந்த வாசகம் போர்க்காலத்தில் விதவையான பெண்களுக்கு வாழ்வளிக்கும் நோக்கில் அருளப்பெற்றது என விளக்கம் அளிக்கப் படுகிறது. முற்றிலும் உண்மை. ஆனால் அதன் பொருளென்ன? இறை வாக்கானாலும் அதையும் காலம், சூழல் ஆகியவற்றுடன் பொருத்திப் பார்க்க வேண்டும் என்பதுதானே.

நான் பலமுறை திருப்பித் திருப்பி மேற்கோள் காட்டுகிற உம்பெர்டோ ஈகோ அவர்களில் அந்தக் கருத்தை மீண்டும் ஒரு முறை நினைவூட்டி முடிக்கிறேன்.

” ஒரு பண்பாட்டை இன்னொரு பண்பாட்டால் அளக்க இயலாது. நர மாமிசம் தின்னும் ஒரு கூட்டத்திடம் நான் அகப்பட்டுக் கொண்டால் கூட உங்கள் பண்பாடு மோசமானது என நான் சொல்ல மாட்டேன். வேண்டுமானால் நான் பிள்ளை குட்டிக்காரன் என்னை விட்டுவிடுங்கள் என்பதோடு நிறுத்திக் கொள்வேன்..”

இது ஏதோ தப்பிப்பதற்கான ஒரு உத்தி அல்ல. இது ஒரு அடிப்படையான குடிமைப் பண்பு.

குறிப்பு: நான் அடிக்கடி மேற்கோள் காட்டும் இன்னொரு கூற்று மகாத்மா காந்தியுடையது. அவர் சொல்வார்: “ எனாக்கு மதங்கள் பற்றிப் பேசும்போது பயன்படுத்தப்படும் இரண்டு சொற்களைப் பிடிக்காது. அவை tolerance மற்றும் compromise. பொறுத்துக்கொள்ளுதல் அல்லது சகித்துக் கொள்ளுதல் என்னும்போது மற்ற மதம் தாழ்வானது என்கிற பொருள் வந்து விடுகிறது. இதை என் அஹிம்சைக் கோட்பாடு ஏற்பதில்லை. நம் மதத்தின் மீதுள்ள நன் மதிப்பை நாம் பிற மதங்கள் மீதும் காட்ட வேண்டும். நம் மதத்தில் உள்ள குறைபாடுகளியும் நாம் ஏற்க வேண்டும். ..” என்பார். பிற மதங்களில் காணப்படும் நல்லம்சங்களைக் கொண்டு நம் மதத்தில் காணப்படும் குறைபாடுகளை நிரப்ப வேண்டும் என்கிற கருத்தும் அவரிடம் இருந்தது. அதே சமயத்தில் அவர் இன்னொரு அற்புதமான கருத்தையும் முன்வைத்தார். எல்லா மதங்களும் சமமானவை எனச் சொல்லும்போது அது ஒவ்வொரு மதத்திலும் விளங்கும் தனித்துவங்களை (வித்தியாசங்களை) மறுதலிப்பதாகி விடக் கூடாது என்பதுதான் அது. அத்தகைய தனித்துவங்களை அழிப்பதுதான் இந்துத்துவ பாசிசத்தின் நோக்கமாக இருக்கிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். “அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு” என நபிகள் நாயகம் குறிப்பிட்டது வேறு எப்போதையும் விட இன்று கவனத்துக்குரிய ஒன்று..

தலித் அரசியல்

தலித் அரசியலுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. அம்பேத்கர் நூற்றாண்டை ஒட்டி அது ஒரு புத்தெழுச்சி பெற்றபோது அத்துடன் இணைந்து நின்று செயல்பட்ட அறிவுஜீவிகளில் அ.மார்கஸ் குறப்பிடத்தக்கவர். 1988 தொடங்கி 2009 வரையில் தலித் அரசியல் தொடர்பாக அவர் எழுதிய கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன, இந்த 20 ஆண்டுகளில் தலித் அரசியலின் தோற்றம், வளர்ச்சி, செல்லும் திசை ஆகியன குறித்த கூர்மையான அவானத்துடன் கூடிய ஒரு விரிவான வரலாறாக இது அமைந்துள்ளது.

ஆரியக் கூத்து

கால்டுவெலின் திராவிட மொழிக்குடும்பம் பற்றிய கண்டுபிடிப்பும் சிந்து சமவெளி அகழ்வுகள் வெளிப்படுத்திய உண்கைளும் சென்ற நூற்றாண்டில் தமிழக அரசியலை பாதித்த இரு முக்கிய நிகழ்ச்சிகள். இதன் மூலம் எழுச்சி கொண்ட பார்ப்பன எதிர்ப்பு அரசியலின் வீச்சில் ஓராண்டு காலம் ஓய்ந்து கிடந்த தமிழகப் பார்ப்பனர்கள் இன்றைய இந்துத்துவ எழுச்சியைப் பின்புலமாகக் கொண்டு வரலாற்றைப் புரட்டுகின்றனர். “தமிழக அந்தனர் வரலாறு” என்கிற பெயரில் பொய் மூட்டைகளை அவிழத்ததுவிடுகின்றனர். ஆரியப் பிரச்சினை, திராவிட மற்றும் இந்தோ – ஆரிய மொழிக்குடும்பங்கள் குறித்த நவீனமான வரலாற்றுச் சிந்தனைகளின் அடிப்படியில் அந்தனப் புரட்டுகளை தோலுரிக்கிறார் அ.மார்க்ஸ் வெறும் விவாத நோக்கிலான நூலாகவன்றி வரலாற்று உண்மைகள் பற்றிய சமகாலக் கருத்துக்களின் தொகுப்பாகவும் இது அமைந்துள்ளது. இந்த நூலின் ஒரு பகுதி “ஏன் பார்ப்பனர்கள் கால்டுவெல்லைக் கரித்துக் கொட்டுகிறார்கள்” எனும் தலைப்பில் இதே தளத்தில் உள்ளது. நண்பர்கள் வாசிக்கலாம். தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.