மேலப்பாளையம் மற்றும் நெல்பேட்டையில் வாழும் அடித்தள முஸ்லிம்கள்

மூன்று நாட்களாக மேலப்பாளையம் (திருநெல்வேலி), நெல்பேட்டை (மதுரை) பகுதிகளில் வாழும் அடித்தள முஸ்லிம்களுடன் நீண்ட நேரம் உரையாடும் வாய்ப்புக் கிட்டியது. என்னுடன் சுகுமாரனும் ரஜினியும் இருந்தனர். மேலப்பாளையத்தில் எங்களுடன் தோழர்கள் பீட்டர், ரமேஷ், ஆதித் தமிழர் பேரவை சங்கர் மற்றும் வழக்குரைஞர் அப்துல் ஜாபர் சேர்ந்துகொண்டனர். நெல்பேட்டையில் பழனிச்சாமி, வழக்குரைஞர்கள் சையத் அப்துல் காதர், யூசுஃப் ஆகியோர் எங்களுடன் இருந்தனர்.

சச்சார் அறிக்கையில் இந்திய முஸ்லிம்களின் நிலை இங்குள்ள தலித்களின் நிலையைக் காட்டிலும் பல அம்சங்களில் மோசம் எனக் கூறியுள்ளதைத் தமிழகத்தில் வாழும் நம்மால் அவ்வளவு எளிதாகப் புரிந்து கொள்ள இயலாது. அதுவும் என்னைப் போன்ற தஞ்சை மாவட்டக் காரர்களுக்கு அது புரிவது கடினம். இங்குள்ள அய்யம்பேட்டை, பாபநாசம், ராஜகிரி, கூத்தாநல்லூர், அத்திக்கடை, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை பகுதிகளில் ஓரளவு முஸ்லிம்கள் வசதியாக இருப்பார்கள். முத்துப்பேட்டை போன்ற ஊர்களில் முஸ்லிம்கள் நடத்துகிற தரமான பள்ளிகளும் உண்டு.

உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பிஹார் முதலான மாநிலங்களுக்குச் சென்று பார்க்கும் போதுதான் சச்சார் கூறியதை என்னால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடிந்தது. கைவினைத் தொழில்கள், ரிக்‌ஷா இழுப்பது, இரும்பு அடிப்பது முதலான கடுமையான பணிகளில் ஈடுபட்டுள்ள வறுமை வயப்பட்ட முஸ்லிம்களை அங்குதான் நிறையக் காண முடிந்தது. அஸ்ஸாமில் வன்முறையாக இடம்பெயர்க்கப்பட்ட மூன்று இலட்சம் முஸ்லிம்களின் அகதி வாழ்வு கண்ணீரை வரவழைத்தது.

மேலப்பாளையம், நெல்பேட்டை முதலியனவும் இது போல மிகவும் அடித்தள முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகள் தான். சுமார் ஒன்றரை இலட்சம் முஸ்லிம்கள் அங்கிருப்பதாகச் சொன்னார்கள். நெருக்கமான வீடுகள், குண்டும் குழியுமான வீதிகள். கல்விக்குப் பெயர்போன பாளையங்கோட்டையின் ஒரு பகுதியான மேலப்பாளையத்தில் முக்கிய கல்வி நிலையங்கள் எதுவும் கிடையாது. நிறைய பீடிக் கம்பெனிகள் உள்ளன. அவற்றின் முதலாளிகள் பெரும்பாலும் மலையாளிகள். பீடி சுற்றுவது மேலப்பாளையத்தார்கள்.

மதுரையின் மையப் பகுதியில் அமைந்துள்ள நெல்பேட்டையும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் ஒரு பகுதி. அங்கும் இதே நிலைதான். பாரம்பரியமான சுங்கம் பள்ளிவாசலிலிருந்து கூப்பிடு தூரத்தில் அமைந்த ஒரு மிகக் குறுகலான வீதியில் ஒரு சிறு அறையில்தான் நாங்கள் உட்கார்ந்து பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுடன் பேசிக் கொண்டிருந்தோம். சன்னலுக்கு வெளியே ஒரு மாட்டுக் கறிக் கடை. கறிக் கழிவுகள் ஒரு கூடையில் ஈ மொய்த்த வண்ணம் கிடந்தன. நிணம் பொசுங்கும் நாற்றம் காற்றில் கலந்து வந்து கொண்டிருந்தது. கசாப்புக் கடை, அடுப்புக் கரி விற்பது, ஆட்டோ ஓட்டுவது.. இப்படியான வேலைகள்தான் பலருக்கும்.

இரண்டு பகுதிகளிலுமே கல்வி அறிவு வீதம் மிக மிகக் குறைவு என்பது பார்த்தாலே தெரிந்தது. உண்மை வழக்குககளில் சம்பந்தப்பட்டவர்கள், பொய் வழக்கு போடப்பட்டவர்கள், முதலில் ஒரு உண்மை வழக்கில் சிக்கிப் பின் தொடர்ந்து பல பொய் வழக்குகளில் சிக்கவைக்கப் பட்டவர்கள் எனப் பலரையும் சந்தித்தோம். அவ்வளவு பேரும் எதையும் மறைக்காமல் எங்களிடம் உண்மைகளையே சொன்னார்கள். ஓரளவு எங்களால் ஊகிக்க முடியும். யார் உண்மைகளைச் சொல்கின்றனர், யார் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்க முயற்சிக்கிறார்கள், யார் மிகைப்படுத்திச் சொல்கிறார்கள் என்பது.. எங்களிடம் பேசிய அத்தனை பேருக்கும் தங்கள் வழக்கு விவரங்கள், அல்லது தம் மீதான போலீஸ் கொடுமைகள் எதையும் சரியாகச் சொல்லக் கூடத் தேரியவில்லை. அத்தனை அப்பாவிகள் என நான் சொல்வது இதை வாசிக்கும் பலருக்கும் புரியும் என எனக்குத் தோன்றவில்லை.

‘மேலப்பாளையம் முஸ்லிம்கள்’ என்றொரு சிறு நூலை பேராசிரியை சாந்தி எழுதியுள்ளார். சாந்தி, நண்பர் லெனா குமாரின் மனைவி. சுமார் பத்து ஆண்டுகள் இருக்கலாம். சாந்தி என்னை முன்னுரை எழுதக் கேட்டுக்கொண்டார். அற்புதமான ஒரு இன வரைவியல் நூலது. யாரோ ஒரு ஆய்வாளரின் உதவியாளராக அடிக்கடி மேலப்பாளையம் சென்று வந்தவருக்கு அம்மக்களோடு நெருக்கமான உறவு ஏற்பட்டுவிட்டது. மே.பா முஸ்லிம்களின் இனவரைவியற் கூறுகளைத் தொகுத்து எழுதத் தொடங்கினார். ஆனால் அது, அவர்களின் உணவு, உடை, நம்பிக்கைகள், பிறப்பு, இறப்புச் சடங்குகள் என்கிற அளவில் தொகுப்பதோடு நின்றுவிடவில்லை, அவர்களைக் காவல்துறை எவ்வாறு சுரண்டுகிறது, கொடுமைப்படுத்துகிறது என்பதை நேரில் கண்டு மனம் கலங்குகிறார். அவற்றையும் பதிவு செய்கிறார். மொத்தத்தில் அரசியல் பிரக்ஞையுடன் கூடிய ஒரு அற்புதமான இன வரைவியல் நூலாக அது உருப்பெற்றது.

சித்தரஞ்சன் என்றொரு காவல்துறை அதிகாரி பற்றி சாந்தி அந்நூலில் குறிப்பிடுவார். அவர் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வார். உன் மகனை தீவீரவாதக் கேசில் சிக்க வைப்பேன் எனச் சொல்லி அப்பாவி முஸ்லிம்களிடம் காசு பறிப்பதில் சமர்த்தர் அவர். அப்போது சாந்தி ஒரு ஆய்வு உதவியாளர் மட்டுமே. ஒரு பெண்ணாகவும், எந்தப் பெரிய அரசியல் பின்புலமும் இல்லாமல் இப்படிப் போலிஸ் அதிகாரியின் பெயரை எல்லாம் குறிப்பிட்டு எழுதுகிறாரே, ஏதாவது பிரச்சினை வந்தால் என்ன செய்வது, பேசாமல் பெயரை நீக்கிவிடச் சொல்லலாமா என ஒரு கணம் நினைத்தேன். பிறகு, சரி, ஒரு பெண், தன் கண்முன் நிகழும் சமூக அநீதியைப் பொறுக்க இயலாமல் எழுதுகிறார், அதை ஏன் நாம் முடக்க வேண்டும், அவரது அந்த அழகான துணிச்சலை நாம் ஏன் முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என நினைத்து, ஒன்றும் பேசாமல் முன்னுரையை எழுதிக் கொடுத்தேன்.

மேலப்பாளையம் போகுமுன் சாந்தியின் நூலை ஒருமுறை படித்துவிடலாம் எனத் தேடினேன். யாரிடம் கொடுத்தேனோ கிடைக்கவில்லை. திருநெல்வேலியில் இறங்கியவுடன் லெனா குமாரிடம் தொடர்பு கொண்டு பெற முயற்சித்தேன். அவர் ஏதோ புதுச்சேரி போய்விட்டாராம். சித்தரஞ்சன் பெயர் நினைவில் இருந்தது. எப்படி இருக்கிறார் அந்த அதிகாரி எனக் கேட்டேன். அவர் ரிடையர் ஆகி கடும் நோய்வாய்ப்பட்டுக் கிடக்கிறார் என்றார் ஜப்பார்.

முஸ்லிம் அமைப்புகள் ஏதும் அந்நூலை அநுமதி பெற்று மறு வெளியீடு செய்யலாம்.

நெல்பேட்டைக்குள் நாங்கள் நுழைந்தபோது, அடடே ரஜினி அக்கா என இரண்டு மூன்று பேர் வந்து ரஜினியைச் சூழ்ந்து கொண்டனர். இப்போது நல்ல பல இளம் முஸ்லிம் வழக்குரைஞர்கள், முஸ்லிம்கள் மீது போடப்படும் வழக்குகளை எடுத்து நடத்துகின்றனர். ஒரு பதினைந்தாண்டுகளுக்கு முன் இதுபோன்ற பல வழக்குகளை ரஜினிதான் நடத்தியுள்ளார். தடா சீனி, இப்போது பரிசறிவித்துத் தேடப்படும் போலீஸ் பக்ருதீன் உட்படப் பலரது வழக்குகளை நடத்தியவர் ரஜினி. ஒரு சுவாரசியமான சம்பவத்தைச் சொன்னார். அசோக் சிங்கால் உட்படப் பல இந்துத்துவப் பேச்சாளர்கள் பேசும் கூட்டம் ஒன்று மதுரையில் நடந்துள்ளது. மிக மோசமாகவும் ஆபாசமாகவும் முஸ்லிம்களைப் பேச்சாளர்கள் ஏசியுள்ளனர். கோபமடைந்த சிலர் ஓடி வந்து ரஜினியிடம் கூறியுள்ளனர். ரஜினி உடனே கூட்டம் நடக்கும் இடத்திற்கு விரைந்து ஒலிபெருக்கி ஒன்றின் அருகில் நின்றுகொண்டு ஒரு டேப் ரிக்கார்டரில் ஏச்சுக்களைப் பதிவு செய்துள்ளார். அப்போது மழை தூறி இருக்கிறது. சுடிதார் துப்பட்டாவை எடுத்துத் தலைமீது போட்டுக் கொண்டு ஒலிப்பதிவு வேலை நடந்திருக்கிறது. அவ்வளவுதான், முஸ்லிம் பெண் தீவிரவாதி கூட்டத்தில் தாக்குதல் நடத்த வந்துள்ளதாகச் செய்தி பரவி கூட்டம் அப்படியே ரஜினியை ஆத்திரத்துடன் சுற்றிக் கொண்டுவிட்டது. நல்ல வேளை அசம்பாவிதம் ஏதும் நடப்பதற்கு முன் ரஜினிக்குத் தெரிந்த காவல்துறை அதிகாரி காவலர்களுடன் ஓடி வந்து ரஜினியைப் போலீஸ் வேனில் ஏற்றிக் காப்பாற்றியுள்ளார். பிறகு அந்த அதிகாரியே மேடை ஏறி மைக்கைப் பிடித்து அது தீவிரவாதி இல்லை எனப் பலமுறை சொன்னபின்புதான் ஆவேசம் அடங்கி இருக்கிறது.

சென்ற ஆண்டு திருப்பரங்குன்றத்தில் வெடிகுண்டு கைப்பற்றப்பட்ட பின்பு தாங்கள் எவ்வாறெல்லாம் காவல்துறையால் இழுத்துச் செல்லப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டோம் என்பதைக் கசாப்புக் கடையில் வேலை செய்யும் ஷேக் அலாவுதீன், மினி ஆட்டோ டிரைவர் முகம்மது யாசின், அ.தி.மு.க கவுன்சிலர் ஒருவரிடம் உதவியாளராக இருந்த ஜாபர் சுல்தான் முதலானோர் விவரித்தபோது கண்கள் மட்டுமல்ல எங்கள் மனமும் கசிந்தது.

யாரையாவது ஒருவரை இழுத்துச் சென்று அடித்து உதைப்பது. அவரது புகைப்படம், கைரேகை இதர அங்க அடையாளங்களைப் பதிவு செய்வது. அவரது செல்போனைப் பிடுங்கி அதிலுள்ள தொடர்பு எண்கள் எல்லாவற்றையும் கணினியில் ஏற்றிக் கொள்வது, பின் அந்த ஒவ்வொரு எண்ணுக்கும் உரியவரை வரவழைத்து அவர்களியும் இதேபோல நடத்துவது என்பதாகக் கடந்த சில மாதங்களில் கிட்டத்தட்ட அப்பகுதி ஆண்கள் எல்லோரது ‘ப்ரொஃபைல்களும்’ எடுக்கப்பட்டுவிட்டன என்றார் அப்துல் காதர். சுமார் எவ்வளவு பேர்கள் இருக்கும் என்றேன். 600 பேர்கள் வரை இருக்கலாம் என்றார். எண்ணிக்கை துல்லியமாக இல்லாததால் எங்கள் அறிக்கையில் “நூற்றுக்கணக்கானோர் இப்படிப் ப்ரொஃபைல் செய்யப்பட்டுள்ளனர்” எனப் பதிவு செய்தோம். முஸ்லிம்கள் மத்தியில் இப்படியான racial profiling செய்ய்யப்படுவது எத்தனை பேருக்குத் தெரியும்?

தனியாக வாழும் பெண்களையும் ஏ.டி.எஸ்.பி மயில்வாகனன் மற்றும் இன்ஸ்பெக்டர் மாடசாமியின் கீழிருந்த சிறப்புக் காவற் படை விட்டு வைக்கவில்லை.மறைந்த பிர்தவ்சின் மனைவி ஆமினா பேகம், முகம்மது ஹனீபாவின் மகள் சகர் பானு ஆகியோர் தாங்கள் விசாரிக்கப்பட்டதை வேதனையோடு பகிர்ந்து கொண்டனர். சகர் பானுவையாவது தேடப்படும் பிலால் மாலிக்கைத் தெரியும் என்பதற்காக விசாரித்தனர் என ஆறுதல் கொள்ளலாம். ஆமீனா பேகத்தின் கதை பரிதாபமானது. நாங்கள் பார்த்தவர்களுள் ஆமீனா ஒருவர்தான், தன்க்கு நேந்ததைச் சீராகச் சொல்லக் கூடியவராக இருந்தார்.

கணவனை இழந்த ஆமீனா தன் மூன்று சிறு பிள்ளைகளை அடுப்புக் கரி வியாபாரம் செய்து காப்பாற்றி வருகிறார். ஆண் துணை இன்றித் தனியாக வாழ்கிறார் எனத் தெரிந்தவுடன் காவல்துறையினர் இவரை அணுகி அவர்களுக்குத் தகவலாளியாக (informer) இருக்கக் கட்டாயப் பாடுத்தியுள்ளனர் முதலில் மாரியப்பன் என்றொரு அதிகாரி வந்துள்ளார். ஆமினா உறுதியாக மறுத்துள்ளார். அப்புறம் மீண்டும் உன்னை விசாரிக்க வீட்டுக்கு வரப்போகிறோம் எனக் கூறியுள்ளனர். நீங்கள் வீட்டிற்கு வர வேண்டாம், நானே வருகிறேன் என ஆமினா கூறி எஸ்.பி அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அங்கே மயில்வாகனன், மாடசாமி குழுவினர் சுமார் 40 காவலர்கள் சூழ அவரை விசாரித்துள்ளனர், பெண்களை விசாரிக்கும்போது பெண் காவலர்கள் இருக்க வேண்டும் என்கிற விதியும் மீறப்பட்டுள்ளது. பணம் தருகிறோம் உளவு சொல்ல வேண்டும் என ஆமினாவிற்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆமினா குரலை உயர்த்திச் சத்தம் போட்டுள்ளார். நாந்தான் முடியாதுன்னு சொல்றனே, அப்புறம் ஏன் இப்படித் தொந்தரவு செய்றீங்க எனக் கத்தியுள்ளார். சரிம்மா, சரிம்மா சத்தம் போடாதே, வா, முதல்ல கான்டீன்ல போயி சாப்பிடு எனச் சொல்ல ஆமினா மறுத்துள்ளார். சரி ஆட்டோவில போ எனச் சொல்லி ஒரு நூறு ரூபாய் நோட்டையும் எடுத்து நீட்டியுள்ளனர்.

பிறகு தேசிய அளவில் செயல்படும் மனித உரிமை அமைப்பான என்.சி.எச்.ஆர்.ஓ தலையிட்டு தொல்லை செய்த அதிகாரிகள் மீது private complaint கொடுத்த பின்பு இப்போது பிரச்சினை சற்று ஓய்ந்துள்ளது, நெல்பேட்டையைப் பூர்வீகமாகக் கொண்ட வழக்குரைஞர்களான முகமது யூசுப், அப்துல் காதர் சகோதரர்கள் என்.சி.எச்.ஆர்.ஓவில் துடிப்பாகச் செயல்படக் கூடியவர்கள். நானும் சுகுமாரனும் அஸ்ஸாம் சென்றிருந்தபோது தமிழ்நாடு என்றவுடன் பாதிக்கப்பட்ட பலரும் யூசுப்பைத் தெரியுமா எனக் கேட்டனர். அஸ்ஸாம் வன்முறைகள் நடைபெற்றபோது ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு சென்று தங்கி பாதிக்கப்பட்ட பலரையும் சந்தித்து விசாரித்து வாக்குமூலங்களைப் பெற்று வழக்கு நடத்த உதவி செய்தவர் அவர்.

பேசிக் கொண்டு வெளியே வந்தபோது சுங்கம் பள்ளிவாசலைச் சுற்றி நான்கு கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்படுள்ளதைக் கண்டு அதிர்ச்சியுற்றோம். தொழுகைத் தலத்தில் கண்காணிப்புக் காமிராக்களா? திகைத்தோம். நான் அதைப் படம் எடுக்க முயற்சித்தபோது வேண்டாம் சார் எனத் தடுத்தனர். நான் படம் எடுப்பது தடைப் பட்டாலும், நான் படம் எடுக்க முயற்சித்ததை அந்தக் காமரா படம் எடுத்துக் கொண்டது.

முதலில் பள்ளிவாசலுக்கு உள்ளும் வெளியிலும் 18 கண்காணிப்புக் காமராக்கள் பொருத்தப்பட்டனவாம். யூசுப் சகோதரர்களைப் போன்றோர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தபோது பள்ளிவாசலுக்குள் பொருத்தப்பட்டிருந்த 14 காமராக்களை எடுத்துவிட்டார்களாம். காமராக்களைப் பொருத்தியது பள்ளிவாசல் நிர்வாகந்தான் என்ற போதிலும், காவல்துறையின் நிர்ப்பந்தம் காரணமாகவே அவை பொருத்தப்பட்டுள்ளன எனப் பலரும் கூறினர். 18 காமராக்களுக்கும் சுமார் 2.5 லட்சம் செலவாகுமாம். பள்ளிவாசல் வரவு செலவுக் கணக்கில் இந்தச் செலவு பதியப்படவில்லை என்பதால் காவல்துறை வாங்கித் தந்துதான் இவை பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்றார் ஒருவர்.

எப்படியான போதிலும் இது ஒரு மிக மோசமான முன் உதாரணம். சுங்கம் பள்ளியைக் காட்டி இனி எல்லாப் பள்ளிகளிலும் இப்படிக் கண்காணிப்புக் காமராக்கள் பொருத்தபடலாம். இப்படித் தொழ வருபவர்களைக் கண்காணிப்பதைக் காட்டிலும் கொடுமை ஏதுமில்லை. முஸ்லிம் அமைப்புகள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலப்பாளையம், நெல்பேட்டை முதலியன கிட்டத்தட்ட slum ஏரியாக்கள் என்கிற அளவில்தான் உள்ளன. கல்வி வீதம், நிரந்தர வேலை, சுய தொழில் வாய்ப்பு முதலியன மிகக் குறைவாக உள்ளன. இவற்றின் விளைவான வறுமை, கடன் தொல்லை, வட்டிக் கொடுமைகளும் உள்ளன. இப்படியான பகுதிகளில் சிறு குற்றங்கள், ரவுடியிசம் முதலியன உருவாவதற்கான வாய்ப்புகள் பொதுவில் இருக்கும். எனினும் இது விரல்விட்டு எண்ணக் கூடிய சிறிய அளவில்தான் இருக்கும். பெரும்பாலான மக்கள் அப்பாவிகளாகத்தான் இருப்பார்கள். இங்கும் அப்படியான குற்றச் செயல்கள் இருக்கத்தான் செய்கின்றன. முஸ்லிம்கள் நிறைந்த பகுதியாக உள்ளதால் இங்கு இவை மத நிலைப்பட்டதாகவும் எளிதில் மதச் சாயம் பூசப்படக் கூடியதாகவும் ஆகிவிடுகின்றன. இதை இந்தக் கோணத்தில் அணுகாமல் ‘முஸ்லிம் தீவிரவாதம்’ என்கிற கோணத்திலேயே காவல்துறை அணுகுகிறது. காவல்துறையிடம் பொதிந்துள்ள சிறுபான்மை எதிர்ப்பு மன நிலை இத்துடன் இணந்து கொள்கிறது. சிறிய அளவிலோ பெரிய அளவிலோ முதல் குற்றம் செய்யும் ஒருவரைத் தொடர்ந்து பொய் வழக்குகள், விசாரணைகள், பணப் பறிப்புகள் என்கிற வகைகளில் தொல்லை செய்து வருவதால் அவர்கள் மேலும் குற்றச் செயல்களுக்குத் தள்ளப்படுகின்றனர். இதை ஒட்டி மேலப்பாளையம் போன்ற பகுதிகளை ஏதோ பாயங்கரவாதிகளின் நகரமாகவும், முஸ்லிம் சமுதாயத்தையே “சந்தேகத்திற்குரியதாகக்” கட்டமைப்பதும் நடக்கிறது. ஆக, ஒரு விஷச் சுழல் இவ்வாறு முழுமை அடைகிறது. இன்று விலை கூறித் தேடப்படும் இப்பகுதி “முஸ்லிம் தீவிரவாதிகள்” எல்லோரும் இப்படியாக உருவாக்கப்பட்டவர்கள்தான் என்பது குறிப்பிடத் தக்கது. ஆமாம் அவர்கள் உருவாக்கப்பட்டவர்கள்தான், உருவானவர்கள் அல்ல. இவர்கள் அப்படியானதில் நாம் வாழும் இந்தச் சமூகத்திற்குப் பெரிய பொறுப்பு உள்ளது. நம்மையும் சேர்த்துத்தான்.

மேலப்பாளையம், நெல்பேட்டை போன்ற பகுதிகளுக்கு நகரின் பிற பகுதிகளுக்குச் சமமாக அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும். இப்பகுதிகளில் உரிய அளவில் நர்சரி தொடங்கி உயர்நிலைப் பள்ளிகள் வரை கட்டித்தரப்பட வேண்டும். சுய தொழில் வாய்ப்புக்கள், அதற்கான பயிற்சி முதலியன அளிக்கப்பட வேண்டும்.இப்பகுதிகளை ஒட்டி தொழில் வளர்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

பிரச்சினையை முழுமையாக அணுகி அதன் சிக்கல்களை ஏற்றுப் புரிய முயற்சித்தல் அவசியம். நமது ஊடகங்கள், அரசு மற்றும் காவல்துறை ஆகியவற்றின் அணுகல்முறைகள் நிச்சயமாக இந்தத் திசையில் இல்லை.

இம்ரானின் அனுபவங்கள் எவருக்கும் வரவேண்டாம்

இரண்டு நாட்களாக இரயில் பயணம். என்னதான் குளிர் பெட்டியானாலும் நம் இயக்கம் குறுக்கப்படுவது எல்லாவற்றையும் முடக்கி விடுகிறது. ஒரு கட்டுரை டைப் செய்து அனுப்பினேன். அதற்கு மேல் ஒன்றும் செய்ய இயலவில்லை.

இன்று முழுவதும் டெல்லியில் UAPA சட்டத்திற்கு எதிரான மாநாடு. மாலைக் கருத்தரங்கில் சுமார் 5000 பேர் கலந்துகொண்டனர். ஏகப்பட்ட தலைவர்கள் இந்தக் கொடூர சட்டத்திற்கு எதிராகக் கண்டன உரையாற்றினர்.

காலையில் இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒரு உரையாடல் நடைபெற்றது. நானும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த வழக்குரைஞர் ஷப்னாவும் ஒரு பேனலில் இருந்தோம். மூன்று மணி நேரத்தில் நால்வரின் சோக அனுபவங்களுக்குக் காது கொடுக்க முடிந்தது.

ஒவ்வொன்றும் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய நெஞ்சை உருக்கும் அனுபவங்கள்தான். நேரமில்லை. ஒன்றை மட்டும் இங்கே பதிகிறேன்.

சென்ற வாரம் ஹைதராபாத் சென்றபோது சந்தித்த அந்தப் பையனை, அல்லது அழகிய தோற்றத்துக்குரிய இளைஞனை மீண்டும் பார்த்தபோது ஒரு கணம் துணுக்குற்றேன், ஆவலுற்றேன். ஓடிச்சென்று அவன் கைகளைப் பற்றிக் கொண்டேன்.

அவனை நான் சென்ற வாரம் ஹைதராபாத்தில் பார்த்தேன். இதே UAPA சட்டத்திற்கெதிரான கூட்டத்திற்கு வந்திருந்தவர்களில் அவனும் ஒருவன். அவன், இவன் எனக் குறிப்பிடுவதை மரியாதைக் குறைவாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அன்பின் மிகுதியும் அப்படி விளிப்பதில்தானே முடியும்.

யாரோ சொன்னார்கள். ஹைதராபாத் மக்கா மசூதி வழக்கில் பொய்யாய்க் குற்றம் சாட்டப்பட்டுக் கடுஞ் சித்திரவதைகளையும், பல மாதச்சிறையையும் அனுபவித்து, இறுதியில் குற்றமற்றவன் என விடுதலை செய்யப்பட்டவன், பெயர் இம்ரான் என்றார்கள். அப்போதும் அவன் கைகளைப் பற்றிக்கொண்டு மவுனமாக இருக்கத்தான் முடிந்தது.

கொஞ்சம் பேச வேண்டும் என்றேன். அவனுக்கு ஏதோ அவசரம். நான் தங்கியுள்ள அறைக்கு மாலை வருகிறேன் எனச் சொன்னான்.அவன் சரியாகத்தான் வந்தான், நான்தான் அப்போது அறையில் இல்லை. அன்று விரிவாகப் பேசமுடியவில்லையே ஏமாற்றமடைந்திருந்த எனக்கு இன்று அவனைப் பார்த்தபோது இரட்டிப்பு மகிழ்ச்சி.

எனது பேனலின் முன் முதலாவதாக வந்து தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டவர் ராஜஸ்தான் மாநிலத்தவர். ஐந்து பிள்ளைகள். ஒரு பள்ளி நடத்துகிறார்.ஆயுதங்களுடன் பஜ்ரங்தள் ஊர்வலம் ஒன்று நடந்தபோது அதை எதிர்த்துள்ளார். கைது, சித்திரவது, UAPA சட்டம் என நீண்ட நாள் சிறைவாசத்திற்குப் பின் விடுதலையானவர். பெயர் முகம்மது ஹனீஃப்.

அவர் சென்றவுடன் நான் இம்ரானை அழைத்தேன்.

பெயர்: சையத் இம்ரான் கான். வயது 30 (இப்போது). கல்வி: பி.டெக் (கம்ப்யூட்டர் சயின்ஸ்). வேலை : ICICCI வங்கி.

அப்பா ஒரு மத்திய அரசு ஊழியர் (அப்போது). ஒரு தம்பி, ஒரு தங்கை. ஊர் : செகந்தராபாத்தில் போன்பள்ளி.

சுவாமி அசீமானந்தாவின் இப்போதைய வாக்குமூலம், 2007 மக்கா மசூதி குண்டு வெடிப்பு இந்துத்துவவாதிகளின் சதி என்பதை இன்று உறுதிப்படுத்தியுள்ளது. அன்று முஸ்லிம் தீவிரவாதிகள், லக்‌ஷர் ஏ தொய்பா, பாகிஸ்தானில் பயிற்சி, இந்திய முஜாஹிதீன் என்கிற அளவில் பேசப்பட்டது. ஊடகங்கள் அப்படியே செய்திகள் பரப்பின.

மக்கா மசூதி குண்டு வெடிப்பிற்கு எட்டு நாளைக்குப் பின் சுமார் 200 பேர் கொண்ட ஒரு போலீஸ் படை இம்ரானின் வீட்டைச் சுற்றிக் கொண்டது. நாலைந்து போலீஸ் வான்கள், கொஞ்சம் ஊடகக்காரர்கள் சகிதம் அந்தப் படையெடுப்பு நடந்துள்ளது..

என்ன காரணம் என அவனிடமோ இல்லை பெற்றோர்களிடமோ சொல்லாமல், சும்மா ஒரு விசாரணை, போலீஸ் ஸ்டேஷன் வரை வந்துவிட்டுப் போ என அவன் அழைக்கப்பட்டுள்ளான். வானில் ஏறுமுன் கறுப்புத் துணியால் ஆக்கப்பட்ட ஒரு பையால் தன் முகம் மூடப்பட்டபோதுதான் இம்ரானால் அதிர்ச்சியைத் தாங்கமுடியவில்லை.

பிள்ளையை அத்தனை காமரா வெளிச்சங்களுக்கும் முன்னால் இப்படி முகத்தைக் கறுப்புத் துணியால் மூடி போலீஸ் வானில் ஏற்றியதைப் பார்த்திருந்த அவனது பெற்றோர்களுக்கும் உடன்பிறந்தார்களுக்கும் எப்படி இருந்திருக்கும் என ஒரு கணம் நினைத்துப் பார்த்தேன்.

கருப்புத் துணி விரித்த இருளின் ஊடாக எங்கோ இழுத்துச் சென்று ஒரு பண்ணை வீட்டில் அடுத்த பத்து நாட்கள் சட்ட விரோதக் காவல். தினசரி அடி. மின்சார ஷாக்குகள்..

தினம் இரண்டு மணி நேரம் மட்டுமே தூங்க அநுமதி. அசந்து தூக்கம் கண்களைச் சுழற்றினால் இமைகளில் க்ளிப் போட்டுக் கண்களை மூட விடாது செய்து தூக்கத்தை விரட்டுதல்…

இம்ரானிடம் அவனுக்கு விளங்காத பல கேள்விகள், அவனுக்குத் தெரிந்திராத பெயர்களைச் சொல்லி விவரங்கள் கேட்டுத்தான் இத்தனைச் சித்திரவதைகளும்.

“லக்‌ஷர் ஏ தொய்பாவுடன் உனக்கு எத்தனை நாளாகத் தொடர்பு?”

“பயிற்சிக்காகப் பாகிஸ்தானிற்கு நீ என்னென்ன தேதிகளில் சென்றிருந்தாய்…”

“தெரியாதா? அடேய் என்ன சொல்கிறாய்..? நீ இப்படிக் கேட்டால் சொல்வாயா/”

“சொல்லமாட்டாயா? சொல்லமாட்டாயா? இப்ப சொல்லுடா, சொல்லுடா, சொல்லுடா,,,”

###

இரண்டுமுறை இம்ரானுக்கு நார்கோ அனாலிசிஸ் செய்துள்ளனர். இன்று அந்த “உண்மை அறியும் சோதனை”, நிரந்தர மூளை ஊனத்தை ஏற்படுத்திவிடும் எனத் தடை செய்யப்பட்டுள்ளது.

அவனுக்கு நார்கோ சோதனை செய்த டாக்டர் மாலினி போலீசிடம் லஞ்சம் பெற்றுப் பொய் சர்டிஃபிகேட்டுகள் கொடுத்ததற்காகக் குற்றம் சாட்டப்பட்டவர்.

லேடி போயிங் ஹாஸ்பிடலுக்கு நார்கோ சோதனைக்காக அழைச்சிட்டுப் போய் உடகார வச்சிருந்தாங்க. அப்போ T9 டி.வியில என் படத்தைக் காட்டி என்னமோ சொல்லிட்டு இருந்தாங்க. நான் பதட்டமாயி அங்கே இருந்த நர்ஸ்கிட்ட என்ன சொல்றாங்கன்னு கேட்டேன். ‘அது, நீ ஒரு பயங்கரவாதி, நார்கோ டெஸ்ட்ல எல்லாத்தையும் நீ ஒத்துக்கிட்டன்னு சொல்றாங்க’…”

“என்ன இம்ரான், டெஸ்ட் பண்றத்துக்கு முன்னாடியே அப்படி நியூஸ் வெளியிட்டாங்களா என்ன..?”

‘’ஆமா சார்…”

###

மொத்தம் 17 மாதங்கள், 24 நாட்கள் சிறை வாசம். இதில் 10 நாட்கள் சட்டவிரோதப் போலீஸ் காவல்; 15 நாட்கள் சட்டபூர்வக் காவல்.

“சட்டவிரோதமாக் காவலில் வச்சிருந்ததை நீங்க நீதிமன்றத்தில் சொல்லவில்லையா இம்ரான்?”

“இல்லை. கோர்ட்டுக்குக் கொண்டுபோன அன்னைக்குத்தான் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தபோது கைது செஞ்சதா சொன்னா உடனே விட்டர்றதா சொன்னாங்க. விட்டிடுவாங்கன்னு சொன்னதால நானும் அப்படியே சொன்னேன்.”

நீதிமன்றக் காவலில் இருந்தபோதும் கூட, முதல் ஆறு மாதம் தனி செல்லில்தான் வைத்திருந்திருக்கின்றனர், ஆறு மாதத்திற்குப் பின் வழக்கு விசாரணை கர்நாடகப் போலீசிடமிருந்து சி.பி.அய்க்கு மாற்றப்பட்ட பிறகு சிறைக்குள் தனிக் கொட்டடி என்கிற நிலை தளர்த்தப்பட்டுள்ளது.

###

ஹைதராபாத்தில் ஒரு அற்புதமான மனித நேய வழக்குரைஞர். பெயர் முஸாபருல்லாஹ். இப்படியான பொய் வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு மிக்க தைரியமாகவும், இலவசமாகவும் வழக்காடும் மனிதருள் மாணிக்கம். அவர்தான் இம்ரானுக்காகவும், அவன் மீது தொடுக்கப்பட்ட UAPA மற்றும் இ.த.ச 120 ஏ, 144, 143, வெடிமருந்துச் சட்டம், பண மாற்றீடுக் குற்றச்சாட்டு முதலான எல்லா வழக்குகளிலும் சட்ட உதவி செய்துள்ளார்,

வழக்குரைஞர் முஸாபருல்லாவைப் பற்றிச் சொல்லும்போது இம்ரானின் குரல் கம்மியது.

###

சி.பி.ஐ இறுதியாக இம்ரானை அனைத்து வழக்குகளிலிருந்தும் விடுதலை செய்து Clean chit கொடுத்தது, ஆந்திர போலீஸ் அவன் மீது வீண்வழக்குப் போட்டதாக அறிக்கை அளித்தது.

பதினேழு மாதங்கள் 24 நாட்களுக்குப் பின் அவன் வீட்டுக்கு வந்தான்; அவனது வாழ்க்கையில் 17 மாதங்களும் 24 நாட்களும் மட்டுமல்ல, அவனது ICCI வங்கி வேலை…. இன்னும் என்னென்னவற்றையறவன் இழந்தான்.

அவன் தந்தை வி.ஆர்.எஸ் கொடுத்து அரசு வேலையிலிருந்து விலகினார். அவனது தங்கைக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பயங்கரவாதியின் குடும்பம்…..

“எனக்கும் கூடத்தான் ஒரு நல்ல வாழ்க்கைத்துணை கிடைக்க மாட்டேன் என்கிறது..”

###

மழை விட்டும் தூவானம் விடவில்லை என்பதுபோல. சி.பி.ஐ. க்ளீன் சிட் கொடுத்தபின்னும் கூட மோடியின் குஜராத் போலீஸ் ஏதோ விசாரணை என இம்ரானை அழைத்துச்செல்ல முயன்றுள்ளது. பதறிப்போன இம்ரான் ஹைதராபாத் போலீஸ் கமிஷனரிடம் ஓடியுள்ளான். கவலைப்படாதே உன்னை குஜராத் போலீஸ் கைது செய்யவோ, அழைத்துச்செல்லவோ அனுமதிக்க மாட்டோம் எனச் சொல்லி அனுப்பியுள்ளார்.

இப்போது நிலைமை எப்படி இம்ரான் எனக் கேட்டேன்’

“இப்போதும் கூட அப்பப்ப போலீஸ், உளவுத் துறை வந்து ஏதாவது விசாரிச்சிட்டுத்தான் இருக்கிறாங்க..”

“இப்ப என்ன வேலைல இருக்கீங்க?”

சிரித்தான் இம்ரான்.

“ஒரு இன்டிபென்டன்ட் ரிசர்ச்சரா ஒரு கார்பொரேட் நிறுவனத்தில வேல செஞ்சிட்டிருந்தேன், சில நாட்கள் முன்னாடி என்னோட படத்தோட கூகிள்ல யாரோ இதை எல்லாம் போட்டிருந்தாங்க. இப்ப அந்த நிறுவனம் என்ன வேலய விட்டு நிறுத்திட்டு..”

எங்கள் பேனலுக்கு முன் வருபவர்களுக்கு ஆங்கிலத்தில் பேச வருமானால் நான் கேள்விகளைக் கேட்பது எனவும், உருது அல்லது இந்தியில் மட்டுமே பேசக்கூடியவர்களானால் வழக்குரைஞர் ஷப்னம் கேட்பது எனவும் எங்களுக்குள் ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தோம். இம்ரான் மிக அழகான ஆங்கிலத்தில் என்னிடம் பேசிக் கொண்டிருந்தான், அவன் விடை பெற்றபோது அமைதியாகக் கவனித்துக் கொண்டிருந்த ஷப்னத்தின் கண்கள் கலங்கி இருந்தன. குரல் கம்மியியிருந்தது.

ஜெயகாந்தன் : சில நினைவுகள்

“மதவாத மற்றும் சாதீய சக்திகளுக்கு வாக்களிக்காதீர்” என்கிற எழுத்தாளர்களின் வேண்டுகோள் அறிக்கையில் கையொப்பம் பெற ஒவ்வொரு நண்பர்களாகப் பேசிக்கொண்டிருந்தேன். நான் மிகவும் மதிக்கும் மூத்த இதழாளர் துரைராஜ் அவர்கள் ஃப்ரன்ட்லைன் இதழிலிருந்து ஓய்வு பெற்று திருச்சியில் உள்ளார். அவருடன் உரையாடுவது எப்போதும் மனநிறைவைத் தரும் ஒரு அனுபவம். ஜெயகாந்தன் அவர்களின் நல்ல நண்பர்களில் ஒருவர் அவர்.

எந்தத் தயக்கமும் இன்றி அறிக்கையில் பங்கு பெற ஒப்புதல் அளித்த துரைராஜ் அவர்களுடனான உரையாடல் வழக்கம்போல ஜெயகாந்தன் அவர்களது உடல் நல விசாரிப்பை நோக்கி நகர்ந்தது. திடீரென எனக்கு ஒரு யோசனை. இந்த அறிக்கையில் முதல் கையொப்பதாரியாக ஜெயகாந்தன் இடம் பெற்றால் எப்படி இருக்கும்? எளிய மக்கள் எல்லோரையும் எழுதிய, நேசித்த அவருக்கு இதில் கையொப்பமிட என்ன தயக்கம் இருக்க இயலும்?

“செய்யலாமே”, உடனே போய்ப் பார்க்க உற்சாகம் அளித்தார் துரைராஜ். ஆனால் ஜெயகாந்தனைத் தனியாகப் போய்ப் பார்க்கும் தைரியம் எனக்கிருந்ததில்லை. இதுவரையிலும் மேடைகளில் மட்டுமே அவரைக் கண்டவன் நான். நான் தயங்கியதைக் கண்ட அவர் சொன்னார்: “உங்களை அவருக்கு நல்லா தெரியும். தினமணியில் வந்த உங்களின் காந்தி பற்றிய கட்டுரையைப் படிச்சிட்டு, மார்க்ஸ் காந்தி பற்றி எழுதினதை எல்லாம் தொகுத்து புத்தகமாப் போடணும்னு சொல்வாரே..” என்றார்.

துரைராஜ் இதைச் சொல்வது இரண்டாம் முறை. முதல்முறையைப் போலவே இப்போதும் நெகிழ்ந்து நீரானேன். எனது எழுத்துப் பணிக்கு இதைத்தவிர வேறென்ன பெரிய விருது எனக்குக் கிடைத்து விட இயலும்? அப்படி அவர் சொன்னதற்குப் பின் காந்தி பற்றி ஒரு முழு நூல் நான் எழுதியுள்ளது அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை,

######

எங்கள் ஊருக்கு (பாப்பாநாடு) அப்போதெல்லாம் ‘குமுதம்’, ‘ஆனந்த விகடன்’, ‘தினமணி கதிர்’ எல்லாம் தபால் பார்சல்களாகத்தான் வரும். பஞ்சநாதம் என்பவர் ஏஜன்ட். நாளிதழ்கள் பஸ்களில் பார்சாலாக வரும். குமுதம், விகடன், கதிர் தவிர தமிழ்வாணனின் ‘கல்கண்டு’ ஆகிய வார இதழ்களையும் ‘தினமணி’, ‘எக்ஸ்பிரஸ்’ நாளிதழ்களையும் வீட்டுக்கு வரவழைப்பார் அப்பா. கருத்துக்கள் பிடிக்காத போதும் அன்றைய தினமணி ஆசிரியர் ஏ.என்.சிவராமனின் ‘கணக்கன்’ கட்டுரைகளை தினம் அவர் படிக்கத் தவற மாட்டார். அப்புறம் ‘சோவியத் நாடு’, ‘தாமரை’ ஆகியனவும் வரும். ராமசாமி அவர்களின் ‘நாத்திகம்’ இதழும் வரும். ‘எக்ஸ்பிரசை’ எனக்கெனவே அவர் வாங்கியபோதும் நாளிதழ் படிப்பதில் அப்போது எனக்கு ஆர்வமில்லை.

‘குமுதம்’, ‘விகடன்’ ஆகியவைதான் நான் விரும்பிப் படிப்பவை. அழகிய படங்களுக்காக ‘சோவியத் நாடு’ இதழைப் படித்துவிட்டுக் கடையில் போடாமல் பாதுகாத்து வைத்திருப்பேன். வியாழன், சனி என நினைவு. இந்த நாட்களில்தான் அப்போது குமுதம், விகடன் வரும். போஸ்ட் ஆபீசில் காத்திருப்பேன். பஞ்சு சற்றுத் தாமதமாகத்தான் வருவார். பார்சலைப் பிரித்தவுடன் தரவும் மாட்டார். அவர் ஒரு ‘சீல்’ வைத்திருப்பார். “பஞ்சநாதம்/குமுதம், விகடன் ஏஜன்ட்/திருமங்கலக் கோட்டை காலனி” என ஒவ்வொன்றிலும் முத்திரை பதித்த பின்தான் சிரித்துக் கொண்டே இதழை என்னிடம் நீட்டுவார்.

உடனே வீட்டுக்குப் போய்விட மாட்டேன். ஒரு மரத்தடியில் நின்று தொடர்கதைகளை எல்லாம் படித்துவிட்டுத்தான் போவேன். வீட்டில் அம்மாவும், பெரிய தங்கையும் காத்திருப்பார்கள். சாண்டில்யன் (யவன ராணி), சேவற்கொடியோன், மணியன், ரா.கி.ரங்கராஜன் (இது சத்தியம்), தமிழ்வாணனின் துப்பறியும் கதைகள் (பத்து பேர்கள் தேடிய பத்துக் கோடி), சி.சுப்பிரமணியத்தின் பயணக் கட்டுரைகள் (நான் சென்ற சில நாடுகள்), இவற்றோடு பின்னாளில் தி.ஜானகிராமனின் ‘செம்பருத்தி’யையும் கூட நான் இந்த இதழ்களில் (தினமணி கதிர்) தொடர்கதையாகத்தான் படித்தேன். கோபுலுவின் சித்திரங்களுடன் கதிரில் ‘செம்பருத்தி’யை வாசித்தது கண்முன் நிற்கிறது.

அப்போது விகடனில் ஒவ்வொரு வாரமும் ஒரு முத்திரைக் கதை வரும். அந்த வயதில் அந்தக் கதைகள் எனக்கு அவ்வளவாகப் பிடிப்பதில்லை. அப்பா என்.சி,பி,எச் சிலிருந்து வாங்கிவரும் ருஷ்ய நாவல்களையும் அவ்வளவாகப் படிக்க ஆர்வம் இருப்பதில்லை. அனாலும் தயாரிப்பு நேர்த்தியில் மயங்கி அவற்றைப் பத்திரமாக வைத்திருப்பேன். விகடன், குமுதம் ஆகியவற்றில் வரும் தொடர்கதைகள் ஏற்படுத்திய ஆர்வம் என்னை துப்பறியும் நாவல்கள் படிப்பதற்கு இட்டுச் சென்றது. எங்கள் ஊர் நூலகத்திலிருந்து ஒன்றிரண்டை எடுத்து வந்து நான் படிப்பது அப்பாவுக்குப் பிடிக்காது. அம்மாவிடம் சத்தம் போடுவார். “வடுவூர் துரைசாமி அய்யங்கார் நாவல்களையாவது படிக்கச் சொல்லு. கண்ட துப்பறியும் நாவலையும் படிக்க வேணாம்னு சொல்லு” எனச் சத்தமும் போடுவார். கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ (மணியத்தின் படங்களுடன்), அரு.இராமநாதனின் ‘வீரபாண்டியன் மனைவி’, இவற்றை எல்லாம் கொண்டு வந்து தந்து, “இதையாவது படி, கொஞ்சம் வரலாறாவது தெரிஞ்சுக்கலாம்’ என்பார். அதையெல்லாம் நான் வேகமாகப் படித்து விடுவேன்.

மின் விசிறி, மேசை, நாற்காலி இந்த வசதிகள் எதுவும் இல்லாத அந்த வீட்டில் இவற்றை எல்லாம் வெறி கொண்டு படித்துத் தீர்த்த காலம் அது, அப்படி ஏதோ ஒன்றைப் படித்துக் கொண்டிருந்த போதுதான் பட்டென்று என் முன் விழுந்தது ஒரு விகடன். எதிரே நின்றிருந்த அப்பா கோபமாக. “இதைப் படிச்சியா நீ? படிச்சிருக்க மாட்டே ! இந்த மாதிரி நல்ல கதைகளைப் படிடா. கண்டதைப் படிக்காதேடா” என்று கத்தி விட்டு நகர்ந்தார். அவர் அகன்றவுடன் அதை எடுத்துப் பார்த்தேன். ஜெயகாந்தனின் “யாருக்காக அழுதான்”.

அது ஒரு குறு நாவல். அப்போதெல்லாம் ஆனந்த விகடனில் இப்படி நிறைய குறுநாவல்கள் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு இது போலச் சிறப்பிதழ்களில் வரும். சற்றுப் பெரிதாக இருப்பதாலோ என்னவோ அவற்றையும் நான் ஆர்வமாகப் படிப்பதில்லை. சரி இதைப் படித்துத்தான் பார்ப்போமே எனப் புரட்டத் தொடங்கினேன்.

அது எனக்குப் புதிய அனுபவமாக இருந்தது. அப்படியான அநுபவங்கள் மீண்டும் மீண்டும் எனக்குத் தேவையாகவும் இருந்தன. ஜெயகாந்தனின் நூல்களை எல்லாம் தேடித் தேடிப் படித்தேன். அப்பாவின் சேகரங்களில் இருந்த சரத்சந்திரர், காண்டேகர், அப்புறம் அப்பா வாங்கித் தந்திருந்த ருஷ்ய நாவல்கள்… எனக்கு ஒரு புதிய உலகம் திறந்தது,

அந்தச் சின்ன வயதில் ஜெயகாந்தன் மீது எனக்கு ஒரு பித்து ஏற்பட்டிருந்தது, அவர் இந்தக் காலகட்டத்தில் தொடர்கதைகள் எழுதத் தொடங்கினார், தினமணி கதிரில் நிறைய எழுதினார். ‘ரிஷிமூலம்’, ‘சமூகம் என்பது நாலு பேர்’ எல்லாம் கோபுலுவின் படங்களுடன் கதிரில்தான் வந்தன. ஆனந்த விகடனில் அப்போது வந்த அவரது ‘அக்கினிப் பிரவேசம்’ (படம்: மாயா) என்கிற சிறு கதை மிகப் பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியது, அதற்கு எதிராக மாற்றுக் கதை ஒன்றையும் யாரோ எழுதினார்கள். பின் ஜெயகாந்தன் அதன் தொடர்ச்சியாகச் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலைத் தொடர்கதையாக எழுதினார். அந்தக் கால்கட்டத்தில் அவர் எழுதிய ‘அந்தரங்கம் புனிதமானது’ வும் .’சமூகம் என்பது நாலு பேர்’ உம் என் மன விசாலத்திற்குப் பெரிதும் காரணமாயின, ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’, ‘பாரீசுக்குப் போ’ முதலியன வெறுப்பற்ற ஒரு உலகம் குறித்த கனவுகளை என்னில் விதைத்தன.

சொன்னால் நம்பமாட்டீர்கள், சொல்வதற்கு வெட்கமாகவும் உள்ளது. பத்திரிக்கைகளில் வரும் ஜெயகாந்தனின் படங்களை மெழுகு வைத்துத் தேய்த்துப் புத்தகங்களில் பிரதி செய்து கொள்வேன். அப்படி ஒரு நூல் என்னிடம் இன்றும் உள்ளது. ‘மார்க்ஸ் ஏங்கல்ஸ் நினைவுக் குறிப்புகள்’ என்கிற ருஷ்ய மொழிபெயர்ப்பு நூல் அது. மார்க்ஸ் இறந்தவுடன் அவரது அக்காலத்திய நண்பர்கள் எழுதியவை உள்ளிட்ட பல கட்டுரைகளும் மார்க்ஸ் ஏங்கல்சின் மிக அழகான படங்களும் நிரம்பிய நூல், வில்லியம் லீப்னெக்ட் போன்றோரின் கட்டுரைகளை முதன் முதலில் அதில்தான் பார்த்தேன். அந்தப் புத்தகத்தில் நான் மெழுகுப் பிரதி செய்த ஜெயகாந்தனின் படம் இன்னும் உண்டு.

தஞ்சாவூர் பேருந்து நிலையத்தின் (இப்போது பழைய பஸ் ஸ்டான்ட்) வெளிப்புறத்தில்  அரை வட்ட வடிவில் அன்று (1965, 66) ஒரு என்.சி.பி.எச் புத்தகக் கடை உண்டு. நான் அப்போது சரபோஜி கல்லூரி மாணவன். ஊருக்குப் போகும்போதும் வரும்போதும் அங்கு சென்று காசிருந்தால் ரசியப் புத்தகங்கள் வாங்குவேன். ஒரு பெரியவர் அங்கிருப்பார், ஜெயகாந்தன் புத்தகங்கள் அங்கிருக்காது. அப்போது மதுரை மீனாட்சி புத்தகாலயம்தான் ஜெயகாந்தன் நூல்களை வெளியிட்டு வந்தது, அந்தப் பெரியவரிடம் ஜெயகாந்தன் புத்தகங்கள் பற்றி விசாரித்தபோது அவர் ரொம்ப எதிர் மறையாக ஏதோ சொன்னார். “அவன் கம்யூனிஸ்ட் கட்சியில இருந்தவரை ஒழுங்கா எழுதிட்டு இருந்தான்; இப்ப கண்ட அசிங்கங்களையும் எழுத ஆரம்பிச்சுட்டான்..” என்றார். இது ஜெயகாந்தன் பற்றி எனக்குக் கிடைத்த முதல் எதிர்மறை விமர்சனம், ஆனால் இது ஜெயகாந்தன் பற்றிய எதிர்மறைக் கருத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக கம்யூனிஸ்டுகளின் பார்வை மீதுதான் ஒரு எதிர்மறைப் பார்வையைத்தான் என்னிடம் ஏற்படுத்தியது. இங்குதான் நான் தஞ்சை பிரகாஷையும் முதலில் சந்தித்தது. அவரைச் சந்திக்கும் யாரும் யாரும் எளிதில் அவருக்குச் சீடராகிவிடுவார்கள். அவருக்கும் அவரது பேச்சுக்கும், அவரது ஆழமான இலக்கியப் பரிச்சயத்திற்கும் யாரையும் வசீகரிக்கும் ஆற்றல் உண்டு, ஆனால் முதல் உரையாடலிலேயே அவர் ஜெயகாந்தனை எடுத்தெறிந்து பேசியது என்னை அவரிடமிருந்து இறுதி வரை விலக்கி வைத்தது.

1967. காங்கிரஸ் வீழ்த்தப்பட்டு தி.மு.க ஆட்சி உருவானது. ஜெயகாந்தனும் கவிஞர் கண்ணதாசனும் அப்போது தீவிரமாகக் காங்கிரசை ஆதரித்துப் பிரச்சாரம் செய்து வந்தனர். காங்கிரசை எனக்குப் பிடிக்காவிட்டாலும் இந்த இருவரையும் எனக்குப் பிடிக்கும். காமாராசரின் காலம் அது. ஜெயகாந்தனை ஆசிரியராகக் கொண்டு அடுத்தடுத்து இரண்டு நாளிதழ்கள் வந்தன; முதலில் ‘ஜெயபேரிகை’, அப்புறம் ‘ஜெயக்கொடி’. நான் அப்போது சரபோஜி கல்லூரி விடுதியில் இருந்தேன். தினந்தோறும் இரவில் விடுதி மேலாளர் நகரத்திற்குச் சென்று காய்கறிகள் வாங்கி வருவார். அவரிடம் காசு கொடுத்து ஜெயபேரிகை வாங்கி வரச் சொல்வதுண்டு. அதில் வரும் ஜெயகாந்தன் கட்டுரைகளைப் படித்து நறுக்கி வைத்துக் கொள்வேன்.

அப்படித்தான் ஒருமுறை, அடுத்த நாள் காலை எனது பட்ட வகுப்பு தமிழ்த் தேர்வு. நான் தஞ்சையில் மேல வீதியும் கிழக்கு வீதியும் சந்திக்கும் முனையில் நடைபெற்றுக் கொண்டிருந்த காங்கிரஸ் பிரச்சாரக் கூட்டமொன்றில் ஜெயகாந்தனின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

1968ல் நான் சென்னை மாநிலக் கல்லூரியில் எம்.எஸ்சி படித்துக் கொண்டிருந்தபோது அன்றைய முதல்வர் அண்ணா இறந்து போனார், பெருந்திரளான மக்கள் கூட்டம். எங்கும் அண்ணா புகழ். அண்ணாவை ஒரு மக்கள் தலைவர் என்கிற நிலையிலிருந்து விமர்சனகளுக்கு அப்பாற்பட்ட ஒரு திரு உருவாகக் கட்டமைத்து அதன் மூலம் ஒரு நிரந்தர அரசியல் பலனைப் பெறும் முயற்சியைக் கருணாநிதி செவ்வனே செய்தார், அப்போது தமிழகம் முழுவதும் இதைக் கடுமையாக விமர்சித்துப் பேசி வந்தார் ஜெயகாந்தன். “நான் அண்ணாத்துரையை விமர்சிக்கிறேன்” என்கிற தலைப்பில் ஒரு குறு நூலாகவும் அந்தப் பேச்சு அப்போது வெளி வந்தது. அப்படிச் சென்னையில் நடைபெற்ற அத்தனை கூட்டங்களிலும் நான் கலந்து கொண்டேன்.

ஜெயகாந்தனை ஆசிரியராகக் கொண்டு வந்த நாளிதழ்கள் மிகக் குறுகிய காலத்தில் நின்று போயின, அவரது மேடைப் பிரச்சாரங்களும் குறைந்தன. ‘கண்ணதாசன்’ என்கிற பெயரில் ஒரு இலக்கிய இதழை அப்போது கண்ணதாசன் நடத்திக் கொண்டிருந்தார். கண்ணதாசனை மதிப்பிடுகிறவர்கள் அவரது திரை இசைப் பாடல்களை விதந்து பேசுவதே வழக்கம். இந்த இதழ் மூலம் வெளிப்பட்ட அவரது பங்களிப்பை யாரும் பேசுவதில்லை. அரசியல் இல்லாத அந்த முழு இலக்கிய இதழில்தான் ஜெயகாந்தனின் இன்னொரு விவாதத்திற்குரிய முக்கிய படைப்பான ‘சினிமாவுக்குப் போன சித்தாளு’ நாவல் தொடர்கதையாக வந்தது. அதன் பின் ஜெயகாந்தனை ஆசிரியராகக் கொண்டு ‘ஞானரதம்’ வெளி வந்தது.

ஜெயகாந்தனின் வளர்ச்சியில் இது மூன்றாவது நிலையின் தொடக்கம். ஒரு கம்யூனிஸ்டாகத் தன் எழுத்துப் பணியைத் தொடங்கிய அவர் ஆனந்த விகடன், தினமணி கதிர் முதலான ஜனரஞ்சக இதழ்களில் பெரும் பிரபலம் பெற்றபோது, அவர் மார்க்சீயத்திலிருந்து விலகுகிறார், மார்க்சீயத்திற்கு அப்பாற்பட்ட விஷயங்களில் கவனம் கொள்கிறார் என்கிற விமர்சனங்கள் மட்டுமே இருந்தன. இப்போதோ அவர் மார்க்சீய விரோதியாகி விட்டார் என்கிற அளவிற்கு அவரது இந்தக் காலகட்ட எழுத்துக்கள் விமர்சனங்களை எதிர் கொண்டன. ‘ஜெய ஜெய சங்கர’, ‘ஊருக்கு நூறு பேர்’, ‘ஹரஹர சங்கர’ முதலியன அவரது இக்காலகட்டப் படைப்புகளில் சில.

ஜெயகாந்தனின் எழுத்துக்களை நானும் விமர்சித்துள்ளேன். இன்றும் விமர்சனகள் உண்டு. ஆனால் ஒன்றை என்னால் உறுதியாகச் சொல்ல இயலும். அவரது பிற்காலத்து இந்த எழுத்துக்களும் கூட அவற்றை வாசிக்கும் யாரிடமும் மார்க்சீயம் முன்வைக்கும் பொதுமைச் சிந்தனைகளின்பால் இம்மியும் வெறுப்பை ஏற்படுத்தி விடா. மாறாக உலகை, மக்களை, எல்லாத் தரப்பு மக்களையும் வெறுப்பின்றி நேசிக்கும் மனநிலையைத்தான் அவை விதைக்கும். வெளிப்படையாகவும், மிக நுணுக்கமாகவும் மனிதர்கள் மீது வெறுப்பைக் கட்டமைக்கும் ஜெயமோகன் போன்றோரிடமிருந்து எட்ட இயலாத உயரத்தில் ஜெயகாந்தன் நிற்கும் புள்ளி இதுதான்.

######

ஜெயகாந்தனின் எழுத்துக்களைப் போலவே அவரது பேச்சுக்களாலும் வசீகரிக்கப்பட்டவன் நான். கடைசியாக நான் அவரது உரையைக் கேட்ட நிகழ்வு எண்பதுகளின் பிற்பகுதியில் அமைந்தது. அப்போது அன்ணா சாலை என்.சி.பி.எச் விற்பனை நிலையம் இப்போதுள்ள இடத்திற்கு நேரெதிராக இருந்தது. அதன் மாடியில் இருந்த ஒரு சிறு அறையில் அக்கூட்டம் நடை பெற்றது. சோவியத் யூனியனின் இறுதி அதிபர் கோர்பசேவ் ‘ப்ரெஸ்டோரிகா’, “க்ளாஸ்நாஸ்ட்” என சோவியத் யூனியனின் இரும்புத் திரையை மட்டுமல்ல அதன் சோஷலிச அடித்தளைத்தையும் அடித்து நொறுக்கிக் கொண்டிருந்த காலம் அது. உலகெங்கிலும் அதுவே அன்றைய முக்கிய விவாதம். ‘ரசியாவில் நடப்பதென்ன?’, ‘மார்க்சீயத்தின் பெயரால்’ என்கிற எனது இரு முக்கிய நூல்கள் அக்காலகட்ட விவாதங்களினூடாக வெளிப்போந்தவைதான். நான் அப்போது நக்சலைட் (இப்போதைய மாஓயிஸ்ட்) கட்சியிலிருந்து தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தேன், மாஓயிஸ்ட் கட்சி மிகக் கடுமையாக கோர்பசேவின் “சீர்திருத்தங்களை” எதிர்த்து வந்தது. என்.சி.பி.எச் நிறுவனத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள சி.பி.ஐ கட்சியோ இதுபற்றியெல்லாம் எந்தக் கவலையும் இல்லாமல் வழக்கம்போல சோவியத் யூனியனையும் கோர்பசேவையும் ஆதரித்து வந்தது.

அந்தக் காலகட்டம் மிக முக்கியமான ஒன்று.. உலகெங்கிலும் கோர்பசேவின் நடவடிக்கைகள் பெரும் விவாதங்களை ஏற்படுத்தி இருந்தன. கம்யூனிஸ்டுகள் மத்தியிலும் ஏகப்பட்ட குழப்பங்கள். இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவெனில் கம்யூனிஸ்டுகள் மத்தியில் இன்னும் அந்தக் குழப்பம் தீர்ந்தபாடில்லை என்பதுதான்.

அப்போது நான் ஒரு ‘பனிஷ்மென்ட் ட்ரான்ஸ்ஃபரில்’ குடியாத்தம் அரசு கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்தேன், கல்லூரி ஆசிரியர் கழகத்தில் நான் மாநிலத் துணைத் தலைவருங் கூட. ஒரு மிகப் பெரிய போராட்டத்தை அகில இந்திய பல்கலைக் கழக ஆசிரியர் சங்கம் (AIFUCTO) நடத்திக் கொண்டிருந்தது. சங்கத்தின் பிற தலைவர்கள் எல்லோரும் டெல்லி சென்று விட்டனர். திருவல்லிக்கேணியில் ஒரு வாடகைக் கட்டிடத்தில் இருந்த எங்கள் சங்க அலுவலகத்திற்கு நாந்தான் பொறுப்பு. போராட்ட நேரம். எந்த நேரமும் ஏதாவது வேலை இருக்கும். அந்தச் சூழலில்தான் யாரிடமோ பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு நான் ஜெயகாந்தனைக் கேட்கப் புறப்பட்டு விட்டேன்.

அண்ணாசாலை என்.சி.பி.எச் அலுவலகத்தின் சிறிய மாடியில் நடந்த கூட்டத்தில்தான் நான் ஜெயகாந்தனைக் கடைசியாகவும் நெருக்கமாகவும் பார்த்தது. சோவியத் யூனியனின் கம்யூனிச “இரும்புத்திரையைக் கிழித்து வெளிப்படைத் தன்மையை நிலைநாட்டிய” கோர்பசேவின் GLASNOST குறித்து நானும் நிறைய எழுதியுள்ளேன் ஜெயகாந்தன் அன்று அதை வேறு விதமாகச் சொன்னார்.

” இரகசியம் என்பது போல மானுடத்திற்கு எதிரான பண்பு எதுவும் இருக்க இயலாது; நான்கு பேர் இருக்கும் ஒரு அறையில் யாரேனும் இருவர் எல்லோருக்கும் தெரியும் மொழியிலன்றி அவர்களுக்கு மட்டுமே புரிந்த மொழியில் பேசிக் கொள்வதைக் காட்டிலும் அநாகரிகமான செயல் உலகில் வேறெதுவும் இருக்க இயலாது. இரகசியம் அந்நியம்; இதை இன்று கோர்பசேவ் உடைத்துள்ளார். இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.”

#######

ஜெயகாந்தனைத் தனியே சென்று சந்திப்பதில் நான் காட்டிய தயக்கத்தைக் கண்டு துரைராஜ் அதற்கொரு வழியையும் சொன்னார். “இந்தியா டுடே இதழில் வேலை செய்கிறாரே மணி அவரிடம் சொல்றேன், நீங்க அவரோடு போய்ப்பாருங்க. மணி ஜே.கேயின் உறவினரும் கூட”

மணியை எனக்கும் தெரியும். ஒரு பத்திரிக்கையாளர் என்பதைத் தாண்டி அவர் ஒரு முறை சரத் சந்திரர் குறித்து என்னிடம் உரையாடியதிலிருந்து அவர் ஒரு இலக்கிய மனம் உடையவர் என்பதையும் நான் அறிவேன்.

அவரைத் தொடர்பு கொண்டு நான் ஜெயகாந்தனை இந்த அறிக்கை தொடர்பாகச் சந்திக்க வேண்டும் என்பதைச் சற்றுத் தயக்கத்துடனேயே கூறினேன். ஜெயகாந்தன் படுத்த படுக்கையாக இருப்பதையும், இந்த நேரத்தில் அவர் நம் கோரிக்கை குறித்துப் பேசி அறிக்கையில் கையொப்பம் இடுவதெல்லாம் சாத்தியமில்லை எனவும் மணி சொன்னபோது இந்தக் கோரிக்கையை அவரிடம் வைத்ததற்காக நான் வெட்கம் கொள்ள நேர்ந்தது.

சமாளித்துக் கொண்டு சொன்னேன், “பரவாயில்ல சார். நீங்க சமீபத்தில எப்பவாவது அவரைப் பார்க்கப் போனா சொல்லுங்க. ஒரு தடவை நான் அவரைப் பாக்கணும்” என்றேன்.

வரும் 24 அன்று ஜெயகாந்தனின் பிறந்த நாள். அன்று போகலாம் எனச் சொல்லியுள்ளார்.

ஆவலாகக் காத்திருக்கிறேன். அன்றைக்கு “மார்க்ஸ் ஏங்கல்ஸ் நினைவுக் குறிப்புகள்” நூலை எடுத்துச் செல்ல வேண்டும். அதில் நாற்பது ஆண்டுகளுக்கு முன் நான் பதித்திருந்த அவரது சிறு புகைப்படத்தின் மெழுகுகுப் பதிவைக் காட்டி, ஒரு பூங்கொத்தையும் தந்து வணங்கி வர வேண்டும்.

இன்றைய தகவல் யுகமும் இளைஞர்களும் ஒரு குறிப்பு

பதினைந்து நாட்களுக்குப் பின் இன்று குடந்தையில் கொஞ்ச தூரம் வாக்கிங் போனேன். அங்கு ஒரு கடையில் சூடாக வடை சாப்பிடுவது வழக்கம். அந்தக் கடையில் நான்கைந்து பேர் தேநீர் குடித்துக் கொண்டிருந்தனர். மூன்று பையன்கள் அரட்டை அடித்துக் கொண்டிருந்தனர். மாணவர்கள் இல்லை. படிக்கிற வயதில் வேலைக்குப் போக நேர்ந்த விடலை இளைஞர்கள். அதில் ஒருவனை எனக்குத் தெரியும். அருகிலுள்ள முடி திருத்தும் கடையில் வேலை செய்துகொண்டிருக்கிறான். அவனிடம் இன்னொருவன் ஸ்பைக் வைத்துத் தலை சீவும் வித்தையைக் கேட்டான். அவன் எங்கே என்ன மாதிரி ஜெல் வாங்க வேண்டும், அதிலுள்ள ‘வெரைடி’கள் பற்றி எல்லாம் விவரமாகச் சொல்லிக் கொண்டிருந்தான். மூன்றாமவன் சொன்னான்: “ஏய், அப்டி ஸ்பைக் வச்சு ஒரு போடோ எடுத்து ஃபேஸ் புக்ல போடு.. போட்டியன்னா ஃபேஸ் புக் ஓனர் மாற்கு வே அசந்துடுவாரு..” என்றான். “ஃபேஸ் புக்ல போட்டு எல்லாரையும் ஒரு அசத்து அசத்தத்தாண்டா கேக்குறேன். சும்மா நூறு லைக்காவது விழுவும் பாரு..”

அங்கே டீ குடித்துக் கொண்டிருந்த இன்னொருவரையும் நான் அடிக்கடி பார்த்துள்ளேன். வயதானவர். எங்கள் வீட்டில் ஒரு குழாய் ரிப்பேர் செய்ய வந்த ப்ளம்பருக்கு உதவியாளராக ஒருமுறை வந்துள்ளார். சில நேரங்களில் வாடகை டயர் மாட்டு வண்டி ஒன்றையும் ஓட்டி வருவார் ஒரு கைலி, பனியனுடன் டீ உறிஞ்சிக் கொண்டிருந்தார். காலில் ஏதோ அடிபட்டிருந்தது. குச்சி ஊன்றி நின்று கொண்டிருந்தார்.

அந்தப் பையன்களைப் பார்த்து அவர் சொன்னார் : “டெக்கான் ஹைதராபாத்தை நம்ம சன் டிவி காரங்க வாங்கிட்டாங்க..”. திரும்பி என்னைப் பார்த்தும் ஒரு புன்னகையை வீசினார். எனக்கு கிரிக்கெட் விஷயங்கள் தெரியாது, ஐ.பி.எல் பற்றியும் அதிகம் தெரியாது என்பதை அவர் அறியார். நிச்சயம் தெரிந்திருக்கும் என்பது அவர் நம்பிக்கை. அந்த நம்பிக்கை கெடக்கூடாது என நானும் புன்னகைத்து வைத்தேன்.

முடி வெட்டுகிறவர்கள், மாட்டு வண்டி ஓட்டுபவர்கள் எல்லாம் ஃபேஸ்புக்கில் அக்கவுன்ட் வைத்துள்ளார்கள், ஐ.பி.எல் பற்றிப் பேசுகிறார்கள் எனச் சொல்வதல்ல என் நோக்கம். உலகிலேயே அதிகம் இன்டெர்நெட் பாவிப்பதில் இரண்டாம் இடத்தில் இந்தியா உள்ளது என்றாலும் அது இங்குள்ள மக்கள் தொகையால் வந்த எண்ணிக்கைப் பெருக்கம். இன்னும் கூட 10 சதம் மக்களே நம் நாட்டில் கணினி பாவிக்கின்றனர்.

ஆனாலும் இதுபோன்ற விடயங்களில் ஒரு ஜனநாயகப்பாடு இங்கே நடந்துள்ளது என்பதை யாரும் மறுத்துவிட இயலாது. தொழில் நுட்பம் இதில் பெரும்பங்கு வகித்துள்ளது. தொழில் நுட்பத்திற்கு இரண்டு பண்புகள் உண்டு. ஒன்று அது சமூகத்தை ஜனநாயகப்படுத்தும்; மற்றது அது தன்னைப் புறக்கணிப்போரைக் கடுமையாகப் பழி வாங்கிவிடும். கணினி அச்சுக் காலத்தில் ஒரு அச்சக உரிமையாளர் ஈய எழுத்துக்களைக் கோர்த்துக் கொண்டிருக்கிறார் என வைத்துக் கொள்ளுங்கள், அவர் கதி என்னாகும்?

குக்கிராமங்களில் உள்ளோரும் கேபிள் டிவி, செல் போன் மூலம் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தகவல்கள் வந்து கொண்டே உள்ளன. ஒரு ஏழு, எட்டாயிரம் ரூபாயில் ஒரு ஆன்ட்ராய்ட் செல் வைத்திருந்தால் யாரையும் சார்ந்திராமல் ஒரு ஃபேஸ் புக் அக்கவுன்ட் தொடங்கி விடலாம். பேஸ்புக்கில் பலமாதிரி செய்திகள் வந்து கொண்டே உள்ளன. டி.வியில் 24 மணி நேரமும் ஏகப்பட்ட செய்திகள். ‘நீயா நானா’ போன்ற நிகழ்ச்சிகளில் பல்வேறு உலக விஷயங்கள் அலசப்படுகின்றன.

ஓரளவு தகவலறிந்த சமூகமாக நாம் உருப்பெற்றுக்கொண்டே உள்ளோம்.

ஆனால் ஒன்று.

ஏகப்பட்ட தகவல்கள் நம்மை இப்படி வந்தடைந்தபோதும் இவை பெரும்பாலும் எல்லாம் ஒரு contemporary தன்மையதாகவே உள்ளன. வரலாற்று ரீதியான தகவல்களாக அவை இருப்பதில்லை. ஆர்வமுள்ளவர்கள் வரலாற்று ரீதியாகவும் நவீன நுட்பங்களின் உதவியால் நிறையத் தெரிந்துகொள்ள முடியும் என்றாலும் வந்து சேர்பவை மிகவும் சமகால விஷயங்கள்தான். இந்த சமகாலத் தகவல்களால் கட்டப்பட்ட சமூகமாகவே நாம் உள்ளோம்.

ஒரு இருபதாண்டுகளுக்கு முந்திய வரலாறும் கூட தெரியாதவர்களாகவே நம் சராசரி இளைஞர்கள் இருக்கின்றனர்.

இன்று மோடி அலை வீசுவதன் பின்னணிகளில் இதுவும் ஒன்று.

மோ டி குரூஸ்…

இரண்டு மாதங்களுக்கு முன்னால் குடந்தையில் ஒரு பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய மாநாடு. தொடக்க நிகழ்ச்சியில் பேச அழைக்கப்பட்டிருந்தேன். அழைப்பிதழைப் பார்த்தவுடன் அதிர்ச்சி. என்னோடு அந்த அமர்வில் பேச இருந்தவர்களில் ஒருவர் இந்துத்துவ மேடைகளில் பேசித் திரிபவரும், அவர்களால் “நெய்தல் நெருப்பு” (!) என்றெல்லாம் காவடி தூக்கப்படுபவருமான ஜோ டி குருஸ். அவரோடு மேடையைப் பகிர்ந்து கொள்வதை நினைத்தால் கொடுமையாக இருந்தது. போகாமல் இருந்து விடலாமா என்று கூட நினைத்தேன். ஆனாலும் என்னை அழைத்திருந்த பெரியவர் கவிக்கோ போன்றோரை நினைத்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்.

மேடையில் அந்த நபர் குருஸ் உட்கார்ந்திருந்த பக்கம் கூட நான் திரும்பவில்லை. எனக்கு முன்பாக அவர் பேச அழைக்கப்பட்டார். அங்கு திரளாகக் கூடி இருந்த முஸ்லிம்களைப் பார்த்து “சாச்சாமார்களே, சாச்சிமார்களே..” என விளித்து அவர் பேசத் தொடங்கினார். அவர்கள் ஊரில் முஸ்லிம்களை அப்படித்தான் உறவு முறை சொல்லிக் கூப்பிடுவார்களாம். அதிகம் பேசவில்லை. ஒரு சம்பவத்தைப் பகிர்ந்துவிட்டு அமர்ந்தார்.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் ஒரு நாள், ஒரு ஷிப்பிங் நிறுவனத்தில் வேலை செய்து கொண்டிருந்த அவர் ஒரு சூட் கேஸ் நிறைய பணத்தைச் சுமந்து கொண்டு மும்பையில் ஒரு தெரு வழியே சென்று கொண்டிருந்தாராம். அவர் போய்த்தான் ஊழியர்களுக்கு ஊதியம் பிரித்து அளிக்கப்பட இருந்ததாம். அப்போது முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் அந்தப் பகுதியில் அவர்களைத் தாக்கிக் கொல்ல ஆயுதங்களுடன் வந்த இந்துத்துவ சிவசேனைக் கும்பல் ஒன்று குரூசை நோக்கி ஓடி வந்ததாம். மொழி தெரியாத இவர் அஞ்சி ஓடி ஒரு பெரிய சாக்கடைக் குழிக்குள் வீழ்ந்து எழ முடியாமல் கிடந்துள்ளார். அந்த வீதியில்முஸ்லிம் ஆண்கள் யாரும் இல்லை. கலவரக்காரர்களைக் கண்டு பயந்தோடி இருப்பார்கள் போல. அநேகமாக குரூஸ் விவரித்த அந்தக் கலவரம் பாபர் மசூதி இடிப்பை ஒட்டி மும்பையில் நடந்த வன்முறையாக இருக்கலாம்.

வன்முறையாளர்கள் அடுத்த இலக்கைத் தேடிப் போனபின் அங்கிருந்தமுஸ்லிம் பெண்கள் குரூசைத் தூக்கிக் காப்பாற்றியுள்ளனர். தண்ணீர்ப் பற்றாக்குறை மிக்கஅப்பகுதியில் எல்லோர் வீட்டிலிருந்தும் குடங்களில் தண்ணீரைக் கொண்டுவந்து ஊற்றி அவர்மீது படிந்திருந்த மலத்தை எல்லாம் கழுவி இருகிறார்கள். அன்று இரவு அவருக்குப் பாதுகாப்பும் அளித்து காலையில் அவர் கொண்டு வந்திருந்த பணப் பெட்டியையும் கொடுத்துப் பத்திரமாக அனுப்பியுள்ளனர் அந்த முஸ்லிம் சாச்சிமார்கள்.

இதைச் சொல்லிவிட்டு அவர் இறங்கியபோது, என்ன இருந்தாலும் ஒருஎழுத்தாளன், கல்லுக்குள்ளும் ஈரமிருக்கும். இந்துத்துவ மேடைகளில் தோன்றுவதாலேயே இவரை இந்துத்துவவாதி எனக் கொள்ள வேண்டியதில்லை என நினைத்துக் கொண்டேன். அவர் மேடையை விட்டு இறங்கும்போது ஒரு புன்முறுவலையும் பகிர்ந்து கொண்டேன். இன்று இந்த நபர் ஏன் மோடியைப் பிரதமராக்க வேண்டும் என எழுதியுள்ள கட்டுரையைப் படித்தபோதுதான் அன்று சாச்சிமார்கள் இவர் மீது ஊற்றிய தண்ணீர் அவரது புறஉடல்மீதிருந்த அசிங்கங்களை மட்டுமே கழுவியுள்ளது என நினைத்துக் கொண்டேன்.

மோடி அடித்தளத்திலிருந்து வளர்ந்தவராம். வளர்ச்சியின் நாயகராம். தீர்க்கதரிசியாம். “A revolutionary, bold and committed visionary …”… அடப் பாவி.. அரவிந்தன் நீலகண்டன் போன்ற ஆர்.எஸ்.எஸ் காரர்கள் இனி உம்மை “நெய்தலின் நெருப்பு” என்பதோடு நிறுத்திக் கொள்ளாமல், “சிங்கம்,புலி, கரடி…” என்றெல்லாமும் கொண்டாடலாம்.

கன்னட முது பெரும் எழுத்தாளர், நவ்யா இயக்கத்தைத் தோற்றுவித்தவர், ஞானபீட விருது மட்டுமின்றி பத்ம பூஷன் விருதையும் பெற்றவர், கேரளத்திலுள்ள மகாத்மாகாந்தி பல்கலைக் கழகத் துணை வேந்தராக இருந்த யு.ஆர், அனந்தமூர்த்தி அவர்கள்,”மோடி பிரதமரானால் நான் இந்த நாட்டில் வாழ மாட்டேன்” என அறிவித்துள்ளார்.அவர், கிரிஷ் கர்னாட் மற்றும் பல கன்னட எழுத்தாளர்கள் மோடிக்கு எதிராக இன்று பிரச்சாரம்செய்து கொண்டுள்ளனர்.

ஒரு 150 அறிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், மோடியின் தலைமையில் வரும் பாசிசக் கும்பலுக்கு வாக்களிக்காதீர்கள் என வெளியிட்ட அறிக்கையை இரண்டு நாட்களுக்கு முன் நான் இங்கு பகிர்ந்ததைப் பார்த்திருப்பீர்கள்.

இந்திய வரலாற்றில் வேறெப்போதும் இப்படி ஒருஅரசியல்வாதிக்கு எதிராக எழுத்தாளர்கள், கலைஞர்கள் களம் இறங்கியது கிடையாது. இன்று ஏன் இந்த மாற்றம்? மோடி என்கிற நபர் ஒரு வெறும் அரசியல்வாதி அல்ல. மோடி எனும் உருவில் இந்திய பாசிசம் இன்று முழுமை அடைகிறது. பெரு முதலாளியமும் பாசிசமும் பிரிக்க இயலாதவை என்பதுமுசோலினி அளித்த வாக்குமூலம். இது நாள் வரை இந்துத்துவம் எத்தனையோ கொலைகளையும் வன்முறைகளையும் விதைத்திருந்தபோதும், வெறுப்பைக் கட்டமைத்தபோதும் அப்போதெல்லாம் பெரு முதலாளியம் அத்துடன் ஊடு பாவாய்க் கலந்ததில்லை. சற்று விலகியே இருந்திருக்கிறது. இன்று அந்த இணைவு ஏற்பட்டுள்ளது. மோடி என்னும் வடிவில் அது நிகழ்துள்ளது. எழுத்தாள நெஞ்சங்கள் வெறுப்பை வெறுப்பவை. எனவேதான் இந்த எதிர்ப்பு.

இரண்டாயிரம் பேர் கொல்லப்பட்டு, ஆண்டுகள் பன்னிரண்டாகியும் இன்னும் 50,000க்கும் மேற்பட்டோர் தம் வீடுகளுக்குத் திரும்ப இயலாத நிலை இருந்தும்ஒரு அடையாளமாகவேனும் வருத்தம் தெரிவிக்காத ஒரு நெஞ்சையும், இத்தனைக்குப் பின்னும் முஸ்லிம்கள்அளித்த விருந்தொன்றில் வழங்கப்பட்ட அந்த முஸ்லிம் குல்லாயை அணிய மறுத்த மனத்தையும் மோடியைத் தவிர நீங்கள் வேறு யாரிடம் காண முடியும்?

மரணதண்டனை குறித்து ஜெயமோகன் கக்கி இருந்த விஷத்தைக் குறித்த என் பதிவைப் பார்த்த ஒரு நண்பர் கேட்டார்: “ஒரு விரிவான பதிலை நீங்க ஜெயமோகனுக்கு எழுதுங்கள் சார்.” என்னால் அது சாத்தியமில்லை எனச் சொன்னேன்.

ஜெயமோகனுக்கோ அல்லது ஜோ டி குருசுக்கோ என்னால்பதில் எழுத முடியாது. அவர்கள் எதையும் புதிதாகச் சொல்வதில்லை. எற்கனவே பலமுறை பதில்சொல்லப்பட்ட, விளக்கப்பட்ட பிரச்சினைகளைப் புதிது போலச் சொல்லும் பாசிச உத்தியைக் கடைபிடிப்பவர்கள் அவர்கள். குருசின் இந்தக் கட்டுரையைத் தான் (கீழே உள்ள பதிவில் உள்ளது) எடுத்துக் கொள்ளுங்களேன். என்ன அவர் புதிதாய்ச் சொல்லிவிட்டார்? மோடியை வளர்ச்சியின் நாயகர் என்பதற்கு இதுவரை London School of Economics பேராசிரியர்கள்முதல் நம் ஊர் பொருளாதாரவாதிகள், அரசியல்வாதிகள் எல்லோருந்தான் பதில் சொல்லி விட்டனர். முக நூலில்தான் எத்தனை கட்டுரைகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள்? இதற்கு மேல் நான் என்னசொல்லிவிடப் போகிறேன்? இதற்கு பதில் சொல்ல ஆரம்பித்தால் அதை விட ஒரு காமெடி பீசாகிற வேலை வேறென்ன இருக்கஇயலும்?

ஜெயமோகனின் மரணதண்டனைக் கட்டுரையை எடுத்து, அதில் மரண தண்டனைக்கு ஆதரவாக முன்வைக்கப்படும் கேள்விகளைத் தொகுத்துப் பாருங்கள். அப்போது தெரியும். இது எதுவும் புதிதல்ல என்பது. இந்தக் கேள்விகளைக் கேட்பவன் ஒன்று படு முட்டாளாக இருக்கவேண்டும் அல்லது பாசிஸ்டாக இருக்க வேண்டும். மரணதண்டனை இருந்தால் குற்றங்கள் குறைந்து விடும், தீவிரவாதம் ஒழிந்துவிடும் எனச் சொல்கிற மண்டைகளுடன் யார் முட்டிக்கொள்ள முடியும்?

ஜெயமோகன், ஜோ டி குருஸ் இவர்களுக்கு முன்னுதாரணம் தமிழில் இல்லை. இவர்கள் ஒரு புதிய பரிணாமம் ஒரு நோயின் அறிகுறி. இவர்கள் இலக்கிய மோடிகள்.

3. செத்துப்போன ஆசிரியனும் உயிருடன் உள்ள பிரதியும்…

மோ டி குரூசின் அரசியல் கருத்துக்களுக்காக அவரது நாவலை வெளியிட மறுப்பது என்பதெல்லாம் போலித்தனமானது, அப்புறம் ஆசிரியன் செத்துப்போனான், பிரதி அந்தரத்தில் மிதக்கிறது என நீங்கள் சொன்னதெல்லாம் என்னாச்சு என்றொரு கேள்வியை ரொம்பவும் புத்திசாலித்தனமாகச் சிலர் முன் வைக்கின்றனர். விரிவாக இது குறித்துப் பேசுவதற்கு முன் ஒரு சில வார்த்தைகள் இங்கே…

ஆழ்ந்த தத்துவார்த்தமான விடயங்களை மிகை எளிமைப்படுத்திப் புரிந்து கொள்ளும் ஆபத்து தமிழகத்தில் அதிகம். ஆசிரியன் செத்துப்போனான், வாசகியின் எல்லையற்ற சுதந்திரம் என்பதெல்லாம் கூட இங்கு பலராலும் அப்படித்தான் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. உம்பர்டோ ஈகோவின் Interpretation and Over Interpretation என்கிற மிக முக்கியமான ஒரு நூலை மேற்கோள் காட்டி இது குறித்து நான் ஒரு கட்டுரையில் எழுதியுள்ளேன்.

சில ஆண்டுகளுக்கு முன் குற்றாலம் கவிதைப் பட்டறையில் ஒரு விவாதம் நடந்தது, பாரதியின்,

“அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் / அதை ஆங்கொரு காட்டிடைப் பொந்தினில் வைத்தேன் / வெந்து தணிந்தது காடு / தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ…”

எனும் இந்தக் கவிதையை ஒரு அப்பட்டமான மாற்றுப் பால் Sexual Intercourse ஐச் சொல்லுவதாக வாசிக்க முடியும்தானே? – என்றொரு கேள்வி அங்கு எழுப்பப் பட்டது. அந்த விவாதம் பிறகு அங்கு எப்படிப் போனது என்கிற விஷயம் ஒரு பக்கம் இருக்கட்டும்.

உம்பர்டோ ஈகோவின் நூல் வேறு சில சிந்தனைப் புள்ளிகளை நம்மிடம் விதைக்கும். வாசகரின் வாசிப்பு உரிமை என்பது அப்படி ஒன்றும் எல்லையற்றதல்ல. Intention of the Text, Intention of the Author ஆகியவற்றிற்கும் வாசிப்பில் அல்லது விளக்க உரையில் ஒரு இடமுள்ளது.

“பாரத நாடு பழம் பெரும் நாடு / நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்…”

எனப் பாரதி பாடியதை ஆர்.எஸ்.எஸ் அமைப்பு இன்று பயன்படுத்திக் கொள்வதை நாம் மறுக்க இயலாது. ஆனால் அந்தப் பாடலை அவ்வாறு புரிந்து கொள்வதில் உள்ள சிக்கலைச் சொல்வதற்கு யாருக்கும் உரிமை உண்டு. அங்குதான் ஈகோ வைக்கிற வாதங்கள் முக்கியமாகின்றன.

வாசகர் ஒரு எழுத்தை எப்படிப் புரிந்து கொள்கிறார் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அந்த வாசக சுதந்திரத்தை நாம் முழுமையாக ஏற்கிறோம். ஆனால் ஒரு text ல் ஆசிரியரின் Intention என்னவாக இருந்தது எனச் சொல்வதற்கு ஒருவருக்கு உரிமை உண்டு. ஆசிரியன்தான் செத்துப் போனானே என மட்டையடி அடிக்க இயலாது.

ஆசிரியனின் அரசியல் அவனது படைப்பில் இடம்பெற எல்லா சாத்தியங்களும் உண்டு.

மிக முக்கியமான நவீன கவிஞர்களில் ஒருவரான எஸ்ரா பவுன்ட், இரண்டாம் யுத்தக் காலத்தில் பாசிஸ்ட் முசோலினியின் அரசியலை ஆதரித்ததற்காக அமெரிக்க அரசால் சிறையில் அடைக்கப்பட்டவர்.

அவர் ஒரு மிகமுக்கியமான படைப்பாளி, கவிதை வெளிப்பாடிற்குப் புதிய பரிமாணங்களைச் சேர்த்தவராயினும் அவரது canto க்களில் அவரது அரசியல் பார்வை, யூத வெறுப்பு வெளிப்படத்தான் செய்தது.

இதன்பொருட்டு அவரது மகாகவித்துவத்தை மறுக்க இயலுமா என்கிற விவாதம் ஒரு பக்கம் இருக்கட்டும்; அவரது அரசியல் பார்வைக்கும் அவரது படைப்புகளுக்கும் ஒரு இயைபு இருந்ததை யாரும் முற்றாக மறுத்துவிட இயலாது.

மோ டி குரூசின் அரசியல் பார்வை வேறு, அவரது இலக்கியம் அப்பழுக்கறது என்கிற கருத்தைச் சொல்பவர்கள் சொல்லட்டும். ஆனால் அவரது அரசியல் பார்வை அவரது இலக்கியங்களிலும் வெளிப்படவே செய்கிறது எனச் சொல்வதற்கும் எல்லாவிதமான சாத்தியங்களும் உண்டு.

ஒரு மிக அகன்ற பிரச்சினையை ரொம்பவும் குறுக்கிப் பார்த்து, ரொம்பவும் personalise பண்ணி விளங்கிக் கொண்டவர் மோ டி குரூஸ். இது அவரது அரசியலில் மட்டுமல்ல. இலக்கியத்திலும் வெளிப்படவே செய்கிறது.