பா.ம.க.வை அரசியல் கட்சிகள் புறக்கணிக்க வேண்டும்

“சாதி இருக்கும்வரை சாதி இயக்கம் இருந்துதான் ஆகும்” என்கிறார் ராமதாஸ். 45 சாதி இயக்கங்களின் தலைவர்களைத் திரட்டித் தொகுத்த மகிழ்ச்சியில், “என் உடம்பில் தெம்பு வந்துவிட்டது” என்கிறார். சாதி ரீதியாகப் பிரச்சினைகளைத் தொகுத்து மத்திய மாநில அரசுகளிடம் சமர்ப்பிப்போம் என்கிறார்.

ஆக, தமிழக மக்கள், மக்களின் ஒட்டு மொத்தமான பிரச்சினைகள் என்பதைக் காட்டிலும், தனித் தனிச் சாதிகளின் பிரச்சினை என்கிற அளவில்தான் இனிப் பேச முடியும் என்பது தான் அவரது ‘அனைத்து சமுதாயப் பேரியக்கம்’ முன் வைக்கும் செய்தி.

தலித்கள் மட்டும் தவிர்க்கப்பட்ட இந்த ‘அனைத்து சாதி’க் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தலித்களுக்கு எதிராகக் கடுஞ் சொற்களைப் பெய்துள்ளனர். வழக்கம்போல இரண்டு ‘பிரச்சினைகள்’ முன்வைக்கப்பட்டுள்ளன. ஒன்று ராமதாசின் மொழியில் சொல்வதானால் ‘நாடகக் காதல்’. மற்றது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் ‘தவறாகப்’ பயன்படுத்துவது.

முதல் பிரச்சினைக்குத் தீர்வு வன்கொடுமைச் சட்டத்தைத் திருத்த வேண்டுமாம். இரண்டாவது பிரச்சினைக்குத் தீர்வு திருமணத்திற்குப் பெண்களது பெற்றோர்களின் சம்மதத்தைக் கட்டாயமாக்க வேண்டுமாம்.

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைப் பொருத்த மட்டில், இச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக் கூடியவர்களின் வீதம் குறைவாக உள்ளது என்பதையும், அதிகார மட்டங்களில் நிலவும் தலித் விரோதப் போக்குகளின் விளைவாக இச்சட்டத்தின் ஓட்டைகள் தலித்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றன எனவும் ஆய்வுகள் நிறுவியுள்ளன. இச்சட்டத்தில் காணப்படும் ஓட்டைகள் தொகுக்கப்பட்டு உரிய சட்டத் திருத்தங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்கிற குரல் இன்று தேசிய அளவில் உருவாகியுள்ளது.

திருமணத்திற்குப் பெண்களுக்கு மட்டும் பெற்றோர்களின் சம்மதத்தைக் கட்டாயப்படுத்த வேண்டும் என்பது அடிப்படைப் பாலியல் சமத்துவ அறங்களுக்கு மட்டுமின்றி நமது அரசியல் சட்ட அடிப்படை உரிமைகளுக்கும் எதிரானது. தவிரவும் தலித்களுடனான சாதி மறுப்புத் திருமணங்கள் என்பன தமிழகத்தில்தான் அகில இந்திய அளவில் குறைவாக உள்ளது.

இத்தகைய பலவீனமான கோரிக்கைகளுடன் தன் பயணத்தைத் தொடங்கியுள்ளது ராமதாசின் அனைத்து சாதிக் கப்பல்.

‘சாதி’ என்கிற அடையாளத்தின் கீழ் ஒரு அரசியலைக் கட்டமைக்கும்போது தவிர்க்க இயலாமல் நமது தேர்தல் அரசியலில் ஒரு கூட்டணியை அமைத்து ஆதரவுத் தொகுதியைப் பெருக்கிக் கொள்ள வேண்டியதாகிறது. காலங்காலமாகத் தீண்டாமைக்கு ஆட்படுத்தப்பட்ட தலித்கள் சாதி அடையாளத்தில் தம்மைத் திரட்டிக் கொள்வதை யாரும் குறை சொல்ல இயலாது. அம்பேத்கர் அவர்கள் இவ்வாறு அரசியல் இயக்கங்களைக் கட்டியபோது இடதுசாரிகளுடனும், சோஷலிஸ்டுகளுடனுந்தான் கூட்டணி அமைத்தார். ‘சுதந்திரத் தொழிலாளர் கட்சி’, ‘குடியரசுக் கட்சி’ என்கிற பெயர்களைத்தான் தேர்வு செய்தார்.

கான்ஷிராம் புத்தரின் வழி நின்று ‘பகுஜன்’ என்கிற அடையாளத்தை முன்நிறுத்தினார். அவர் விலக்கியது பார்ப்பனர்களையும் சத்திரியர்களையும் மட்டுமே. குர்மி, சமர் முதலான தலித் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு, இதர பிற்படுத்தப்பட்ட சாதிகள், சிறுபான்மையோர் என்பதாக அக்கூட்டணி அமைந்தது.

வடமாநிலங்களுக்கும் தமிழகத்திற்கும் உள்ள ஒரு வேறுபாடு குறிப்பிடத் தக்கது.. அங்கே பார்ப்பனர்கள் கிட்டத்தட்ட பத்து சதம் வரை உள்ளனர். இங்கே மூன்று சதத்திற்கும் குறைவு. அங்கே சத்திரியர் எண்ணிக்கையில் மட்டுமல்ல அரசியலிலும் பலமான சக்திகள். இகே அப்படி ஒரு வருணமோ சாதியோ கிடையாது. தென்னகம் போல இட ஒதுக்கீடு என்கிற கருத்தாக்கம் எழுபதுகளுக்கு முன்பு வரை வடக்கில் வலுப்பெற்று இருந்ததில்லை. எனவே அரசுப் பணிகளில் தலித்களைக் காட்டிலும் கூட இதர பிற்படுத்தப்பட்ட சாதியினர் பின் தங்கி இருந்தனர்.

கான்ஷிராம் இந்த முற்படுத்தப்பட்ட சாதிகளை விலக்கி தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகளின் ஒற்றுமையை உருவாக்கினார், அவரது அரசியல் முழக்கங்கள் பிற்படுத்தப்பட்டோரின் பிந்தங்கிய நிலையை முன்வைத்து அமைந்தன. அதே நேரத்தில் தலித்கள் மத்தியில் உட்சாதி ஒற்றுமையும் வலுவானது. இதெல்லாம் கூடப் போதாது என்றுதான் முற்படுத்தப்பட்ட சாதிகளையும் இணைத்து மாயாவதி ‘சர்வஜன்’ என்கிற கருத்தாக்கத்தை முன்வைத்தார்.

அந்தவகையில் பார்ப்பனர்கள் போன்றோரும் கூட இந்த வலுவான கூட்டணியில் தம்மை இணைத்துக் கொண்டால் பலனுண்டு என்கிற அடிப்படையில் சர்வஜன் கூட்டணியில் இணைந்தனர். எனினும் இந்தப் புதிய இணைவு வலுவானதாக இல்லாததாலும், இதனாலேயே கான்ஷிராம் அமைத்த வலுவான கூட்டணியில் சில பிளவுகள் நேர்ந்ததாலும் மாயாவதி சென்ற தேர்தலில் ஆட்சியை இழக்க நேரிட்டது.

தவிரவும் இன்று மாநில அரசியலில் ‘வளர்ச்சி’, ‘ஊழலின்மை’ முதலான கருத்தாக்கங்கள் முதன்மை பெறுவதும் கவனத்திற்குரியது.

ராமதாசின் அனைத்து சாதி அரசியல் இந்த வேறுபாடுகளைக் கணக்கில் கொள்ளாமல் மாயாவதியின் ‘சமூகப் பொறியியல்’ என்னும் சொல்லாடலைத் தமிழகத்தில் பயன்படுத்தப் பார்க்கிறார்.

இட ஒதுக்கீட்டுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்த தமிழகத்தில் வட மாநிலங்களைப்போல அரசுப் பணிகளிலோ மற்றவற்றிலோ பிற்படுத்தப்பட்டவர்கள் தலித்களைக் காட்டிலும் பின் தங்கி இல்லை. பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் ஆகக் கீழாக இருந்த வன்னியர் முதலான சாதியினருக்கு மிகப் பிற்படுத்தப்பட்ட நிலையை ராமதாசின் அரசியல் ஈட்டித் தந்ததன் விளைவாக இன்று அவர்களுக்கும் அதிகாரங்களில் உரிய இடம் கிடைக்கிறது.

இந்நிலையில் பிற்படுத்தப்பட்ட சாதிகள் பின்தங்கியுள்ளதாகச் சொல்லி ஒரு அரசியலைக் கட்டமைக்கும் முயற்சி இங்கு எப்படி வெற்றி பெற இயலும்?

ராமதாஸ் கடந்த கால் நூற்றாண்டில் வன்னியர்களை வெறும் சாதி அமைப்பாக மட்டுமின்றி ஒரு அரசியல் இயக்கமாகவும் உருவாக்கியுள்ளார். ஆனால் இன்று ராமதாஸ் உருவாக்கியுல்ள கூட்டணியில் உள்ள பிற 44 சாதிகளும் வெறும் சாதி அமைப்புகளாக மட்டுமே உள்ளன. முக்குலத்தோர் மத்தியில் அத்தகைய முயற்சி முத்துராமலிங்கர் காலத்தில் ஓரளவு மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவருக்குப் பின் அவ்வமைப்புகள் வெறும் சாதி அமைப்புக்களாகவே குறுகின. இன்று அவர்கள் சாதி அமைப்புகளில் இருந்தபோதும் வெவ்வேறு அரசியல் கட்சிகளில் பிரிந்துள்ளனர். சாதி மாநாடுகளுக்கு வேண்டுமானால் இவர்கள் தலைமையின் குரலை ஏற்று வந்து குவிந்து வியப்பை ஏற்படுத்தலாம். ஆனால் வன்னியர்கள் தவிர்த்த பிற சாதியினர் தேர்தல் என வரும்போது சாதித் தலைமைகளின் அழைப்பை ஏற்கப் போவதில்லை.

அது மாத்திரமல்ல, முத்துராமலிங்கருக்குப் பின் அவரது ஃபார்வர்ட் ப்ளாக் கட்சி பெயரளவிற்கும் கூட இல்லாமல் சிதைந்ததற்குக் காரணம் அவர் முன்னிலைப்படுத்திய தலித் வெறுப்புத்தான். ராமதாசுக்குப் பின் அன்புமணியாரின் தலைமையில் பா.ம.கவுக்கும் அதுதான் நிகழப் போகிறது.

தனது சாதி அரசியலை மறைக்க அவ்வப்போது ராமதாஸ் முழங்கும் தமிழ்த் தேசிய வீர உரைகள் அவரது அனைத்து சாதிக் கப்பலைக் கரை சேர்க்க உதவாது. தமிழ்த் தேசியர்கள் வேண்டுமானால் ராமதாசின் சாதி வெறி அரசியலைக் கண்டு கொள்ளாமல் அவரை அணைத்துக் கொள்ளலாம்.

ஆனால் மக்கள் ராமதாசை ஒரு குறிப்பிட்ட சாதியின் தலைவராகவே காண்பர். இவர்களின் அரசியல் தேர்தலில் எடுபடாது. ஆனானப்பட்ட பால் தாக்கரேயின் சிவசேனா கட்சியே என்றைக்கும் ஆட்சியைப் பிடிக்கும் அளவிற்கு ஆதரவு திரட்ட முடிந்ததில்லை.

சாதி அடிப்படையில் தமிழர்களைப் பிளவுபடுத்தும் பா.ம.கவுடன் கூட்டணி கிடையாது எனப் பிற கட்சிகள் அறிவிக்க வேண்டும்.

மல்லிப்பட்டனம் தேர்தல் கலவரத்தை முன்வைத்து…

நான் அங்கு போகவில்லை. நாளிதழ்களில் வாசித்ததுதான். நண்பர் ஃபிர்தவுஸ் ராஜகுமாரன் எழுதியிருந்த முகநூல் பதிவையும் பார்த்தேன். வாக்கு சேகரிப்பிற்காக வந்திருந்த பா.ஜ.க வேட்பாளர் கருப்பு என்கிற முருகானந்தத்தைத் தம் பகுதிக்குள் நுழைய வேண்டாம் என முஸ்லிம்கள் தடுத்ததாகவும், அதை மீறி கருப்பு குழுவினர் நுழைந்த போது கலவரம் மூண்டதாகவும் அறிகிறோம்.

தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிக்க யாரும் வரத்தான் செய்வார்கள். எங்கள் பகுதிக்கு வரவேண்டாம் என முஸ்லிம்கள் தடுத்திருக்கத் தேவை இல்லை என ஃபிர்தௌஸ் கூறி இருந்தார். உண்மைதான். நமக்குப் பிடிக்காதவர் ஆனபோதிலும் வாக்கு சேகரிக்க வருபவர்களிடம் ஒரு புன்னகையை உதிர்த்து அனுப்புவதே பண்பாடு என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க இயலாது.

எனினும் முழுமையாக அன்று என்ன நடந்தது எனத் தெரியவில்லை.

மல்லிப்பட்டினம் கிழக்குக் கடற்கரைச் சாலையை ஒட்டி அமைந்துள்ள ஒரு ஊர். கிழக்குக் கடற்கரையில் பரவலாக முஸ்லிம்கள் வசிக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவ அமைப்புகளும் இப்பகுதியில்தான் அதிகம்.

தற்போது கலவரம் நடந்த இப்பகுதியில் தீவிரமாகச் செயல்படும் இந்துத்துவ அமைப்புகளில் முக்கியமானவர் இந்தக் கருப்பு.

முத்துப்பேட்டை, அதிராம்பட்டினம் முதலான பகுதிகளில் கடந்த இருபது ஆண்டுகளாக மதக் கலவரங்கள் நடை பெற்று வருகின்றன. மதக் கலவரங்கள் எனச் சொல்வதைக் காட்டிலும் முஸ்லிம்கள், அவர்களது கடைகள், இதர சொத்துக்கள் தாக்கப்படுவது அவ்வப்போது தொடர்ந்து நடை பெற்று வருகிறது.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த தாக்குதலில் முத்துப்பேட்டை கடைவீதியில் இருந்த ஒரு மரவாடி, சைக்கிள் ஸ்பேர் பார்ட் ஷாப் உள்ளிட்ட பல கடைகள் எரிக்கப்பட்டு, தாக்கப்பட்டன. முஸ்லிம்களுக்குச் சொந்தமான தென்னை மற்றும் வாழைத் தோப்புகளில் மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டன. முத்துப்பேட்டையில் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு அந்தக் கலவரத்தின்போது ஏற்பட்ட சொத்திழப்பு அபோதே ஒரு கோடி ரூபாய் என எங்கள் உண்மை அறியும் குழு மதிப்பிட்டது.

அப்போது நான் தஞ்சையில் இருந்தேன். சில ஆண்டுகளுக்குப் பின் ஒருநாள் காலையில் நாகை சாலையில் வாக்கிங் போய்க் கொண்டிருந்தேன். எதிரே வந்த ஒருவர் வணக்கம் சொன்னார். அடையாளம் தெரியவில்லை. பின் அவரே சொன்னார். சற்று முன் குறிப்பிட்டேனே அந்தக் கலவரத்தில் முழுமையாக எரிக்கப்பட்ட சைக்கிள் ஸ்பேர் பார்ட்ஸ் ஷாப்காரர். அந்த ஊரை விட்டே தான் இடம் பெயர்ந்து விட்டதாகவும். தற்போது தஞ்சையில் ஒரு கடையைத் தொடங்கி இருப்பதாகவும் கூறினார்.

முத்துப்பேட்டை முஸ்லிம்களுக்கு செப்டம்பர், அக்டோபர் மாதம் வந்தாலே அச்சம் தோன்றி விடும். அபோதுதான் ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவ அமைப்புகள் அங்கு வினாயகர் ஊர்வலம் நடத்துவார்கள். வினாயகர் சிலையைத் தூக்கிக் கொண்டு சந்தைப்பேட்டை முஸ்லிம் தெரு வழியாக ஊர்வலம் வருவார்கள். அந்த முஸ்லிம் தெரு மிகக் குறுகலானது. வினாயகர் ஊர்வலத்தினர் என்னென்ன முழக்கங்களை இடுவார்கள், எதையெல்லாம் செய்வார்கள் என்பதை நான் விளக்கமாகச் சொல்ல வேண்டியதில்லை. முஸ்லிம் இளைஞர்கள் கொதிப்படைவார்கள். குறிப்பாகப் பெண்கள் தொடர்பான இழிவுப் பேச்சுக்கள் வரும்போது இவர்கள் தரப்பிலிருந்து ஏதாவது எதிர்வினைகள் வரும். பிறகு கலவரம்தான்,

ஆறேழு ஆண்டுகளுக்கு முன் அப்படி ஒரு பெருங்கலவரத்திற்குப் பின் நாங்கள் அங்கு சென்றிருந்தோம். எங்களுடைய முக்கிய பரிந்துரை ஊர்வலப் பாதையை மாற்ற வேண்டும் என்பது. முத்துப்பேட்டையைச் சுற்றி இரண்டு ஆறுகள் ஓடுகின்றன. நாகூருக்குப் பிறகு மத வேறுபாடுகள் இல்லாமல் பெரிய அளவில் மக்கள் புனிதப் பயணம் வருகிற தர்ஹா ஒன்றும் அங்குள்ளது. விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்க அந்தக் குறுகிய முஸ்லிம் தெருக்கள் வழியாக ஊர்வலம் போக அவசியமே இல்லை. வம்புக்காக்கத்தான் அத்தனையும்.

இந்த வம்புகள் அனைத்தின் நாயகரும் கருப்பு என்கிற முருகானந்தம் தான்.

தொடர்ந்து இரண்டு மூன்று ஆண்டுகள் கடும் ‘டென்ஷன்’தான். இடையில் ஊர்வலப் பாதையை மாற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தை முஸ்லிம்கள் அணுகினர். இந்திய தவ்ஹீத் ஜமாத்தைச் சேர்ந்த நண்பர் முகமது சிப்லி அந்த வழக்கைத் தொடுத்திருந்தார். எங்கள் அறிக்கையும் அதில் ஒரு முக்கிய ஆவணமாக முன்வைக்கப்பட்டது. நீதிமன்றமும் மாற்றுப் பாதை ஒன்றைச் சுட்டிக்காட்டி ஆணையிட்டது.

அந்த ஆண்டில் நாங்கள் மீண்டும் ஊர்வலத்தன்று அங்கு சென்றோம். முத்துப்பேட்டைக்கு நாங்கள் செல்வது இது மூன்றாம் முறை. கடைவீதியில், பேருந்து நிறுத்தத்திற்கு அருகிலுள்ள சி.பி.அய் கட்சியின் அலுவலக மாடியில் நின்றவாறு வெறி கலந்த முழக்கங்களுடன் சென்று கொண்டிருந்த ஊர்வலத்தைப் பார்த்துக் கொண்டிருந்தோம். ஒரு ஆத்திரம்கொண்ட நிலையில்தான் ஊர்வலம் சென்றுகொண்டிருந்தது. நீதிமன்ற ஆணை முழுமையாகக் கடைபிடிக்கப்படாமல்தான் ஊர்வலம் நடந்தது. சில கல்வீச்சுக்கள் அப்போதும் நடக்கத்தான் செய்தன. ஊர்வலம் முடிந்தவுடன் கல்வீச்சுகளால் தாக்கப்பட்டிருந்த முஸ்லிம்களின் வீடுகளைச் சென்று பார்த்தோம்.

கடந்த சில ஆண்டுகளாக அங்கு பெரிய சம்பவங்கள் ஏதும் இல்லை. கருப்புவிற்கு பா.ஜ.க வில் ஏதோ முக்கிய பதவியெல்லாம் கொடுத்துள்ளனர். அவர் இப்போது அதிகம் சென்னையில்தான் இருப்பதாகவும், ஊர்ப்பக்கம் பெரிதாக வருவதில்லை எனவும், அதனால் கலவரங்களும் கொஞ்சம் குறைந்துள்ளதாகவும் முத்துப்பேட்டையைச் சேந்த ஒருவர் குறிப்பிட்டார். நான்கூட ஒருமுறை அவரை சென்னையில் ஒரு தொலைக்காட்ட்சி விவாதத்தில் சந்தித்தேன்.

இந்தியாவில் நடைபெறும் மதக் கலவரங்களில் ஓரம்சத்தை நாம் கவனிக்க வேண்டும். இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமான மோதல் எனப் பொத்தாம் பொதுவாக அவரற்றைச் சொல்லிவிட இயலாது. இந்துக்களிலும் ஒரு குறிப்பிட்ட சாதியினர் முக்கிய பங்கேற்கும் வன்முறையாகவும் அவை உள்ளன. இந்தக் ‘குறிப்பிட்ட சாதி’ என்பது ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொன்றாக இருக்கலாம். முசாபர்நகரில் சமீபத்தில் நடந்த கலவரம் வெறுமனே ஒரு இந்து முஸ்லிம் கலவரம் மட்டுமல்ல; அது ஒரு ஜாட் – முஸ்லிம் கலவரமும் கூட.

இப்படி கலவரத்தில் ஒரு குறிப்பிட்ட சாதி முக்கிய பங்கு வகிக்கும் போது அங்குள்ள பல்வேறு அரசியல் கட்சிகளிலும் தலைமையில் இருப்பவர்களும் கூட அந்தப் பெரும்பான்மைச் சாதியைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பர். எனவே அவர்கள் வேவ்வேறு எதிர் எதிர் கட்சிகளில் இருந்தபோதும், முஸ்லிம்களைத் தாக்கிய தீவிரக் கும்பலில் அவர்கள் நேரடியாகப் பங்கு கொள்ளாதபோதும், அவர்களுக்கு ஆதரவாகவே செயல் படுகின்றனர்.

முத்துப் பேட்டையிலும் அதைக் கண்டோம்.

கருப்பு என்கிற முருகானந்தத்தின் மீது அப்பகுதி முஸ்லிம்களுக்கு ஒரு அச்சம் உள்ளது. அவர் மீது கொலை வழக்கு உட்பட பல வழக்குகள் உள்ளதாக வேட்பு மனுவிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார். மல்லிப்பட்டினம் முஸ்லிம்கள் தனக்கு வாக்களிக்க மாட்டார்கள் எனஅவருக்கு நிச்சயம் தெரியும். அவருடைய நோக்கம் வாக்கு சேகரிப்பதும் அல்ல. எப்படியோ இன்று நடைபெற்றுள்ள சம்பவம் இரு சமூகங்களையும் எதிர் எதிராக நிறுத்த உதவி செய்துள்ளது. இந்துத்துவ சக்திகள் விரும்புவது அதுதான். அப்படி இம்முரண் கூர்மைப் படும்போதுதான் பா.ஜ.க அதிக இடங்களைத் தேர்தல்களில் கைப்பற்ற முடிந்திருக்கிறது. இதுவரை பா.ஜ.க அதிக இடங்களை வென்ற, ஆட்சி அமைத்த தேர்தல்கள் (92 / 96 / 98) எல்லாவற்றிலும் அது உ.பியில் 50 இடங்களுக்கு மேல் பெற்றிருந்தது. அந்த நேரத்தில்தான் இந்து /முஸ்லிம் polarisation னும் அங்கு உச்சமாக இருந்தது. 2000க்குப் பின் அந்த அளவிற்கு இந்துக்களையும் முலிம்களையும் எதிர் எதிராக நிற்க வைக்க இந்துத்துவ சக்திகளால் முடியவில்லை. சிறையிலிருந்து விடுதலை ஆன அமித் ஷாவை மோடி உ.பி மாநிலத் ‘தேர்தல் பணிக்கு’ என அனுப்பி வைத்ததே இந்த நோக்கத்திற்காகத்தான் எனவும், முசாபர் நகர் கல்வரம் இந்த நோக்கிலேயே கட்டமைக்கப்பட்டது எனவும் ஒரு ‘தியரி’ உண்டு.

கருப்பின் நோக்கம் எதுவானாலும் வாக்கு சேகரிக்க வந்தவர் என்கிற வகையில் அவரை அனுமத்தித்திருக்கலாம், முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்ட பதட்டத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அதை அவர்கள் இப்படி வெளிப்படுத்தி இருக்க வேண்டியதில்லை. காவல்துறையை அணுகி, பெருங் கூட்டம், முழக்கங்கள் இல்லாமல் வாக்கு கேட்க வேண்டும் எனவும், அதிக அளவில் காவல்துறையினர் கூட வரவேண்டும் எனவும் கோரி இருக்கலாம்.

அப்பாவிகள் பலரும் கைது செய்யபட்டுள்ளதாக முஸ்லிம்கள் தரப்பில் சொல்லப்படுகிறது. இது காவல்துறை வழக்கமாகச் செய்வதுதான். உண்மையில் இப்படியான ஒரு பிரச்சினையைக் காவல்துறை எதிர்நோக்கி இன்னும் அதிகப் பாதுக்காப்பை அங்கு உறுதி செய்திருந்தால் இந்தச் சம்பவமே அன்று தடுக்கப் பட்டிருக்கலாம்.

அப்பா வளர்த்த நாய்கள்

என்னைப் போலவே என் அப்பாவும் ஒரு நாய்ப் பிரியர். அவர் நாயில்லாமல் எனக்குத் தெரிந்து வாழ்ந்ததில்லை. அவர் மலேசியாவில் இருந்தபோது, அவரது பத்துவராங் வீட்டில் ஒரு குரங்கை வளர்த்த கதையை அவரது வளர்ப்பு மகன் சுப்பையா அண்ணன் சொல்வார். குரங்கை வளர்ப்பது கொஞ்சம் தொல்லைதானாம். அப்பா ஏதாவது பேப்பரில் எழுதுவதைப் பார்த்துக்கொண்டே இருந்துவிட்டு, அவர் அகன்ற பின் மேசையில் குதித்து அந்தப் பேனாவை எடுத்து அந்த பேப்பரில் கீறு கீறென்று கிறுக்கித் தள்ளி விடுமாம். எழுதி வைத்ததும் காலி, அந்தப் பேனாவையும் அப்புறம் பயன்படுத்த முடியாது. அப்பாவும் என்னைப் போலவே விலை உயர்ந்த அழகான பேனாக்களை நேசிப்பவர்.

அந்தக் குரங்கிற்கு அப்பா வைத்திருந்த பெயர் ‘ஊர்வசி’.

கழுத்தில் மணியுடன் அழகாககத் திரியும் அந்த ஊர்வசியின் மேல் நிறைய பேருக்குக் கண்ணாம். ஒருநாள ஊர்வசி (அவளா, அவனா தெரியவில்லை) காணாமற் போய்விட்டதாம். அப்பா எல்ல இடங்களிலும் தேடிப்பார்த்து வருத்தத்தோடு இருந்துள்ளார். அப்போது சுப்பையா அண்ணனுக்கு ஒரு ஐடியா தோன்றியிருக்கிறது. “ஊர்வசி !” என்று கூப்பிட்டால் அது எங்கிருந்தாலும் “ம்ம்ம்ம்” என எதிர்வினை ஆற்றுமாம்.

“சார், இங்கேதான் யாராவது நம்ம ஊர்வசியைப் பிடிச்சு கட்டி வச்சிருக்கணும். எனக்கு என்னவோ அந்த சீக்கியன் மேலதான் சந்தேகமா இருக்கு. நாம ஊர்வசி, ஊர்வசின்னு கூப்பிட்டுட்டே போவோம். அது நிச்சயம் ம்ம்ம் ன்னு குரல் கொடுக்கும்..”

இரண்டு பேரும் அப்படியே ஊர்வசி, ஊர்வசின்னு கூப்பிட்டுக் கொண்டு போயிருக்கின்றனர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே அந்தச் சீக்கியரின் வீட்டிலிருந்து ம்ம்ம் எனப் பதில் வழக்கததைவிட வேகமாகவும் விடாமலும் வந்துள்ளது.

பிறகென்ன, அவரது வீட்டுக்குள் புகுந்து ஊர்வசியை மீட்டு வந்துள்ளனர். பிறகு ஊர்வசி எவ்வளவு நாள் இருந்தது, அப்பா எல்லாவற்றையும் விட்டுவிட்டு “ஒரு தோல் பையுடனும் சவரக் கத்தியுடனும்” ஒரு யுத்தக் கப்பலில் தப்பி வந்த வரைக்கும் அது அவருடன் இருந்ததா என்பதெல்லாம் தெரியவில்லை. (இந்த “தோல் பையும் சவரக் கத்தியும்” என்கிற சொற்கள், மிகுந்த ஏமாற்றத்தோடு என் அப்பாயி (பாட்டி) சொல்லிப் பொறுமும் வார்த்தைகள், இன்னும் என்காதில் அப்படியே ஒலிக்கின்றன. பின் என்ன சம்பாதித்துக் கொண்டு வருவான் என சிங்கப்பூருக்கு அனுப்பி வைத்த பிள்ளை இப்படி தலைக்கு விலை கூறப்பட்டு, ஒரு லெதர் பேக், ஒரு தங்க நிப்புடன் கூடிய பார்க்கர் பேனா, ஒரு கில்லட் ரேசர், பின் அவர் எப்போதுமே பயன்படுத்தாமல் போன இரண்டு செட் பேன்ட் சர்ட்டுகளுடன் வந்து நின்றால் எத்தனை வயிற்றெரிச்சலாக இருந்திருக்கும்)

அப்பா செத்து 43 ஆண்டுகள், அண்ணன் செத்து 23 ஆண்டுகள் ஓடி விட்டன.. நினைவிலுள்ளது இவ்வளவுதான்.

பத்துவராங் வீட்டில் அப்பா ஒரு மலை அணிலையும் வளர்த்தாராம். கழுத்தில் ஒரு காப்பு அணிவித்து ஒரு கூண்டுக்குள் இருக்கும் அதற்குப் பழங்கள், கொட்டைகள், தேங்காய் இவை தீனி. தப்பித் தவறி கூண்டுக்குள் கையை விட்டால் விரல்களைக் கடுமையாகக் கடித்டுவிடுமாம். அதை கூண்டிலிருந்து ஒரு நாள் அப்பா விடுவித்துள்ளார். அப்படியும் அது வீட்டை விட்டு ஓடாமல் இன்னும் அதிகம் பேரைக் கடிக்க ஆரம்பித்துள்ளது . பிறகு யாரோ சொல்லியிருக்கிறார்கள், கழுத்திலுள்ள காப்பைக் கழற்றி விட்டால் ஓடி விடும் என. அதே போல காப்பைக் கழற்றியவுடன் ஓடியிருக்கிறது. இரண்டு மாதம் கழித்து ஒரு நாள் வந்திருக்கிறது. அப்பா பழங்களைக் கொடுத்துள்ளார். சாப்பிட்டு விட்டு ஓடியிருக்கிறது. பிறகு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வருமாம். அப்பா இல்லாவிட்டால் வரும்வரை காத்திருக்குமாம். வந்தபின் கொஞ்ச நேரம் விளையாடிவிட்டுப் பின் ஓடிவிடுமாம்.

பத்துவராங் வீட்டில் ஒரு நாயும் இருந்துள்ளது. என்ன பெயர் என்று தெரியவில்லை. சீனர் ஒருவர் அன்பளிப்புச் செய்த பழக்கப்படுத்தப்பட்ட நாய் அது. காலையில் ஒரு கூடைக்குள், ஒரு பர்சில் வேண்டிய சாமான்களின் லிஸ்டையும், பணத்தையும் வைத்துக் கொடுத்துவிட்டால் கூடையை வாயில் கவ்விக் கொண்டு ஒரு குறிப்பிட்ட கடைக்கு முன் போய் நிற்குமாம். கடைக்காரர் சாமான்களைப் போட்டு பாக்கி சில்லறையை வைத்துக் கொடுத்தால் கச்சிதமாக வீட்டுக்குக் கொண்டு வந்து தந்துவிடும் என்பார் அண்ணன். எனக்கு அதை நம்புவதற்குக் கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். எப்படி அது வாங்கி வருவது உணவுப் பொருளாக இருக்கும் பட்சத்தில் அதை நடு வழியில் மோப்பம் பிடித்துத் தின்னாமல் கொண்டு வந்து தந்திருக்கும்? ஆனால் அன்ணண் அப்படியெல்லாம் பொய் சொல்ல மாட்டார். மிகைப்படுத்திப் பேசும் வழக்கமும் அவருக்குக் கிடையாது. சீனர்கள் அப்படி நாயைப் பழக்குவது வழக்கம் எனச் சொல்வார்.

இங்கே அப்பா வந்து, திருமணமாகி நாங்கள் எல்லாம் பிறந்து அவர் சாகும்வரை வீட்டில் நாய்கள் இல்லாமல் இருந்ததில்லை. பெரும்பாலும் எல்லாம் நம்மூர் சாதாரண தெரு நாய்கள்தான். யாராவது நண்பர்கள் வீட்டில் குட்டி போட்டால் நல்ல ஆண் குட்டியாகப் பார்த்து எடுத்து வந்து வளர்ப்பார். அடுத்தடுத்து வந்த அந்த நாய்கள் எல்லாவற்றிற்குமே “தம்பி” என்பதுதான் பெயர். அப்போது நாங்கள் அடிக்கடி ஊர் மாறிக் கொண்டிருந்தோம். ஒவ்வொரு ஊருக்கும் தட்டுமுட்டுச் சாமான்களுடன் அந்த நாயும் வந்துவிடும்.

என் தாத்தாவிற்கு அப்போது தொண்ணூறு வயது. ஒரு காலத்தில் பெரிய மனிதராக இருந்த அவருக்கு, அப்போது எல்லாம் இழந்து ஓட்டாண்டியான போதும் துப்பாக்கி லைசன்ஸ் உண்டு. மசில் லோட் எனச் சொல்லப்படும் சாதாரணத் துப்பாக்கி. அப்பாவின் ஒரே பொழுதுபோக்காக அது இருந்தது. ஈயம் வாங்கி வந்து உருக்கி வீட்டிலேயே அப்பா குண்டுகள் செய்யும் போது நான் அருகில் இருந்து பார்த்த நினைவு இருக்கிறது. வெடி மருந்து மட்டும் எப்போதாவது தஞ்சாவூர் செல்லும் போது வாங்கி வருவார். தாத்தா பெயரில் லைசென்ஸ் இருந்ததால் மருந்து வாங்குவதில் பிரச்சினை இல்லை. தீபாவளி கேப்புகள், அல்லது அதுவும் இல்லாதபோது தீக்குச்சி மருந்தைச் சுரண்டி ட்ரிக்கரில் வைத்து மிகச் சரியாகச் சுட்டு விடுவார் அப்பா. குறி பார்த்துச் சுடுவதில் கில்லாடி. தலைக்குப் பத்தாயிரம் வெள்ளி விலை வைத்து சிங்கப்பூர் மலேயா வெள்ளை அரசு தேடியதென்றால் சும்மாவா?

அப்போது நாங்கள் ஒரத்தநாட்டுக்கு அருகில் வெள்ளூரை ஒட்டி ‘மேலப் பத்தை’ என்னும் படு குக்கிராமத்தில் இருந்தோம். கடும் வறுமை. தாத்தாவிடம் எஞ்சி இருந்தது பத்து மா நிலம் மட்டும். வயதான தாத்தா. அப்பாவுக்கோ விவசாயம் தெரியாது. ஒன்பதாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தபோது 14 வயதில் கூலித் தொழிலாளியாக பினாங்கிற்குக் கப்பலேற்றி அனுப்பப்பட்டவர் 28 வயதில்தான் இங்கு திரும்பி வந்தார். அப்பா, தாத்தாவுக்கு மூன்றாம் தாரத்துப் பிள்ளை. என் அப்பாயிக்கும் (பாட்டி) தாத்தாவுக்கும் 30 வயதுக்கும் மேல் வித்தியாசம். அப்பாயி சின்ன வயதில் ரொம்பவும் அழகாக இருப்பார் எனச் சொல்வார்கள். தாத்தாவும் அப்பாயியின் அப்பாவும் நண்பர்களாம். தாத்தாவின் கள்ளுக் கடையில் அவர் ரெகுலர் கஸ்டமர். அப்படித் தொடங்கிய நட்பு கடைசியில் சம்பந்திகளாவதில் முடிந்துள்ளது. அது தாத்தா ஓகோ என்றிருந்த காலம். எல்லாம் போனபின் ஒரு விரக்தி மனநிலையில் படித்துக் கொண்டிருந்த அப்பாவை அப்பாயிக்குத் தெரியாமல் பினாங்கிற்குக் கப்பலேற்றியிருக்கிறார்.

இங்கு வந்தவுடன் அப்பாவுக்குத் திருமணம். அம்மா தஞ்சாவூர் சேக்ரட் ஹார்ட் கான்வென்டில் ஒன்பதாவது படித்துக் கொண்டிருந்தபோது திருமணம் நடந்துள்ளது. ஏழைக் குடும்பந்தான். தந்தை வேறு இல்லை. ஆனாலும் இப்படியான ஒரு குக்கிராம வாழ்க்கைக்குப் பழக்கப்படாத ஒரு 16 அல்லது 17 வயதுப் பெண் என் அம்மா.

தினசரி அப்பா வேட்டைக்குப் போகும்போது அப்பாவின் செல்ல நாய் தம்பியும் கூடச் செல்லும். நிறையப் பறவைகளோடு அப்பா வீடு திரும்புவார். ஒரு காட்சி இன்னும் நினைவிருக்கிறது. வீட்டிற்கு எதிரே மிகப் பெரிய சவுக்குத் தோப்பு. யாரோ வந்து சொன்னார்கள். அப்படி வந்து அடிக்கடி சொல்வர்ர்கள். “சார், (ஆமாம், சாகும்வரை அப்பா எல்லோருக்கும் சார் தான்) சவுக்குத் தோப்புல ஏராளமா பழந்தின்னி வவ்வால் அடைஞ்சிருக்கு”. அப்பா அவசர அவசரமாகத் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு ஓடினார். பின்னால் தம்பி ஓடியது. பக்கம் என்பதால் நானும் ஓடினேன் அம்மாவும் ஓடி வந்தார். ஏதோ பழம் காய்த்துத் தொங்குவது போல மரங்களிலெல்லாம் வவ்வால்கள். அப்பா சுட்டார். பொல பொல வென வவ்வால்கள் உதிர்ந்தன. நாங்கள் எல்லாம் ஓடி சென்று பொறுக்கினோம். குண்டுக் காயங்களுடன் தத்தித் தாவிப் பறக்க முயன்றவைகளைத் தம்பி ஓடி மறித்து உறுமி நிறுத்தியது.

ஏராளமான வவ்வால்கள். அந்தச் சின்னஞ் சிறு குடியிருப்பில் இருந்த எல்லோரும் கூடிவிட்டார்கள். எல்லோருக்கும் எல்லாவற்றையும் பகிர்ந்தளித்தார் அப்பா.

அப்பாவுக்கு இங்கும் போலீஸ் தொல்லை இருக்கத்தான் செய்தது. நாடு கடத்தப்பட்டு சுப்பையா அண்ணனும் இங்கு வந்து சேர்ந்தார். சிலமாதங்களில் அவரது தம்பி முத்தண்ணனும் இங்கு வந்தார். அப்பா ஒரு சின்ன சோடா கம்பெனி தொடங்கினார். அப்போதும் தலைமறைவுத் தோழர்கள் வீட்டுக்கு வருவார்கள். வடசேரியில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்ட இரணியன் ஆறுமுகம் இருவரும் கொல்லப்படுவதற்கு முன் எங்கள் மேலப்பத்தை வீட்டில்தான் தங்கி இருந்துள்ளனர். அப்போது ஒரு போலீஸ் அதிகாரி, அப்பாவைக் காரணம் காட்டி தாத்தாவின் துப்பாக்கி லைசன்சை ரத்து செய்தான். அப்பாவின் வேட்டை வாழ்க்கை அத்தோடு முடிந்தது.

1950 களில் தமிழகத்தை மிகப் பெரிய புயல் ஒன்று தாக்கியது. தாத்தாவும் அப்பாயியும் அன்று ஊரில் இல்லை. அன்று காலை முதலே கடும் மழை. அப்பா எங்கோ சென்றிருந்தார். அம்மா எனக்காக கேழ்வரகு அடை சுட்டுத் தந்திருந்தார். சூடாக இருந்தது. ஆறட்டும் என ஆவலோடு காத்திருந்தேன். திடீரென பலத்த காற்றுடன் மழை. சடசடவென எங்கள் கீற்று வீடு சரிந்தது. என்கிருந்தோ தம்பி ஓடி வந்து உள்ளே நுழைந்து கலவரத்தோடு பார்த்தது. அம்மா பயந்து போயிருந்தார். நல்ல வேளையாக அப்பா அப்போது ஓடி வந்தார். அவசரப்படுத்தி அம்மாவையும் என்னையும் அழைத்துக் கொண்டார். கொட்டும் மழையில், சீறும் புயல் காற்றின் ஊடே எல்லோரும் ஓடினோம். தம்பிக்கு என்ன ஆனதென்று தெரியவில்லை.யாரும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.

அருகிலுள்ள வெள்ளூரில் ஒரு மாடி வீட்டில் ஓடித் தஞ்சம் புகுந்தோம். அங்கு ஏற்கனவே நிறையக் கூட்டம். சற்று நேரத்தில் “சீச்சீ’..” என யாரோ விரட்டினார்கள். எட்டிப் பார்த்தால் தம்பி. என்ன செய்வது மனிதர்களுக்கே நிற்க இடமில்லை. அப்பாவால் பரிதாபப்பட மட்டுமே முடிந்தது. தம்பி கொஞ்ச நேரம் அங்கு நின்றுவிட்டு ஓடி விட்டது.

அடுத்த நாள் மழை விட்டு ஓய்ந்தபின் அப்பா எங்களை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார். விடு முழுமையாகச் சரிந்து கிடந்தது. சரிந்திருந்த வீடுக்குள்ளிருந்து தம்பி வாலை ஆட்டிக் கொண்டு வந்த காட்சி இன்னும் எனக்கு நினைவில் தங்கியுள்ளது.

அதற்குப் பின், பாப்பாநாடு – மதுக்கூர் சாலையில் உள்ள கொத்தயக்காடு என்னும் ஊருக்கு இடம் பெயர்ந்தோம். இந்த வீட்டில்தான் தனது 93வது வயதில் தாத்தா செத்துப்போனார். சுப்பையா அண்ணனுக்குச் சொந்தத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து அப்பா திருமணம் செய்து வைத்தார். சோடாகம்பெனி கொஞ்சம் நன்றாக ஓடத் தொடங்கியிருந்தது. பள்ளியில் சேர்க்கப்படாத எனக்கு பாடப் புத்தகங்களை வாங்கி வந்து அம்மாவே வீட்டில் சொல்லிக் கொடுக்கத் தொடங்கினார்.

அங்கும் ஒரு தம்பி இருந்தது. அது மேலப்பத்தை வீட்டில் இருந்த தம்பிதானா இல்லை வேறு நாயா என எனக்குச் சொல்லத் தெரியவில்லை. அப்போது ஒரு சம்பவம். எனக்கு நிழலாகத்தான் அது நினைவிருந்தபோதும் அப்பாயி அதைப் பலமுறை, வாய்ப்புக் கிடைத்தபோதெல்லாம் நீட்டி முழக்கி அதற்குக் கண்ணும் காதும் வைத்துச் சொன்னதால் அது ஒரு காட்சிப் படிமமாகக் கண்ணிலும் மனதிலும் நிற்கிறது. ஏதாவது நாயைப் பற்றியோ இல்லை பாம்பைப் பற்றியோ பேச்சு வந்தால், அதைச் சாக்காக வைத்துக் கொண்டு அப்பாயி இந்தக் கதையைத் தொடங்கிவிடுவார்.

நடந்தது இதுதான்.

அப்போது இரண்டு காளை மாடுகள் வீட்டில் இருந்தன. கொஞ்சம் நிலமும் வெளுவாடி என்னும் ஊரில் சாகுபடியில் இருந்தது. வீட்டில் ஒரு வைக்கோற் போரும் உண்டு. ஒரு மாலையில் அம்மா எனக்குப் பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். அப்பா ஏதோ படித்துக் கொண்டிருந்தார். மாட்டுக்கு வைக்கோல் பிடுங்கச் சென்ற அப்பாயி திடீரென “தம்பீ தம்பீ…” என அலறினார். அப்பாவை அவர் ‘தம்பி’ என்றுதான் அழைப்பார். அப்பா எழுந்தோடினார். நாங்களும் பின்னால் ஓடினோம். “கிட்ட வராதீங்க, வராதீங்க, அங்கேயே நில்லுங்க…” என்று கத்தினார் அப்பாயி. எல்லோரும் திகைத்து நின்றோம். வைக்கோற் போர் முன்னே அப்பாயி. அவருக்கு முன்னே படம் எடுத்துச் சீறி நிற்கும் ஒரு நல்ல பாம்பு. எல்லோரும் திகைத்து நின்ற அந்தக் கணத்தில், தம்பி தம்பி என்ற குரல் கேட்டு ஓடி வந்த எங்கள் தம்பி நாய், அப்பாயிக்கும் பாம்புக்கும் இடையில் புகுந்தது. உரத்த குரலெடுத்துக் குரைத்தது. பாம்பு சீறவும், தம்பி பின் வாங்கிக் குலைத்து முன்னேறவும்…. அதற்குள் அப்பாவும் சுதாரித்துக் கொண்டு கம்பொன்றை உருவினார். இதற்கிடையில் அந்த நல்ல பாம்பு வேகமாகப் பாய்ந்து புதருக்குள் நழுவியது.

தம்பியும் அங்கே நிற்கவில்லை. அதுவும் எங்கோ ஓடிவிட்டது. அப்பாயி அதற்கு ஒரு விளக்கம் சொன்னார். தம்பியின் மீது விஷம் தீண்டிவிட்டதாம். ஆனாலும் நாய்காளுக்கு மாற்று மூலிகை தெரியுமாம். அதைப்போய்ச் சாப்பிடத்தான் ஓடியிருக்கிறதாம். என்னமோ, சிறிது நேரத்தில் தம்பி திரும்பி வந்தது. அதன் மீது ஏதாவது காயம் உள்ளதா என அப்பா கவனமாகப் பார்த்தார். ஒன்றுமில்லை.

###

அப்பா என்னை பாப்பாநாடு உயர் தொடக்கப் பள்ளியில், Private Coaching என ஒரு சான்றிதழ் அளித்து ஐந்தாம் வகுப்பில் கொண்டு சேர்த்தார். நான்காம் வகுப்புப் படிக்க வேண்டிய வயது. முதலில் ஆறாம் வகுப்பில் சேர்த்துப் பின் ரொம்பவும் வயது குறைவு என மாவட்டக் கல்வி அலுவலகத்தில் அனுமதி மறுக்கப்பட்டதால், ஓராண்டு வயதுச் சலுகையுடன் ஐந்தாம் வகுப்பில் உட்காரச் சொன்னார்கள். எனது படிப்பிற்காக வீட்டையும் பாப்பாநாட்டிற்கு மாற்றினார் அப்பா. இருந்த கொஞ்ச நிலத்தையும் விற்றுவிட்டு சோடா கம்பெனியை விரிவுபடுத்தினார்.

ஜமீன் நிலத்தில் கட்டப்பட்ட கூரை வீடுதான் என்ற போதிலும் கம்பெனி நன்றாக ஓடியது. சுப்பையா அன்ணனின் குடும்பமும் எங்களோடுதான் இருந்தது. அப்பாயி நோய்வாய்ப்பட்டு இறந்து போனார். வயது அதிகமில்லை ஒரு 55 இருக்கலாம்.

தம்பிக்கு அப்போது ஒன்பது அல்லது பத்து வயதிருக்கும் மூப்பு கனிந்திருந்தது. சோடா கம்பெனியை ஒட்டிய நீண்ட கொட்டகையில் அப்பா ஒரு ஈசி சேரில் அமர்ந்திருப்பார், எதிரே கிடக்கும் ஒதியமர பெஞ்சில் ஆங்கில தமிழ் நாளிதழ்கள், வாரப் பத்திரிகைகள் எல்லாம் கிடக்கும். ஒரு சிறிய படிப்பகம் போல பலரும் வந்து படித்து விவாதங்கள் நடக்கும். கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டங்கள் நடந்தால் தலைவர்களுக்கு எங்கள் வீட்டில்தான் சாப்பாடு. அருகிலேயே மீன் மார்கெட். அப்பா சாப்பாட்டில் குறை வைக்க மாட்டார். தம்பி எப்போதும் அப்பாவின் காலடியில் படுத்துக் கிடக்கும்.

சோடா கம்பெனி அருகில் கணக்கன் குளம். குளத்தங்கரையில்தான் ஊர்ச்சாவடி. நரிக்குறவர்கள், வாத்து, ஆடு மேய்க்கும் நாடோடிகள் எல்லாம் சாவடிக்கெதிரில் எங்கள் சோடா கம்பெனியை ஒட்டி, கணக்கன் குளக் கரைப் புளியமரத்தடியில்தான் தங்குவார்கள். வைகாசியில் நடக்கும் திருமேனி அம்மன் கோவில் பல்லக்குத் திருவிழாவும் இங்குதான் நடக்கும். கணக்கன் குளக் கரையில் இப்படி எப்போதும் தங்கியிருக்கும் நாடோடிகளை வேடிக்கை பார்ப்பது என் பொழுது போக்குகளில் ஒன்று. நிறையப் பேர் இப்படி வந்து போவதால் தம்பியும் இந்த நாடோட்டிகளைக் கண்டு ரொம்பவும் ஓவராகக் குலைக்காது.

ஒருமுறை தென்மாவட்டம் ஒன்றிலிருந்து கீதாரிகள் ஆடுகளை ஓட்டி வந்து ஓரிரவு அங்கு தங்கினார்கள். நான் வழக்கம்போல ஓடிச் சென்று பார்த்தேன், அவர்களிடம் மிக அழகாக ஒரு சிறிய நாய்க்குட்டி இருந்தது, அப்படியான நாய்க்குட்டியை நான் பார்த்ததில்லை. அப்பாவிடம் ஓடி வந்து சொன்னேன். நாய்க்குட்டி என்றவுடன் அப்பா உடனடியாக எழுந்து வந்து அவர்களிடம் கேட்டு அதைத் தூக்கி வந்தார். அம்மாவிடம் சொல்லிக் கொஞ்சம் பால் கொண்டு வந்து தந்தார். வெள்ளை உடம்பில் கபில நிறத் திட்டுக்கள் மலிந்த நீண்ட உடம்பும், மடிந்த காதுகளையும் உடைய அழகிய அந்தப் பெண் நாய்க்குட்டியை விட்டுப் பிரிய எனக்கு மட்டுமல்ல அப்பாவுக்கும் மனமில்லை.

சற்று நேரத்தில் நாய்க்குட்டியைத் தூக்கிச் செல்ல கீதாரி வந்தார். அப்பா அவரிடம் நாய்க்குட்டியை கொடுக்கும்படி கேட்டார். அவர்கள் தயங்கினர். அது ஒரு கலப்படமில்லாத கோம்பை நாய்க்குட்டி. அற்புதமான ஒரு தமிழக ப்ரீட். கடைசியில் பேரம் பேசி நூறு ரூபாய்க்கு அப்பா அந்த நாய்க்குட்டியை விலைக்கு வாங்கினார்.

நாய்க்குட்டியைக் காசு கொடுத்து வாங்கியது, அதுவும் நூறு ரூபாய்க்கு என்பது கொஞ்ச நாள் வரைக்கும் ஊரில் ஒரே பேச்சாக இருந்தது. ரொம்பச் செல்லமாக எங்களிடம் வளர்ந்த அந்தப் பெண் நாய்க்கு ‘ஜிக்கி’ எனப் பெயரிட்டிருந்தோம். ஏற்கனவே மூப்பை எட்டியிருந்த தம்பி, ஜிக்கியைப் பெரிய போட்டியாக நினைக்கவில்லை. ஒரு தேர்ந்த ஞாநியைப்போல அது ஒரு ஒதுக்கத்தை மேற்கொள்ளத் தொடங்கியது. கண் பார்வை குறைந்து அடுத்த ஓராண்டில் அது இறந்தும் போனது. கணக்கன் குளக் கரையில் வயலோரமாய் குழி வெட்டி அதை அடக்கம் செய்தார் அப்பா.

கோம்பை நாய் என்பது நீளமாகவும் உயரமாகவும் வளரக் கூடிய ஒன்று. காம்பவுன்ட் உள்ள ஒரு வீட்டில் முறைப்படி வளர்க்க வேண்டிய நாய் எங்கள் வீட்டில் சாப்பாட்டிற்குக் குறைவில்லை ஆயினும் எல்லா நாய்களையும் போலத்தான் அதையும் வளர்த்தோம். அது பெரிதானவுடன் நிறையப் பிரச்சினைகள் உருவாயின. கணக்கன் குளக் கரை கிழக்கிலுல்ள பல கிராமங்களுக்கு சென்று வரும் பாதையும் கூட. ஜிக்கியின் தோற்றம். கணீரென்ற குரலில் அது குரைத்துச் சீறி வருவது, இதெல்லாம் எல்லோரையும் வெருட்டின. ஒரு சிலரை ஜிக்கி கடிக்கவும் செய்தது. நிறையப் புகார்கள் வரத் தொடங்கின. அப்பாவுக்குச் சங்கடமாக இருந்தது. கட்டிப் போட்டால் பெருங்குரலெடுத்து அது எதிர்ப்புக் காட்டியது. அவிழ்த்து விட்டவுடன் இன்னும் ஆக்ரோஷமாய் நடந்து கொண்டது.

ஒருநாள் மீன் மார்க்கெட்டில் மீன் வாங்கிக் கொண்டு வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்த ஒருவரை நோக்கி ஓடிச் சென்று அவர் கையிலிருந்த மீன்கள் அடங்கிய தாழை மட்டைப் பையை அப்படியே கவ்விக் கொண்டோடிவிட்டது. இன்னொரு நாள் வீட்டருகில் இருந்த கைலாசம் பிள்ளை டீக்கடையில் தோசை சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒருவரின் முன் போய் நின்று முன் கால்கள் இரண்டையும் தூக்கி மேசை மீது வைத்து அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்த தோசையைச் சாப்பிடத் தொடங்கியது. அவர் பேயலறல் அலறினார். கைலாசம் பிள்ளை அப்பாவிடம் ஓடி வந்தார்.

ஜிக்கியை அப்பா தனது நனபரும் நிலப்பிரபுவுமான வீரைய்யாச் சோழகரிடம் கொடுத்துவிடுவது என முடிவெடுத்தபோது எனக்கும் தங்கைகளுக்கும் அதை ஏற்க முடியவில்லை. ஆனால் வேறு வழியில்லை.

வீரைய்யன் அடிக்கடி அப்பாவைச் சந்திக்க வருபவர். ஜிக்கியுடன் அவருக்கு நல்ல பழக்கம். அவரது வீடு பட்டுக்கோட்டை சாலையில் பாப்பாநாட்டைத் தாண்டி உல்ள அடுத்த ஊரான. சோழகன் குடிக்காட்டில்ல் இருந்தது. சாலையை ஒட்ட்டி அவர் வீடு. வண்டி கட்டிக்கொண்டு வந்து ஜிக்கியை அவர் ஏற்றிச் சென்றபோது அம்மா உட்பட எல்லோரும் கண்கலங்கி விட்டோம். அப்பாவுக்கும் மனம் சரியில்லை. அன்றிரவு அப்பா வழக்கத்தை விட அதிகமாகக் குடித்தார்.

வீரைய்யன் ஜிக்கியை நன்றாக வைத்துக் கொண்டார். நல்ல கறி சாப்பாடெல்லாம் போட்டார். தினசரி அதனுடன் கொஞ்ச நேரமும் செலவிடுவார். இரண்டு மாதங்கள் கட்டியே வைத்திருந்த அவர், ஒரு நாள் அதை அவிழ்த்து விட்டார். அடுத்த கணம் ஜிக்கி நாலுகால் பாய்ச்சலில் வேலியைத் தாண்டி ஓடியது சாலையில் வழி பிசகாமல் ஓடி வந்து அடுத்த அரை மணி நேரத்தில் எங்கள் வீட்டுக்குள் பாய்ந்தது. எல்லோர் மேலும் ஏறி, நக்கி, பிராண்டி, சோடா கம்பெனிக்குள் ஓடி இரண்டு மூன்று பாட்டிலகளை உடைத்து ரகளை பண்ணிவிட்டு அப்பாவின் காலடியில் போய்ப் படுத்துக் கொண்டது. எங்கள் எல்லோருக்கும் ஏகப்பட்ட மகிழ்ச்சி. அம்மா முள்ளில்லாமல் மீனை விண்டு சோற்றில் பிசைந்து கொண்டு வந்து சாப்பிடக் கொடுத்தார். வயிறாரச் சாப்பிட்டது.

அடுத்த நாள் காலை வீரைய்யன் வண்டியுடன் வந்து மீண்டும் ஜிக்கியைக் கூட்டிச் சென்றார். இம்முறை இரண்டு மாதம் கடுங்காவலில் வைத்திருந்து கவனமாக ஒரு நாள் அவிழ்த்து விட்டார். இப்போது அவர் வேலியை உயர்த்திக் கட்டி ‘கேட்’டும் போட்டிருந்தார். உள்ளேயே சுற்றிச் சுற்றி வந்த ஜிக்கி, அவர் அசந்த நேரம் பாய்ந்து தப்பி எங்கள் வீட்டில் வந்து நின்றது. இம்முறை ஜிக்கியை மீண்டும் கொண்டு செல்ல வீரைய்யன் முயற்சிக்கவில்லை.

போகப் போக ஜிக்கியின் ஆவேசம் ரொம்பவும் குறைந்தது. யாரையும் அது கடிப்பதில்லை. பெருங் குறும்புகள் எதையும் செய்து எங்களுக்குச் சங்கடம் விளைவிப்பதுமில்லை.

ஜிக்கியின் அழகில் மயங்கி நிறைய ஆண் நாய்கள் எங்கள் வீட்டைச் சுற்றத் தொடங்கியதுதான் இப்போது எங்களுக்குப் பிரச்சினையாகி விட்டது. அந்த ஆண் நாய்களுக்குள் பெருஞ் சண்டை வேறு வந்து ஒரே களேபாரமாக இருக்கும்.

ஜிக்கி ஆண்டுக்கு ஒரு முறை நான்கைந்து குட்டிகள் போடும் அவை ஒரிஜினல் கோம்பை ப்ரீடாக இல்லாதபோதும் கொள்ளை அழகாக இருக்கும். எல்லாக் குட்டிகளையும் நாங்களே வளர்க்க ஆசையாக இருக்கும். அது சாத்தியமில்லை என்பது ஒரு பக்கம். இன்னோரு பக்கம் அந்த நாய்க்குட்டிகளுக்கு அத்தனை போட்டி. கொத்திக் கொண்டு போய்விடுவார்கள்.

அடிக்கடி குட்டி போட்டது ஜிக்கியின் உடலில் கொஞ்சம் தளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. வயிறும் முலைகளும் சற்றே கீழிறங்கித் தொங்க நேரந்த போதும் அதன் அழகும் கம்பீரமும் குறையவில்லை. அதன் குறும்புத் தனங்கள் முற்றாகக் குறைந்திருந்தன.

###

அப்பா இப்போதெல்லாம் நிறையக் குடிக்கத் தொடங்கியிருந்தார். மலேயாவில் ஒரு சாகசமிக்க வாழ்வை மேற்கொண்டிருந்த அவரது கால்கள் இங்கு பாவவே இல்லை. மலேயாவிலிருந்து சென்னைத் துறைமுகத்தில் வந்திறங்கியவுடன் நேரடியாக பிராட்வேயில் இருந்த கஒயூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குத்தான் சென்றிருக்கிறார். எனினும் அவரால் இங்கு ஒட்ட இயலவில்லை. குடும்ப வாழ்க்கை அப்படி ஒன்றும் அவரை ஈர்த்ததில்லை. இதன் பொருள் அவர் எங்களிடம் பாசமாக இருக்கவில்லை என்பதல்ல. நான் கல்லூரியில் படிக்கும்போதும். ஏன் பொன்னேரி கல்லூரியில் வேலையில் சேர்ந்த பின்னும் வீட்டிற்கு வரும்போது ஆரத் தழுவிக் கொள்வார். எனக்கு ரொம்பக் கூச்சமாக இருக்கும். என் படிப்பில் ரொம்பவும் அக்கறையாக இருப்பார். இலக்கிய அரசியல் ஆர்வங்கள் மட்டும் அவரை திருப்தி செய்ய இயலவில்லை. வரவர புத்தகங்கள் படிப்பதும் குறைந்தது. குடி அதிகமாகியது. அது எங்கள் அவ்வளவு பேருக்கும் மிகப் பெரிய கவலையாக மாறியது. அம்மாவும் நானும்தான் மிகவும் பாதிக்கப்பட்டோம்.

குடித்தால் அப்பாவால் யாருக்கும் தொல்லை இருக்காது. ஒரு குழந்தையைப் போல ஆகி விடுவார். அவரால் யாருக்கும் துன்பம் இருக்காது. ஆனாலும் அதிகக் குடியில் அவர் மயங்கி விழுவது, ஆடை குலந்து நிற்பது இதுவெல்லாம் எனக்கு அழுகையை ஏற்படுத்திவிடும். அடுத்த நாள் காலையில் அந்தக் குற்ற உணர்ச்சியில் அவர் குன்றி அமர்ந்திருப்பர். ஆறடி உயர அந்தக் கம்பீரமான ஆகிருதி, அதற்குள் இருக்கும் அத்தனை விசாலமான இதயம் இப்படிக் குன்றி அமர்ந்திருப்பது இன்னும் என்னைத் துன்புறுத்தும்.

நான் பொன்னேரி அரசு கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களில் தந்தி மூலம் எனக்கு அந்தத் துயரச் செய்தி வந்தது. அம்மா இறந்தபோது அவருக்கு 43 வயதுதான், பெரிய நோய் எதுவும் இல்லை. அப்பாவின் குடிப்பழக்கத்தால் அம்மா தற்கொலை செய்துகொண்டார் என ஊரில் சிலர் பேசிக் கொண்டனர். இன்று வரை அது உண்மையா என நான் யாரிடமும் விசாரித்ததில்லை. அம்மா இறந்தபோது ஒரே ஒரு தங்கைக்குத்தான் திருமணமாகி இருந்தது. அந்தத் தங்கையின் கணவருக்கும் நல்ல வேலை இல்லை. வயதுக்கு வந்த இன்னொரு தங்கை, பள்ளியில் படித்துக்கொண்டிருந்த தம்பி, சின்னஞ்சிறு தங்கை, எல்லோரைவிடவும், இவ்வளவு பேர் இருந்தும் அம்மா இல்லாமல் நிராதரவாகிப் போன அப்பா, எல்லோரையும் விட்டு விட்டு அம்மா போய்விட்டார். சுப்பையா அன்ணன் குடும்பம் எங்களோடு இருந்தது மட்டுந்தான் எங்களுக்கு ஒரே ஆதரவு.

அப்போது நான் தற்காலிகப் பணியில்தான் இருந்தேன். நீண்ட நாள் விடுப்பு எடுக்க இயலாது. அடுத்த சில நாட்களிலேயே நான் பொன்னேரி திரும்ப வேண்டியதாயிற்று. அடுத்த வாரம் நான் பாப்பாநாடு வந்தபோது கண்ட காட்சி மனதைக் குலுக்கியது. அப்பா காவி வேட்டி, துண்டுடன் அமர்ந்திருந்தார். அவர் காலடியில் ஜிக்கி. அது அப்பாவையும் விடத் தளர்ந்திருந்தது. அப்பா யாரிடமும் முகம் கொடுத்துப் பேசுவதில்லை குடிப்பதுமில்லை எனத் தங்கைகள் சொன்னார்கள். சரியாகச் சாப்பிடுவதும் இல்லை.

நான் அடுத்த முறை பாப்பாநாடு வந்தபோது அப்பா இன்னும் சோர்ந்திருந்தார். எனது பெரியப்பா மகன் ஒருவர். தோபியாஸ் என்று பெயர். சி.பி.எம் கட்சிக்காரர். மன்னார்குடிக்குப் பக்கத்தில் காரிச்சாங்குடி என்றொரு ஊர்க்காரர். அவர் அன்று வந்திருந்தார். அப்பாவைப் பார்த்து அவர் நொந்து போனார். “தம்பி, அப்பாவை இப்படியே விடக் கூடாது அவரும் செத்து போயிடக் கூடாது. கொஞ்சம் இரு” எனச் சொல்லிவிட்டு எங்கோ சென்று கொஞ்ச நேரத்தில் ஒரு சாராய பாட்டிலுடன் வந்தார். எனக்கும் வேறு வழி தெரியவில்லை. அப்பா அன்றிரவு நிம்மதியாகத் தூங்கினார்.

நான் பொன்னேரி வந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை ஊருக்குப் போகவில்லை. தங்கை ரோஸ்லினிடமிருந்து கடிதம் வந்தது. அப்பா ரொம்பக் குடிக்கிறார். தாங்க முடியவில்லை என. நான் ரொம்ப சோர்ந்து போனேன். இந்த வாரம் ஊருக்குப் போவது என முடிவு செய்து கொண்டேன்.

ஆனால் அடுத்த நாள் அதிகாலை என் அறைக்கதவு தட்டப்பட்டது, முத்தண்ணன் நின்றிருந்தார். சுப்பையா அண்ணனுக்கு உடம்பு சரியில்லை.உடனே புறப்படு என்றார். அண்ணன் நன்றாகத்தானே இருந்தார், என்ன பிரச்சினை என்று கேட்டேன். அவர் பதில் சொல்லவில்லை. ஒரு வாடகைக் காரில் அவர் வந்திருந்தார். ஏதோ விபரீதம் என்பது மட்டும் எனக்குப் புரிந்தது, வீடு நெருங்கையில் பெருங்குரல் எடுத்து எழுந்த அழுகை எல்லாவற்றையும் உணர்த்தியது.

அப்பா தினமும் இரவில் கணக்கன் குளத்தில் சென்று குளித்து வருவது வழக்கம். ஒரு நாளும் அவர் இப்படி இரு வேளை குளிக்கத் தவறுவதில்லை. அன்று காலை முதல் குடித்துக் கொண்டிருந்துள்ளார். இரவு குளிக்கப் போனவர் வரவில்லை. குளத்தில் இறங்கித் தேடித்தான் அவர் உடலைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

அப்பா அவரது ஒதிய மரப் பெஞ்சில் கிடத்தப்பட்டிருந்தார், காலடியில் ஜிக்கி. என்ன விரட்டியும் அது போகவில்லையாம். என்னைப் பார்த்தவுடன் தலை நிமிர்ந்து பார்த்துவிட்டு மீண்டும் தலையைக் கவிழ்த்துக் கொண்டது.

மூன்றாம் நாள் பால் தெளித்துவிட்டு ஊருக்குப் புறப்பட்டேன். எத்தனையோ கவலைகள். அப்பாவின் பாங்க் பாலன்ஸ் வெறும் 5000 ரூபாய்தான். மூத்த மகன் நான்.

தம்பி தங்கைகளைப் பார்க்க அடுத்த வாரமே ஓடோடி வந்தேன். குழந்தைகள் கொஞ்சம் தேறி இருந்தார்கள். அவர்களோரு சற்று நேரம் சிரித்துப் பேசிவிட்டு அப்புறந்தான் கவனித்தேன். ஜிக்கியைக் காணோம். “ஜிக்கி எங்கே?” எல்லோரும் மௌனமானார்கள். அப்போது வந்த சுப்பையா அண்ணன்தான் மௌனத்தைக் கலைத்தார். அப்பா இறந்த அன்றிலிருந்து ஜிக்கி சாப்பிடவில்லையாம். இரண்டொருமுறை தேடிச் சென்று அப்பாவின் கல்லறையிலிருந்து ஜிக்கியை அழைத்து வந்துள்ளனர். சாப்பிடாமலே இருந்து அப்பா இரந்த ஒரு வாரத்தில் அவர் கிடத்தப்பட்ட இடத்திலேயே செத்திருக்கிறது ஜிக்கி.

நாவலாசிரியை ரீடா சவுத்ரியும் நாடுகடத்தப்பட்ட அசாமிய சீனர்களும்

கடந்த சில நாட்களில் நாளிதழ்களில் வந்த ஒரு செய்தி மனதை நெகிழ்த்தியது. அசாமிய மொழிக் கவிஞரும் நாவலாசிரியருமான ரீடா சவுத்ரியுடன் தொடர்புடைய செய்தி அது. ரீடா அசாமிலுள்ள காட்டன் கல்லூரியில் ‘அரசியல் அறிவுத் துறை’ பேராசிரியையும் கூட. அவரது 602 பக்க நாவல் “மகம்” சாகித்ய அகாதமி பரிசை (2008) மட்டுமல்ல இதுவரை நான்கு பதிப்புகளையும் கண்டுள்ளது. ‘மகம்’ என்கிற சீன மொழிச் (Cantonese) சொல்லுக்குத் தங்கக் குதிரை என்று பொருளாம்.

அசாம் போராட்டத்தின்போது தலைமறைவாக இருந்த நிலையில் அவர் எழுதிய “அபிரத ஜாத்ரா” (நில்லாத நெடும்பயணம்) எனும் நாவலுக்காக அசாம் சாகித்ய சபா பரிசும் (1981) அவருக்குக் கிட்டியது.

‘மகம்’ சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் (1962) இந்திய அரசு இழைத்த ஒரு பெருங் கொடுமையை மையமாக வைத்து இயங்கும் ஒரு நாவல். அசாமின் மேற்பகுதி எண்ணைக்கு மட்டுமல்ல தேயிலைக்கும் புகழ் பெற்றது. அருகிலுள்ள மார்கரிடாவைச் சேர்ந்த ரீடா சவுத்ரி சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் பதின் வயதுச் சிறுமியாக அவ்வழியே பயணம் செய்தபோது இந்திய அரசின் கொடுங் கரங்களால் கசக்கி எறியப்பட்ட ஒரு சிறு சமூகத்தின் எச்ச சொச்சங்களைக் கண்டாள். அவர்கள் “சீனர்கள்’” என அடையாளப்படுத்தப்பட்டார்கள். இவர்களைப் பற்றி இன்னும் அதிகமாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என அந்தச் சிறு வயதில் அப் பெண் கொண்ட மன உறுதி பின்னாளில் விரிந்த ஆய்வாகவும், அற்புத இலக்கியமொன்றாகவும் முடிந்தது.

19ம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் பிடிட்டிஷ் தேயிலைத் தோட்ட முதலாளிகளால் சீனாவிலிருந்து கட்டாயமாகக் கொண்டு வரப்பட்டுக் குடியமர்த்தப்பட்ட தோட்டத் தொழிலாளிகள் அசாமியப் பெண்களை மணந்து கொண்டு இங்குள்ள மக்களுடன் ஒன்றிணைந்தனர்,

நவம்பர் 19, 1962 அவர்களுக்கு மறக்க இயலாத துன்ப நாளாக விடிந்தது. இந்திய சீனப் போர் அவர்களின் வாழ்வைக் குலைத்தது. நூறாண்டுகளுக்கும் மேலாகத் தம் வேர்களை இழந்து, இம்மண்ணையே தாயகமாக வாழ்ந்திருந்த இந்த அப்பாவித் தொழிலாளிகளைச் சீனர்களாக மட்டுமல்ல. ”தேச எதிரிகளாகவும்” இந்திய அரசு அடையாளம் கண்டது. உருவத் தோற்றம், சீன மொழி அறிவு ஆகியவற்றின் அடிப்படையில் சீனர்கள் என்றும், இந்தியர்கள் என்றும் அடையாளங்கண்டு, மகூம் என்னுமிடத்திலிருந்த சீனப் பட்டியிலிருந்த 1500 “சீனர்களை’க் கைது செய்து ராஜஸ்தானிற்குக் கொண்டு சென்றது. டியோல் எனும் இடத்தில் அமைக்கப்பட்ட முகாம்களில் அவர்களை அடைத்தது. குடும்பங்கள் சிதைந்தன. கணவரிடமிருந்து மனைவியர், பெற்றோரிடமிருந்து குழந்தைகள் எல்லாம் வன்முறையாகப் பிரிக்கப்பட்டனர்.

வெற்றி முகத்துடன் இருந்தபோதும் சீனா தன்னிச்சையாகப் போரை நிறுத்திக் கொண்டதோடன்றி, கைப்பற்றிய பகுதிகளிலிருந்து பின் வாங்கவும் செய்தது. அதன் பின் இந்திய அரசு இந்த 1500 பேரையும் சீனத்திற்கு நாடுகடத்தியது. அது மட்டுமல்ல அவர்களின் சொத்துக்களை “எதிரிகளின் சொத்து” (enemy property) என அறிவித்துத் தான் எடுத்துக் கொண்டது.

இந்திய அரசின் தவறான அணுகல்முறைகள் இந்திய சீனப் போருக்கு வழியமைத்ததையும், இந்தியா இதன் மூலம் தோல்வியை மட்டுமின்றிப் பெரிய அழிவுகளையும் சந்திக்க நேர்ந்ததையும் பலரும் எழுதியுள்ளனர். நானும் இந்திய சீனப் போரின் 50ம் ஆண்டு நிறைவை ஒட்டி எழுதிய கட்டுரையில் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளேன். இந்திய அரசு இப்படி ஒரு மனித விரோதச் செயலை செய்தது பலருக்கும் தெரியாது.

இது குறித்து ஆய்வு செய்த ரீடா இந்த மக்களில் (Assamese People of China Origin) சிலர் ஹாங்காங்கில் இருப்பதை அறிந்து தொடர்பு கொண்டார்.. இவர்கள் இன்னும் அசாமிய மொழியில் அல்லது இந்தி கலந்த அசாமிய மொழியில்தான் பேசுகின்றனர். “நாங்கள் சீனாவுக்கு உளவு பார்த்ததில்லை. எங்களை ஏன் இப்படிச் செய்தார்கள்?” என அவர்கள் கேட்டபோது ரீடாவால் தலை குனிய மட்டுமே முடிந்துள்ளது. “இன்னும் அவர்கள் இந்தியாவைத்தான் தங்களின் ‘ஜனம் ஜகா’வாக’க் (தாயகமாக) கருதுகிறார்கள்” என்கிறார் ரீடா. அது மாத்திரமல்ல இன்னும் கூட மகூமில் ஒன்பதக்சீன வம்சாவழிக் குடும்பங்கள், தாங்கள் அடையாளம் காணப்படும் நிலை ஏற்படுமோ என அச்சத்தில் உறைந்து வாழ்வதையும் ரீடா அறிந்தார்.

நாவல் எழுதியதோடு தன் வேலை முடிந்து விட்டதாக ரீடா நினைக்கவில்லை. ஹாங்காங்கில் வாழும் இவர்களை அரசு அனுமதியுடன் மீண்டும் அசாம் அழைத்து வந்து தாம் வாழ்ந்த இடங்களை, சின்ன வயதில் ஓடி ஆடித் திரிந்த வீதிகளை, படித்த பள்ளிகளைப் பார்த்துக் கடந்த கால அனுபவங்களைக் கண நேரம் உயிர்பிகத்துக் கொள்ளவும் வழி வகுத்தார்.

முதலமைச்சர் தாருண் கோகோயும் பெரிய மனது பண்ணி, ‘அவர்கள் தாங்கள் வாழ்ந்த இடங்களை வந்து பார்த்துச் செல்ல’ அனுமதி அளித்ததோடன்றி, தான் அவர்களை முறைப்படி வரவேற்பதாகவும் சொல்லச் சொன்னார். சென்ற சனியன்று (அக் 19) அவர்களில் சிலர் கவ்ஹாதி வந்து சேர்ந்தனர்.

ரீடாவின் ‘மகம்’ நாவலின் முக்கிய பாத்திரம் இப்படியாகப் பிரிக்கப்பட்ட ‘சீனப்’ பெண் ஒருத்திதான்.. பெயர் பார்வதி கோவாலா. அவரது மகள் ஹோ யுஇட் மிங்’கிற்கு அப்போது வயது எட்டு. அவரது அசாமியப் பெயர் அஞ்சலி கோவாலா. வந்துள்ளவர்களில் அவரும் ஒருவர்,

“அசாமுக்கு வந்ததில் ரொம்பவும் மகிழ்ச்சி அடைகிறோம். இன்னும் கூட எனது சின்ன வயது நண்பர்கள் சிலரின் பெயர்கள் நினைவில் இருக்கின்றன. நான் மகூமுக்குச் செல்வேன். அவர்களைச் சந்திப்பேன்” என்றார் அஞ்சலி. அவரது தந்தை ஹோ கோங் வா ஒரு கைவினைத் தொழிலாளி. பிரிட்டிஷ் தோட்ட முதலாளிகளால் கட்டாயமாகக் கொண்டு வரப்பட்டவர்களில் ஒருவர். அசாம் அமைப்புகள் சிலவும், தோட்டத் தொழிலாளிகளின் மாணவர் அமைப்பு ஒன்றும், இதர சில சமூக இலக்கிய அமைப்புகளும் வந்திருக்கும் ஏழு பேர்களுக்கும் வரவேற்பளிக்கின்றன. டிப் புயான் இயக்கத்தில் ரீடா தயாரித்துள்ள இந்தச் சீன வம்சாவழியினர் குறித்த “The Divided Soul” எனும் ஆவணப்படமொன்றும் திரையிடப்பட்டது. அசாம் அரசு தமக்குப் பிறப்புச் சான்றிதழ் அளிக்க வேண்டும் என கவ்ஹாத்தி வரவேற்பின்போது மிங் வேண்டிக் கொண்டார்.

ஹாங்காங்கில் முதன் முதலாக தான் மிங்கைச் சந்தித்தபோது அவர் உணர்ச்சி வயமாகி, “மகூமுக்கு ஒரு முறை வருவது என் வாழ் நாள் கனவு” எனக் கூறியதை ரீடா நினைவு கூர்ந்தார்.

“அவர்களுக்கு இழைத்த தீங்கிற்கு நாம் ஈடு செய்துவிட இயலாது. குறந்தபட்சம் இந்த 48 ஆண்டுகளில் அவர்கள் பட்ட வேதனைகளுக்கு நம் வருத்தத்தையும் ஆதரவையும் தெரிவிக்கலாம். இந்தியா இதை முறைப்படி அறிவிக்க வேண்டும். அவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட சொத்துக்களை நாம் திருப்பித் தந்துவிட இயலாது. அவை ஏலமிடப்பட்டுவிட்டன. குறைந்தபட்சம் அரசு அவர்களிடம் மன்னிப்புக் கோரலாம். அவர்களின் குடியுரிமையை மீள் அளிப்புச் செய்யலாம். இந்த அநீதி மேற்கொள்ளப்பட்டபோது நமது ஜனநாயகம் அரும்புப் பருவத்தில் இருந்தது. நமது ஊடகங்களோ, மனித உரிமைச் சிந்தனைகளோ போதிய வளர்ச்சி பெற்றிருக்கவில்லை” என்றும் ரீடா கூறியுள்ளார்.

இந்தச் செய்திகளை நான் வாசித்தபோது இந்திய அரசின் கொடுஞ் செயல்கள், அந்தச் சீன வம்சாவளியினர் அடைந்த ஈடு செய்ய இயலா இழப்புகள் எல்லாவற்றைக் காட்டிலும் எழுத்தாளர் ரீடா சவுத்ரியின் மன விசாலிப்பும் மற்றமையின் மீதான கரிசனமும்தான் நெஞ்சை நெகிழ்த்தியது.

1984ல் இந்திரா கொலையை ஒட்டி டெல்லியில் சீக்கியர்கள் மீது நடந்த வன்முறையின் நேரடி சாட்சியாக இருக்க நேர்ந்த எழுத்தாளர் அமிதவ் கோஷ் அதை எவ்வாறு அணுகினார் என்பதை இந்தப் பக்கங்களில் நான் எழுதியுள்ளேன். அவரது இது தொடர்பான முழுக் கட்டுரையையும் கூட இங்கே பகிர்ந்து கொண்டேன்.

அவரது முதல் நாவல் The Circle of Reason 1985ல் வெளிவந்தது. சீக்கியர்கள் மீதான வன்முறைக்கு அடுத்த ஆண்டு. இது குறித்து அவர் சமீபத்தில் சுனில் சேத்தியிடம் பகிர்ந்து கொண்ட போது (Outlook, Sep 30, 2013), 1984 சம்பவங்கள்தான் தன் நாவலுக்குத் தூண்டு பொறியாய் அமைந்ததாகக் கூறியுள்ளார். “எனது வாழ்க்கை எவ்வாறு கலவரங்கள் என்கிற வலையால் சூழப்பட்டுள்ளது என்பதைத்தான் 1984 எனக்குச் சுட்டிக் காட்டியது” என்றுள்ளார்.

யோசித்துப் பார்த்தால் நாம் எல்லோருமே இப்படியான வலைப்பின்னலுக்குள்தான் சிக்கி வாழ்ந்து கொண்டுள்ளோம். உலகளவில், இந்திய அளவில், தமிழக அளவில் இப்படியான வன்முறைகள், வெறுப்பு அரசியல், மற்றமை மீதான வன் கொடுமைகள், ‘அந்நியர்’ குறித்த வித விதமான வரையறைகள் நம்மைச் சுற்றி நடைபெற்றுக் கொண்டுள்ளன. அவற்றுக்குள்தான் நாம் வாழ்ந்துகொண்டுள்ளோம். தமிழ் எழுத்துக்கள் எந்த அளவிற்கு இவை குறித்த பிரக்ஞையை வெளிப்படுத்துகின்றன? மாறாக மிக வெளிப்படையாகவும் வெட்கமில்லாமலும் மற்றமைகள் மீதும், சிறுபான்மையினர் மீதும் வெறுப்பை விதைக்கும் இயக்கங்களோடும் சிலர் தம் எழுத்தை அடையாளப்படுத்தப்படும் சூழல் தமிழில் உருவாகி வருவது எதைக் காட்டுகிறது?

ரீடா சவுத்ரியின் முயற்சிகளை வாசித்தபோது என் நெஞ்சில் கிளர்ந்த கேள்விகள் இவை.

தெலங்கானா தள்ளி உருவாக்கிய தனித் தெலங்கானா

சென்ற வாரம் ‘சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்ட’த்திற்கு (UAPA) எதிரான பிரச்சாரத்திற்காக ஹைதராபாத் சென்றிருந்தேன். விமான நிலையத்திலிருந்து நகரத்தைச் சென்றடையும்வரை, புதிய தெலங்கானா மவட்டம் கண்டு மீளும் ‘தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி’த் தலைவர் சந்திரசேகர ராவுக்கு வைக்கப்பட்ட பிரும்மாண்டமான வரவேற்பு ஃப்லெக்ஸ் போர்டுகள் ஊரெங்கும் நிறைந்திருந்தன. நிலையத்திலிருந்து என்னை அழைத்துச் சென்றுகொண்டிருந்த இளம் நண்பர்களிடம் புதிய மாநிலம் பற்றிய கருத்துக்களைக் கேட்டபோது, தெலங்கானாவைச் சேர்ந்த அவர்கள் மிக்க மகிழ்ச்சியோடும் நம்பிக்கையோடும் பதிலிறுத்தனர். தங்களுக்குப் புதிய மாநிலத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்புகள் அவர்களிடம் மிகுந்திருந்தன.

முஸ்லிம் நண்பர் ஒருவரைச் சந்தித்தபோது அவரும் உற்சாகமாகவே பதிலளித்தார், உருவாக உள்ள தெலங்கானாவில் சுமார் 13 சதம் முஸ்லிம்கள் உள்ளனர். கிட்டத்தட்ட எல்லோரும் உருது பேசுபவர்கள். 1956ல் தெலங்கானாவாக இன்று பிரிய உள்ள 10 மாவட்டங்களும் விசாலாந்திராவில் இணைக்கப்பட்டபோது அவை பிரிட்டிஷ் ஆட்சியில் நிஜாமின் சமஸ்தானமாக இருந்தது குறிப்பிடத் தக்கது. உருவாக உள்ள சீமாந்திராவில், குறிப்பாக ராயலசீமா பகுதிகளிலும் கூட முஸ்லிம்கள் இருந்தபோதும் அவர்கள் பெரும்பாலும் தெலுங்கு பேசுபவர்கள். நிஜாமின் ஆட்சிக் காலத்தில் ஹைதராபாத் உள்ளிட்ட தெலங்கானாவில் இந்துக்களையும் முஸ்லிம்களையும் இணைக்கும் ஒரு பாலமாக உருது மொழி இருந்தது. இன்றும் கூட ஹைதராபாத்தில் உருதுக்கு ஒரு முக்கிய இடமுண்டு.

1956ல் தெலங்கானா மாவட்டங்கள் அம்மக்களின் விருப்பத்திற்கு மாறாக ஆந்திரப் பிரதேசமாக ஆக்கப்பட்டபோது, இனி தெலுங்கு மொழியே அரச மொழியாக இருக்கும் என்கிற நிலையில், அதன் காரணமாகவே 56,000 முஸ்லிம்கள் வேலை இழக்க நேரிட்டது என்றார் அந்த முஸ்லிம் இளைஞர். அதன் பின் உலகின் வளம் நிறந்த மொழிகளில் ஒன்றான உருது இங்கு வளர்ச்சியின்றித் தேங்கியது என்றார். மொழியின் தேக்கம், அம் மொழியைப் பேசுகிற மக்களின் தேக்கமாகவும் இருக்கும்தானே.

ஆனால், சமீப ஆண்டுகளில் தெலங்கானா போராட்டத்தில் இந்துத்துவ சக்திகள் பெரிய அளவில் ஊடுருவியுள்ளதாக அறிகிறோமே என வினவியபோது அவரது முகம் சற்று வாட்டமுற்றது. “உண்மைதான். தனித் தெலங்கானா வந்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று நம்ப முடியாதுதான், ஆனாலும் தனித் தெலங்கானா என்பது எங்களின் அடிப்படைக் கோரிக்கை. அதை நாங்கள் வரவேற்கிறோம்.” என்றார். சரி, நீங்கள் விசாலாந்திராவிலிருந்து பிரிந்துவிட்டால் அங்கு விடப்பட்டுள்ள முஸ்லிம்களின் நிலை எப்படி இருக்கும் என்று கேட்டபோது, “அது பெரிய பிரச்சினையாக இருக்காது” என்றார் அவர். “அவர்கள் தெலுங்கு பேசுகிறவர்கள். தவிரவும் ராயலசீமாவில் அவர்கள் கணிசமாக உள்ளனர்” என்றார்.

இம்முறை மாஓயிஸ்ட் நண்பர்கள் யாரையும் சந்திக்க இயலவில்லை. ஆனால் அவர்கள் தெலங்கானா போராட்டத்தை மிகத் தீவிரமாக ஆதரிப்பவர்கள் மட்டுமல்ல, அதில் தீவிரமாகப் பங்கேற்றவர்களும் கூட. 2009ல் சந்திரசேகர ராவ் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கி தனித் தெலங்கானா கோரிக்கையை மீண்டும் மேடை ஏற்றியபோது புரட்சிப் பாடகர் கத்தாரின் நேர்காணல் ஒன்று ‘ஓபன்’ இதழில் வெளி வந்தது, தெலங்கானா என் தாய், மற்றவை எல்லாம் அதற்குப் பின்தான் என அவர் கூறியது நினைவுக்கு வருகிறது. எப்படித் தெலங்கானா பகுதிகள் வளர்ச்சியற்றுப் போயுள்ளன என்பதையும், உலகமயம் என்பது நிலமையை இன்னும் எவ்வாறு மோசமாக்கியுள்ளது என்பதையும் அவர் அதில் கவனப்படுத்தி இருந்தார்.

பா.ஜ.கவைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் மொழி வாரி மாநிலத்திற்கு எதிரிகள். மொழி மற்றும் தேசிய இன அடையாளங்கள் தாங்கள் கட்டமைக்க விரும்பும் இந்து அடையாளத்துடன் கூடிய அகண்ட பாரதக் கனவுக்கு இடையூறாக இருக்கும் எனது அவர்களின் சித்தாந்தம். எனவே ‘பாரதத்தை’ 72 நிர்வாக அலகுகளாகப் பிரிக்க வேண்டும் என்பது அவர்களின் கொள்கை. மொழிவாரியாக இந்தியக் கூட்டாட்சியைக் கட்டமைப்பது என்பது காங்கிரஸ், குறிப்பாக காந்தியின் கருத்துக்களில் ஒன்று. மாநிலங்கள் அவ்வாறு பிரிக்கப்படாத போதே காங்கிரஸ் கட்சி அவ்வாறே பிரிக்கப்பட்டு இயங்கியது. 1920 களிலேயே இக்கருத்தைக் காந்தி முன்வைத்தார்.

எனினும் மொழிவாரி மாநிலம் என்பதே முழுமையான ஒன்று, எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வளிக்ககூடிய ஒன்று என்கிற நிலை அப்போதே கேள்விக்குள்ளாக்கப்பட்டது. குறிப்பாகத் தெலங்கானா மக்கள் இந்தப் பிரச்சினையைக் கிளப்பினர். வெறும் தெலுங்கு மொழி பேசுகிறவர்கள் என்கிற அடிப்படையில் ஒரே குடைக்குக் கீழான அரசு சாத்தியமில்லை; குறை வளர்ச்சியுடைய தெலுங்கானாவும் ஒப்பீட்டளவில் வளர்ச்சி பெற்றுள்ள ராயலசீமா மற்றும் கடற்கரையோர ஆந்திராவுடனும் தாங்கள் இணைகப்பட்டால் இழப்பு தங்களுக்குத்தான் என்பதை உணர்ந்து எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.

நேருவும் இதன் நியாயத்தை ஏற்றுக் கொண்டார். விசாலாந்திரா கோரிக்கை விரிவாக்க நோக்கமுடையது, அது தெலங்கானாவுக்கு நியாயம் அளிக்காது என்றார். எனினும் தெலுங்கு மொழி, இன அடையாளத்தை முன் வைத்து உண்ணாவிரதமிருந்து மடிந்த பொட்டி ஶ்ரீராமுலு உருவாக்கியிருந்த இன உணர்வு அரசியலுக்கு தெலங்கானாவை நேரு பலி கொடுக்க வேன்டியதாயிற்று.

உலகெங்கிலுமே தேசிய அரசு (Nation State) என்பது ஒரு சமீப காலத்திய கண்டுபிடிப்புத்தான். கொடும் வன்முறைகள், இன அழிப்புகள், சிறுபான்மையினர் ஒடுக்கப்படுதல் ஆகியவற்றின் ஊடாகவே தேச அரசுகள் உருவாயின. தேச அரசுகள் மற்றும் உள்நாட்டு மாநில அரசுகள் ஆகியவற்றில் எல்லைகள் வகுக்கப்படும்போது தொடர்புடைய மக்களின் விருப்புகளைக் காட்டிலும் அவ்வக்கால புவி அரசியல் சூழல்களே முக்கிய பங்கு வகித்துள்ளன. இது குறித்து நான் நிறைய எடுத்துக்காட்டுகளை என் முந்தைய கட்டுரைகளில் தந்துள்ளேன். ஒன்று மட்டும் இங்கே.:‘பஞ்சாபி சுபா’ இயக்கம் உருவாகி, அது தனி நாடு கோரிக்கையாக உருப்பெற்று விடுமோ என்கிற அச்சம் உருவானபோது காங்கிரஸ் அரசு பஞ்சாப் மாநிலத்தின் குன்றுப்பகுதிகளை ஏற்கனவே யூனியன் பிரதேசமாக் இருந்த ஹிமாச்சலத்துடன் இணைத்து ‘ஹிமாசல பிரதேஷ்’ மாநிலம் உருவாக்கப்பட்டது (1966). இப்படியான மாநிலம் அன்று உருவாக்கப்பட்டதற்கு மொழியோ, இனமோ அடிப்படையாக இல்லாமல் “குன்றுப் பகுதிகள்” என்கிற புவியியல் அடையாளம் அடிப்படையாக்கப்பட்டது.

1956ல் மாநிலச் சீரமைப்பு ஆணையம் மொழிவாரி அடிப்படையில் 14 மாநிலங்களை உருவாக்கியது. இன்று தெலங்கானாவையும் சேர்த்தால் 29 மாநிலங்களாகிவிட்டன. இன்னும் ஏழெட்டு மாநிலக் கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன. உத்தரப் பிரதேசத்தை மட்டும் நான்காகப் பிரிக்க வேண்டும் என்கிறார் மாயாவதி. 1970களுக்குப் பின் அஸ்ஸாம், பீஹார் முதலான மாநிலங்கள் பிரிக்கப்பட்டு மிசோராம், ஜார்கண்ட் முதலான மாநிலங்கள் உருவாக்கப்பட்டபோடு மொழியை காட்டிலும் இன அடையாளம் ஒரு குறிபிட்ட் அளவிற்கு அடிப்படையாகியது. இப்போது உருவாகியுள்ள தெலங்கானா உள்ளிட்ட்ட மாநிலக் கோரிக்கைகள் பிராந்திய, பொருளாதார, வளர்ச்சி மற்றும் பண்பாட்டுக் காரணிகளை முதன்மையாக வைத்து உருவாகியுள்ளன. உலகமயம், வெளிநாட்டு மூலதனம், கனிம வளம், நில வளம், நீர் வளம் ஆகியவற்றின் பலன்கள் அவ்வப்பகுதி மக்களுக்கே கிடைக்க வெண்டும் என்கிற அவாவும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலே குறிப்பிட்ட புரட்சிப் பாடகர் கத்தாரின் பேட்டியில் அவர் இதைக் குறிப்பிடுகிறார். எவ்வாறு சந்திரபாபு நாயுடுவும் ராஜசேகர ரெட்டியும் தகவல் தொழில்நுட்பம், வளர்ச்சி, சைபர் நுட்பங்கள் என்கிற பெயர்களில் ஒப்பந்த விவசாயங்களையும் வெளிநாட்டு மூலதனங்களையும் ஊக்குவித்துத் தம் மக்களின் நில மற்றும் நீர் வளங்கள் சூறையாடப்பட்டன என்பதைச் சினம் பொங்கக் குறிப்பிடுகிறார்.

இன்றைய ஆந்திரமாநிலத்தில் தெலங்கானா பகுதியில்தான் பெரிய அளவில் கனிம வளங்கள் குவிந்துள்ளன. கிருஷ்ணா, கோதாவரி இரண்டு ஆற்று நீர்களிலும் சுமார் 70 சதம் தெலங்கானா வழியாகத்தான் பாய்கிறது. ஆனால் பலன்களெல்லாம் மற்ற இரு பகுதிகளுக்கும் என்பதை அவர்களால் பொறுக்க இயலவில்லை. 1956 இணைப்பு குறித்து பிடிக்காத மணமகளுக்குச் செய்விக்கப்பட்ட திருமணம் என்றார் நேரு. எந்த நேரத்திலும் விவாகரத்து செய்யும் உரிமையும் அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1970களிலேயே தெலங்கானா மக்கள் விவாகரத்துக் கோரிக்கையை முன்வைக்கத் தொடங்கினர். ஆனால் அந்தப் போராட்டங்களின் பலன்கள் தெலங்கானா மக்களைச் சென்றடையாமல் சென்னா ரெட்டி, நரசிம்மா ராவ் முதலானோர் தம்மை உயர்த்திக் கொள்ளும் வழிமுறையாகவே பயன்படுத்திக் கொள்ளப்பட்டன,

ராஜசேகர ரெட்டியின் ஆட்சியில் உதவி சபாநாயகராக இருந்த சந்திரசேகர ராவ் தொடர்ந்து அரசியல் ரீதியில் தான் புறக்கணிக்கப்படுவதை எதிர்த்துப் பதவி விலகி தனித் தெலன்கானா கோரிக்கையை முன்னெடுத்தார். 2009ல் அவர் தொடங்கிய அந்தப் புகழ்பெற்ற உண்ணாவிரதப் போராட்டம் இந்தியாவெங்கும் அதிர்வை ஏற்படுத்தியது.. 1980 களின் பிற்பகுதி தொடங்கி உருவான அடையாள அரசியலின் வீரியமிக்க சாத்தியத்தை அவர் திறம்படப் பயன்படுத்தினார். அந்த உண்ணாவிரதம் பத்து நாள் நீடித்தது. ஆந்திரமாநிலம் செயலற்றுப் போனது. அன்றைய உள்துறை அமைச்சர் சிதம்பரம் தனித் தெலங்கானாவை அறிவித்தார்.

இது ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரப் பகுதிகளில் எதிர்வினைகளை உருவாக்கின. இணைப்பினால் பயன்களை அனுபவித்திருந்த ஆதிக்க சக்திகள் எரிவினையை எதிர்த்தன. எல்லா அரசியல் கட்சிகளும் இப்போது உடையக் கூடிய நிலை ஏற்பட்டது. இந்த எதிர் போராட்டங்களும் மிகக் கடுமையாக இருந்தபோதிலும் அது தெலங்கானாப் போராட்டம் அளவிற்கு வீரியம் பெறாமற் போனதற்கு இரு காரணங்கள் இருந்தன. ஒன்று, அவர்களின் பக்கம் உண்மை இல்லை; நியாயங்கள் குறைவாகவே இருந்தன. இரண்டு, எல்லா அரசியல் கட்சிகளும் இந்த விடயத்தில் பிளவுபட்டிருந்தன. சந்திரபாபு நாயுடுவை எடுத்துக் கொண்டால் அவரது கட்சியின் சாதித் தளமான கம்மா நாயுடு உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட சாதியினர் தெலங்கானாவில் சுமார் 45 சத அளவு உள்ளனர். அவர்களது வெறுப்பை அவர் முழுமையாகச் சம்பாதித்துக் கொள்ள விரும்பவில்லை. அதே நேரத்தில் ஒட்டு மொத்தமான விசாலாந்திராக் கோரிக்கையின் பின்புலமாக இருக்கும் வெலமா ரெட்டி உயர்சாதியினரின் எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொள்ள அவருக்குத் தைரியம் கிடையாது. தவிரவும் தெலங்கானா பிரிவினையின் அரசியல் பலனை முழுமையாகக் காங்கிரஸ் அறுவடை செய்வதையும் அவர் ஏற்கவில்லை.

பா.ஜ.கவுக்கும் அதே நிலைதான். கொள்கையளவில் அது தெலங்கானா பிரிவினையை, பிரிவினையின் நியாயமான காரணங்களுக்காக அல்லாமல் வேறு காரணங்களுக்காக ஏற்றுக் கொண்டபோதிலும், இந்தப் பெருமையைக் காங்கிரஸ் சுமந்து கொண்டு தெலங்கானாப் பகுதியில் உள்ள 19 நாடாளுமன்றத் தொகுதிகளையும் காங்கிரசும் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதியும் கைப்பற்றிவிடக் கூடாது என்பதே அதன் நிலைபாடாக இருந்தது. நாடாளுமன்றத்தில் காங்கிரசின் தனித் தெலங்கானாச் சட்டத்தின் அவசர நிறைவேற்ற முயற்சிகளுக்கு முழுமையா ஆதரவளித்துக் கொண்டே, இன்னொரு பக்கம் காங்கிரசைக் குறைகூறி வழக்கமான அதன் இரட்டை நாக்கை அதி வேகமாகச் சுழற்றியது. தெலங்கானா பிரிவினை சரிதான், ஆனால் அதே நேரத்தில் சீமாந்திரா மக்களின் கவலைகளைப் போக்கக் காங்கிரசிடம் சரியான திட்டமில்லை என்றார் சுஷ்மா சுவராஜ்.

காங்கிரசைப் பொருத்தமட்டில் அதன் தனித் தெலங்கானா கோரிக்கையின் விளைவாக, அதன் முக்கிய பலங்களில் ஒன்றான ஆந்திர மாநிலத்தில் தன் செல்வாக்கப் பெருமளவில் இழந்துள்ளது. ஏற்கனவே ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அதைப் பெரிய அளவில் பலவீனப்படுத்தி இருந்தது. இன்று அதன் எஞ்சியுள்ள ஆறு எம்.பிக்களை அவர்களின் தெலங்கானா எதிர்ப்பிற்காக அது கட்சியை விட்டு விலக்க வேண்டி வந்துள்ளது. மாநில முதலமைசர் கிரண் ரெட்டி பதவி விலகி இன்று குடியரசுத் தலைவர் ஆட்சி அறிவிக்கப்பட்டுள்ளது, கிரண் தனிக் கட்சி தொடங்கப் போவதாக வெளி வந்த செய்தி என்ன ஆச்சு எனத் தெரியவில்லை. இந் நிலையில் தெலங்கானாவின் 19 நாடாளுமன்ரத் தொகுதிகளையுமாவது ஆது முழுமையாகக் கைக்கொள்ள முயற்சிக்கிறது. தலித் தெலங்கானா அறிவிக்கப்பட்டால் தனது ராஷ்ட்ரீய சமிதியைக் காங்கிரசுடன் இணைத்து விடுவதாக சந்திரசேகர ராவ் முன்பே வாக்களித்திருந்தார். சமீபத்திலும் அதை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தனித் தெலங்கானா மசோதா நிறைவேற்றப்பட்டவுடன் அவர் மறுபடி இது குறித்துப் பேசவில்லை. அவர் காங்கிரசுடன் தன் சமிதியை இணைக்காமல் தனி அடையாளத்துடன் தொடர்ந்தாலும் அவரது ஆதரவு காங்கிரசின் பக்கமே இருக்கும்.

இந்த அடிப்படையில் இந்த மசோதா நிறைவேற்றத்தில் காங்கிரஸ் சற்றுக் கூடுதல் வேகத்துடன் செயல்பட்டுள்ளது. எல்லோரும் கண்டிக்கத்தக்க சில முறை மீறல்களும் நடைபெற்றுள்ளன. இதுவரை உருவான எல்லா மாநிலச் சீரமைப்புகளும் அந்தந்த மாநிலச் சட்டமன்ற ஒப்புதல்களுடனேயே நடந்துள்ளன. முதல் முறையாக மாநிலச் சட்டமன்ற ஒப்புதலில்லாமல் ஒரு புதிய மாநிலம் உருவாக்கப்பட்டது இதுவே முதல்முறை, இது ஒரு தவறான முன்னுதாரணம் என்பதை ஜனநாயகம் மற்றும் மாநில உரிமைகளில் அக்கரை உள்ள அணைவரும் சுட்டிக்காட்டியுள்ளனர். இது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது எனவும் சட்ட ரீதியாக நிற்காது எனவும் திருனாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா கூறியுள்ளார்.

எனினும் நம் அரசியல் சட்டத்தில் மாநில ஒப்புதலுடன் மட்டுமே மாநிலச் சீரமைபுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என உறுதிபடச் சொல்லவில்லை, மாநில ஒப்புதலுடன்தான் ஒரு மாநிலத்தின் எல்லைகள் மாற்றப்பட முடியும் என்பது ஒரு மிக அடிப்படையான கூட்டாட்சி நெறிமுறை என்றபோதிலும் அதை நமது அரசியல் சட்டத்தில் அன்று அதை வெளிப்படையாகப் பதிக்க இயலாததற்குச் சில நியாயங்கள் இருந்தன. பல்வேறு இன, மொழி, புவியியற் பிரச்சினைகள் மட்டுமின்றை சுமார் 500க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களையும் இந்தியக் கூட்டாட்சிக்குள் இணைக்க இப்படியான அரசியல் சட்ட நிபந்தனை தடையாக இருக்கும் என அன்றைய அரசியல் சட்ட அவை கருதியது. எனினும் டாக்டர் அம்பேத்கர் அவர்கள் இப்படியாகச் சட்டம் இயற்றவேண்டிய நிலைக்கு எதிராகச் சொல்லப்படும் கருத்துக்கள் நியாயமானவையே. எதிர்காலத்தில் அப்படி மாநிலங்களின் ஒப்புதலின்றி மாநிலச் சீரமைப்புகள் நடைபெறாது என்கிற ரீதியில் வெளிப்படையாக வாக்குறுதி அளித்துள்ளது குறிப்பிடத் தக்கது. “இது மாநில விருப்பத்தை மத்திய அரசு புறக்கணிக்க வழிவகுக்கிறது எனக் குர்றஞ்சாட்டப் படுகிறது. இந்தக் குர்றச்சாட்டை ஏற்க வேண்டியதுதான். ஆனால் இந்தக் காரணத்திற்காக நமது அரசியல் சட்டத்தைக் கண்டிப்பத்ற்கு முன் சில விடயங்களை மனங்கொள்ள வேண்டும். முதலில்,மத்திய அரசுக்கு வழங்கப்படும் இந்த மேலாதிக்க அதிகாரத்தை நமது அரசியல் சட்டத்தின் இயல்பான நடைமுறையாகக் (normal feature of the constitution) கொள்ளக் கூடாடது. இதன் பயன்பாடு மிகவும் நெருக்கடியான சந்தர்ப்பங்களுக்கு மட்டுமே (confined to emergencies only) உரித்தானது” என்பது அவர் அரசியல் சட்ட அவையில் அளித்த வாக்குறுதி (நவம்பர் 17, 1948).

அரசியல் சட்டப் பிரிவு ஒன்று குறித்து இப்படியான சர்ச்சிகளும் பிரச்சினைகளும் எழும்போது, இறுதி முடிவு எடுக்க்கையில் அரசியல் சட்ட விவாதங்கள் மற்றும் அங்கு அளிக்கப்பட்ட உறுதி மொழிகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே சட்ட வாசகங்களின் தொனி தீர்மானிக்கப்படவேண்டும் என்பது ஒரு நெறிமுறை. தவிரவும் கேசவானந்த பாரதி வழக்கில் நமது அரசியல் சட்டத்தின் அடிப்படைகளைத் திருத்த இயலாது என உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள புகழ் பெற்ற தீர்ப்பும் உள்ளது.

எப்படியாயினும் தனித் தெலங்கானா என்பது ஒரு காலத்தின் கட்டாயம். ஒரு அறம் சார்ந்த கோரிக்கை. காங்கிரசுக்கு அதை நிறைவேற்ற வேண்டிய வரலாற்று ரீதியான கடப்பாடும் இருந்தது. எனினும் மாநிலத்தைக் கலந்தாலோசிக்காமல் மத்திய அரசே மாநிலங்களைப் பாதிக்கும் சட்டங்களை இயற்ற இது ஒரு முன்மாதிரியாக அமைந்து விடக் கூடாது. இன்று ஏற்பட்டுள்ள புவி அரசியற் சூழலில் ஒரு புதிய மாநிலச் சீரமைப்பு ஆணையம் அமைக்க வேண்டிய தேவை அதிகமாகியுள்ளது. அப்படி நேரும்போது அது சரியான நெறிமுறைகளுடன் உருவாக்கப்பட வேண்டும் அவசர கதியில், கடும் அமளிகளுக்கு மத்தியில், வெறும் குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்ட தெலங்கானா மாநில உருவாக்கச் சட்டம் இயற்றப்பட்ட நெறிமுறை ஒரு முன்னுதாரணமாக அமைந்துவிடக் கூடாது.

இறுதியாக ஒன்று:

இன்று தனித் தெலங்கானா உருவாகிவிட்டது. சீமாந்திராக்காரர்கள் இதச் செரித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு பிரச்சினைதான் இன்று இன்று இரு தரப்பாருக்கும் தொண்டையில் சிக்கிய முள்ளாக உறுத்திக் கொண்டுள்ளது. இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஹைதராபாத்தின் இன்றைய வளர்ச்சியில் சீமாந்திராக்காரர்களுக்கும் பெரும் பங்கு உள்ளது. 1995 -2004 காலகட்டத்தில் சந்திரபாபு ஆட்சிக் காலத்தில் ஹைதராபாத் என்கிற பாரம்பரியமான நகரம் சைபராபாத் என அழைக்கக் கூடிய அளவிற்கு நவீனப்படுத்தப் பட்டது. கூகிள், மைக்ரோசாஃப்ட், டெல்ல், ஆரகிள், டிசிஎஸ மற்றும் டிலோய்ட், அக்சென்சர், பான்க் ஆஃப் அமெரிகா, ஃபேஸ்புக், அமேசான், வொல்வோ கார் என எல்லாப் பெறு நிறுவனங்களும் அங்கு மையம் கொண்டுள்ளன. இந்தியாவிலேயே அதிகம் தயாரிக்கப்படும் தெலுங்கு சினிமாவின் உற்பத்தி மையமாகவும் ஹைதராபாத்தான் உள்ளது. இவற்றின் விளைவான உயர் ஊதிய மேற்தட்டு வர்க்கங்களுக்கான அடுக்கு மாடி சொகுசுக் குடியிருப்புகள், ஷாப்பிங் மால்கள் என இன்று இந்த 650 சதுர கி.மீ பரப்பு நவீன மெகாசிடி வேலை தேடுவோரின் சொர்க்க பூமியாக உள்ளது. இதை இழக்க சீமாந்திராக்காரர்கள் தயாராக இல்லை. தங்களின் பாரம்பரிய நகரை எக்காரணம் கொண்டும் விட்டுக்கொடுக்க தெலங்கானாக்காரர்களும் தயாராக இல்லை.

கடந்த நான்காண்டு கால உறுதியின்மை ஹைதராபாத்தின் இவ்வளர்ச்சியைச் சற்றுப் பாதித்துள்ளது. ரியல் எஸ்டேட் விலைகள் சற்றுச் சரிந்துள்ளது. புதிய பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு முதலீடுகளைச் செய்வதில் தயக்கம் ஏற்பட்டுள்ளது.

தற்போதைக்கு பத்து ஆண்டுகளுக்கு உருவாகப்போகும் இரு மாநிலங்களுக்குமே ஹைதராபாத் தலைநகரமாக இருக்க்கும் எனவும் அதற்குள் விஜயவாடா போன்ற ஏதேனும் ஒரு சீமாந்திரா நகரம் தலைநகராக வளர்த்தெடுக்கப்படும் எனவும் உருவாகியுள்ள சட்ட வரைவு கூறுகிறது. குறிப்பாக ஒரு நகரத்தை மட்டும் வளர்த்தெடுக்காமல் ஒன்றைத் தலை நகரமாகவும், மற்ற சில நகரங்களைப் பெரிய அளவிலும் வளர்த்தெடுக்கலாம் என்கிற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சிக்கு மத்திய அரசு நிதி உதவி செய்யும்.

ஆனால் ஹைதராபாத்திற்கு சீமாந்திராவுடன் நேரடியான நிலவியல் தொடர்பு இல்லை. தெலங்கானா வழியாகத்தான் அவர்கள் ஹைதராபாத்திற்குள் நுழைய வேண்டும். இதெல்லாம் என்னமாதிரியான சிக்கலை ஏற்படுத்தும் எனத் தெரியவில்லை. இந்தப் பத்தாண்டுகளுக்குப் பின் பெரிய பிரச்சினை இல்லாமல் ஹைதராபாத்தைச் சீமாந்திராக்காரர்கள் விட்டு விலகினால் சரி.

Tail Piece: இத்தாலிய மருமகள் ‘தெலங்கானா தள்ளி’யான கதை: பிடிவாதமாக நின்று தெலங்கானாவைச் சாத்தியமாக்கிய சோனியா காந்தி இன்று ‘தெலங்கானா தள்ளி’யாக (தெலங்கானா தாய்) உருப்பெற்றுள்ளார். மாமியாருக்கு அடுத்தபடியாக இன்று இந்த மருமகளுக்குக் கோவில் கட்டப்படுகிறது. ஹைதராபாத் – பெங்களூர் சாலையில், தலைநகரிலிருந்து 100 கி.மீ தொலைவில் மகபூப்நகர் மாவட்டத்திலுள்ள நந்திகாமா என்னுமிடத்தில் ஒரு ஆலயத்தை எழுப்பிக் கொண்டிருக்கிறார் மருத்துவரும் தலித் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஷங்கர் ராவ். தனது சொந்த நிலத்தில் 9 சதுர கி.மீ பரப்பில் அமைக்கப்படும் இந்த ஆலயத்திற்கு அவர் ‘சோனியா காந்தி சாந்திவனம்’ என்று பெயரிட்டுள்ளார். இதில் 9 அடி உயரம், 500 கிலோ எடையில் தெலங்கானா தள்ளியின் உருவச் சிலை வெண்கலத்தில் அமைக்கப்படுகிறது இனி சார்மினாரோடு தெலங்கானாவின் முக்கிய டூரிச மையங்களில் இந்தச் சோனியா காந்தி சாந்திவனமும் ஒன்றாகப் போகிறது. ஒரு பக்கம் இது கிறுக்குத் தனமான போதிலும், இருக்கட்டும் மோடி முதல் நம்மூர் சின்ன மோடி வைகோ வரை இத்தாலிய சோனியா என அவரை ‘அந்நிய சக்தி’யாக கரித்துக் கொட்டிய இந்துத்துவ சக்திகள் வயிறெரியட்டும். என்ன வைகோவையும் இந்துத்துவ சக்தி என்று சொல்கிறீர்களே என்கிறீர்களா. தெரிந்துதான் சொல்கிறேன். பெரிய தப்பொன்றும் இல்லை.